Thursday, 5 March 2026

போரட்டமே இரத்த ஓட்டமாய்...!

 




 போராட்டமே இரத்த ஓட்டமாய்

                    (முனைவர் வா.நேரு)

மார்ச் 8 உலகப் பெண்கள்  நாள்.பெண்ணாகப் பிறந்ததால் மட்டுமே பல கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பெண்கள் பலர்.பெண்களை வெறும் சதைப் பண்டங்களாக மட்டும் பார்த்துஅவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக அழிக்கும் கொடுமைகள் உலகில் நடந்து கொண்டேயுள்ளனதிடீர் திடீரென்று இளம்பெண்கள்சிறுமிகள் காணாமல் போகும் நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளில் நடந்து கொண்டுள்ளன

உலகம் முழுவதும் பெண்கள்,சிறுமிகள் காணாமல் போவது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.புதுடில்லியில் ஜனவரி முதல் தேதியிலிருந்து 15-ஆம் தேதிக்குள் 509 பெண் குழந்தைகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என்று புள்ளிவிவரம் கூறுகின்றது.இதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துக் கண்டுபிடியுங்கள் என்று சொல்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகும் எண்ணிக்கை 8324. ஒவ்வொரு  நாளும் அந்த மாநிலத்தில் 23 பெண் காணாமல் போகிறார்கள் என்று மத்திய அரசின் புள்ளி விவரமே குறிப்பிடுகிறது.

அண்மையில் வெளிவந்த எப்ஸ்டீன் பைல்கள் உலகையே திடுக்கிட வைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட எப்ஸ்டீன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் இந்த உலகத்தின் பல நாடுகளின் தலைவர்கள்,ஆட்சியாளர்கள் எப்படிப்பட்ட அயோக்கியர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. மிகப்புகழ் பெற்றவர்கள் பலரின் இருண்ட பக்கங்களையும் இந்த எப்ஸ்டீன் பைல்கள் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. சிறுமிகளைக் கடத்திச்சென்று கட்டாயப் பாலியலுக்கு உட்படுத்தும் ஒருவனோடு, ஒரு கூட்டத்தோடு பலர் வைத்திருந்த தொடர்பு என்பது திடுக்கிட வைத்துள்ளது.இதற்குத் தீர்வு என்ன?,இப்படிப்பட்டவர்கள் எப்படி ஆட்சிக்கு, அதிகாரத்திற்கு வருகிறார்கள்?எப்படி ஆட்சியில்,அதிகாரத்தில் நிலைத்து நிற்கிறார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு ட்ரம்ப் சர்வாதிகார மன நிலையில் இருக்கின்றார்.பல உலக நாடுகளுக்கு வரியை தாறுமாறாக விதித்துள்ளார்.நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரிவிதிப்புத் தவறு என்று தீர்ப்பைக் கொடுத்தாலும்,1974-ல் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை வைத்து, மீண்டும் 15 சதவீத வரியை விதிக்கிறார்.திருநங்கைகளுக்கு எதிராக இருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உடன்பட மறுத்து எதிராகப் பேசுகிறார்.வெனிசுலாவின் அதிபரை ஓர் இரவில் சிறைப்பிடித்து, தனது நாட்டிற்குக் கொண்டு வருகின்றார்.இவரது பெயரும் எப்ஸ்டீன் பைல்களில் உள்ளது.  முதலாளித்துவத்தின் தலைமை நாடாக இருக்கும் அமெரிக்காவின் போக்கு, உலகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நம்மைச் சுற்றி இருக்கும் மடமை இருளைக் குறிப்பிட கறுப்பு நிறத்தில் கொடியினை வடிவமைத்த தந்தை பெரியார் அவர்கள்,தனது இறுதி இலக்காக,தாம் அடைய விரும்பும் இலட்சியம் பொதுவுடமை என்பதைக் குறிக்கச் சிவப்பு வட்டத்தை ,கறுப்புக் கொடியின் நடுவில் இடம் பெறச்செய்தார்.பொதுவுரிமையும் பொதுவுடமையும் ஏற்படவேண்டும் என்று முழக்கமிட்டார்.

