Monday 30 March 2020

உலகை மாற்றிய கொரனா.....வா.நேரு

உலகின் நிகழ்வுகளை
தலைகீழாக மாற்றியிருக்கிறது கொரனா...
நாம் நினைத்துக்கூட பார்க்க
இயலாதவை எல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன...

போப்பாண்டவர் தன்னந்தனியாக
நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்...
மசூதிக்குள் சென்று தொழுகை செய்தவர்களை
கர்நாடக போலிசார் லத்தியால்
அடித்து விரட்டுகிறார்கள்....
கோவிலுக்குள் சென்று கும்பிட்டுக்
கொண்டிருந்தவர்களை அழைத்து அடித்து
அடித்து விரட்டுகிறார்கள் ..
இன்னொரு மாநிலத்து காவலர்கள்..

கரனோ வியாதியைக் கர்த்தர்
தீர்ப்பார் எனச்சொல்பவரை
விரட்டி  அடிக்கிறார்கள் ஊட்டியில்
தலையிலிருந்து பிறந்த ஜாதி நான்
என்று ஜம்பம் அடிக்கும் நண்பர்
அனைத்துக்கடவுள்களையும் திட்டி
அவரின் கடவுள் உட்பட திட்டி
வாட்சப்பில் பதிந்திருக்கிறார்...

எனது கடவுள்தான் பெரிது...
உனது கடவுள்ளெல்லாம் சும்மா
என்றவர்கள் எல்லாம் இப்போது
பேச்சுக்கு அழைத்தால் பம்முகிறார்கள்..
நாத்திகர்கள் உங்களுக்கு ரொம்பவும்
சாதகமாகப் போய்விட்டது...
இப்படி இந்த நேரத்தில்
நாத்திக பிரச்சாரம்..நியாயமா
எனக் கேட்கிறார்கள்.....

எப்போதும் போலவே
இப்போதும் சொல்கிறோம்...
உங்களைச்சங்கடப்படுத்துவது
எங்கள் நோக்கமல்ல...
ஆனால் உங்களுக்கு உண்மையும்
தெரிதல் வேண்டும் என்பதே
எங்கள் விருப்பம்....

எந்தக் கடவுளும் எங்களுக்கு நண்பர்களில்லை
அதைப்போல எந்தக் கடவுளும்
எங்களுக்கு எதிரிகள் இல்லை...
எத்தனையோ கற்பனைக் கதைகள்
இயற்றப்பட்டது போல
எல்லாக் கடவுள்களும்
மனிதனால் படைக்கப்பட்ட கற்பனைகளே
என்பதை இப்போதாவது
உணரச்சொல்கிறோம்..அவ்வளவுதான்


என்னய்யா உங்க 21-ஆம் நூற்றாண்டில்
மகத்தான அறிவியல் முன்னேற்றம்?
இந்த இம்பூட்டுண்டு வைரஸ் உலகையே
கண்ணில் விரலை விட்டு ஆட்டுது...
செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டோம்
சூரியனுக்கு ராக்கெட்டுல பக்கத்துல போயிட்டோம்...
அட போங்கப்பா, செத்து விழும்
மனிதர்களை காப்பாத்த முடியலையே....
அறிவியலும் அப்படித்தானே
என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது...

நீங்கள் கேட்பது உண்மைதான்..
அறிவியலும் கூட இன்று
கையைப் பிசைந்துகொண்டுதான் நிற்கிறது...
ஆனால்
மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அறிவியல்
முடியாதது ஒரு நாள் முடியும்
என நம்புவது அறிவியல்...
முடியும் எனும் திசை நோக்கி
முன்னேறிக்கொண்டே இருப்பது அறிவியல்
உறுதியாகச்சொல்கிறோம் இன்னும்
சில நாட்களில் கொரனாவை
உலகிலிருந்து விரட்டிவிடும் அறிவியல்....

மாறுதலுக்கு உட்பட்டு
மாற்றங்களை ஏற்றுக்கொண்டு
மகத்தான மனித நேய நோக்கில்
தொடர்ந்து கொண்டிருப்பது அறிவியல்...
ஆன்மிகம் போல அறிவியல்
அவரவர் மதக்குளத்திற்குள்
தேங்கிக் கிடக்கும் நீரல்ல மாற்றாக
ஓடிக்கொண்டே இருக்கும் நதி.....

இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...
இப்போதைய தேவை
நமக்குள்ளான சண்டைகளல்ல...
இணைந்து நிற்கும் நேரமிது.....
நீ எந்த மதம்
நான் எந்த மதம்
எவர் உயர்ந்தவர் எவர் தாழ்ந்தவர்
எனும் கேள்விகளை நீக்கி
கொரானாவிற்கு அனைவரும் ஒன்றே
என்பதை கொரனா நிருபித்திருக்கிறது....

இப்போதைய தேவை
உதவும் கரங்கள்தான்..
உபதேசிக்கும் உதடுகளல்ல..
மனிதர்களாய் இணைவோம்...
மானுடம் போற்றுவோம்

                     வா.நேரு....30.03.2020








Friday 27 March 2020

அண்மையில் படித்த புத்தகம் : அஞ்சு வண்ணம் தெரு...தோப்பில் முஹம்மது மீரான்

அண்மையில் படித்த புத்தகம் : அஞ்சு வண்ணம் தெரு
நூல்  ஆசிரியர் : தோப்பில் முஹம்மது மீரான்
வெளியீடு      : காலச்சுவடு பதிப்பகம்,முதல் பதிப்பு ஆகஸ்ட் 2019
முதல் பதிப்பு   : 2008
மொத்த பக்கங்கள் : 279, விலை ரூ 300

                     அன்பிற்கினிய நண்பர் ,மதுரை புத்தகத்தோழன் பா.சடகோபன் அவர்கள் எனது விருப்ப ஓய்வு நாளன்று(31.01.2020) பரிசாகக் கொடுத்த புத்தகம்.அட்டையே பிரிக்காமல் இருந்து  நேற்றைக்கு முந்தைய நாள்  பிரித்து படிக்க ஆரம்பித்த புத்தகம். முதல் 4,5 அத்தியாயங்கள் படிக்கும்வரை நாவல் பிடிபடாமலேயே இருந்தது.ஆனால் அதற்குப் பிறகு தொடர்ச்சியாக வாசிக்கத்தூண்டிய நாவல். நேரமும் கிடைக்க ஓரிரு  நாளில் படிக்க முடிந்த நாவல்.

                     இந்த நாவலைப் படித்து முடித்த பொழுது ,கலகக்காரர் தோப்பில் முஹம்மது மீரான் என்று எழுதவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.நேரடியாக சில விசயங்களைச்சொல்லாமல், அற்புதமான கதைச்சொல்லாடலில்,வட்டார வழக்கில் ,அவரது மொழியில் அவரது மதத்தையே எள்ளி நகையாடும் கதையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. தான் பிறந்த சாதியில் அல்லது மதத்தில் இருக்கும் குறைபாடுகளை நகையாடுவதற்கு உள்ளத்தில் உறுதியும் ,தெளிந்த உலகப்பார்வையும் இருக்கவேண்டும்.இந்த நாவலைப் பொறுத்தவரையில் அது நிறையவே நூல் ஆசிரியரிடம் இருக்கிறது. 

அடக்கம் செய்யப்பட்ட தாயின் வரலாறிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. பெண் கேட்ட மன்னனிடம் இருந்து தப்பிக்க 8 ஆண்பிள்ளைகளையும் ஊரை விட்டு போகச்சொல்லிவிட்டு, அழகான தன் பெண்ணை உயிரோடு புதைக்கும் தகப்பன்.புதைத்து விட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் தகப்பன் என்று தாயின் வரலாறு கூறப்படுகிறது.இந்து மதத்தின் சிறு பெண் தெய்வங்கள் போல, இறந்த போன அந்தப்பெண்ணே அந்த அஞ்சு வண்ணம் தெருவைக் காப்பதாக அந்தத் தெருவில் வாழும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை.." வெளிச்சம் நுழையாத அஞ்சுவண்ணம் தெருவில் வாழும் மக்கள். அவர்களுடைய மனங்களில் பதியவைத்த விசயங்களை,நம்பிக்கைகளை எளிதில் மாற்றிவிட முடியாது ...தெருச்சனங்களிடத்தில் சொல்லிப்புரியவைக்க முடியாதபடி ஒரு மூட நம்பிக்கை அந்த வீட்டைச்சுற்றி விழுதுகள் இறக்கியது.பிடுங்கி எறிய முடியாதபடி விழுதுகள் ஆழ்ந்து இறங்கியாதலேயே ..." ..ஆம்..பிடிங்கி எறிய முடியாதபடி ஆழ்ந்து இறங்கி நிற்கும் அந்த நம்பிக்கைகளை, அந்தக் கள்ளமில்லா மனிதர்களின் மனங்களிலே வேர் பொட்டு பதிந்திருக்கும் அந்த மூட நம்பிக்கைகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். 
.
சில பாத்திரப்படைப்புகளை வாசிப்பவர்கள் மறக்க இயலா வண்ணம் நாவாலாசிரியர் படைத்திருக்கிறார்.இந்த நாவலின் முக்கியமான பாத்திரம். மைதீன் பிச்சை மோதின்.பலருடைய பழைய வரலாற்றை தெரிந்தவர். தைக்கா பள்ளிவாசல்தான் அவர் உலகம். ஐந்து நேரமும் தொழுகைக்காக பாங்கு ஓதுபவர். யாரும் தொழுகைக்கு வரவில்லை என்றாலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தைக்கா பள்ளிவாசலில் பாங்கு ஓதுபவர். தைக்கா பள்ளிவாசல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்த போது அதனை சரி செய்ய முயன்று கொண்டேயிருக்கிறார்.இல்லற வாழ்வில் இருக்கிறவர் என்றாலும் அவரது மனைவி பற்றியும் அவரது இல்லற வாழ்க்கையும் சில பக்கங்களில் மட்டும் ஆனால் நாவல் முழுக்க அவர் வருகின்றார். அவர் பாங்கு ஓதும் தைக்கா பள்ளிவாசலும் வருகிறது.கடைசியில் பாம்பு கடித்து அவர் இறக்கின்றார். அவரைப் பற்றி வாப்பாவின் மதிப்பீடு இப்படி "மைதீன் பிச்சை மோதினுடைய ஆழமான நம்பிக்கையை வாப்பா கேள்வி கேட்கவில்லை. பாவம்,உலகம் தெரியாத அப்பாவி ஜன்மம். இது போன்றவர்களுடையை கட்டுப்பாட்டில்தான் எல்லாப்பள்ளிவாசல்களும் சமூகமும் " பக்கம் 115....ஆழமான நம்பிக்கை உள்ள, வாழத்தெரியாத,அப்பாவியான பாத்திரப்படைப்பாக மைதீன் பிச்சை மோதினைப் படைத்து போகிற போக்கில் 'இது போன்றவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் எல்லாப்பள்ளிவாசல்களும் சமூகமும் 'என்று சொல்கின்றார்.


மைதீன் பிச்சை மோதின் போலவே நாவல் முழுக்க வரும் இன்னொரு பாத்திரம் 'மம்மதும்மா '.அஞ்சுவண்ணம் தெருவையே தனது வாய்ப்பேச்சாலும் துடுக்குத்தனமான அஞ்சாமையாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தெருவில் சோறாக்கி,தெருவில் உண்டு, ஒரு வீட்டுத்திண்ணையில் படுத்து உறங்கும் மூன்று பிள்ளைகளின் தாய். அவள் எப்பேர்ப்பட்ட வீரப்பரம்பரையைச்சார்ந்தவள் என்பதனை நாவலின் நடுப்பகுதியில் மைதீன் பிச்சை மோதின் வழியாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் நாவலாசிரியர்.தன்னை ஒரு மாதிரியாகப் பார்க்கும் ஒரு ஸொல்  பார்ட்டியை அவள் இருட்டில் வரவைத்து  கவனிக்கும் விதம், ஒரு சிவாஜிகணேசன்  படத்தில் இந்தா வறுத்த கறி, அவிச்ச முட்டை என்று  மனோரமா எம்.ஆர்.ஆர்.வாசுவை மொத்தும் காட்சிகளை நினைவூட்டுகிறது.அஞ்சுவண்ணம் தெரு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மோதிக்கொள்ளும் நிலையில் அவள் படும் பாட்டை, ஒற்றுமையாக இருந்த தெருவை இப்படி மதம் பேசி மதம் பிடிக்கவைத்து விட்டார்களே என்னும் ஆற்றாமை, அதனால் அவள் அமைதியாகும் தன்மை என நெஞ்சில் நிற்கும் பாத்திரமாக மம்மதும்மா நாவல் முழுக்க வருகின்றார். ஒரு நாவலின் வெற்றிக்கு பாத்திரப்படைப்பின் வலிமை எவ்வளவு அவசியம் என்பதனை நாவல் எழுத விரும்புகிறவர்கள் புரிந்துகொள்வதற்கான விளக்கம் போல இந்த நாவலில் பாத்திரப்படைப்புகள்..

அதே போல தைக்கா பள்ளிவாசலை விட உயரமாக இருக்கும் வீட்டை தனது மகள் தாத்தாவுக்கு வாங்கித்தரும் வாப்பா. மூட நம்பிக்கையால் தனது மகளும் மருமகனும் தைக்கா பள்ளிவாசலுக்கு இரண்டு மினார்கள் கட்டிக்கொடுத்தால்தான் தங்கள் வீடு பள்ளிவாசலை வீடு தாழும்,அப்போதுதான் தங்கள் வாழ்வு நன்றாகும் என்று மாற்றி மாற்றி சொல்வதைக் காதில் வாங்கிக்கொண்டு ஆனால் அதனைச்செய்யாமல் விட்டுவிடும் வாப்பா. நாவலின் முடிவில் தாத்தாவின் பிள்ளைகள் மிக உயர்ந்த நிலைக்கு வருவதைக் காட்டி ,அப்படியெல்லாம் மூட நம்பிக்கை கொள்ளத்தேவையில்லை என்பதனை கதையின் மூலமாகச்சொல்லிச்செல்லும் தன்மை.

" வாப்பா பதிலேதும் பேசவில்லை.அறிவிலிகளோடு பேசி வெல்லமுடியாது என்பது வாப்பாவுக்குத் தெரியும். சமாதியைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டு இருப்போனிடம் அறிவுரை செய்யப்போனால் தாமே முட்டாளாகிவிடுவோம் என்றுணர்ந்து வாப்பா பேச்சின் திசையைத் திருப்ப முயன்றார். ..பக்கீர் பாவா சாகிப் கட்டவிழ்த்துவிட்ட ஆதி வரலாறு வாப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.நம்ப முடியாததாகப் பட்டது.ஆனால்/ சனம் நம்புகிறது. சனங்களை நம்பச்செய்யும்படியாகக் கட்டமைக்கப்பட்ட கதைகள் எத்தனையோ உள்ளவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.உண்மையானதாகவும் இருக்கலாம்.ஒரு கோட்பாட்டை நிலை நாட்டுவதற்காக ஒரு பெண்ணை உயிரோடு புதைத்த கொடிய செயலை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் ?இறைவனுக்கு உவப்பான செயலா இந்தப் பெண் கொலை? அரும்கொலை செய்யப்பட்டவள் புனிதவதியாக கொண்டாடப்படுகிறாள் !" பக்கம் 118. இது ஆதியிலிருந்து அந்தத் தெருவில் வாழும் இஸ்லாமிய மக்களைப் பற்றிய வாப்பாவின் மதிப்பீடு.

தோப்பில் முகமது மீரான் மறைந்தபொழுது அவரைப் பற்றி பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் மனுஷ்யபுத்திரன் "இஸ்லாமியக் கலாச்சரம் அதன் உண்மையான வடிவத்தில் நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவானது மிகக் குறைவு. அந்தக் கலாச்சாரத்தை பொதுவெளிக்கு சிறப்பாக முன்வைத்தவர் தோப்பில். இஸ்லாம் குறித்து எழுதுவதில் இருந்த மனத் தடையை அவர்தான் முதன் முதலில் உடைத்தார். இஸ்லாம் சார்ந்த வாழ்வை அவர் தன் எழுத்தில் விமர்சன பூர்வமாக அணுகினார்." உண்மை. இந்த நாவல் படிக்க,படிக்க நாஞ்சில் நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களின் கலாச்சாரத்தை அணு,அணுவாக புரிந்துகொள்ள முடிகிறது.கலாச்சாரத்தை எப்படியெல்லாம் மீறுகிறார்கள் என்பதனை மம்மதும்மா போடும் சணடைகள் மூலமும் விளக்குகின்றார். அந்தக் கலாச்சாரத்தில் நேர்மறையான நடைமுறைகள், எதிர்மறையான நடைமுறைகள் இரண்டையும் உள்ளது உள்ளபடியாக பதியும் போக்காக இந்த நாவல் அமைந்திருக்கிறது. 

எழுத்தாளனின் மனம் மனித நேயத்தால் நிரம்பி வழிகிறபோது , அவனது எழுத்துக்களிலும் அதுதான் வெளிப்படும்.மனித நேயத்திற்கு எதிராக அறியாமைதான் இருக்கிறது. மூட நம்பிக்கைகள் பற்றிய அறியாமை,மதங்களைப் பற்றிய அறியாமை,சமூகவியல் பற்றிய அறியாமை,அநீதியாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் புரிந்துகொள்ள இயலாத அறியாமை  என அறியாமைகளால் நிரம்பியிருக்கும் மக்கள் அவதிப்படும்போது , மனித நேயமிக்க எழுத்தாளனின் எழுதுகோல் ,அந்த அறியாமைகளை எப்படியாவது நீக்கிவிட நமது எழுதுகோல் துணைபுரியாதா என்னும் ஏக்கத்தில்தான் பக்கங்களை நிரப்பும்.கும்பல் கும்பலாக மனிதர்கள் சேர்ந்து , சக மனிதனை மாட்டின் பேரால் அடித்துக்கொள்ளும் இந்த நாட்டில் அறியாமை நீக்கிட எழுதும் எழுதுகோல்கள் போற்றப்படவேண்டியவை. ஆனால் தோப்பிலைப் பொறுத்தவரை இந்த நாவலில் ஏதேனும் ஒரு பக்கம் நின்றுகொண்டு,பிரச்சாரமாய் ஏதும் செய்யவில்லை...ஆனால் அவர் எழுதிச்செல்லும் எழுத்தினை வாசிக்கும் எவருக்கும் அவரது மனித நேய நோக்கம் எளிதில் பிடிபடும். 

கடந்த 10,20 ஆண்டுகளில் தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து நிற்கிறார்கள். அந்த பிரிந்து நிற்கும் இரண்டு பிரிவுகள் என்ன, ஏன் அப்படி பிரிந்து நிற்கிறார்கள் என்பதனை தனது நாவல் மூலம் இஸ்லாத்தைப் பற்றியே அறியாத வாசகனும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நாவலில் எழுதியிருக்கிறார்.பழைய பிரிவாக நிற்கும் மைதீன் பிச்சை மோதின்,வேம்படிப் பள்ளி சொற்பொழிவு மேடையில் நின்று வெள்ளிக்கிழமை குத்பா(சொற்பொழிவு) ஓதும் குவாஜா அப்துல் லத்தீப் ஹஸ்ரத்,அவர்களோடு சேர்ந்த பல துணைப்பாத்திரங்கள் என ஒரு பிரிவாக சுன்னத் ஜமா அத்தார்கள்...தர்காவை வணங்குதல், சீறாப்புராணம் போன்ற காப்பியங்களை போற்றிப்புகழுதல் என விரிவாக இந்தப் பிரிவினர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறையை, நம்பிக்கையை எழுதியிருக்கிறார்.

அஞ்சு வண்ணம் தெருவில் இதற்கு மாற்றாக வரும் இன்னொரு பிரிவினரை ஆரம்பித்து வைப்பராக சீக்கா வீட்டிலுள்ள சாவல் என்னும் பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்.இரண்டு வருடம் சவூதி அரேபியாவில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பும் சாவல் ,தாடியோடு ஊருக்கு வருகிறார். எல்லோரும் தொப்பி போட்டு தொழும்போது, அவர் தொப்பியில்லாமல் தொழுகின்றார்.ஏன் தொப்பி போடவில்லை என்று கேட்டபோது ஏன் தொப்பியில்லாமல் தொழக்கூடாது? எனக் கேள்வி கேட்கிறார்.தனது பெயரான சாகுல் ஹமீது என்னும் பெயரை அப்துல் ஜலீல் என்று மாற்றியதாக குறிப்பிடுகிறார்." "நான் இப்பம் சுத்த தவ்ஹீத்வாதி..அவுலியாக்களுடைய பேரை வைக்கக்கூடாது..கபர்களை ஒப்படைக்கணும்.மல்லூது ஓதக்கூடாது.சீறாப்புராணம்,மெஹராஜ் மாலை,மஸ்தான் பாடல் எல்லாத்தையும் தீ வைக்கணும் " என்று அப்துல் ஜலீல் சொல்வதாகக் கூறி தவ்ஹீத் என்னும் இஸ்லாமிய அமைப்பின்  நோக்கங்களை மிகத்தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

அபூ ஜலீல் அவன் வீட்டில் இருந்த மஸ்தான் பாடலை எடுத்து வெண்ணீர் அடுப்பில் போட்டு எரிக்கிறான்.அப்படி அவன் செய்தபோது " பயலுக்குப் பைத்தியம் பிடிச்சுப்போச்சோனு அவன் அம்மா அழுது வடிச்சாள்.நாட்கள் நகர நகர தாய் தந்தையருக்கும் தெரு சனங்களுக்கும் புரிஞ்சு போச்சு,பயலுக்குப் பைத்தியமில்லை,சவூதி அரேபியாவிலிருந்த் கொண்டு வந்த 'புதிய கொள்கை 'என்று." பக்கம் 156...

சுன்னத் ஜமா அத்தார்களுக்கும், தவ்ஹீத்வாதிகளுக்கும் நடக்கும் சின்ன சின்ன மோதல்களில் ஆரம்பித்து, குத்து,வெட்டு என்று இரத்தக்களரி ஆகும்வரைக்குமான கதையாடல்கள் வெறும் கதையாக இல்லை. இரத்தமும்,சதையுமாக ஒன்றுக்குள் ஒன்றாய் ஒற்றுமையாய் இருந்தவர்கள் அஞ்சுவண்ணத்தெருவில் இருந்தவர்கள்... பிளவுபடுவதும் ,ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ளும் மனநிலையில் அலைவதையும், அப்பாவி ஒருவன் அநியாயமாகச்சாக அவன் தன் தரப்பைச்சார்ந்தவன் என இரு பிரிவும் இரங்கல் போஸ்டர் அடிப்பதும் என வாசிக்கும் நம்மைப் போன்றவர்களுக்கே வலிக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் வாசிக்கும்போது இன்னும் அதிகமாகவே மனசாட்சி உள்ளவர்களுக்குச்சுடும்.அஞ்சுவண்ணம் தெருவில் நடந்த சண்டையைத் தொடர்ந்து நாவலாசிரியர் இப்படி எழுதுகிறார்.

" அஞ்சுவண்ணம் தெருவில் நடந்த அடிதடிச்செய்தியை வளைகுடாவுக்கு அஞ்சுவண்ணம் அந்தி மேகம் கொண்டு சென்றது.தவ்ஹீத் பள்ளி கட்டணும்.வளைகுடாவிலுள்ள தவ்ஹீத்வாதிகள் அள்ளிக்கொடுப்பதாகச்சொன்ன  வாக்குறுதியை ,வளைகுடாவிலிருந்து புறப்பட்ட பாலைவன மேகம் அஞ்சுவண்ணம் தெருவிற்கு வடபகுதியிலுள்ள  மேற்குத்தொடர்ச்சி மலையின்  முகட்டில் வந்து நின்ற தம்பியில்லாக் கம்பி வழியாக அபூஜலீன் காதில் சொன்னது. அந்நேரமே அவன் எடுத்த முடிவு.இனி சவூதிக்குப் போகவேண்டாம்.இங்கேயே சம்பாதிப்பதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது.முதலில் தவ்ஹீத் பள்ளி! இரண்டாவதாக தனி கபர்ஸ்தான்.அதற்காக ஒரு வளைகுடா வசூல்....அபூஜலீல் தீவிரமாகச்செயல்பட்டான்..."

அபுஜலீலின் நோக்கத்தைச்சொல்வதோடு தன் கருத்தையும் பதிக்கின்றார் இப்படி " கொடி கட்டுவதைத் தடுத்து  ஒரு குழப்பம் உண்டாக்கினால் பல இலாபங்கள் உள்ளன.அரசியலுக்குள் மதத்தையும் சாதியையும் புகுத்தினால் அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் பல உள்ளன.அதுபோன்று மதத்தை அரசியலாக்கினால் போலி மதவாதிகளுக்கு அதனால் பல நன்மைகள் உள்ளன.மதத்தைப் பற்றி எதுவும் தெரியாத வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் மதவெறியை ஊட்டி அது வழியாகப் பொருளாதார நன்மைகள் அடையலாம் "பக்கம் 159...மிகத் தெளிவாக வரையறுத்துக்கூறுகின்றார்.
மனுஷ்ய புத்திரன் தன்னுடைய பி.பி.சி.பேட்டியில் " இஸ்லாம் மதத்தில் உள்ள அடிப்படை வாதத்தை,மதத்தின் பேரால் மக்களை ஒடுக்குவதை அவர்(தோப்பில் முஹம்மது மீரான்) எழுதினார்.அந்த வாழ்வில் உள்ள இருள் மிகுந்த பக்கங்களைச்சுட்டிக் காட்டினார்" என்று குறிப்பிடுவதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.நன்றாகவே தோப்பில் எழுதியிருக்கிறார்..பின்வரும் பத்தியைப் பாருங்கள்...

