Friday, 3 April 2026

அண்மையில் படித்த புத்தகம் : அன்னை வயல் ..சிங்கிஸ் ஐத்மாத்தவ்- பூ.சோமசுந்தரம்

 



அண்மையில் படித்த புத்தகம் அன்னை வயல்( நாவல்)

 நூல் ஆசிரியர்  :  சிங்கிஸ் ஐத்மாத்தவ்(ருஷ்ய மொழியில்)

 தமிழில்                : பூ சோமசுந்தரம்

 பதிப்பகம்              : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்

  நாலாவது பதிப்பு செப்டம்பர் 2023,151 பக்கங்கள் விலை ரூ135

அண்மையில் எழுத்தாளர் சுந்தர புத்தனின் பெரியவன் நாவலைப் படித்த போது அவர் தனது தந்தை படித்த புத்தகங்களில் ஒன்றாக, தானும் படித்த புத்தகமாக அன்னை வயல் என்பதைக் குறிப்பிட்டு இருந்தார் நானும் எனது மகனும் புத்தகக் கடைக்குச் சென்றபோது இதை வாங்கி வைத்திருந்தேன்.நேற்று அன்பு,அப்பா இதைப்படியுங்கள்,மிக நன்றாக இருக்கிறது என்றான். எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகு எப்பேர்ப்பட்ட ஒரு நாவலைப் படிக்காமல் விட்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வுதான் ஏற்பட்டது.

மொத்தம் 151 பக்கங்கள்தான். ஆனால் ஒரு நீள்கவிதையைப் படிப்பது போலச் சொற்கள்.மூன்று  தலைமுறையின் வாழ்க்கையை, அவர்களின் பாட்டை, அவர்களின் காதலை, அவர்களின் அறியாமையை, அவர்களின் தியாகத்தை,அவர்கள் ஏமாந்து போவதை, அவர்கள் இன்பத்தைத் தொலைப்பதை, துன்பத்தில் துவண்டு அழுவதை, எந்த நிலையிலும் உழைப்பதை விடாத அந்த விவசாய மக்களை அற்புதமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் சிங்கிஸ் ஐஸ்மாத்தவ். ஒரு  தாய், அவளின் வாழ்க்கைப் போராட்டம்தான் கதை.முதல் 50 பக்கங்களில் இளம்பெண்ணாக இருக்கும் தல்கோனின் அழகு, அவள் காதல் வயப்பட்டுக் கைபிடிக்கும் அவளது கணவன் ஸீவான்குல்.இருவரும் விளையாட்டும் களிப்புமாக ஈடுபடும் காதல், பின்பு மணவாழ்க்கை. மூன்று குழந்தைகள் காஸிம், மாஸெல்பேக்,ஜைனாக்..அவர்களின் பிறப்பும் ,வளர்ப்பும்.மகன் காஸிம் காதலித்துக் கைபிடித்து வரும் அலிமான். மருமகளை மகளைப் போல எண்ணி அன்பு செலுத்தும் மாமியாராகத் தல்கோன்.தல்கோன் சொல்கிறாள் ஓரிடத்தில், ‘ அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மகள் பிறக்கவேண்டும் என்று நான் உள்ளுக்குள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது.நமக்கு ஒரு பெண் வேண்டும் என்று மிகவும் விரும்பியது ஒரு வேளை இதற்குக் காரணமாயிருக்கலாம்.ஆனால் அது மட்டுமே காரணமல்ல.அவள் விவரம் அறிந்தவளாக,உழைப்பாளியாக,கண்ணாடி போலத் தெளிந்தவளாக இருந்ததே காரணம்.என்னுடைய சொந்த மகள் போலவே அவள் மேல் பற்று வைத்துவிட்டேன்.” என்று சொல்கிறாள்..

தஙல்கோனும் அவளது கணவன் ஸீவான்குல்லும் தங்களுக்கு என்று  ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்கள்  கூட்டுப் பண்ணையில் உழைக்கிறார்கள் டிராக்டர் என்கிற இயந்திரம் முதன் முதலில் அந்தப் பெண்ணின் கணவர் வழியாக ஊருக்குள் வருகிறது. அது எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கியது. அந்த இயந்திரத்தை ஓட்டுவதற்காகச் சென்ற கணவன் எப்படிக் கற்றுக் கொண்டான். கற்றுக் கொள்வதற்கு எப்படி எல்லாம் அவன் பாடுபட்டான். படித்துக் கொண்டிருக்க கூடிய தன்னுடைய பிள்ளைகளிடம் இருந்து எழுத்தை கற்றுக் கொள்வதற்காக எப்படி அவன் ஒரு மாணவனாக உட்கார்ந்து கற்றுக் கொண்டான் என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்

அமைதியான நதியாய் உழைப்புடன் கூடிய இன்பத்தோடு வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.ஆனால் திடீரென்று போர் அறிவிப்பு வருகிறது. இரண்டாம் உலகப் போர் என்பதை நாம் வெறுமனே கடந்து போகிறோம் ஆனால் ஒரு போர் எப்பேர்பட்ட கொடுமையைச் செய்யும் அதிலும் சர்வாதிகார மனப்பான்மையில் உள்ள ஒரு கேடுகெட்டவனால் ஒரு போர் ஆரம்பிக்கப்பட்டால் எப்படி உழைக்கும் மக்களை அது பாதிக்கும் என்பதற்கு இந்த நாவல் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

முதலில் இளம் மனைவி அலிமானை விட்டுவிட்டு முதல்மகன் காஸிம் போருக்குச் செல்கின்றான்.பின்பு பொதுவுடமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு பொதுவுடமைக் கட்சியில் பொறுப்பில் இருக்கும் இரண்டாவது மகன் மாஸெல்பேக் போருக்குச்செல்கிறான்.பின்பு கூட்டுப்பண்ணைத் தலைவனாக இருக்கும் கணவன் ஸீவான்குல் போருக்கு அழைக்கப்படுகிறான். செல்கிறான். கடைசியில் 18 வயது  நிறைவடைந்தவுடன் கடைசி மகன் ஜைனாக்கும் போருக்குச் செல்கிறான். அனைவரும் சென்றபின்பும் ,கூட்டுப்பண்ணையின் தலைமைப் பொறுப்பை ஏற்று,கிராமத்தையே கவனிக்கும் தலைவியாகத் தல்கோன் மாறுகிறாள்.அவளோடு அலிமானும் இணைந்து உழைக்கிறாள். இருவருக்கும் தங்கள் கணவன்மார்கள் போர் முடிந்து திரும்ப வந்துவிடுவார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது.உழைக்கிறார்கள்,உழைக்கிறார்கள்,கவலை மறந்து உழைக்கிறார்கள்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் செய்தி வருகிறது. மாமியாரும் மருமகளும் விதவையாக மாறிப்போகிறார்கள்கணவனை இழந்த மாமியாரும்,மருமகளும் ஒருவருக்கொருவர் அனுசரணையாய், அன்பாய் எதையும் பகிர்ந்து கொண்டு துன்பத்தில் துவண்டாலும், அழுகையை அடக்கிக் கொண்டாலும், தங்கள் வாழ்க்கையை அவர்கள் நடத்திய  விதத்தை இதற்கு மேல் எவரேனும் எழுத முடியுமா என்கிற அளவுக்கு இந்த நாவலாசிரியர்  எழுதியிருக்கிறார்.

புறநானூற்றிலே நாம் படித்திருக்கிறோம் தன்னுடைய கணவன் இறந்த பின்பு தன்னுடைய மகனையும் போருக்கு அனுப்பியதாக ஆனால் இந்த நாவலில் தன்னுடைய கணவனை மட்டுமல்ல தன்னுடைய மூன்று குழந்தைகளையும் போருக்கு அனுப்பி விட்டு ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மரணமடைந்த செய்தி அவளுடைய காதுகளுக்கு எட்டுகிறது. .

