Friday 28 July 2023

ஆடுகளைப் பார்த்து ஏமாறாதீர்கள்…

 


இளம் வயதில்

நான் பார்த்த ஓர் ஆள்

காவி கட்டி இருப்பார்

அப்போது அவருக்கு வயது

ஐம்பதுக்கும் மேல் இருக்கும்

முகம் முழுக்கத் திருநீறு இருக்கும்

 

ஆட்கள் மிகுதியாய் இருக்கும்

தெருவில் நடக்கும்போது

நடக்கும் வழியில் இருக்கும்

முட்களை எல்லாம் எடுத்து

ஓரமாகப் போடுவார்…

 

கனிவு பொங்கப் பேசுவார்..

கதைகள் எல்லாம் சொல்வார்..

எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்பார்..

அவரின் செயல்களைப் பார்த்தால்

கரை புரண்டு ஓடுகிறதோ

மனித நேயம் எனத்தோன்றும்..

 

 

காசுக்காகக் கொலைசெய்யும்

சிலரைக் காவலர்கள் பிடித்தபோது

இந்த ஆளும் நடுவில்

இருந்ததைப் பார்த்தபோதுதான்

‘அடப்பாவி ‘ எனக் கத்தத் தோன்றியது..

 

ஆடுகளைத் தோளில் போட்டு

இருப்பவன் எல்லாம் புத்தன் அல்ல..

ஆடுகளைப் பார்த்து

ஏமாறாதீர்கள் தமிழர்களே

என்று சொல்லத்தோன்றியது…

 

 

                              வா.நேரு,

                              28.07.2023.

No comments: