Tuesday, 14 July 2026

அண்மையில் படித்த புத்தகம் : அதிகாரம் ( நாவல்)...எஸ்.அர்ஷியா

 

அண்மையில் படித்த புத்தகம் : அதிகாரம் ( நாவல்)

ஆசிரியர் : எஸ்.அர்ஷியா

வெளியீடு : எதிர் வெளியீடு,பொள்ளாச்சி . செல்: 9942511302

முதல் பதிப்பு : ஜூன் 2016, 200 பக்கம், விலை ரூ 180

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எண் : 894-8113 ARS ;1




 

தோழர் எஸ்.அர்ஷியா நினைவில் வாழும் எழுத்தாளர். அவரோடு படித்த அண்ணன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் அடிக்கடி அவர் பற்றிக் குறிப்பிடுவார். நான் மதுரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொதுமேலாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களைப் பார்க்க எஸ்.அர்ஷியா வருவார்.அப்போது அறிமுகமாகி அவரோடு சிலமுறை பேசியிருக்கிறேன். தோழமை கலந்த உரையாடலாக அவரின் உரையாடல்கள் இருக்கும்.

அதிகாரம்என்னும் இந்த நாவலைப் படித்தபோது ,அவர் எவ்வளவு விமர்சனப்பார்வையும், சமூகத்தின் மீதான அக்கறையும் உள்ளவர் எனத் தெரிந்தது.’ அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாது , அநீதி களைய முடியாதுஎன்பது தொழிற்சங்க முழக்கம். அப்படி ஒன்றுகூட முடியாதபோது, கண் முன்னே நிகழும் அநீதிகளை எழுத்தின் வழியாகப் பதிவு செய்வதும் ஒரு மிகப்பெரிய போராட்டம்தான். அந்த வகையில் காவல்துறை குறித்த, தன் மீது வன்முறை நிகழ்த்தப்படலாம் என்பதை உணர்ந்தபின்பும் அச்சமின்றி இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்பதை வாசிப்பின் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

மதுரை மாவட்டத்தில் இருக்கும்  ஒரு ஊர் மேலூர். அங்கிருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷன். அங்கிருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் மணிமாறன். அங்கிருக்கும் காவலர்கள், ஏட்டையாக்கள், பெண் போலீஸ்கள், எஸ்.ஐ.கள், புதிதாகப் பணிக்கு வந்துள்ள ஒரு பெண் எஸ்.ஐ. திவ்யா என்று முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ஸ்டேஷனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கதை.நிகழ்ந்த கதையாக இருக்கலாம் அல்லது நிகழப் போகின்ற கதையை ஏற்கனவே சொல்லிவிட்டாரோ என்று நினைக்கக் கூடிய அளவிற்கு எழுதப்பட்டுள்ள ஒரு நாவல்.

அதிகாரம் என்பது எப்படிக் கட்டமைக்கப்படுகிறது. எளிய மனிதர்கள் மேல் அவ்வளவு அதிகாரம் செலுத்தும் போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள், நீதிமன்றத்திற்கு உள்ளே போகும்போது எப்படி அவமதிப்பு உருவாகிறார்கள், அதனை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் பேசக்கூடிய ஒரு நாவலாக இந்த நாவல் இருக்கிறது.

காணாமல் போன பவளம் என்றொரு பெண். அவளுக்குக் கணவன் இருக்கிறான், ஒரு குழந்தை இருக்கிறது. பெற்றோரால் உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக தனது தாய்மாமன் சங்கரநாதனுக்கு கட்டி வைக்கப்பட்டப் பெண்ணான பவளத்தைக் காணவில்லை என்பதில் இருந்துதான் கதை தொடங்குகிறது. பவளம் கவிதை எழுதுகிறாள்..ஏற்கனவே கல்யாணமான ஒருவனோடு காதல் கொள்கிறாள். தான் ஆசைப்பட்டவனை வரைந்து வைக்கிறாள் அவனோடு பேசிய சில தருணங்களை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறாள். ஆனால் எப்படிப்பட்ட எதிர் விளைவுகள் வரும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டை விட்டு ஓடி அதனால் சில துன்பங்களை சந்திப்பவளாக இந்த நாவலில் பவளம் வருகிறாள்.

முஜம்மின் என்னும் கதாபாத்திரம் மிக வலுவாக இந்த நாவலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. திடீரென உன்னைக் காதலிக்கிறேன் என்று வந்து நிற்கும் பவளத்திடம் இல்லை நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டு எப்போதும் போலத் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்வதற்கு முஜம்மின் சென்று விடுகிறார் ஆனால் பவளத்தின் வீட்டில் அவளின் டைரியில் இருந்த வரையப்பட்ட முஜம்மின் உருவம், போலீசை அவனை நோக்கி விசாரணையை திசை திருப்ப வைக்கிறது. மிக இயல்பாக விசாரணை என்று சொன்னவுடன், தன்னுடைய பேரன் முஜம்மினை, இன்ஸ்பக்டரின் வந்து ஒப்படைக்கும் அவனது தாத்தா,அவரது இறை நம்பிக்கை, போலீசின் கொடுமையான விசாரணை,அதன் விளைவாக முஜம்மின் மரணம் என்று இந்த நாவல் நடப்பு போலீஸ் நடவடிக்கைகளை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துக் காட்டுகிறது.

மனதில் ஈரம் இருக்கும் இரண்டு போலீஸ் எஸ்.ஐ-க்களாக திவ்யாவும்,கடம்பனும் காட்டப்படுகிறார்கள். காவல்துறைக்குள் இருக்கும் அவர்கள் எப்படி பந்தாடப்படுகிறார்கள் என்பதை  இயல்பாக அர்ஷியா எழுதிச்செல்கிறார். பெண் காவலர்கள் படும் பாட்டைப் பற்றி விரிவான விவரிப்பு இருக்கிறது.

நாவல் முழுவதும் பகடி இருக்கிறது.எத்தலும் குத்தலும் அதிகாரத்தை நோக்கி இருக்கிறது.தனது மதத்தைப் பற்றிய விமர்சனம் இருக்கிறது(பக்கம் 102).எப்படி காவல்துறை கட்டமைப்பு இருக்கிறது என்பதைப் பற்றிய துல்லியமான விவரிப்பு இருக்கிறது. சில நல்ல கவிதைகள் கதைக்குள்ளேயே இருக்கின்றன.




வாசிக்க வேண்டிய நாவல். சில உண்மைகள் கசக்கத்தான் செய்கின்றன.அவற்றை வாசிக்கும்போது மனதிற்குள்ளும் அந்தக் கசப்பு பரவுகிறது. இருந்தபோதினும் இப்படி உண்மையைச் சொல்லும் நாவல்கள்  நிறைய வரும்போது கசப்புகளை நீக்கும் மருந்துகள் சமூகத்தில் உருவாகலாம்..

வா.நேரு, 15.07.2026

Saturday, 11 July 2026

கிளியும் எலியும்….

 



கிளியும் எலியும்….







                       

அன்றொரு நாள்

ஓர் இரவில்

அவன் அலறிய அலறல்

இன்னும் கூட என்

காதுகளில் ஒலிக்கிறது

 

அவன் ஆசை ஆசையாய்

வளர்த்த கிளியை

பூனை ஒன்று கவ்விக்

கடித்துக் குதறுவதை

விழிப்பிலிருந்து எழுந்து

பார்த்து அவன் கதறிய கதறல்

இன்னும் கூட என்

காதுகளில் ஒலிக்கிறது

 

உறவு ஒன்றைப்  பறி

கொடுத்ததுபோல பெரும்

குரலெடுத்து அழுதான்

இரத்த வெள்ளத்தில் கிடந்த

கிளியைப் பார்த்து

 

அதனாலேயே இளமையில்

பூனைகள் மீது பெரும்

வெறுப்புக் கொண்டிருந்தான்

பூனைகளைப் பார்த்தாலே

கல்லெடுத்து எறிவான்

 

பல ஆண்டுகளுக்குப் பின்

சந்தித்த வேளையில் தான்

வளர்க்கும் பூனைக்குட்டியின்

அன்பையும் பாசத்தையும்

நேசத்துடன் விவரித்தபோது

வியப்பாக இருந்தது எனக்கு..

 

இடையூறு செய்யும் எலிகள்

எல்லாம் மட்டுப்பட்டிருக்கிறது

என்றான் அவன்..

 

                              வா.நேரு, 11.07.26

 

 

Friday, 10 July 2026

கொடிய நோய் எந்த நோய்?...

 

                              கொடிய நோய் எந்த நோய்?...

 

இருக்கும்  நோய்களில்

கொடிய நோய்

எந்த நோய்…?

நம் முன் இக்கேள்வி

எழுப்பப்பட்டால்

நம் ஒவ்வொருவர் மனதிலும்

ஒவ்வொரு நோயின்

பெயர் வரும்..

 

கொத்து கொத்தாய்

மனிதர்களைக் கொன்ற

நோய்கள் பிளேக்..காலரா…

கொரனா எனப்பெயர் வரும்..

அந்த நோயைத் தீர்க்க

தங்கள் உயிரைப்

பயணம் வைத்து

மருந்துகள் கண்ட

அறிஞர்கள் நினைவில் வருவர்…

 

இருக்கும்   நோய்களில்

கொடிய நோய்

மூடநம்பிக்கை எனும் நோய்..

என்றாரே தந்தை பெரியார்…

விரித்துப் பார்க்கின்

இந்நோயால் செத்தார்..

சிதைந்தார் பெயரெல்லாம்

நினைவுகளில் வரும்…

 

மூட நம்பிக்கை

தீர்க்கும் மருந்தையும்

ஊர் ஊராய்ச்

சென்று சரிபடுத்தும்

வழி சொன்ன மருத்துவரும்

அவரின்றி வேறு யார் ?

 

                       வா.நேரு, 10.07.26

 

  நன்றி : பெரியார் மருந்தியல் கல்லூரி தொகுத்த

          ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்

         ‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ நூல்..

Monday, 15 June 2026

அண்மையில் படித்த புத்தகம் : அவயம் (புதினம்)..ஏக்நாத்

 

அண்மையில் படித்த புத்தகம் : அவயம் (புதினம்)

ஆசிரியர் : ஏக்நாத்

பதிப்பகம் : நெடில் வெளியீடு..

முதல் பதிப்பு : பிப்ரவரி 2022,மொத்த பக்கங்கள் 288 ,விலை ரூ 320

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எண்: 894.8113 EGN;1

ஏக்நாத் அவர்களின் கெடை காடு நாவல் ஏற்கனவே படித்துப் பிடித்து இருந்ததால், எனது(இந்த) வலைத்தளத்தில் எழுதி இருந்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அவரது நாவலைப் பார்த்தபொழுது,ஏக்நாத் அவர்களின் பெயரைப் பார்த்து எடுத்து வந்த நாவல்.




இந்த நாவல் முடிகிறபோது “ கணீர்க் குரலில் பேசத்தொடங்கினார், “பேரன்பு கொண்ட பெரியோர்களே ..நண்பர்களே “ என்று முடிகிறது.ஒரு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதற்கான ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்களோடு தொடங்கும் இந்த நாவல்,முழுக்க முழுக்க ஒரு பேச்சாளரைப் பற்றிய நாவல். பொதுவுடமைக் கட்சியில் பேச்சாளராக இருக்கும்,பொதுவுடமைக் கருத்துகளில் மிகப்பிடிப்பாக இருக்கும் மாடசாமி என்பரைப் பற்றிய கதைதான் இந்த நாவல்.ஆனால் மாடசாமி நல்ல பேச்சாளராக மாறுவதற்குக் காரணம் மறைந்த மேனாள் அமைச்சர் காளிமுத்து போன்றவர்கள். காளிமுத்து அவர்களின் பேச்சைக்கேட்டு தான் எப்படி  நல்ல பேச்சாளராக மாறுவது  என்பதை மாடசாமி கற்றுக்கொண்டான் என்று எழுதியிருக்கிறார்.எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்கள் பேசுவதற்குக் கற்றுக்கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது.

