Thursday 25 February 2021

நூல் : காட்டுக்குட்டி(புதினம்).....மலர்வதி

வண்ணப் படத்தோடு வாசிக்க ....வல்லினச்சிறகுகள் இதழில் படிக்க இதனைச்சொடுக்குங்கள்...

https://tinyurl.com/3rzzc2ez

நூல்  : காட்டுக்குட்டி(புதினம்)

நூல் ஆசிரியர் : மலர்வதி

வெளியீடு : கிழக்கு பதிப்பகம் சென்னை-14 பேச:044-42009603

முதல் பதிப்பு : 2017

மொத்த பக்கங்கள் : 240 விலை ரூ 200

சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் எத்தனையோ வழிகளில் நடைபெறுகிறது.அதில் மிக முக்கியமான போராட்டம் எழுத்து வழியாக நடைபெறும் போராட்டம். அநீதி கண்டு மனதளவில் வெகுண்டெழுந்து தனக்குத் தெரிந்த மொழியில் அதனை அப்படியே எழுத்து வடிவில் கொட்டி,எழுத்தையே நெருப்பாக மாற்றும் வல்லமை சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு.அவர்கள் எதற்காகவும் எழுதுபவர்கள் அல்ல. சக மனிதரின் அவலத்தைப் போக்க வேண்டும் என்னும் உந்துதலில் மட்டுமே எழுதுகோலைப் பிடிப்பவர்கள். உள்ளதை உள்ளபடி எழுதும் அத்தகைய எழுத்தாளர்களே இன்றைய உலகிற்குத்  தேவையான எழுத்தாளர்கள்..அந்த வகையில் தன்னுடைய ‘தூப்புக்காரி’ என்னும் புதினத்தின் வழியாக கவனம் பெற்றவர் எழுத்தாளர் மலர்வதி ஆவார்.’தூப்புக்காரி ‘ புதினத்திற்காக இளம் படைப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே முறையான கல்விச்சாலையில் பயின்ற மலர்வதி தனது எழுத்தால் தனித்துத் தெரிகிறார். .2008-லிருந்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் மலர்வதியின் அண்மை நூல்களில்  ஒன்று 'காட்டுக்குட்டி' என்னும் புதினம் ஆகும்.


பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண். அவளைப் பற்றிக் கவலைப்பட, இந்த உலகத்திற்கு என்ன இருக்கிறது?.ஏன் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். உடல் கொழுப்பில் உடம்பை விற்கிறாள்...இப்படித்தான் சமூகத்தில் இருக்கும் ஆண்களின் கருத்தாக இருக்கிறது,ஏன் பல பெண்களின் கருத்தாகக் கூட இருக்கிறது. அப்படி ஒரு கருத்து உடையவர்கள் இந்த நாவலைப் படித்தால்,படித்து முடித்த பின், வேறொரு கருத்திற்கு வருவார்கள்.

தொடர்ந்து படிக்க இயலாமல், கண்ணில் நீர் கோர்க்க,நிறுத்தி நிறுத்தி மீண்டும் மீண்டும் இந்தப் புதினத்தைப் படிப்பார்கள்.எவ்வளவு கொடுமையான உலகம் இது. மனதளவில் எத்தனை பேர் மாந்தர்களாக இருக்கிறார்கள் என்பதை எப்படி அறிவது அல்லது எதிரில் இருக்கும் உருவம் மனிதனா? அல்லது  மிருகமா என்பதனை ஒரு பெண் எப்படிக் கண்டு பிடிப்பது? ...மனிதனாக இருப்பவன் காம வெறி பிடித்த மிருகமாக எப்போது மாறுகிறான் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது ?நாங்க பெண் உடம்போடு பிறந்திட்டோம். பிறப்பு முதல் இறப்பு வரை எங்கே போனாலும் இந்தப் பெண் உடம்பைப் பாதுகாப்பதே எங்கள் பாடாக இருக்கிறதே....இதைத் தன் மொழியில், கோப மொழியில் ஒரு பெண்ணாக கொட்டித் தீர்த்திருக்கிறார் மலர்வதி...


திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் கூடுகிறார்கள்.அந்த நிலையில் கூடுதல்  இருவருக்கும் இன்பம் தருகிறது. 15 வயதில் அப்படி ஒரு ஆணின் இன்பத்திற்கு பலியாகிறாள் இந்தப் புதினனத்தின் கதாநாயகி ரமணி.என்ன நிகழ்ந்தது,நிகழ்கிறது என்று அறியாத வயதில் 6 மாதம் ஓடிப்போகிறது.கருவில் இருக்கும் சிசுவை அழிக்க இயலாது,பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்னும் நிலையில், தன்னை அம்மாவாக ஆக்கியவனின் வீட்டில் போய் , என் பிள்ளைக்கு அப்பா நான்தான் என்று ஒத்துக்கொள் என்று கேட்கிறாள்.ஆண் மறுக்கிறான். யாரென்றே ரமணியைத் தெரியாது என்று சொல்கிறான்..ரமணிக்கு ஒரே ஆதரவாக இருந்த அம்மா,ரமணியின் நிலையை நினைத்து,நினைத்துச் செத்துப்போகிறாள். தன்னந்தனியாக ஒரு பெண்ணை பெத்து எடுக்கிறாள் ரமணி. அப்பா யார் என்று உலகிற்கு தெரியாமல் பிறந்த குழந்தை ஆனதால் அக்குழந்தை 'காட்டுக்குட்டி 'என்று ஆயிற்று.யாராவது தன்னுடைய குழந்தைக்கு அப்பாவென்று பொறுப்பேற்க கிடைப்பார்களா? என்னும் தேடுதலோடு, தன்னை நெருங்கும் ஆணோடு இணங்குகிறாள் ரமணி. எவனும் பொறுப்பேற்கவில்லை. சில காலம் உடன் இருந்து ,இன்பத்தைத் துய்த்துவிட்டு, துய்த்துவிட்டுப் பறக்கிறார்கள்.கால ஓட்டத்தில் பாலியல் தொழில் செய்பவளாக மாறுகிறாள் ரமணி. ஆனால் தன்னுடைய மகள் குட்டிமணி ,ஒரு குடும்பத்துப்பெண்ணாக, திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகிறாள்,முயற்சி செய்கிறாள்..துயர் அடைகிறாள்...அவள் முயற்சியில் வெற்றி பெற்றாளா என்பதுதான் கதை.


பாலியல் தொழில் செய்யும் பெண்ணாகதான் முதலில்  ரமணியை அறிமுகப்படுத்துகிறார்  நூலாசிரியர் "எனக்க கதை சபையேறாக் கதை...இந்த ஒலகம் பூரா எழுதினாலும் தீராத கதை...பலரும் சீ ண்ணு துப்பி தள்ளிய கதைதான் வேசயிக்க கதை.இந்த வேச மட்டும் இல்லாட்டா ஒன்னைப் போல் உள்ள பலருக்கு யோக்கியமும் நல்லா தெரியும் " என்று கோபம் கொண்டு பொறுமும் ரமணி, ஒரு டீக்காக பணம் கொடுத்தும் அவளுக்கு டீ கொடுக்க மறுக்கும் கடைக்காரனின்  மனித நேயமற்ற செயலில் தொடங்கி அவளுக்கு நிகழும் நிகழ்வுகளை வரிசைப்படுத்தும்போது 'இந்த உலகம் இவ்வளவு கொடூரமானதா? ' எனத் தோன்றுகிறது..


"கிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை  நாமெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.'காட்டுக்குட்டி' அந்தக் கனவைத் தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக இருக்கிறது.சாதிய ஒடுக்குமுறை,தீண்டாமை,பாலியல் சுரண்டல்,சமூக ஏற்றத்தாழ்வு,பிற்போக்குத்தனம் ஆகிய வேட்டை விலங்குகள் உலவும் இருண்ட காடாக உள்ளது. " என்று நூலின் பின் அட்டையில் இந்த நூலின் உள்ளடகத்தை சில வரிகளில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இந்த நூலின் உள்ளடக்கம் உண்மைகளால் நிறைந்து கிடக்கிறது. புனைவு ஏதும் இல்லை..


" அப்பு என்பவன் அந்த ஊரில் தலைமுடி வெட்டி,இறந்தவர்களைப் புதைக்கும் தொழிலையும் செய்து வருபவன்.அவனது அப்பா இவனது அம்மா பவளத்தை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் காதிலித்து இழுத்துக்கொண்டு ஓடிப்போய் கல்யாணம் செய்திருக்கிறார்.நாடாத்தியான இவனது அம்மா முடி வெட்டும் காவதியை கல்யாணம் செய்துவிட்ட காரணத்தால் அவன் குடும்பத்தில் பலரும் புறக்கணிப்பைக் கொடுத்தாலும் பவளத்தின் சொந்த அண்ணன் தங்கையைச்சேர்த்துக்கொண்டார்..." என்றுதான் புதினம் ஆரம்பிக்கிறது.அப்பு என்னும் கதாபாத்திரம், கிராமத்தில் வாழும் ஒரு ஒடுக்கப்பட்டவரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது....

தன் தாயின் தலையில் பேன் கிடப்பதை சொல்லி அதனால் தன்னுடைய மனைவி தன்னைத் திட்டுவதைச்சொல்பவனைப் பற்றி அப்பு "எந்த ஒரு படிப்பும் இல்லாம,அது சார்ந்த தொழிலும் இல்லாம,கையெழுத்து கூடப் போடத்தெரியாத ஒரு பாமரத்தியா இருந்தவர்.தனக்க நாலு மக்களையும் தன் உழைப்புல ஆளாக்கியிருக்கியா,அவா தலையில இப்ப பேனு வந்திருக்காம்.அது அருவெருப்பா ஒனக்கு " என்று அப்புவின் மன ஓட்டத்தைச்சொல்வது போலவே நூல் முழுக்க முதியவர்களுக்கு,பெண்களுக்கு,சாதி அடித்தட்டில் இருப்பவர்களுக்கு  ஏற்படும் அவமரியாதைகளை கொட்டிக்கொண்டே போகிறார் மலர்வதி.வர்ணாசிரமப் படிக்கட்டில் கீழ் நிலையில் இருக்கும் ஒரு தொழிலாளிக்கு இந்தச்சமூகம் என்ன மரியாதை அளிக்கிறது? வர்ணாசிரம கீழ்த்தட்டோடு உடல் வலிமையும் இல்லாதவனாக ஒருவன் இருந்துவிட்டால் அவனது நிலைமை?அப்படிப்பட்ட மனிதனுக்குள் இருக்கும் காதல்.....


சமூகத்தை சகட்டுமேனிக்கு வறுத்து எடுக்கிறார் மலர்வதி.உண்மையை உண்மையாக எழுதுவதால், மனச்சாட்சியோடு வாசிக்கும் எவனுக்கும் சுருக்கென்று தைக்கும்.அமெரிக்காவில் 'காட்டிக்குட்டி'யோடு ஒரு பெண்  வாழ்வதில் எந்தத் துன்பமும் இல்லை. அந்த நாட்டின் சமூகம்  குழந்தையின் அப்பா பெயர் தெரிந்தால்தான் குழந்தையும்,அவளது தாயும் மரியாதையோடு வாழமுடியும் என்று நிர்ப்பந்திப்பதில்லை. திருமணத்திற்கு முன் ஓர் ஆணும்,பெண்ணும் கூடியிருக்கிறார்கள். ஆணுக்கு கர்ப்பப்பை இல்லை,அதனால் அவன் செய்த தவறு வெளியில் தெரிவதில்லை. பெண்ணுக்குத் தெரிகிறது.சரி,அவள் பெற்று,அவள் வளர்த்துவிட்டுப்போகிறாள்.அது அவள் விருப்பம் என்று விட்டுவிடுகிறார்கள்.இந்தியாவில்,திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகும் பெண்கள் குடும்பத்தினராலேயே கொலை செய்யப்படும் நிகழ்வுகள் நிறைய. பெண் கொல்லக்கூடப் படுகிறாள், அல்லது ரமணி போல வாழ்க்கை முழுவதும் துன்பப்படுகிறாள்...ஆனால் இப்படி இவர்களை ஆக்கியவர்கள்...குடும்பம்,குட்டியுமாக மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்கள்...சே..என்ன உலகம் இது? ஆணுக்கு ஒரு நீதி...பெண்ணுக்கு ஒரு நீதி ...

