Wednesday 30 May 2018

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

           

சுயமரியாதை வாழ்வே
சுகவாழ்வு என்றார் பெரியார்
வாயால் கூறுபவர்களைவிட
ஒருபடி மேலே நின்று
வாழ்ந்து பார்த்து சொல்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு......

சாதிச்சகதியில்
எந்நாளும் மாட்டியதில்லை
சக மனிதனை எந்த நாளும்
சாதிக்கண் கண்டு நோக்கியதில்லை
பார்ப்பன நண்பரைக் கூட
அளவு கடந்து  நேசிக்கவைக்கும்
அய்யாவின் மனித நேயம்
மண்டைக்குள் புகுந்ததால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

இடையூறுகள் ஏதும் என்றால்
சிலர் சோதிடர்களை
நோக்கி ஓடுகின்றார்...
எதை எதையோ நாடுகின்றார்..
அறிவு கொண்டு இடையூறு
நீக்கும் அய்யாவின் வழி ஏற்றதால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்...

இல்லாத கடவுளுக்காக
எந்த நாளும் காசைச்செலவழித்ததில்லை...
கடவுளுக்கென எவர் கேட்டு வந்தாலும்
இந்த நாள் வரை ஒரு ரூபாய் கொடுத்ததில்லை
விடுதலை இதழின் வளர்ச்சி நிதி
முதியோர் இல்லம் குழந்தைகள் இல்லம்
படிப்போர்க்கு உதவி எனத்தான்
கரங்கள் நீண்டிருக்கின்றன.......
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

வரவுக்குள்தான் செலவு
கஞ்சியோ கூழோ குடிப்போம்
கடன் வாங்கி பகட்டு வேண்டாம்,,,
எவ்வளவு பெரிய பணக்காரரோடு
பதவிக்காரரோடு பழகினாலும்
நம் நிலையில் நாம் இருப்போம்
நம்மால் முடிந்ததை
தொண்டாய்க் கொடுப்போம் எனும்
பொருளாதார நடைமுறையால்
எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்

மற்றவர்கள் உனக்கு மரியாதை
காட்ட வேண்டும் என நினைத்தால்
அவர்களுக்கு மரியாதை காட்டு
எனும் தந்தை பெரியாரின் தத்துவம்
மனதில் பதிந்த காரணத்தால்
கடிந்து சொல்ல மனம் வருவதில்லை
எவர் மனதையும் நோகவைக்கும்
எண்ணம் எப்போதும் இல்லை
அதற்காக எந்த நிலையிலும்
எனது கொள்கையை விட்டுக்கொடுத்தலும்
இல்லை எனும் எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

ஒழுக்கம் என்பது உனக்கு
கொடுத்த பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றுதல்
என அடித்துச்சொன்னார் அய்யா பெரியார்...
இயக்கப்பொறுப்போ குடும்பப்பொறுப்போ
அலுவலகப்பொறுப்போ
ஒழுக்கமே உயிர் எனக்கொள்வதால்
எந்த நாளும் தளர்ச்சி இல்லை
வாழ்வில் வளர்ச்சிதான் எனும்
வாழ்க்கை முறையால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

தந்தை பெரியாரின்
தலைமைக் கொள்கை மகன்
அய்யா ஆசிரியரின் வழிகாட்டல்
நாளும் 'விடுதலையில்' அவர் ஊட்டும்
வாழ்வியல் சிந்தனைகளை
வாழ்வின் கைத்தடிகளாய்ப்
பற்றிக்கொண்டதால்
வளமாய் நலமாய் வாழ்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு...

இன்று மே முப்பத்தி ஒன்று....
அய்ம்பத்து ஐந்தாம் ஆண்டு
பிறந்த நாளை எளிமையாகக்
கொண்டாடும் இந்த நாளில்
உங்களுக்கு வலிமையாகவே
பரிந்துரைக்கின்றேன்.....
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு....

                                       

                         வா.நேரு ....31.05.2018