Monday, 13 April 2026

தற்கால இலக்கியத்தில் பெரியாரியல் வாழ்க்கை படைப்புகள்... முனைவர் வா.நேரு

மக்கள் பல்கலைக்கழகமாக விளங்குவது ,தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகம்.அய்யா டாக்டர் கி.வீரமணி அவர்கள் வேந்தராக இருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புகளுக்கும் பெருமைகளுக்கும் உரியது.அதன் மொழித்துறைகள் சார்வாக  ஒரு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.பல்வறு ஆளுமைகள் எழுதிய 36 ஆங்கிலக் கட்டுரைகள், 8 தமிழ்மொழிக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் 386 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.திரு டாக்டர் பேரா பி.ஆர். வீரமணி அவர்கள் இதன் முதன்மை ஆசிரியராக இருந்து இந்த நூலை -Burgenoning Voices in Contemporary Literature என்னும் தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார். பல்கலைக்கழக வேந்தர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் பன்னாட்டு மய்யம் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன்,PMIST-ந் துணைவேந்தர் டாக்டர் வி.ராமச்சந்திரன்,பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்புகளில் உள்ள டாக்டர் ஆர்.மல்லிகா.டாக்டர் பி.கே.ஸ்ரீவித்யா,டாக்டர் எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.  நல்ல தொகுப்பு. மனமார்ந்த வாழ்த்துகள்,பாராட்டுகள்,இந்த இலக்கியப் பணிக்கு...எனது கட்டுரையும் 'தற்கால இலக்கியத்தில் பெரியாரியல் வாழ்க்கைப் படைப்புகள்' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

 






இதில் வந்திருக்கும் எனது கட்டுரை எழுத்து வடிவில்...


தற்கால இலக்கியத்தில் பெரியாரியல் வாழ்க்கை-படைப்புகள்

                   முனைவர் வா.நேரு

தற்கால இலக்கியம் என்பது வளர்ந்தோங்கி வரும் ஆலமரமாய்த் தமிழ் மொழிப்பரப்பில் இலக்கியக் காற்றை அள்ளி வழங்குகிறது.கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட இணைய வளர்ச்சி,சமூக ஊடகங்களின் வளர்ச்சி எல்லோரும் எழுதுவதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு படைப்பை எழுதி, பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு அது வெளிவருமா,வராதா என்று தெரியாது இருந்த காலம் எல்லாம் இன்று மாறியிருக்கிறது.அதைப்போல ஒரு  நூலை அச்சாக்குவதும் வெகு எளிதாக மாறியிருக்கிறது. நிறையப் புதிய புதிய பதிப்பகங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. புதிய படைப்புகள் பலவும் தமிழ் மொழியில் வந்து கொண்டே இருக்கின்றன. வர்ணாசிரமத்தின் அடிப்படையில் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களும்,பிற்படுத்தப்பட்ட,பட்டியலின சமூகம் சார்ந்தவர்களும் தங்கள் வாழ்க்கையை ஓவியம் போலச் சமூகத்திற்கு தங்கள் எழுத்துகளின் வழியாகக் கடத்துகிறார்கள். அதைப்போலத் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் தங்கள் வாழ்க்கையை இலக்கியப் படைப்புகளாக மாற்றி இந்ச் சமூகத்திற்குத் தரும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன.அதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரையாகும்.

பெரியாரியலும் வாழ்க்கையும்:

 பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி. அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், வாழ்க்கையில் தோல்வி ஏற்படுவதற்கே இடம் இல்லை. பெரியார் கொள்கைகள் இன்றைக்கு உலகம் முழுவதும் தேவைப்படுகின்ற, மனித சமுதாயத்தை வழிநடத்துகின்ற ஒரு கொள்கைவழியாக இருக்கிறது. “(1) என்று திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஆமாம்,பெரியார் கொள்கை அல்லது பெரியார் இயல் என்பது ஒரு வாழ்க்கை நெறி.வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பதைக்  காட்டும் பாதைதான் பெரியார் இயல். பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் எதிர்நீச்சல் அடிப்பவர்கள் .சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக இருக்கும்   கடவுள் நம்பிக்கை, ஜாதி முறை ,பெண்ணடிமைத்தனம் என்பதை எல்லாம் எதிர்த்துப் போராடக் கூடியவர்கள் அவர்களின் போராட்டம் என்பது பெரும்பாலும் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அமைந்த போராட்டம். 

