Friday 30 April 2021

பகுத்தறிவுப் பாவேந்தர் : உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!

http://www.unmaionline.com/index.php/6025-ulaga-manudam-kanatha-oppatra-kavingar.html


தமிழகத்தில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பொது நிலையில் உள்ள இளைஞர்களும் இன்று தேடிப் படிக்கும் தத்துவம் பெரியாரியல் ஆகும். வலதுசாரி எண்ணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை எதிர்க்க நினைக்கும் எல்லோரும் இன்றைக்குத் தந்தை பெரியாரைப் படிக்கிறார்கள். தந்தை பெரியாரைப் படிக்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தவறாமல் படிக்க வேண்டிய படைப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகளாகும். புரட்சிக்கவிஞரின் கவிதைகள் பத்தோடு பதினொன்றல்ல. அவரது கவிதைகள் தனித்துவமானவை. தன்மானத்தையும் இனமானத்தையும் படிப்பவர்க்கு  ஊட்டுபவை. உணர்ச்சியை, எழுச்சியை படிப்பவரின் உள்ளத்தில் புகுத்தும் கவிதைகள் புரட்சிக்கவிஞரின் கவிதைகளாகும்.



இணையத்தின் வளர்ச்சி எழுத நினைப்பவர்கள் எல்லோரும் எழுதுவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது. இன்று வலைத்தளம், முகநூல் பக்கங்களில் நிறையப் பேர் கவிதைகள் எழுதுகிறார்கள். பலர், கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள், தங்கள் கவிதைகள் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது. நோக்கத்தோடு, இலட்சிய வெறியோடு இருக்கும் போதுதான் மகத்தான படைப்புகள் உருவாகின்றன. படைக்கும் ஆர்வம் உள்ள இருபால் இளைஞர்கள், புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் படிக்க வேண்டும். முடிந்தால் எவ்வளவு கவிதைகளை மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவு மனப்பாடம் செய்ய வேண்டும். அந்தக் கவிதைகளை உணர்ச்சியோடு சொல்லிப் பழகவேண்டும். அப்படி சொல்லச்சொல்ல, படிக்கப் படிக்க புரட்சிக்கவிஞரின் கவிதைகள் தரும் உணர்ச்சியை, எழுச்சியை படிப்பவர்கள் உணர முடியும். படைக்கும் ஆற்றல் தானே பெருகும். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எளிதாக மற்றவர்களுக்குப் புரியும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் ஏப்ரல் 29. அவரது நினைவு நாள் ஏப்ரல் 21. ஏப்ரல் மாதம் என்றாலே அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நமக்கு நினைவுக்கு வருவது போல, நமது நினைவுக்கு வரவேண்டிய மாபெரும் ஆளுமை புரட்சிக்கவிஞர். புரட்சிக் கவிஞரின் கவிதைகள் புகழுக்காகவோ, பொருளுக்காகவோ படைக்கப்பட்டவை அல்ல. கொள்கைக்காகப் படைக்கப்பட்டவை.

தந்தை பெரியார் கொள்கை அடிப்படையில் பாடப்பட்டவை. ஆகையால் எப்போதும் சிறப்பானவை. எவ்வளவு சிறப்பானவை என்றால் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்க மேடைகளில் தொடர்ந்து பேசப்படும், பாடப்படும் கவிதைகள் புரட்சிக்கவிஞரின் கவிதைகள்தாம். அவருக்குப் பின்னால் பாரதிதாசன் பரம்பரை என்று பல கவிஞர்கள் படைப்புகளை அளித்தார்கள் என்றாலும், பல நூறு கவிஞர்கள் வந்தார்கள் என்றாலும், புரட்சிக்கவிஞரின் இடத்தைப் பிடித்தவர் எவருமில்லை. அவருக்கு இணையாகக் கவிதைகளைப் படைத்த தமிழ்க் கவிஞர்கள் அவருக்குப் பின்னர் எவருமில்லை. எப்படி திருக்குறளுக்கு இணையாக வேறு ஒரு நூல் வரவில்லையோ, அதனைப் போல புரட்சிக்கவிஞரின் கவிதைகளுக்கு இணையாக வேறு கவிதைகள் இல்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு கல்வியில் முன்னணி வகிக்கிறது. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 50 சதவிகிதம் உயர்கல்வியை அடைய வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கிறது. ஆனால், இப்போதே அந்த நிலையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் திராவிட இயக்கம் - தந்தை பெரியாரும் அவரது கொள்கைகளும் ஆகும். அந்தக் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட புரட்சிக்கவிஞர் கல்விக்கு - அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து பாடியிருக்கும் பாடல்கள் மீண்டும் மீண்டும் படிக்கத்தக்கவை.

"பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்  உலகினைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்  கல்வியைப் பேணுதற்கே!"

என்றார் புரட்சிக்கவிஞர். “என்னருந் தமிழ் நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்று இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?’’ என்று எல்லோரும் கல்வி கற்று இன்புற வேண்டும் எனக் கனவு கண்டவர் புரட்சிக்கவிஞர். அதனை நிறைவேற்றிட பல்வேறு முயற்சிகளை, திட்டங்களைத் தீட்டி கடந்த 50 ஆண்டுகளில் திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட. அனைவருக்கும் கல்வி என்னும் நோக்கத்தில் தமிழகம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

ஆத்திகராக இருந்தவர்தான் பாரதிதாசன். ஆனால், 1933இ-ல் நடந்த சுயரிமரியாதை  மாநாட்டில் கலந்து கொண்டு ‘நான் ஒரு நிரந்தர நாத்திகன்’ என்று கையொப்பம் இட்ட காலம் முதல், நாத்திகத்தை ஏற்றுக் கொண்டு, நாத்திகமே உலகம் உய்ய வழி என்பதனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த வழியில் இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர் என்பது  மட்டுமல்ல; இன்றைக்கும் நாத்திகத்தை வீரியமாய் மேடைகளில் சொல்வதற்கு கவிதைகளைத் தந்தவர் பாரதிதாசன்.

“கடவுள் கடவுள் என்று எதற்கும் கதறுகின்ற மனிதர்காள்

கடவுள் என்ற நாமதேயம் கழறிடாத நாளிலும்

உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்ததாம்

கடையர் செல்வர் என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே!"

எனக் கவிதையின் வாயிலாகக் கேட்டவர். ஏழை, பணக்காரன் என்னும் வேற்றுமையை விதைத்தது கடவுள் என்னும் பெயர் வந்த பிறகுதான் என்பதனை மிக எளிமையாகச் சொல்லிச் செல்வார்.

“பிணக்கு ஏற்படுத்தும் கடவுளைக்

கணக்குத் தீர்த்தல் மனிதர்தம் கடமையே’’ என்றவர்.

“கடவுள்வெறி சமயவெறி

கன்னல் நிகர் தமிழுக்கு

நோய்! நோய்! நோயே!’’ என்றவர்.

"உடை வெளுக்கும் தோழரைக்

கழுதை முன்னேற்றுமா?

கடவுள் முன்னேற்றுமா?"

எனக் கேட்டவர் பாரதிதாசன். மீண்டும் மீண்டும் மேலே இருக்கும் கவிதை வரிகளைச் சொல்லிப் பாருங்கள். எளிய சொற்கள். மிக வலிமையான கருத்துகள். இதுதான் புரட்சிக்கவிஞரின் மொழி ஆளுமை.

‘கரும்பு தந்த தீஞ்சாறே,

கனி தந்த நறுஞ்சுளையே’

என்று ஆரம்பித்து செந்தமிழை அவர் பாடியிருக்கும் சொற்களுக்காய் மீண்டும் மீண்டும் படிக்கலாம். அப்படிப்பட்ட தமிழின் நிலையைக் கண்டு வருந்தி அதனை மாற்றுவதற்கு 24 பாடல்களைக் கொண்ட அற்புதமான நூலான ‘தமிழியக்கம்’ என்னும் நூலைப் படைத்தார். ஒவ்வொரு இளைஞரின் நெஞ்சத்திலும் மனப்பாடமாய் இருக்க வேண்டிய கவிதைகள் அதில் உள்ள கவிதைகள்.

‘உயிர் போன்ற உங்கள் தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்’ என்று ஆரம்பித்து கடவுளுக்கு தமிழில் வாழ்த்து சொன்னால் புரியாதா, வடமொழியில் சொன்னால்தான் புரியுமா? என்று கேட்கும் அவர் கருத்து வீச்சினை தமிழியக்கப் பாடல் ஒவ்வொன்றிலும் காணலாம். தமிழை அப்படிப் பாடிய புரட்சிக்கவிஞர்தான்,

“இனப்பெயர் ஏன் என்று பிறன்எனைக் கேட்டால்

மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.

நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!’’

என்று பாடினார். தமிழ் உயர, திராவிடன் என்னும் இனச்சொல்தான் பயன்படும் என்பதனை, இன்றைக்கு ‘தமிழ் தேசியம்’ எனப் பேசிக்கொண்டு திராவிட இயக்கத்திற்கு எதிராக உளறும் துரோகிகளுக்கு உறைக்கும் வண்ணம் பாடியிருக்கிறார். தமிழுக்கும், தமிழருக்கும் பகைவர் பார்ப்பனர். எனவே, நாம் திராவிடராய் ஒன்றிணைந்து, நமது இன எதிரிகளாம் பார்ப்பனர்களை வெல்லவேண்டும் என்னும் நோக்கத்தைப் பல பாடல்களில் பாடியிருக்கிறார்.. "பார்ப்பான் பால் படியாதீர்..." என்னும் கவிதையெல்லாம் இன்றைய இளைஞர்களே படியுங்கள், உணர்வீர்கள்.

இதனைப் போல ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு மிக அருமையான கவிதை வரிகளைத் தந்தவர் புரட்சிக்கவிஞர் ஆவார். அதனால்தான் ‘சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டார். “இருட்டறையில் உள்ளதடா உலகம், - சாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே..’’ என்றார் புரட்சிக்கவிஞர். இன்றைக்கும் ‘துக்ளக்’ ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி போன்றவர்கள் ஜாதி வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் ஆமாம் என்று சொல்லிக்கொண்டு சில ஒடுக்கப்பட்டவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

“பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்

பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை’’ என்று பாடினார் புரட்சிக்கவிஞர்.

“சாதி என்னும் தாழ்ந்தபடி

நமக்கெல்லாம் தள்ளுபடி

சேதி அப்படி தெரிந்துபடி

தீமை வந்திடுமே மறுபடி’’ என்று பாடியவர். திட்டமிட்டு இந்துத்துவவாதிகள் சாதிப்பெருமை பேசச்சொல்லும் இந்த நாட்களில் புரட்சிக்கவிஞரின் சாதி ஒழிப்புப் பாடல்கள் பெரும் அளவில் பயன் கொடுக்கும்.

சங்க இலக்கியத்திற்குப் பின் இயற்கையைப் பாடிய கவிஞர். பொதுவுடைமைக் கருத்துகளை, பொது உரிமைக் கருத்துகளைப் பாடியவர். ‘அவர்தாம் பெரியார், பார் அவர்தாம் பெரியார்’ என்னும் பாடலை நமக்குக் கொடுத்து ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்பதனை பல பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர். இன்றைய நடைமுறையில் அதனைக் காண்கின்றோம்.

‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ என்னும் நூலை எழுதிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அந்த நூலில், அவர் படித்த கல்லூரிக்கு ஒன்றாக வந்து மேடையில் அமர்ந்த தந்தை பெரியாரையும் புரட்சிக் கவிஞரையும் பற்றிக் குறிப்பிடும்போது “இரு சூரியர்கள் ஒரு வானில் ஒரு பொழுதில் வந்தது போல- மேடையில் தந்தை பெரியாரும் புரட்சிக்கவிஞரும் தோற்றம் கொடுத்தனர்.’’ எனக் குறிப்பிடுவார். அது மட்டுமல்ல தந்தை பெரியார் அருகில் இருக்க புரட்சிக்கவிஞர் அவர்கள் “இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழனுக்கு தலைவன் இல்லை. இதோ! தலைவன் உங்கள் முன்னால்! இவர் கையில் ஆயுதமாக உங்களை ஒப்படையுங்கள்... நீங்கள் விரும்பும் தமிழ் மீளும். தமிழ்நாடு வாழும்! முண்டங்களாய், முட்டாள்களாய் இதுவரை இருந்தது போதும், இன்னும் அப்படி இருக்க வேண்டுமா? உங்களுக்குள் இருக்கும் தமிழனை மதங்கள், சமயங்கள், வேதங்கள், வியாக்கியானங்கள் எல்லாம் அழுத்தி அழுத்தி அவமானச் சேற்றில் புதைத்து விட்டன. உங்களுக்குள் இருக்கும் தமிழனை, உங்கள் ஜாதிகளே வீழ்த்தி விட்டன. தமிழனை விடுதலை செய்ய, தமிழனுக்குச் சுயமரியாதையை மீட்டுத்தர இவரை விட்டால் நாதி உண்டா? என்று உரை நிகழ்த்தியதை அருகில் இருந்து பார்த்த ஈரோடு தமிழன்பன் அவர்கள் அந்த நூலில் உணர்ச்சியோடு பதிவு செய்திருப்பார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உணர்ச்சிமிக்க கவிதைகளாக புரட்சிக்கவிஞர் தந்த காரணத்தினால்தான் திட்டமிட்டு, புரட்சிக் கவிஞரின் கவிதைகள் மறைக்கப் பட்டன. வானில் இருக்கும் கருப்பு மேகங்கள் எத்தனை நேரம் சூரியனை மறைக்க இயலும்? தகதகக்கும் சூரியனாய் புரட்சிக்கவிஞர் இன்று சுடர் விடுகின்றார். சென்ற ஆண்டு புரட்சிக்கவிஞரின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு அறிக்கை கொடுத்திருந்தார்கள்

புரட்சிக்கவிஞர் - உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!

புகழுக்கோ, பணத்திற்கோ, செல்வாக்குப் பெற்ற பதவிக்கோ என்றும் அடிமையாகா சுயமரியாதை ஆளுமையின் வணங்காமுடி!

அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்த நம் அய்யா அறிவு ஆசான் தந்தை பெரியாரை - அந்நாளிலேயே சரியாகப் புரிந்து, நெறியாக சிக்கென்று பிடித்து, இறுதிவரை உறுதி காட்டிய கொள்கைக் கோமான்!

2020ஆம் ஆண்டில் கொடுமை தரும் கரோனா தொற்று காரணமாக கூடி மகிழ்ந்து கொண்டாட இயலாவிடினும், அவர்தம் கவிதைகளை, அவர் உருவாக்கிய ஈரோட்டுப் பூகம்பக் கவிதைகளைப் படித்து -- பரப்பி - - அவர் வழி -- அதுதானே அய்யா பெரியாரின் ஈரோட்டுப் பாதை -- அதன் வழி நடக்க சூளுரை மேற்கொண்டு, - சுயமரியாதைச் சூடேற்றுவோம் உலகிற்கு.

செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்

இவ்வுலக மக்களில் என்ன பேதங் கண்டாய்?

சுயமரி யாதைகொள் தோழா! - நீ

துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!

சுயமரி யாதைகொள் ...

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ

உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்;

துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று

சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!

அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்

ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்

பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்

பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!

சுயமரியாதைகொள் ...

புதியதோர் உலகு செய்வோம்!

இப்படி கவிஞரின் இலக்கியத் தோட்டத்தின் சுயமரியாதை மணத்தில் சொக்கி மகிழ்ந்து அவரை வாழ்த்தி, அவர் விரும்பிய அறிவு ஆசான் இலக்காகிய ஜாதியற்ற, பெண்ணடிமையற்ற, மூடநம்பிக்கையற்ற சமத்துவமும், பகுத்தறிவும், சமதர்மமும் ஆளும் புதியதோர் உலகு செய்வோம்!

“இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்! வாரீர்! வாரீர்!’’ என்று அழைப்பு விடுத்திருந்தார். புரட்சிக்கவிஞரைப் பற்றி பல நூறு நூல்கள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் புரட்சிக்கவிஞரைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை யெல்லாம்விட புரட்சிக்கவிஞரின் கவிதைகளை உள்ளத்தில் ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியம். பரம்பரைப் பகைவர்கள் பல்வேறு நரித்தனமான சூழ்ச்சி வலைகளைப் பின்னும் இக்காலத்தில், அச்சூழ்ச்சி வலைகளை நறுக்கிட நமக்கு கைவசம் இருக்கும் ‘வாட்கள்’ புரட்சிக்கவிஞரின் கவிதைகள். அவரது கவிதைகளை இன்னும் வீச்சாய் இளைஞர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்போம். மறுவாசிப்பு, கட்டுடைப்பு என்னும் சொற்களால் இன்று சிலர் பழமைச் சிலம்பம் ஆடும் இக்காலத்தில் புதுமைக் கவிதைச் சிலம்பம் ஆட நமக்கு பயிற்சி அளித்த புரட்சிக் கவிஞரை நினைவில் கொள்வோம். அவர் விரும்பிய “புதியதோர் உலகம் செய்ய’’ அவரது கவிதைகளைத் துணையாகக் கொள்வோம்.

நன்றி : உண்மை 16-30 2021



No comments: