Sunday 8 December 2019

உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும்...ஜெ.வெண்ணிலா மகேந்திரன்

உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும்
            ஜெ.வெண்ணிலா மகேந்திரன்

அனைவருக்கும்.வணக்கம். டிசம்பர் 2, அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள். சுயமரியாதை நாள். ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தில்  'உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும் ' என்னும் தலைப்பில் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி.

ஒரு பயிற்சி பற்றி பேசுவோம்.மலை ஏறும் பயிற்சிக்கு என்னவெல்லாம் எடுத்துக்கொண்டு போவார்கள்..(பார்வையாளர்கள் பதில் கூறினார்கள்). மலை ஏறும் பயிற்சிக்கு சென்றவர்கள் பைகளில் உணவு,தண்ணீர்,ரோப் கயிறு, ஆக்சிசன் சிலிண்டர்  போன்றவற்றை பைகளில் எடுத்துக்கொண்டு போனார்கள். இருட்டான நேரம். மலையில் ஏறி ஓர் இடத்தில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அதனால்  அவர்கள் கொண்டு சென்ற பையின் கனம் குறைந்தது. அவ்விடத்தில்  பயிற்சி ஆசிரியர்,சில கற்களைப் பார்த்து, பைகளில் எடுத்துப்போட்டு கொள்ளுங்கள் என்று  சொல்கிறார். இப்போதுதான் சுமை குறைந்தது ,இப்போது மறுபடியும் கல்லைக்கொண்டு பையை நிரப்பச்சொல்கிறாரே என்று சிலர் நினைத்தர்.ஆனால் பயிற்சி ஆசிரியர் சொல்லைத்தட்டக்கூடாது என்று சிலர் முழுமையாக பையை கற்களால் நிரப்பிக்கொண்டனர்.சிலர் பயிற்சி ஆசிரியர் பார்க்கும் நேரம் மட்டும் கற்களைப் போட்டு பாதி நிரப்பிக்கொண்டனர். சிலர் இவரென்ன சொல்வது, நாம் என்ன பையை நிரப்புவது என்று நிரப்பாமல் விட்டு விட்டனர். மலையில் ஏறி பின் கீழே வந்து பார்த்த போது அது மிக விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் போன்ற மதிப்புடையது என்று தெரிந்தது.முழுமையாக நிரப்பியவர்கள் பயன்பெற்றனர். பாதிப்பையை நிரப்பியவர்கள் முழுவதுமாக நிரப்பியிருக்கலாமே என நினைத்தனர். பையை நிரப்பாதவர்கள் வாய்ப்பை இழந்தனர்.இப்படி மூன்று வகையான மனிதர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். சொல்வதைக் கேட்டு கீழ்ப்படிந்து உடனே செய்பவர்கள். சொல்வதைக் கேட்டு அரைகுறையாக செய்பவர்கள்.சொல்வதைக் கேட்டு, இவரென்ன சொல்வது நாம் என்ன செய்வது என்னும் அலட்சியப்போக்கில் மறுப்பவர்கள் அல்லது தவிர்ப்பவர்கள். இப்படிப்பட்ட மூன்று வகையான மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இந்தக்கூட்டத்திலும் இருக்கின்றோம்.  ஒரு பயிற்சி என்பது தன் பயிற்சி மூலமாக இந்தக்கதையில் வரும் மலையேறுபவர்கள்  அனைவரையும் பைகளை கற்களால் நிரப்ப வைக்கவேண்டும். அதுதான் பயிற்சி. அப்படி கொள்கை பிரச்சாரத்தை நாம் அனைவரும் கொண்டு செல்வதற்கு எப்படிப்பட்ட பயிற்சி தேவை என்பதனை சொல்லும் பயிற்சி ஆசிரியராக என்னை நான் நினைத்துக்கொள்கிறேன். கொஞ்சம் கண்டிப்பான பயிற்சி ஆசிரியராக என்னைக் கருதிக் கொள்ளுங்கள்.இங்கே என்ன வசதி என்றால் நீங்கள் கேள்வி கேட்டு பதில் வாங்கியே கற்களை உள்ளே போடலாம்.ஆனால் எல்லோரும் பைகளுக்குள் கல்லைப்போடவேண்டும்.

இந்தப் பயிற்சி வெறுமனே நான் மட்டும் பேசுவதாக இருக்காது. கலந்துரையாடலாகவும், சில கருத்துகள் உங்களிடமிருந்து வருவதாகவும் இந்தப் பயிற்சியை வைத்துக்கொள்ளலாம்.மனிதனை நம்புங்கள் என்று சொல்வது ஓர் உளவியல் அணுகுமுறை.கடவுளை நம்பாதே என்று சொல்வதை விடவும் மனிதனை நம்புங்கள் என்று சொல்வது மனித நேய அடிப்படையிலானது.பள்ளிக்கூடத்தில் ஓடாதே, ஓடாதே என்று சொல்வதை விடவும் மெதுவா நடடா, மெதுவா நடடா என்று சொல்வது நேர்மறை அணுகுமுறை.என்னிடம் ஒருவர் 'வெண்ணிலா, நீங்கள் அர்த்தமுள்ள இந்துமதம் படித்து இருக்கின்றீர்களா ? எனக் கேட்டபோது ' நான் அர்த்தமற்ற இந்து மதம் படித்திருக்கிறேன் ' என்று சொன்னேன்.அவருக்கு பதிலும் ஆனது,நேர்மறை அணுகுமுறையும் ஆனது.இப்படி கொள்கை பரப்பும் அணுகுமுறையில் நேர்மறையான அணுகுமுறையை நாம் கைக்கொள்ள வேண்டும்.இந்த அணுகுமுறையைத்தான் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். இன்னும் இதனை வரைமுறையாக(சிஸ்டமாக) அணுகலாம். ஏன் என்றால் வெளியே எல்லாம் கொள்கை பரப்புரை செய்யும் சிலரால் குடும்பத்திற்குள் பண்ண முடியாது.கடவுள் நம்பிக்கையற்றவர்களை மதவாதிகள் எப்படி பார்க்கின்றார்கள் என்பதை அண்ணன் நேரு சொன்னார்.ஆண்களுக்கே இவ்வளவு பிரச்சனை என்றால் பெண்களுக்கு எவ்வளவு பிரச்சனை?...

கல்யாணமே பெரிய பிரச்சனை.நாம்(பெண்கள்) கொள்கையில் நாம் தெளிவாக இருந்தால் நமக்கு எது வேண்டும் என்பதனை நாம் முடிவு செய்ய முடியும்.கல்யாணத்திற்கு சில நிபந்தனைகள்(கன்டிசன்) எல்லாம் வைப்பார்கள். மாப்பிள்ளை வேலை பார்க்கவேண்டும்.மாப்பிள்ளை குடும்பம் இப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சில நிபந்தனைகள் வைப்பார்கள்.நான் தெளிவாக இருந்தேன். நான் வேலை பார்ப்பேன். நிறைய சம்பளம் வாங்குவேன் என்பது எனக்குத் தெரியும்.நான் வைத்த ஒரே நிபந்தனை.மாப்பிள்ளை இந்த இயக்கத்தில் இருக்கவேண்டும். தாலி கட்டாமல் திருமணம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்.எனது அப்பா அந்த மாதிரியே பார்த்து செய்துவைத்தார். நான் அன்று தெளிவாக முடிவு எடுத்ததால்தான் இன்றுவரை மகிழ்ச்சியாக இருக்கிறேன்.நான் இந்த இயக்கக் குடும்பத்தில் பிறந்தவள்,வளர்ந்தவள் என்பதால் சிறு வயது முதலே அனுபவப்பட்டிருக்கிறேன்.நான் பள்ளியில் படிக்கும்போதே ,'வெண்ணிலா, உன்னை கடவுள் நம்பிக்கையாளராக மாற்றுவதுதான் எனது இந்த வருடத்தின் குறிக்கோள்' என்று ஒவ்வொரு வருடமும் ஆசிரியைகள் சொல்வார்கள்.நீ பிரார்த்தனை(பிரேயர்) செய்யவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்பார்கள். நான் ஆசிரியையிடம் ' அப்போ பெயிலானவர்கள் எல்லாம் பிரேயர் பண்ணாதவர்களா? ' என்று கேட்பேன்.

ஒவ்வொரு நொடியும் நமக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. திருமணம் எப்படி செய்வது?, பிள்ளைக்கு எப்படி பேர் வைப்பது என்று ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு உறவினர்களால் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். எனது மகளுக்கு எனது பெயர்தான் முன்னெழுத்து. அதாவது வெ.ம.கயல் என்பது எனது மகள் பெயர். பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை..இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? அம்மா பெயர்தான் முதல் முன்னெழுத்து என்று வைத்தோம்.என் பெண்ணிடம் இன்சியலுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு இடத்திலும் கேள்விகளும் பிரச்சனைகளும் நமக்கு வந்து கொண்டேதான் இருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் கேள்வி கேட்பவர்களில் ஈகோ பாதிக்காமல்,சரியான விளக்கத்தை நாம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.அதுவே கொள்கை பரப்பல்தான். நமது நிலைப்பாட்டை மற்றவர்களுக்கு விளக்கும்போது கொள்கையை அவர்களுக்கு விளக்குகின்றோம்.ஆண்களுக்கு இரட்டை பிரச்சனை.குடும்பத்தில் ஆணாதிக்கம் என்றும் ஆகிவிடக்கூடாது அதே நேரத்தில் கொள்கையையும் எடுத்துச்செல்லவேண்டும்.

கொள்கை என்பதை குடும்பத்தில் இணையரிடம் கொண்டு செல்லவேண்டியிருக்கிறது. பின்பு குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.நாம் பார்க்கிறோம். அப்பா நாத்திகராக இருப்பார். பிள்ளை கோவில் கோவிலாக போய்க்கொண்டிருப்பான். சில இடங்களில் அப்பா கோயில், கோயிலாக போய்க்கொண்டிருப்பார். பிள்ளை நாத்திகராக இருப்பான்.குழந்தைகள் எப்படி எந்த இடத்தில் ஈடுபாடு(இன்ஸ்பைர்) ஆவார்கள் என்று தெரியாது.ஈடுபாடு ஆகிவிட்டால் அவ்வளவுதான், முழுமையாக ஈடுபாடு ஆகிவிடுவார்கள். இன்று உலகம் முழுவதும் அக்னாஸ்டிக் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி  வருகிறது.கடவுள் இருக்கிறார் என்பவர்களின் எண்ணிக்கை ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. இன்று கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று தெரியாது எனச்சொல்லும் அக்னாஸ்டிக் என்பவர்களின் எண்ணிக்கை  மேற்கத்திய நாடுகளில் அதிகமாகக்கொண்டு  இருக்கிறது.நமது நாட்டிலும் அவர்களின் எண்ணிக்கை கூடுகின்றது.  அவர்களை நாம் அணுக வேண்டும். கடவுள் இருக்கிறா ? என்பது தெரியவில்லை என்று சொன்னாலே சிந்திக்க ஆரம்பித்து விட்டான் என்று பொருள்.அவர்களை பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்க வைத்தால் நமக்கு வெற்றி கிடைக்கும்.நம்முடைய இலக்கு அவர்களாக நாம் வைத்துக்கொள்ளலாம் என்பதற்காகச்சொல்கிறேன்.

(கேட்பாளர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள்.ஒவ்வொரு குழுவும் ஒரு பெயர் சூட்டிக்கொண்டார்கள்.உங்களுக்கு மிகவும்  பிடித்த  உணவு? உங்களுக்கு மிக விருப்பமான ஒரு மனிதர் பெயரோடு,உங்களுடைய தனித்திறன் என்ன? உங்களுக்கு மிகப்பிடித்தமான செயல்பாடு  போன்ற கேள்விகள் குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்டு, பதில்கள் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு குழுவின் பிரதிநிதியாலும் வாசிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகவும் ஈடுபாட்டோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பதில் அளித்தார்கள்.)

உங்களுக்குப் பிடித்த உணவு என்று கேட்டால் எல்லோரும் உடனே பதில் சொல்லிவிட்டீர்கள். ஆனால் உங்கள் தனித்திறமை என்ன என்று கேட்டபோது எல்லோரும் யோசித்தீர்கள்.நாம் நம்மைப் பற்றி யோசிப்பதில்லை. நமது திறமை எது என்பதனை தெளிவாகத் தெரிந்துகொள்வதில்லை. நாம் கொள்கைப்பிரச்சாரம் செய்யும்போது தடுமாறக்கூடாது. கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல வேண்டும். அதற்கு நமது கொள்கையும் தெரியவேண்டும். நம்மைப்பற்றியும் தெரியவேண்டும்.நம்மிடம் இயலாமை இருக்கும்போதுதான் கோபம் வரும். மனைவி இயலாமையை உணரும்போது குழந்தையை அடிக்கிறார்.கணவன் இயலாமையை உணரும்போது மனைவியை அடிக்கிறார்.சில மனைவிகள் இயலாமையை உணரும்போது தற்கொலை செய்துகொள்கிறார்கள். கணவன் அடிக்கும்போது மனைவி திருப்பி அடித்தால் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் அதனை சொல்லித்தருவதில்லை. அதனால் இயலாமையாக உணர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.நமக்கு இயலாமை மனப்பான்மை வரக்கூடாது.தனித்திறமை என்ன என்று கேட்டபோது வேறுபட்ட பதில்கள் நிறைய வந்துள்ளன. ஒருவர் திண்ணைப்பிரச்சாரம். ஒருவர் போட்டோகிராபி.,ஒருவர் கணினி தொழில் நுட்பம் இப்படி பல்வேறு வகையான பதில்கள்.

நாம் பரப்புரை என்று நினைக்கும்போது இந்தமாதிரி உட்கார்ந்து ஒருவர் பேசுவதைக் கேட்பது ஒன்றுதான் பரப்புரை என்று கிடையாது.தினந்தோறும்காலையில்  அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளின் கருத்துக்களைப் போட்டு குறள் வடிவில் வெண்பா இயற்றி அண்ணன் சுப.முருகானந்தம் அனுப்புகிறார். இது பரப்புரைதான்.பகுத்தறிவு சம்பந்தமான ஒரு மீம்ஸ் போடுகிறார்கள் என்றால் அது ஒரு வகையான பரப்புரைதான்.ஆட்டோ செல்வம் தனது ஆட்டோவில் அய்யா ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனையின் ஒரு பக்கத்தை ஒட்டிச்செல்கிறார் என்றால் அது ஒருவகையான பரப்புரைதான். நவீனத்திற்கு ஏற்றாற்போல் வாட்சப்,பேஸ்புக், யூ டியூப்,டிக்டாக் என அனைத்து செயலிகளின் வழியாக நமது கருத்துக்களை கொண்டு போவதும் ஒரு பரப்புரைதான்.( ஒரு படத்தினை காட்டி சுற்றுச்சூழல் --ஆப்டிக்கல் இல்லுசன் என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்தார் ). சுற்றுச்சூழல் வைத்துத்தான் மக்கள் முடிவு செய்கிறார்கள்.தவறான செயல்களைக் கூட நியாயப்படுத்தும் மக்கள் சுற்றுச்சூழல் நிகழ்வுகளால் உருவாகின்றார்கள். இதனை நீக்க ஆராய்ந்து பார்க்கின்ற தெளிவு வேண்டும். இந்த ஆராய்ந்து பார்க்கின்ற தெளிவை தந்தை பெரியார் கொடுத்தார். நாம் தெளிந்தால் மற்றவர்களைத் தெளிவுபடுத்த முடியும்.