 

ஆனால் அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தன்னைச் சுற்றியுள்ள உறவுகள் அவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமாகவும் அமைகிறது.   தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் எதிர்நீச்சல் அடித்து வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். அவர்கள்  மற்றவர்களுக்கு மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார்கள் .அப்படி வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள், தங்கள் வாழ்க்கையைத் தாங்களே எழுதுகிறார்கள் அல்லது அப்படிப்பட்ட பெரியார் தொண்டர்களைப் பற்றி அவர்களின் குழந்தைகள் எழுதுகிறார்கள்.  அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கியப் போக்கில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பாக  இப்படிப்பட்ட படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில  ஆண்டுகளில் வெளிவந்த தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பற்றிய படைப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

 

அதற்காக அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் எழுதிய 'அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகள்', மதுரை சே.முனியசாமி அவர்கள் எழுதிய 'விறகு வண்டி முதல் விமானம் வரை ', புதுச்சேரி வி.இளவரசி சங்கர் அவர்கள் எழுதிய 'தணியாது எரியும் காடு' மற்றும் எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் எழுதிய 'பெரியவன் 'என்னும் நாவலும் இந்த ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

 

 

1.அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்:( ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்)

 

இந்த நூல் திருத்துறைப்பூண்டியில் இருக்கும் நன்செய் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல்.செப்டம்பர் 2023-ல் வெளிவந்துள்ளது.மொத்தம் 144 பக்கம் உள்ள இந்த நூலின் விலை ரூ 150 ஆகும். இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் ஆவார்.

 

இந்த நூலின் முதல் பக்கத்திலேயே மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களைப் பற்றிய அறிமுகக்குறிப்பு உள்ளது.” திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் பிறந்தவர்.தஞ்சை மருத்துவக்  கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர் 1971-இல் குடல் மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.பின்னர் அங்கேயே சிக்காகோவில் பணிபுரியத் தொடங்கினார்.தமிழின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட இவர் சிக்காகோ தமிழ்ச்சங்கம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆகியவற்றின் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.பெரியாரியலைத் தன் வாழ்வியலாகக் கொண்ட இவர் பெரியார் பன்னாட்டு அமைப்பை  நிறுவி 26 ஆண்டுகளாகப் பல்வேறு முக்கியமான நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.இவ்வமைப்பு வீரமணி சமூக நீதி விருதுஎன்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சமூக நீதி சார்ந்து இயங்கும் செயல்பாட்டாளர்களுக்கு விருதோடு ஒரு லட்சம் ரூபாய் வழங்கிப் பாராட்டி வருகிறது.தமிழ் ஈழம் சார்ந்தும் பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மனித நேயமே உலகின் எதிர்காலம் என்று உறுதியாக நம்பும் இவர் கொள்கைப் பணியை முழு வீச்சாகக்கொண்டு தனது வாழ்விணையர் மருத்துவர் சரோஜா,குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.”(2) என்று குறிப்பிடப்பட்டுள்ளது

 

மொத்தம் 50 தலைப்புகளில், வாசிப்பவர்களை ஈர்க்கும்விதமாக ஒவ்வொரு தலைப்பும் குறைந்த பக்கங்களில் ஆனால் நிறைவான செய்திகளைக் கோண்டு எழுதப்பட்டுள்ளது.முதல் தலைப்பான பிரியா விடை ‘,இந்த நூலின் ஆசிரியர்,அமெரிக்கா செல்வதற்கு முன் தந்தை பெரியாரிடம் சென்று வாழ்த்துப் பெற்றதையும்,தந்தை பெரியார் கேட்ட கேள்விகளையும்,அதற்குத் தான் தந்த விடைகளையும் எழுதியுள்ளார்.

 

தன்னுடைய என்னுரையில் அரை நூற்றாண்டு வாழ்வின் பெரும்பகுதி.நான் ஓர் அய்ந்தாண்டுத் திட்டத்துடன்தான் அமெரிக்கா சென்றேன்.மேல் படிப்புப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம்.ஒரு லட்சம் ரூபாயுடன் தாயகம் திரும்பவேண்டும்.அய்ந்தாண்டுத் திட்டங்கள் சரியாக நிறைவேறுமா? பத்தாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் உள்ளேன்.!

தந்தை பெரியாரவர்களிடம் விடை பெற்றுச் சென்றேன்.வாழ்வில் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.வெற்றிகள்,தோல்விகள்,இன்பம்,துன்பம் அனைத்துமேதான் வாழ்வுஎன்று குறிப்பிட்டு மேலும் எனக்கு மானமிகு ஆசிரியர் அவர்களின் தொடர்பும்,அளவுகடந்த அன்பும் ,அவரிடம் கற்றுக்கொண்ட ஏராளங்களும் ஓரளவிற்காவது கட்டுப்பாட்டைக் கொடுத்தன.சிந்தனைத் தெளிவு பெறத் தொடங்கியது.

