Thursday, 6 March 2025

நெருப்புச்சிலிர்ப்புகள்...கவிஞர் ம.வீ.கனிமொழி

 அழகிய வடிவமைப்புடன் ,அமெரிக்காவில் இருக்கும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் 'நெருப்புச்சிலிர்ப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் தாயார் ,திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் ,வழக்கறிஞர் அம்மா வீரமர்த்தினி அவர்கள் இந்த நூலினை எனக்குத் தபாலில் அனுப்பிவைத்தார்.  நன்றிகள் அவருக்கு.இனி 'நெருப்புச் சிலிர்ப்புகள் ' நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை தங்களின் வாசிப்பிற்கு...










                                  அணிந்துரை

 

தோழர் ம.வீ. கனிமொழி அவர்களின் 60 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நூல் இந்த ‘நெருப்புச் சிலிர்ப்புகள் ‘. அவ்வப்போது தோழர் ம.வீ. கனிமொழியின் கவிதைகளை இணையத்தின் வழியாக வாசிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது அப்போதே நான் இவரை வியந்து பார்த்திருக்கிறேன் உவமையை,படிமத்தை வெகு இயல்பாகத் தன் கவிதையில் நடமாட விடுவது மட்டுமல்ல, எவரும் சிந்திக்காத கோணத்தில் கருத்துக்களைக் கவிதைகளாக தரும் இவரின் ஆற்றல் எனக்கு வியப்பைத் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட கவிஞரின் 60 கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கின்ற வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.முதலில் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

 தனக்குப் பிடித்ததை,தன் வாழ்வைத் தான் விரும்பியவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பெருவிருப்பம் உடையவர் இவர்..எதையும் நேரிடையாக எதிர்கொள்ளக் கூடியவர். பேசக்கூடியவர். அந்தத் தன்மை,தனித்தன்மை அவரின் கவிதைகளிலும் வெளிப்படுகிறது.

 
“காடோடிப்/பாடும் என்/ குரல் இறவா/புகழ் பெற்றது “ என்னும் இக்கவிஞர் நாடோடி வாழும் நிலையில் கவிதை பாடுகின்றார்.” எத்தனையோ /கவிதைகளில் /உலா வருகிறேன்” என்று காலம் கடந்தும் வாழப்போகும் தன் கவிதைகளின் வழியாக இறவாத் தன்மையை அடைவேன் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.படைப்புத்தானே ஒருவரின் பெயரை நிரந்தரமாக இந்த உலகில் நிறுவும் வழி.

 
தேடல் என்னும் கவிதை அத்தனை கவித்துவமாய் இருக்கிறது. ‘என் கவிதைக்கான/

ஒற்றைச் சொல்லை’ என்று முடியும் அந்தக் கவிதை ஒரு சிறுகதையின் முடிவைப் போல இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால் “ அந்தி மாலை /வானத்தில் /தேடுகிறேன் / காலை நேரத்துக்/கதிர்களைத்/துழாவுகிறேன்…” என்று தொடரும் கவிதை ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்து நிறைவடைகிறது.

 
தனது கவிதை எப்போது கனமாகிறது என்பதைத் தனது கவிதையின் வழியாகவே தோழர் சொல்கின்றார்.” கட்டுக்கடங்காதச் /சினத்தின் போதும் “ என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை “ ஒரு காகிதமும் /ஓர்  எழுதுகோலும் /போதுமாய் இருக்கிறது” என்று நின்று பின்பு தொடர்ந்து முடிவில் “லேசாகிறது /மனம்!/கனமாகிறது/கவிதை !” என்று முடிக்கின்றார்.நல்ல கவிதை.நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த அற்புதமான படிமங்களை இந்தக் கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கிறார்.