'ஆணுக்கு கர்ப்ப பாத்திரமுண்ணு ஒண்ணு இல்லாம போனதுனால அவனவன் தப்பியிட்டு இருக்கியான்.அது மட்டும் இல்லாட்டி நானும் தப்பியிருப்பேன்'.என்று ரமணி சொல்லுமிடத்தில் தந்தை பெரியார் 'கர்ப்பப்பையை வெட்டி எறியுங்கள்" என்று பெண்களைப் பார்த்துச்சொன்னது நினைவுக்கு வந்தது.ஆணுக்கு இல்லாத பழி,இழிவு,ஏச்சு,பேச்சு,உயிரிழப்பு,துன்பம்,துயரம் எல்லாம் பெண்ணுக்கு மட்டும் ஏன்?...."கர்ப்பப்பாத்திரம்' பெண்ணுக்கு இருப்பதால்தானா? என்னும் கேள்வி வாசிப்பவருக்கு இயல்பாக எழும்..


"இந்தக் காட்டுக்குட்டிகள் பெறந்து வருவதற்குக் காரணமான எந்த ஆணையும் இந்த ஒலகம் தேடாது.அவனை வேசையன் என்று சொல்லவும் செய்யாது "ரமணி கூறிக்கொண்டே போக குட்டிமணிக்கு முகம் வியர்த்தது. பாலியல் செய்யும் பெண்ணின் மகள்தானே நீ என்று தன்னை இழுக்கும் சமூகத்திற்கு எதிரான குட்டிமணியின் போராட்டமும், மனக்குமுறலும்,வேதனையும் விரிவாகவே கண் முன்னே விரிகிறது.இந்தப் புதினம் ரமணி மற்றும் அப்பு என்னும் விளிம்பு நிலை மாந்தர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான விவரிப்பு என்றாலும்,புதினம் கொடுக்கும் வலி ,வாசித்து முடித்தபின்பும் பல நாட்கள் இருக்கும் என்றாலும், வீரியமாகச்சொல்லி,இதற்கு விடிவு என்ன என்னும் கேள்வி எழுப்புவதே இந்தப் புதினத்தின் நோக்கம் எனில், அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கிறது எனலாம்.

Saturday 13 February 2021

உலகின் இயற்கை....

                                          உலகின் இயற்கை....


பறவைகள் கூட

அழகாய் கூடிக்கூடி

கொஞ்சும்..குலாவும்..

குவலாயம் ஒன்றெனப் 

பாடி மகிழும்

காதல் அடைதல்

உலகின் இயற்கை....


ம்னிதன் செயற்கையாய்

செதுக்கிக்கொண்ட

சாதி மதக்கூடுகள்

இயற்கை உணர்வாம்

காதலுக்கு 

கல்லறைகளாய்

வெகு காலமாய்....


உடைத்து நொறுக்கி

முட்டையை விட்டு

வெளிவரும் 

பிள்ளைப் பறவைகளாய்

ஜாதி மதக்கூடுகளை

உடைத்து நொறுக்கி

காதலால் 

வெளியேவரும்

இணையர்களுக்கு 

அடைக்கலமாய் 

என்றும் தந்தை பெரியாரும்

அவர் தந்த கொள்கைகளும்,,,,


ஆண் பெண் இணைப்பு

எனும் அன்பாலே

பெருகிப் பல்கிய

மனித இனம்......

யாயும் ஞாயும் 

ஆராகியரோ ....

என அன்புடை நெஞ்சத்தால்

தாம் கலந்து

பல்கிப் பெருக்கிய

மனித இனம்..


உலகில் உள்ள

மனித இனம் 

உருப்பெற்றது எல்லாம் 

ஓரிரு பெண்கள் வழியே

என மரபியல்அறிவியல் 

அடித்துச்சொல்லும் 

இந்த நூற்றாண்டில்


அறிவிலிகள் சிலர்

கடவுள் எங்களை

தனது முகத்தில் இருந்து

படைத்தார் எனப் 

பிதற்றித் தெரியும்

இந்த நாட்களில் 


உச்ச நீதிமன்றத்தின்

அண்மையத் தீர்ப்பும் கூட

காதலுக்கு ஆதரவாகத்தான்...

ஜாதியை ஒழிக்கும்வழி

ஜாதி மறுத்து  நடக்கும்

திருமணமே.....


காதலுக்கு என்றும் 

வரவேற்பு அளிப்போம்...

அண்டை வீட்டில் மட்டுமல்ல

நமது வீட்டிலும் 

உவந்து காதலுக்கு  

மதிப்பு அளிப்போம்...

இணைத்து வைப்போம்...

காதலர்கள் வாழ்ந்தால்

மட்டும்தானே உலகில்

'காதல் வாழும் '

                  வா.நேரு,14.02.2021.