Sunday, 15 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்... பாலகுமார் விஜயராமன்

 

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்

( ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2025- குறும்பட்டியல்)

ஆசிரியர் : பாலகுமார் விஜயராமன்

வெளியீடு : எழுத்து பிரசுரம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

மொத்தம் 222 பக்கங்கள் விலை ரூ 270

இந்த நாவலைப் படித்து முடித்தபொழுது, ஒரு சினிமாப்படத்தைப் பார்த்து முடித்ததுபோல் இருந்தது.அவ்வளவு கச்சிதமாகச் சொற்களால் விவரிக்கப்பட்ட ,காட்சியாகக் காட்டப்படுகிற நாவலாக இந்த நாவல் இருக்கிறது.தனஞ்சயன் என்னும் தனா,கணக்குக்கு அஞ்சி நடுங்கிப் பின்பு கணக்குப் புலியாகும் சுயோதன்,கோவையிலிருந்து போடி கல்லூரிக்கு சமூகப்பணிக்காக வரும் கல்லூரி மாணவி நித்யா என்று அறிமுகமாகும் கதாபாத்திரங்கள்,கதை ஓட்டத்தில் கச்சிதமாகப் பொருந்தி நிற்கிறார்கள்.




தொலைபேசித்துறையில் பொறியாளராகப் பணியாற்றும் பாலகுமார் விஜயராமன் அவர்கள் தன்னுடைய பொறியியல் அனுபவம், மென்பொருள் அனுபவம், மாணவ மாணவியர்களுக்கான புராஜக்ட் அனுபவம் என்று அனைத்தையும் இணைத்து உயிரோட்டமாக இந்த நாவலைப் படைத்துள்ளார்.எல்லாமே எதார்த்தமாக ,இயல்பாக இருக்கிறது.

 நான் தொலைபேசித்துறையில் 1995-2000ம் களில் வேலைபார்த்தபொழுது, மதுரையில் திரு. மாதீரன் அவர்கள் தொலைபேசி மேற்பார்வையாளராக இருந்தார்.படித்தது அந்தக்கால எஸ்.எஸ்.எல்.சி. என்றாலும் அவருக்குக் கணினியின் மேல் இருந்த ஆர்வம் மிகப்பெரியது, அவர் ஃபாக்ஸ்பேசில்  எழுதிய புரோகிராம்தான் மதுரை மாவட்டம் முழுவதும் இருந்த தொலைபேசி நிலையங்களில் சில ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது அதுபோலத் தானாக ஆர்வத்தால் உருவாகும் கணினி புரோகிராமர் தனா கதாபாத்திரம் அருமை..


இந்த நாவல் ஆசிரியர் எழுத்தில் பிரமாண்டமாய் வளர்ந்தோங்கி நிற்கிறார்.அவர் எடுத்திருக்கும் கதைக்களம் நாம் அக்கம்பக்கம் பார்க்கும்,கேட்கும் ஆன்லைன் சூதாட்டம்,அதனால் பாதிக்கப்படுபவர்கள், அந்தச் சூதாட்டம் எப்படி வடிவமைக்கப்படுகிறது,அந்தச் சூதாட்டம் நடத்துபவர்களின் வலிமை என்ன?,எப்படி பிரமாண்டமான கட்டிடங்கள் வழியாக நடைபெறுகிறது,அதற்கு அரசியல்வாதிகள் எப்படிப் பணம் வாங்கிக்கொண்டு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள்  என்பதை எல்லாம் அற்புதமான கதை ஓட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை என்னும் பெயரில் தனாவுக்கு ஏற்படும் அனுபவம் ,வாசிக்கும் அனைவருக்கும் படிப்பினையாகவும் இருக்கும். தனா , நான் தான் தப்புச்செய்யவில்லையே, நான் ஏன் பயப்படவேண்டும் என இருக்கும் நிலையில் அவருக்கு ஏற்படும் துயரம் ,அதில் இருந்து அவர் தப்பிக்கும் இடமும் கதையின் மிக விறுவிறுப்பான பகுதி.

சில அத்தியாயங்கள் மட்டும் வந்தாலும் மரியா கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.மரியாவின் தற்கொலையே இந்த நாவலின் திருப்புமுனையாகவும்  அமைகிறது.அதுபோலச் சுயோதன் பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்றி, பொறுக்கமுடியாமல் தனது வேலையை விடும் மாயந்தி…சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் மிகக் கவனமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுயோதன் ,தனது வாழ்க்கைக்கு அத்தனை வசதி கிடைத்தாலும் நாம் செல்லும் வழி தவறு,சமூகத்திற்கு எதிரானது  என்பதை உணர்ந்து மாறுவதும் அதன் தொடர்ச்சியாக அவனது செயல்பாடுகளும் மிக நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்.

வெறுமனே ஒரு நாவலாக இல்லாமல், இன்றைக்குச் சமூகத்தின் புற்று நோயாக மனிதர்களை அழித்துக்கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டம் பற்றி விரிவாக எழுதி இருப்பதற்குப் பாலகுமார் விஜயராமன் அவர்களை எவ்வளவு பாரட்டினாலும் தகும். இன்றைக்குக் கல்லூரிகளில் இருக்கும் மாணவ,மாணவிகளிடம் மற்றும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள எல்லோரிடமும் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். மலையாளத்தில் ஜோஸ் பாலுக்காரன் எழுதிய ‘அரிவாள் ஜீவிதம் ‘ நாவல் பலரின் வாழ்க்கை அரிவாள் ஜீவிதம் நோயிலிருந்து மீள்வதற்கு  வழி வகுத்தது போல ஆன்லைன் சூதாட்ட நோயில்  இருப்பவர்கள் மீள்வதற்கான நாவல் இந்த நாவல். இந்த நாவல் நிறையப் பேரிடம் போய்ச்சேரவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு,பணமிழந்து தற்கொலை செய்து கொண்ட உறவினர் வீட்டிற்கு, திருநெல்வேலியில் நானும் எனது மனைவியும் போனோம். அவ்வளவு அமைதியானவர்,பண்பானவர்,எப்படி இந்தச் சூதில் ஈடுபட்டார் ,இழந்தார்,இறந்தார் என்பது புதிராக இருக்கிறது என்று இறந்தவரின் மனைவி புலம்பியது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.இந்த நாவலைப் படித்தபொழுது எப்படிச் சிக்கி இருப்பார் என்பது புரிந்தது. இன்னும் நம்மைச்சுற்றி பலர் இந்தச் சுழலுக்குள் சிக்கி இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.அவர்களுக்கெல்லாம் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். சினிமாவாக எடுப்பதற்கு அத்தனை கூறுகளும் உள்ள இந்த நாவல் சினிமாவாக எடுக்கப்பட்டால், இந்த ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவிற்கு மக்களுக்குப் போய்ச்சேரும். சீட்டு என்று மட்டும்அல்ல ஆன்லைன் தாயம் என்றால் அலர்ட்டாக இருக்கவேண்டும் என்னும் படிப்பினையைக் கொடுப்பதாக நாவல் முடிகிறது.

விருது ,பரிசு என்பதையெல்லாம் தாண்டி, இந்தச் சமூகத்தில் நடைபெறும் ,ஓர் அவலத்தை,அந்தத் துறையைப் பற்றிப் புரிந்தவர் என்கிற முறையில் அற்புதமாகப் படிக்கும் எவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நாவலைக் கொடுத்திருக்கிறார். அதுவே மிகப்பெரிய பரிசுதான். இந்த நாவலைப் படித்தேன், ஆன்லைன் சூதிலிருந்து விடுபட்டேன் என்று சிலர் சொன்னாலே ,அது பாலகுமார் விஜயராமன் அவர்களுக்குச் சாகித்ய அகாதமி விருது  கிடைத்தது போலத்தான்.

“ராசி,தூசி எல்லாம் ஒண்ணும் இல்ல. நீ செய்ற விஷயம் சரிதான்னு உன் மனசுக்குத் தோணுதுல.அதுலயே தொடர்ந்து முயற்சி பண்ணு.ரிசல்ட் எங்கே போகப்போகுது. கண்டிப்பா ஒரு நாள் வந்தே தீரும்” இந்த நாவலில் பக்கம் 92-இல்




மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் இப்படிப்பட்ட ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு…தொடர்ந்து  எழுதுங்கள் .