 
புத்தாண்டு வாழ்த்துகளைக் கவிதை வழியாகத் தெரிவிக்கும் இவரின் கேள்விகள் நியாயமானவை.ஆராய்ச்சிக்கும் தீர்வுக்கும் உரியவை. “ஒரு பக்கம் / வாணவேடிக்கைகள் / மறுபுறம் அதிர்வேட்டுகள் /சத்தங்கள் /பால் சுரக்கும்/ காம்புகளை/ அறுத்துப் போடுகிறது” என இருவேறு உலகங்களாக இருக்கும் இந்தப் பூமியில் புத்தாண்டு வாழ்த்துகள் என்னும் குரல் யாருக்கானது என்னும் கேள்வியை இந்தக் கவிதையின் வாயிலாக எழுப்புகிறார்.

 
“மரணத் தேதியை அறிந்தும்/எதிர்கொள்ளும்/அம்மனத்தின் போராட்டத்தை/நாளை எச்சொற்கள்/அடுத்த தலைமுறைக்குக்/கடத்தும்?”  எனக் ‘கல்லறைக் கனவுகள் ‘  என்னும் கவிதையில் கேள்வியை எழுப்புகிறார். அருகில் இருந்து பார்த்தவர்கள் அறிவார்கள்,அந்த உறவுகளின் மனப்போராட்டத்தை.மரணத் தேதியை அறிந்த பின்பும் அமைதியாக அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்க இந்த மாதிரியான கவிதைகள் பயன்படட்டும்.

 சங்க இலக்கியங்கள் பற்றிய கவிஞர் ம.வீ.கனிமொழியின் உரைகள் ,கேட்பவர்க்கு எப்போதும் வியப்பைத் தரும்.பொறியாளர் எப்படி சங்க இலக்கியங்களுக்குள்  இவ்வளவு ஆழ்ந்து ,தோய்ந்து உரை தருகிறார் என்று.’முத்தக் கொத்தல் ‘ என்னும் கவிதையில் காதலும் இருக்கிறது,ஊடலும் இருக்கிறது,சங்க இலக்கியமும் இருக்கிறது.இரசித்துப் படிக்கலாம்.ஆழமான அன்பை அளப்பதற்கான ஒரு வழியையும் தனது கவிதையின் வாயிலாகத் தோழர் ம.வீ.கனிமொழி கூறுகின்றார். இளையவர்கள் அதனைக் கற்றுக்கொள்ளலாம் ‘ஆழம் ‘ என்னும் கவிதையினை வாசிப்பதன் மூலமாக.

இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பாக இருக்கும் ‘நெருப்பின் சிலிர்ப்புகள் ‘ என்னும் கவிதையில் “அத்தி மர நிழலைத்/தேடி அலைந்த காலம்/உண்டு/செர்ரி மரத்தின் நிழலில் /இன்று இளைப்பாறுகிறேன் “ என்று தனது இரண்டு வாழ்நிலை இடங்களைச் சுட்டிக் காட்டி “மரங்கள் /சமத்துவ விரும்பிகள் /அவை எப்படி/அஃறிணையாகும்?” என்னும் கேள்வியை எழுப்புகிறார்.சமத்துவம் விரும்பா மனிதர்கள்தானே அஃறிணைகள் என்பதைச்சுட்டும் இக்கவிதை மரங்கள் ஏன் நெருப்புச் சிலிர்ப்புகளை வீசுகின்றன என்பதனை கவித்துமாய்க் காட்டுகிறது.

 
ஏன் “ஒருபோதும் தனிமையை /என் உணர்வின்/படிமங்கள் கூட/உணர்வதில்லை” என்பதை ‘உணர்வின் படிமங்கள் ‘ என்னும் கவிதையில் முடிப்பதற்கு முன் குறிப்பிடுகின்றார்., “ஒற்றைக் குயில் /கூவிக் கொண்டிருக்கும்/வரை/மெல்லியத் தென்றல் /தீண்டும் வரை.. “ என்று வரிசையாக படிமங்களை நம் கண் முன்னே அக்கவிதையில் வரிசைப்படுத்துகிறார். வகைப்படுத்துகிறார்.அவர் சுட்டும் ஒவ்வொரு உவமையும் நம் கண் முன்னே காட்சியாக விரிந்து தன்னைப் படிமம் என்று சுட்டிக் காட்டுகிறது.அழகியலும் கருத்தும் ஒன்றை ஒன்று விஞ்ச போட்டியிடும் கவிதை இது.

