Tuesday 11 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(7)..... முனைவர் வா.நேரு

 

                                 பள்ளிக் கட்டடங்களை எல்லாம் தன் பணத்தில் கட்டிக்கொடுத்தவர்....


மதுரைக்கு மிக அருகில் இருக்கும் ஊர் நத்தம்.ஆனால் அது திண்டுக்கல் மாவட்டத்தைச்சார்ந்தது.." நத்தம் பற்றி இணையத்தில் தேடினால் நிறைய செய்திகள் வருகின்றன. நத்தம் ஊர் பற்றி அ.சையது முகமது அவர்கள் எழுதிய 'நத்தம் ஊர் வரலாறு ' என்னும் நூல் பற்றிய செய்தி இருக்கிறது.அந்த நூலின் ஆசிரியர் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர். மற்றும் நத்தம் சட்டமன்றத்தொகுதி பற்றி  " கரந்தமலை, சிறுமலை என மலைகள் சூழ்ந்த பகுதியாக நத்தம் தொகுதி உள்ளதால் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். மா, புளிய மரங்கள் அதிகம் உள்ளது. இவை ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாயைக் கொடுக்கிறது. காய்கறிகள் பயிரிடுவது முதல் அனைத்து விவசாயங்களும் செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகவும் நத்தம் தொகுதி உள்ளது. நத்தம் பேரூராட்சியை தவிர அனைத்தும் சிறிய கிராமங்கள்.மலைகிராமங்களுக்கு சாலை வசதி கோரிப் பல ஆண்டுகளாக மக்கள் போராடிவருகின்றனர். லிங்காவடி மலையூர் மலை கிராமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துமவனைக்கு கொண்டு செல்ல டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் அவலம் இன்றும் நீடிக்கிறது.

மாம்பழம் அதிக விளைச்சல் உள்ளதால் கூடுதலாக மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை மா விவசாயிகளிடம் உள்ளது. நத்தம் தொகுதியில் உள்ள சந்தனவர்த்தினி ஆறு மணல் திருட்டால் உருக்குலைந்து போய் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமலையில் இருந்து வரும் தண்ணீரை தடுக்க சந்தனவர்த்தினி ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்ற கோரி்க்கையும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது உயர்கல்வி படிக்க ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை"என்று ஒரு தேர்தல் பற்றிய செய்தியோடு நத்தம் ஊரைப் பற்றிய செய்தி உள்ளது...நத்தத்திற்கு நான் போயிருக்கிறேன்.நத்தமும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் அமைந்த ஊர்தான்..2005-ல் உருவாக்கப்பட்ட என்பிஆர் கல்லூரி இப்போது அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் கல்வியைக் கொடுக்கும் பொறியியல் கல்லூரியாகவும்,கலை அறிவியல் கல்லூரியாகவும் திகழ்கிறது..பி.எஸ்.என்.எல்.அதிகாரியாக,அதிவேக பைபர் இணைய இணைப்பு சம்பந்தமாக அந்தக் கல்லூரிக்குப் போயிருக்கிறேன்.மலையை ஒட்டி அமைந்திருக்கும் அழகான,மிகப்பரந்த இடவசதி உள்ள கல்லூரி அது.(கொஞ்சம் சுயபுராணத்திற்கு பொறுத்துக்கொள்க) 

தன் முதல் ஆசிரியப்பணி பண்ணைக்காட்டில் ஆரம்பித்ததை விவரித்த எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்கள் அடுத்த ஊரின் அனுபவத்தைச்சொல்ல ஆரம்பித்தார். " "பண்ணைக்காட்டிலிருந்து எனக்கு மாறுதல் நத்தத்திற்கு.நத்தமும் மலைப்பகுதிதான்..நான் பண்ணைக்காட்டிலிருந்து மாறுதல் வேண்டும் எனக்கேட்டிருந்தேன்.நத்தத்திற்கு மாறுதல் கிடைத்தது.எனக்கு திருமணம் முடிந்துவிட்டது.எனது மனைவி பட்டம் முடித்திருந்தார்கள்.வேலைக்குப் போகவில்லை."