தோழமையுடன்

வா.நேரு,15.02.2026

 

 

Friday, 13 February 2026

ஜாதி நோய் போக்கும்..ஆதலினால்காதலிப்பீர்…

 

ஜாதி நோய் போக்கும்..ஆதலினால்காதலிப்பீர்…


காதலா ?
அய்யோ
கூடாது கூடாதென
கூக்குரல்
எழுப்புகிறது
ராமசேனைக் கூட்டம்


காமத்தை
மட்டுமே
கடவுளின் பண்பாய்க் காட்டி
கதை புனைந்து
காசு பறித்தவர்கள்!


நாங்கள்
கலாச்சாரக் காவலர்கள்
எனும் முகமூடியோடு
கைகளில்
காட்டுமிராண்டிக் கால
ஆயுதங்கள் ஏந்தி
மங்களூர் நகரில்

நகர்வலம் வந்திருக்கின்றார்கள்
கவனம் ! கவனம் !


ஆண் பெண் உடலுறவை

 விதவிதமாய் விவரிக்கும்

 சிற்பக் கூடங்களாய்

 கோவில்கோபுரங்களை

 அமைத்தவர்கள்


இன்றைக்கும் அதனை

பத்திரமாய் வர்ணம்

பூசி கும்பாபிசேகம்

செய்து வைப்பவர்கள்

 

கோபியர் கொஞ்சும்

குமணா என்று

அறுபதினாயிரம் மனைவியர்

கடவுள் கண்ணனுக்கு

என்று பட்டியலிட்டவர்கள்

 

ராமனொரு கடவுள்
அவன் அப்பன் தசரதனுக்கு

அறுபதினாயிரம் மனைவியர்

மற்றும் மூன்று

பட்டத்தரசிகள் என்றவர்கள்….

இவள்
அய்வருக்கு மனைவி
ஆனாலும் கிட்டாமல்

போன கர்ணன் மேலும்

ஒரு கண் இருந்தது
என்று பத்தினி திரவுபதிக்கு!

பட்டியலிட்டவர்கள்….

பண்பாடு என்பதும்

ஒருவனுக்கு ஒருத்தி
என்று இவர்கள்

சொல்வதெல்லாம்

வெறும் சொல்

என்பதை நாம் அறிவோம்
ஜாதிக்கட்டமைப்பு
குலையக்கூடாது

 என்றான் மனு

 கலப்புத் திருமணங்கள்

 நடக்கக்கூடாது

 என்றான் மனு

 மீறி நடந்தால்

கடுமையாகத்
தண்டிக்கவேண்டும்

என்றான் அவன்

மனு அதர்மத்தை
நடைமுறைப்படுத்த

துடிப்பவர்கள்

இவர்கள்

கோட்சேயின் வாரிசுகள்

இவர்கள் காதலின்
கலப்பு மணத்தின்
எதிரிகள் இவர்கள்

ஒரு ஆணும் பெண்ணும்

நட்பு கொள்வதோ
காதல் கொள்வதோ

அவ்விருவர் மட்டுமே

 சம்பந்தப்பட்ட விசயம்

மூன்றாவது நபராய்
மூக்கை நுழைப்பதற்கு
எவனுக்கும்

அருகதை இல்லை

காதல் வலு
சேர்க்கும்
காதல் சமூகத்தின் 

ஜாதி நோய் போக்கும்...
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும்! 

ஆதலினால்
காதலிப்பீர்.



---------------- ப.க.தலைவர் - வா நேரு அவர்கள் 14-2-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியது.