" அணிகளாகப் பிர்ந்து நிற்போருக்கே எதற்கென்று தெரியாது. மக்களுக்கிடையே இருக்கும் மத நம்பிக்கையை அறுவடை செய்து களத்தில் நெல்லைக்குவித்து மூடிப்போட்டுக்கொண்டிருக்கும் பிழைக்கத் தெரிந்த தந்திரசாலிகளான விவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
விரல் ஆட்டுவதா ? வேண்டாமா?,,,தல்கீன் ஓதுவதா? வேண்டாமா/ தொப்பி போடுவதா ? வேண்டாமா ?...
சமுதாயத்திற்குள் ஊடுருவிச்சென்று சமுதாயத்தின் மனசை வாசித்த பிறகுதான் சில தெளிவுகள் கிடைத்தன.நகரப்பகுதிகளில் வானளவு உயர்ந்த கட்டிடங்களில் வாழ்பவர்களில்ல,சமுதாயத்தின் அசல் முகத்தைக் காட்டும் கண்ணாடி..சேரிகளில் கிராமப்புறங்களில் ஒட்டிய வயிற்றுடன் கீறத்துணி கொண்டு மானம் மறைத்துத் திரியும் மக்களின் முகங்களில் இந்தச்சமுதாயத்தின் நிஜ நிலையைத் தரிசிக்கலாம்.செல்வந்தர்களாலும் மத புரோகிதர்களாலும் சூறையாடப்பட்ட சமுதாயமாகப் போய்விட்டது.
இந்தச்சூறையாடல் பேர்வழிகளான மத புரோகிதர்களை வாப்பா வீட்டு நடையில் ஏறவிடமாட்டார். மத அறிஞர்களுக்கும் மத புரோகிதர்களுக்குமிடையே அரபிக்கடல் அளவு அகலம் கிடக்கிறதென்பார். புதுப்புது மத இயக்கங்கள் உருவாகி நம்பிக்கையாளர்களிடம் மனச்சஞ்சலங்களை ஏற்படுத்தி வருவதில் மாமூல் புரோகிதர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு ..மறுக்க முடியாத முக்கிய பங்கு " பக்கம் 174.

அஞ்சுவண்ணம் தெருவில் தவ்ஹீத் இயக்கத்தை ஆரம்பித்து வைத்த சீக்கா சாவலுடைய தம்பி விக்கன் எக்கியாவுக்குத் திருமணம். நபிவழித் திருமணம்.இந்தத் திருமண நிகழ்வை நன்றாக பகடியாக எழுதிச்செல்கின்றார் நாவலாசிரியர். திருமணத்தில் பேசவந்த சிறப்புப்பேச்சாளர் " இதற்கு முன்பு நடந்த அனைத்துத்திருமணங்களும் இஸ்லாம் காட்டிய நேர் மார்க்கப்படி நடைபெறவில்லை. எல்லாம் ஹரமான(தீய) முறையில் நடந்த திருமணங்கள் " என்று பேச நாற்காலிகள் பறக்கிறது. சிறப்புப்பேச்சாளர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்.ஊரே ரண களமாகிறது.

அதற்கு பின்பு நடைபெறும் புதிய மசூதி கட்டுதல். அதன்பின் சுன்னத் ஜமா அத்தார்களுக்கும் தவ்ஹீத் பிரிவினருக்கும் நடக்கும் சண்டை. மசூதி யாருக்கு என்பதற்காக பாராளுமன்றத்தேர்தல் போல நிறைய செலவில் நடக்கும் தேர்தல். தேர்தலில் தோல்வி பெற்ற பின்பு ,அதனைச்செல்லாது என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்துக்கு போகும் ஒரு பிரிவினர். நீதிமன்றத்திற்கு போனவுடன் இரண்டு பேருக்கும் இல்லை, பொதுவான ரிசீவரால் மசூதி நிர்வகிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு. ரிசீவராக நியமிக்கப்படும்  ஒரு ஆர்.எஸ்.எஸ்.வக்கீல் கதிரேசன்ஜி...எல்லா மசூதிச்செலவுகளுக்கும் கதிரேசன்ஜி கருணையை எதிர் நோக்கும் மசூதி பணியாளர்கள்...தொடர்ந்து எழுதும் நாவலாசிரியர் இப்படி எழுதுகிறார்.." மாபாவிகளே ,சீறும் விஷப்பாம்புக்கு ஊர்ந்து விளையாட புல்வெளி கொடுத்துவிட்டேளே " .

கோவையில் கடவுள் இல்லை என்று சொன்னதற்காக கொடுமையாக தோழர் பாரூக் தன்னுடைய மதத்தைச்சார்ந்தவர்களாலேயே கொல்லப்பட்டார்.மத புரோகிதர்களுக்கும், மத அறிஞர்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருப்பதை இஸ்லாமிய மக்களுக்கு உணர்த்த தோப்பில் நினைத்திருக்கிறார்.உண்மையை நேரிடையாகக் கூறினால் ,தன் மதத்தைச்சார்ந்தவர்கள் தன்னைக் கொல்லவும் செய்வார்கள் என்று தோப்பில் முகமது மீரான் நினைத்திருக்கலாம்.அதே நேரத்தில் உண்மையை சொல்லாமல் இருக்கவும் கூடாது என்ற நிலையில் ஒரு மாய மொழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.மதத்தின் பிடிப்பு இல்லாத பாத்திரப்படைப்பு எதுவும் இல்லை.ஆனால் அந்தப் பிடிப்பின் அடிப்படையில் மதத்தின் பேரால் நடைபெறும் முரண்பாடுகள் அத்தனையையும் சொல்லியிருக்கின்றார். அவருடைய மொழி ஆளுகை அப்படி ஒரு வசீகரத்தைத் தருகிறது  களந்தை பீர்முகமது அவர்கள் சொல்வது போல "உருவரும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு.இதற்கு இணையாகவே பழமையும் புதுமையான கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடருக்கின்றன.அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப் போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார்". உண்மைதான்..விலகி விலகிச்சென்று உண்மையை  அற்புதமாக சொல்லியிருக்கின்றார். 

" சனங்களுடைய அறியாமையைப் பற்றி அடிக்கடி சிந்திப்பார். பணமும்,அழகும்,சொத்து சுகமும் இருந்தால் மட்டும் போதாது.'அகல்' வேண்டும் என்பார்.எதை நம்ப வேண்டும்,எதை நம்பக்கூடாது என்ற பிரித்தறிவு.இந்தப் பிரித்தறிவுதான் மிருகத்திலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக்காட்டும் அம்சம்" பக்கம் 114..கவனமாக பகுத்தறிவு என்று சொல்லவில்லை, பிரித்தறிவு என்று சொல்கின்றார்.பிரித்தறிய கற்றுக்கொடுக்கும் அழகியல் அத்தனையும் கொண்ட அற்புதப்படைப்பு அஞ்சுவண்ணம் தெரு...." இஸ்லாமிய வாழ்வைப் பற்றி எழுதும்போது ஒன்று புனிதப் படுத்துகிறார்கள். அல்லது அவதூறு செய்கிறார்கள். இரண்டையும் செய்யாமல், அப்படியே எழுதியவர் தோப்பில்....ஆனாலும் தோப்பில் முகமது மீரான் முன்வைத்தது, வெறும் இஸ்லாம் சார்ந்த வாழ்க்கையை மட்டுமல்ல. தான் வாழ்ந்த நிலப்பரப்பு குறித்தும் ஒரு கவனம் அவருக்கு இருந்தது. அந்த மண் சார்ந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை மிக நுணுக்கமாக அவர் எழுதினார். தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. " என்று சொல்கின்றார் மனுஷ்யபுத்திரன். உண்மைதான் நாமே அஞ்சுவண்ணம் தெருவில் வாழ்ந்து முடித்த ஒரு உணர்வு தோன்றுகிறது இந்த நாவலைப் படித்து முடித்தவுடன்..அப்படிப்பட்ட ஒரு நேர்முகச்சித்தரிப்பு.வாழ்க தோப்பில் முஹம்மது மீரான் !


   




  


                  

Tuesday 24 March 2020

கொரானாவைச் சுற்றி சுழலும் உலகம்....வா.நேரு.

            கொரானாவைச் சுற்றி சுழலும் உலகம்....

அதிகாலையில் ஒருவன்
கிழிந்த ஆடைகளை உடல் முழுவதும்
போர்த்திக்கொண்டு
மழிக்காத தாடியோடு
இருண்ட பார்வையோடு ஒவ்வொரு
தெருவாக வந்து கொண்டிருக்கிறான்...
வயிற்றுப்பசிக்கு ஏதேனும் கிடைக்குமா?
எனும் தேடுதலாக இருக்கக்கூடும் ..
அவனது காதுகளுக்கு
சுய ஊரடங்கு சென்று சேரவில்லை போலும்..

சாப்பிட வழியில்லாமல்
சாலையோரம் கிடப்பவர்களுக்கு
உணவுப்பொட்டலத்தை மனமுவந்து
வழங்கிக்கொண்டிருக்கிறார் ஒருவர்
சுய ஊரடங்கலில் உணவு வழங்காதே
எனக் கைத்தடியால் அவரை
ஒரு காவலர் அடிக்கும் காட்சி
மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது
வாட்சப் குழுக்களில்...

முக நூலில்
பெண் கவிஞர் ஒருவர்
வறுத்து எடுக்கிறார் அரசை..
வாடகை கொடுக்க முடியலே
காய்கறி வாங்க முடியல
அன்றாடங்காய்ச்சிகளைப் பற்றி
அரசு ஏதேனும் யோசித்ததா ?
எனும் அவரின் கேள்வி அரசுக்கு கேட்டதோ?
சட்டசபையில் அறிவித்திருக்கிறார்
முதலமைச்சர் சில நிவாரணங்களை...
உரியவருக்கு அது போய்ச்சேருமா?
அந்தக் கொரனாவுக்கே அது வெளிச்சம் !

தெருக்கள் தோறும்
உணவில்லாதவர்கள்
உடையில்லாதவர்கள்
உறைவிடம் இல்லாதவர்கள்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்..
தங்களைக் கண்டுகொள்ளாமல்
பதுக்கி பதுக்கிவைத்த
பதுக்கல்காரர்கள் செத்து தொலையுட்டும்
என அவர்கள் நினைக்கக்கூடும்..

இப்படி நமது கடவுள்கள் எல்லாம்
கையாலாகதவர்களாக போய்விட்டார்களே
எனும் வருத்தம் பக்தகோடிகள்
மனதிற்குள் ஆழமாகப் பதிந்திருக்கிறது...
எத்தனை விரதங்கள்
எத்தனை பரிகாரங்கள்
எத்தனை புனித யாத்திரைகள்
நமது பிரச்சனைகளுக்குச்சொன்னார்கள்..
அட! அத்தனையும் டுபாக்கூர்தானா
எனும் கேள்வி ஆழமாக
அவர்கள் மனதில் எழுந்திருக்கிறது....

எனக்கு மட்டும்
எனது குடும்பத்திற்கு மட்டும்
என மிதமிஞ்சிச்சேர்த்தவனின்
மனமெல்லாம் ஒற்றைக்கேள்வியாய்
எழுந்து நிற்கிறது...
குடும்பமே செத்துப்போனால்
சேர்த்துவைத்ததெல்லாம் என்னவாகும்?
அட ! நாட்டுடைமையாகும் போங்கப்பா...

ஆட்டுக்கறி வழியாகவும்
கொரோனா பரவுகிறது என
அதீத மகிழ்ச்சியோடு ஒருவன்
வாட்சப்பில்  பதிந்திருக்கிறான்
அநேகமாக பாதிக்கப்பட்ட
கோழிக்கடைக்காரனாக இருக்கக்கூடும்...
உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை...
அவரவருக்கு தோன்றுவதை
பரவுவது முதல் தீர்வது வரை
அவரவர் மொழியில் பதியும் கொரனாக்காலம் இது..!

கைகழுவும் திரவத்தை தெருக்களுக்குள்
சென்று கொடுக்கும் வைபவத்தை
ஆளுங்கட்சிக்காரன் ஒருத்தன்
வாட்சப்பில்  பதிந்திருக்கிறான்...
கூட்டமாய்ச்சென்று திரவம் கொடுத்தால்
குற்றம் இல்லையா?...பரவாதா அது ?
கொடுப்பவர்களூக்கே வெளிச்சம்....

கொரனா தரும் அனுபவம்
மிகவும் வித்தாயாசமாய்...
வெள்ளைத்தோல் வெளிநாட்டுக்காரர்களுக்கு
வலிந்து போய் வணக்கம் சொல்லி
கைகுலுக்கி அரைகுறை ஆங்கிலத்தில்
உரையாடும் ஆட்கள் எல்லாம்
வெளிநாட்டுக்காரர்கள்
என்றால் அரண்டு ஓடுகிறார்கள்
மீனாட்சி அம்மன் கோவில் அருகில்....

