Saturday 8 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(6).....முனைவர் வா.நேரு

                           பள்ளியில் விளக்கேத்தி வைத்துவிட்டீர்கள்....

தன்னுடைய முதல் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பணியைப் பற்றி ,பண்ணைக்காட்டில் வேலை பார்த்த அனுபவம் பற்றித் தொடர்ந்து கூறிய எனது ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்...

"அந்த ஊரில்(பண்ணைக்காட்டில்) உள்ள ஒரு ஹோட்டலில்தான் நாங்கள்,ஹைவேஸ்,பி.டபுள்.யூ.டி. மற்றும் பல்வேறு துறைகளைச்சார்ந்தவர்கள் சாப்பிடுவோம்.பி.டபுள்.யூ.டி.யில் வேலை பார்க்கும் ஒருவர்,என்னைப் பார்த்து மகிழ்ச்சியோடு " வாங்க சார்,நீங்கள்தான் அந்த ரிபல்(Rebel) லீடரா ?" என்று கேட்டார்.திடீரென்று அந்த ஊரில் எனக்குப் பட்டம் கொடுத்துவிட்டார்கள்.

"அப்படி இல்லை,நான் ஒன்றும் அப்படி செய்யவில்லை "என்றேன்."பள்ளியில் விளக்கேத்தி வைத்துவிட்டீர்கள்"என்றார்.(மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது).அந்த ஊரில் எங்கு சென்றாலும் மரியாதை,ஹோட்டல் மற்றும் சென்ற இடங்களிலெல்லாம் அவ்வளவு மரியாதை ஆசிரியர்களுக்கு இருந்தது.

ஆனால் அன்றைக்கு ஆசிரியர்களுக்கு எனக்கு உட்பட ஒரு மனநிலை இருந்தது.நாம் சொல்வதை மாணவர்கள்,பெற்றோர்கள் கேட்கவேண்டும்.எதிர்த்துப்பேசக்கூடாது.ஒரு சர்வாதிகார மனப்பான்மை எங்களுக்குள் இருந்தது.ஒரு சம்பவம் பண்ணைக்காட்டில் நடந்தது..இரண்டு ஆசிரியர்கள் பெற்றோர்களைத் தவறாகப் பேசிவிட்டார்கள்.பொதுமைப் படுத்தி பேசிவிட்டார்கள்.ஊர்ப் பொதுமக்கள் ஒன்று திரண்டு கூட்டமாக வந்து விட்டார்கள்.இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை.சமாதானப்படுத்தி அனுப்பவேண்டும்.ஆசிரியர்கள் செய்தது தவறு என்பதனை உணர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெற்றோர்களிடம் பேசினோம்.அடிக்காத குறைதான்.அவ்வளவு கோபமாக இருந்தார்கள்.எல்லோரையும் சமாதானப்படுத்தி,பேசிய ஆசிரியர்களை மன்னிப்புக் கேட்கச்சொல்லி,இந்த ஒருமுறை மன்னித்து விடுங்கள்,இனிமேல் இப்படி நடக்காது என்று சொன்னபின்புதான் பெற்றோர்கள் போனார்கள்.

இந்த நிகழ்வும் எனக்கு ஒரு விழிப்புணர்வைக் கொடுத்தது.பெற்றோர்கள் உதவி இல்லாமல் நிர்வாகம் நடத்த முடியாது.மிகவும் சின்சியராக இருப்பதோடு வெளியில்- சமுதாய நடவடிக்கைகளில் மிகவும் ஒழுக்கமாகவும் இருக்கவேண்டும்.அதிலே ஆரம்பித்ததுதான் எனது ஆசிரியர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம்.பெற்றோர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது.பெற்றோர்கள் உதவியோடு எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக பண்ணைக்காடு பள்ளிக்கூட அனுபவம் அமைந்தது "என்றார்.