நன்றி: தமிழ் ஓவியா இணையதளம்

 

Sunday, 8 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை...முனைவர் சு.சோமசுந்தரி

 

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை

ஆசிரியர்                    : முனைவர் சு.சோமசுந்தரி

வெளியீடு     : கவியமுது பதிப்பகம், திருநின்றவூர் ,9283275782

முதல்பதிப்பு : அக்டோபர் 2025,மொத்த பக்கங்கள் 154, விலை ரூ 150

சில்லாட்டை என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 25 கதைகள் உள்ள தொகுப்பு. இன்றைக்குத் தமிழ்நாட்டில் நிறையப் பெண்கள் உயர் கல்வி படித்திருக்கிறார்கள்.சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்பு பெண்கள் பலர் எழுதுகிறார்கள்.தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை உள்வாங்கி ,சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அதனைப் படைப்பாக மாற்றித் தருகிறார்கள்.அந்த வகையில் முனைவர் சு.சோமசுந்தரி அவர்களின் முதல் படைப்பாக வெளிவந்திருக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு பாராட்டுக்குரியது.



தனது என்னுரையில்  இந்த நூலின் ஆசிரியர் முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் ‘ நமக்குள்ளிருக்கும் மன இறுக்கங்களை உடைப்பதற்கான வழியாக எழுத்தும் வாசிப்பும் இருக்கிறது.இதைப் படிக்கும் எல்லோரும் உணரமுடியும். நான் எழுத ஆரம்பித்த பிறகுதான் எனக்கான வெளி திறந்ததுபோல உணர்ந்தேன்.எனக்கான சிறகுகள் விரிய ஆரம்பித்தன. “ என்று குறிப்பிடுவது சிறப்பு.

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் சிறுகதை ‘அத்துமீறல்’.அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் அத்துமீற நினைக்கும் அவரது மேல் அதிகாரிக்கும் அந்தப்பெண்ணுக்குமான போராட்டத்தை விவரிக்கும் கதை.அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஒரு வழிகாட்டல் போலக் கொடுத்திருக்கிறார்.’தவறுகள் குற்றங்கள் அல்ல ‘ என்னும் சிறுகதையில் ,அத்து மீறி தவறு செய்யும் ஆண் அதிகாரி பேசுவதாக அந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதியிருப்பார்.இந்தக் கதையில் பெண் பேசுவதாக வருகிறது.

மறைந்த போன அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிரும் கதையாக ‘அப்பா ‘ என்னும் கதை இருக்கிறது. நிறைய நினைவுகளைச் சொல்லும் கதை.25 கதைகளையும் ஓரிரு நாளில் படித்து முடித்தேன்.

இந்த 25 கதைகளில் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்கள்.எவரும் அந்நியமாகத் தெரியவில்லை.பெரும்பாலான கதைகளில் பெண்கள் எப்படி எல்லாம் இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையே விவரிக்கின்றன. சில்லாட்டை என்னும் கதைத் தலைப்பில் அமைந்த கதையும் கூட ஒரு பெண்ணின் அவலத்தையே சொல்கிறது.

“ சிறிய வடிவத்தில் இருந்தாலும் ஒரு முழுமையான உணர்வையும்,நடைமுறையையும் வாசகருக்குச் சிறுகதை மூலம் யதார்த்தமாகப் பெண்ணியலை,சமுதாய நிகழ்வுகளை,கதைகளாக மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துள்ளார் ஆசிரியர் “ என்று அணிந்துரையில் முனைவர் பேரா வே.பூங்குழலி பெருமாள் குறிப்பிட்டிருப்பது உண்மை.

“ அனுபவங்களை ஒவ்வொரு சூழலுக்கேற்ப நகர்த்திச்செல்லும் ஆசிரியரின் கதை சொல்லல் உண்மையிலேயே வசீகரிக்கிறது.பெண்பாத்திரங்கள் கொஞ்சம் உறுதிமிக்கவர்களாகவும் காட்டியுள்ளார் “ என்று அணிந்துரையில் முல்லை அமுதன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இவர் படைத்திருக்கும் இந்த 25 கதைகளின் தொடக்கமுமே இயற்கை வர்ணனையாக இருக்கிறது. இதனை “ஓவ்வொரு கதையின் தொடக்கத்திலும் இயற்கை வர்ணனை.அவை நம்மை நிலவோடு கட்டிப்போடுகின்றன.புல்லின் நுனியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பனித்துளியில் முகம் பார்க்கவைக்கின்றன” என்று கவிஞர் விஜயகிருஷ்ணன் மகிழ்வுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.



