Friday 7 July 2023

நாத்திகமும் கவிஞர்களும்...முனைவர் வா.நேரு

                                                



கவிஞர் ஷெல்லி இலக்கிய உலகில் கொண்டாடப்படும் ஒரு கவிஞர் .அவருடைய கவித்துவத்தற்காக ,உணர்ச்சிக்காக,அவரது கவிதைகளில் இருக்கும் இயற்கை அழகு வர்ணனைக்காக அவரைப் போற்றுபவர்கள் பலர் உண்டு. ஆனால் நம்மைப் பொறுத்த அளவில் கவிஞர் ஷெல்லி அவர்களைப் போற்றுவதற்கான அடிப்படை அவர் ஒரு நாத்திகக் கவிஞர் என்பதால் ஆகும்.அவர் மறைந்து 201 ஆண்டுகள் (ஜூலை 8,1822) ஆனபோதிலும்  நம்மைப் போன்றவர்களால் நினைக்கப்படுவராக மனித நேயர்கள் போற்றும் கவிஞராக ஷெல்லி விளங்குகிறார்.அவர் உலகில் மிக நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்த கவிஞர் இல்லை,மிகக் குறைந்த வயதில்,30 ஆண்டுகள் மட்டுமே உலகில் வாழ்ந்து மறைந்த கவிஞர் ஆவார்.

“மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ-மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி “என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்.

நான் ஏன் நாத்திகன் எனத் தோழர் பகத்சிங் நூலாக எழுதினார்.தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பை ஒரு முழக்கமாகவே மக்கள் மத்தியில் எடுத்துவைத்து பரப்புரை செய்தார்.இவையெல்லாம் 20ஆம் நூற்றாண்டின் செயல்பாடுகள் . ஆனால் 1811லேயே கவிஞர் ஷெல்லி அவர்கள் ‘நாத்திகத்தின் அவசியம் ‘ என்று ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டிருக்கிறார். அதன் பக்கங்கள் என்னமோ 10 பக்கங்கள்தான். ஆனால் ஆத்திகர்கள் உலகத்தை ஒரு கலக்கு கலக்கி அலறவைத்த வெளியீடாக அந்த வெளியீடு அமைந்திருக்கிறது.


                            


கவிஞர் ஷெல்லி...

கடவுள் இல்லை என்று எவரும் மனதால்கூட நினைக்கக்கூடாது என்று மக்களை மந்தைகளாக மதவாதிகள் ஆக்கிவைத்திருந்த காலம் அது. திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு வாசகங்களோடுதான் தொடங்குகிறது.அழுத்தம் திருத்தமாக ‘கடவுள் இல்லை,கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை,கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,கடவுளைப் பரப்பியன் அயோக்கியன்,கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி “ என்னும் தந்தை பெரியார் கொடுத்த கொள்கை முழுக்கத்தோடுதான் கூட்டங்கள் தொடங்குகின்றன.

ஜாதி ஒழிய,மனித நேயம் வளர,பெண்ணுரிமை அடைய  நாத்திகத்தை நாம் கட்டாயம் பேச வேண்டும் எனச்சொல்கிறோம்.விளக்குகிறோம்.ஏனென்றால் மதங்கள் வளர்ப்பது அறியாமையை,காட்டுமிராண்டித்தனத்தை,அடக்குமுறையை.எனவே இவற்றை உடைக்க வேண்டுமென்றால் மக்கள் மனதில் இருந்து கடவுள் என்னும் கருத்தை உடைக்கவேண்டும்.அதற்கு நாத்திகத்தை நாம் பரப்பவேண்டும்.தான் வாழ்ந்த காலத்திலேயே கவிஞர் ஷெல்லி அவர்கள் கடவுள் மறுப்புக் கவிதைகளை எழுதியிருக்கிறார்.கடவுள் மறுப்பைத் துணிந்து பேசியிருக்கிறார்.