பண்ணைக்காடு பள்ளிக்கூடம் பற்றி எனது ஆசிரியர் திரு.வீரிசெட்டி அவர்கள் மேற்கண்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.வேலைக்குப் போய் புதிதாகச்சேர்ந்து பணியாற்றிய நிலையிலேயே தனக்கு சரியெனப்பட்டதை பயப்படாமல் பேசியிருக்கிறார்.திரும்பத் திரும்ப அவர் சொன்ன ஒரு விசயம்,அரசுப்பள்ளியில் பெற்றோர்களின் பங்களிப்பு என்பது மிக மிகத் தேவையான ஒன்று.அண்மைக் காலங்களில்,பத்திரிக்கையாளர்கள்,ஊடகங்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் அன்புப்  பிணைப்பை உடைப்பதில்,உடைத்து நொறுக்குவதில் பெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள் என்பதைச்சொல்லுவார். கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லுவார்.

அண்மையில் ஒரு வாட்சப் குழுவில் ஒரு ஆசிரியர் பேசியது வந்தது. "ஆசிரியர்களே " என ஆரம்பித்த அந்த உரை,தூத்துக்குடியில் நடைபெற்ற,ஒரு ஆசிரியரை ஒரு மாணவனின் பெற்றோரும் தாத்தாவும் துரத்தித் துரத்தி அடித்த ஒரு கொடுமையை விவரித்தது.உண்மையிலேயே மிகவும் கண்டிக்கப்படவேண்டிய செய்திதான். ஆனால் அந்த நிகழ்வைச்சுட்டிக் காட்டிப் பேசிய அந்த ஆசிரியர் தனது பெயரைக் குறிப்பிடாமல்,நாம்(ஆசிரியர்கள்) எல்லாம் கிராமத்தில் வேலை பார்க்கின்றோம், நாம் எவ்வளவு உயர்ந்த விலை உடை அணிகிறோம்,ஆபரணங்கள் அணிகிறோம்,எந்த வண்டியில் வருகின்றோம் என்பது வரை ஊர்க்காரர்கள்,கிராமத்துக்காரர்கள் கவனிக்கிறார்கள்.நம் மீது பொறாமைப்படுகிறார்கள்.தயவு செய்து உங்கள் வேலை நேரத்தில் மட்டும் முடிந்த அளவிற்கு பாடம் நடத்துங்கள்.வீட்டில் கொண்டு வந்து பேப்பர் திருத்துகிறோம்,மற்ற பள்ளிக்கூடத்திற்கான வேலைகளைச்செய்கிறோம் என்று செய்யாதீர்கள்,பெற்றோர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பள்ளிக்குள் விடாதீர்கள் ...என்பது போன்ற பல கருத்துக்களைப் பேசியிருந்தார்.அவரது உணர்வைப் புரிந்துகொள்கின்ற அதே நேரத்தில் அவரது முடிவு,தானுண்டு,தன் பணி நேரத்தில் ஏதோ என்னால் செய்ய முடிந்த வேலையைச்செய்வேன் என்பது சரியான முடிவு அல்ல என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளைப் போல சாதாரணப் பணி அல்ல.அதற்கு ஒரு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. உளவியல் தேவைப்படுகிறது.உயர்ந்த நோக்கம் தேவைப்படுகிறது.நிறைவாக ஆசிரியர் பணி செய்தவரின் அனுபவம் என்பது சொற்களால் வடிக்க இயலாததது.இரவும் பகலும் மாணவ,மாணவியர்களின் நலன் பற்றிச்சிந்திப்பதும்,தான் பணியாற்றும் பள்ளியில் கட்டமைப்புகளை (Infrastructure) மேம்படுத்துவதன் மூலமாக எவ்வாறெல்லாம் மாணவர்களின் கல்வி மேம்படும் என்பதனைச் சிந்திப்பதும்,தான் சிந்தித்ததின் அடிப்படையில் மற்றவர்களை அணுகுவதும் ,செயல்படுவதும் எல்லோரும் செய்யும் செயல் அல்ல.ஏதோ பள்ளிக்கு வந்தோமா,பாடங்களைப் பிள்ளைகளுக்குப் புரிந்தும் புரியாமலும் நடத்தினோமா,மாதத்தின் முதல் தேதியில் சம்பளத்தை வாங்கிச் செலவழித்தோமா என ஏனோ,தானோ என்னும் போக்கில் வேலை பார்க்கும் எந்த ஆசிரியரும் மாணவர்களின் மனதில் படிக்கும் காலத்திலேயே நிற்பதில்லை.படித்து முடித்து பல ஆண்டுகள் ஆன பின்பும் ,அந்த ஆசிரியரால் நான் உயர்ந்தேன் எனச்சொல்லும் சில மாணவர்கள் ஒரு ஆசிரியருக்கு கிடைப்பதே அரிது.ஒரு ஆசிரியரிடம் படித்த பல மாணவர்களும்,மாணவியர்களும் காலம் கடந்தும் தங்களுடைய 'கனவு ஆசிரியர்களாக' நினைவில் வைத்திருப்பது சிலரைத்தான்.அப்படி பல மாணவ,மாணவியர்களின் நினைவில் நிற்கும் 'கனவு ஆசிரியர்' தான் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்.