இயல்பான கதைகள். இன்றைய நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள்தான் பல கதைகளின் மையக்கரு.’குளியலறை விபத்துகள்’ என்னும் கதை மட்டும் நான் வாசிக்கும்போது கொஞ்சம் நெருடலைக் கொடுத்தது. தற்செயலாக நடப்பது ,அப்படியே நடக்கும் என நம்புவதே மூட நம்பிக்கை என்பது என் கருத்து.

கதை சொல்லல் கச்சிதமாக இருக்கிறது.கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களாகக் கதைகளில் கொடுத்திருக்கிறார்.அளவான விவரிப்போடு கதைகளை நகர்த்திச் செல்கிறார். தொடர்ந்து இவர் நிறையச் சிறுகதைகளை எழுதி வெளியிடலாம்.இன்னும் விரிவாகக்கூடச் சில கதைகளை இவர் விவரித்து எழுதலாம். படித்துப் பாராட்ட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. எழுத்துப்பிழைகள் இல்லாத பதிப்பு. முதல் சிறுகதைத் தொகுப்பை அருமையாகக் கொண்டு வந்திருக்கும் தங்கை முனைவர் சு.சோமசுந்தரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Saturday, 7 February 2026

பாம்புக் கடியும் சிகிச்சை முறையும்...முனைவர் வா.நேரு

 

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படித்துப் பார்த்து பாராட்டிய கட்டுரை....








நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் பிப்ரவரி 1-15,2026







Monday, 2 February 2026

இந்த நாள்! இந்த நாள்!...

 

இந்த நாள்! இந்த நாள்!...

அவருக்கு இறுதி

வணக்கம் செலுத்த

தமிழ்நாடே திரண்டு

வந்த நாள்…

அண்ணா..அண்ணா..

எனத் தமிழ்நாடே

அழுது புலம்பிய நாள்!

மாற்றார்களின் மனதிலும்

இடம்பிடித்த

மகத்தான மனிதருக்கு

இறுதி நிகழ்வு நடந்த நாள்!

சாரை சாரையாய்த் தமிழர்கள்

சென்னைக்கு வந்து குவிந்து

அழுது புலம்பிய நாள் !

 

தனக்கென ஏதும் சேர்க்காமல்

தமிழர்களுக்காய்

‘தமிழ்நாடு’ எனப் பெயர்

கொடுத்த தலைவன்…

 

நம் வீட்டுத்திருமணத்தை

நாமே நடத்திக்கொள்ள

சுயமரியாதைத் திருமணத்தைச்

செல்லும் எனச்

சட்டமாக்கிய தலைவன்

 

இறந்து எத்தனை

ஆண்டுகள் ஆனாலும்

இருமொழிக்கொள்கைதான்

தமிழ்நாட்டில் என்பதைச்

சட்டமாய் …

தமிழர்கள் மனதில்

ஓவியமாய் வரைந்து

வைத்த தலைவன்..

 

உனது குரல்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

உலகமெல்லாம் இருக்கும்

தமிழர்கள் இல்லங்களில்…

உனது எழுத்து

சொல்லிக்கொண்டே இருக்கிறது

தம்பிகளுக்கு வழிகாட்டுதல்களை…

புதிய ‘பராசக்தி’கள் கூட

நீ சொன்ன

‘தீ பரவட்டும் ‘என்பதைத்தான்

திருப்பிச்சொல்கின்றன..

 

மறையவில்லை அண்ணா நீ!

எங்கள் மனதில் இருக்கிறாய்!

சாகவில்லை அண்ணா நீ !

சட்டங்களில் இருக்கிறாய் !

வாழ்க அண்ணா ! நீ வாழ்க!

 

                             வா.நேரு,03.02.2026

அண்மையில் படித்த புத்தகம் : கண்ணன் ஒரு நாத்திகன்...

அண்மையில் படித்த புத்தகம் : கண்ணன் ஒரு நாத்திகன்

நூல் ஆசிரியர்               : முனைவர் மா.வசந்த்

வெளியீடு                   : செண்பகம் வெளியீட்டகம்,தஞ்சாவூர்.

