Monday, 2 February 2026

இந்த நாள்! இந்த நாள்!...

 

இந்த நாள்! இந்த நாள்!...

அவருக்கு இறுதி

வணக்கம் செலுத்த

தமிழ்நாடே திரண்டு

வந்த நாள்…

அண்ணா..அண்ணா..

எனத் தமிழ்நாடே

அழுது புலம்பிய நாள்!

மாற்றார்களின் மனதிலும்

இடம்பிடித்த

மகத்தான மனிதருக்கு

இறுதி நிகழ்வு நடந்த நாள்!

சாரை சாரையாய்த் தமிழர்கள்

சென்னைக்கு வந்து குவிந்து

அழுது புலம்பிய நாள் !

 

தனக்கென ஏதும் சேர்க்காமல்

தமிழர்களுக்காய்

‘தமிழ்நாடு’ எனப் பெயர்

கொடுத்த தலைவன்…

 

நம் வீட்டுத்திருமணத்தை

நாமே நடத்திக்கொள்ள

சுயமரியாதைத் திருமணத்தைச்

செல்லும் எனச்

சட்டமாக்கிய தலைவன்

 

இறந்து எத்தனை

ஆண்டுகள் ஆனாலும்

இருமொழிக்கொள்கைதான்

தமிழ்நாட்டில் என்பதைச்

சட்டமாய் …

தமிழர்கள் மனதில்

ஓவியமாய் வரைந்து

வைத்த தலைவன்..

 

உனது குரல்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

உலகமெல்லாம் இருக்கும்

தமிழர்கள் இல்லங்களில்…

உனது எழுத்து

சொல்லிக்கொண்டே இருக்கிறது

தம்பிகளுக்கு வழிகாட்டுதல்களை…

புதிய ‘பராசக்தி’கள் கூட

நீ சொன்ன

‘தீ பரவட்டும் ‘என்பதைத்தான்

திருப்பிச்சொல்கின்றன..

 

மறையவில்லை அண்ணா நீ!

எங்கள் மனதில் இருக்கிறாய்!

சாகவில்லை அண்ணா நீ !

சட்டங்களில் இருக்கிறாய் !

வாழ்க அண்ணா ! நீ வாழ்க!

 

                             வா.நேரு,03.02.2026

அண்மையில் படித்த புத்தகம் : கண்ணன் ஒரு நாத்திகன்...

அண்மையில் படித்த புத்தகம் : கண்ணன் ஒரு நாத்திகன்

நூல் ஆசிரியர்               : முனைவர் மா.வசந்த்

வெளியீடு                   : செண்பகம் வெளியீட்டகம்,தஞ்சாவூர்.

முதல் பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 56, விலை ரூ 80

கண்ணன் ஒரு நாத்திகன் முனைவர் மா.வசந்த்  அவர்கள் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள ஒரு குறுநாவல். தலைப்பைப் பார்த்த உடனேயே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சிலர் இப்படித் தலைப்பு வைத்தால் பலர் படிக்க மாட்டார்கள் என்று நினைத்து தயங்குவார்கள் .ஆனால் எனக்கு அறிமுகம் இல்லையென்றாலும் வசந்த் இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காகவே வாங்கிப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். வாங்கினேன். படித்தேன். சின்னப் புத்தகம். மொத்தம் 56 பக்கங்கள் மட்டுமே உள்ள நூல். பெரும்பாலும் உரையாடல்களாக வடிவமைக்கப்பட்டுள்ள குறு நாவல்.யார் படித்தாலும் ஆர்வத்துடன் படிக்கும்படியாக இந்த நூல் அமைந்துள்ளது சிறப்பு.கேள்வி பதில் வடிவில் பல வரலாற்று செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளது அருமை.ஓர் ஆசிரியராக இருக்கும் கண்ணன்,அவரது குடும்பம், பள்ளி, மாணவ மாணவிகளுடன் உரையாடல்,தலைமை ஆசிரியருடன் உரையாடல்,காவல் நிலையத்தில் அனுமதி வாங்குவதற்காகச் சென்று அனுமதி வாங்குவது என்று உயிரோட்டமான ,பல நிகழ்வுகள் உண்மைபோல் அமைந்திருப்பது நூலுக்கு வலு சேர்க்கிறது.

இந்த  நூல் ஆசிரியர் ,தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் என்னும் குறிப்பு உள்ளது. புகழ்மிக்க இக்கல்லூரியின் செயலாளர் திரு.இரா.சுந்தரவதனம்  அவர்கள் ,”பகுத்தறிவுச் சிந்தனைகளை இளம் வயதினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய சொற்களில் தெளிந்த நடையில் உருவாக்கியுள்ளமை சிறப்புக்குரியது. பெரியாரின் கருத்தில் கோட்பாடுகளை உள்ளபடியே உள்ளத்தில் இருத்திப் பயணிக்கும் இவரை வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துரை வழங்கி இருக்கிறார் .

கல்லூரியின் முதல்வர் முனைவர் (திருமதி) இரா.இராசாமணி அவர்கள்,”  படைப்பிலக்கியத்தில் கையாளப்படும் அத்தனை  நுணுக்கங்களையும் மிகச் சிறப்பாகக் கையாண்டு படிக்கும்போது, தொய்வும் இன்றிப் பற்பல கருத்துக்களை விதைத்திருப்பது இன்றைய மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும். மாறுபட்ட முற்போக்கு சிந்தனையோடு இவ்விலக்கியத்தை வடித்தெடுத்த பேராசிரியர் முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன் என்று வாழ்த்துரை கொடுத்து  இருக்கிறார்.

 

நூல் ஆசிரியர் தன்னுடைய  என்னுரையில் ,” பெரியார் அவர்கள் முதன்முதலாகக் கடவுள் மறுப்பு வாசகத்தை முழங்கியதும் திருவாரூர் மண்ணில்தான். அப்படிப்பட்ட திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பிறந்தவன் நான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு தன்னுடைய உயர்வுக்கும், பகுத்தறிவுப் பாதைக்கும் காரணமான தனது தந்தையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பணியில் சேர்ந்த பிறகு எனக்குப் பெரியார் பற்றிய புத்தகங்கள் வழங்கி என்னைப் பகுத்தறிவுப் பாதையில் அழைத்துச் சென்றது பேராசிரியர் தோழர் எழிலரசன் அவர்கள். வாசிப்பு மூலம் பெற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளை இன்றைய இளம் சமுதாயத்திற்கு ஏற்றவாறு கொண்டு சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம்தான் இந்த நூல் எழுதக் காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.





முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.எழுத்து அருமையாகக் கைவருகிறது. இன்னும் பல படைப்புகளை வழங்கி சமூகத்திற்குப் பணியாற்ற அவருக்கு வாழ்த்துகள்.பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல, அனைத்து மாணவ மாணவிகளும் படிக்கவேண்டிய நூல்.




 

Wednesday, 28 January 2026

இவனும் அவனும்...

 

கரப்பான் பூச்சி

உடலில் ஊர்வது

போன்ற உணர்வும்

அருவருப்பும்

முகநூலில் இவனது

பதிவுகளைப் படிக்கும்போது

ஏற்படுகிறது எனக்கு…

 

‘பாலியல் குற்றவாளி’

நாளும் ஒன்றுபேசும்

நாடகக்காரனைப் பின்பற்றி

இவன் போடும் பதிவுகள்

நாற்றம் கொடுக்கிறது எனக்கு…

 

மெத்தப்படித்தவன்

கைநிறையச் சம்பளம்

வாங்கும் பொறுப்பில்

இருப்பவன்.

எப்படி அவனுக்குக் கீழ்

இவனின் அரசியல் பணி

புரியாத புதிராய் எனக்கு…

 

திராவிட இயக்கத்துக்

குடும்பத்தில் பிறந்தவன்…

கலைஞர் கொண்டுவந்த

நுழைவுத்தேர்வு நீக்கத்தால்

பலன் பெற்றவன்…

கலைஞர் கொண்டுவந்த

இம்புரூவ்மண்ட் திட்டத்தால்

பொறியாளர் பட்டம் பெற்றவன்..

 

பட்ட பாடுகளை மறந்தானா?

திராவிடத்தால் வளர்ந்தோம்

எனும்  நினைவினை இழந்தானா?

‘வைத்தியம் பார்க்கவேண்டிய

பைத்தியக்காரன்’ பின்னால்…

போனதால் இவனும் சேர்ந்து

பைத்தியம் ஆகிவிட்டானா?

வைத்தியம் பார்த்துத்தான் 

இவனை மீட்கவேண்டுமா?

 

                              வா.நேரு, 29.01.2026

கனவு போலவே இருக்கிறது...