 
கவிஞர் ம.வீ.கனிமொழி “ஓணான்-காகம்-தவளை- காதல்” கவிதை வழியாக்க் காதலை நன்றாகவே பகடி செய்கிறார்..’விந்தை மாதவள் ‘ என்னும் கவிதையில் தாய்மை –புனிதம் என்பதைக் கவிதையின் வழியே கட்டுடைப்பு செய்கின்றார்.” கடந்து பாருங்கள்/தெரியும்/கண்டங்கள் தாண்டும்/இன்பம்” என்று ‘’நிம்மதியின் சாயல் ‘கவிதையில்  நம் நாட்டில் பெண்களுக்கு நிகழும் துன்பங்களை கவிதையின் வழியே பட்டியலிடுகின்றார்.’பல்லி’ என்னும் தலைப்பில் கவிதையைப் படித்தபொழுது உவமைக் கவிஞர் ‘சுரதா’ எழுதிய ‘போலி உடும்பு ‘ என்னும் கவிதை நினைவுக்கு வந்தது.இரண்டு கவிதைகளுமே குறி சொல்லும் பல்லியைக் கேலி செய்யும் கவிதைகள்.இரண்டுக்கும் ஒற்றுமையும் உண்டு,நிறைய வேற்றுமைகளும் உண்டு.

 
இப்படி இக்கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையையும் சிறப்பித்துச்சொல்ல ஏராளமான செய்திகள் உள்ளன.தமிழ்க் கவிதை உலகில் தனக்கான பாணி,தனித்துவமான பாணி என்பதை நிருபிக்கும் வண்ணம் கவிஞர் ம.வீ.கனிமொழியின் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. கட்டாயம் ஆங்கிலத்தில் இதனைத் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் மொழிபெயர்க்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரின் வங்க மொழியில் தன் கவிதைகளை, நாவலை எழுதிப் பின் ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்ப்பதுபோல தோழர் ம.வீ.கனிமொழி அவர்களும் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டும் என்பது  நம் விருப்பம்.ஆங்கிலத்திலும் அற்புதமாக பேசக்கூடிய,எழுதக்கூடிய தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள்.இரண்டு மொழிகளிலும் ஒன்று போல இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டால் இன்னும் சிறப்பாகும்.

இத்தொகுப்பை நம் தோழர்கள் வாங்கிப் படிக்கவேண்டும். முழுமையாகப் படித்து தங்கள் கருத்துகளை இந்த நூல் ஆசிரியர் கவிஞர் ம.வீ.கனிமொழி அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.தன் மனதில் உள்ள கருத்துகளை கவித்துவத்தோடும் துணிச்சலோடும் வெளிப்படுத்தும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் இன்னும் பல படைப்புகளைத் தரவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தோடு ,அவருக்கு இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக என் மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மென்மேலும் வளர்க! படைப்புகளால் இந்த உலகில் ம.வீ.கனிமொழியாக தாங்கள் என்றும் வாழ்க!

                       

 

மதுரை                                         தோழமையுடன்

 

05.10.2024                                             முனைவர் வா.நேரு,

                                                     தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு,

                                                       பெரியார் திடல்,சென்னை-600 007.




2 comments:

ம.கவிதா said...

புரட்சியைப் படைக்கும் கருத்துகளைப் புதுமையுடன் படைப்பவர் கவிஞர்
ம.வீ கனிமொழி அவர்கள்!
நூலில் மூழ்கித் தந்த முத்தான அணிந்துரை தந்திருக்கிறார் நேரு அய்யா அவர்கள்!

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சி.நன்றிங்க அம்மா...