முதல் பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 56, விலை ரூ 80

கண்ணன் ஒரு நாத்திகன் முனைவர் மா.வசந்த்  அவர்கள் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள ஒரு குறுநாவல். தலைப்பைப் பார்த்த உடனேயே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சிலர் இப்படித் தலைப்பு வைத்தால் பலர் படிக்க மாட்டார்கள் என்று நினைத்து தயங்குவார்கள் .ஆனால் எனக்கு அறிமுகம் இல்லையென்றாலும் வசந்த் இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காகவே வாங்கிப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். வாங்கினேன். படித்தேன். சின்னப் புத்தகம். மொத்தம் 56 பக்கங்கள் மட்டுமே உள்ள நூல். பெரும்பாலும் உரையாடல்களாக வடிவமைக்கப்பட்டுள்ள குறு நாவல்.யார் படித்தாலும் ஆர்வத்துடன் படிக்கும்படியாக இந்த நூல் அமைந்துள்ளது சிறப்பு.கேள்வி பதில் வடிவில் பல வரலாற்று செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளது அருமை.ஓர் ஆசிரியராக இருக்கும் கண்ணன்,அவரது குடும்பம், பள்ளி, மாணவ மாணவிகளுடன் உரையாடல்,தலைமை ஆசிரியருடன் உரையாடல்,காவல் நிலையத்தில் அனுமதி வாங்குவதற்காகச் சென்று அனுமதி வாங்குவது என்று உயிரோட்டமான ,பல நிகழ்வுகள் உண்மைபோல் அமைந்திருப்பது நூலுக்கு வலு சேர்க்கிறது.

இந்த  நூல் ஆசிரியர் ,தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் என்னும் குறிப்பு உள்ளது. புகழ்மிக்க இக்கல்லூரியின் செயலாளர் திரு.இரா.சுந்தரவதனம்  அவர்கள் ,”பகுத்தறிவுச் சிந்தனைகளை இளம் வயதினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய சொற்களில் தெளிந்த நடையில் உருவாக்கியுள்ளமை சிறப்புக்குரியது. பெரியாரின் கருத்தில் கோட்பாடுகளை உள்ளபடியே உள்ளத்தில் இருத்திப் பயணிக்கும் இவரை வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துரை வழங்கி இருக்கிறார் .

கல்லூரியின் முதல்வர் முனைவர் (திருமதி) இரா.இராசாமணி அவர்கள்,”  படைப்பிலக்கியத்தில் கையாளப்படும் அத்தனை  நுணுக்கங்களையும் மிகச் சிறப்பாகக் கையாண்டு படிக்கும்போது, தொய்வும் இன்றிப் பற்பல கருத்துக்களை விதைத்திருப்பது இன்றைய மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும். மாறுபட்ட முற்போக்கு சிந்தனையோடு இவ்விலக்கியத்தை வடித்தெடுத்த பேராசிரியர் முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன் என்று வாழ்த்துரை கொடுத்து  இருக்கிறார்.

 

நூல் ஆசிரியர் தன்னுடைய  என்னுரையில் ,” பெரியார் அவர்கள் முதன்முதலாகக் கடவுள் மறுப்பு வாசகத்தை முழங்கியதும் திருவாரூர் மண்ணில்தான். அப்படிப்பட்ட திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பிறந்தவன் நான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு தன்னுடைய உயர்வுக்கும், பகுத்தறிவுப் பாதைக்கும் காரணமான தனது தந்தையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பணியில் சேர்ந்த பிறகு எனக்குப் பெரியார் பற்றிய புத்தகங்கள் வழங்கி என்னைப் பகுத்தறிவுப் பாதையில் அழைத்துச் சென்றது பேராசிரியர் தோழர் எழிலரசன் அவர்கள். வாசிப்பு மூலம் பெற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளை இன்றைய இளம் சமுதாயத்திற்கு ஏற்றவாறு கொண்டு சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம்தான் இந்த நூல் எழுதக் காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.





முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.எழுத்து அருமையாகக் கைவருகிறது. இன்னும் பல படைப்புகளை வழங்கி சமூகத்திற்குப் பணியாற்ற அவருக்கு வாழ்த்துகள்.பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல, அனைத்து மாணவ மாணவிகளும் படிக்கவேண்டிய நூல்.