கை கழுவுங்கள் கைகழுவுங்கள்
எனும் குரல்
சிற்றூர் தொடங்கி உலகம்
முழுக்க கேட்டுக்கொண்டிருக்கிறது....
ஆறிலும் சாவு..நூறிலும் சாவு
கொரானா வந்தால் ஒரு மாதத்தில் சாவு
என உற்சாகமாக கூவிக்கொண்டிருக்கிறான் ஒருவன்
தற்கொலைக்கு முயன்று தப்பித்தவனாக இருக்கக்கூடும்...
கொரனா வந்து பிழைத்தவர்களின் எண்ணிக்கையை
அவனுக்குச் சொல்லவேண்டும்....

எதைப் பற்றியும் கவலையில்லாமல்
கை நிறையப்  பாட்டில்களோடு
அரைகுறைப் போதையோடு
அலைந்து கொண்டிருக்கிறார்கள் பல பேர்!
ஆளுங்கட்சி சொன்னதற்காக
வெற்றி விழாவென்று
மணியடித்துக்கொண்டிருக்கிறார்கள் சில பேர்!
இருவரும் ஒன்றுதான் எனச் சொல்கிறான் ஒரு தோழன்...

ஓய்வு எடுக்கும் காலம் அல்ல தோழா!
புதிய படைப்புகள் படைக்கும் காலம் !
வாங்கி வைத்து படிக்காமல் விட்ட
புத்தகங்களை எல்லாம் படிக்கும் காலம்!
என ஊக்கமளித்திருக்கிறார் ஒரு கவிஞர்

கொரனா! கொரனா!
நீ இல்லாத இடமே இல்லை...
நீதானே இன்று உலகின் தொல்லை
எனப் பாடிக்கொண்டிருக்கிறான் ஒருவன்...

கொரானாவைச் சுற்றி சுழலும் உலகம்
சில நேரங்களில் வேடிக்கையாகும்
பல நேரங்களில் வேதனையாகவும்..
                                வா.நேரு...24.03.2020
.





Monday 23 March 2020

நெருப்பினுள் துஞ்சல்....விமர்சனம்..கவிஞர் நா.முத்துநிலவன்


அன்பிற்கினிய தோழர், புதுக்கோட்டை நா.முத்துநிலவன் அவர்கள் எனது 'நெருப்பினுள் துஞ்சல் ' சிறுகதைத் தொகுப்பினைப் பற்றி தனது வலைத்தளத்தில் பதிந்திருக்கிறார். கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்.ஐந்து பதிப்புகளோடு பல்லாயிரம் பேர் படித்த 'முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே ' என்னும் நூல் உட்பட்ட பல நூல்களின் ஆசிரியர்.எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், அறிவார்ந்த கருத்துக்களால் கருத்தரங்குகளை மெருகு கூட்டுபவர்.தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துபவர். பண்பாளர் .அவருக்கு என் அன்பும் நன்றியும் ..எனது சிறுகதைத் தொகுப்பு பற்றிய அவரின் விமர்சனத்தைப் படிக்க ....இணைப்பு

http://valarumkavithai.blogspot.com/2020/03/blog-post_22.html


அண்மையில் படித்த புத்தகம்: பாரதப்பாத்திரங்கள்...சு.அறிவுக்கரசு

அண்மையில் படித்த புத்தகம்: பாரதப்பாத்திரங்கள்
நூல் ஆசிரியர் : சு.அறிவுக்கரசு
வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம்,சென்னை-05 9790706549/9790706548
முதல் பதிப்பு : ஜீன் -2019
மொத்த பக்கங்கள் : 59 பக்கங்கள்…விலை ரூ 60.00

திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டு,வெளிவந்துள்ள சிறிய புத்தகம்..ஆனால் எழுப்பும் கேள்விகளால் மிகக் கனமான புத்தகம்.

மகாபாரதத்தில் வரும் பத்து பாத்திரப்படைப்புகள், வியாசன்,பாஞ்சாலி,பீஷ்மன்,தர்மன்,குந்தி,துரோணன்,பரசுராமன்,கர்ணன்,துரியோதனன்,கிருஷ்ணன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு,உள்ளது உள்ளபடி என்னும் அடிப்படையில்  மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு, கேள்விகளை எழுப்பி, வாசிப்பவர்களை விடை சொல்லச்சொல்கிறார்.மேடையில் பேசும்போதே நிறைய அறிவார்ந்த கருத்துக்களை சொல்லும் நேரத்தில்,அதனோடு சேர்த்து சில செய்திகளை நக்கலாகவும் சேர்த்து சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர் அய்யா அறிவுக்கரசு அவர்கள். அந்த நக்கல் இந்தப் புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிறது,அதனால் நிறைவாக இருக்கிறது.

கதைகள் வெறும் கதைகள் என்று மட்டும் நம்பப்பட்டால், நமக்கு பிரச்சனையில்லை. ஆனால் இதிகாசக்கதைப் பாத்திரங்களை கடவுளாக்கி, அந்தக் கடவுள் இந்த இடத்தில்தான் பிறந்தார் என்று சொல்லி கலவரம் ஆக்கும் இந்தச்சூழலில் இம்மாதிரியான புத்தகங்கள் மிக அவசியத்தேவையாகிறது.வாராது வந்த மாமணியாய் வந்த சேது சமுத்திரத்திட்டத்தை .சிலரின் சூழ்ச்சியால், ராமர் கட்டிய பாலம் என்னும் அயோக்கியத்தனமான கூற்றால் அந்தத் திட்டத்தை இழந்து நிற்கிறோம்.இப்படிப்பட்ட சூழலில்,மகாபாரதக் கதையில் வரும் ஒரு பாத்திரமான கிருஷ்ணன் இன்று கடவுளாக கொண்டாடப்படும் நிலையில் கிருஷ்ணன் உள்ளிட்ட அத்தனை பாரதப் பாத்திரங்களையும் கேள்விக்கணைகளால் துளைக்கும் புத்தகம்தான் இந்தப்புத்தகம்.காலத்தின் தேவையாக வந்திருக்கிறது.