இந்த நேரத்தில் நான் படித்த 'கனவு ஆசிரியர்' என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது.இந்தக் 'கனவு ஆசிரியர்' என்னும் புத்தகம்,திரு.க.துளசிதாசன் அவர்களைத் தொகுப்பு ஆசிரியராகக் கொண்டு,பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமாகிய 'புக்ஸ் பார் சில்ரன்' என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் பிசினஸ் லைன் என்னும் பத்திரிக்கையைச்சுட்டிக் காட்டி அதில் 8-க்கு 6பேர் அதாவது 75 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டியாக பள்ளி ஆசிரியரைத்தான் சுட்டுகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டியிருப்பார்.அந்த நூல் பற்றிய எனது வலைத்தள முகவரி http://vaanehru.blogspot.com/2013/10/blog-post.html.விரும்புகிறவர்கள் படித்துப்பார்க்கலாம். 

பள்ளிப்பருவம் என்பது இன்னமும் எழுதப்படாத சுவராக இருக்கும் பருவம்.எது நல்லது,எது கெட்டது என்பதனைப் பிரித்து உணரத் தெரியாத பருவம்.படிப்பு என்பதன் முழுப்பயன் தன்னை எவ்வளவு தூரம் உயர்த்தும்,தன்னைச்சுற்றி இருப்பவர்களை எவ்வளவு தூரம் பெருமைப் படுத்த உதவும் 'அறிவு'க் கருவி என்பதனை அறியாத பருவம்.இந்தப் பருவத்தில் படிக்க வரும் பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் போல் பாவித்து,அன்பும் அரவணைப்பும்,கண்டிப்பும் செலுத்தும் ஆசிரியர்களே 'கனவு ஆசிரியர்'களாக மிளிர முடியும்,ஒளிர முடியும்...

அடுத்த கட்டுரையில் அவர் நத்தம் பள்ளியில் பணியாற்றிய அனுபவங்களைப் பார்ப்போம்...


7 comments:

தமிழன்பு said...

👏

முனைவர். வா.நேரு said...

நன்றி

Kavitha Elango said...

கனவு ஆசிரியர் என்போர் யாரெனக் கேட்டால் தங்கள் பதிவு பதில் சொல்லுமய்யா! 🥰

முனைவர். வா.நேரு said...

மிக்க மகிழ்ச்சி. அப்படித் தெரிந்துகொண்டால் உள்ளம் மகிழும்.

Thenmozhi said...

well said

thenmozhi said...

well articulated

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர் தேன்மொழிக்கு...