கண்களைப் பார்த்து பேசவேண்டும். கேட்பவர்களைத் தயார் படுத்தித்தான் பேசவேண்டும். தந்தை பெரியாரின் எல்லாப் பேச்சுகளையும் கேட்டுப்பாருங்கள். முதலில் கேட்பவர்களைத் தயார்படுத்துவார். கேள்விகளாக நிறைய கேட்பார்.தான் பேசுவதை மக்கள்  கேட்பதற்கு தயாராக மக்களை ஆயுத்தப்படுத்துவார். கேட்பவருக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார்.பின்புதான் அய்யா முக்கியமான கருத்தைப் பேசுவார். நாமும் அப்படித்தான் பேசவேண்டும்.நீங்கள் எல்லாம் பயிற்சிக்கு விடை அளித்தீர்கள். நான் நேரடியாக பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே சார்ட்டுகளை கொடுத்து, குழுவாகப் பிரித்து எழுதச்சொல்லியிருந்தால் இவ்வளவு ஆர்வமாக சொல்லி இருக்க மாட்டீர்கள்.நான் ஒரு கதையைச்சொன்னேன்.அப்புறம் சில செய்திகளைச்சொன்னேன். பிறகுதான் உங்களுக்கு பயிற்சிகள் கொடுத்தேன். இப்படிசெய்யாமல் நேரடியாக பயிற்சி என வந்திருந்தால் இவ்வளவு பங்களிப்பு(ரெஸ்பான்ஸ்) இருந்திருக்காது.தயார்படுத்துதல்(எஸ்டாபிளிஸ்) செய்ய வேண்டும். கூட்டத்தினரை தயார்படுத்துவதற்கு நமக்கு நிறைய டேட்டா தெரியவேண்டும்.இந்தக்கூட்டத்திற்கு வருவதற்கு முன் நிறைய கேள்விகளை அண்ணன் செல்வத்திடம் கேட்டேன். எத்தனை பேர் வருவார்கள்? பெண்கள் எவ்வளவு பேர் வருவார்கள்? என்றெல்லாம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். யாரிடம் போய் நாம் பேசப்போகிறோம் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

வெளி நாட்டில் பந்து விளையாடுவதைக் கூட படிப்படியாக சொல்லித்தருகின்றார்கள். வெறும் பந்து விளையாட்டு என்று நினைப்பதில்லை. எப்படி பந்து வரும், எப்படிப் பிடிக்கவேண்டும், பந்திற்குப் பதிலாக கத்தி வந்தால் கூட எப்படிப் பிடிக்கவேண்டும் என்பதனைச்சொல்லிக்கொடுக்கின்றார்கள்.பிடிக்க வைப்பதற்கு அக்கறை காட்டுகிறார்கள். அந்த அக்கறை நமக்கு இருக்க வேண்டும். சும்மா நான் பந்தைப் போட்டு விட்டேன், நீ பிடித்தால் பிடி, பிடிக்காவிட்டால் போ என்று அவர்கள் விடுவதில்லை.கத்தியை தூக்கி எறிவதைப்போல நாம் கேட்பவர்களிடம் உங்களிடம் சில செய்திகளைச்சொல்லப்போகிறேன். அது உங்களுக்கு வருத்தத்தைத் தரலாம். ஆனால் உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். அதற்காகச்சொல்கிறேன் என்று அவர்களைத் தயார்படுத்திவிட்டு நாம் சொல்லவேண்டும்.அய்யா ஆசிரியர் உரைகள் இப்படித்தான் இருக்கும் ,உன்னை சங்கடப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, ஆனால் உண்மை அப்படி இருக்கிறதே என்று சொல்வது.நாங்கள் பிள்ளைகளுக்கு பந்து பயிற்சி கொடுக்கும்போது ஒரு பந்து போடுகிறேன் என்று சொல்லிவிட்டு 4 பந்தைப் போடுவோம். சில நேரம் பந்துக்குப் பதிலாக ஏதேனும் கூர்மையான பொருளைப் போடுவோம்,பிடிப்பார்கள். அவர்களிடம் சமூகம் இப்படித்தான் இருக்கும். நீங்கள் பந்து வரும் என்று எதிர்பார்க்கும்போது கத்தி வரும்.அவர்களுக்கு என்ன சொல்வோம் என்றால் சமூகத்தில் இப்படித்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். அதனையும் நீங்கள்  சமாளிக்க வேண்டும்,அலர்ட் ஆக இருக்க வேண்டும் எனச்சொல்வோம்.பலவிதமான மனிதர்களுக்கு நாம் பரப்புரை செய்யும்போது வாய்மொழியாக சில செய்திகளை சொல்லிவிட்டு பரப்புரை செய்யலாம்.

(மறுபடியும் குழுவினருக்கு கேள்விகள் கொடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் உங்கள் மனதை மிகவும் பாதித்த பிரச்சனை என்ன ? என்று கேள்வி கேட்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் பதில்கள் வாங்கப்பட்டது. பின்னர் தொகுத்து, இவ்வளவு பேரின் பிரச்சனை என்ன என்று தொகுத்துப்பார்த்தால் வேலையின்மை பிரச்சனை, வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, பணப்பிரச்சனை, மனரீதியான பிரச்சனை, ,உறவுகள் ரீதியான பிரச்சனை,குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்ச்சனைகள் என்று இருக்கின்றது என்று பயிற்சியாளர் தெளிவுபடுத்தினார்)

.இந்தப் பிரச்சனைகள் இந்த அரங்கத்தில் மட்டும் இருப்பவர்களுக்கான பிரச்சனை அல்ல. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதுதான் பிரச்சனை.நீங்கள் நமது கொள்கைகளை பரப்புரை செய்யப்போகும் எல்லா இடத்திலும் இந்தப்பிரச்சனைதான் இருக்கிறது.இதுதான் மக்கள் பிரச்சனை. நாம் இந்தப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு நோக்கி மக்களை நகர்த்த வேண்டும்.முதலில் அவர்கள் பிரச்சனைகளைப் பேசவேண்டும். பிறகு எதனால் அந்தப்பிரச்சனைகள் என்பதனை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.பின்பு தீர்வினை நோக்கி எப்படி செல்வது என்பதனைச்சொல்லவேண்டும். பார்ப்பனர்களுக்கு அய்யா பெரியாரைப் பிடிக்காது. ஆனால் பார்ப்பனப்பெண்களுக்கு அய்யா பெரியாரைப் பிடிக்கும்.ஏனென்றால் பார்ப்பனப்பெண்களின் பிரச்சனையை தந்தை பெரியார் பேசினார். அந்தந்தப் பகுதி மக்களின் பிரச்சனைகளைத் தந்தை பெரியார் பேசியிருக்கிறார்.கல்யாண வீட்டில் பேசும்போது ஏன் எல்லாச்சாதிக்காரர்களும் சமைக்கக் கூடாது? சமைத்து சாப்பிட்டால் என்ன நிகழும் ? என்று பிரச்சனைகளை பேசியிருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த இடத்தின் பிரச்சனையைப் பேசவேண்டும்.பேசுவது மட்டுமல்ல,செயல்பாடு வேண்டும்.

செயல்பாடுகளைக் காட்டுவது களப்பணி. திராவிட இயக்கத்தின் அடித்தளம் களப்பணிதான்.அதுதான் அணுகுமுறை.களப்பணி தொய்வு இல்லாமல் நடக்கவேண்டும்...அடித்தள மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் நாம் நிற்கவேண்டும்.நாம் நிற்கவில்லை என்றால் யார் நிற்கிறார்களோ அவர்கள் பின்னால் மக்கள் போய்விடுவார்கள்.ஒவ்வொரு இடத்திலும் சிலம்பம் சொல்லித்தருகிறார்கள்.ஸ்போக்கன் ஆங்கிலம் சொல்லித்தருகிறார்கள். நிறைய களப்பணிகள் நம்மைச்சுற்றி மற்றவர்களால் நடத்தப்படுகிறது.. நாம் கவனிக்க வேண்டும்.நம்மிடம் ஸ்போக்கன் ஆங்கிலம் சொல்லித்தர ஆள் இல்லையா?,சிலம்பம் சொல்லித்தர ஆள் இல்லையா? இதில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. தன்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித்தான் எனது அப்பா  இயக்கத்தைப் பற்றித் தெரிந்ததாக சொல்வார்.  பள்ளி ஆசிரியர் முதலில் நிறைய அப்பாவிடம் பேசியிருக்கிறார். ஸ்காலிர்ஸிப்,படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்று நிறைய பேசியிருக்கிறார்..படிப்பதில்,வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைப் பேசியிருக்கிறார். பள்ளி ஆசிரியர் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.. பின்பு இயக்கத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இதுதான் நமது அணுகுமுறையாக இருக்க வேண்டும்.தனிப்பட்ட மனிதர்களுக்கு பிரச்சனை என்று வருகின்றபொழுது என்னைப்போன்றவர்களிடம் கவுன்சிலிங்க் என்று வருகின்றார்கள். நாங்கள் தீர்வைச்சொல்கிறோம். அதனைப்போல நம்மைச்சுற்றி இருக்கும் மக்களின் சிக்கல்கள் நமக்குத்தெரிய வேண்டும்.அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்விற்கு நாம் வழிகாட்டுதல்(கைடன்ஸ்) கொடுத்தால் போதும்.மக்கள் நம்மை நோக்கி வர ஆரம்பிப்பார்கள். அது இங்கிருக்கும் நமது ஒவ்வொருவராலும் முடியும்.நம்மால் முடியும்.எல்லாவிதமான திறமைகள் இருக்கும் ஆட்கள் எல்லாம் கலந்துதான் இங்கு இருக்கின்றோம்.நமது கழகத்தில் இருக்கின்றோம்.

இங்கு இருக்கும் மனிதர்களின் பிரச்சனைகளை நாம் தொகுத்ததுபோல, உங்கள் கிராமத்தில் அல்லது உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை நீங்கள் தொகுக்க வேண்டும்.இதற்கு நாங்கள் உளவியலில்  தேவை(need analysis) பகுப்பாய்வு என்று சொல்வோம்.இந்தத் தேவை பகுப்பாய்வு-பின்பு தீர்வு என்பதனை மிக எளிதாக ஆரம்பிப்போம்.உங்களிடம் முதலில் சாப்பிடுவதில் என்ன பிடிக்கும் என்றவுடன் ஆர்வமாக பதில் சொன்னீர்கள்.பின்பு கொஞ்சம் கடினமாக கேட்டபோது,யோசித்தீர்கள், ஆனால் பதில் சொன்னீர்கள். இது 2 மணி நேர பயிற்சி. இதுவே இரண்டு நாள், மூன்று நாள் என்று வருகின்றபோது இயல்பாக பேச ஆரம்பிப்பீர்கள். நம்பிக்கை வரும்.புரிதல் வரும். அதன் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு வரும். .  

என்ன தேவை இருக்கிறது என்று கண்டு பிடிப்பது....சமூகவியலில் முதலில் நாம் வாழும் பகுதியில் இருப்பவர்களோடு பேசவேண்டும்.பின்பு தேவை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.பின்பு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நம்மாலான விசயங்களைச்செய்ய வேண்டும். பின்புதான் நாம் என்ன செய்ய நினைக்கிறமோ அதனைச்செய்ய வேண்டும்.   நாங்கள் ஒரு கிராமத்திற்கு சென்றோம். ஒரு 5000 குடும்பங்கள் உள்ள கிராமம். ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ 1000 வரை தண்ணீருக்காக(மினரல் வாட்டர்) செலவு செய்கிறார்கள் என்பதனை நாங்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்தோம்.அந்தக்கிராமத்தில் ஒரு ஆர்வோ பிளாண்ட் நிறுவினோம்.எல்லாக் குடும்பத்திற்கும் ரூ 1000 மிச்சமானது. .பின்பு நாங்கள் சொல்வதை என்னதான் சொல்கிறார்கள் என்பதனைக் கேட்க ஆரம்பித்தார்கள்.சிலர் எதிர்ப்புக் குரல் கொடுத்தபோதுகூட மக்களே அவர்கள் குரலை அடக்கினார்கள்.ஒரு ஊரில் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே அந்த ஊருக்கு சென்று விசாரிப்போம். அந்த ஊரைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் திரட்டிவிட்டுத்தான் ஊருக்குள் போவோம்.ஊரில் உள்ள  ஒரு பிரிவினருக்கும் மட்டும் இவரகள் வேண்டியவர்கள் என்ற எண்ணம் ஊர்மக்களுக்கு ஏற்படாதவண்ணம் செயல்படவேண்டும்.இப்படித்தான் நாம் செய்யவேண்டும்.

இந்த வேலை சமூகவியல் வேலை என்பது புதிததல்ல. இந்திய சமூகவியல் பாடப்புத்தகத்தை எடுத்தீர்கள் என்று சொன்னால் முதல் படம், முதல் பாடம் தந்தை பெரியாரைப் பற்றியதுதான்.அதற்குப்பிறகுதான் மேல் நாட்டு சமூகவியல் அறிஞர்கள் படம்,பாடம் எல்லாம் இருக்கும்.இந்திய சமூகவியல் என்று நீங்கள் இண்டர் நெட்டில் போனாலும் தந்தை பெரியாரைப் பற்றித்தான் வரும்.கம்யூனிட்டி ஒர்க் என்பது நமக்கு புதிதல்ல, நான் இங்கு நினைவுபடுத்துகிறேன்,அவ்வளவுதான்.நாம் எங்கு பரப்புரை செய்யப்போகிறோமோ அங்கே இருக்கும் தேவையை முன் கூட்டியே பகுத்து ஆய்ந்து போனால் நமது பரப்புரை எளிதாக இருக்கும். ஒவ்வொரு தோழருக்கும் என்ன திறமை இருக்கிறதோ அந்தத் திறமை மூலமாக மக்களை அணுக வேண்டும்.பேச்சுத் திறமை இருப்பவர்கள் பேச்சின் மூலமாக, எழுத்து திறமை இருப்பவர்கள் எழுத்தின் மூலமாக பரப்புரை செய்யவேண்டும்.இதே அணுகுமுறைதான் குடும்பத்திலும். நமது இயக்கத்திலேயே சிலர் சொல்வார்கள், எனது மனைவி கோயிலுக்கு போறேன் என்று சொல்கிறாள், சொன்னாள் கேட்க மாட்டேன் என்கிறாள் என்று சொல்வார்கள்.நான் கேட்பேன். அவர்களுடைய சமையல் வேலையிலே நீங்கள் நின்று இருக்கிறீர்களா?துவைக்கும் வேலையில் நீங்கள் துணை நின்றிருக்கிறீர்களா? வீடு கூட்டிருக்கிறீர்களா?குழந்தைகளைப் பார்த்து இருக்கிறீர்களா ?  என்று கேட்பேன்.இல்லை என்றால் எப்படி உங்களை அவர்கள் நம்புவார்கள் ? என்று கேட்பேன்.குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதையும் நீங்கள் பார்க்கவேண்டும்.மனைவியின்,பிள்ளைகளின் பிரச்சனையைக் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.முற்போக்கு விசயங்களை சொல்லும்போது நம்புவார்கள்.இந்த இயக்கத்திலே இருப்பதனால் எனது கணவர் இவ்வளவு உதவியா இருக்கிறார் என்று நம்ப ஆரம்பிக்கும்போது இயக்கத்தையும் பார்க்க ஆரம்பிப்பார்கள். வர ஆரம்பிப்பார்கள்.

"பகுத்தறிவு என்பது ஆதாரங்களைக் கொண்டு தெளிவடைவது " தந்தை பெரியார் சொன்னது.பரப்புரைக்கு போகும்போது ஆதாரம் வேண்டும்.இந்த ஆதாரங்களை உங்களிடமும் தேடுங்கள்.இந்தத்திறமை எனக்கு இருக்கிறது என்றால் அதற்கு என்ன ஆதாரம்? எனக்கு நல்லா எழுதத்தெரியும் என்றால் என்ன எழுதியிருக்கிறீர்கள்? எனக்கு பாடத்தெரியும் என்றால் என்ன பாடியிருக்கிறீர்கள்/...அப்படி ஆதாரத்தோடு தெளிவடைவது என்பதுதான் பகுத்தறிவு.ஆதாரம்தான் அடிப்படை.

இனி வரப்போகும் காலம் இப்படித்தான் வரப்போகுது...அம்மா ...நான் ஒரு நாத்திகவாதி என்னும் பதாகையோடு ..இந்தப் பக்கம் பாருங்கள்...ஆட்டுக்குத்தான் மேய்ப்பவர்கள் தேவை..இந்த மாதிரியான பதாகைகளோடு பேரணிகள் வெளி நாடுகளில் நிறைய வர ஆரம்பித்து விட்டது.இந்த மாதிரியான பேரணிகள் நமது பள்ளிக்குழந்தைகள் நடத்துவதற்கு ரொம்ப நாள் ஆகாது..ஆனால் அதற்கான களப்பணியை நாம் உருவாக்க வேண்டும்.நான் எப்படி இயக்கத்தை நம்ப ஆரம்பித்தேன் ?.அவ்வளவு சுதந்திரம்... எங்கள் வீட்டில் படிக்கணுமா படி, வேலை பார்க்கணுமா..வேலை பாரு..எந்த நேரத்தில் மாப்பிள்ளை பார்க்கணும் என்று நினைத்தேனோ அப்போதுதான் மாப்பிள்ளை பார்த்தார்கள்.இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நீங்களும் மதியம் வெளியே சாப்பிட்டுக்கொள்ளுங்கள், நானும் சாப்பிட்டுக்கொள்கிறேனென்று என் கணவரிடம் சொல்லிவிட்டேன்..இன்றைக்கு என்று இல்லை வேலைக்கு போன நாளில் இருந்தே , முடியவில்லை என்று சொன்னால் எனது கணவரிடம் ஒன்று நீங்கள் சமையுங்கள், அல்லது நீங்கள் வெளியே சாப்பிட்டு விட்டு எனக்கும் வாங்கி வந்து விடுங்கள் என்று சொல்லிவிடுவேன்.ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு நன்றாக சமைக்கத்தெரியும். எல்லா வேலையும் தெரியும். ஆனால் இந்த வேலையை இப்ப செய்ய வேண்டுமா? வேண்டாமா?என்பது எனது முடிவு.உரிமையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். இரவு என்றாலும் நான் தனியாகப் போவேன். நாம் நம்மை நிருபித்தால்தான் நம்மை வெளியே விடுவார்கள்.ரொம்ப பாதுகாப்பான வளையத்தை விட்டு வெளியே வந்து நாம்(பெண்கள்) நம்மை நிருபிக்கவேண்டும்.

பில் ஜிக்கர்மேன் என்பவர் ஒரு சமூக அறிஞர் .இவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார்.அந்த ஆராய்ச்சி முடிவின்படி, நாத்திக பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் மிகவும் பெருந்தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள்.சுயநலம் இல்லை. ஆனால் மத நம்பிக்கை உடைய பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் மிக அதிகமான சுய நலம் உடையவர்களாக இருக்கிறார்கள்.மதக்குழந்தைகள் தன்னிடம் உள்ள எந்தப்பொருளையும் கொடுக்க மறுக்கையில், நாத்திகக் குழந்தைகள் கேட்கும் பொருளை எல்லாம் கொடுக்கின்றார்கள்.நாத்திகக் குழந்தைகளுக்கு எல்லாம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.நாத்திக்குழந்தைகள் மனதில் இனவெறி என்பதே இல்லை.நேர்மறையாக இருக்கிறார்கள்.நான் இணையத்தில் இருந்துதான் எடுத்திருக்கிறேன். Children of atheist என்று போட்டாலே எல்லாம் வந்துவிடும்.அறிவியல் அறிஞர் ஆராய்ச்சியின்படி கொடுத்திருப்பதால் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது. சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்..அது எப்படி நாத்திகக்குழந்தைகளை நல்ல விதமாக சொல்லலாம் என்று.ஆனால் உண்மை உண்மைதானே.. இதெல்லாம் நமக்கு ஆதாரம். நாம் நாத்திகவாதிகளாக இருக்கிறோம். நாத்திகத்தில் நாம் நம் குழந்தைகளை வழி நடத்திச்செல்கிறபோது எப்படிப்பட்ட நல்ல குழந்தைகளாக வளர்கிறார்கள் என்பதற்கு இது எல்லாம் ஆதாரம்.ஆதாரத்தோடு நாம் பரப்புரை செய்ய முடியும்.

Quora என்பது இணையத்தில் கேள்வி கேட்கும் தளம். அதில் தந்தை பெரியார் பற்றி நமது இயக்கத்தைச்சாராதவர்கள் பதில் கொடுத்திருக்கின்றார்கள்.பெரியார் என்பது வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டும் இல்லை. மக்கள் பிரச்சனையை பேசியவர் பெரியார் .சமூக நீதியை,பெண்ணுரிமையை, சாதி ஒழிப்பை முன்னெடுத்தவர் என்று பதில் கொடுத்திருக்கின்றார்கள்.ஜனார்த்தனன் என்று அவரின் பெயர். அவர் வட நாட்டைச்சார்ந்தவர் என்று வருகின்றது.நாம் பெரியாரை பேசுகிறோம்,. அதில் ஆச்சரியமில்லை. இன்றைக்கு இந்தியா முழுவதும் பெரியாரைப் பேசுகிறார்கள். பேசுகின்றவர்களை பெரியார் எந்த வகையில் தொட்டு இருக்கின்றார் என்பதனை நாம் பார்க்கவேண்டும். அப்போதுதான் நாம் அந்த முறையில் பரப்புரை செய்வதற்கு வசதியாக இருக்கும்.அந்த வகையில் தான் நான் களப்பணியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சமூகப்போராளியாய் ,தந்தை பெரியாரைப் பார்க்கும் பார்வை ஆணித்தரமாக மக்களிடம் இருக்கிறது.தந்தை பெரியார் எப்படிப்பட்ட சமூகப்போராளி என்னும் அறிமுகத்தோடு நாம் பரப்புரையை ஆரம்பிக்கலாம். எவரும் கேட்பார்கள்.

அடுத்தது அன்பின் மொழி என்பது.உங்கள் நண்பராக இருக்கலாம், உறவாக இருக்கலாம் அல்லது கணவன் மனைவியாக இருக்கலாம். இரண்டு பேரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் சண்டை வருகிறது.ஒத்துப்போகாத நிலைமை இருக்கிறது என்றால் என்ன மாதிரியான மொழியில் நாம் பேசவேண்டும் என்பது தெரியவேண்டும்.அதற்கு  இந்த அன்பின் மொழி(லவ் லாங்குவேஜ்)யை நீங்கள் பயன்படுத்தலாம். அன்பின் மொழி என்பது எந்த வகையான மொழியில் நாம் பேசவேண்டும் என்று தெரிந்துகொள்வது. அதற்கு உளவியல் சில வரையறைகளைக் கொடுக்கிறது.இந்த படத்தில் 30 கேள்விகள் இருக்கிறது. 30க்கும் நீங்கள் பதில் அளிக்கவேண்டும்.அந்தப் பதில்களை 5 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலருக்கு பாராட்டுவது மட்டும்தான், வாய் வார்த்தைகளின் மூலமாக பாரட்டுவது மட்டும்தான் பிடிக்கும். பாராட்டுபவர்கள் மட்டும்தான் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். சிலருக்கு தன்னோடு தன்னுடைய நேரத்தை  செல்வழிப்பவர்கள் மட்டும்தான் அன்பானவர்கள் என்று நினைப்பார்கள்,சிலர் ஏதேனும் தனக்கு அன்பளிப்பு கொடுப்பவர்கள் மட்டும்தான் தன்னிடம் அன்பாக இருக்கிறார்கள் என நினைப்பார்கள்,தன்னோடு சேர்ந்து வேலை பார்ப்பவர்கள் மட்டுமே தன்னிடம் அன்பாக இருப்பவர்கள் என சிலர் நினைப்பார்கள்,சிலருக்கு உடலைத் தொட்டு சொல்பவர்கள்,பழகுபவர்கள் மட்டுமே தன்னிடம் அன்பாக இருப்பதாக நினைப்பார்கள். நாம் ஒத்துப்போக நினைப்பவர்கள் இந்த 5 வகையான பிரிவில் எந்த பிரிவு என்பதில் கண்டுபிடிப்பதில்தான் வெற்றி இருக்கிறது,மகிழ்ச்சி இருக்கிறது.

எனது மகளுக்கு உடலைத் தொட்டு பழகுவது தான் பிடிக்கும் என்றால் நான் எவ்வளவு பாராட்டிப்பேசினாலும், எவ்வளவு வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் பிடிக்காது.புரியாது. புகழ்ந்து பேசுவதை மட்டுமே விரும்புகிறவர்களிடம் நீங்கள் தொட்டுப்பேசினாலோ, நேரம் செல்வழித்தாலோ,உதவியாக வேலை செய்தாலோ பிடிக்காது. கல்யாணம் முடிந்த புதிதில் ஒருவரது கணவர் அவரது மனைவிக்கு   கிப்டாக வாங்கி வந்து கொடுத்தார்.மனைவியின்  விருப்பமோ கணவர் அவரோடு  சேர்ந்து வீட்டு வேலை பார்க்கவேண்டும் என்பது.கொஞ்ச நாட்களுக்குப்  பின்பு இணையர்களுக்கு புரிதல் ஏற்பட்டது.இப்போது கணவருக்கு மனைவி கிப்ட் வாங்கித்தருகிறார். கணவரோ மனைவியின்  வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்கிறார்.இருவரின் அன்புமொழியும் ஒருவருக்கு ஒருவர் புரிந்ததால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி உங்களோடு இருப்பவர்களை,உங்களைச்சுற்றி இருப்பவர்களைப் புரிந்து கொள்ள இந்த உளவியல் பயன்படும்

பாராட்டு மட்டுமே எதிர்பார்ப்பவரிடம் நீங்கள் விமர்சனம் செய்தால் உங்கள் பக்கமே திரும்ப மாட்டார்.  வார்த்தைகளால் பாராட்டை விரும்புவர்களுக்கு .ஒரு வாரமாக பாராட்டு கிட்டவில்லையென்றால் சோர்வாகி விடுவார்கள்.கிப்ட் பிடிப்பவருக்கு ஒரு வாரமாக ஒரு கிப்ட்டும் கொடுக்கவில்லையென்றால் மனச்சோர்வு ஆகிவிடுவார். வேலையில் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் கணவரோ,பிள்ளைகளோ வேலைக்கு உதவி செய்யவில்லை என்றால் சோர்வாகி விடுவார்கள். இதுதான் மனச்சோர்வு. மற்றவர்களுக்கு  எதிரான விசயங்களை அவர்கள் சொல்வதற்குக் காரணம் இதுதான். இது தனிப்பட்ட மனிதர்களுக்கு தேவைப்படும் அன்பின் மொழி.

சமுதாயத்திற்கு,கம்யூனிட்டிற்கு அன்பின் மொழி என்பது களப்பணி,மனிதர்கள் சொல்வதைக் கேட்பது, அவர்களுக்கு உதவி செய்வது,வழி காட்டுவது  அதனை நாம் செய்ய வேண்டும்.செய்வோம்.வலிமையான பரப்புரையை மேற்கொள்வோம்.நமது பெரியார் கொள்கை உலகமயமாகிறது. உலகெங்கும் மக்கள் நாத்திகம் நோக்கி தங்கள் பார்வையை செலுத்தத்தொடங்கியிருக்கிறார்கள். நாம் திட்டமிட்டு பரப்புரை செய்தால்,மிகப்பெரிய வெற்றியை நாம் பெற முடியும்.அதற்கு இந்த உரை பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியே. வெற்றிபெறுவோம். வாய்ப்பிற்கு நன்றி.  

சுயமரியாதை நாளை(டிசம்பர் 2)  முன்னிட்டு மதுரையில் 24.11.2019 ஞாயிறு காலை  'உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும்' என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா மகேந்திரன் அவர்களின் உரையின் எழுத்து வடிவம். தொகுப்பு...முனைவர்.வா.நேரு

Thursday 31 October 2019

அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு 80-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்:

திராவிடர் கழகச்செயலவைத்தலைவர்  திராவிடர் கழகச்செயலவைத்தலைவர்  அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு 80-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்:  :





                                   திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் , அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் (01.11.2019) இன்று. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் இருந்தபொழுது, நான்  மாநிலப்பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலராக நியமிக்கப்பட்டேன். பின்னர அய்யா குடந்தை தி.இராசப்பா அவர்கள் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் நான் 2005-ல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டேன். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணிக்கு அடுத்த நிலையில் இருந்த   அய்யா பொருளாளர் கு.சாமிதுரை, அய்யா கு.வெ.கி.ஆசான் போன்றவர்களிடம் மரியாதையும் ,அன்பும் உண்டெனினும், நெருங்கிய  நட்பு ரீதியான தொடர்பு இல்லை. அய்யா சு.அறிவுக்கரசு அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு மூத்த நண்பரைப் போலப் பழகினார்.இப்போதும் பழகுகின்றார்.எனக்கு கிடைத்த மிகப்பெரிய நட்பாக, திசைகாட்டியாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ளின் நட்பு அமைந்தது.

                                         பகுத்தறிவாளர் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பதற்காக, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதலில் நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக வரும் சுற்றுப்ப்பயணத்தை அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ள் மேற்கொண்டார். அவரோடு நாகர்கோவிலில் இருந்து நானும் அந்தப் பயணத்தில் உடன்வந்தேன். பல ஊர்களில் கருத்தரங்குகளும் நடைபெற்றன. பல ஊர்களில் நானும் பேசினேன். 2002-03-ல் நடந்த அந்தக் கூட்டங்களில் எனது பேச்சைக் கூரிமையாக கவனித்து பல்வேறு ஆலோசனைகளை அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ள் அளித்தார்கள். " பேச விரும்பினால் நிறையப் புத்தகங்கள் படிக்கவேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு நோட்டுப் போடவேண்டும். 40,50 வருடமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் நான் தயாரிப்போடுதான் போகின்றேன் . தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் கி.வீரமணி, சமூக நீதி,திராவிட இயக்க வரலாறு ...என்று பல தலைப்புக்களுக்கு நோட்டு போட்டு எழுதுகின்றேன். அதனைப்போல் நீங்களும் செய்ய வேண்டும் " என்றார். மிகப்பெரிய வழிகாட்டுதலாக இருந்தது. அவரின் வழிகாட்டுதல்  ஒவ்வொரு முறையும் பேசி முடித்தபின்பு , அன்றைக்கே எனது பேச்சின் நிறை,குறைகளைச்சுட்டிக்காட்டுவார். நான் பேசுவதைவிட, அவர் பேச்சைக்கேட்கப்போகும் கேட்பாளானாக விரைவில் மாறிப்போனேன். தொடர்ந்து பேசிவந்தாலும், முதல் கூட்டத்தில் பேசியதை அப்படியே பேசும் பேச்சாக அவரின் பேச்சு  இருக்காது. ஒவ்வொரு கூட்டத்திலும் நிறைய புதிய செய்திகள், புதுக்கோணத்தில் பல்வேறு செய்திகளைச்சொல்வதாக அவரின் சொற்பொழிவு இருக்கும் இன்றுவரை அவரின் உரைவீச்சு அப்படித்தான் புதிய கோணத்தில், புதிய செய்திகளைச்சொல்லும் உணர்ச்சிமிக்க உரையாகவே இருக்கிறது. தனது உரையில் புரட்சிக்கவிஞரின் கவிதைகளை பெரும்பாலும் நிறைய இடங்களில் உபயோகப்படுத்துவார்.  எனது பேச்சைக் கேட்கும் தோழர்கள் நிறைய புதிய செய்திகளைக்கூறும் சொற்பொழிவாக எனது சொற்பொழிவு இருந்தது எனக்குறிப்பிடுவதுண்டு. அதற்குக் காரணமாக அமைந்தது அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் தொடர்பும், அறிவுரைகளும். .

                            சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, 'படித்த பார்ப்பன நண்பரே ' என்னும் கவிதையை எழுதி, விடுதலை ஞாயிறு மலருக்கு அனுப்பினேன். அப்பொழுது விடுதலையில்  அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் அதனை வெளியிட்டதோடு, 'உங்களுக்கு  இந்தப் புதுக்கவிதை வடிவம் நன்றாக வருகிறது.தொடர்ந்து எழுதுங்கள்  ' என்று வழிகாட்டினார். அதிலிருந்து நிறையத் தொடர்ச்சியாக பல கவிதைகளை எழுதி  விடுதலை ஞாயிறு மலருக்கு அனுப்பினேன். வெளிவந்தது. பின்னர் அந்தக் கவிதைகளை எல்லாம் 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்னும் தலைப்பில் வெளியிட்டோம். அந்தக் கவிதை நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை வழங்கினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மதிப்பிற்குரிய அய்யா சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு ஒரு நூலாசிரியர் என்னும்  பெயர்  பெற்றேன். அதனைப்போலவே 'எழுத்து 'இணையதளத்தில் எழுதி வெளிவந்த எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு  நூலான 'சூரியக் கீற்றுகள் 'கவிதைக்கும் அணிந்துரையை பாராட்டுரையாக  எழுதி அளித்தார். அடுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்போகின்றேன். என்றேன். 'நெருப்பினுள் துஞ்சல் ' என்னும் அந்தச்சிறுகதைத் தொகுப்பை படித்துவிட்டு வெகுவாகப்பாராட்டினார். அவர் அந்தச்சிறுகதைத் தொகுப்பிற்கு என்ன சொல்வாரோ? என்னும் பயம் இருந்தது. அவர் அப்படித்தான். தப்பென்றால் தப்புத்தான். அதனைச்சொல்வதற்கு அஞ்சமாட்டார். நட்பு போய்விடுமே,அது போய் விடுமே இது போய்விடுமே எனப்பயப்படாமல் கருத்துக்களை சொல்பவர். ஆனால் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். முக நூலில் உங்கள் புத்தகத்தைப் பற்றி பாராட்டி எழுதப்போகிறேன் என்று சொன்னதும் ஒரு புது உற்சாகம் வந்தது. அடுத்தடுத்த புத்தகங்களுக்கு ஊக்கமான ஊக்கம் அந்தச்சொற்கள். மிகவும் உரிமையோடும் தோழமையோடும் தனது இயக்கத்தோழரான எனக்கு,  எனது  புத்தகங்கள்  வெளியீட்டுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் விளங்குகின்றார்.  

                        தனிப்பட்ட வாழ்விலும் என் மேல் மிகப்பெரும் அன்பைச் செலுத்துபவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள்.சில நேரம் எரிமலை போல பொங்கிவிடுவார் , அதனால் பல பேர் அவரிடம் நெருங்கவே பயப்படுவதுண்டு. ஆனால் அவர் ஒரு பலாப்பழம் போல. வெளிப்பார்வைக்கு கரடுமுரடானவர் போலத்  தோன்றினாலும் பொங்கும் அன்பாலும் , அனுபவமிக்க வழிகாட்டுதலிலும் பலாச்சுளையைப் போன்றவர் அவர். எப்போதும் உரிமையோடும் , நட்போடும் ,உணமையோடும் பழகுபவர்களுக்கு அவர் பலாச்சுளைதான். ஆனால் தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் எரிமலைதான்  . புரட்சிக் கவிஞரின் ஊரான புதுச்சேரிக்கு பக்கத்து ஊரான கடலூரைச்சார்ந்தவர் என்பதாலோ என்னவோ புரட்சிக் கவிஞரைப் போலவே பல விசயங்களை நேருக்கு நேராகவே பட்டென்று சொல்லிவிடுவார். 

நிறைய வெளி நாடுகளுக்குச்சென்றவர். அவரது மகன் மணி நிலவன், வெளி நாட்டில் நியூசிலாந்தில் வசிக்கின்றார். மகன் வீட்டிற்கு சென்ற இடத்திலும் தந்தை பெரியார் பற்றி, திராவிட இயக்கம் பற்றி அந்த நாட்டின் வானொலியில் பேசினார்.கூட்டங்களில் பேசினார். எங்கு சென்றாலும் தந்தை பெரியாரை,திராவிடர் கழகத்தின் கொள்கைகளை மிகத்தெளிவாக இளைஞர்களுக்கு, மக்களுக்கு விளக்ககூடியவர்.புதுமையும் பழைய இலக்கியச்செய்திகளையும் கலந்து அவர் அளிக்கும் உரைகள் எப்போதும் தெவிட்டாத தேன்தான்..

                 கடலூரில் உள்ள அவரது வீட்டிற்குப் போயிருக்கிறேன். மாடி முழுவதும் புத்தகங்களாக இருக்கும் . புத்தகம் என்றால் மிக அரிதான புத்தகங்கள், அதிக விலை உள்ள புத்தகங்கள். ஆனால் எல்லாம் ஒழுங்காக இருக்கும் . எளிதில் தேடி எடுக்க வசதியாக இருப்பதாக இருக்கும் . இதனை நான் நடைமுறைப்படுத்தவேண்டும். அதனைப் போல உயர் அரசு அதிகாரியாகப் பணியாற்றியதாலோ என்னவோ, டாக்குமெண்டேசன் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் . பைல் , பைலாக பிரித்து பிரித்து வைத்திருப்பார். சாதாராண தோழரிடமிருந்து வந்த 50 பைசா கடித்த்தைக்கூட மிகக் கவனமாக பைலில் நம்பர் போட்டுச்சேர்த்திருப்பார். மிகப்பெரிய ஞாபகசக்தி உடையவர். பல்வேறு வரலாற்றுத்தகவல்களை, நாள் அன்று என்ன கிழமை என்பதையெல்லாம் கூறுவார். வியப்பாக இருக்கும். ஆங்கிலத்திலும் மிக அருமையாகப்பேசுவார். தொழிற்சங்கத்தில் தமிழகத்தின் தலைவராக திரு.சிவ.இளங்கோ அவர்களுக்குப் பின் இருந்தவர். அவரின் தொழிற்சங்க அனுபவங்களும், விழுப்புண்களும் ஒரு நூலாக ஆக்கும் அளவுக்கு விரிவானவை, நிறைய நகைச்சுவை  உணர்வு கொண்டவர். 

                       தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஊர்க்காரர் என்பது மட்டும்ல்ல, அவரின் மிகப்பெரிய நம்பிக்கைக்கு உரியவராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் திகழ்கின்றார். 'பெரியாரின் பன்முகம்' என்னும் நூலில் ஆரம்பித்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட  நூல்களை ஆக்கியுள்ளார். எல்லா நூலும் பெரியாரியல் அடிப்படையில் அமைந்தவை. படிப்பவனிடம் சுயமரியாதை உணர்வை ஊட்டும் வல்லமை பெற்றவை. பேருக்காக எழுதுபவராக இல்லாமல், பரம்பரைப் பகைவர்களின் போருக்காக எழுதுபவராக இருக்கின்றார். 

                       இன்று 80-வது  பிறந்த நாள் காணும் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் 100 ஆண்டையும் கடந்து வாழவேண்டும். வாழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இன்னும் நூல்கள் பல படைக்க வேண்டும் . வய்தாக வயதாக தந்தை பெரியார் குரலைப் போலவே அய்யா அறிவுக்கரசு அவர்களின் குரலும் இருக்கிறது. தந்தை பெரியார் வாழ்ந்த காலம் தாண்டி  அவரின் குரலில் , தந்தை பெரியாரின் கருத்துக்களைப் பரப்புவார். நாம் பார்ப்போம்

                        அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு 80-ஆம் ஆண்டு  பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும். .............

                                   வாழ்க தந்தை பெரியார்,
                                   வாழ்க தமிழர் தலைவர் கி.வீரம்ணி,
   வாழ்க 80-ஆம் ஆண்டு பிறந்த நாள்  விழாக்காணும் அய்யா சு.அறிவுக்கரசு...
                                     வாழ்க! வாழ்க! வாழ்க!                 


                                 
                                                                     .                                                           
                     


Sunday 27 October 2019

பாலியல் விடுதலையே ...பெண் விடுதலை...

பாலியல் விடுதலையே ...பெண் விடுதலை

               முனைவர் வா.நேரு, தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.



'பெண் ஏன் அடிமையானாள் ?' என்னும் தந்தை பெரியாரின் புத்தகம் இலட்சக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கின்றது. அந்தப் புத்தகம் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பல மேடைகளில் மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது, சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு தனது வாழ்க்கை அனுவங்களையும் இணைத்து ஒருபுத்தகம் வருமா? அதுவும் ஒரு பெண்ணால் எழுதப்படுமா? என்னும் எதிர்பார்ப்பு நம்மைப் போன்றவர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் விதமாக ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. அந்தப்புத்தகத்தின் தலைப்பு 'அக விடுதலையே பெண் விடுதலை' என்னும் புத்தகம். புத்தக ஆசிரியர் ஓய்வு பெற்ற கல்லூரிப்பேராசிரியர்  முனைவர் நா.நளினிதேவி அவர்கள். ஓய்வு பெற்ற பல கல்லூரிப் பேராசிரியர்கள் பெண்களை அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் எனும் வெற்று போதனைகளால் நிரப்பிக்கொண்டிருக்கும் வேளையில் 'பாலியல் விடுதலையே பெண் விடுதலை ' எனும் நோக்கத்தில் பேசாப் பொருளை நான் பேசத் துணிந்தேன் என்று துணிவாக விரிவாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.சென்னை, கைத்தடி பதிப்பகம் வெளியிடப்பட்டு அண்மையில் வெளிவந்துள்ள நூல் .



இந்த நூல் வெளிவர இருந்த நிலையில் தன்னுடைய முக நூல் பக்கத்தில் "" அக விடுதலையே பெண்விடுதலை" எனும் நூலின் நோக்கம் என்ன ? இதோ! "மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம், "இது காதல்அல்ல, "அது "காதலுக்கு விரோதம்", அது "காம இச்சை," இது "விபச்சாரம் " என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்பும் இல்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்து விடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்" என்ற பெரியாரின் நோக்கமே இந்நூலின் நோக்கம்!( பெண் ஏன் அடிமையானாள்?) என்று நோக்கத்தை மிகத் தெளிவாக வரையறுத்துக்கூறுகின்றார்.அதனால்தான் நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "'பெண் விடுதலை பற்றி வந்துள்ள நூல்களில் ஆழம் மிக்கதாகவே ஒளிர்கிறது. ஒரு பெண்ணே பெண் விடுதலை பற்றி எழுதுவதுதான் சரியானது...." என்று குறிப்பிடுகின்றார்.




யானை விடுதலை பெற வேண்டுமானால் தன்னை எதனால் கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்னும் புரிதல் யானைக்கு வேண்டும்.சிறுவயதில் போடப்பட்ட கயிற்றினாலோ, சிறு சங்கிலியாலோதான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று யானை புரிந்துகொண்டால், தனக்குப் போடப்பட்டிருக்கும் தளைகளை ஒரு நொடியில் உடைத்துக்கொண்டு வெளியேற முடியும். அப்படி பெண்களை இந்தச்சமூகம் எதனால் பூட்டுப்போட்டு பூட்டியிருக்கிறது,எப்படி எப்படி எல்லாம் பூட்டுப்போடுகிறது  என்பதனையும் அதனை எப்படி உடைத்து வெளியே வரவேண்டும் என்பதனையும் 'ஐம்புலன் பூட்டும் கட்டுடைத்தலும் ' என்னும் முதல் தலைப்பில் விரிவாக எழுதியிருக்கின்றார்.சமூகத்தில் நிலவும் பாலியல் கட்டுப்பாடுகளை  பெண்களே, அறிவீர்களா நீங்கள் ? உங்களை (பெண்களை) எல்லா வகையிலும் பாலியல் நோக்கில் அடிமைப்படுத்தியிருக்கிறது ஆண்களால் ஆன இந்தச்சமுதாயம். 'பெண்ணானவள் தன் காதலையும் காமத்தையும் பேசக்கூடாது என்றும் அது குறித்த எண்ணங்களையும் உணர்வுகளையும் உரியவர்களிடம் கூட வெளிப்படுத்தக்கூடாது என்றும் பெண்ணின் ஐம்புலனுக்கும் பூட்டு போடப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிட்டு 'பெண் விடுதலைக்கு  இடையூறான சிக்கல் இரண்டு பிரிவுகளாகக் கிளைத்து நிற்கின்றது. ஒன்று அகச்சிக்கல்,மற்றொன்று புறச்சிக்கல்.' என்பதனைச்சுட்டி அவை எவையெவை என்பதனை அழுத்தமான சொற்களால் எழுதியிருக்கின்றார்.

'பெண் தனக்காக படைக்கப்பட்டவள் என்று ஆண் எண்ணுவது போலவே ,பெண்ணும் தான் ஆணுக்காகவே பிறந்தவள் என்றே நம்புகிறாள்' என்பதனைக் குறிப்பிட்டு 'பெண் ,எவ்வளவு படித்திருந்தாலும் ,எவ்வளவு உயரிய பணியில் இருந்தாலும் ,பெரும் பணம் படைத்தவராக இருந்தாலும் திருமணம் ஆகவில்லை என்றால் அவளுக்குச்சமுதாயத்தில் உரிய மதிப்பு இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.' என்று குறிப்பிட்டு, பெண்கள் வெறும் 'பிள்ளை பெறும் எந்திரமாக' மட்டுமே சமூகத்தால் பார்க்கப்படுகின்றார்கள் என்பதனையும் எல்லாவற்றையும் விடவும் பெண்கள் தாம் அடிமைகளாக இருக்கின்றோம் என்ற உணர்வே இன்றித் தாம் எந்த வகையிலும் ஆணால் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொருளாகவே கருதுகின்றனர். கற்பு என்ற கற்பனைச்சிலுவை அவள் மீது சுமத்தப்பட்டுள்ளதே இதற்கெல்லாம் காரணம் ." என மிகச்சரியாகவே குறிப்பிடுகின்றார். 'அறியாமையும் ஆணவமும்', 'கற்பின் விளக்கமும் கற்பனை இறுக்கமும்',' திரைகளும் சுவர்களும்', 'ஆரவாரப்பட்டங்களும் அடிமை வாழ்வும்', 'கேலி,கிண்டலும் கிளர்ந்தெழும் சினமும்' என்னும் உட்தலைப்புகளில் விவரிக்கும் கருத்துக்களில் கனல் தெறிக்கிறது..ஏன் இப்படி பெண்கள் அடங்கிப்போய்க்கிடக்கிறார்கள் என்னும் கோபமும் சொற்களாய் வெடித்திருக்கிறது.

'இலக்கியங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் புனைந்தவர்கள் ஆண்கள். எனவே அவற்றின் அடிக்குரலாக பெண்ணியத்துக்கு எதிரான குரலே இழைகின்றது.ஆண்களை உயர்த்தியும் பெண்களைத் தாழ்த்தியும் இவர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன ' எனக் குறிப்பிட்டு பெண்களுக்கு எதிரான படைப்புகளைப் பட்டியலிட்டு எழுதுகின்றார். மகாபாரதக் கதையில் வீட்டுமன்(பீஷ்மன்) உடன் போராடி அவன் சாகக் காரணமான அம்பை, இராமயணக்கதையில் இராம,இலக்குவர்களை எதிர்த்து போரிட்ட தாடகை, அய்யம் கொண்ட இராமனை விட்டுத் தம் குழந்தைகளுடன் மீண்டும் காட்டிற்கே திரும்பிய சீதை,தன்னை கொல்லக்கருதிய துணைவனைக் கொன்ற குண்டலகேசி என எதிர்க்குரல் எழுப்பிய படைப்பு மாந்தர்களை வரிசைப்படுத்திக் கொடுத்துள்ளார். மறு வாசிப்பு வாசிக்கலாம் இந்தப்பெண்களின் கண்ணோடத்தில் காப்பியங்களை, கதைகளை. தமிழ்ப்பேராசிரியர் என்பதால் நிறையப் படைப்புகளை பெண்ணியமும் இன்றைய பெண் படைப்பாளரும் என்னும் தலைப்பில் கொடுத்துள்ளார். பாரதிதாசன் கூடப்பெண் ஆண் துணையின்றி வாழமுடியும் என்று பாடவில்லை, பாரதி ஆரியம் உயர்வு என்ற கருத்துடன் ,வேதங்களில் பற்றுக்கொண்டவனாகவே இருந்தான். ஆரியமும், வேதமும் பெண்ணுக்கு எதிரானவை என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.தான் மனுசி,தனி ஓர் அலகு,தனக்கென்று ஓர் இருப்பு உள்ளது என்ற விழிப்புணர்வைப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் காண முடிகிறது எனக்குறிப்பிட்டு, பெண் கவிஞர்கள் சங்கரி,சன்மார்க்கா,சிவரமணி,சுபத்திரா,நர்மதா,பாரதி கண்ணம்மா,வத்சலா,வித்யா,றஞ்சனி,ஜெயராணி போன்றவர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டு 'மானமிகு வாழ்வே ஊனமற்ற உயிர் வாழ்க்கை ' எனக்குறிப்பிடுகின்றார்.

'அவிழும் முடிச்சுகள் ' எனக்குறிப்பிட்டு 'பெண் சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் சிந்தனை மாற்றங்கள்,அவர்களுக்கு வகுக்கப்பட்டிருந்த இலக்கணங்களை உடைக்கத்தொடங்கி விட்டன. அவர்களுக்கு  மறுக்கப்பட்டிருந்த வெளியுலகின் வாசல்,அவர்கள் முன் தன் கதவுகளைத் திறந்துள்ளமையால்,புதிய காற்றையும் புதிய உலகையும் காணத்தொடங்கிவிட்டனர் ' எனக்குறிப்பிடுகின்றார்.' நாட்டைக்காக்கும் படையிலிருந்து விண்கலம் வரை அனைத்துத் துறையிலும் பெண்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர்.ஆனாலும் ...ஆண்களை விடவும் பெண்களுக்கு ஊதியம் குறைவு,பணி செய்யும் இடங்களிலும் பாலியில் தொல்லை,மிகுதியான வேலை எனப் பல நூறு சிக்கல்கள் ' என்பதனை விவரித்துக்கூறியிருக்கின்றார். 'பாலியல் சின்னம் என்பதற்கு அப்பாற்பட்டுப் பெண்ணும் தம்மைப்போன்ற மனிதரே என்ற மனநிலை உருவாக வேண்டும். அப்போதுதான் வீடுகளில்,தெருக்களில் பொது இடங்களில்,பேருந்துகளில்,கோயில்களில்,தொடர்வண்டிகளில் பெண்கள் எந்தச்சிக்கலும் இன்றிச்சமன்மை நிலையுடன் உலவ முடியும். ஆண்களால் இன்னலுக்கு ஆளான பெண்கள் எந்தச்சமுதாய அவதூறும் அச்சமும் இன்றி வாழும் நிலையே பெண் விடுதலையின் ஒரு கூறு ஆகும் ' எனப் பெண் விடுதலை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைச்சொல்கின்றார்.

இத்தனை காலமாகப் பெருகிவரும் கல்வியும் அறிவியல் வளர்ச்சியும் பெண்ணுக்கு விடுதலை தரவில்லை என்றால் அவை எல்லாம் எங்கே போகின்றன? என்ன ஆயின? அவற்றால் என்ன பயன் ? பெண் விடுதலை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலேயே பல சிக்கல்கள்! பெண் எல்லா நிலையிலும் எல்லா வகையிலும் ஆணைப்போன்று அனைத்து உரிமைகளையும் எந்த ஒரு சமுதாய அவதூறோ,சமுதாய அச்சமோ இன்றிச்சமமாக இருக்கவேண்டும் என்று கொள்ளலாம். இந்த எல்லா வகையிலும் ,எல்லா நிலையிலும் என்பதில் பாலியல் நழுவி விடுகின்றது,அல்லது விடப்பட்டு விடுகின்றது. " எனக்குறிப்பிட்டு பெண்விடுதலையும் பாலியல் தளையும் என்பதனை விவரிக்கின்றார். 'பாலுணர்வு இயற்கையும் கற்புக்கல்லறையும்' என்று தலைப்பிட்டு. 'பாலுணர்வு,பாலியல் என்றாலே சொல்லக்கூடாத சொற்கள்,பேசக்கூடாத பொருள் என்றே கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் இழிவு, மற்றொரு பக்கம் தூய்மை என்னும் இரட்டை முகங்கள்! பசி, நீர்,வேட்கை,உறக்கம் போன்றதே வெகு இயல்பான ஒன்று பாலுணர்வு. கட்டுப்படுத்தப்பட்டு மறைவாகவும், மறையாகவும் வைத்திருப்பதால் '....சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, பெண் அடிமைக்கு அடிகோலும் மடத்தனத்தை 'பாலுணர்வும் சுரப்பியும்'; 'பூப்பு நீராட்டு விழாவும் இழிவும்',பாலியலும் எதிர்மறை விளைவும்' போன்ற உட்தலைப்புகளுக்குள் விவாதங்களாக வைத்திருக்கின்றார். 

" பெண் விடுதலைப் போராளிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மரபின் அடிப்படையில் ,கற்பின் அடிப்படையில் பெண் விடுதலை வேண்டுபவர் ஒரு சாரார். தாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு பொதுவாக்கப்படவேண்டும் என்பவர். மற்றொரு சாராரோ பெண்மொழி எனத்தாமும் ஆணின் கொண்டு தம் உடலையும் ஆணின் உடலையும் புனைந்து உரைத்துக்கொண்டு,கலவி இன்பக்கூறுகளை விரிவாகக் கூறியும்,ஆண்களை வெறுத்தும் பழித்தும் எழுதுகின்றனர்.ஆனால் இருசாராருக்கும் பொதுவான இவ்வுணர்வை ஆணுக்குப் போலவே தமக்கும் உரிமை என்ற முறையில் உரிமையுடன் வெளியிட்டு வளப்படுத்தும் முறையைக் கூறவில்லை.ஆண்,பெண் உறுப்புகளைப் புனைந்து பாடுவது காதலும் அன்று ; விடுதலையும் அன்று " என்பதனை உணர்த்துகின்றார்.

" சமுதாயக் கட்டமைப்பு ,சமுதாய நிறுவனம் எனும் பெயர்களில் திருமணம் புதைகுழியாகவும்,குடும்பம் உயிருடன் பெண்கள் புதைக்கப்படும் கல்லறையாகவும் இருப்பதை மாற்ற வேண்டும். முன்பின் அறியாத ஆண்,பெண் திருமணத்தைத் தடுத்தால் பல பெண்களின் மன அழுத்தம் ,கொலை,தற்கொலை,பொய்யான வாழ்க்கை மறையும். பெண் தன் அகவுணர்வுகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தித் தன்னிச்சையுடன் வாழவேண்டும்.' என்று குறிப்பிடும் இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நளினிதேவி 'கற்பு ' என்னும் கோட்பாட்டை,குடும்பம் என்னும் அமைப்பை அடித்துத் துவைத்து கருத்துக்களால் வெளுத்து வாங்கியிருக்கிறார். நூலின் இறுதியில் பெண் விடுதலைக்கான முழுமையான தீர்வுகளைக் கண்டறிய என்று தனது கருத்துக்களைத் தொகுத்து கொடுத்துள்ளார்.

புத்தகத்தைப் படித்துமுடித்து விட்டு திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்துள்ள அணிந்துரையை மீண்டும் படித்தபொழுது " அறிவுச்சாளரத்தை  அடைத்துள்ள அழுக்குப் பொருள்களைக் கழுவி ,வெளியேற்றிப் படித்தால் ,இதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்,....வெறும் அறிவு மட்டும் போதுமானதல்ல துணிவும் இதற்குத் தேவையாகும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் தெம்பும் தேவைப்படும். துணிச்சலும் அறிவும் கைகோத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது....தந்தை பெரியாரின் கருதுகோளினை நூலாசிரியர் துணைக்கழைத்துக்கொண்டது மிகச்சரியான பார்வையே !....இந்த சூழலில்தான் பெரியார் தம் கைத்தடியை ஊன்றிக்கொண்டு நம்மை வழி நடத்துகிறார்....சுருக்கமாகச்சொல்லப்போனால் தந்தை பெரியார் அவர்களின் மூலக்கருத்துக்கு பொழிப்புரை எழுதி இறுதியாகக் கருத்துக்களை எழுதியதுபோல் உள்ளது இந்நூல்.பாராட்டுகள்.!
பெண்கள் மத்தியில் பெரும் பாய்ச்சலோடு பரவ வேண்டும் இந்நூல் என்பதே நமது கருத்து. பாராட்டுகள் ....." எனும் பாராட்டுரை புத்தகத்தை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. ஒரு துணிச்சலான பெண்மணியால்  மிகச்சரியான பார்வையோடு எழுதப்பட்டுள்ள நூலான 'அக விடுதலையே பெண் விடுதலை' என்னும்  இந்த நூலைப் படிப்போம். பரப்புவோம். விவாதிப்போம்.பெண் விடுதலையின் தேவையைப் புரிந்துகொள்வொம்.



நன்றி : விடுதலை 24.10.2019 

Thursday 26 September 2019

எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்......

                                 எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்

இனிய தோழர், பார்க்கும் நேரமெல்லாம் அகம் மலர முகம் மலர 'அண்ணே ' என்று அழைத்து பாசம் பொழியும் அன்புத் தம்பி, மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் (27.09.2019). ஆசிரியராகப் பணியாற்றியவர்.மதுரை புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றியவர்.வீட்டிலிருந்து பக்கத்தில் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்,  வேகமாக வண்டியை ஓட்டி வந்த ஒரு மடையனால் மோதப்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டு இரு நாட்கள் மருத்துவமனையில் இருந்து , நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்திய  நாள்.

"அழகான நல்ல வாழ்க்கை என்பது அன்பால் உருவாக்கப்பட்டு, அறிவால் அணை காக்கப்படுவதுதான் " என்றார் ரஸ்ஸல்.அப்படி வாழ்ந்து காட்டியவர் தம்பி சுப்பிரமணியன் அவர்கள். . உறவுகள் இழப்பைவிட எனக்கு எனது தோழர்களின் இழப்பு அதிக வருத்ததை தருவது எப்போதும். தன் வாழ்வு, தன் குடும்பம் என்று போய்க்கொண்டிருப்பவர்களுக்கு நடுவில் சமூகம் எனச்சிந்தித்து அதற்காக நேரத்தை, உழப்பை, பணத்தை செலவழிக்கும் எனது தோழர்களின் இழப்பு எப்போதும் அழியாத வருத்தத்தைத் தருகிறது. 

தம்பி ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் மதுரையில் விடுதலை பத்திரிக்கையின் முகவராகப் பணியாற்றியவர். வீடு வீடாகச்சென்று விடுதலையைக் கொண்டு சேர்த்தவர். மதுரை அருகில் உள்ள திருமங்கலம் நகராட்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்தினை  அரசாங்கப்பள்ளியை, தனியார் பள்ளிக்கு உரிய தரத்தோடு நடத்தியவர்.அந்த அரசுப்பள்ளியினை பலரின் உதவியோடு பள்ளிக்குழந்தைகளுக்கு சீருடை,ஒரே மாதிரியான பை எனப் பல வசதிகளை செய்துகொடுத்தவர் அவர்.சென்ற ஆண்டில் கொட்டும் மழையில் இதே நாளில் நிகழ்ந்த நிகழ்வுகள் வரிசையாக கண் முன்னே ஓடுகின்றது.மிகுந்த துயரத்தோடு இருந்தாலும் கறுப்பு உடையை அணிந்து அவரின் துணைவியார் கிருஷ்ண வேணி, அவரது மகன் சு.சித்தார்த், அவரது மகள் சு.யாழினி ஆகியோர் எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என உறவினர்களைக் கேட்டுக்கொண்டது,.அவரது உடல் எந்த விதமான மூடச்சடங்குகளும் இன்றி ஹார்வி பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு வேனில் எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது,.இறுதியாக தனது துணைவரின் முகத்தைப் பார்த்து ,ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணவேணி அவர்கள்' " நீங்கள் கடைப்பிடித்த கொள்கையை நாங்கள் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிப்போம். நான் எனது பிள்ளைகள் என்றும் பெரியார் கொள்கை வழிப்படி நடப்போம் " என பெருத்த குரலோடு உறுதிமொழி எடுத்தது என அனைத்தும் நினைவில் நிற்கின்றன. இறுதி நிகழ்வாய்   அஞ்சலிக் கூட்டம் நடந்ததும் அதில் அவரால் பலன் பெற்ற மாணவர் சரவணன் உட்பட பலர் பேசியதும் நினைவில் வருகிறது.

'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை "என்பார் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உண்மைதான் ஏற்றுக்கொண்டு இன்னும் வேகமாக சமூகத்திற்கு உழைப்பதுதான் தம்பி சுப்பிரமணியன் போன்றவர்கள் நினைவைப் போற்றும் உண்மையான வழி.தொடர்வோம், தொண்டறம்-பகுத்தறிவுப் பணியினை.



திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சுப.முருகானந்தம் அவர்களின் ஜெ.சுப்பிரமணியன் நினைவுக் கவிதை

பொன்னுடல் நெஞ்சில் பெரியார்
புகன்றவை போற்றி போற்றித்

தென்றலை மிஞ்சும் மென்மை
தேனிதழ் தன்னில் தேக்கித்

தன்னல மில்லா வாழ்வில்
தன்னையே கரைத்த தம்பி

சென்றது மெங்கே யென்று
தேடுவோம் தினமும் காலை

தந்தைதாய் மறுத்த போதும்
தயவுடன் கெஞ்சிக் கெஞ்சிக்

கந்தையா யிருந்தோர் வாழ்வில்
கல்வியைப் புகட்டு தற்கு

முந்தியை விரித்துத் தானம்
முடிந்தவ ரிடத்தில் பெற்று

சிந்திய வேர்வை யிந்தச்
சீர்மிகு நிலத்தைக் காக்கும்

வந்தரு ளென்றே யுன்னை
வாயினா லழைக்க மாட்டேன்

தந்தது போதும் தம்பி
தாயக வுரிமைப் போரில்

முந்திநீ  நின்றாய் நாளும்
முடிந்தவை யாவுஞ் செய்தாய்

சிந்தையில் நினைத்த தெல்லாம்
செயலினில் செய்வோ மய்யா!!

Saturday 21 September 2019

மதம் தேவய்தானா ?....தி.கோரா....




இன்று(21.09.2019 ) மின் நூலாக திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் வெளியிடப்படும் 'மதம் தேவய்தானா ? ' என்னும் நூலிற்கு நான் எழுதிய அணிந்துரை:


முனைவர் வா.நேரு,
தலைவர்,
மாநில பகுத்தறிவுஎழுத்தாளர் மன்றம்,தமிழ் நாடு.

.

புத்தகத்திற்குள்  புகுவதுற்கு முன்,
                                 வணக்கம்.
பெரியாரியலை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையின் மூலம் எனக்கு வியப்பையும் , ஒரு நேர்மறையான அணுகுமுறைக்கான வாழ்க்கை முறையையும் அளித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.அந்த வகையில் சென்னையில் வாழும் திரு.தி.கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தான் மட்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராக மற்றும் அல்ல , தனது குடும்பத்தையே பெரியாரியலை ஏற்றுக்கொண்டவர்களாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பீடு நடை போடும் பெரியாரியல் குடும்பம் அவரது குடும்பம். எனக்கு மதுரையில் கிடைத்த அருமையான நண்பர் திரு.கோரா அவர்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் மத்திய அரசுத்துறையில் , பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.மத்திய அரசுப்பணியில் இருக்கும்போதே எப்போதும் கருப்புச்சட்டைதான் போட்டிருப்பார்.மத்திய அரசுப்பணி என்பதே பெரும்பாலும் பார்ப்பனர்களை அதிகாரிகளாகக் கொண்டிருக்கும் பணி. அந்தப் பணியில் கருப்புச்சட்டை மட்டுமல்ல, கருப்புச்சட்டையில் கடவுள் இல்லை " NO GOD " என்னும் வாசகம் எழுதிய கருப்புச்சட்டையோடுதான் வலம் வருவார்.


மதுரையில் இருந்து சென்னைக்குப் போய் பணி நிறைவு பெற்றார்.பணியில் இருந்தபோதும் சரி,ஓய்வுக்குப்பின்னும் சரி பெரியாரியல்தான் வாழ்க்கை.பேச்சு,மூச்சு எல்லாம் அய்யா பெரியாரும்,ஆசிரியர் அய்யா வீரமணியும்தான்.இவர் பிறப்பால் தெலுங்கு பேசும் வாய்ப்பு  பெற்றவரல்ல, ஆந்திராவில் வேலை பார்த்தபொழுது தெலுங்கைத் தானாகக்  கற்றிருக்கிறார்.தெலுங்கினைப் பேசவும் எழுதவும் அதன் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாத்திகர்கள், பகுத்தறிவாதிகள் பல பேரை தெலுங்கு மூலம் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஏற்படும்போது தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பொறுத்த அளவில் அப்படியே இடிந்து உட்கார்ந்து விடுபவர்கள் அல்ல. அதற்கு மாற்றாக தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன்னது போல 'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொண்டு ' தொடர்ந்து உற்சாகமாக பயணிப்பவர்கள்.சமூகத்திற்கு பயனளிப்பவர்கள்.  


இந்த மின் புத்தகம் கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தெலுங்கிலிருந்து  தமிழில் மொழி பெயர்த்த தொகுப்புகள். இந்த மொழி பெயர்ப்பில் கவிதைகள் இருக்கின்றன. ஒரு சிறுகதை இருக்கிறது. பல தலைப்புகள் குறித்து கட்டுரைகள் இருக்கிறது.தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது.எல்லாமே தெலுங்கு இதழ்களில் கடந்த சில மாதங்களாக வெளிவந்தவை.திடீரென உடல் சீர்கெட்டது.படுத்த படுக்கையாகவே நீண்ட நேரம் படுத்திருக்க வேண்டிய சூழல்.அவரது அன்பு இணையர் திருமதி ஹேமா கோரா அவர்கள் மிக நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.தடைகள் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல தந்தை பெரியாரின் தொண்டர்கள்.மாறாக தங்கள் மன உறுதியின் மூலம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் பெரியார் இயக்கத்தவர்கள் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு திரு.கோரா அவர்கள்.படுத்த படுக்கையாக இருந்தாலும் தொடர்ச்சியாக தெலுங்கில் இருந்து  மொழி பெயர்த்து அதனை தனது மகள் தமிழரசியிடம் தட்டச்சு செய்யச் சொல்லி, அதனை வாட்சப்பில் எனக்கு  அனுப்பிக்கொண்டிருக்கிறார். பல நாட்களாக எனக்கு வந்த பின்பு இதனை ஒரு தொகுப்பாக ,புத்தகமாக ஆக்கினால் என்ன ? என்னும் கேள்வி பிறந்தது. அருமைத்தோழர் பிரின்சு என்னாரசு பெரியார் அவர்களிடம் அந்தக் கேள்வியைப் பகிர்ந்து கொண்டபோது அவரும், பெரியார் திடல் தோழர் எழுத்தாளர் உடுமலை அவர்களும் உற்சாகமாக மின் புத்தகமாக இதனைக் கொண்டுவரலாம் என்று உற்சாகம் அளித்தனர்.அதன் விளைவாக இந்த மின் புத்தகம் தங்கள் கைகளில்........

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் என்ற வகையில் இவரது மொழிபெயர்ப்புகள் மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுக்கின்றன.தான் யாருடைய கட்டுரையை,கருத்தை மொழியாக்கம் செய்கின்றேன் என்பதனை கட்டுரையின் துவக்கத்திலேயே மொழி பெயர்ப்பாளர் கோரா அவர்கள் கொடுத்து விடுகின்றார். இடை இடையே தனது கருத்துக்களை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கின்றார்.புத்தகத்தை அச்சிடாமல ,அதே நேரத்தில் விரும்புகிறவர்கள் படிக்கும் வண்ணம் இந்த மின் புத்தகம் என்னும் ஆக்கம் அமைந்திருக்கிறது.இந்த நூற்றாண்டின் கணினியால் வந்த விளைச்சல் இது. படித்து தாங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாம்.

                                                                                                                                                                        அன்புடன்
                                                                                                                                                                        வா.நேரு,11.08.2019


Monday 16 September 2019

தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள்....பொறியாளர் மு.முத்தையா




"தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள்" என்னும் நூல் பொறியாளர் மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்டதாகும்.இன்று (16.09.2019)  மதுரை கே.எம். மஹாலில்  நடைபெற்ற வாழ்க்கை இணை ஏற்பு(கோ.பிரதாப்-இரா.துவி நிஷா)  விழாவில் நூல் அறிமுகம் செய்யப்பட்டதோடு, வாழ்க்கை இணை ஏற்பு விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் இந்த நூலும்,அய்யா மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்ட 'உழைப்பிற்கு வயது இல்லை "என்னும் நூலும் வழங்கப்பட்டது. 

நூலைப் பற்றிய விவரங்கள்:
நூலின் தலைப்பு : " தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள் "
ஆசிரியர்        : பொறியாளர் மு.முத்தையா ( பகுத்தறிவு-சமூக நீதி-வகுப்புரிமை-சிக்கனம்-இலக்கியம்) கட்டுரைகள்.
கிடைக்கும் இடம்: 86 A/1,ஜீவா தெரு,பசும்பொன் நகர்,பழங்காநத்தம்,மதுரை-625003.,9080761630
மொத்த பக்கங்கள் :  183, விலை ரூ 135 /-


       
                                                     அணிந்துரை
 
வணக்கம்.
"தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள் "என்னும் இப்புத்தகமானது ,மதுரையில் இப்போது வசிக்கும் பெரியார் தொண்டர் மானமிகு.பொறியாளர் மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்டதாகும்.சிறுவயது முதலே பகுத்தறிவுச்சிந்தனையோடு எதையும் சிந்தித்து செயல்படுபவராக தனது வாழ்க்கையைஅமைத்துக்கொண்டவர் அய்யா மு.முத்தையா அவர்கள்.87 வயது பெரியாரியல் இளைஞர்.எப்போதும் அமைதியாகவும் ஆனால் மிக ஆழமாகவும் தனது கருத்துக்களை, எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடியவர்.அவர் தனது 'என்னுரையில்' தன்னைப் பற்றியும் ,தன் குடும்பச்சூழல் பற்றியும் கல்வி கற்க முடியாமல் வறுமையால் இரண்டு ஆண்டுகள் கல்வி தடைபட்டதையும், பின்பு தொடர்ந்து பொறியாளர் படிப்பை முடித்து அரசுப்பணியில் சேர்ந்ததையும் சுவைபட எழுதியிருக்கின்றார்..

'பெரியார் ' என்னும் பெயர் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பெயராக விளங்குகின்றது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒடுக்கப்படுபவர்கள் தங்களது தலைவராக கொள்ளத்தக்கவராக, தனது வாழ்க்கை சொல்லும் செய்தியால் போற்றப்படுவராக தந்தை பெரியார் விளங்குகின்றார். 'பெரியாரியல் 'என்பது வாழ்வியல் நெறி.அது பரப்பப்படவேண்டியது மட்டுமல்ல,கொள்கையைப் பரப்புகின்றவர்களின்,பின்பற்றுபவர்களின் வாழ்க்கை நெறியால்,வாழும் முறையால் மற்றவர்களையும் ஈர்த்து வழிகாட்டும் நெறி. அப்படி பண்பட்ட பெரியாரியல் வாழ்க்கையினை வாழ்ந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழக்கூடியவர் அய்யா மு.முத்தையா அவர்கள்.

தந்தை பெரியாரின் தொண்டர்கள் சொந்த வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்படாதவர்கள்.ஆனால் அதே நேரத்தில் கொள்கைக்காக எதற்கும் துணிந்தவர்களாக வாழ்க்கையில் திகழக்கூடியவர்கள். நெருக்கடி கால கொடுமைகளை நாம் அறிவோம்.அரசு ஊழியராகப் பணியாற்றிய நிலையில் ,நெருக்கடி காலத்தில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களை குடும்பத்துடன் சந்தித்து 'அறிவுரைகள் 'பெற்று வந்ததையும் அந்த நேரத்தில் தான் ஆற்றிய இயக்க செயல்பாடுகளையும் விவரிக்கும்போது நமக்கு இவரின் துணிவு புலப்படுகின்றது. மற்ற இயக்கங்களில் 'பேச்சில் வல்லவர்களெல்லாம் ' அஞ்சி தங்களது தலைவர்களைச்சந்திக்காமல் தவிர்த்த நேரத்தில் ,தந்தை பெரியாரின் முதல் தொண்டராய் விளங்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இந்தப் புத்தக ஆசிரியர் சந்தித்ததும் இயக்க செயல்பாடுகளில் முன்னின்றதும் பாராட்டுக்கு உரியதாகும் .

'தந்தை பெரியாரின் சிந்தனைகளின் தனித்தன்மைகள்' என்னும் இந்தப்புத்தகத்தின் உள்ளடக்கம் 'இனிப்பில் எதிரி 'என்னும் இதழில் வெளிவந்தவையாகும். மதுரை மனித நேய மருத்துவர், பகுத்தறிவு நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக ஆதரவு தரும் மறைந்த மருத்துவர் கு.கண்ணன் அவர்களால் நடத்தப்பட்ட இதழ் 'இனிப்பில் எதிரி 'ஆகும்..அந்த இதழில்  எழுதியவையும் மற்றும் சில கட்டுரைகளையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள இந்தப்புத்தகம் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் அவரது தனித்தன்மைகளையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்ற புத்தகமாகும்.

'இவர்தான் பெரியார் 'என்னும் அறிமுகமே தந்தை பெரியாரைப் பற்றிய கவிஞர் கண்ணதாசன்,புரட்சிக்கவிஞர் அவர்களின் பாடலோடு தந்தை பெரியாரின் உருவத்தோற்றத்தை சாமி சிதம்பரனார் அவர்கள் விவரிக்கும் பாங்கினை விவரித்து உருவத்தாலும், தத்துவத்தாலும் எப்படி தனித்தன்மையோடு பெரியார் விளங்குகின்றார் என்பதனை நமது படிப்போர் மனதில் பதிய வைக்கின்றார். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் என்ன? என்ன? செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார்.அதற்கென எப்படி தனித்த வியூகத்தோடு செயல்பட்டார் என்பதனை சாதி ஒழிப்பு என்னும் பகுதியில் விவரிக்கின்றார்.

பல பொதுவுடமைக்காரர்களுக்கு 'பொது உரிமை ' என்றால் என்ன என்பது இன்றும் கூட விளங்குவதில்லை.தந்தை பெரியார் பொது உரிமை ஏன் பொதுவுடமையோடு வேண்டுமென விரும்பினார் என்பதனை விளக்கும் பகுதியும் தந்தை பெரியாரின் வாதத்திறமை பற்றி கேள்வி கேட்டவரையே கேள்வி கேட்டு எப்படி மடக்கினார் என்னும் பகுதியும் தனித்தன்மையாக இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின், தமிழகத்தின் பொருளாதாரம் அகல பாதாளத்தில் ஆள்வோர்களால் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் தந்தை பெரியாரின் பொருளாதாரக்கொள்கைகள் எப்படி தனித்தன்மையானது  என்பதனை விவரிக்கின்றார். இது பெரும் ஆய்வுக்கு உரிய தலைப்பாகும்.

" ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது.மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கின்றார்கள் .நாட்டில் அறிவும் ,ஒழுக்கமும்,நாணயமும் வளர்ந்து வந்திருக்கின்றது என்பதற்கு அடையாளம் என்ன? என்றால் நாட்டின் எல்லாத்துறைகளிலும் சமதருமம்,சம ஈவு,சம உடமை, சம ஆட்சித்தன்மை, சம நோக்கு,சம நுகர்ச்சி,சம அனுபவம் இருக்க வேண்டும் .ஏற்பட வேண்டும். ஏற்படுத்தப்பட வேண்டும்.ஏற்பட்டாக வேண்டும் 'என்று பெரியார் கூறியதைக் குறிப்பிட்டு விளக்கியிருக்கும் பகுதி தனித்தன்மையாக உள்ளதாகும்.வகுப்புரிமையைப் பற்றி மிக விரிவாகவும் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் எழுதப்பட்டுள்ளது. அதைப்போலவே தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகளும் சிறப்பாக இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது .

60 ஆண்டுகளாக உற்ற துணையாக இருந்த தனது துணைவியார் மானமிகு நாகூரம்மாள் அவர்கள் நோய் வாய்ப்பட்டதையும் பின்பு இயற்கை எய்தியதையும் அய்யா பொறியாளர் மு.முத்தையா குறிப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் அன்னை நாகம்மையார் மறைந்த போது எழுதிய இரங்கல் உரைத் தலையங்கமே தனக்கு ஆறுதல் அளித்து துன்பத்தைப் போக்கிற்று என்று எழுதுகின்றார்.இன்பத்திலும் துன்பத்திலும் பெரியாரியல் உற்ற துணையாக தனது வாழ்வில் இருக்கிறது என்பதனை பதிவு செய்திருக்கின்றார்.அன்னை 'நாகம்மையார்  காலமானதும் பெரியார்  மேற்கொண்ட நடைமுறைகள் கவனிக்கத்தக்கவை.மற்றவர்களும் பின்பற்றி நடக்க வேண்டிய நடைமுறைகளாக உள்ளன எனக்குறிப்பிட்டு அதன் தனித்தன்மைகளை விரிவாக விவரித்திருக்கின்றார்.அதைப்போல தனது தாயார் 'சின்னத்தாயம்மாள் 'மறைந்த போது தந்தை பெரியார் அவர்களின் இரங்கலுரை எப்படி உண்மைகளை பெரியார் போட்டு உடைப்பவர்,  தனித்தன்மை வாய்ந்தவர் என்பதனை நாம் சிரித்துக்கொண்டே படிக்க இயலும்.

சில அய்யங்களுக்கு விடைகள் என்னும் பகுதியும் தனித்தன்மை கொண்டதாக இந்தப்புத்தகத்தில் விளங்குகிறது.மொத்தத்தில் இந்தப்புத்தகம் தந்தை பெரியாரின் தனித்தன்மைகளைப் பேசுவதோடு புத்தக ஆசிரியர் பொறியாளர் முத்தையா அவர்களைப் பற்றியும் நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ் நாளெல்லாம் பெரியாரியல் படி வாழும் , ஏறத்தாழ 75 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் தொண்டராக வாழும் இந்த நூலின் ஆசிரியரின் சிறந்த படைப்பாக இந்த நூல் வெளி வருகின்றது.வாழ்த்துகளும்,பாரட்டுகளும்....இன்னும் பல நூல்கள் தந்தை பெரியாரின் தொண்டர் பொறியாளர் மு.முத்தையா அவர்களால் படைக்கப்படவேண்டும் என்னும் இந்த விருப்பத்தினை தெரிவிப்பதோடு, இந்த நூலினை வாங்கி வாசித்து வாசகர்கள் ஆதரவு தர வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

                                                                                                                                                     தோழமையுடன்
                                                                                                                                                      முனைவர்.வா.நேரு,
                                                                                                                                                      தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.
                                                                                           10.09.2019




Sunday 8 September 2019

முரண்பட்ட மனப்போக்கு

                                               முரண்பட்ட மனப்போக்கு

                                                    முனைவர்.வா.நேரு
                                தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்


இந்த நூற்றாண்டு தொழில் நுட்பங்களின் நூற்றாண்டு. தொழில் நுட்பங்கள் வளர,வளர குறிப்பாக தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வளர,வளர மூட நம்பிக்கைகள் குறையும் அல்லது முற்றிலும் ஒழிந்து போகும் என்பது பகுத்தறி வாளர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு மாறான நிகழ்வுகள் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.40 ஆண்டுகளுக்கு பின் னால்  குளத்திற்குள் இருந்து வந்த ஒரு தெய்வம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றார்கள்.ஆடி அமாவாசைக்கு இறந்து போன  தங்கள் பெற்றோருக்கு திதி கொடுக்க என்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொன்னால் இத்தனை நாளாக குடிக்காதவர் இன்றைக்கு மட்டும் எப்படி குடிக் கின்றார் என்ற கேள்வி எதுவும் கேட்காமல் பால் வாங்கி பிள்ளையாருக்கு ஊற்ற என்று  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மக்கள் ஓடுகின்றார்கள்.ஜெபத்தினால் நோய் சரியாகும் என்று சொல்லும் கூட்டத்திற்கும் குறைவில்லாமல் கூட்டம் சேர்கிறது. சரியில்லாத சாமியார் என்று தெரிந்தும் அந்தச்சாமியாரை தரிசனம் செய்ய என்று உயர் மட்ட பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் வருகின்றார்கள்... உணவின்றி மக்கள் பசியால் வாடி வதங்கும் நிலையில் யாகம் என்று சொல்லி உணவினை நெருப்பில் போட்டு தீயில் வீணாக்கு கிறார்கள்... அப்படி வீணாக்கும் நிகழ்வுக்கு மாணவ - மாணவிகள் படிக்கும் கல்லூரியில் இடம் கொடுக் கிறார்கள்....? மழை பெய்யவில்லை, அதற்காக யாகம் நடத்துகிறோம் என்று சொல்லி அரசின் அற நிலையத்துறை நடத்துகிறது.... நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகள் நமக்கு சில நேரங்களில் சோர் வைத் தருகிறது ...அறிவியல் மனப்பான்மை என் பதே மக்களிடம் அற்றுப்போய் விட்டதா? என்னும் கேள்வி மிகத்தீவிரமாக நமக்கு எழுகின்றது...

ஆனால் நாம் பகுத்தறிவுவாதிகள். ஒவ்வொரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு என்பதனை நம்புகிறவர்கள்.நோய் விரைவாகப் பரவுகிறது என்றால் நோய் எப்படி பரவுகிறது? அதனை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது தான் ஒரு மருத்துவரின் சிந்தனையாக இருக்க முடியும்.நோய் பரப்பும் கிருமிகள் அடர்த்தியாக வளர்கிறது என்பதற்காக அமைதியாக பார்த்துக் கொண்டிருப் பவர் நல்ல மருத்துவர் ஆக இயலாது. அந்த வகையில் பரவும் இந்த மூட நம்பிக்கை  நோய் தானாகப்பரவவில்லை, ஆட்சியா ளர்களின் அனுமதியோடு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த உலகில் நிகழ்ந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் அறிவியல்தான் அடிப்படை. நாம்  நீண்ட நாள் வாழ்வதற்கு, நமக்கு வந்த நோய்களை உலகை விட்டு விரட்டியதற்கு, விரைந்து செல் வதற்கு, உலகம் முழுவதும் ஒரு நொடியில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு என இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்திற்கும் அறி வியலே,தொழில் நுட்பங்களே  அடிப்படை. இன்றைய உலகில் வாழும் மக்கள் அறிவியலால் விளைந்த அற்புதங்கள் அனைத்தையும்  அனுப விக்கிறார்கள்,  பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அறிவியல் மனப்பான்மையை மனதிற்குள் ஏற்றிக் கொள்வதற்கு மறுக்கிறார்கள் .... ஏன் ? பிறப்பு முதல் இறப்பு வரை மக்கள் மனதில் அறிவியல் மனப்பான்மை ஏற்படாமல் செய்வதற்கு என்றே ஒரு கூட்டம் நமது நாட்டில் திட்டம் போட்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அதனைப் பெரும்பான்மையான நமது மக்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

முதுகலைப் பட்டம் பெற்று பணியாற்றும் ஒருவருக்கு உடல் நிலைக் கோளாறு ஏற்பட்டது. அவரைப் பார்க்கப் போயிருந்தோம். தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதிற்கு தனது தம்பியும், அவரது மனைவியும்தான் காரணம் என்று சொல்கிறார். எப்படி என்று கேட்டபோது, அவர்கள் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்று எனக்கு செய்வினை செய்து விட்டார்கள். அதனால் தான் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னார்.அவரது மனைவி இன்னும் ஒரு படி மேலே போய் செய்வினை வைத்தவர்களுக்கு நாங்களும் செய்வினை வைக்கப்போகிறோம் என்று சொன்னார்.கணவன், மனைவி இருவருமே நன்றாகப் படித்தவர்கள்.நல்ல வேலையில் இருப்பவர்கள்.ஆனால் மனதளவில் அவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லை. ஒரு பக்கம் உடல் நிலைக்கோளாறுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம் செய்வினை என்னும் மூடத்தனம் அவர்களின் எண்ணத்தைப் பாழாக்கியிருக்கிறது. கட்டாயம் அவர்களது உறவுகளுக்குள்  இந்தப் பேச்சு, இந்த எண்ணம் மிகப்பெரிய பிரிவினையை உண்டாக்கும்.அவர்களின் மனப்பான்மை எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.அருகில் இருந்த நண்பர் சொன்னார், இன்றைக்கு தொலைக் காட்சிகளில் ஒலிபரப்பாகும் தொடர்களில் 90 சதவீதம் அறிவியல் மனப் பான்மைக்கு  எதிரான 'பில்லி, சூனியம், மந்திரம், வசியம் ' போன்றவை ஒளி பரப்பப்படுகின்றன. அது பார்ப்பவர்களின் எண்ணத்தில் அவர்கள் அறியாமலேயே நஞ்சைக் கலக்கின்றன என்று சொன்னார். இவர்கள் முதுகலை வரை படித்த படிப்பு அறிவியல் மனப் பான்மையை துளி கூட இவர்களுக்கு கொடுக்க வில்லையே, இவர்கள் படித்த படிப்பால் சமூகத் திற்கு என்ன பலன் என்னும் கேள்வியும் ,இவர்களே இப்படி என்றால் தொலைக்காட்சியில் காட்டுவதை எல்லாம் உண்மை என்று நம்பும் படிக்காத மக்களின் கதி என்னாவது என்கிற எண்ணம் மனதில் ஓடியது.

ஒரு நல்ல சமூகம் அமைவதற்கு அடிப்படை அச்சமற்ற சூழல்...புறச்சூழல் அச்சமற்று இருப்பது போல அகச்சூழலும் அச்சமற்று இருந்தால்தான் நல்ல சமூகம் அமையும்.ஆனால் உள்ளத்து அளவில் பயமுறுத்துவதற்கான விதைகளை  மதவாதிகள் குழந்தையாக இருக்கும் போதே, குழந்தைகளின் மனதில் விதைத்து விடுகின்றார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலை மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் " வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு ,விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க, அந்த வேலையற்ற வீணர்களின் மூளையற்ற பேச்சுதனை விளையாட்டாகக் கூட நம்பி விடாதே, நீ வீட்டுக்குள்ளே பயந்து முடங்கி விடாதே " என்று பட்டி தொட்டி எங்கும் பரப்பினார். ஆனால் அவரின் வழி வந்தவர்கள்  என்று சொல்லிக் கொள் பவர்கள் செய்யும் அபத்தங்களுக்கு அளவில்லை.

