Friday, 19 June 2026
Monday, 15 June 2026
அண்மையில் படித்த புத்தகம் : அவயம் (புதினம்)..ஏக்நாத்
அண்மையில் படித்த புத்தகம் : அவயம் (புதினம்)
ஆசிரியர் : ஏக்நாத்
பதிப்பகம் : நெடில் வெளியீடு..
முதல் பதிப்பு : பிப்ரவரி 2022,மொத்த பக்கங்கள் 288
,விலை ரூ 320
கலைஞர் நூற்றாண்டு
நூலகம் எண்: 894.8113 EGN;1
ஏக்நாத் அவர்களின்
கெடை காடு நாவல் ஏற்கனவே படித்துப் பிடித்து இருந்ததால், எனது(இந்த) வலைத்தளத்தில்
எழுதி இருந்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அவரது நாவலைப் பார்த்தபொழுது,ஏக்நாத்
அவர்களின் பெயரைப் பார்த்து எடுத்து வந்த நாவல்.
இந்த நாவல் முடிகிறபோது
“ கணீர்க் குரலில் பேசத்தொடங்கினார், “பேரன்பு கொண்ட பெரியோர்களே ..நண்பர்களே “ என்று
முடிகிறது.ஒரு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதற்கான ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்களோடு
தொடங்கும் இந்த நாவல்,முழுக்க முழுக்க ஒரு பேச்சாளரைப் பற்றிய நாவல். பொதுவுடமைக் கட்சியில்
பேச்சாளராக இருக்கும்,பொதுவுடமைக் கருத்துகளில் மிகப்பிடிப்பாக இருக்கும் மாடசாமி என்பரைப்
பற்றிய கதைதான் இந்த நாவல்.ஆனால் மாடசாமி நல்ல பேச்சாளராக மாறுவதற்குக் காரணம் மறைந்த
மேனாள் அமைச்சர் காளிமுத்து போன்றவர்கள். காளிமுத்து அவர்களின் பேச்சைக்கேட்டு தான்
எப்படி நல்ல பேச்சாளராக மாறுவது என்பதை மாடசாமி கற்றுக்கொண்டான் என்று எழுதியிருக்கிறார்.எந்த
இயக்கத்தில் இருந்தாலும் அவர்கள் பேசுவதற்குக் கற்றுக்கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம்
என்பதைச் சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது.
ஈழப்போரட்டத்தின்போது,பொதுவுடமைக்
கட்சிகளின் நிலைப்பாட்டை எதிர்த்து நிறையத் தோழர்கள் கட்சிக்குள் பேசினர்.அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
அல்லது வெளியேறினார்கள். ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் மாடசாமி,அவரது தனிப்பட்ட
பலவீனத்தின் காரணமாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார். பின்பு தி.மு.க,.வில் சேருகிறார்.
பின்பு ம.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சேருகிறார். பொதுக்கூட்டங்களில் தொடர்ச்சியாகப்
பேசும் மாடசாமி, குடிக்கவும் பழகுகிறார். பெண்கள் மீதான அதீத பலவீனமும், குடியும் சேர
எல்லோராலும் மதிக்கப்பட்ட மாடசாமி,தெருவில் குடித்துவிட்டுப் படுத்துக்கிடக்கும் ,உறவுகளால்
கூட வெறுக்கப்படும் மனிதராகிறார். பின்பு எப்படி மீண்டும் திருந்தி ,பேசத்தொடங்குகிறார்
என்பதுதான் கதை.
1980-களில் தொடங்கி
ஓர் இருபது ஆண்டுகள் தமிழ்நாட்டின் அரசியலை, மாடசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியாகப்
பேசும் நாவல் இது. இப்படி முழுக்க அரசியலைப் பேசும் ஒரு நாவலை இதுவரை நான் தமிழில்
படித்ததில்லை. 1991-ல் இராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, தி.மு.க.வினருக்கு எதிராக நடந்த
வன்முறை பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டிருக்கிறது.இராஜீவ் காந்தி கொலையின் மர்மம்
இன்றுவரை விளக்கப்படவில்லை. சந்திராசாமி, போன்றவர்களின் பங்களிப்பு குறித்து நிறையப் பேசப்பட்டாலும்
,அவர்கள் விசாரிக்கப்படவேயில்லை.. மாறாகத் தி.மு.க.வினர் குறிவைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள்.அந்தக்
காலம் குறித்துப் பதிவு இந்த நாவலில் உள்ளது.
கெடை காடு நாவலிலேயே
இவரின் கிராமத்து மொழியும், கிராமத்து மனிதர்களைப் பற்றிய விவரிப்பும் எனக்கு மிகப்பெரிய
ஈர்ப்பாக இருந்தது.அதே நடை இந்த நாவலில் தொடர்ந்திருக்கிறது. கிராமத்து மனிதர்களின்
கிண்டல்,கேலி, ஆற்றாமை, பொறாமை, ஆசைப்படுதல், திருமணம் முடித்த பெண்களிடம் காமம் கொள்ளுதல்,அதனால்
அசிங்கப்படுதல் எனப் பல விவரிப்புகள் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த நாவலை ‘வாழ்வின்
சூறாவளியில் தொலைந்துபோன தோழர்களுக்கு ‘ எனக் குறிப்பிட்டிருக்கிறார். நான் 30 ஆண்டுகளுக்கும்
மேலாகத் தொழிற்சங்கத்தில் பணியாற்றியவன். சில அற்புதமான தோழர்கள் எப்படி,பெண் சார்ந்த
பலவீனத்தால்,குடியால் தங்கள் நற்பெயரை இழந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.பொதுவாழ்க்கைக்குள்
போய்ப் போராடுவது மட்டுமல்ல பொதுவாழ்க்கை, தன் மனதிற்குள் எழும் பலவீனமான எண்ணங்களையும்
எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதுதான் பொதுவாழ்க்கை.அப்படிப் போராடமல் போனால் எப்படிப்பட்ட
நிலைமை ஏற்படும் என்பதனை அருமையாக இந்த நாவலில் ஏக்நாத் எடுத்துக்காட்டி இருக்கிறார்.
‘அவயம்’ என்றால்
சத்தம் என்று பொருள் என்று எழுதியிருக்கிறார். மதுரை மாவட்டம் பகுதியில் இந்தச்சொல்லைப்
பயன்படுத்துவதில்லை. ஆனால் தென்காசி பகுதியில் இயல்பாகப் பேசப்படும் சொல்லாக
இந்த அவயம் என்னும் சொல் இருக்கிறது போலும்,. அரசியல் பற்றி அவயமாகப் பேசும் நாவல்
இந்த நாவல்.. படித்துப்பாருங்கள். எந்த இடத்திலும் தொய்வில்லை. விறுவிறுவெனப் படிக்க
முடிகிறது. பல இடங்களில் வாசிக்கும்போது சிரிக்க முடிகிறது.ஏன் இப்படி மனிதர்கள் மாறுகிறார்கள்
என யோசிக்க முடிகிறது. வேறு யாரும் தொடாத தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகளை, ஒரு கிராமம்
சார்ந்து எடுத்து அதனை அற்புதமாக ஒரு நாவலாகக் கொடுத்திருக்கும் ஏக்நாத் அவர்களுக்குப்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வா. நேரு @ மதுரை,
15.06.2026
ஏக்நாத் அவர்களின் கெடை காடு பற்றிய எனது விமர்சனம்
https://vaanehru.blogspot.com/2015/03/blog-post_40.html
.
Friday, 12 June 2026
அண்மையில் படித்த புத்தகம் : அத்தினி (புதினம்)
அண்மையில் படித்த புத்தகம் : அத்தினி (புதினம்)
ஆசிரியர் : சித்ரா சிவன்
வெளியீடு பிறகு பிரசுரம்,சென்னை-40.
முதல் பதிப்பு : 2024,மொத்த பக்கங்கள் 229
,விலை ரூ 280
இந்தப் புதினத்தின் அட்டையே கவரும் விதத்தில் அமைந்துள்ளது. ‘ஸீரோ டிகிரி இலக்கிய விருது –மூன்றாம் பரிசு ‘ என அட்டைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டையின் மேற்பரப்பில் பறவைகள் பறப்பதையும் அதைப் பார்த்துக்கொண்டே ஒரு பெண் நடப்பதுபோலவும் வரையப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தைப் படித்துமுடித்துவிட்டு மீண்டும் இந்த அட்டையைப் பார்த்தபொழுது ரிச்சர்டு பக் எழுதிய ‘ஜொனாத்தன்
லிவிங்ஸ்டன் சீகல் ‘ என்னும் நாவல்தான் நினைவுக்கு வந்தது.ஜொனாத்தன் என்னும் கடற்பறவை ,தன் உடன் வாழும் மற்ற பறவைகளைப் போல வாழாமல் தனித்துவமாய் எப்படி உயர உயரப் பறக்கிறது,அதன் இலட்சியத்தை எப்படி அடைகிறது என்பதுதான் அந்த நாவல் சொல்லும் கதை.அதைப்போல அத்தினி நாவலின் கதாநாயகி பவித்ராதேவி எப்படி ஒரு சராசரி பெண்ணாக வாழாமல் ,தனக்கென ஒரு பாதையை, இலக்கை வைத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பதைச் சொல்லும் நாவல் இந்த நாவல்.