அடித்த புயல்களை ஆழமான நங்கூரமாக இருந்து அளவிட முடியா அன்பால் நடத்திச்சென்ற பெருமை என் வாழ்விணையர் சரோ அம்மையாரைச் சேரும்.பொறுமையின் சிகரம்,துணிவின் திறமை,உதவும் இதயம் அனைத்தும் பெற்றவர்…”(3) என்று அவரின் என்னுரை தந்தை பெரியாரியலை வாழ்வில் ஏற்றதால் பெற்ற ஏற்றங்களைப் பட்டியலிட்டு,அய்யா ஆசிரியர் அவர்களின் தொடர்பு . எப்படியெல்லாம் கட்டுப்பாட்டைக் கற்றுக்கொடுத்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

 

இந்த நூலுக்கான வாழ்த்துரையை அய்யா சோம.வேலாயுதம் அவர்களும் அவரது இணையர் அம்மா கலைச்செல்வி வேலாயுதம் அவர்களும் கொடுத்துள்ளார்கள்.

 

இந்த நூல் பெரியாரியலை ஏற்றுக்கொண்ட மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் எப்படி மனித நேயமிக்கயத் தொண்டினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்பதையும்,அவரது மருத்துவப் பணிகளையும்,அமரிக்காவில் அவர் மேற்கொண்ட பல்வேறு தமிழ்ப் பணிகளையும்,ஈழத்துயரங்களை நீக்க அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும்,அமெரிக்காவில் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள் பற்றியும்,பெரியார் பன்னாட்டு அமைப்பு உருவான விதம் பற்றியும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக நடைபெற்ற மாநாடுகள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டு மனித நேயமே பெரியார் என்னும் தலைப்பிட்ட கடைசிக் கட்டுரையோடு இந்த நூல் நிறைவு பெறுகிறது.

 

இந்த நூலை முழுவதுமாகப் படித்துமுடித்தபோது, எத்தனை பணிகள்,எத்தனை இடையூறுகள் ,அவற்றைத் தாண்டி எத்தனை மனித நேயப்பணிகள் என்று ஒட்டுமொத்தமாகப் படிக்கிறபோது மிகப்பெரிய பிரமிப்பும் வியப்பும் உண்டாகிறது.

 

இந்த நூலுக்கு அணிந்துரையை ,’அணிந்துரை அல்ல ; எமது நன்றியுரைஎன்று திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்துள்ளார்கள்.

“… அணிந்துரை எழுதிட பதிப்பாளர் கேட்டார்; நான் எழுதுவது அணிந்துரை அல்ல; அவருக்கு நன்றி உரை.என்னை 32 ஆண்டுகளுக்கு முன் வாழவைத்து ,இன்றும் எனது தொலைதூர ( மிக அருகில் என்றும் உள்ளத்துக்கு மிக அருகில் உள்ள) மருத்துவ மற்றும் மனித நேயக்காவலர்.

பட்ட கடனை அடைக்கவே இந்த நன்றி உரை.நான் மட்டுமல்ல ,என்னைப் போல எத்தனையோ மனிதர்கள் அவரது கருணையால்,உதவியால், நட்பால்,வற்றாத அன்பால் வாழுகிறார்கள் என்பதே அவர் பெறும் ஊதியம்.அவருக்கு உறுதுணையாய் டாக்டர் சரோஜா இளங்கோவன்.

அறிவு ஆசான் தந்தை பெரியாரின் அறிவுரையும்,கொள்கைப்ப்பாதையும் அவரை,அவரது குடும்பத்தைக் குருதிக் குடும்பம்,கொள்கைக் குடும்பம் என இரண்டையும் நாளும் உயர்த்திவைக்கும் பணியைச் செய்து,இப்போது அவரது படைப்பு விருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பு என்பதற்கே கலங்கரை வெளிச்சமாகியுள்ளது ..’(4) என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

 

தந்தை பெரியாரின் அறிவுரையும் கொள்கைப்பாதையும் நாளும்  அவரை உயர்த்திக்கொண்டே இருக்கும் பணியைச் செய்கிறது என்ற அடிப்படையில் பாராட்டி மகிழ்ந்திருக்க்கிறார் அய்யா ஆசிரியர் அவர்கள்.