அண்மையில் வந்த ஒரு கட்செவி(வாட்சப்)யில் ஒரு பெண் காவலர், கோவில் விழாவிற்கு பாதுகாப்பிற்கு போனவர், காக்கி சீருடையோடு  திடீரென சாமியாடுகிறார். எனது தாயார் ஆசிரிய ராக இருந்தவர், தனது சொந்தக்கார பெண்கள் யாராவது இப்படி சாமியாடினால், அப்படி சாமியாடிகிட்டே போய் கரண்டு கம்பியைப் பிடி பார்ப்போம் என்பார். சாமியாடும் அந்த பெண் காவலரை ஒரு குறைந்த மின் அழுத்தம் பாயும் கரண்டு கம்பியை பிடிக்கச்சொல்லி கரண்ட் அடிக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம். ஒரு ஜெபக்கூட்டத்தில் பேயாடும் ஒரு பெண் பேயாடிக் கொண்டே கலைந்து போய்க்கிடக்கும் தனது மாராப்பை சரி செய்கிறார். பேய்க்கு மாராப்பு திறந்து கிடக்கிறது என்னும் கவலை ஏற்படுமா? என்ன?  இப்படிக் கூத்தாய் நடந்து கொண்டி ருக்கிறது. இப்படியான நிகழ்வுகளுக்கு உடனடியாக அரசு தண்டனை கொடுக்க வேண்டும்.தற்காலிமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.அந்தப் பெண் காவலரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.அரசுப் பணியில் உள்ள ஒருவர் அறிவியல் மனப் பான்மைக்கு எதிராக நடக்கிறார் என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது அனைத்து மதங்களைச் சார்ந்த அரசுப் பணியாளருக்கும் பொருந்தும். அரசமைப்பில் உள்ளவர்கள் அறி வியல் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்புச்சட்டத்தின் விதிகளில் ஒன்று. அதற்கு நேர்மாறாக நடக் கிறார்கள் என்றால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் இந்த நாட்டில் நட வடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்ப வர்களே அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன விலை ? என்று கேட்பவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "மூடநம்பிக்கைகள் நிலைத் திருப்பதற்கு அடிப்படை எவை எவை? எனக் கேட்டு அதற்கு விடையாக  "1.பயம்  2.குருட்டு நம்பிக்கை 3.பகுத்தறிவுப்படி ஆராயாமை 4.பகுத்தறிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப் போக்கு (Attitude)" (ஜனவரி 16-31, 2017.. உண்மை இதழ்) எனக்குறிப்பிடுவார்.இந்த பகுத்த றிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப்போக்கு என்பது மாற்றப்படவேண்டியது என்பதனை புரிந்து கொண்டாலே அறிவியல் மனப்பான்மை வந்து விடும். ஆனால் அந்த மனப்பான்மை வர விடாமல் இன்றைய ஊடகங் களும் மதவாதிகளும் பார்த்துக் கொள்கிறார்கள்.

சாமியாடுவதை கேலி செய்யும் ஒரு மதத்தினர் தங்கள் மதத்தில் பேயாடுதல் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஏன் இப்படி படித்தவர்கள் பேய் ஆடுவதாக ஆடுகிறார்கள் என்று கேட்டால் மற்ற மதத்தவர் சாமியாடுவதை நீங்கள் கேட்பதில்லை என்று சொல்கிறார்கள். சாமியாடுபவர்கள் பேயாடு வதை நீங்கள் சொல்வதில்லை என்று சொல் கிறார்கள். இந்த இருவரும் சேர்ந்து கடவுளுக்கு என்று சொல்லி தங்கள் உடம்பை கத்திகளால் கிழித்துக் கொள்கிறார்கள்,  அவர்களை நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை என்று சொல்கிறார்கள். நமது கருத்து எல்லா மதங்களும் மூட நம்பிக்கை கூடாரங்கள் என்பதுதான். எல்லா மதங்களும் அடிப்படையில் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது என்பதுதான். ஆனால் மதவாதிகள் தங்கள் மதத்தில் உள்ள அறிவியல் மனப் பான்மைக்கு புறம்பான கருத்துக்களை, செயல் பாடுகளை களைய வேண்டும் என்பதில் கருத்து கொள்ளாமல் அடுத்த மதத்தில் உள்ளவற்றை சுட்டிக்காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொண்டால் எளிதாக அறிவியல் மனப்பான்மை மக்கள் மத்தியில் பரவும்.

''மக்களின் சுதந்திரத்தை மன்னர் தீர்மானித்த இருண்டகாலத்தில் நாம் வாழ்ந்து கொண் டிருக்கவில்லை. இந்தியா போன்ற மாபெரும் நாடு ,விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர,மதங்களை நோக்கி அல்ல. மதங்களை நோக்கி முன்னேறுவது நிச்சய மாக இந்தியாவின் நிலைத் தன்மையையும்,மத ரீதியான பதற்ற நிலை காரணமாக பல பெரிய தொழிற் சாலைகள் இந்தியாவை விட்டு வெளி யேறிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருப்பதும் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் இளம் பகுத்தறி வாளர்களின் கரங்களிலேயே உள்ளன" இது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அவர்களின் கருத்து.

பகுத்தறிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப்போக்கோடு இருக்கும் ஆட்சி யாளர்களின் காதுகளில் இந்தக் கருத்து  எட்டுமா? இளம் மாணவர்கள் அறிவியல் மனப் பான்மை யோடு வார்க்கப்படவேண்டும் என்பது  புரியுமா? நரேந்திர தபோல்கர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் ஆகஸ்டு 21.அவர் இந்துத்துவா தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு ஆண்டுகள் பல ஆனபின்பும் இன்னும் கொலை யாளிகள் கைது செய்யப்படவில்லை.அவரது இறப்பிற்குப்பின் அவர் விரும்பிய மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் என்பது மகாராட்டிரா அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருநாடக மாநிலத்திலும் கொண்டு வரப்பட்டது.மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் இந்தியா முழு மைக்கும் கொண்டு வரப்பட வேண்டும். உடன டியாக  தமிழ் நாட்டில்  கொண்டு வரப்படவேண்டும். பில்லி, சூனியம், ஜோதிடம், சாமியாடுதல், பேயாடுதல் போன்றவை தடை செய்யப்பட வேண்டும். மந்திரவாதிகள் என்று சொல்லப்படு பவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விசா ரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  மூட நம்பிக்கைகளை ஒலிபரப்பும் தொலைக் காட்சித் தொடர்கள் போன்றவை தடை செய்யப்பட வேண்டும். இதற்கு தமிழகத்தில் இந்த உணர்வு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக மக்களவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்களும் குரல்  கொடுக்க வேண்டும்.'திட்டம் போட்டு மூட நம்பிக்கையை பரப்பும் கூட்டம் பரப்பிக்கொண்டே இருக்குது, நமது நாட்டில் அதனைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய கூட்டமும் அமைதி யாக இருக்குது.." இதனை மக்களுக்கு உரத்த குரலில் சொல்ல வேண்டிய கடமையும், அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் பரப்ப வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.

                                                                                                            நன்றி :விடுதலை                                                                                                                                      02.09.2019

Saturday 10 August 2019

அண்மையில் படித்த புத்தகம் : தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் ?....

அண்மையில் படித்த புத்தகம் : தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் ?
நூல் ஆசிரியர்          :  திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி
வெளியீடு                  :  திராவிடர் கழக இயக்க வெளியீடு
பதிப்பு                      :  முதற்பதிப்பு 9,ஜனவரி 2019, இரண்டாவது பதிப்பு 21,ஜனவரி                                           2019, மூன்றாவது பதிப்பு 30,ஜனவரி 2019
மொத்த பக்கங்கள்          :  304, விலை ரூ 180 /- 

                    மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ள விடுதலை (10.08.2019) நாளிதழுக்கு நன்றி.

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் ? சொல்லச் சொல்ல இனிக்குதடா.......
                             முனைவர் வா.நேரு,தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். 


சொல்லச் சொல்ல இனிக்கும் சொல்லாய் பலருக்கும் , சொல்லச் சொல்ல பார்ப்பனர்களுக்கு கடுப்பை ஏற்றும் சொல்லாய் ஒரு தலைவரின் பெயர் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில், பாராளுமன்றத்தில் ஒலிக்கிறது. அந்தத் தலைவர் தந்தை பெரியார்.அவருடைய பணியை, வரலாற்றை, தியாகத்தை, அறிவுத்தெளிவை, அஞ்சாமையை,எதிரிகளை வாதத்தில் வெல்லும் திறனை விவரித்துக்கொண்டே போகலாம். அவரைப் பற்றி அறியாதவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி அறிந்தவர்கள் ஆனால் தங்களின் அரசியலுக்கு, மூடத்தனம் பரப்பும் முட்டாள்தனச்செயல்களுக்கு மிகப்பெறும் இடையூறாய் அவரும் அவரது கொள்கைகளும் இருக்கிறதே என்னும் எரிச்சலில் அவரைப் பற்றி தவறான தகவல்களை, பொய்களை, அக்கப்போர்களை அன்றாடம் அன்றுமுதல் இன்றுவரை பரப்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பரப்பும் பொய்களுள் முதன்மையானது தமிழைத் தந்தை பெரியார் பழித்தார் என்பது. அதற்குப் பதிலடியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் 'தமிழுக்கு என்ன செய்தார் ? பெரியார் 'என்னும் புத்தகமாகும்.

'தமிழைக் காட்டு மிராண்டி மொழி' என்று சொன்னாரா ? பெரியார் . ஆம் , சொன்னார். ஏன் சொன்னார், எதற்காக சொன்னார் என்பதனை தந்தை பெரியாரின் மொழிக்கொள்கை என்னும் முதல் அத்தியாயம் விளக்குகிறது. மறைந்த பகுத்தறிவு பேராசிரியர், கரந்தை தமிழ்ச்சங்கப் பேராசிரியர் புலவர் ந.இராமநாதன் அவர்கள் விளக்கியுள்ள தந்தை பெரியாரின் மொழிக்கொள்கை என்னும் பாடம் நமக்கு சிறுபிள்ளைகளுக்கு வகுப்பில் பாடம் நடத்துவது போல பாடம் நடத்துகிறது. மொழி என்றால் என்ன? மொழியின் தன்மை என்ன ? இன்று தமிழ் மொழி எந்த நிலையில் இருக்கிறது ? எந்த நிலைக்கு வரவேண்டும் என பெரியார் விரும்பினார் என்ற விவரிப்புகளை அய்யா இராமநாதன் அவர்கள் விவரிக்கிறபோது படிப்பவர்களை வியப்பு தொற்றிக்கொள்கிறது. தன் பிள்ளை உலக அளவில் போட்டி போடவேண்டும், அதற்கேற்ப தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும், ஆத்திக பூமாலை சூட்டி , வெட்டப்படப்போகும் ஆடாய் பார்ப்பான் நம் தமிழை ஆக்கி வைத்திருக்கிறான், அதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை ,தமிழை இழிவுபடுத்துவதற்காக பெரியார் சொன்னார் எனத் திரித்துவிடப்பார்க்கிறான் பார்ப்பான் என்னும் தெளிவு  படிப்பவர்க்கு கிட்டும் வகையில் பெரியாரின் மொழிக்கொள்கை விவரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மொழிகள் பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனை என்ன? . தமிழ் மொழி பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனை என்ன என்பதனை இரண்டாகப் பிரித்து புலவர் ந.இராமநாதன் விவரிக்கின்றார்.

மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்துக்கு ஒரு போர்க்கருவியாகும்.போர்க்கருவிகள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டும்.அவ்வப்போது கண்டு பிடித்துக் கைக்கொள்ள வேண்டும் '.தமிழ் மொழி குறித்து சிந்தித்த தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்க்கை பற்றியும் சிந்தித்தார். பன்னெடுங்காலமாக பார்ப்பனர்களால் நம்மவர்கள் கல்வி கற்க முடியாத நிலையைக் கண்டார். ஆங்கில மொழியைப் படித்து பார்ப்பனர்கள் பதவி,பட்டங்களைப் பெறுவதையும் கண்டார். அதனால் ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஆங்கிலத்தைப் படியுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதே நேரத்தில் இந்த உலகப்போட்டி போராட்டத்தில் போர்க்கருவியாக மாற தமிழுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்தார். செயல்பட்டார்.அது பற்றி மக்களிடம் பேசினார்.ஆங்கிலம் இப்படி வேகமாக பரவுதற்கு ஒரு  காரணம், மிகச்சுருக்கமாக உள்ள 26 எழுத்துக்கள் என்பதனை எடுத்துக்காட்டினார். அதனைப் போல தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தைக்  குறைக்க வேண்டும் என்றார். எப்படி குறைப்பது என்பதற்கு வழி காட்டினார்.தனது விடுதலை நாளிதழில் தான் சிந்தித்து போலவே எழுத்துக்களை குறைத்து அச்சிட்டார்.இன்று எல்லோராலும் தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழ் மொழிக் கட்டுரை .இதனைக் கணினியில் அடித்துக்கொண்டிருக்கிறேன், விடுதலையில் நீங்கள் தமிழில் படிப்பதற்காக. ஆனால் எழுத்துக்களை அடிக்கும் கணினி கீ போர்டில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. ஆங்கில எழுத்துக்களில் நான் டைப் செய்ய அது  யுனிக்கோடு தமிழாக எனது கணினித் திரையில் பதிவாகிறது. 26 ஆங்கில எழுத்துக்கள், சில சிறப்பு குறியீடுகளை வைத்துத்தான் 247 எழுத்துக்கள் உள்ள தமிழை நான் மென்பொருள் துணையோடு கணினியில் டைப் செய்து கொண்டிருக்கிறேன். இதனை கணினி என்பது வருவதற்கு முன்பே ஆங்கில எழுத்துக்கள் போல குறைவான எழுத்துக்கள் இருந்தால் டைப் செய்ய ஏதுவாக இருக்குமே,அச்சிட ஏதுவாக இருக்குமே  என நினைத்தவர் பெரியார்.எழுதியவர் பெரியார்.காரணம் பெரியாருக்கு மொழி என்பது உலகப்போட்டி போராட்டதிற்கான ஒரு கருவி . மற்றவரல்லாம் தமிழைத்  தெய்வமே எனப் பாடிக்கொண்டிருந்தபோது அதனைக் கருவியாக நினைத்தவர் பெரியார்.மற்றவரெல்லாம் தெய்வத்தால் பாடப்பட்ட மொழி , தெய்வத்தால் கொடுக்கப்பட்ட மொழி தமிழ் என்றுபோற்றிக்கொண்டிருக்கும்போது, நம்முடைய சாதாரண மனிதர்கள் வளம் பெறுவதற்கு ,நலம் பெறுவதற்கு ,உயர்வு அடைவதற்கு நமது தமிழை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனச் சிந்தித்தவர் பெரியார்.அதனால்தான் சொன்னார் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களைக் குறையுங்கள் என்று சொன்னார். 

தமிழ் மொழி இன்று நமது மக்களின் உயர்வுக்கான கருவிக்கான கருவியாகப் பயன்படுகின்றதா? தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தை விடுங்கள்.தமிழர் தலைவர் அவர்களின் காலமான நிகழ் காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வும் தமிழ் மொழியில் இல்லை...மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.ஸி.பள்ளிகளில் தமிழ் இல்லை. விருப்பப்பாடமாக இருந்த தமிழ் இன்றைக்கு பள்ளி விடப்பட்டு மாணவ மாணவிகள் எல்லோரும் போன பிறகு விருப்பம் இருப்பவர்கள் இருந்து படிக்கும் மொழியாக இருக்கிறது.ஆனால் செத்த மொழியான சமஸ்கிருதம் அந்தப்பள்ளிகளில் விருப்ப பாடமாக இருக்கிறது.செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு ,செம்மொழித் தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுக்க மறுக்கிறது. ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட 26 பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நிலைத் தேர்வில்(PreliminaryExamination ) தமிழில் வினாத்தாள் கிடையாது, வினாத்தாள் ஆங்கிலத்திலும் இந்தியில் மட்டும்தான் உள்ளது.  இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவருக்கு இந்தியில் வினாத்தாள் உண்டு.இந்தியாவின் மிக முக்கிய துறைகளில் முக்கிய பொறுப்பிற்கு நடக்கும் இந்தத்தேர்வின் விடையளிப்பதில் நேரம் மிக முக்கியம். ஆங்கிலத்தில் புரியாத சில வினாக்கள் தாய்மொழியில் கேட்கப்படும்போது உடனடியாகப் புரியும். பதிலளிக்கும் வாய்ப்பு கூடுதலாக உண்டு. அது இந்தியாவில் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இருக்கிறது.தமிழை அல்லது மற்ற இந்திய மொழிகளை,எடுத்துக்காட்டாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், அஸ்ஸாமி போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இல்லை. இந்த இடங்களில் தமிழ் மொழி அரசு எந்திரத்தில் கருவியாகப் பயன்படுத்தப்படவில்லை, இன்றைக்கு கூட கட்செவியில்(வாட்ஸ் அப்) ஒருசெய்தி வந்திருக்கிறது.தமிழில் எழுதிக் கொடுக்கும் மனுவை இரயில்வே ஊழியர் வாங்க மறுக்கிறார்.தமிழ் தெரியாது என்று சொல்கிறார். தமிழ் நாட்டில் தமிழ் தெரியாமல் அரசு ஊழியராக எப்படி வேலை பார்க்கிறீர்கள் எனப் பயணி கேட்கிறார்.இதுதான் இன்றையை நடைமுறை. தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படும் மொழியாக (கருவியாக) இல்லை. தந்தை பெரியார் ஆட்சி அதிகார மொழியாக தமிழ் கருவியாகப் பயன்படுவதற்கான வழிகளைச்சொன்னார்.இறுதி மூச்சுவரை அதற்காகப் போராடினார்.