.18 வயதில்  படிக்கும் காலத்திலேயே மதங்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை எழுதிப் பரப்பியிருக்கிறார்..'நாத்திகத்தின் அவசியம்' என்ற தலைப்பில் வெளியீட்டைத் தன் நண்பரோடு இணைந்து வெளியிட்டதற்காக,நாத்திகக் கருத்துகளைப் பரப்பியதற்காக ,கவிஞர் ஷெல்லி அவர் படித்த பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்நீ நாத்திகன்,உன் குழந்தைகள் உன்னிடம் வளர்ந்தால் அவர்களும் நாத்திகக் கருத்துக்களைக் கற்றுக்கொள்வார்கள்.ஆதலால் உன் குழந்தைகள் உன்னிடம் வளரக்கூடாது,வேற்று ஆட்கள்,பக்தர்களிடம் தான் உன் குழந்தை வளரவேண்டும் என்று அன்றைய நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது.நீதிமன்றங்கள் எப்போதும் விசித்திரமான தீர்ப்புகளை வழங்குவதில் அன்று முதல் இன்று வரை ஒன்றுதான் போலும்..செவ்வாய் தோசம் குறித்து அலாகாபாத் நீதிமன்றம் அண்மையில் கொடுத்த தீர்ப்பு நினைவுக்கு வருகிறது.நீதி வழ்ங்கும் இடத்திலேயே இப்படி மூட நம்பிக்கை அழுக்கு மூட்டைகள் அமர்ந்து கொண்டிருந்தால் உலகம் என்னாவது?

நாத்திகம் பொது உடமையோடு இணைகிறது. நாத்திகம் பொது உரிமையைப் பேசுகிறது. ஆத்திகம் தனி உடைமையை ஆதரிக்கிறது. இன்னும் கேட்டால் தனி உடமைக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள,பாதுகாப்பு அரணை ஏற்படுத்திக்கொள்ள உருவாக்கிய ஒரு கருவிதான் கடவுள்,மதம் என்பன எல்லாம்.ஆத்திகம் விதிக் கோட்பாட்டைச் சொல்கிறது. சனாதானம் பேசி மனிதர்களை வர்ணங்களாகப் பிரித்து,ஜாதிகள் என்னும் ஏற்றத்தாழ்வு படிக்கட்டுகளுக்குள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்களைத் திணிக்கிறது. எனவே இப்போது நாத்திகத்தின் அவசியத்தை பேச வேண்டிய அவசியம் கூடுதலாக இருக்கிறது.

நாத்திகர்களைத் துன்புறுத்தக்கூடாது என்னும் கோரிக்கையை ‘நாத்திகத்தின் அவசியம் ‘ என்னும் நூலில் கவிஞர் ஷெல்லி குறிப்பிடுகிறார். துன்புறத்தக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறார் என்றால் நாத்திகர்கள் என்பதற்காகவே துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள்.கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.வரலாறு முழுக்க இதற்கான சான்றுகள் இருக்கிறது. இன்றைக்கும் கூட மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் நாடுகளில் நாத்திகர்கள் என்பதற்காக மரண தண்டனை கொடுப்பதும் துன்புறுத்துவதும் நாடு கடத்துவதும் நடக்கும் நிகழ்வுகளாக இருக்கும்போது 200 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லவும் வேண்டுமா நாத்திகர்களுக்கு நடந்த கொடுமைகளை..

கவிஞர் ஷெல்லி அவர்கள் தான் வாழ்ந்த 30 ஆண்டுகளுக்குள் 24 படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்.சுப்பிரமணிய பாரதியார் ஷெல்லிதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டவர்,கவிஞர் ஷெல்லியை விரும்பியவர் என்பதால் கவிஞர் சுப்பிரமணிய பாரதியையும் கவிஞர் ஷெல்லியையும் ஒப்பிட்டு  நிறையக் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் கருத்து ஒற்றுமை என்று வருகின்றபோது’தன்னை நிரந்தர நாத்திகன் ‘ என்று கையெழுத்து இட்டு,தான் வாழ்ந்த காலம் முழமைக்கும் நாத்திகக் கருத்துகளைத் தன் கவிதையின் வழியாகப் பரப்பிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களோடு ஒப்பிட்டு நிறையக் கட்டுரைகள் இணையத்தில் ஏற்றப்படவேண்டும்.ஏனென்றால் பாரதிக்கும் ஷெல்லிக்கும் இருக்கும் ஒற்றுமைகளைவிட பாரதிதாசனுக்கும் ஷெல்லிக்கும் இருக்கும் ஒற்றுமைகள் அதிகம்.சுப்பிரமணிய பாரதி கடவுள்களை மிகுதியாகப் பாடியவர்.ருசியாவில் ஏற்பட்ட மாபெரும் பொதுவுடமைப் புரட்சியைக் கூட ‘ காளி தன் கடைக்கண் காட்டிவிட்டாள்,ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி ‘ என்று எழுதியவர்.

