Friday, 7 August 2026

அண்மையில் படித்த புத்தகம் : முத்தமிழறிஞருக்கு மூன்று கவிமாலை


அண்மையில் படித்த புத்தகம் : முத்தமிழறிஞருக்கு மூன்று கவிமாலை

நூல் ஆசிரியர்              : பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்

நூலக்கம் செய்தவர்         : மருத்துவர் .மீ.யாழினி, மாநில சமூக    வலைத்தளப் பொறுப்பாளர்,தி.மு..மகளிரணி

பதிப்பகம்                  : கீழடி வெளியீட்டகம்,சென்னை -42,77022 85544

மொத்த பக்கங்கள்          : 110,ஆகஸ்ட் 2025,விலை ரூ 100

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, (07.08.2026) நேற்று நடைபெற்ற இணைய வழிக்கூட்டத்தில் நான் பேசிய நூல் .

              

                                                        இந்த   நூல் கவிதை நூல்.முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு மூன்று     வகையான கவிமாலைகளால் புகழாரம் சூட்டியிருக்கும் நூல்.இந்த நூலிற்கு படித்தவன் பதிவு என அய்யா பேரா முனைவர் .சுப்பிரமணியன் அவர்கள் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை போல இந்த நூல் பற்றி அணுகி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். ’தத்துவக்கொண்டாட்டம்என்னும் தலைப்பில் திராவிட முற்ப்போக்குப் படைப்பாளர் பேரவையின் தலைவர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் அவர்கள் ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.’செல்வ.மீனாட்சியின் நன்றிக்காவியம்என்னும் தலைப்பில் கவிக்கோ துரை வசந்தராசன் அவர்கள் ஒரு அணிந்துரை அளித்திருக்கிறார்.’நன் சாற்றுக்கவிஎன்னும் தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற  மாநிலச்செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் தனது வாழ்த்தினை ஒரு கவிதையாகக் கொடுத்திருக்கிறார். நட்புத் தமிழ் வட்டம், மதுரை-தலைவர் & நிறுவனர் அய்யா புலவர்  நாநா ஆறுமுகம் அவர்கள்  வாழ்த்துரை அளித்துள்ளார். தொடர்ந்து காப்புச்செய்யுள்,அவையடக்கம் முடிந்து கலைஞர் பற்றிய கவிதைகள் ஆரம்பிக்கின்றன. கலைஞர் அந்தாதி கலம்பமாலை (–கட்டளைக் கலித்துறை) என்னும் தலைப்பிட்டுக் முதல் கவிதையைக் கொடுத்திருக்கிறார்.



.

அந்தாதி என்பது                           " அந்தாதி என்பது    ஒரு பாடலின் இறுதி அடுத்த பாடலின் முதலாக வருமாறு தொடுக்கும் இலக்கண முறையாகும். கதம்பமாலை என்பது பல வகையான பாவினங்கள் அல்லது பல்வேறு உறுப்புகளைப் பூமாலை போல ஒன்றாகத் தொடுத்து வழங்கும் ஒரு பிரபந்த (சிற்றிலக்கிய) வகையாகும்

 

பெயர்க்காரணம்:                         பல வகையான மலர்களைச் சேர்த்துத் தொடுத்த கதம்பப் பூமாலை போல, பல்வேறு துறை சார்ந்த கருத்துகள் அல்லது பல பாவகைகளைக் கொண்டு அமைக்கப்படும் மாலை கதம்பமாலை எனப்படும் என விளக்கம் இணையத்தில் கிடைக்கிறது.

 

                                                              கட்டளைக் கலித்துறை  என்பது கலித்துறையின் ஒரு வகையாகும். இப்பாடல்களில் ஒவ்வொரு அடியிலும் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு (ஒற்று நீக்கி), ஒரு குறிப்பிட்ட வரையறைப்படி ஒழுங்காகப் பாடப்படும். 'கட்டளை' என்றால் அளவு அல்லது கணக்கு என்று பொருள். நேரசை என்றால் 16, நிரையசை என்றால் 17 எழுத்துகள்."

 

இந்த நூல் பற்றி ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் இணைய வழிக்கூட்டம் 211-ல்  நான் ஆற்றிய உரை, கீழே இருக்கும் யூ டியூப் இணைப்பில்  இருக்கிறது. வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். அய்யா மாரி. கருணாநிதி அவர்களின் தலைமையுரை,அண்ணன் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்களின் ஏற்புரை என ஒவ்வொரு உரையும் அதற்கான தனித்தன்மையோடு இருக்கிறது.


 https://www.youtube.com/live/uhqLlpzTsH0?si=HFjGIBPn3Q7TOkHr




Thursday, 6 August 2026

நிகழ்வும் நினைப்பும்: சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கேமிராக்கள்...

 

இப்போது சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியாக இருக்கும் பள்ளி முதலில் உயர் நிலைப்பள்ளியாக இருந்தது.இந்தப் பள்ளியில்தான் நானும் எனது உடன் பிறந்தவர்கள் வா.ஜெயராஜ்,வா.தமிழ்ச்செல்வன், வா.சாரதா,வா.சிவக்குமார் என அனைவரும் படித்தோம் .நாங்கள் படித்த பள்ளியில் எங்கள் தந்தை .வாலகுரு ஆசிரியர் & எங்கள் தாயார் சு.முத்துக்கிருஷ்ணம்மாள் தலைமை ஆசிரியர் அவர்களின் நினைவாக ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்தோம்.அதன் முதல் நிகழ்வாக இந்த வருடம் ஜூன் 23-ம் தேதி பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசினை நானும், +2-வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசினை எனது தங்கை வா.சாராதா விஜய பார்த்திபன்(-தலைமை ஆசிரியர் பி.சுப்புலாபுரம்) ஆகியோரும் வழங்கினோம். அன்றைய விழாவிற்குப் போனபோது,சாப்டூர் தலைமை ஆசிரியர் திரு சுந்தரராஜ் அவர்கள், பள்ளியில் ஆறு கேமிரா போடவேண்டும், அப்படிப் போட்டால் பள்ளி நிர்வாகத்திற்கு மிக வசதியாக இருக்கும்.பழைய மாணவர்களோடு இணைந்து அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யவேண்டும் என்று கேட்டார்.சரி என்று நாங்கள் சொல்லி வந்தோம்.



படத்தில் தலைமை ஆசிரியர் திரு பாபு பிரேம்குமார் அவர்கள், சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு கூ.சிவக்குமார் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்.

அதற்கான ஒரு மதிப்பீட்டுத்தொகை பட்டியலை(Quotation) தயார் செய்து கொண்டிருக்கும்போதே சாப்டூர் தலைமை ஆசிரியர் திரு சுந்தரராஜ் அவர்கள் மாற்றலில் சென்று விட்டார்.உதவித் தலைமை ஆசிரியர் திரு சு.தமிழரசன் அவர்களும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் எனச்சொல்லி இருந்தார். புதிய தலைமை ஆசிரியராக  திரு பாபு பிரேம்குமார் அவர்கள் பொறுப்பேற்றார். அவரிடம்  கேட்டபோது, ‘ஆமாம் சார், கேமிராக்கள் மாட்டவேண்டும் என்று சொல்லி,முயற்சிகளும் எடுத்தார். 6 கேமிராவிற்கான மதிப்பீட்டுப் பட்டியலை ஒரு நிறுவனத்தினர் கொடுத்தனர்.அதற்கான தொகை ரூ 53000 என்று இருந்தது.பின்பு இன்னும் 4 கேமிராவும் ஒரு மானிட்டரும் போடுவது என்றும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்து தெரிவித்தனர்.தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து, அவர்களும் ஒரு தொகை தருவது என்று முடிவு செய்தனர்.

எனது பங்காக ரூ 5000, எனது தங்கை பங்காக ரூ 5000 கொடுத்தோம். மற்றும் சில பழைய மாணவர்களிடம் கேட்போம் என்று சொல்லிக் கேட்டவுடன் , உடனே அனுப்பி வைத்த பெரிய உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

பணம் அளித்தவர்கள் விவரம்:

திரு .G.V. மணிமாறன் அவர்கள், ரூ 10000 -சாப்டூரில் 11-ம் வகுப்பு வரை படித்தவர்.கனரா வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியவர். கனரா வங்கியின் தொழிற்சங்கத்தில் அகில இந்தியப் பொதுச்செயலாளராக இருந்தவர். தொழிற்சங்கத்தின் சார்பாக கனரா வங்கியின்  இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். இப்போது சென்னையில் இருக்கிறார்.

திரு கனகராஜ் மாசாணம் அவர்கள் ரூ 10000 - சாப்டூரில் 10-ம் வகுப்பு வரை படித்தவர்.1991-எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வந்தவர். பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றி,இப்போது சென்னையில் பணியாற்றுபவர்.

திரு அழகர்சாமி நரசிம்மன் அவர்கள் ரூ 10000 - சாப்டூரில் எஸ்.எஸ்.எல்.சி. 1973-ஆம் ஆண்டு முடித்தவர். இந்திய நேவியில் பணியாற்றிவர். பின்பு  அறிவியல் அதிகாரியாக( Scientific Officer(E)) அணுசக்தி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. இப்போது பெங்களூரில் இருக்கிறார்.

திரு ஜோ.மதிவாணன் அவர்கள் ரூ 5000 - எனது மூத்த அண்ணன் ஜெயராஜ் உடன் படித்தவர். 1974 எஸ்.எஸ்.எல்.சி-யில் முதல் மதிப்பெண் பெற்றவர். பொறியியல் பட்டம் முடித்து மும்பை பின்பு குவைத் எனப் பெரும் பதவிகளில் பணியாற்றியவர்.இப்போது மும்பையில் இருக்கிறார்.