ஈழப்போரட்டத்தின்போது,பொதுவுடமைக் கட்சிகளின் நிலைப்பாட்டை எதிர்த்து நிறையத்  தோழர்கள் கட்சிக்குள் பேசினர்.அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் அல்லது வெளியேறினார்கள். ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் மாடசாமி,அவரது தனிப்பட்ட பலவீனத்தின் காரணமாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார். பின்பு தி.மு.க,.வில் சேருகிறார். பின்பு ம.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சேருகிறார். பொதுக்கூட்டங்களில் தொடர்ச்சியாகப் பேசும் மாடசாமி, குடிக்கவும் பழகுகிறார். பெண்கள் மீதான அதீத பலவீனமும், குடியும் சேர எல்லோராலும் மதிக்கப்பட்ட மாடசாமி,தெருவில் குடித்துவிட்டுப் படுத்துக்கிடக்கும் ,உறவுகளால் கூட வெறுக்கப்படும் மனிதராகிறார். பின்பு எப்படி மீண்டும் திருந்தி ,பேசத்தொடங்குகிறார் என்பதுதான் கதை.

1980-களில் தொடங்கி ஓர் இருபது ஆண்டுகள் தமிழ்நாட்டின் அரசியலை, மாடசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியாகப் பேசும் நாவல் இது. இப்படி முழுக்க அரசியலைப் பேசும் ஒரு நாவலை இதுவரை நான் தமிழில் படித்ததில்லை. 1991-ல் இராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, தி.மு.க.வினருக்கு எதிராக நடந்த வன்முறை பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டிருக்கிறது.இராஜீவ் காந்தி கொலையின் மர்மம் இன்றுவரை விளக்கப்படவில்லை. சந்திராசாமி,  போன்றவர்களின் பங்களிப்பு குறித்து நிறையப் பேசப்பட்டாலும் ,அவர்கள் விசாரிக்கப்படவேயில்லை.. மாறாகத் தி.மு.க.வினர்  குறிவைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள்.அந்தக் காலம் குறித்துப் பதிவு இந்த நாவலில் உள்ளது.

கெடை காடு நாவலிலேயே இவரின் கிராமத்து மொழியும், கிராமத்து மனிதர்களைப் பற்றிய விவரிப்பும் எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தது.அதே நடை இந்த நாவலில் தொடர்ந்திருக்கிறது. கிராமத்து மனிதர்களின் கிண்டல்,கேலி, ஆற்றாமை, பொறாமை, ஆசைப்படுதல், திருமணம் முடித்த பெண்களிடம் காமம் கொள்ளுதல்,அதனால் அசிங்கப்படுதல் எனப் பல விவரிப்புகள் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த நாவலை ‘வாழ்வின் சூறாவளியில் தொலைந்துபோன தோழர்களுக்கு ‘ எனக் குறிப்பிட்டிருக்கிறார். நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சங்கத்தில் பணியாற்றியவன். சில அற்புதமான தோழர்கள் எப்படி,பெண் சார்ந்த பலவீனத்தால்,குடியால் தங்கள் நற்பெயரை இழந்தார்கள்  என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.பொதுவாழ்க்கைக்குள் போய்ப் போராடுவது மட்டுமல்ல பொதுவாழ்க்கை, தன் மனதிற்குள் எழும் பலவீனமான எண்ணங்களையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதுதான் பொதுவாழ்க்கை.அப்படிப் போராடமல் போனால் எப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்பதனை அருமையாக இந்த நாவலில் ஏக்நாத் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

‘அவயம்’ என்றால் சத்தம் என்று பொருள் என்று எழுதியிருக்கிறார். மதுரை மாவட்டம் பகுதியில் இந்தச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை.  ஆனால்  தென்காசி பகுதியில் இயல்பாகப் பேசப்படும் சொல்லாக இந்த அவயம் என்னும் சொல் இருக்கிறது போலும்,. அரசியல் பற்றி அவயமாகப் பேசும் நாவல் இந்த நாவல்.. படித்துப்பாருங்கள். எந்த இடத்திலும் தொய்வில்லை. விறுவிறுவெனப் படிக்க முடிகிறது. பல இடங்களில் வாசிக்கும்போது சிரிக்க முடிகிறது.ஏன் இப்படி மனிதர்கள் மாறுகிறார்கள் என யோசிக்க முடிகிறது. வேறு யாரும் தொடாத தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகளை, ஒரு கிராமம் சார்ந்து எடுத்து அதனை அற்புதமாக ஒரு நாவலாகக் கொடுத்திருக்கும் ஏக்நாத் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  

வா. நேரு @ மதுரை, 15.06.2026


ஏக்நாத் அவர்களின் கெடை காடு பற்றிய எனது விமர்சனம்

https://vaanehru.blogspot.com/2015/03/blog-post_40.html

 

.