சித்ரா சிவன் அவர்களின் முதல் நாவல் இது. வியப்பாகத்தான் இருக்கிறது, முதல் நாவல் இவ்வளவு சிறப்பாக வெளிவந்திருப்பது.எழுத்தாளர் இமையம் அவர்களின் ‘கோவேறு கழுதைகள் ‘ போல முதல் நாவலே பலரும் பாரட்டும் வண்ணம் அமைந்துள்ளது.வாருங்கள் படிப்போம் குழுவில் அண்ணன் முனைவர் கோ.ஒளிவண்ணன் இந்தப் புதினத்தை நூல் அறிமுகம் செய்தார். இந்த நாவல் கையில் கிடைத்த ஒரே நாளில் படித்து முடித்தேன்.ஒரு பெண்ணின் வேறுபட்ட பாய்ச்சலை இந்த நாவலில் பார்க்க முடிந்தது.படிக்கும்போது அவ்வப்போது ‘பெண் ஏன் அடிமையானாள்? ‘ என்னும் நூலில் தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளும் மனதில் நிழலாடின.
சித்ரா சிவன் பற்றிய குறிப்பு புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் உள்ளது. பெரியகுளத்தைச் சேர்ந்தவர் என்பதும், ,ஊடகவியலாளர் என்பதும் இதற்கு முன் இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் புனைபெயரில் வெளியிட்டுள்ளார்,அவரது கணவர் மற்றும் மகன்கள் பற்றிய செய்திகள் உள்ளிட்ட பல அதில் உள்ளன.நான் வேலை பார்த்த
ஊர்களில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் பெரியகுளம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த ஊரிலிருந்து
ஒரு காத்திரமான எழுத்தாளர் வெளிப்பட்டிருக்கிறார் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
“ மனிதர்கள் நாம் அகவயமான மற்றும் புறவயமான நினைவுகளின் தொகுப்பாக இருக்கிறோம்.பெண் ஒரு படி மேலே நினைவுகளோடு எண்ணங்களின் தொகுப்பாகவும்
இருக்கிறாள்.நான் இந்த நாவலின் வாயிலாக,பெரும் வாழ்வொன்றை வாழ்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.என்
மனுசிகள் எனக்குள் நீக்கமற நிறைந்து கிடந்த்தார்கள்.எனது மனதின் ரகசிய முடிச்சுகிளில்
கட்டுண்டு கிடந்தவர்களின் வெளியேற்றம் என்றும் கொள்ளலாம் “ என்று பெருவெளி சித்திரங்கள்
என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் தனது என்னுரையில் நூல் ஆசிரியர் சித்ரா சிவன் குறிப்பிடுகிறார்.
புதினத்தில்
பெண்களின் கதாபாத்திரங்கள்தான் மிக அதிகம். எலும்பும் சதையுமாய் நம் கண்முன்னே அந்தக்
கதாபாத்திரங்கள் வாசிக்க ,வாசிக்க உலாவுகிறார்கள். உரையாடுகிறார்கள்.உமையாள்,பவித்ராதேவி,இவர்களின்
தந்தை சேதுராமன், தாய் அன்னக்கொடி, அவரது மரணம் அதன் விளைவாக உமையாள்,பவித்ராதேவி அவர்களின்
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் எனக் கதை முதல் பக்கத்திலிருந்தே எதார்த்தமாகவும் நடப்பியலாகவும்
சூடு பிடித்துக்கொள்கிறது.பின்னர் கதைக்குள் வரும் பூங்கொடி,மல்லிகா,வசந்தமுல்லை,வாசவத்தை
என வரும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும்
அவலங்களுக்கு விடையை அவர்களே கண்டுபிடித்து நடைமுறைப்படுத்துகிறார்கள். பெண்களின் வாழ்க்கையில்
சில் நேரங்களில் மரணங்கள் கூட மகத்தான விடுதலையையும்
நிம்மதியையும் கொடுத்துவிடுகின்றன என்பதைக் கதை நன்றாகச்சுட்டிக் காட்டுகிறது.