 

அவரின் நேரத்தின்

அருமை தெரிகிறது

எனக்கு…

இரண்டு நிமிடம்

பேசலாமா எனக்கேட்டு

பேச வேண்டியதைப்

பேசிவிட்டு வைத்து

விடுகிறேன் நான்...

 

சில நிமிடங்களில் 

அழைப்பு வருகிறது..

அண்ணே, ஏதுமே பேசாமல்

சடக்கென்று முடித்து

விட்டது போல் தோன்றியது...

நலம்தானே...

உடல்நிலை எல்லாம்

சரியாக இருக்கிறதா?

எனப் பல ஆண்டுகளுக்கு

முன் ஆற அமரப்

பேசியது போல 

பேச ஆரம்பிக்கிறார்..

அவரின் கரிசனம்…

அவரின் அன்பு…

ஆழமாய்ப் புரிகிறது

அவரது சில சொற்களில்

 

அவரது அலுவலகத்தின்

நிலைமை நான் அறிவேன்..

எப்போதும் பரபரப்பாய்

எப்போதும் ஆட்கள் சூழ…

அவரைச் சுற்றி 

ஒலிக்கும் செல்பேசிகளின்

ஓசை மீண்டும்

அவரது நேரமின்மையை

உணர்த்துகிறது...

 

அவரது பேச்சில் ஒரு

பரபரப்பு கூடுகிறது…

நிலைமையை உணர்கிறேன்..

எல்லோரும் நலமே..

நேரில் ஒருநாள்

ஆற அமரப் 

பேசுவோம் என்று 

செல்பேசி இணைப்பைத்

துண்டித்துக் கொள்கிறேன்

நான்!..

 

ஆற அமர

உட்கார்ந்து பேசும்..

கிண்டலும் கேலியுமாய்

அரட்டை அடித்து

மகிழும் காலமெல்லாம்

கனவு போலவே

இருக்கிறது இப்போதெல்லாம்..

 

                                    வா.நேரு,28.01.2026

Thursday, 22 January 2026

கற்றுக்கொண்டே இருக்கிறோம்.....

 

உண்மையான பாராட்டு

எப்போதும் நமக்கு ஓர்

உத்வேகம் தருகிறது…

இன்னும் பணியாற்ற..

இன்னும் எழுத…

இன்னும் வாசிக்க…

இன்னும் இன்னும்

எத்தனை உந்துதல்களை

நமக்கு ஒரு பாராட்டு

தருகிறது !


நேற்றைக்கு முந்தைய நாள்தான்

‘உண்மை ‘ இதழுக்கு

கட்டுரை ஒன்றை

அனுப்பி இருந்தேன் !

‘பாம்புக்கடி ‘ பற்றிய

கட்டுரை அது !

நேற்று காலை

மதுரைக்கு வந்த

93 வயது இளைஞர்

அய்யா ஆசிரியர் அவர்களைப்

புத்தகம் கொடுத்து

மதுரைக்கு வரவேற்றபோது ,




நீங்கள் ‘உண்மை’க்கு அனுப்பிய

‘பாம்புக்கடி’ பற்றிய

கட்டுரையைப் படித்தேன் …

நன்றாக இருக்கிறது…

நிறையப் புதிய செய்திகள்…

எனப் பாராட்டினார்…

மனதிற்குள் அப்படி ஒரு

மகிழ்ச்சி பொங்கி வழிந்தது…

மிகப்பெரும் இலக்கியவிருதினைப்

பெற்றது போல் உணர்வு

நிரம்பியது எனக்கு…

முதல் நாள் அனுப்பிய

கட்டுரையை உடனே படித்து

பார்த்தவுடன் பாராட்டும்முறை…

இந்த வயதில்…

கற்றுக்கொடுத்துக்கொண்டே

இருக்கிறார் எங்கள் ஆசிரியர் !

அவரிடம் கற்றுக்கொண்டே

இருக்கிறோம் நாங்கள்…

                        வா.நேரு, 22.01.2026

Thursday, 15 January 2026

பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்....நூல் ஆய்வு

 


வணக்கம் நண்பர்களே, இன்று மாலை 6.30 மணிக்கு திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியிருக்கக்கூடிய 'பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும் ' என்னும் நூல் பற்றிப் பேசுகின்றேன். இன்று மாட்டுப்பொங்கல்  நாள். இன்று திருவள்ளுவர் நாள்.திருக்குறளை களவாட ஒரு கூட்டம் முயலக்கூடிய நிலையில், நமது சொத்தாம் திருக்குறளைப் பேசுவோம்.பாதுகாப்போம்.வாருங்கள்! வாருங்கள்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை  6.30 முதல் 8 மணி வரை நடக்கும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 182-வது நிகழ்வு... வாருங்கள்..