மொழி பற்றிய தந்தை பெரியாரின் பார்வை என்ன? தமிழ் மொழி பற்றிய தந்தை பெரியாரின் பார்வை என்ன என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள முதல் அத்தியாயத்தை ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும். குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.கட்செவி,முக நூல் வழியாக இந்தக் கருத்துக்களைப் பரப்பிட வேண்டும்.'பகுத்தறிவுப் பகலவனின் முன்னோக்குப் பார்வையில் ,மொழி ஒரு வணங்கப்படுகின்ற ஒன்றல்ல,மாறாக,பயன்பட வேண்டிய போர்க்கருவி -புதுமை, புத்தாக்கம். அது காலத்தின் தேவைக்கேற்ப மாறிக்கொண்டே இருந்தால்தான் போரில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். பண்பாட்டுப் படையெடுப்பு என்ற போரின் ,முனை மழுங்காத ஆயுதமாக ,தமிழை தந்தை பெரியார் பல்வேறு காலக் கட்டங்களில் கூர்மைப்படுத்தினார் ...."என 'நூலைப் படிக்குமுன் ...!'என தலைப்பிட்டு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்துள்ள முன்னுரை தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது.முனைவர் அவ்வை நடராசன் அவர்களின் உணர்வுரை உணர்வூட்டுவதாகவும் அறிவூட்டுவதாகவும் நூலின் நுழைவு வாசலில் உள்ளது.

முழுமையாக தந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த நூல் அமைந்துள்ளது.பொருளடக்கம் முழுவதும் தமிழுக்காக தந்தை பெரியார் என்ன என்ன செய்தார் என்பதனை சுட்டுகிறது.ஒவ்வொரு தலைப்பும் என்னை எழுது , என்னை எழுது என அழைப்பது போல அத்தனை கருத்துச்செறிவோடு அமைந்துள்ளன.பேச்சுக்கலையில் தந்தை பெரியார் தொண்டால் ஏற்பட்ட மாற்றங்கள்,தமிழிசையில் ஏற்பட்ட மாற்றங்கள்,சமஸ்கிருத ஆதிக்கத்தை,இந்தி நுழைவதை தந்தை பெரியார் எப்படி தடுத்தார் என்பதனை, பார்ப்பன விழாக்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரியார் எப்படி தமிழர் விழாக்களை அடையாளம் காட்டினார் என்பதனை,தமிழ்ப் பண்டிதர்கள் பரணியில் இருந்த திருக்குறளை எளிய மனிதர்களிடம் எப்படி பெரியார் கொண்டுவந்து சேர்த்தார் என்பதனை,படைப்பாளராய்,தொலை நோக்கு கருத்தாளராய், ஆய்வாளராய், பதிப்பாளராய், பத்திரிக்கை ஆசிரியராய் எப்படியெல்லாம் தமிழுக்கு தந்தை பெரியார் தொண்டாற்றினார் என்பதையெல்லாம் விளக்கமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வதற்கு ஓர் அரும் வாய்ப்பாய் இந்த 'தமிழுக்கு என்ன செய்தார் ?பெரியார் ' என்னும் இந்த நூல் நமக்கு தமிழர் தலைவர் அவர்களால் கிடைத்திருக்கிறது.ஒவ்வொரு கட்டுரை மட்டுமல்ல, இணைப்புக் கட்டுரைகளும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. வாங்காதவர்கள் இந்த நூலினை வாங்கிப் படியுங்கள். வாங்கி இன்னும் படிக்காமல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் படியுங்கள்.மற்றவர்களிடமும் கொடுத்து படிக்கச்சொல்லுங்கள்.படித்தவுடன் 'தமிழுக்கு தந்தை பெரியார் செய்த தொண்டை சொல்ல சொல்ல இனிக்குதடா .... ' என்று படித்தவர்களும் சொல்வார்கள்.

Thursday 18 July 2019

பாம்புக் கிணற்றின் நினைவுகள்..


கடந்து போன காலங்கள் (18)


விலைக்குத் தண்ணீரை
குடிக்கவும் குளிக்கவும்
வாங்கும்  நிலையில்தான்
கொட்டும் மழை நீரைச்
சேகரிக்கும் எண்ணம் வலுக்கிறது மனதில்...

சின்ன ஊர் அது......
மழை நீர் சேகரிப்பாய்
சில ஊர் நல விரும்பிகள் உழைப்பால்
ஊருக்குள் பெய்யும் மழையை
ஒருங்கிணைத்து
ஒரு கிணற்றுக்குள் விடும்செயலை
கட்செவியில்
பகிர்ந்திருந்தான் தம்பி.....

சின்ன சின்ன ஊருணிகள்
எல்லாம் மழை நீர் சேகரிப்பு நிலையங்கள்தான்..
ஊருக்குள் இருந்த கிணறுகள்
எல்லாம் நிலத்தடி நீரை உயர்த்தும்
அறிவியல் கூடங்கள்தான் ....
எனது கிராமத்தில்
நான் சிறுவனாக இருந்த காலத்தில்
தெருவுக்கு ஒரு கிணறு இருந்த நாளும்
அதன் தொடர்பான செய்திகளும்
நினைவுக்கு வர
கட்ச்செவியில் பதிவுகள் போட்டேன்....

எங்கள் தெருவில் இருந்த கிணற்றுக்கு
பெயர் பாம்புக்கிணறு.....
தெருவின் நுழைவு வாயிலில்
வெளியில் சென்று திரும்பும் நேரமெல்லாம்
வரவேற்கும் பாம்புக்கிணறு

சிறுவயதில் கேப்பக்களி தாத்தா
கமலையில் தண்ணீர் இறைத்து
அவர் தோட்டத்திற்கு பாய்ச்சியதைப் பார்த்திருக்கிறேன்....

எனது உடன் பிறப்பும்
அவரோடு படித்த இன்றைய வி.ஐ.பியும்
தண்ணீர்ப் பாம்பை பிடித்துப்போய்
வகுப்பில் விட்டு
செமையாய் வாத்தியாரிடம்
அடிவாங்கியதற்கு
அடித்தளமாய் பாம்பைக் கொடுத்தது இக்கிணறுதான்

கிணறு நிறையத் தண்ணீர்
இருந்த காலமும்
பெயருக்கு ஏற்ப சில பாம்புகள்
கிணற்றுக்குள் இருந்த நினைவும்
குளித்த நினைவும்
வாளியில் தண்ணீர் இறைத்த நினைவும்
என நினைவுகளால் நிறைகிறது
பாம்புக் கிணற்றின் நினைவுகள்......

பகிரக்கூடியதாய் சில
பகிர முடியாததாய் சில
அதன் நினைப்பே சிரிப்பும்
மகிழ்ச்சியுமாய் விரிகிறது மழைத்துளியாய்....

இப்போது வெறும் குப்பைக் கிடங்காக
இருக்கிறது கிணறு என்றான் தம்பி....
கிணறு எப்படி குப்பைக் கிடங்காக மாறும்?
கிணற்றுக்குள் தண்ணீர் இல்லை...
மக்கள் குப்பைக் கிடங்காக
மாற்றி விட்டார்கள் ...இப்போது அது
குப்பை நாறும் குழியாகக் கிடக்கிறது என்றான்....

நிலத்தடி மொத்தமாக குறைந்து விட்டது ஊரில்...
மழை பெய்தால் இக்கிணற்றுக்குள்
மழைத்தண்ணீர் செல்ல வழி செயல் வேண்டும்...
குப்பைகளை மொத்தமாக அள்ளி
வெளியில் போட்டு
மீண்டும் கிணறாய் அது ஊற்றெடுக்க வேண்டும்.....
ஆர்வமாகச் சொன்னான் தம்பி...

ஆம்! ஆம்!
குப்பைக் கிடங்குகளாய் மாறிவிட்ட
ஊர்க் கிணறுகள் எல்லாம்
மழை நீர் சேகரிப்பு கிணறுகள்
ஆகிட வேண்டும்....
மீண்டும் ஒரு நாள்
ஊற்றெடுக்கும் கிணறுகளாய் மாறிடல் வேண்டும்...

                          வா.நேரு ,
                          18.07.2019


Wednesday 10 July 2019

கிரிக்கெட்டில்(மட்டய்யடி) தோற்றால் குடி முழுகிப்போய் விட்டதா? ......


மட்டய்யடி...(தெலுங்குத் தரவு:கோவர்த்தனீயல,919701381799);தமிழில்:திருவூர்கோரா;கட்செவியிலிருந்து)ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒவ்வொரு காய்கறி+கனியய்முத்தாய்ப்பாய்ப் போட்டு 'தூள்' பறத்தியிருக்கிறார் பாராட்டுக்குரிய கோவர்த்தனீயல அவர்கள்!


மட்டய்யடி ஆட்டத்தில் விக்கெட் விழுந்தால் நாடே  தலய்குப்புற விழுந்துவிட்டது போல் துடிதுடிக்கும் தேச பக்தி சிகாமணிகளே!கீழே தரப்பட்டுள்ள விடயங்கள் குறித்து எப்போதாவது கிஞ்சித்தேனும் கவலய்ப்பட்டதுண்டா?ஒரே ஒரு முறய்யாவது சிந்தித்துச்சொல்லுங்கள்!@நாட்டுக்கே சோறு போடும்,உயிரற்ற உடல்களாகவீழ்ந்துபடும் விவசாயிகளய்ஒரு கணமேனும் நினய்த்துப் பார்ப்பதுண்டா?விருப்பமான மட்டய்மடி வீரர்/சோம்பேறி 100 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்ளும் நீங்கள், உங்களுக்குத் தெரிந்த வேளாண்மய்க்காரர் ஆறாவது,நூறு மூட்டய் நெல் விமர்சிக்க வேண்டுமென (இல்லவே இல்லாத) கடவுளிடம் மனமுருகி முறய்யிட்டதுண்டா?

இரண்டு மணி நேரத்துக்கு கய்யிலும் கக்கத்திலும் மட்டயய் இருக்கிக் கொண்டு ஆடியவர் கடவுள் என்றால்,உங்களுக்காக வாழ்நாள் முழுவதும் உண்ண சோறு விளய்வித்துத் தரும் விவசாயிக்கு தாங்கள் அளிக்கும் பெயர்தான் என்ன?நாடு வெல்வதற்கு இன்னும் சில பந்து வீச்சங்களே பாக்கி எனும் போது, வறண்டு போகும் தொண்டய்யய்நீவிவிட்டுக் கொள்ளும் நீவிர்,நாட்டய்வாழ வய்க்கும் நதி/ஆறுகளில்  நீரோட்டம் குறய்ந்தளவே  எஞ்சி/விஞ்சியுள்ளனவே என்ற கவலய்/ஆற்றாமய் எப்போதாவது இருந்ததுண்டா தங்களுக்கு!?

தங்களுக்கு விருப்பமான மட்டய்யடி வீரர்களய் தங்களுக்கு விருப்பமான வழிகளில் ஊக்கப்படூத்துவீர்கள்;ஆனால்,தங்களய் உயிரோடும் உணர்வோடும் வய்க்கும் வேளாண் குடி மக்களய்எப்போதாவது ஊக்கப்படுத்தியதுண்டா?இல்லய் என்ற எட்டிக்காய் கசப்பான உண்மய்யாவது தெரியுமா?தங்களுக்கு எந்த ஊரில் எந்த ஆட்டங்களம் எப்படியிருக்கும்?/எப்படிப்பட்டது என்பது பிழய்யறத் தெரியும்?அதே நேரத்தில்,தங்களுடய்ய ஊரிலேயே சந்தய் நிலவரம் என்னவென்று தெரியுமா?சந்தய் எங்கிருக்கிறது என்பதற்காகவும் அறிவீர்களா?சோறுண்ணும் போது கூட, பாக்கிஸ்தான் குழுவய் உள்ளே எந்த அளவுக்கு நுழய்யவிட வேண்டுமென்பதய் மிகச் சரியாக (கனகச்சிதமாக) அறிவீர்கள்!;ஆனால், உன் கரங்களில் தவழ்வதுதங்கள் நாட்டில் விளய்ந்த அரிசியா அல்லது வெளிநாட்டு உற்பத்தியா? என்பது தெரியுமா?புரியுமா?.

2.இந்திய மட்டய்யடி வாரியம் அல்லது குழுவினர் விடும் பிழய்களய்+செய்தவர்களும் எப்போது வேண்டுமானாலும் பரிசீலிக்க/நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிடத்தெரிந்த தங்களுக்கு, வேளாண்மய்க்கெனவே பெயர் பெற்ற இந்த நாட்டில்,'மாடு கட்டிப் போரடித்தால்மாளாதுசெந்நெல் என்று ஆனய் கட்டிப் போரடித்த தென் மதுரய் கூடிய இந்நாட்டில்,அரசினர் விடும் பிழய்களய்/பணிகளய் எண்ணிப் பார்க்க‌...நேரமுண்டா?//ஆரு,எப்போது,எப்படி,எங்கே,என்னென்ன சாதித்தார்கள்என கணித்து வய்த்திருக்கும் தங்களுக்கு, நாளாந்தம், எங்கெங்கே, எத்துணய் வேளாண் குடிமக்கள் சாகுபடிப் பணிகளில் வலிந்து/உழன்று கொண்டிருக்கிறார்கள் எனத் துல்லியமாக வேண்டாம்?மேம்போக்காகவாவதுதெரியுமா?//உண்மய்யான - அச்சு&அசலான ஓட்டம் எது என்பதய் அறிவீர்களா?;எப்போதாவது,ஆதரவு நிலம் கிடய்ப்பதற்காக+மின் வழங்கலய்உறுதிப்படுத்துவதற்காகப் போராடி,லதீதியடி வாங்கியும் வயல்களில் உழன்று கொண்டிருக்கும் விவசாயியய்த் தாங்கள் அறிவீர்களா?//எந்த நாட்டுப் பந்து வீச்சாளர் எப்படிப் பந்து வீசுவார் என்பது மட்டுந்தான் தெரியும் தங்களுக்கு;அரசும்+தரகர்களும் வேளாண்குடிகளய் மோசவலய்களில் வீழ்த்திச் சாய்க்கின்றார்களோ  என்பது குறித்து எப்போதாவது ஆலோசித்ததுண்டா?//பிள்ளய்களய் விளய்யாட்டு அரங்குகளுக்கு இட்டுச் சென்று விளக்குவது மட்டும் போதவே போதாது; வயல் வெளிகளில், ஏர் உழுவதும்+நாற்று படுவதும்,களய்பறிப்பதும்,நெல் அறுப்பதும், கதிரடிப்பதும்,நெல் நூற்றுக்கும் - என பயிர் சாகுபடிப்பணிகள் எல்லாம் நடய்பெறுவது எப்படி? - எனப் படிப்பித்துத் தர வேண்டும்!
.
3.பிள்ளய்கள் அருந்தும் பால்+தயிர்+மோர்+வெண்ணெய் +நெய் ஆகியவய் வரும் வழிமுறய்கள் என்னென்ன என்பனவற்றய்யும் நன்கறியத் தரவேண்டும்;//மட்டய்யடி ஆடுவோம் பூட்டு+குளிர் பானங்களய்ப் பருகி நல்ல. உடற்க்கட்டுடன் திகழ்கிறார்களோ, அது போலவே தாங்களும் தங்கள் பிள்ளய்ச் செல்வங்களும் உண்ணச் சோறின்றி, உலா வர ஏலுமா?

4.தொலய்க்காட்சிப். பெட்டிகளய் விட்டுப் பிரித்தெடுக்க இயலாமல் பசய்போல ஒட்டிக் கொண்டும், வானொலி நேரடி வர்ணனய்களய்க் கேட்டுக் கொண்டும் காலத்தய் வீணடிக்கும் தாங்கள்,வேளாண் சார்ந்த ஒலி+ஒளி பரப்புகளய் ஏறெடுத்தும் பார்த்ததுண்டா?எப்போது எவ்வாறு ஆடினால் நாடு வெல்லும்/தோற்கும் என்பதய் உணர்ந்ததாங்கள்/சொல்லக்கூடிய தாங்கள்,இந்த நாடு உணவு தானிய வகய்களில் - சாகுபடி விடய்யங்களில் பெரு வெற்றிதனய்ஈட்ட இயலும் என்று பகுத்துச் சொல்ல இயலுமா?பத்து பேர் (உண்மய்யில் 25 பேர்)ஆடும் ஆட்டத்துக்கு இலக்கக்கணக்காணோர் ஒன்று திரண்டு நிற்கிறோம்; ஆனால்,அதே நேரத்தில்,கோடிக் கணக்கான மக்களின் அழிபசிதீர்க்கும் விடயத்தில் மட்டும்,நாம் செய்வதுதான் என்ன!?இந்தியாவய் மட்டய்யடி போட்டிகளில் வெல்ல வய்ப்பதில் மட்டுமல்லாமல்,கோடிக் கணக்கான மக்களய்ப் வாழவய்க்கும் வேளாண்மக்கள் குறித்தும் சிந்திப்போமாக!//இந்தியா வெல்ல வேண்டியது ஆட்ட அரங்குகளில் மட்டுமல்ல;பச்சய்ப் பசேலென மின்னும் வயல்வெளிகளில்தான் முதன்மய்யாக!அதற்கென விவசாயிகள்,'அவுட்' ஆகாமல் களத்தில் நிற்க வேண்டும்;நாம் அனய்வரும் அங்கே ஊக்க ஆற்றல்கள் (cheer leaders) ஆக மாறியது வேண்டும்!
 கோரா &கோராவின் அன்பு துணய்வி  வே. ஹேம மாலினி