நத்தத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன்.ஆரம்ப காலம் அது.எனது உன்னதமான பணிக்காலம் இந்த இரண்டு ஆண்டுகள்...நத்தம் பள்ளியும் கோ-எட் பள்ளி அதாவது ஆண்களும் பெண்களும் படிக்கும் இருபாலர் பள்ளி.ஆசிரியர் பணிதான் எனக்கு. அப்போதே 1500 பிள்ளைகள் படித்தார்கள்.நத்தத்தைச் சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள்.கிராமத்துப் பிள்ளைகள் எல்லாம் படிக்க வந்துவிட்டார்கள்.அதில் முஸ்லீம்கள்தான் அதிகம்.ஒரு வகுப்பில் 40 மாணவ-மாணவியர்கள் இருந்தால் அதில் 25 பேர் முஸ்லீம்கள்.அன்றைக்கே(1963-64) நாங்கள் 30 ஆசிரியர்கள் பணியாற்றினோம்.நத்தம் என்பது நகர்ப்புறச்சூழல். ஆனால் மாணவ,மாணவியர்கள் அனைவரும் கிராமப்புற மாணவ-மாணவியர்கள்.

இங்கும் நான் ஆங்கிலமும் கணக்கும் பாடம் எடுத்தேன்.பண்ணைக்காட்டைவிட மாணவர்களிடம் ஒரு தெளிவு இருந்தது.ஆசிரியர்கள் மத்தியில் பண்ணைக்காட்டைப் போலவே நாம்தான் என்ற உணர்வு இருந்தது.பெற்றோர்களைப் பற்றி விமர்சனம்தான் செய்தார்களே தவிர பெற்றோர்களுடைய  உதவி தேவை: என்பதனை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.இங்கே இருந்த தலைமை ஆசிரியர் கெட்டிக்காரர்.

நத்தம் பள்ளிக்கூடத்தில் அனைத்து வசதிகளும் இருந்தது.பள்ளியின் இடம் மட்டும் அரசு இடம்.அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த அனைத்துக்கட்டடங்களையும் ஒரே ஒரு மனிதர் கட்டிக்கொடுத்திருக்கின்றார்.அவரது பெயர் துரைச்சாமிப்(பிள்ளை).மலேசியா வாழ் தமிழர்.அந்தக் காலத்திலேயே பட்டதாரி அவர்.அவர்தான் அவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டிக்கொடுத்திருந்தார்.எவ்வளவு பெரிய தொகை?எவ்வளவு பெரிய மனது?...எத்தனை ஆயிரம் பிள்ளைகள் படிப்பதற்கான அடித்தளம் அந்தக் கட்டடம். இப்போது எல்லாம் கோயிலுக்கு எழுதி வைக்கிறோம்ன்னு சொல்றாங்களே தவிர பள்ளிக்கூடத்திற்கு செலவழிக்க நினைப்பதில்லை...

அவரே ஒரு பெரிய கேணி(கிணற்றைத்) தோண்டிக் கொடுத்திருந்தார்.வற்றாத தண்ணீர்.அந்தக் கட்டிடங்களைக் கட்டும்போதே உடற்பயிற்சிக்கென்று இரண்டு தனி அறைகள் கட்டித் தந்திருந்தார்.ஆசிரியர்களுக்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்ட கட்டிடம்.அந்தப் பள்ளியில் இருந்து ஆண்டுதோறும் மாநில அளவில் விளையாட்டுப்போட்டிக்கு போவார்கள்.வெற்றி பெறுவார்கள்.அந்த அளவிற்கு நத்தம் பள்ளியில் கட்டமைப்பு இருந்தது. பயிற்சியும் கொடுத்தார்கள்.