Tuesday, 13 January 2026

பொங்கல் விழா வாழ்த்துகள்…

 

பொங்கல் விழா வாழ்த்துகள்…

 

பொங்கல் பண்டிகை

அல்ல

பொங்கல் விழா

வாழ்த்துகள்….

 

போகிப்பண்டிகை..

நாம் கொண்டாடும்

விழா அல்ல…

அது பார்ப்பான் இட்டுக்

கட்டியதின் மிச்சம்…

 

எரிப்பது எல்லாமே

அவாள் வழக்கம்…

செத்தால் கூடப் புதைப்பதுதான்

நம் வழக்கம்…

 

ஆடுமாடு மேய்க்க

வந்த பார்ப்பான் இன்று

மாடுகள் மாநாடு

வைப்பவனோடு கூட்டணி…

 

தமிழர் நமக்குத்…

தமிழ்ப் புத்தாண்டு

தை முதல் நாளே…


திராவிடர் நமக்கு

ஆரியப்பாம்பு தீண்டா

திராவிடர்  விழா

பொங்கல் விழா ஒன்றே…

திராவிடப் பொங்கல் வைப்போம்

தமிழர் நாளைக் கொண்டாடுவோம்

ஆரியத்தின் அத்துமீறல்களை

குழிதோண்டிப் புதைக்க

தமிழ்ப் புத்தாண்டில் 

சபதம் ஏற்போம்..

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்…

இனிய திராவிடப்பொங்கல்

விழா வாழ்த்துகள்…

தமிழும் திராவிடமும் ஒன்று..

இதை அறியாமல் கூச்சல்

போடுகிறவனை விட்டுத்தள்ளு..

                       வா.நேரு, 13.01.2026

Monday, 12 January 2026

அண்மையில் படித்த புத்தகம் : யாதுமாகினாய் ...லோ.குமரன்

அண்மையில் படித்த புத்தகம்: யாதுமாகினாய்(சிறுகதைத் தொகுப்பு)

ஆசிரியர் : லோ.குமரன் 

வெளியீடு : எழிலினி பதிப்பகம்,சென்னை-600 008.

முதல்பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 70, விலை ரூ 150 






இசைக்கருவியை கையாளுபவர்கள் இனிமையைக் கையாளுபவர்கள். புல்லாங்குழலை வாசிப்பவர்கள் பொறுமையாய் எதையும் அனுபவிக்கத் தெரிந்தவர்கள். மனதிற்குள் தோன்றும் மகிழ்ச்சியை குழலின் வழியாக எளிதாகக் கடத்தத் தெரிந்தவர் 'வாருங்கள் படிப்போம்' குழுவின் மூலம் அறிமுகமான அண்ணன் லோ.குமரன் அவர்கள்.. அண்ணன் லோ.குமரன் அவர்களின் 'யாதுமாகினாய்' என்னும் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்த போது எனக்கு இன்னொரு பிரபஞ்சனைக் கண்டுபிடித்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியும் துள்ளலும் மனதிற்குள் எழுந்தது. அப்படி ஒரு விவரிப்பு. தவறு செய்யும் நிலையில் கூட அந்தத் தவறை செய்கிற நிலைமைக்கு ஒரு பெண் எப்படி ஆக்கப்படுகிறாள் என்பதை அற்புதமாய் விவரிக்கும் சொல்லாடல். ஒவ்வொரு கதைக்கும் நிறுத்தி நிதானமாய்ச் சொற்களைப்  வடித்திருக்கும் விதம் அருமை. உண்மையிலேயே இந்தக் கதைத் தொகுப்பைப் படித்து முடித்த பொழுது அவ்வளவு மன நிறைவாக இருந்தது. இது இவருடைய முதல் தொகுப்பு.  யார் படித்தாலும் இது முதல் தொகுப்பாகத் தெரியாது அப்படி ஓர் எழுத்து ஓட்டம் ,அப்படி ஓர் உளவியல், அப்படி ஓர் உரையாடல், அப்படி ஓர் உள் மனது செய்திகளைக் கடத்தும் நுட்பம் வியந்துதான் போனேன். நான் மகிழ்ந்துதான் போனேன்  மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்  குமரன் அண்ணே.எழுதுங்கள்,எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கள் தனித்துவமாக இருக்கின்றன