பாலியல் தொழிலுக்குள் பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டும், வாழ வழியில்லாத நிலையிலும் தள்ளப்படுகிறார்கள்.முதலாளித்துவம் இதைத்தான் செய்யும். மதம் இதனை நியாயப்படுத்தும். இந்து மதச்சாத்திரத்தின் பெயரால் ‘தேவதாசிகள்’ என்னும் முறை , வயதுக்கு வருவதற்கு முன்பே சிறுமிகளைப் பொட்டுக்கட்டி, அர்ச்சகர்களும், அர்ச்சகர்கள் விரும்பும் ஆண்களுக்கு அந்தப் பெண்களை அனுப்பியும் செய்த கொடுமை போன நூற்றாண்டுவரை நிகழ்ந்த கொடுமை.அதன் வரலாற்றை,அந்தக் கொடுமை நீங்க தந்தை பெரியார் பாடுபட்டதையெல்லாம் நாம் அறிவோம். இன்றைக்கும் பல சாமியார்கள் ,சிறுமிகளைப் பலாத்காரம் செய்யும் கொடுமையும், அவர்களைப் பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுகிற சில்லறைப் பயல்களுக்கு விருந்தாக்கும் கொடுமையும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. சாமியார்கள், பெரிய பெரிய மதில் சுவர்களை அமைத்துக்கொண்டு,அதற்குள் நடக்கும் கொடுமை எல்லாம் வெளியில் தெரியாமல் இருக்க ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தொடர்ந்து மதத்தின் பெயரால் கொடுமை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பல பெண்கள் அதில் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள்..

காணாமல் போகும் பெண்களில்  நாளை நம் வீட்டுச்சிறுமிகளும் இடம்பெறலாம்.இதனைத் தடுப்பது எப்படி எனில், முதலாளித்துவச் சமூகம் என்பது பெண்ணை வெறும் சதைப்பிண்டமாகவே பார்க்கும், பாலியல் பொருளாகவே பார்க்கும்.அதனை மாற்றி ‘எல்லோருக்கும் எல்லாம் ‘என்னும் பொதுவுடமை இலக்கை நோக்கி உலகம் நடைபோடவேண்டும்.

வரலாற்றில் நாம் படிக்கின்றோம். போரில் வென்ற மன்னர்கள் செய்யும் முதல் செயல், தோல்வியுற்ற நாட்டில் இருக்கும் பெண்களைக் கொடுமைப்படுத்துவது,பாலியல் பலாத்காரம் செய்வது. அன்று முதல் பெண் என்பவள் போகப்பொருளாகவே கருதப்படுகிறாள், நடத்தப்படுகிறாள். அடிமைப்படுத்தப்படுகிறாள்.

உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ,மூன்று பெண்களில் ஒருவருக்கு நடப்பதாகப் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது/ உடல் ரீதியான வன்முறை,மன ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை,இணைய வழியிலான வன்முறை என்று பெண்களை இந்த ஆண்களின் உலகம் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது.அண்மையில் மத அடிப்படையில் அமைந்த ஆப்கானிஸ்தான் அரசின் நீதிமன்றம்,காயம் இல்லாமல் பெண்களை அடிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மதமற்ற,சாதியற்ற ஒரு பொதுவுடமை உலகமே பெண்களுக்கு முழுப் பாதுகாப்பைத் தர இயலும். ஆனால் அந்தப் பொதுவுடமை உலகுக்கு எதிரான கருத்துகளை மதமென்னும் போர்வையில் தொடர்ச்சியாக மதவாதிகள் பெண்களிடம் பரப்பிக்கொண்டுள்ளனர்,.அதற்குப் பெண்களும் பலியாகின்றனர்.மதமே பெண் அடிமைத்தனத்திற்கு அடிப்படை என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி கடவுள் மறுப்பு வாசகங்களை உலகுக்குக் கொடுத்தார்கள்.