தந்தை பெரியாரின் நாத்திகக் கருத்துகளை,கவிதை வரிகளாக்கி தமிழர்களின் நாவுகளில் நடனமாட விட்டவர் புரட்சிக்கவிஞர். ‘உடை வெளுக்கும் தோழரைக் கழுதை முன்னேற்றுமா? கடவுள் முன்னேற்றுமா? ‘ எனக்கேட்டவர்.’கேட்டுக்குத் தெய்வம் என்றே பெயர் ‘ என்று உரைத்தவர்,

’கடவுள் கடவுள் என்று எதற்கும் கதறுகின்ற மனிதர்காள்…கடையர் செல்வர் என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே’ என்றவர்,’எல்லாம் கடவுள் செயல் என்று துடை நடுங்கும் ‘கூட்டத்தைக் தன் பாக்களால் கேலி செய்தவர் 

,’காசைப் பிடுங்கிடுவதற்கே- பலர்

 கடவுள் என்பார்

 இரு காதையும் மூடு

கூசி நடுங்கிடு தம்பி-கெட்ட

கோயிலென்றால் ஒரு காதத்தில் ஓடு'

‘என்று வழிகாட்டியவர்,’காணாத கடவுள் ஒரு கருங்குரங்கு ‘ எனச்சுட்டிக்காட்டி கடவுளை,மதத்தை,சாதியைச்சாடியவர்.இப்படி நாத்திகக் கருத்துகளில் ஒன்றுபடும் கவிஞர்களாக புரட்சிக்கவிஞரும் கவிஞர் ஷெல்லியும் திகிழ்கின்றனர். இன்று புதிது புதிகாகக் கவிஞர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். எழுதிக் குவிக்கின்றார்கள்.ஆனால் நாத்திகத்தை எழுதுகின்ற கவிஞர்கள் எத்தனை பேர் என்று எண்ணிப்பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

 நாத்திகத்தைத் தன் பாடலின் கருத்தாக எழுதுவதற்கு கவிஞர் ஷெல்லி அவர்கள் காலத்தில் இருந்ததைப் போன்ற தடைகள் இன்று இல்லை.ஆனால் நாத்திகத்தைத் தன் கவிதைப் பொருளாக எழுதுவதற்கு உரிய துணிச்சலும் சமூக அக்கறையும் இன்றைக்கு எழுதும் பல கவிஞர்களுக்கு இல்லை.தந்தை பெரியார் அவர்கள்  “மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ-மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி “ என்ற கூற்றின் அடிப்படையில் மக்கள் கடவுளை மறுப்பதற்கு,கடவுளை மறப்பதற்கு கவிதை பாட கவிஞர்கள் முன் வரவேண்டும்.’நாத்திகத்தின் அவசியம்’ ;குறித்து கவிதைகள் எழுதவேண்டும்.அதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கவிஞர் ஷெல்லி போன்றவர்களை முன் உதாரணமாகக் கொள்ளவேண்டும்.

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ்..ஜூலை 1-15

4 comments:

Priyanga Subbaiya said...

அருமை ஐயா வாழ்த்துக்கள்

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றிங்க...மகிழ்ச்சி.

'பசி'பரமசிவம் said...

ஷெல்லி பற்றி நான் அறியாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

முனைவர். வா.நேரு said...

நன்றி.