 

இப்படி இந்த நூல் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர்,பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்து வருவது எப்படி அவரது குருதிக் குடும்பத்திற்கும்,கொள்கைக் குடும்பத்திற்கும் பயன்படுகிறது என்பதையும் அதையும் தாண்டி அவர் விரும்பும் மனித நேயம் உலகில் தழைக்க அவர் எப்படியெல்லாம் பணியாற்றுகிறார் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

 

2. விறகு வண்டி முதல் விமானம் வரை:

 

இந்த 'விறகு வண்டி முதல் விமானம் வரை' என்னும் நூல் ஒரு தன் வரலாற்று நூலாகும்.இந்த நூலை ஆக்கித் தந்திருப்பவர் 75 வயதைக் கடந்த மதுரையில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி ஆவார். இவர் மதுரை மாநகர் மாவட்டத்தின்  திராவிடர் கழகத்தின்  காப்பாளராகவும் இருக்கிறார். சென்னையைச் சார்ந்த கீழடி வெளியீட்டகம் என்னும் பதிப்பகம்  இந்த நூலை வெளியிட்டுள்ளது.இதன் முதற்பதிப்பு 2024 ஆகும் .200 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை ரூ 200 ஆகும்.

 

இவர் 5-ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஒரு கரடுமுரடான ஊரிலே பிறந்தவர்.இளமைக் காலத்தில் சொல்லண்ணாத் துயரங்களை வாழ்க்கையில் அனுபவித்தவர். ஆனால் எல்லாக் காலத்திலும் தன்னம்பிக்கையோடு முன்னேறியவர்.இவரின் தன் வரலாற்று நூலான விறகு வண்டி முதல் விமானம்வரை என்னும் நூல் 30 தலைப்புகள் உடைய நூலாகும்.இது முழுவதுமாக அவரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறது.

 

இந்த நூலுக்கான வாழ்த்துரையை மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் பழக்கடை அ.முருகானந்தம்,முனைவர் வா.நேரு,தங்களுடைய கவிதை வாழ்த்துரையை பாவலர் சுப.முருகானந்தம், பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

 

 இந்த நூலுக்கு 'இது அணிந்துரை அல்ல; பாராட்டுரை- கனிந்துரை ' என்று  தலைப்பிட்டு திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கனிந்துரை  அளித்துள்ளார்கள்.அதில் "  மதுரையில் இருந்து ஏறத்தாழ 100 கி.மீ.க்கு அப்பால்  கடற்கரைக்கு அருகில் உள்ள கொம்பூதி என்ற ஒரு குக்கிராமத்தில் பிறந்து- ஏழ்மையிலேயே புரண்டும், சோம்பலின்றி இடையராத உழைப்பின் உருவமாகி, 'பஞ்சம் பிழைக்க' இன்றைய தஞ்சை மாவட்டம் 'பெரியார் நாடு'  என்று கழகத்தவரால் கொள்கை மகிழ்ச்சி பொங்க அழைக்கும் ஊரகப் பகுதியில், பற்பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, விறகு பிளப்பதைப் போல ,ரத்தத்தை வியர்வையாக்கி, தனது உடலாலும், உள்ளத்தாலும், தன்னம்பிக்கையாலும், தன்னிகரற்ற சுய முயற்சி- துணிவு, கனிவு இவற்றுடன் வாழ்ந்து, பிறகு உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்து, கற்றறிந்த படிக்காத மேதை ,நடிக்காத மாமனிதர் தோழர் மதுரை முனியசாமி அவர்கள் கிராமிய மொழியிலே- தனது வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களைச் சுவைபட எழுதி, வாசகர்களைச் சொக்க வைத்த 'சொக்கத்தங்கம்' ஒளிருவது போல உண்மைகளை ஒளிர வைத்துள்ளார் தோழர் சே. முனியசாமி!. கனிவு கலந்த மகிழ்ச்சி வெள்ளம்!.

 

 ஒளிவு மறைவின்றி, ஒப்பனைகளுக்குச் சிறிதும் இடமின்றி, உண்மைகளைக் களமாட விட்டு, நம் மனதில் மகிழ்ச்சியைப் படமெடுத்து ஆடும்படி செய்ய தனது படைப்பாற்றலை பொதிகை போல் வீசச் செய்து, வியப்பை நமக்கு வாரி வாரித் தருகிறார், உழைப்பில் உவகை கண்ட முனியசாமி என்ற 'பட்டிக்காட்டு தோழர்!'(5) என்று பாராட்டி இன்னும் பல செய்திகளைச் சொல்லி அய்யா ஆசிரியர் அவர்கள் இந்தப் பாராட்டுரையை நூலுக்குக் கொடுத்துள்ளார்கள். 

 

இந்தப் பாராட்டுரையைப் படிக்கும்போதே நமக்கும் ஓர் உற்சாகமும் ,மகிழ்ச்சியும் கிடைப்பதைப் பார்க்கலாம். ஏனென்றால் பெரியாரியலை அடிப்படையாக வைத்து நாணயத்தால் ,தன்னுடைய உழைப்பால் வெற்றி பெற்றவரின் வாழ்க்கை வரலாறு இது.