பெண் விடுதலை என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.ஆண்கள் தங்களுக்காக அமைத்துக்கொண்ட உலகத்தில் பெண்களை வெறும் சதைப் பண்டங்களாகவே இன்று வரை வைத்துள்ளனர்.தங்களுக்கு எதிரான செயல்பாடுகளைப் பெண்கள் உணர்வதும்,அதனை எதிர்ப்பதற்குத் தங்கள் குழந்தைகளுக்கு இளம்வயது முதலே அந்த உணர்ச்சியை ஊட்டுவதுமே எதிர்கால உலகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பாக ஆக்கும்.அதற்குப் பெண்களின் மத்தியில் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைக் கொண்டு செல்லவேண்டும்.

‘அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாமல் அநீதி களைய முடியாது ‘ .இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, இதுதான் செயல்முறை.போராட்டம் இரத்த ஓட்டமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். ‘கடவுள் நம்மை ஆண்களுக்கு அடங்கி நடக்கத்தான் படைத்தார் ‘ என்னும் எண்ணம் பெண்கள் மனதில் இருந்து நீங்கி, நாமும் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற எண்ணம் ஓங்கவும், அநீதிகளுக்கு  எதிராகப் போராடவும் ,’பெண்ணே, பெண்ணே,போராடு பெரியார் கொள்கையின் துணையோடு’ என்னும் முழக்கத்தை ஒலிக்கும் நாளாக மார்ச் 8 ,உலகப் பெண்கள்  நாள் அமையட்டும். 

அனைத்துப் பெண் தோழர்களுக்கும் இனிய உலகப் பெண்கள் நாள் வாழ்த்துகள்.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் 1-15,2026




Monday, 23 February 2026

உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையில்...நூல்கள் அரங்கேற்றம்


நன்றி : தினமணி நாளிதழ்,மதுரை.



நான் 'நூல்களின் பாதையில் ஒரு பயணம் ' என்னும் நூல் பற்றி  உரையாற்றுகிறேன்...நூலின் ஆசிரியர் எழுத்தாளர் பிரேமா இரவிச்சந்திரன் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்...

 


 கவிஞர் பொன்.விக்ரம்(ம்துரை ) அவர்கள் எனக்குத் துண்டு அணிவித்து, தன்னுடைய 'சொற்களுக்குள் நெளியும் உயிர்' என்னும் கவிதை நூலை எனக்கு அளித்தபோது



 நூல்கள் அரங்கேற்றத்தில்  பங்கேற்ற நூல் ஆசிரியர்களும், மதிப்புரையாளர்களும்... செல்வி மு.முத்துமீனா, கவிஞர் மதுரகவி,மேனாள் பள்ளி முதல்வர் கு.வள்ளியம்மை,  நான்(வா.நேரு), எழுத்தாளர் பிரேமா ரவிச்சந்திரன், எழுத்தாளர் ஆசிரியர் சரவணன், ஆசிரியர் ரெ.சிவக்குமார்

மதுரை இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கவிஞர் மூரா அவர்களுடன்




Sunday, 15 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்... பாலகுமார் விஜயராமன்

 

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்

( ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2025- குறும்பட்டியல்)

ஆசிரியர் : பாலகுமார் விஜயராமன்

வெளியீடு : எழுத்து பிரசுரம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

மொத்தம் 222 பக்கங்கள் விலை ரூ 270

இந்த நாவலைப் படித்து முடித்தபொழுது, ஒரு சினிமாப்படத்தைப் பார்த்து முடித்ததுபோல் இருந்தது.அவ்வளவு கச்சிதமாகச் சொற்களால் விவரிக்கப்பட்ட ,காட்சியாகக் காட்டப்படுகிற நாவலாக இந்த நாவல் இருக்கிறது.தனஞ்சயன் என்னும் தனா,கணக்குக்கு அஞ்சி நடுங்கிப் பின்பு கணக்குப் புலியாகும் சுயோதன்,கோவையிலிருந்து போடி கல்லூரிக்கு சமூகப்பணிக்காக வரும் கல்லூரி மாணவி நித்யா என்று அறிமுகமாகும் கதாபாத்திரங்கள்,கதை ஓட்டத்தில் கச்சிதமாகப் பொருந்தி நிற்கிறார்கள்.




தொலைபேசித்துறையில் பொறியாளராகப் பணியாற்றும் பாலகுமார் விஜயராமன் அவர்கள் தன்னுடைய பொறியியல் அனுபவம், மென்பொருள் அனுபவம், மாணவ மாணவியர்களுக்கான புராஜக்ட் அனுபவம் என்று அனைத்தையும் இணைத்து உயிரோட்டமாக இந்த நாவலைப் படைத்துள்ளார்.எல்லாமே எதார்த்தமாக ,இயல்பாக இருக்கிறது.

 நான் தொலைபேசித்துறையில் 1995-2000ம் களில் வேலைபார்த்தபொழுது, மதுரையில் திரு. மாதீரன் அவர்கள் தொலைபேசி மேற்பார்வையாளராக இருந்தார்.படித்தது அந்தக்கால எஸ்.எஸ்.எல்.சி. என்றாலும் அவருக்குக் கணினியின் மேல் இருந்த ஆர்வம் மிகப்பெரியது, அவர் ஃபாக்ஸ்பேசில்  எழுதிய புரோகிராம்தான் மதுரை மாவட்டம் முழுவதும் இருந்த தொலைபேசி நிலையங்களில் சில ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது அதுபோலத் தானாக ஆர்வத்தால் உருவாகும் கணினி புரோகிராமர் தனா கதாபாத்திரம் அருமை..


இந்த நாவல் ஆசிரியர் எழுத்தில் பிரமாண்டமாய் வளர்ந்தோங்கி நிற்கிறார்.அவர் எடுத்திருக்கும் கதைக்களம் நாம் அக்கம்பக்கம் பார்க்கும்,கேட்கும் ஆன்லைன் சூதாட்டம்,அதனால் பாதிக்கப்படுபவர்கள், அந்தச் சூதாட்டம் எப்படி வடிவமைக்கப்படுகிறது,அந்தச் சூதாட்டம் நடத்துபவர்களின் வலிமை என்ன?,எப்படி பிரமாண்டமான கட்டிடங்கள் வழியாக நடைபெறுகிறது,அதற்கு அரசியல்வாதிகள் எப்படிப் பணம் வாங்கிக்கொண்டு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள்  என்பதை எல்லாம் அற்புதமான கதை ஓட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை என்னும் பெயரில் தனாவுக்கு ஏற்படும் அனுபவம் ,வாசிக்கும் அனைவருக்கும் படிப்பினையாகவும் இருக்கும். தனா , நான் தான் தப்புச்செய்யவில்லையே, நான் ஏன் பயப்படவேண்டும் என இருக்கும் நிலையில் அவருக்கு ஏற்படும் துயரம் ,அதில் இருந்து அவர் தப்பிக்கும் இடமும் கதையின் மிக விறுவிறுப்பான பகுதி.

சில அத்தியாயங்கள் மட்டும் வந்தாலும் மரியா கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.மரியாவின் தற்கொலையே இந்த நாவலின் திருப்புமுனையாகவும்  அமைகிறது.அதுபோலச் சுயோதன் பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்றி, பொறுக்கமுடியாமல் தனது வேலையை விடும் மாயந்தி…சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் மிகக் கவனமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுயோதன் ,தனது வாழ்க்கைக்கு அத்தனை வசதி கிடைத்தாலும் நாம் செல்லும் வழி தவறு,சமூகத்திற்கு எதிரானது  என்பதை உணர்ந்து மாறுவதும் அதன் தொடர்ச்சியாக அவனது செயல்பாடுகளும் மிக நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்.

வெறுமனே ஒரு நாவலாக இல்லாமல், இன்றைக்குச் சமூகத்தின் புற்று நோயாக மனிதர்களை அழித்துக்கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டம் பற்றி விரிவாக எழுதி இருப்பதற்குப் பாலகுமார் விஜயராமன் அவர்களை எவ்வளவு பாரட்டினாலும் தகும். இன்றைக்குக் கல்லூரிகளில் இருக்கும் மாணவ,மாணவிகளிடம் மற்றும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள எல்லோரிடமும் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். மலையாளத்தில் ஜோஸ் பாலுக்காரன் எழுதிய ‘அரிவாள் ஜீவிதம் ‘ நாவல் பலரின் வாழ்க்கை அரிவாள் ஜீவிதம் நோயிலிருந்து மீள்வதற்கு  வழி வகுத்தது போல ஆன்லைன் சூதாட்ட நோயில்  இருப்பவர்கள் மீள்வதற்கான நாவல் இந்த நாவல். இந்த நாவல் நிறையப் பேரிடம் போய்ச்சேரவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு,பணமிழந்து தற்கொலை செய்து கொண்ட உறவினர் வீட்டிற்கு, திருநெல்வேலியில் நானும் எனது மனைவியும் போனோம். அவ்வளவு அமைதியானவர்,பண்பானவர்,எப்படி இந்தச் சூதில் ஈடுபட்டார் ,இழந்தார்,இறந்தார் என்பது புதிராக இருக்கிறது என்று இறந்தவரின் மனைவி புலம்பியது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.இந்த நாவலைப் படித்தபொழுது எப்படிச் சிக்கி இருப்பார் என்பது புரிந்தது. இன்னும் நம்மைச்சுற்றி பலர் இந்தச் சுழலுக்குள் சிக்கி இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.அவர்களுக்கெல்லாம் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். சினிமாவாக எடுப்பதற்கு அத்தனை கூறுகளும் உள்ள இந்த நாவல் சினிமாவாக எடுக்கப்பட்டால், இந்த ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவிற்கு மக்களுக்குப் போய்ச்சேரும். சீட்டு என்று மட்டும்அல்ல ஆன்லைன் தாயம் என்றாலும் அலர்ட்டாக இருக்கவேண்டும் என்னும் படிப்பினையைக் கொடுப்பதாக நாவல் முடிகிறது.

விருது ,பரிசு என்பதையெல்லாம் தாண்டி, இந்தச் சமூகத்தில் நடைபெறும் ,ஓர் அவலத்தை,அந்தத் துறையைப் பற்றிப் புரிந்தவர் என்கிற முறையில் அற்புதமாகப் படிக்கும் எவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நாவலைக் கொடுத்திருக்கிறார். அதுவே மிகப்பெரிய பரிசுதான். இந்த நாவலைப் படித்தேன், ஆன்லைன் சூதிலிருந்து விடுபட்டேன் என்று சிலர் சொன்னாலே ,அது பாலகுமார் விஜயராமன் அவர்களுக்குச் சாகித்ய அகாதமி விருது  கிடைத்தது போலத்தான்.

“ராசி,தூசி எல்லாம் ஒண்ணும் இல்ல. நீ செய்ற விஷயம் சரிதான்னு உன் மனசுக்குத் தோணுதுல.அதுலயே தொடர்ந்து முயற்சி பண்ணு.ரிசல்ட் எங்கே போகப்போகுது. கண்டிப்பா ஒரு நாள் வந்தே தீரும்” இந்த நாவலில் பக்கம் 92-இல்




மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் இப்படிப்பட்ட ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு…தொடர்ந்து  எழுதுங்கள் .

தோழமையுடன்

வா.நேரு,15.02.2026

 

 

Friday, 13 February 2026

ஜாதி நோய் போக்கும்..ஆதலினால்காதலிப்பீர்…

 

ஜாதி நோய் போக்கும்..ஆதலினால்காதலிப்பீர்…


காதலா ?
அய்யோ
கூடாது கூடாதென
கூக்குரல்
எழுப்புகிறது
ராமசேனைக் கூட்டம்


காமத்தை
மட்டுமே
கடவுளின் பண்பாய்க் காட்டி
கதை புனைந்து
காசு பறித்தவர்கள்!


நாங்கள்
கலாச்சாரக் காவலர்கள்
எனும் முகமூடியோடு
கைகளில்
காட்டுமிராண்டிக் கால
ஆயுதங்கள் ஏந்தி
மங்களூர் நகரில்

நகர்வலம் வந்திருக்கின்றார்கள்
கவனம் ! கவனம் !


ஆண் பெண் உடலுறவை

 விதவிதமாய் விவரிக்கும்

 சிற்பக் கூடங்களாய்

 கோவில்கோபுரங்களை

 அமைத்தவர்கள்


இன்றைக்கும் அதனை

பத்திரமாய் வர்ணம்

பூசி கும்பாபிசேகம்

செய்து வைப்பவர்கள்

 

கோபியர் கொஞ்சும்

குமணா என்று

அறுபதினாயிரம் மனைவியர்

கடவுள் கண்ணனுக்கு

என்று பட்டியலிட்டவர்கள்

 

ராமனொரு கடவுள்
அவன் அப்பன் தசரதனுக்கு

அறுபதினாயிரம் மனைவியர்

மற்றும் மூன்று

பட்டத்தரசிகள் என்றவர்கள்….

இவள்
அய்வருக்கு மனைவி
ஆனாலும் கிட்டாமல்

போன கர்ணன் மேலும்

ஒரு கண் இருந்தது
என்று பத்தினி திரவுபதிக்கு!

பட்டியலிட்டவர்கள்….

பண்பாடு என்பதும்

ஒருவனுக்கு ஒருத்தி
என்று இவர்கள்

சொல்வதெல்லாம்

வெறும் சொல்

என்பதை நாம் அறிவோம்
ஜாதிக்கட்டமைப்பு
குலையக்கூடாது

 என்றான் மனு

 கலப்புத் திருமணங்கள்

 நடக்கக்கூடாது

 என்றான் மனு

 மீறி நடந்தால்

கடுமையாகத்
தண்டிக்கவேண்டும்

என்றான் அவன்

மனு அதர்மத்தை
நடைமுறைப்படுத்த

துடிப்பவர்கள்

இவர்கள்

கோட்சேயின் வாரிசுகள்

இவர்கள் காதலின்
கலப்பு மணத்தின்
எதிரிகள் இவர்கள்

ஒரு ஆணும் பெண்ணும்

நட்பு கொள்வதோ
காதல் கொள்வதோ

அவ்விருவர் மட்டுமே

 சம்பந்தப்பட்ட விசயம்

மூன்றாவது நபராய்
மூக்கை நுழைப்பதற்கு
எவனுக்கும்

அருகதை இல்லை

காதல் வலு
சேர்க்கும்
காதல் சமூகத்தின் 

ஜாதி நோய் போக்கும்...
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும்! 

ஆதலினால்
காதலிப்பீர்.



---------------- ப.க.தலைவர் - வா நேரு அவர்கள் 14-2-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியது.

நன்றி: தமிழ் ஓவியா இணையதளம்

 

Sunday, 8 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை...முனைவர் சு.சோமசுந்தரி

 

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை

ஆசிரியர்                    : முனைவர் சு.சோமசுந்தரி

வெளியீடு     : கவியமுது பதிப்பகம், திருநின்றவூர் ,9283275782

முதல்பதிப்பு : அக்டோபர் 2025,மொத்த பக்கங்கள் 154, விலை ரூ 150

சில்லாட்டை என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 25 கதைகள் உள்ள தொகுப்பு. இன்றைக்குத் தமிழ்நாட்டில் நிறையப் பெண்கள் உயர் கல்வி படித்திருக்கிறார்கள்.சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்பு பெண்கள் பலர் எழுதுகிறார்கள்.தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை உள்வாங்கி ,சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அதனைப் படைப்பாக மாற்றித் தருகிறார்கள்.அந்த வகையில் முனைவர் சு.சோமசுந்தரி அவர்களின் முதல் படைப்பாக வெளிவந்திருக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு பாராட்டுக்குரியது.



தனது என்னுரையில்  இந்த நூலின் ஆசிரியர் முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் ‘ நமக்குள்ளிருக்கும் மன இறுக்கங்களை உடைப்பதற்கான வழியாக எழுத்தும் வாசிப்பும் இருக்கிறது.இதைப் படிக்கும் எல்லோரும் உணரமுடியும். நான் எழுத ஆரம்பித்த பிறகுதான் எனக்கான வெளி திறந்ததுபோல உணர்ந்தேன்.எனக்கான சிறகுகள் விரிய ஆரம்பித்தன. “ என்று குறிப்பிடுவது சிறப்பு.