இந்தத் தொகுப்பில் 4 சிறுகதைகள் இருக்கின்றன. நிறையப் பக்கங்கள் உள்ள சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் நிகழ்பவை. 'யாதுமாகினாய்' என்னும் கதை ஒரு கணவன் மீது மனைவிக்கு இருக்கும் அன்பைச் சொல்கிறது அந்த அன்பு எதனால் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதைப்  படித்துப்பாருங்கள். அதைப்போல அப்பா மீது வெறுப்பு ஏன் ஏற்பட்டது என்பதை 'ஏய்' என்னும் ஒற்றைச் சொல் மூலம் விவரித்திருக்கிறார் ஆணும் பெண்ணும் வாழும் வாழ்க்கை  நன்றாக  அமைவதற்கு என்ன  என்ன வேண்டும் என்பதை  மிக எளிமையாக்கி ஒரு வாய்ப்பாடு(ஃபார்முலா) போலக்  கொடுத்திருக்கிறார்.

இலஞ்சம் வாங்கி, மாட்டும் ஒருவரைப் பற்றிய கதை 'யாதெனக் கேட்டேன்'. பிணவறையைப் பற்றியும் பிணவறைக்குள் இருக்கும் நிலையில் எண்ணிப்பார்ப்பதாகவும் எழுதப்பட்ட கதை. நடப்பில் இருக்கும் நடிகர்கள் மோகம் பற்றியும் போகிற போக்கில் சொல்லிச்செல்லும் கதை. பொருத்தமாகப் பொருந்துகிறது.

இந்தத் தொகுப்பில் 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் கதை என்று 'யாரிவளோ 'என்னும் கதையைச்சொல்லலாம். சென்னை பாஷையையும் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.அலமேலு நம் மனதில் நிற்கிறார். ஆணாதிக்கவாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் கதை. கதை ஓட்டத்தில் அற்புதமான கருத்துக்களைப் பொன்மொழி போல எழுதிக்கொண்டு செல்கிறார். 
எடுத்துக்காட்டாக 

" மனதளவில் துவண்டு இருக்கும் நேரத்தில் 'என்னவாயிற்று' எனக் கேட்டு நம் முதுகை அன்பாக தட்டிக் கொடுத்து அரவணைக்கும் அந்த தொடுதலுக்காக, அணைப்பிற்காக ஏங்காத மனித உயிர் இங்கு யாரும் இல்லை. அந்த ஒரு தொடுதலால் வலி என்னும் நச்சுமுள்ளை வேரோடு பிடுங்கி தூக்கி எறிந்து விட முடியும் அலமேலுவின் அந்த அன்பான தொடுதல் சௌந்தர்யாவிற்கு இப்போது தேவைப்பட்டது 

"ஏன் அலமேலு இந்த ஆம்பளைங்களோட புத்தி இப்படி இருக்கு?.. ஆம்பள கையை எதிர்பார்க்காமல் சுயமா தன்னோட கால்ல நிக்கணும், தன்னோடு தொழில்ல ஜெயிச்சு காட்டணும்ன்னு நினைக்கிற பொம்பளைங்கள சட்டுனு 'தேவிடியா' என்று கூச்சமே இல்லாம எப்படி பச்சையாத் திட்ட தோணுது? வீட்டுக்காரனை ஏமாத்தணும்னு ஒரு பொண்ணு முடிவு பண்ணிட்டா, அவன் என்னதான் கட்டுப்பாடு போட்டாலும் அத உடைச்சிட்டு, மனசுக்கு பிடிச்சவன் எதிரே மொத்தமா அவுத்து போட்டுட்டு, இந்தா எடுத்துக்கோன்னு அவனோட படுத்து வாழ்க்கைய அனுபவிக்கிறது ஒன்னும் கஷ்டமே இல்லைன்னு ஏன் இவனுங்களுக்கு புரியல அலமேலு. பொம்பளைங்கறவங்க வெறும் உடம்பு மட்டும் தான் அவளுக்கும் உணர்வு இருக்கு, ஆசாபாசம் இருக்குன்னு ஏன் இவனுங்க  நினைக்க மாட்றாங்க..."