 

பத்து ரூபாயை வட்டிக்கு வாங்கிக்கொண்டு தன்னுடைய சொந்தக் கிராமத்திலிருந்து தன்னுடைய தாயோடு மதுரைக்குப் பஞ்சம் பிழைக்க வந்த அய்யா சே.முனியசாமி அவர்கள் மதுரையில் திராவிடர் கழகக் கட்டிடம் ,பெரியார் மணியம்மையார் மன்றம் அமைப்பதற்காகச் சென்ற ஆண்டு ரூபாய் பத்து இலட்சம் நன்கொடையை அய்யா தமிழர் தலைவர் அவர்களிடம் அளித்தேன்.

 

தந்தை பெரியார் சிந்தனை எனக்குக் கிடைத்ததால் நானும் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன்.மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ் என்னால் ஆன உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறேன்.செய்து கொண்டே இருப்பேன்….”(6) என்று கூறி இந்த நூலை முடித்திருக்கிறார்.

 

தந்தை பெரியாருடைய இயக்கத்திலே சேர்ந்த பின்னாடிதான் அறிவுபூர்வமாக சிந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டதுஆரம்ப காலத்திலிருந்தே நாணயம் என்பதை மிகக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்துவந்தேன் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ள அய்யா சே.முனியசாமி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்,அதன் பிறகு  உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்.ஏறத்தாழ 25 வெளி நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவங்களைப் பற்றியெல்லாம் இந்த நூலில் விவரித்து எழுதியிருக்கிறார். எங்கு சென்றாலும் பெரியாரியல் பார்வையோடு தான் அந்த நாட்டைப் பார்க்கும் பார்வையைப் பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பெனலாம்.

 

        3. தணியாது எரியும் காடு:

தணியாது எரியும் காடுநூலின் ஆசிரியர் வி.இளவரசி சங்கர் ஆவார்.முதல்பதிப்பு அக்டோபர் 2023. இதனை நூலாக்கம் செய்தவர் புதுவை யுகபாரதி.சாரல் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.204 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை ரூ 180 ஆகும்.

நூலின் 3-ம் பக்கத்தில் நூல் ஆசிரியர் வி.இளவரசி சங்கர் அவர்களைப் பற்றிய அறிமுகம் உள்ளது.”  புதுவை அரசு- இலக்கிய விருதாளர்.எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,பேச்சாளர்,புத்தக விமர்சகர் மற்றும் சமூகச்செயற்பாட்டாளர். கடந்த 25 ஆண்டுகளாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதுநிலைச் சுருக்கெழுத்தாளாராகப் பணிபுரிந்து வருகிறார்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்…’பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின்மாநிலத் துணைச்செயலாளர்”(6) என்று குறிப்பிட்டு இவர் எழுதிய புத்தகங்கள்,விருதுகள் பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 25 தலைப்புகளில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.இந்த நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,”தனது தந்தையின் வாழ்க்கைச் சூழலை-வாழ்வியல் சிறப்பை-ஒரு குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதத்தொடங்கி,அதன் வழியாகச் சமுதாயச் சிக்கல்களையும், ஜாதி எனும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளையும் ,கற்போர் அறிந்து கடந்த காலத்தின் கொடுமைகளை எண்ணிப் பெருமூச்சுவிடும் ஒரு நூலை தோழர் வி.இளவரசி சங்கர் அவர்கள் தனது கனத்த உள்ளத்தோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார் என்பதற்குப் பாராட்டுகள்.

ஜாதி எனும் கட்டுமானத்தில் சிக்கித் தவிக்கும் ஜாதியில் பிறந்திட்ட தனது தந்தையார் பெரியாரின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு ,தான் மட்டும் மனிதன் ஆக நினையாது மனித குலத்தையே ஜாதிச் சகதியிலிருந்து  காப்பாற்றப்போராடிய மனித நேயப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தனது தந்தைவழி தானும்,தான் வாழும் ஊரும்- நாடும் பெற்றிட்ட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திப் பட்டியலிட்டுள்ள பாங்கு வெகு சிறப்பு…. “(7) எனக்குறிப்பிட்டு சிறப்பாக கொடுத்துள்ளார்.

இந்த நூலுக்கான வாழ்த்துரையை மறைந்த திராவிடர் கழகச் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு,முனைவர் வா.நேரு, மகிழ்வுரையைப்  பேரா முனைவர் அரங்க மல்லிகா ஆகியோர் அளித்துள்ளனர். என்னுரையை வி.இளவரசி சங்கர் மிக விரிவாகக் கொடுத்துள்ளார்.அதில் ‘’தணியாது எரியும் காடுஎன்ற தலைப்பிலான என்னுடைய இந்த நூலில் பல ஆண்டுகளாக எனக்குள் நான் அடைப்போட்டுக்கொண்டே இருந்த பல நிகழ்வுக்ளைத் தொகுத்து எழுதியிருக்கிறேன்.

இவற்றில் என்னைப் பண்படுத்திய சில நிகழ்வுகளும் உண்டு; என்னைப் புண்படுத்திய சில நிகழ்வுகளும் உண்டு;கசப்பும் உண்டு;இனிப்பும் உண்டு.அனைத்தும் உண்மை நிகழ்வுகளே.எதையுமே மிகைப்படுத்தி எழுதவில்லை.நான் கண்ட்தை-கேட்டதை அப்படியே எழுதி இருக்கிறேன்.சில இடங்களில் மட்டும் சில கரணியங்களுக்காகச் சில பெயர்களை மாற்றி இருக்கிறேன்.

எல்லாக் குழந்தைகளுக்குமே அவர்களுடைய அப்பாதான் அவர்களின் முதல் கதாநாயகனாக இருக்கிறார்கள். இருக்கவேண்டும்.

எங்கள் அப்பா எங்களுக்கு எடுத்துக்காட்டான அப்பாவாகவும்,ஒரு நல்ல தோழனாகவும் ஒரு  நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார்.அதுதான் இன்றைய எங்களுடைய செழிப்பான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது என்று ஆணித்தரமாக நம்புகிறேன். பெரியாரியத்தைத் தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து எங்களுக்கெல்லாம் எப்படி ஒரு வழிகாட்டியாக இருந்தார் என்பதைப் பற்றி இந்நூலில் எழுதி இருக்கிறேன்…”(8) என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

மொத்தம் 25 தலைப்புகளில் இந்த நூலின் கருத்துகள் எழுதப்பட்டுள்ளன. ‘அன்பே உருவான தனது தந்தை விசாகரத்தினம்,தன் குழந்தைகளுக்கு மங்கையர்க்கரசி,அறிவழகன்,இளவரசி,தமிழரசி எனப் பெயர் சூட்டியது மட்டுமல்லாது ,பெயர் சூட்டக் கேட்ட குழந்தைகளுக்கெல்லாம் அருமையான தமிழ்ப் பெயர்களைச் சூட்டிய தமிழ்ப்பெயர் ஆர்வலர் அய்யா விசாகரத்தினம்,8 வயதில் தன் தந்தையால் தந்தை பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டுப் பெரியார் கொள்கையாளராக மாறிய அய்யா விசாகரத்தினம்,வனத்துறையில் ஆனஸ்ட் விசாகரத்தினம் எனப்பெயர் வாங்கிய அய்யா விசாகரத்தினம், தன் பிள்ளைகள் மீன் பிடிக்கச்சென்றபோது கடுமையாகத் தண்டித்த தந்தையாக அய்யா விசாகரத்தினத்தின் பல்வேறு பரிமாணங்களைச் சுவைபட, இந்த நூலில் விளக்கியிருக்கிறார் இளவரசி.

காலையில் குழந்தைகளைக் கடவுள் மறுப்பு வாசகங்களைச் சொல்லவைப்பது,சிறு குழந்தைகளைக் கவனிப்பது,குளிக்கவைப்பது,தீபாவளி துக்க நாள் என்பதைக் குழந்தைகளே உணரும் வண்ணம் உணரவைப்பது,சுடுகாட்டிலிருந்து கொண்டுவந்த எலுமிச்சம் பழங்கள்,புடைப்பதற்கு அப்பா கொடுத்த முறம் எனப் பல சுவையான நிகழ்வுகள் அருமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன “(9) என்று வாழ்த்துரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல வாசிக்க,சுவைபட எழுதப்பட்ட ஒரு நூலாக இந்த நூல் விளங்குகிறது.

உன் சாத்திரத்தை விட,உன் முன்னோரை விட ,உன் வெங்காயம் விளக்கமாத்தை விட,உன் அறிவு பெரிது,அதைச்சிந்திஎனச்சொன்ன பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்களையும்.

அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு நிழல் போல் உங்களைத் தேடி ஓடி வரும்எனச்சொன்ன அறிவுலக மேதை அண்ணன் அம்பேத்கர் அவர்களையும் வணங்குகிறேன்’(10) என்று குறிப்பிட்டுத்தான் இந்த நூலாசிரியர் தன்னுடைய என்னுரையைத் தொடங்குகிறார்.

தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்று, தன் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு, தன் குழந்தைகள் பெரிய,பெரிய பதவிகளுக்குப் போட்டித்தேர்வுகள் எழுதி செல்வதற்கான வாய்ப்பினை உருவாக்கி,ஜாதி எதிர்ப்புப் போராளியாக விளங்கிய தந்தை பெரியாரின் தொண்டர் பற்றி அவரின் மகள் எழுதியதணியாது எரியும் காடுஎன்னும் நூலும் சுட்டிக்காட்டப் படவேண்டிய ஒரு நூலாகும்.

        4.‘பெரியவன் என்னும் நாவல்:

வாழ்க்கை வரலாறு என்னும் நூலாக மட்டுமல்லாது, புனைவுகளின் வழியாகவும் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்களின் வரலாறு எழுதப்படுகின்றது. அந்த வகையில் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தால் பாராட்டைப் பெற்றபெரியவன்என்னும் நாவல் குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்த நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் சுந்தரபுத்தன் ஆவார். இது தந்தை பெரியாரின் கருத்துகளை ஏற்று , திராவிடர் கழகத்தில் தொண்டராகவும்,அதே நேரத்தில் பகுதி நேர செய்தியாளராகவும்,விவசாயியாகவும் திகழ்ந்த சுந்தரபுத்தன் அவர்களின் தந்தையான ஒளிச்செங்கோஎன்னும் புனை பெயருடைய நடராசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று அடிப்படையில் அமைந்த  நாவலாகும்.

இந்த நாவலை சென்னையைச் சார்ந்த தமிழ்வெளி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.207 பக்கங்கள் உள்ள இந்த நாவலின் விலை ரூ 300

பெரியாரின் தொண்டராக இருந்த நடராசன் அவர்களின் தீராத வாசிப்புத் தாகம் இந்த நாவல் முழுவதும் விவரிக்கப்படுகிறது. வாசிப்பதை நேசித்த நடராசன், எப்படி எல்லாம் அன்றாட வாழ்க்கைச் சூழலுக்குள் மாட்டிக்கொண்டு துன்பப்பட்டார் என்பதும் விவரிக்கப்படுகிறது.

இந்த நாவலில் தந்தை பெரியார் அவர்கள் ,விடையபுரம் என்னும் இடத்தில் பயிற்சி முகாம் நடத்தியதும்,அதில் முதன் முதலாககடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லைஎன ஆரம்பிக்கும் கடவுள் மறுப்பு வாசங்கங்களைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தியதையும் விளக்கமாக எடுத்து வைக்கிறது. புனைவு கலந்த ஒரு நாவலில், ஒரு மிகப்பெரிய வரலாறாக அமைந்த ஒரு பயிற்சிமுகாமின் முழுமையான விவரிப்பு இடம் பெற்றிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

வாழ்வில் எத்தகைய பிரச்சனை வந்தாலும் அதனை எப்படி பகுத்தறிவோடு சிந்திந்து சந்தித்து வெளியே வந்தார் என்பதையும், தொடர்ந்து சைக்கிளில் பல கிலோமீட்டர்கள் தினந்தோறும் பயணம் செய்து தனது பத்திரிக்கை செய்தியாளர் என்னும் பொறுப்பினை திறம்படச்செய்தார் என்பதையும் மிக விரிவாக இந்த நாவல் நமக்கு எடுத்துரைக்கிறது.

1980 காலகட்டங்களில் கொராடாச்சேரி,திருவாரூர் பகுதிகளில் நடந்த அரசியல் செயல்பாடுகளையும் இந்தப் புதினம் எடுத்து வைக்கிறது. ஒரு குடும்பத்தில்  நடக்கும் பல்வேறு நிகழ்வுகள்,பாடுகள்,மூட நம்பிக்கையால் நிகழும் சாவுகள்,அதனைத் துப்புக் கண்டுபிடிப்பது போல் தேடிக்கண்டு பிடித்துப் பத்திரிக்கைக்குச் செய்தியாக அனுப்பவது போன்ற பல்வேறு விவரிப்புகள் இந்த  நாவலை உயிர்ப்பாக  நாம் படிப்பதற்கு உதவி செய்கிறது.

1980-காலகட்டங்களில் எப்படிப்பட்ட தகவல் தொடர்பு வசதி இருந்தது என்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது. கணினியும், இண்டர் நெட்டும், வலைத்தளங்களும், வாட்சப்பும் இல்லாத அந்தக் காலங்களில் மனிதர்கள் எப்படி செய்திகளை அனுப்பினார்கள்,அதற்கு எப்படியெல்லாம் முயற்சிகளை எடுத்துக்கொண்டார்கள் என்பது விவரமாக இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. காவிரியின் கடைமடைப் பகுதியான கொரடாச்சேரி பகுதிகளில் விவசாயிகள் எப்படி எல்லாம் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும் விரிவாக இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவல் ஓட்டத்திலேயே,கதையின் போக்கிற்குள்ளேயே , சேலத்தில்  நடந்த திராவிடர் கழக மாநில மாநாடு பற்றிய செய்திகள் உள்ளே வருகின்றனவரலாற்று நிகழ்வுகளை, நாவலின் வாசிப்பு சுவை குன்றாமல் எப்படி உள்ளே இணைத்து எழுதுவது என்பதற்கு எடுத்துக்காட்டான நாவலாக இந்த நாவல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

வல்லம் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் 26.11.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இரு சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் விழாவில்,‘‘பெரியவன்’’ என்ற நாவலுக்காக விருது பெற்ற எழுத்தாளர் சுந்தரபுத்தன் ஏற்புரை நிகழ்த்தினார்.அந்த ஏற்புரையில்

“1971 ஆம் ஆண்டு எங்கள் ஊரிலேயே அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் அப்பாவுக்குத் திருமணம் நடந்தது. தம்பி, தங்கை உள்ளிட்ட எங்கள் மூவருக்கும் நடந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது அய்யா ஆசிரியர் அவர்கள், பக்கத்தில் ஏதோ ஓர் ஊரில் இருப்பதுபோலத் தோன்றும். அந்த அளவுக்கு அவரது வருகை இருக்கும்.

இந்த அழகிய தருணத்தில் அப்பாவை நினைத்துப் பார்க்கிறேன். என் தந்தையின்மீது பேரன்புகொண்டவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அந்த அன்பின் விளைவுதான் இந்தப் பரிசும்  பாராட்டும்.

ஊருக்கு வந்தால், ‘‘ஒளிச்செங்கோ எங்கே’’ என்று கேட்பார். இன்று அப்பா இருந்திருந்தாலும் அந்தக் குரல் கேட்டிருக்கும். எப்போது அய்யா ஆசிரியர் அவர்களைச் சந்தித்தாலும், ஒரு புத்தகம் தருவதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பா.

அன்றாட வாழ்வில் எல்லாக் கணங்களிலும், அய்யா பெரியார் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று பேசத் தொடங்கிவிடுவார் அப்பா. அக்குவேறாக ஆணிவேறாக என்று கிராமத்தில் சொல்வார்கள். அப்படி நுட்பமாகத் தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தவர்.

இதை, எனக்கு வழங்கிய விருதாக நினைக்கவில்லை. என் தந்தையின் எளிமையான பங்களிப்புக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்.”(11) என்று குறிப்பிட்டு இன்னும் விரிவாக உரையாற்றியிருக்கிறார். இந்த  நாவல் அடுத்த பதிப்புக் காணும்போது ,சுந்தரபுத்தன் அவர்களின் ஏற்புரையும் நாவலில் இணைக்கப்படும் அளவிற்கு ,சுந்தரபுத்தன் அவர்களின் ஏற்புரை விரிவாகவும்,உணர்ச்சி மிகுந்ததாகவும் இருக்கிறது.

முடிவுரை: கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் அதிகம் விற்பனையாகும் நூல்களாகத் தந்தை பெரியார் எழுதிய நூல்கள் இருக்கின்றன.அவரின் கொள்கைகள் கவிதைகளாக,கட்டுரைகளாக வடிக்கப்படுகின்றன.அவரது கொள்கைகளை ஏற்று வாழ்ந்தவர்களை, வாழ்கிறவர்களை அடிப்படையாகக்கொண்டு புனைவுகளில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.அப்படிப் பார்க்கின்றபோது மேலே குறிப்பிட்ட  தன் வரலாற்று நூல்களும், நாவலும் மிகச்சிறப்பாகப் பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்தவர்கள்,வாழ்கிறவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதைக் காண முடிகிறது. வரும் காலங்களில் இன்னும் மிக அதிகமான படைப்புகள், பெரியார் தொண்டர்களைப் பற்றி வரும் என்பதற்கான முன்னோட்டமாக ,தற்காலத் தமிழ் இலக்கியத்தில் வெளிவந்த மேற்கண்ட நூல்களை எடுத்துக்கொள்ளலாம்.

 

குறிப்புதவி

1.   பெரியார் ஒரு வாழ்க்கை  நெறி- கவிஞர் கலி பூங்குன்றன்,திராவிடர் கழக வெளியீடு.

2.   அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் (ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்) –மருத்துவர் சோம.இளங்கோவன்,நன்செய் பிரசுரம் வெளியிடு.

3.   மேலது

4.   மேலது

5.   விறகு வண்டி முதல் விமானம் வரைசே.முனியசாமி,கீழடி வெளியீட்டகம்.

6.   மேலது

7.   தணியாது எரியும் காடு வி.இளவரசி சங்கர்.சாரல் பதிப்பகம்

8.   மேலது

9.   மேலது

10. மேலது

11. விடுதலை நாளிதழ், நவம்பர் 30,2025.