Wednesday 5 April 2023

ஜா‘தீய’ உணர்வை எப்படி மாற்றுவது?....முனைவர் வா. நேரு

 ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாள்.. நாமெல்லாம் கொண்டாடும் திருநாள். என் தலைவர் என்று தந்தை பெரியார் அவர்களால் கொண்டாடப்பட்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.இந்திய நாட்டில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் எல்லாரும் உயரவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் பேரறிஞர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அம்பேத்கர் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்குப் பதில் அளிக்குமாறு டுவிட்டரில் பி.பி.சி.தமிழ் நிறுவனத்தார் 2021 திசம்பர் 6 அன்று கேட்டிருந்தார்கள். பலர் பதில் அளித்-திருந்தனர்.அவற்றுள் சில…


‘‘ஜாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’’,


‘‘சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம். அதை இழந்து வாழ்வது மிகப்பெரிய அவமானம்.’’


‘‘சமூக நீதி’’, ‘‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்… சட்டமேதை..’’,


‘‘உலகமே கொண்டாடக் கூடிய ஒப்பற்ற பெரும் தலைவரை ஜாதிச் சாயம் பூசி, அவரை நாம் கொண்டாடாமல் போனது பெரும் துயரம். இனி வரும் தலைமுறைக்காவது சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பற்றிப் போதியுங்கள்’’.


‘‘வாசிப்பு! வாசிப்பு!! வாசிப்பு!’’


“நீலம்….. அவர் வாழ்நாளில் படித்த புத்தகங்கள்… தனி நபர் நூலகம்…”, “இந்திய அரசியலமைப்பு சட்டம்’’,


‘‘ஆகப் பெரிய படிப்பாளி.’’, ‘‘பார்ப்பனியப் பொறுக்கித்தனத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்’’.


“நாகர்கள், சட்டம், நீதி, சமத்துவம், அறிவு, கல்வி, இரட்டை வாக்குரிமை”, புரட்சி”,


“அவர் யாருக்காகப் போராடினரோ அவர்களே(BC,OBC)) அவரது சிலையை உடைக்கின்றனர்…. புரிதல் இல்லாத சமூகம்…”,


“தேசத் தந்தை”,


“கல்வி மறுக்கப்பட்ட நிலையை அடித்து நொறுக்கி தான் படித்த பட்டப் படிப்புகளை எவராலும் நினைவில்கொண்டு பட்டியலிடமுடியாத அளவுக்குப் படித்த படிப்பு.”


“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள், எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள், எனக்கு மேல் ஒருவரும் இல்லை _ -எனக்குக் கீழும் ஒருவரும் இல்லை என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள் என்ற அண்ணலின் முழக்கமே”,


“1.கிராமக் கட்டமைப்பை உடைத்து, சூத்திரர்கள் உள்பட சாதாரண மனிதனுக்கும் சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது.

2. ஹிந்து சனாதனக் கோட்பாடுகளைப் படித்து, ஆராய்ந்து அதன் புரட்டுகளை உலகறியச் செய்தது.

3. ரிசர்வ் வங்கி உருவானது, பெண்ணுரிமைகள், 8 மணிநேர வேலை என்ற சட்ட.ம்

4 “சாகும்போது இந்துவாகச் சாக மாட்டேன்” என்ற வாக்குறுதி”, “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்று இப்படி அவரைப் பற்றி சுருக்கமாக பதிவு செய்தவை அனைத்தையும் ‘‘பி.பி.சி. தமிழ்’’ பதிவு செய்திருக்கிறது.


மேற்கண்ட பலரின் பதிவுகள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பல்வேறு பரிமாணங்களை எடுத்து இயம்புகிறது.



அண்ணல் அம்பேத்கர் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் புரிந்துகொள்வதற்கு அடிப்படையாக அமைவது ஜாதி ஒழிப்புக் குறிக்கோள் ஆகும். இருவரும் தங்கள் வாழ்க்கை முழுவதையும் ஜாதி ஒழிப்புக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்.ஜாதி என்னும் அமைப்பு தோன்றுவதற்கும் இன்றைக்கும் அந்த அமைப்பை அழிந்து போகவிடமால் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனிய இந்து மதம் அழிய வேண்டும் என்று விரும்பியவர்கள்.அதற்காக உழைத்தவர்கள்.தியாகங்கள் பல செய்தவர்கள். தாங்கள் போராடிய போராட்டங்களையே தங்கள் வாழ்க்கைச் செய்திகளாக விட்டுச்சென்றவர்கள்.


“ஜாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல் சுவரோ கம்பி வேலியோ அல்ல; ஜாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மன நிலை. எனவே, ஜாதியை ஒழிப்பது என்பது ஒரு பவுதீகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ என்றார் அண்ணல் அம்பேத்கர்.


சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய நாட்டில் உள்ள மக்களின் எண்ணத்தில் ஜாதி பற்றிய மன நிலை மாறியிருக்கிறதா? என்றால் மிகக் குறைந்த சதவிகித எண்ணிக்கையிலான மக்களின் மன நிலை மாறியிருக்கிறது.இன்னும் 90 சதவிகித மக்கள் மனதில் ஜாதிஉணர்வு இருக்கத்தான் செய்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்த உணர்வை எப்படி மாற்றுவது என்ற எண்ணம்தான் நமக்கு மேலோங்குகிறது.


இன்னும் வேங்கைவயல் நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. .மனிதர்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கலக்கும் கொடூரமான மன நிலை இருக்கிறது. பெற்ற பெண்ணாக இருந்தாலும், வேறு ஜாதிப் பையனோடு காதல் கொண்டாள்,திருமணம் முடித்துக்கொண்டாள் என்று சொல்லிக் கொலை செய்யும் கொடுமை இருக்கிறது.ஜாதி என்னும் கொடுமையை ஒழிப்பதற்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் மண்ணிலும் பட்டியல் இனத்தவருக்குச் செய்யப்படும் கொடுமைகள் அதிகமாக இருக்கின்றன என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.ஜாதிக்கொரு சுடுகாடு என்பது இன்னும் பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. இதனை எப்படி மாற்றுவது?


கிராமங்கள் மறைய வேண்டும், தொழில் நகரங்கள் அமையவேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் விரும்பினர். இன்றைக்கும்கூட ஜாதியை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் நிலமாக கிராமங்கள் இருக்கின்றன.கோவில்,திருவிழா,பாரம்பரியம் என்னும் பெயர்களில் ஜாதி பாதுகாக்கப்படுகிறது.


இந்திய மனிதர்கள் நாடு கடந்து கடல் கடந்து வேறு நாடுகளில் போய் வாழும் நிலையிலும் மனதிற்குள் ஜாதிய மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்த அமெரிக்க நாட்டின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது.42 இலட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வசிப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.ஜாதி அடிப்படையிலான பாகுபாடு தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும் அதனை மாற்றுவதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் சியாட்டில் சட்டம் இயற்றியோர் கூறியுள்ளனர்.


அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும்,அறிந்து கொள்ளவும், அவரின் கொள்கை வழி நடந்திடவும் திராவிடர்

கழகம் தந்தை பெரியார் காலம் முதல் இன்றுவரை

பாடுபடுகிறது.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ‘ஜாதியை ஒழிக்க வழி’ நூலினை முதன் முதலில் தந்தை பெரியார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ‘‘தவறாகப் பூஜிக்கப்படும் கடவுள்” என்று அருண்ஷோரிகள் அவதூறுகளை அள்ளி வீசியபோது திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறுப்பு உரைகளை நிகழ்த்தி, அந்த உரைகள் நூலாக வெளிவந்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அய்யா ஆசிரியர் அவர்களின் ‘அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ‘புத்தக் காதலும் புத்தகக் காதலும்” நூல் உதவுகிறது.


திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாளை ‘‘சமத்துவ நாள்’’ என்று அறிவித்தது மட்டுமல்லாமல், அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளைத் தமிழில் மொழி பெயர்த்திட

ரூ. 5 கோடி நிதியினை அண்மையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறார். வரவேற்கத்தக்க அறிவிப்பு. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளைத் தேடித் தேடிப் படித்திடுவோம்; பரப்பிடுவோம். ஜாதிகள் ஒழிந்த சமத்துவ சமுதாயம் காண உறுதி ஏற்போம்.


அண்ணல் அம்பேத்கர் வாழ்க! அவர்தம் புகழ் ஓங்குக! 


நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ் ஏப்ரல்(1-15),2023



2 comments:

Anonymous said...

அண்ணல் புகழேந்தும் கட்டுரை அருமை அண்ணே!

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சி.