"மனுசனுக்கு நாம செய்யற பெரிய செயலை அவங்க கஷ்டத்துல இருக்குறப்போ கொடுக்கிற ஆறுதல்தான்".

" கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கவும், நிகழ்காலத்தின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் வயதோ, படிப்போ, வசதியான வாழ்க்கையோ எதுவும் இங்கு தடை கிடையாது. உண்மையாய் செவிமடுக்கும் நல்ல இதயம் இருந்தால் போதும். தன் மனச் சுமைகளை இறக்கி வைத்து இளைப்பாற ஒரு துணை கொடுத்தால் அந்த இடத்தில் ஓய்வெடுத்து பிறகு வரும் நாட்களை சற்று நகர்த்த முடியும். அந்த நல்ல இதயமாய் அலுமேலுவைப் பார்த்தாள் செளந்தர்யா'...

அதைப்போல ஒரு முயலை வைத்து ,கதை சொல்லும் இடம் அருமையாக இருக்கிறது.
"எல்லா நேரங்களிலும் தன்னை வேட்டையாடத் தயாராகும் விலங்கை முயல்கள் கவனிப்பதில்லை. தொடர்ந்து சலசலப்புகளும், வழக்கத்துக்கு மாறான ஓசைகளும் முயல்களுக்கு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கும். எச்சரிக்கையாய் இருக்கும் முயல்கள்  இரையாகாமல் தப்பிக்கும். தன் இரை  தேடலில் அதிக ஆசை வைக்கும் முயல் வேட்டையாடப்படும். இது ஆசை இல்லாத முயல் தன் காதுகளை உயர்த்தி  ஓசைகளை உள்வாங்கி  எச்சரிக்கையானது."

'தொடர்பு எல்லைக்கு வெளியே' இன்றைய ஐ.டி.உலகில் வேலை பார்க்கும் நந்தினி மற்றும் கவி என்னும் இரண்டு கதை பாத்திரங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை. கதைக்குள் பேசப்படும் கருத்துகள் கதையோடு ஒட்டியும் ,உணர்வுபூர்வமாகவும் பேசப்படுவது இந்தக் கதைக்கே ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது.

நான் கதைகளை விரிவாக விவரிக்கவில்லை.இதை வாசிக்கும் தாங்கள் இந்த சிறுகதைத் தொகுப்பை வாங்கி வாசித்துப்பார்க்கவேண்டும்.அதில் இருக்கும் லயத்தை ,இனிமையை வாசித்து உணரவேண்டும் என்பதால் விரிவாக விவரிக்கவில்லை.

குமரன் அண்ணே, உங்களிடம் நிறைய சிறுகதைகளை எழுதுங்கள் என்று நான் சொல்லப்போவதில்லை.அதற்குப் பதிலாக வருடத்திற்கு 4 கதைகளை இதைப்போல எழுதுங்கள்.ஒரு 20 வருடத்தில் 80 கதைகள் மட்டும்தான் என்றாலும் பேசப்படும் கதைகளாக,வாசிப்பவர்களின் மனதில் நிற்கும் கதைகளாக அவைகள் இருக்கும்.என்றென்றும் பேசப்படும் கதைகளாகவும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பல மொழிகளில் பேசப்படும் கதைகளாகவும் அவைகள் இருக்கும்.

 இந்த நூலுக்குச் சிறப்பான அணிந்துரையை தோழர் அ.குமரேசன் அவர்களும்,அருமையான வாழ்த்துரையை அண்ணன் முனைவர் கோ.ஒளிவண்ணன் அவர்களும்  கொடுத்திருக்கிறார்கள்.புத்தகத்தின் அட்டை வடிவமைப்பை  செ.ஜீவானந்தகுமார் அருமையாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்.  வாழ்த்துகள்


கட்டாயம் வாசிக்க வேண்டிய ,அதுவும் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கவேண்டிய சிறுகதைத் தொகுப்பு. வாங்கி வாசித்துப்பாருங்கள். நீங்களும் இசைக்குத் தலையாட்டுவதுபோல இந்த நூலின் கதைகளுக்குத் தலையாட்டுவீர்கள்.பாராட்டுவீர்கள்.

வாழ்த்துகளும் ,மகிழ்ச்சியும்,பாராட்டுகளும் அண்ணன் லோ.குமரன் அவர்களுக்கு....

                                                                                                                  அன்புடன்
\                                                                                                                 வா.நேரு,12.01.2026