அண்மையில் ஒரு
பேட்டியில் எழுத்தாளர் பாவண்ணன் ‘தீராத துன்பத்தை எழுதிக் கடக்கலாம் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.தனது
துன்பங்களை எப்படி எழுத்தின் மூலம் கடந்தேன் என்பதை விவரித்திருந்தார்.அப்படித் தன்னைச்சுற்றி
இருக்கும் தீராத துன்பமுடைய பெண்களின் துயரத்தை எரிக்கும் சொற்களால் எழுதி,வாசிக்கும்
பெண்களும் அந்தத் துயரங்களைக் கடப்பது எப்படி என்பதற்கு வழிகாட்டுவதுபோல எழுதியிருக்கிறார்
இந்தப் புதின ஆசிரியர்.
திருமணத்தை மதச்சடங்காக
நடத்தாமல், தமிழ் அறிஞர் புலவர் இளங்குமரன் அவர்கள் தலைமையில் தமிழ் முறைப்படி நடத்துவது,
அப்புறம் பெண்கள் தங்கள் பிரச்சனைகளுக்குப் புலம்பாமல், கடவுளிடம் சென்று தீர்த்துவை
என்று கோரிக்கை வைக்காமல் தாங்களே தீர்த்துக்கொள்வது என்று பல நேர்மறையான செய்திகள்
இந்தப் புதினத்திற்குள் இருக்கின்றன.
இந்தப் புதினத்தில்
வரும் பெண் கதாபாத்திரங்கள் . எதையும் எதிர்கொள்கிறார்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
கூடுகிறார்கள். கும்மாளமிடுகிறார்கள். தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான களத்தைத்
தாங்களே அமைத்துக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இப்படிப் பல. படிக்கும் பழமைவாதிகள்
பலருக்கும் தூக்கிவாரிப்போடும்.
அண்மையில் கெட்ட
வார்த்தை இருக்கிறது என்று சொல்லி கல்லூரிகளில் பாடமாக வைப்பதற்கு,ஒரு படைப்பை மறுத்துவிட்டார்கள்
என்று எழுத்தாளர் தோழர் பெருமாள்முருகன் எழுதியிருந்தார்.இந்தப் புதினம் பல கல்லூரி,பள்ளி
மாணவிகளிடம் சென்று சேரவேண்டும்.அப்படி அவர்கள் வாசிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக்
கொடுக்கும். அதற்குப் புதினத்திற்குள் இருக்கும் ஒரு சில சொற்களை நீக்கலாம் என்பது
என்னுடைய தனிப்பட்ட கருத்து.
“மனிதர்கள் மறந்தே
போய்விட்ட தாய்வழிச்சமூக அமைப்பை இன்றுவரை பின்பற்றுவன யானைகள். எனவேதான் யானையைப்
போன்ற பலம்பொருந்திய பெண்களின் உலகைப் பேசும் இந்தப் புதினத்திற்கு ‘அத்தினி’(பெண்
யானை) என்று தலைப்பிட்டேன்” என்று நூல் ஆசிரியர்
குறிப்பிட்டிருக்கிறார்.மிகப் பொருத்தமான பெயர். மிகச்சிறப்பான புதினம். வாழ்த்துகள்
தோழர் சித்ரா சிவன் அவர்களுக்கு. படித்துவிட்டு அவரோடு செல்பேசியிலும் பேசி வாழ்த்தினைத்
தெரிவித்தேன். ஓர் அருமையான புதினத்தை வாசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த
‘வாருங்கள் படிப்போம்’ குழுவிற்கும் ,அண்ணன் முனைவர் கோ;ஒளிவண்ணன் அவர்களுக்கும் தனிப்பட்ட
முறையில் நன்றிகள்.கிழியட்டும் பெண்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் பழம் பஞ்சாங்கங்கள்.
வா.நேரு,
12.06.2026
@மதுரை.




