Saturday 8 July 2023

மெல்லிய குரலில் சீட்டி அடித்தபடி

                                                 


வரிசையாக நோயாளிகள்

அமர்ந்திருக்கும் அறைக்குள்

அமர்ந்திருக்கிறேன் நான்…

 

நோயாளிகளின் முகங்களில்

இருக்கும் துயரத்தை விட

அதிகமான துயரம் அவர்களோடு

உடனிருப்பவர்களின் முகங்களில்…

 

எவ்வளவு பணத்தைக் கேட்பார்களோ

இம்மாம் பெரிய மருத்துவமனையில்

என்னும் கேள்வி தெரிகிறது

ஒவ்வொருவர் முகத்திலும்…

 

சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும்

அந்தத் தாயின் முகம் முழுக்க

கவலை ரேகைகள்…

என்னைச் சீக்கிரம் அழைத்துக்கொள்..

என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர்..

அவர்  நம்பிக்கை அது …

என்றாலும் தன் உடலில் இருக்கும்

உயிர் விடுபட வேண்டுமென அவர்

மனதார விரும்புவது அவரது

சொற்களில் தெரிகிறது…

 

கை நிறைந்த மருத்துவச்சோதனை

காகிதங்களோடு நிற்கும் அவர் மகள்

சும்மாயிரு என்று கொஞ்சம்

அதிகாரக்குரலில் அம்மாவை அடக்குகிறாள்..

அம்மாவுக்கு ஆகும் செலவின் எரிச்சலில்

ஆவேசப்படுகிறாளோ?...

"நீண்ட ஆயுள் என்பது

வரமல்ல..

சாபம்" எனும் கவிக்கோ அப்துல் ரகுமானின்

கவிதை வரிகள் ஓடுகிறது மனதிற்குள்...


முகக்கவசங்களோடு செவிலியர்கள்

இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள்..

கோட்டுகள் மாட்டிய மருத்துவர்கள்

பேசிக்கொண்டே நடக்கிறார்கள்…


இத்தனைக்கும் நடுவில் உற்சாகமாய்

மெல்லிய குரலில் சீட்டி அடித்தபடி

தரையை அழுத்தித் துடைத்துக்கொண்டிருக்கிறாள்

ஒரு இளம்பணிப் பெண்…


                                     வா.நேரு

                                      08.07.2023

 

 

2 comments:

முனைவர். வா.நேரு said...

"ஆஹா... கவிஞர் நேருவை இப்போது தான் பார்க்கிறேன்."

வாருங்கள் படிப்போம் குழு தோழர் ரெஜினா சந்திரா முக நூலில்..

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சி.