Thursday 8 April 2021

பற்ற வைக்கும் வல்லமை......

           

எதைப் பற்றி எழுதுவது

என நினைக்கையில்

எழுதுவதைப் பற்றி

எழுதுவது என முடிவு....


எவர் எவரோ எழுதியிருக்கிறார்

குன்றென தமிழ்க்கவிதைகள்

குவிந்து கிடக்கிறது இணையத்தில்

இன்னும் ஒரு கவிதை

எழுதுதல் தேவைதானா?

எனும் உனது குரல் 

எனக்கும்  கேட்கிறது...


அவர் அதை எழுத

இவர் இதை எழுத

நான் எதை எழுத

என யோசித்துக்கொண்டே இராதே!

எழுது தம்பி எழுது...


வானில் பறந்து கிடக்கும்

நட்சத்திரங்களில்

எந்த நட்சத்திரம் நல்ல

ஒளியைத் தரும் என்பதை

எப்படி உணர்ந்து கொள்வது?

ஆயிரக் கணக்கில் வரும்

கவிதைகளில் எந்தக் 

கவிதையை ஈர்ப்புக் கவிதை

என ஏற்றுக்கொள்வது?


எது ஈர்ப்பு என்பதனை

முடிவு செய்பவன் வாசிப்பவன்..

முடிவை வாசிப்பவனிடம் விடு...

பாடல் படைக்கும் தொழிலை

தொடர்ந்து கொண்டே இரு....


ஒற்றை வரி 

உலகில் தீப்பிடிக்க

வைக்கக் கூடும்..

ஒற்றை வரி

உலகில் பொதுமையைக் 

கொண்டு வரக்கூடும்...

ஒற்றை வரி ..

வீட்டிற்குள் அடைக்கப்படும்

பெண்களின் சிறைகளை

உடைக்கக்கூடும்

ஒற்றை வரி

மனித நேயத்தை உலகில்

வளர வைக்கக் கூடும்...


அந்த ஒற்றை வரி

எது என்பது 

உனக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது...

எந்த மொழியில் 

எழுதக் கூடும் எனத் தெரியாது..

ஆனாலும் அந்த ஒற்றை வரி

கவிதை வரியாகத்தான்

இருக்கக் கூடும்....

ஏனெனில் பற்றவைக்கும்

வல்லமை கவிதை

வரிகளுக்கு மட்டுமே உண்டு...

எழுது...தம்பி...எழுது.. எழுது.

                           வா.நேரு,08.04.2021






No comments: