Monday, 27 July 2026

அண்மையில் படித்த புத்தகம் : ஒற்றைப்பல் ( நாவல்)

 

அண்மையில் படித்த புத்தகம் : ஒற்றைப்பல் ( நாவல்)

ஆசிரியர் : கரன் கார்க்கி

வெளியீடு டிஸ்கவரி பேலஸ்,,சென்னை-78.

முதல் பதிப்பு : 2016

,மொத்த பக்கங்கள் 184 ,விலை ரூ 160

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எண் : 894.8113.KAR;1

ரு நாவலின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திடுவது அதன் கதாபாத்திரங்கள்தான்.அந்த வகையில் மறக்கவே இயலாத கதாபாத்திரங்களை-  கோயில்தாஸ் என்ற கிழவன், சாரதா லீனா மேரி என்ற சாரதா,குஷ்பூ என்னும் மூவரைப் படைத்திருக்கிறார் இந்த நாவல் ஆசிரியர். குழப்பமான மன நிலையில் இருக்கும் கிழவனைப் பற்றிய விவரிப்போடுதான் நாவல் தொடங்குகிறது.சென்னையின் தெருக்கள், இடங்கள் என்று விரியும்  நாவல் குஷ்பூ என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறபோது,சென்னையின் விளிம்பு நிலை மக்கள் வாழும் வீடு என்று சொல்லப்படும் மூடிய திரைகளைக் கொண்ட குடிசைகளைப் பற்றியும் அங்கு இருக்கும் வாழ்நிலை பற்றியும் இரத்தமும் சதையுமாக விவரிக்கிறது.




எந்த நாவலிலும் நான் படிக்காத சென்னையில் வசிக்கும் அன்றாட உழைத்து உண்ணும் மக்களைப் பற்றிய விவரிப்பு நாவல் முழுவதும் இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் மனித நேயமும், உதவும் மனப்பான்மையும்,எதார்த்தத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் , அடிகளும்,மிதிகளும் அதைத் தாண்டி நிற்கும் அன்பும் பரிவும்கரன் கார்க்கி வேறு ஒரு உலகத்தைத் தன் எழுத்தின் மூலம் நமக்குப் படைத்துக் காட்டியிருக்கிறார்.

கடவுள் மூலமாக வாழ்க்கையைப் பார்ப்பவன்கோயில்தாஸ் என்றால் வாழ்க்கையின் மூலமாகக் கடவுள் என்னும் ஏற்பாட்டைப் பார்ப்பவளாகச் சாரதா..சாரதாவின் மன நிலையில் கடவுளைப் பற்றி ஏற்படும் சந்தேகம், கடவுளைக் கும்பிடுகிறவர்களின் வேறுபட்ட தன்மைகள்,நடவடிக்கைகள், மெல்ல மெல்ல அந்தக் கடவுள் என்னும் கருத்திலிருந்து மாறுபட்டு, கடவுள் இல்லை என்னும் முடிவுக்கு வருவதை அருமையான கதையாக ஆக்கியுள்ளார்.கிறித்துவ மதத்தில் அளவுக்கு மீறிய பற்றுதல் கொண்டு பின்பு எழுந்த கேள்விகளுக்குப் பதில்களை உறவுகளிடம் தேடி,அது கிடைக்காமல் நாத்திகராக மாறி தொடர்ந்து பதிவிடும் அமெரிக்கன் கல்லூரி மேனாள் பேராசிரியர் தருமி அவர்கள் எனக்கு நினைவுக்கு வந்தார்.

சாராதாவுக்குக் கடவுள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அதை  ஓங்கி ஒலிக்காமல் தன் கணவன் கோயில்தாஸிடம் மட்டும் அவ்வப்போது வெளிப்படுத்தும் உரையாடல்களால் வெளிப்படுத்துவது அருமை.மிக நுட்பமாக அவளின் உணர்வுகள், நடவடிக்கைகளில் கடவுள் என்னும் கருத்து பற்றிய மாற்றங்களை அற்புதமாக இலக்கியமாக வடித்துக்கொடுத்துள்ளார் நாவல் ஆசிரியர்.சாரதா என்னும் கதாபாத்திரம் பற்றியே நிறைய எழுதலாம். ஆனால் நீங்கள் வாசித்துப்பார்க்கவேண்டும்.வாசிப்பதன் வாயிலாக எழுத்துகளின் வழியே அந்த உணர்வைப் பெறவேண்டும் என்பதால் நான் நிறைய விவரிக்கவில்லை.

அன்பை மட்டுமே வாழ்க்கையில் செலுத்தத் தெரிந்தவனாக, நாவல் முழுக்க முழுக் கடவுள் நம்பிக்கையும் , கடவுளுக்குத் தொண்டு செய்யும் ஒரு சேவகனாகவும் மட்டுமே வரும் கோயில்தாஸ்.வாயில் எச்சில் ஒழுகும் அவனது தோற்றம்,சாரதாவின் மேல் அப்பழுக்கற்ற அன்பைச்செலுத்தும் அவனது உள்ளம், கடவுள் பற்றிச் சாரதா சொல்வதால் ஒரு நிமிடம் சிந்தித்து , பின்பு அதைத் தாண்டி கடவுள் சேவகம் செய்யும் கோயில்தாஸ்.’கடவுளின் தோட்டத்தில் பூப்பறிக்க எனது சாரதாவை அழைத்துக்கொண்டாயே, என்னை அழைத்துக்கொள்ள மாட்டாயா கடவுளேஎன்று கடவுளிடம் வேண்டும் கோயில்தாஸ், வெவ்வேறு இடங்களுக்கு மறதியால் சென்று மாட்டிக்கொள்ளும் கோயில்தாஸ், தனது வாயில் இருக்கும் ஒற்றைப்பல்லால் தொடர்ந்து வலியைச் சந்திக்கும் கோயில்தாஸ், அவனுக்குப் பணிவிடை செய்யும் அவனது மகன், அவனது மருமகள் என்று பெரும்பாலும் இந்த நாவல் கோயில்தாசைச் சுற்றியே சுழல்கிறது.

 நன்றியுடன்என்னோடு கடந்த காலங்களில் உரையாடிய, நிகழ்காலத்தில் உரையாடுகிற,எதிர்காலத்தில் உரையாடப்போகிற முதியவர்களுக்கு …’  என்று இந்த நூலின் முதல்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நாவல் ஆசிரியர். முதிய வயதில் இருக்கும் கோயில்தாஸை விவரிப்பதன் மூலமாக நம் வீடுகளில் முதியவர்கள் இருந்தால் அவர்களை எப்படிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்னும் அக்கறை கலந்த எழுத்தும் இந்த நாவல் முழுக்க இருக்கிறது. மறதியால் அவதியுறும் கிழவனைக் குஷ்பு எப்படிக் கவனித்துக்கொள்கிறாள், உணவு கொடுக்கிறாள், அவனைக் கூப்பிட்டுக்கொண்டு பல் மருத்துவமனைக்குப் போகிறாள் என்பதைப் பற்றியெல்லாம் விவரிக்கும் விவரிப்பு உள்ளத்தைத் தொடுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத்திற்கு வருகிறார் என்று சொன்னவுடன், விளிம்பு நிலை மக்கள் வாழும் இடத்தை எல்லாம் மறைப்பு போட்டு மறைத்து வைத்து காட்டினார்கள் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள். ஆனால் அவர்களின் வாழ்விடத்தை,ஒரு தடுப்புக்குள்ளேயே அனைத்தும் நடைபெற வேண்டிய அவலத்தை, குஷ்புவின் உச்சகட்ட இலட்சியமே ஒரு கழிப்பறையும் படுக்கையறையும் இருக்கும் வாடகை வீட்டிற்குக் குடிபோகவேண்டும் என்பதே என்பதைக் காட்டுவதின் மூலமாக உழைக்கும் மக்களின் வேதனையை விவரித்து,உலகம் முழுக்கப் படிப்பவர்களின் மனதைத் தொடும் வண்ணம் எழுதியிருக்கிறார் கரன் கார்க்கி.

 நாவலின் முதல் சில பக்கங்கள் மெதுவாக நகர்கிறது. ஆனால் அதற்குப் பிறகு வாசிக்க, வாசிக்க ஈர்ப்பும் வியப்பும் ஏற்படும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த நாவலைப் படித்து முடித்த இரவு முழுக்க இந்த நாவல் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இரு வேறு உலகமாக இருக்கும் இந்த இந்தியா, என்று ஒன்றாகும்?,எல்லோரும் சமமாக,எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பது எல்லாம் எப்போது நடக்கும் என்று எண்ணம் ஓடியது.

கோயில்தாஸ் போன்றவர்கள், கடவுளைப் பற்றிய அதீத நம்பிக்கையால் ,கடவுள் ஒரு நாள் வருவார் என்று எதிர்பார்ப்பவர்கள் நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள். பொய்யை உண்மையாக நம்பும் அவர்கள் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளார் கரன் கார்க்கி.

‘நன்றியால் நெகிழ்கிறேன்’ என்று தன்னுடைய என்னுரையைக் கரன் கார்க்கி கொடுத்திருக்கிறார். தன்னுடைய குழந்தைப் பருவம், பாலியப் பருவம், கதை எழுதுவதற்கு முன் இருந்த பருவம் என்று பல பருவங்களைப் பட்டியலிட்டு, இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உருவாகக் காரணமானவர்கள் யார் என்பதைக் குறிப்பிட்டு இருக்கிறார். அற்புதமான என்னுரை..துளியும் பம்மாத்து இல்லை.

மாக்சிம் கார்க்கியின் நூல்களைப் படித்து எனது பெயரை கரன் கார்க்கி என்று மாற்றிக்கொண்டேன் என்று இந்த நாவல் ஆசிரியர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். உண்மைதான். தமிழ் நாட்டின் மாக்சிம் கார்க்கி- தோழர் கரன் கார்க்கி என்று தாராளமாக நாம் குறிப்பிடலாம்.வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர்,எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களுக்கு. நாவலை வாசிக்காதவர்கள் கட்டாயம் ஒருமுறை நாவலை வாசித்துப்பாருங்கள்.வறுமையும் பிணியும் வதைக்கும் நிலையிலும் அன்பை மட்டுமே செலுத்த தெரிந்த அந்த அற்புத மனிதர்களை, மனுசிகளைப் புரிந்து கொள்ள இந்த நாவலின் வாசிப்பு மிகவும் உதவும். உலக இலக்கிய வரிசையில் வைக்கப்படவேண்டிய நாவல் இது. படிக்கப்பட வேண்டிய நாவல் இது.


வா.நேரு, 28.07.2026

@ மதுரை.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

 

Tuesday, 14 July 2026

அண்மையில் படித்த புத்தகம் : அதிகாரம் ( நாவல்)...எஸ்.அர்ஷியா

 

அண்மையில் படித்த புத்தகம் : அதிகாரம் ( நாவல்)

ஆசிரியர் : எஸ்.அர்ஷியா

வெளியீடு : எதிர் வெளியீடு,பொள்ளாச்சி . செல்: 9942511302

முதல் பதிப்பு : ஜூன் 2016, 200 பக்கம், விலை ரூ 180

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எண் : 894-8113 ARS ;1




 

தோழர் எஸ்.அர்ஷியா நினைவில் வாழும் எழுத்தாளர். அவரோடு படித்த அண்ணன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் அடிக்கடி அவர் பற்றிக் குறிப்பிடுவார். நான் மதுரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொதுமேலாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களைப் பார்க்க எஸ்.அர்ஷியா வருவார்.அப்போது அறிமுகமாகி அவரோடு சிலமுறை பேசியிருக்கிறேன். தோழமை கலந்த உரையாடலாக அவரின் உரையாடல்கள் இருக்கும்.

அதிகாரம்என்னும் இந்த நாவலைப் படித்தபோது ,அவர் எவ்வளவு விமர்சனப்பார்வையும், சமூகத்தின் மீதான அக்கறையும் உள்ளவர் எனத் தெரிந்தது.’ அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாது , அநீதி களைய முடியாதுஎன்பது தொழிற்சங்க முழக்கம். அப்படி ஒன்றுகூட முடியாதபோது, கண் முன்னே நிகழும் அநீதிகளை எழுத்தின் வழியாகப் பதிவு செய்வதும் ஒரு மிகப்பெரிய போராட்டம்தான். அந்த வகையில் காவல்துறை குறித்த, தன் மீது வன்முறை நிகழ்த்தப்படலாம் என்பதை உணர்ந்தபின்பும் அச்சமின்றி இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்பதை வாசிப்பின் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

மதுரை மாவட்டத்தில் இருக்கும்  ஒரு ஊர் மேலூர். அங்கிருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷன். அங்கிருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் மணிமாறன். அங்கிருக்கும் காவலர்கள், ஏட்டையாக்கள், பெண் போலீஸ்கள், எஸ்.ஐ.கள், புதிதாகப் பணிக்கு வந்துள்ள ஒரு பெண் எஸ்.ஐ. திவ்யா என்று முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ஸ்டேஷனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கதை.நிகழ்ந்த கதையாக இருக்கலாம் அல்லது நிகழப் போகின்ற கதையை ஏற்கனவே சொல்லிவிட்டாரோ என்று நினைக்கக் கூடிய அளவிற்கு எழுதப்பட்டுள்ள ஒரு நாவல்.