அங்கேயும் என்னுடைய பணியைச்செய்தேன்.நானாக எந்த வகுப்பும் வேண்டும் என்று கேட்பதில்லை.தலைமையாசிரியர் போடும் வகுப்பில் போய்ப் பாடம் எடுத்தேன்.மேல் வகுப்பிற்கு அந்தப் பள்ளியில் '4' செக்சன் இருந்தது.'A'செக்சன் அல்லது 'B"செக்சன்தான் எனக்குத் தலைமை ஆசிரியர் போடுவார்.அந்தப் பள்ளியில் என்னையும் சேர்த்து 5 பேர் கணித ஆசிரியர் இருந்தோம்.நான்தான் அதில் ஜூனியர்.என்னைக் கொண்டு போய் மேல்வகுப்பில் போட்டார். ஒருவர் தலைமை ஆசிரியரோடு சண்டைக்குப் போய்விட்டார். " என்ன சார்,நான் சீனியர் இருக்கிறேன்.இத்தனை வருடம் சர்வீஸ் ஆச்சு.நேற்று வந்தவருக்கு மேல் வகுப்பில் கொடுத்திருக்கின்றீர்களே,நியாயமில்லை,மாற்றிக்கொடுங்கள்". என்று தலைமை ஆசிரியரிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். நான் கையெழுத்துப்போடப் போகின்றேன்.சண்டை நடந்து கொண்டு இருக்கிறது.நான் பேசாமல் கையெழுத்துப்போட்டுவிட்டுப் போய் விட்டேன்.

போய் விட்டுப் பிறகுவந்து தலைமை ஆசிரியரிடம் சொன்னேன்." சார்,எனக்கு 6-ஆம் கிளாஸ் கூடப்போடுங்கள்.எனக்கு வேலை மட்டும்தான் முக்கியம்.எதுக்கு அவர்களுக்கு  வருத்தம்,நீங்கள் மாத்தி அவர்களுக்கே மேல் வகுப்பைக் கொடுத்து விடுங்கள் " என்றேன்."முடியாது சார்,முடியாது " என்றார் தலைமை ஆசிரியர். " சார் எனக்கு ஒன்றுமில்லை,ஆறாம் வகுப்பு என்றாலும் பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு என்றாலும் ஒன்றுதான். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் " என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டேன்..

அப்புறம் அந்தத் தலைமை ஆசிரியர் என்ன செய்துவிட்டார் என்றால் அந்த வாத்தியாரைக் கூப்பிட்டு " நான் இந்த வகுப்பிற்குப் போகமாட்டேன் என்று சொல்லி எழுதிக்கொடுங்கள்" என்று கேட்டுவிட்டார்.எப்ப்டி எழுதிக்கொடுப்பார்.பிறகு அந்தப் பிரச்சனை இல்லை.

நான் ஆசிரியர் வேலை பார்த்துக்கொண்டே  மற்ற பள்ளிக்கூட வேலைகளையும் செய்வேன்.அன்றைக்கே அந்தப்பள்ளிக்கு 2 கிளார்க்குகள்.அவர்களுக்குத் தனி அறை.அவர்களும் ஏதாவது பணிக்கு என்னைக் கூப்பிடுவார்கள்.நான் போய் உதவி செய்வேன்.எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.ஏதாவது பள்ளியில் வளர்ச்சிப்பணி செய்யவேண்டுமென்றால் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்பார்.ஆசிரியர்கள் கூட்டத்திலேயும் கருத்துக்கேட்பார்.நான் சொல்லுவேன்.".

நத்தம் அனுபவத்தைத் தொடர்ந்து சொன்னார் எனது தலைமை ஆசிரியர்.அடுத்த கட்டுரையில் சந்திப்போம்



                                                                     தொடரும்...



2 comments:

Kavitha Elango said...

"இப்போதெல்லாம் கோயிலுக்கு எழுதி வைக்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர பள்ளிக்கூடத்திற்கு செலவழிக்க
நினைப்பதில்லை " - சிந்தனையைத் தூண்டும் தங்கள் தலைமையாசிரியரின் கூற்று சிறப்பு அய்யா.

முனைவர். வா.நேரு said...

ஆம்.மீண்டும் பள்ளிகளை நோக்கி நன்கொடையாளர்கள் கவனம் திரும்பவேண்டும்.நன்றிங்க அம்மா கருத்திற்கு...