ஆனாலும் கூட்டுப் பண்ணையில் தலைவியாக அந்தக் கிராமத்திற்கு உழைத்துக் கொண்டே இருக்கிறாள் தன்னுடைய மருமகள் அலிமான் உள்ளத்திலேஉடம்பிலே ஏற்படுகின்ற மாற்றங்களைக் கவனிக்கிறாள். அதனை அவள் ஏற்றுக் கொள்கிறாள் நான் முழுமையாக நாவலின் கதையைச் சொல்ல விரும்பவில்லை உங்களின் வாசிப்பு அனுபவத்தை அது தடுக்கக் கூடும் ஆனால் இந்த நூலை வாசித்தால் ஒரு அற்புதமான நூலை வாசித்து அனுபவம் உங்களுக்குக் கிட்டும். நேற்றைய பொழுது அப்படி ஒரு வாசிப்பு அனுபவப் பொழுதாக அமைவதற்கு இந்த  நாவலை எடுத்துக் கொடுத்துப் படியுங்கள் என்ற எனது மகன் சொ.நே.அன்புமணிக்கு மனமார்ந்த நன்றி. வாசித்துப் பாருங்கள். இந்த  நூலை வாங்கிப் படியுங்கள். வாங்கி உடனே படிக்க முடியவில்லை என்றாலும் கூட வாங்கி வீட்டில் வைத்திருங்கள். எப்போது தோன்றுகிறதோ,நேரம் கிடைக்கிறதோ அப்போது எடுத்துப் படியுங்கள் நமது வீட்டு  நூலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு  நூல்.ஓர் அற்புதமா கதைக்களத்தை எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் இந்த நாவல் ஆசிரியர். மொழி பெயர்ப்பு நாவல் என்று சொல்ல முடியாத அளவிற்கு, உயிரோட்டமாய் இந்த நாவலை மொழி பெயர்த்திருக்கிறார் பூ.சோமசுந்தரம்.அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.இப்படி ஒரு நூலைக் கொடுத்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

 

 

 

 






Tuesday, 31 March 2026

வாருங்கள் படைப்போம் குழுவில் எழுத்தாளர் கி.தளபதிராஜ் ....உரையாடல்







மேற்கண்ட நூல்களின் ஆசிரியர், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் அண்ணன் கி.தளபதிராஜ் அவர்களோடு  நேற்று நடந்த கலந்துரையாடல் மனம் நிறைவான நிகழ்வாக அமைந்தது.கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விறுவிறுவென்று  தளபதிராஜ் அவர்கள் பதில் கூறினார். நிகழ்வினை ஒருங்கிணைத்த  வாருங்கள் படைப்போம் குழுவின் ஒருங்கிணப்பாளர் எழுத்தாளர் வினிதா மோகன்,சிறுகதை எழுத்தாளர் -இசைக்கலைஞர் அண்ணன் லோ.குமரன், கவிஞர் கலையரசி பாலா,ஒருங்கிணைப்பாளர் மங்கையர்க்கரசி ஆகியோருக்கு நன்றியும் மகிழ்ச்சியும். வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவின் நிறுவனர் முனைவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் தன்னுடைய  பின்னோட்டத்தை  நெகழ்ச்சியாக வழங்கினார்.அதனைப்போலவே அண்ணன் லோ.குமரன்,தங்கை புதுக்கோட்டை சுப.சுசிலா ஆகியோர் கருத்துரைத்தனர். கேள்விகள் கேட்டனர். பெரியார் பன்னாட்டு அமைப்பு,அமெரிக்காவின் இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தினார். இரத்தினம் இராமசாமி அவர்கள் அழகிய பின்னோட்டத்தை 'வாருங்கள் படிப்போம்'வாட்சப் குழுவில் வழங்கியுள்ளார்.'நேர்காணல் மிக நன்றாக இருந்தது அப்பா' என்ற எனது மகன் சொ.நே.அன்புமணியின் பாராட்டும் மகிழ்ச்சி அளித்தது.

இது ஓர் இணைந்த பயணம். இக்குழு  இலக்கியப்பயணத்திற்கு வழிகாட்டும் குழு.எழுதுவது எப்படி என்பதை வகுப்பு எடுக்காமலேயே உறுப்பினர்களுக்கு புரியவைக்கும் குழு.அனுபவப் பகிர்வால் கேட்பவர்களைத் தானே எழுத வைக்கும் குழு.மலேசியாவில் நடுநிசி எனினும் நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட காந்தி முருகன் போன்றவர்களின் பங்களிப்பும் , கலந்து கொண்டவர்களின் ஒவ்வொருவரின் பங்களிப்பும்  நன்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.நன்றி தோழமைகளே...

கீழ்க்கண்ட இணைப்பில் வாருங்கள் படைப்போம் குழுவில் நடைபெற்ற முழு உரையாடலும் உள்ளது. விருப்பம் இருப்பவர்கள் கேட்கலாம். 

https://www.youtube.com/live/w2DpNSPHpYc?si=9o6Fhog9mK9uQyo_ 

Tuesday, 24 March 2026

அண்ணன் ஆதவனின் பிறந்த நாள்...

 

எனக்குத் தெரிந்த

நாள்முதல்

இன்றுவரை

இயக்கப்பணி ஒன்றே

மூச்சாய் இயங்கும்

அன்பு அண்ணன் ஆதவன்!

அருப்புக்கோட்டை என்றாலே

கண்முன்னால் வரும்

உருவம் இவரின் உருவம் !

 

விடுதலையை உண்மையை…

கழக ஏடுகளை…

வீதி வீதியாய்

வீடு வீடாய்ச் சென்று

சேர்க்கும் வேலையைப்

பல்லாண்டுகளாய்

சிரித்த முகத்தோடு

தேனீ போலப் பரப்பும்

பரப்புரையாளர் இவர்!...



 

தந்தையின் வழியில்

திராவிடர் கழகப்பணியைத்

தீயாய்த் தொடரும்

களப்பணியாளர் இவர் !

 

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்

தந்தை பெரியாரின் கொள்கையை

அய்யா ஆசிரியர் வழியில்

செயல்படுத்தும் தொண்டர் இவர்!

 

இவரைப் போன்றோர்தான்

திராவிடர் கழகத்தின்

உயிர் போன்றோர்!

சமூகத்திற்கு விழி போன்றோர்..

வாழ்க ! வாழ்க ! என

அண்ணன் ஆதவனை

இப்பிறந்த நாளில்

வாழ்த்தி மகிழ்கிறோம்!...

                                  வா.நேரு,25.03.2026

 

Sunday, 22 March 2026

வீரவணக்கம் செலுத்துகிறேன் நான் !

 

நான் ஏன்

நாத்திகன் ஆனேன்..

தோழர் பகத்சிங்-சின்

ஒப்புதல் வாக்குமூலம்

ஆண்டுகள் பல கடந்தபின்பும்

பசுமரத்தாணி போல் நிற்கிறது..

 

கோயில்கள் போரடித்துவிட்டன..

சமாதிகளைத் தேடி மக்கள்

கூட்டம் கூட்டமாகச் சென்று

வழிபாடு நடத்த புதிய புதிய

ஊடகங்கள் வழிவகுக்கின்றன?..

உழைக்கும் மக்கள் ‘கடவுள் எனும்

மாயை ‘ நோக்கி ஓடும்

விட்டில் பூச்சிகளாய்

ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்…

 

இத்தனை அறிவியல்

கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும்

கடவுள் மட்டும் இன்னும்

ஏன் சாகாமல் இருக்கிறார் ?

என்னும் கேள்விக்கு விடை

தோழர் பகத்சிங்-கின்

புத்தகத்திற்குள் இருக்கிறது….


மனிதத்தைத் தேடும்

மானுடர்களுக்கெல்லாம்

நாத்திகம் ஒன்றே

விடையாய் நிற்கிறது…

 

தோழர் பக்த்சிங்-கும்

அவரது தோழர்களும்

வீரவணக்கம் அடைந்த

இந்த நாளில் …

தோழரின் புத்தகத்தை

வாசிப்பதன் வழியாக

அவரின் வினாக்களுக்குள்..

விடைகளுக்குள் மூழ்கி

வீரவணக்கம் செலுத்துகிறேன் நான் !



 

                                       வா.நேரு, 23.03.2026


Saturday, 21 March 2026

விருதுபெற்ற மலையாள மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ்.அஞ்சு அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..

 








விருது பெற்ற மலையாள மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ்.அஞ்சுவோடு ஒரு    கலந்துரையாடல்

            (முனைவர் வா.நேரு)

தந்தை பெரியாரின்  நூல்களும்,அவரின் வழித்தோன்றல் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்களும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அவ்வாறு மொழி பெயர்ப்புச் செய்வதில் நமது அண்டை மாநிலமான கேரளம் முன்னனி வகிக்கிறது.கேரள மாநிலத்து ஒடுக்கப்பட்டவர்கள் வைக்கம் தெருவில் நடக்கவேண்டும் என்பதற்காக ,தியாகம் செறிந்த போராட்டங்களை நடத்தி,சிறைபட்டு, உரிமையினை வாங்கித்தந்த வைக்கம் வீர்ர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய புத்தகங்கள் மலையாள மொழியில் வரவேற்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை.

2026,பிப்ரவரி கடைசிவாரம், திருவனந்தபுரம் சென்றபோது, திருவனந்தபுரத்தில் இருக்கும் மைத்திரி(Mythri Books) புத்தக நிலையம் சென்றிருந்தேன். தந்தை பெரியார்,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி, மானமிகு மஞ்சை வசந்தன் போன்றவர்களின் புத்தகங்களை மட்டுமல்லாது, அண்ணல் அம்பேத்கர், நாராயணகுரு மற்றும் இந்தியா முழுவதும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட ,பாடுபடும் தலைவர்களைப் பற்றிய நூல்களை மலையாள மொழியில் கொண்டு வருவதில் பேரார்வம் காட்டுகின்ற பதிப்பாளர் திரு லால் சலாம் (FIRA வின் துணைத்தலைவர்)  அவர்கள். அவரின் இணையர் மாயா லால்சலாம் அவர்கள். மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள திருமதி மாயா லால்சலாம் பதிப்பு வேலைகளோடு,மொழி பெயர்ப்பும் செய்து வருகிறார். திரு லால்சலாம் அவர்களைச் சந்தித்து உரையாடியபோது, ‘ஒரு மகிழ்ச்சியான செய்தி  என்றார்.

 ‘என்ன என்று கேட்டபோது, தமது மைத்திரி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்ட,அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக்குவது எனும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ‘The Joy Of Living “ என்னும் புத்தகத்தை இளம் தோழர் எம்.எஸ்.அஞ்சு மலையாளத்தில் வாழ்க்கையை இன்பமாக்க என்னும் தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு விருது கிடைத்திருக்கிறது  என்று குறிப்பிட்டார். அவரைச் சந்திக்கவேண்டும்,பாராட்டுத் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டபோது தனது இல்லத்தில், மாலை சந்திக்கலாம் என்று குறிப்பிட்டார்.

 

மலையாள இலக்கியத்தில் மிக உயர்ந்த பரிசுத்தொகை வழங்கப்படும் விருதான  இண்டிவுட் மொழி மற்றும் இலக்கிய விருதுகள்’(Indywood Bhasha Sahitya Puraskaram) , வழங்கும் விழா பிப்ரவரி 25,2026 அன்று கேரளாவில் உள்ள புனலூரில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றிருக்கிறது.இந்த விழாவில் மொத்தம் 13 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.அத்துடன் பாஷா கேஸரி விருது  மற்றும் எழுத்தம்மா விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது தோழர் எம்.எஸ்.அஞ்சு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 10000 பரிசுத்தொகையும் பதக்கமும் பாராட்டுச்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.அவர் மொழி பெயர்த்த புத்தகம் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்க்கையை இன்பமாக்க (ஜீவிதம் ஆன்ந்த பிராயம்)   என்னும் புத்தகமாகும்.

பிப்ரவரி 26 மாலை, தோழர் லால்சலாம் அவர்களது இல்லத்தில் எம்.எஸ்.அஞ்சு அவர்களையும் மாயா லால்சலாம் அவர்களையும் சந்தித்தோம். எம்.எஸ்.அஞ்சு, தான் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ள 6 புத்தகங்களும் தந்தை பெரியார் மற்றும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகங்கள் என்றார்.அவர் பெற்ற விருதைப் பற்றிக் கேட்டபோது,’மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார். அந்த விருதினைப் பற்றியும் அந்த விருதினை அளித்த அறக்கட்டளையைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.தான் மொழிபெயர்த்த நூல் அய்யா ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆங்கிலப்புத்தகத்தில் இருந்து என்றார்.

கல்லூரியில் நான் படிக்கும் காலத்தில் மலையாளத்தில் கவிதைகள் எழுதினேன்.சில சிறுகதைகளும் எழுதினேன். கல்லூரியில் வெளியாகும் இதழ்களில் அவை வெளி வந்தன.நான் பி..(மலையாளம்),பி;எல்.ஐசி( இளங்கலை- நூலக அறிவியல்) & முதுகலை நூலக அறிவியல் படித்துள்ளேன். இப்போது நூலகராக ஒரு பள்ளியில் வேலை பார்க்கிறேன் என்றார்.

அய்யா ஆசிரியர் அவர்களின் முன்னெழுத்துத் தமிழில் கி, ஆங்கிலத்தில் கே, நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த காரணத்தால்  டாக்டர் கே வீரமணி  என்று மலையாளத்தில் போட்டிருக்கிறீர்கள். நாமெல்லாம் ஒரே மொழிக்குடும்பம், நீங்கள் அடுத்த நூலைப் பதிப்பிக்கும்போது, மலையாள எழுத்தில் இருக்கும் கி. என்னும் எழுத்தை முன்னெழுத்தாகப் போடுங்கள், அவரது தந்தையின் பெயர் கிருஷ்ணசாமி என்றேன். அப்படியா, சரி, அந்த மாதிரியே போடுகிறேன் என்றார்.

இந்த மொழிபெயர்ப்பு துறைக்குள் எப்படி வந்தீர்கள்? என்று கேட்டபோது, லால் சலாம் என்னிடம்  கேட்டார். சரி என்று சொல்லி நான் மொழிபெயர்த்துக்கொண்டுள்ளேன் என்றார். எத்தனை புத்தங்கள் இதுவரை மொழி பெயர்த்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது 6 என்றார்.4  நூல்களைத் தான் மட்டும் தனியாகவும் ,இரண்டு நூல்களைத் தானும், திருமதி மாயா லால்சலாமும் இணைந்து மொழி பெயர்த்திருக்கிறோம் என்றார்.இந்த ஒரு புத்தகம் தவிர மற்ற 5 புத்தகங்களும் தந்தை பெரியாரின் புத்தகங்கள் என்றார்

அஞ்சு மட்டும் மொழி பெயர்த்த நூல்கள்

1 தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்?’

2.தந்தை பெரியார் எழுதிய சுயமரியாதைத் திருமணம் ஏன்?’

3.தந்தை பெரியார் எழுதிய பெண்களின் உரிமைகள் பற்றி

4. ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்க்கையை இன்பமாக்க

அஞ்சு மற்றும் மாயா லால்சலாம் இணைந்து மொழி பெயர்த்த நூல்கள்

5. பெரியாரின் பொன்மொழிகள்

6. தந்தை பெரியார் எழுதிய சமூகச் சீர்திருத்தமா? சமூகப்புரட்சியா?’

.’நீங்கள் எப்படி தந்தை  பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டீர்கள் ? ‘ என்று கேட்டபோது, ‘என் வாழ்க்கையில் சில மோசமான நிகழ்வுகள்  நடந்தன. அப்போது பெண் ஏன் அடிமையானாள் என்னும் புத்தகத்தை ஆங்கிலத்தில்   படித்தேன்.லால் சலாம் கொடுத்தார்.அந்தப் புத்தகம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.

தந்தை பெரியார் பற்றித் தங்களின் தனிப்பட்ட கருத்து என்ன? என்று கேட்டபோது ,”பெரியார் இஸ் எ க்ரேட் மேன் என்றார்.100 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களின் நிலையை எண்ணி,’பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அது இன்றைக்கும் எங்களுக்கு உதவுகிறது என்றார்.பெண்களின் நிலையை மாற்றுவதற்கு ஒவ்வொரு விசயமாகச் சிந்தித்து, சிந்தித்துப் பெண்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றார்.

பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை முதன் முதலில் படித்த பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதைப் பற்றிப் பலர் என்னோடு பகிர்ந்திருக்கின்றார்கள். நீங்கள் முதன் முதலில் அதனைப் படித்தபோது என்ன உணர்ந்தீர்கள்  என்று நான் கேட்டேன்.

எனது வாசிப்பு வேறு விதமாக இருந்தது. நான் அதிர்ச்சி அடையவில்லை. நான் பட்ட வேதனைகளை,துன்பத்தை எண்ணி எனக்காக எழுதியது போல இருந்தது.100 வருடங்களுக்கு முன்னால் என்னை நினைத்துப்பார்த்து,சிந்தித்து எழுதியிருக்கிறார் என்று தோன்றியது.நான் ஒரு துன்பத்தில் இருந்தேன். அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட,நான் இயல்பாக ஆவதற்கு இந்தப் பெண் ஏன் அடிமையானாள் புத்தக வாசிப்பு எனக்கு உதவியது.

நான் அந்தப் புத்தகத்திற்கு அடுத்து , மலையாளத்தில் வெளிவந்திருக்கும் பெரியாரின் புத்தகங்களை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன்.பெரியார் எழுதிய,அவரைப் பற்றி வந்திருக்கும் மலையாளப் புத்தகங்களை எல்லாம் எனக்கு வாசிக்கக் கொடுத்தார். வாசித்தேன். பின்பு பெரியாரின் புத்தகங்களை மலையாளத்தில் மொழிபெயர்க்க முடியுமா? என்று கேட்டார். எனக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம்  நன்றாகத் தெரியும். எனவே ஆங்கிலத்தில் வந்திருக்கும் பெரியாரின்  நூல்களைக் கொடுத்து என்னை அவற்றை மலையாளத்தில் மொழி பெயர்க்கச்சொன்னார். தொடர்ந்து இப்போது மொழி பெயர்த்துக்கொண்டுள்ளேன்.

பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தில் விதவைகள் என்னும் தலைப்பில் பெரியார் அக்காலத்திய விதவைகள் நிலைமை பற்றிப் பேசுகிறார்.அது பற்றி ஏதும் சொல்ல நினைக்கிறீர்களா? ‘ என்று கேட்டேன்.

அந்த அத்தியாயத்தைப் படித்தபோது அவ்வளவு வேதனையாக இருந்தது.7,8 வயது, 10 வயது விதவைகள். என்னுடைய அக்காவின் மகளுக்கு இப்போது  10 வயது. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்..அந்த வயதில் அவள் விதவை,அந்த விதவைக்கோலம் என்பதை நினைத்தால் மனது கலங்குகிறது(அழுவதுபோல உடைந்து பேசுகிறார்) அந்தச் சின்னக்குழந்தையை ஒருவனுக்குக் கட்டிக்கொடுத்து, அவன் இறந்து, இந்தக் குழந்தை கொடுமைப்படுவதை நினைத்துப் பார்த்தால் உள்ளம் வலிக்கிறது. இதற்கெல்லாம் தீர்வைச்சொன்னவர் பெரியார்.இதனைத் தடுத்து நிறுத்தியது பெரியாரின் இயக்கம்” என்று பெருமிதப்பட்டார். (தொடரும்) ...

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் 16-31,2026