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் சிறுகதை ‘அத்துமீறல்’.அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் அத்துமீற நினைக்கும் அவரது மேல் அதிகாரிக்கும் அந்தப்பெண்ணுக்குமான போராட்டத்தை விவரிக்கும் கதை.அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஒரு வழிகாட்டல் போலக் கொடுத்திருக்கிறார்.’தவறுகள் குற்றங்கள் அல்ல ‘ என்னும் சிறுகதையில் ,அத்து மீறி தவறு செய்யும் ஆண் அதிகாரி பேசுவதாக அந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதியிருப்பார்.இந்தக் கதையில் பெண் பேசுவதாக வருகிறது.

மறைந்த போன அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிரும் கதையாக ‘அப்பா ‘ என்னும் கதை இருக்கிறது. நிறைய நினைவுகளைச் சொல்லும் கதை.25 கதைகளையும் ஓரிரு நாளில் படித்து முடித்தேன்.

இந்த 25 கதைகளில் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்கள்.எவரும் அந்நியமாகத் தெரியவில்லை.பெரும்பாலான கதைகளில் பெண்கள் எப்படி எல்லாம் இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையே விவரிக்கின்றன. சில்லாட்டை என்னும் கதைத் தலைப்பில் அமைந்த கதையும் கூட ஒரு பெண்ணின் அவலத்தையே சொல்கிறது.

“ சிறிய வடிவத்தில் இருந்தாலும் ஒரு முழுமையான உணர்வையும்,நடைமுறையையும் வாசகருக்குச் சிறுகதை மூலம் யதார்த்தமாகப் பெண்ணியலை,சமுதாய நிகழ்வுகளை,கதைகளாக மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துள்ளார் ஆசிரியர் “ என்று அணிந்துரையில் முனைவர் பேரா வே.பூங்குழலி பெருமாள் குறிப்பிட்டிருப்பது உண்மை.

“ அனுபவங்களை ஒவ்வொரு சூழலுக்கேற்ப நகர்த்திச்செல்லும் ஆசிரியரின் கதை சொல்லல் உண்மையிலேயே வசீகரிக்கிறது.பெண்பாத்திரங்கள் கொஞ்சம் உறுதிமிக்கவர்களாகவும் காட்டியுள்ளார் “ என்று அணிந்துரையில் முல்லை அமுதன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இவர் படைத்திருக்கும் இந்த 25 கதைகளின் தொடக்கமுமே இயற்கை வர்ணனையாக இருக்கிறது. இதனை “ஓவ்வொரு கதையின் தொடக்கத்திலும் இயற்கை வர்ணனை.அவை நம்மை நிலவோடு கட்டிப்போடுகின்றன.புல்லின் நுனியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பனித்துளியில் முகம் பார்க்கவைக்கின்றன” என்று கவிஞர் விஜயகிருஷ்ணன் மகிழ்வுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.



இயல்பான கதைகள். இன்றைய நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள்தான் பல கதைகளின் மையக்கரு.’குளியலறை விபத்துகள்’ என்னும் கதை மட்டும் நான் வாசிக்கும்போது கொஞ்சம் நெருடலைக் கொடுத்தது. தற்செயலாக நடப்பது ,அப்படியே நடக்கும் என நம்புவதே மூட நம்பிக்கை என்பது என் கருத்து.

கதை சொல்லல் கச்சிதமாக இருக்கிறது.கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களாகக் கதைகளில் கொடுத்திருக்கிறார்.அளவான விவரிப்போடு கதைகளை நகர்த்திச் செல்கிறார். தொடர்ந்து இவர் நிறையச் சிறுகதைகளை எழுதி வெளியிடலாம்.இன்னும் விரிவாகக்கூடச் சில கதைகளை இவர் விவரித்து எழுதலாம். படித்துப் பாராட்ட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. எழுத்துப்பிழைகள் இல்லாத பதிப்பு. முதல் சிறுகதைத் தொகுப்பை அருமையாகக் கொண்டு வந்திருக்கும் தங்கை முனைவர் சு.சோமசுந்தரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Saturday, 7 February 2026

பாம்புக் கடியும் சிகிச்சை முறையும்...முனைவர் வா.நேரு

 

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படித்துப் பார்த்து பாராட்டிய கட்டுரை....








நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் பிப்ரவரி 1-15,2026