அதிகாரம் என்பது எப்படிக் கட்டமைக்கப்படுகிறது. எளிய மனிதர்கள் மேல் அவ்வளவு அதிகாரம் செலுத்தும் போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள், நீதிமன்றத்திற்கு உள்ளே போகும்போது எப்படி அவமதிப்பு உருவாகிறார்கள், அதனை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் பேசக்கூடிய ஒரு நாவலாக இந்த நாவல் இருக்கிறது.

காணாமல் போன பவளம் என்றொரு பெண். அவளுக்குக் கணவன் இருக்கிறான், ஒரு குழந்தை இருக்கிறது. பெற்றோரால் உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக தனது தாய்மாமன் சங்கரநாதனுக்கு கட்டி வைக்கப்பட்டப் பெண்ணான பவளத்தைக் காணவில்லை என்பதில் இருந்துதான் கதை தொடங்குகிறது. பவளம் கவிதை எழுதுகிறாள்..ஏற்கனவே கல்யாணமான ஒருவனோடு காதல் கொள்கிறாள். தான் ஆசைப்பட்டவனை வரைந்து வைக்கிறாள் அவனோடு பேசிய சில தருணங்களை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறாள். ஆனால் எப்படிப்பட்ட எதிர் விளைவுகள் வரும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டை விட்டு ஓடி அதனால் சில துன்பங்களை சந்திப்பவளாக இந்த நாவலில் பவளம் வருகிறாள்.

முஜம்மின் என்னும் கதாபாத்திரம் மிக வலுவாக இந்த நாவலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. திடீரென உன்னைக் காதலிக்கிறேன் என்று வந்து நிற்கும் பவளத்திடம் இல்லை நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டு எப்போதும் போலத் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்வதற்கு முஜம்மின் சென்று விடுகிறார் ஆனால் பவளத்தின் வீட்டில் அவளின் டைரியில் இருந்த வரையப்பட்ட முஜம்மின் உருவம், போலீசை அவனை நோக்கி விசாரணையை திசை திருப்ப வைக்கிறது. மிக இயல்பாக விசாரணை என்று சொன்னவுடன், தன்னுடைய பேரன் முஜம்மினை, இன்ஸ்பக்டரின் வந்து ஒப்படைக்கும் அவனது தாத்தா,அவரது இறை நம்பிக்கை, போலீசின் கொடுமையான விசாரணை,அதன் விளைவாக முஜம்மின் மரணம் என்று இந்த நாவல் நடப்பு போலீஸ் நடவடிக்கைகளை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துக் காட்டுகிறது.

மனதில் ஈரம் இருக்கும் இரண்டு போலீஸ் எஸ்.ஐ-க்களாக திவ்யாவும்,கடம்பனும் காட்டப்படுகிறார்கள். காவல்துறைக்குள் இருக்கும் அவர்கள் எப்படி பந்தாடப்படுகிறார்கள் என்பதை  இயல்பாக அர்ஷியா எழுதிச்செல்கிறார். பெண் காவலர்கள் படும் பாட்டைப் பற்றி விரிவான விவரிப்பு இருக்கிறது.

நாவல் முழுவதும் பகடி இருக்கிறது.எத்தலும் குத்தலும் அதிகாரத்தை நோக்கி இருக்கிறது.தனது மதத்தைப் பற்றிய விமர்சனம் இருக்கிறது(பக்கம் 102).எப்படி காவல்துறை கட்டமைப்பு இருக்கிறது என்பதைப் பற்றிய துல்லியமான விவரிப்பு இருக்கிறது. சில நல்ல கவிதைகள் கதைக்குள்ளேயே இருக்கின்றன.




வாசிக்க வேண்டிய நாவல். சில உண்மைகள் கசக்கத்தான் செய்கின்றன.அவற்றை வாசிக்கும்போது மனதிற்குள்ளும் அந்தக் கசப்பு பரவுகிறது. இருந்தபோதினும் இப்படி உண்மையைச் சொல்லும் நாவல்கள்  நிறைய வரும்போது கசப்புகளை நீக்கும் மருந்துகள் சமூகத்தில் உருவாகலாம்..

வா.நேரு, 15.07.2026