திரு எஸ்.பி.இராமநாதன் அவர்கள் ரூ 5000 -என்னோடு படித்த நண்பர். ஆவின் நிறுவனத்தில் பொதுமேலாளராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இப்போது விருதுநகரில் இருக்கிறார்.

திரு .கா.குருசாமி ,பழையூர் அவர்கள் ரூ 5000 -என்னோடு படித்த நண்பர். எல்..சி. நிறுவனத்தில் மேலாளராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பழையூரிலிருந்து வந்து என்னோடு 10ம் வகுப்புவரை படித்தவர். இப்போது மதுரை திருமங்கலத்தில் இருக்கிறார்.

திருமதி வா.சாரதா விஜயபார்த்திபன் அவர்கள் ரூ 5000- எனது தங்கை. இப்போது சுப்புலாபுரம் ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

திரு சுரேஷ் மகாலிங்கம் அவர்கள் ரூ 5000 - சென்னையில் ஆப்டிகல் கடை வைத்திருக்கிறார். எனது நண்பர்.இவரது சித்தப்பா திரு டாக்டர் கு.சுந்தரேசன் அவர்கள் தமிழ்நாடு அறிந்த வாலிபால் விளையாட்டு வீர்ராக இருந்தவர்.சென்னையில் மிகப்புகழ் வாய்ந்த மருத்துவர்.

 நான்                              ரூ 5000

 

                       மொத்த நன்கொடை ரூ 60000

மொத்த நன்கொடை ரூ 60000 (அறுபது ஆயிரம்)த்தையும்) வசூல் செய்து  பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்தோம்.

சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 கேமிரா மற்றும் மானிட்டர்  நிறுவும் வேலை நடந்து முடிந்திருக்கிறது. ஒரு 12 பேரிடம் கேட்டேன். 8 பேர் அனுப்பி வைத்தார்கள். அனுப்பி வைத்தவர்களுக்கும் அடுத்த முறை அரசுப் பள்ளிக்கு உதவக் காத்திருக்கும் உள்ளங்களுக்கும் நன்றி.

எனது ஆசிரியர்கள் திரு டாக்டர் இரா.கனகசபாபதி(முன்னால் முதல்வர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி) அவர்களும், திரு வீ.வீரி(செட்டி) (முன்னால் தலைமை ஆசிரியர்) அவர்களும் என் நினைவுகளில் வந்தார்கள். கல்விக்காக அரும்பணி செய்த அவர்களின் மாணவனாய், கல்விக்காக செய்த ஒரு சிறிய முயற்சி அவ்வளவு மன நிறைவைத் தருகிறது.

எனது முதல்வர் திரு கனகசபாபதி அவர்கள்  நல்ல செயல்களுக்குப் பணம் கொடுக்க நிறையப் பேர் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணம் ,அவர்கள் கொடுக்கும் செயலுக்குத்தான் பயன்படப்போகிறது என்று உறுதியானால் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பார். திரு வீரி(செட்டி) சார் அவர்கள், முதன் முதலில் நான் பள்ளிக்கூடத்திற்கு நன்கொடை என்று கேட்கும்போது தயக்கமாகத்தான் இருந்தது ஆனால் நமக்காக கேட்கவில்லை, படிக்கும் குழந்தைகளுக்காக கேட்கிறோம் என்று கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கேட்டபோது மனதார உதவி புரிந்தார்கள் என்று சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன். எனது புத்தகமானகனவு போலத்தான் நடந்தது.’ என்னும் புத்தகத்திலும் பதிந்திருக்கிறேன்.

சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் மிகப்பெரும் நம்பிக்கையைத் தருகிறார்கள்.பழைய மாணவ மாணவிகள் ரூ 60000 கொடுத்தோம் என்றால் ,தலைமை ஆசிரியர் அவர்களும் மற்ற ஆசிரியர்,ஆசிரியைகளும் இணைந்து ரூ 40000 கொடுத்திருக்கிறார்கள்.

நேற்று 5.8.2026 புதன்கிழமை,காலையில்  சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த காமிரா வசதியினை ,பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து வைத்தோம். 10 கேமிராக்கள், மானிட்டர் என்று அருமையாக அமைந்திருக்கிறது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.கூ.சிவக்குமார் அவர்களும்,எனது மகன் சொ.நே.அன்புமணி  மற்றும் பள்ளியின் நல விரும்பிகளும் உடன் இருந்தனர். ஆசிரியர்,ஆசிரியைகள் மத்தியில் சிறிது நேரம் பேசினேன். பழைய மாணவ மாணவிகள் உதவத் தயாராக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன். இந்தக் காமிராக்கள நிறுவிய திரு.சிரஞ்சீவி அவர்கள் மிக நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்.  

கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும். கல்வியைப் பெற்று பலன் பெற்றவர்கள், மற்றவர்கள் கல்வியைப் பெறத் துணை புரிவோம்.