முதல் பாத்திரம் வியாசன்..." பாரதக்கதையைப் பாடியவன் வியாசன். மிகவும் கருப்பாக இருந்தவன்.அதனால் துவைபாயனன் என்பதை கிருஷ்ண துவைபாயனன் என்றாக்கிவிட்டனர். அவன் பாடப்பாட வினாயகன்(பிள்ளையார்) தன் தந்தத்தை ஒடித்து எழுது கோலாக்கி எழுதினான் என்கிறார்கள்.எங்கே எழுதினான் என்றால் இமயமலையின் என்கிறார்கள்.எவ்வளவு முட்டாள்தனமான கற்பனை " என்றுதான் இந்தப்புத்தகத்தின் முதல் அத்தியாயம் வியாசன் பற்றி ஆரம்பிக்கிறது. இந்த முட்டாள்தனமான கற்பனையை எதற்காக செய்தார்கள் என்பதனை முன்னுரையிலேயே அய்யா அறிவுக்கரசு அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.(வாங்கிப் படிப்பதற்காக விட்டிருக்கிறேன்)


பாஞ்சாலியைப் பற்றிச்சொல்லும்போது ஐவருக்கும் அவள் மனைவியான கதையைச்சொல்கிறார்.சொல்லிவிட்டு 'தின்னும் பண்டத்துக்குப் பொருந்தும்.பெண்டாட்டிக்குமா? சே, என்னய்யா கலாச்சாரம்? அநாச்சாரம்....இந்த அசிங்கத்திற்கு ஆதாரக்கதைகளை கட்டி உலவ விட்டிருக்கிறார்கள் பாரதப்புத்திரர்கள். பகவானிடம் பாஞ்சாலி 'பதிம்தேஹி' என்று கேட்டாளாம். புருஷனைக்கொடு என்று கேட்டாளாம்.பகவான் காதில் விழுந்ததோ என்னவோ என்று எண்ணி மீண்டும் கேட்டாளாம். அய்ந்து முறை கேட்டாளாம்.அய்ந்து கணவனைக் கொடுத்தானாம் பகவான். பகவானுக்கு அறிவு வேண்டாமா? கேட்டவள் ஒருத்தி எனும் போது ...ஒரு புருஷன் போதுமே என்று பகவானுக்குத் தெரிந்திருக்க வேண்டாமோ ? ' ...நியாயமான கேள்விக்கு பாரதபுத்திரர்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

தர்மன் என்னும் பாத்திரம் மகாபாரதக்கதைப்படி என்னென்ன பாதகம் எல்லாம் செய்தது என்பதனை புத்தக ஆசிரியர் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறார்.கதைப்படி சொர்க்கத்தில் இடம் பெற்றான் துரியோதனன்,நரகத்தில் இடம் பெற்றான் தர்மன். தர்மனா? துரியோதனா? யாரை விரும்பிவீர்கள் எனக்கேட்டிருக்கிறார். உறுதியாக துரியோதனன்தான். கதைப்படியே துரியோதனன் என்னும் பாத்திரப்படைப்பில் 'எடுக்கவோ,கோர்க்கவோ உட்பட ' அவனது  நல்ல குணங்களை எல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். அதனைப்போல கர்ணன் என்னும் பாத்திரம் எவ்வளவு உயர்வானது என்பதனையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்.

குந்தி என்னும் பாரதப்பாத்திரத்தில் அவளது கணவன் பாண்டு' எந்த முனிவனையாவது புணர்ந்து பிள்ளை பெற்றுக்கொள் 'என்றான். அவனே அப்படிப்பெறப்பட்டவன்தான் என்னும் கதையைச்சொல்கிறார்." பாண்டுக்கு மகன்கள் அய்ந்துபேர்.பாண்டவர்கள்.பஞ்ச பாண்டவர்கள். அய்வரும் அப்பனுக்குப் பிறக்காதவர்கள்.வேற்றானுக்குப் பிறந்தவர்கள்.பாரதக்கலாச்சாரத்தில் இதற்கு ஷேத்திரஜா என்று பெயர். வனஜா என்றால் வனத்தில் பிறந்தவள்.கிரிஜா என்றால் மலையில் பிறந்தவள். ஷேத்ரஜா என்றாள் ஊரானுக்குப் பிறந்தவள் ' என்று பெயர்களுக்கான காரணங்களை விளக்கமாகவே குறிப்பிட்டு கர்ணனுக்கு எப்படி எல்லாம் அவனது அம்மா குந்தி துரோகம் செய்கிறாள் என்பதனைக் குறிப்பிடுகின்றார்..

துரோணன் என்னும் கதாபாத்திரம் பார்ப்பனர் கதைப்படி. 'ஆரியம் சத்திரியனைப் பயன்படுத்தி சத்திரியனைப் பழிவாங்கியது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு இடையில் இருந்து இரத்தம் குடித்தது நரி ' என்று குறிப்பிட்டு, ஏகலைவன் கதையையும் கூறி துரோணன் என்னும் கதாபாத்திரம் உணர்த்துவது 'ஆட்கள் அழிவது தீர்வாகாது; தத்துவம் தீர்த்துக்கட்டப்படவேண்டும் ' என முடிக்கின்றார்.

பரசுராமன் என்னும் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதனை ' பார்ப்பனன்.மற்ற ஜாதியாரை வெறுப்பவன். அதிலும் அரசர்களாக இருக்கும் சத்திரியர்களைக் கூடுதலாக வெறுப்பவன்.சத்திரியர்களையே பூண்டோடு அழிக்கவேண்டும் என்றவன்.முயன்றவன் ' எனக்குறிப்பிட்டு அந்தப் பாத்திரப்படைப்பு எப்படி பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் மேல் விஷத்தைக் கக்கியது என்பதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்,

கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரம் எவ்வளவு நயவஞ்சகம் செய்பவனாக, அயோக்கினாக படைக்கப்பட்டிருக்கிறது என்பதனைப் பட்டியலிடுகின்றார். 'யுத்த தர்மம் மீறுவதும்,ஜாதி தர்மம் காப்பதும் கடவுள் செய்கிற காரியமா ?.'தன் மக்கள் நூறு பேரையும் இழந்து அழுத காந்தாரி விட்ட சாபம் 'அயோக்கியனே,திருடனே,வஞ்சகனே 'என்றெல்லாம் திட்டினாள்.சாபமும் இட்டாள்.உன் மனைவியை இழந்து  ,உறவுகளை இழந்து,உன் குலத்தினரை இழந்து ,மீதமிருப்போர் ஒருவருக்கொருவர் அடித்து மாள்வர் என்ற சாபம் பலித்ததே!
வேடனால் வேட்டையாடப்பட்ட வேடனைப்போல நீயும் சாவாய் என அவனுக்குச்சாபம் .ஜராசந்த் விட்ட அம்பு கணுக்காலில் தைத்துச்செத்தானே கடவுள் கிருஷ்ணன் !கடவுள் சாகுமா? சாவு கடவுளுக்குமா? 'எனும் நேர்மையான கேள்வியை எழுப்புகிறார் அய்யா அறிவுக்கரசு. பக்தர்கள்தான் பதில் கூறவேண்டும்.

" ஜாதி/வர்ணம் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்குடன் பாடப்பட்ட பாரதக்கதையின் தீய எண்ணம் நிறைவேற உதவியவர்களில் ஒருவன் பரசுராமன். மற்றவன் கிருஷ்ணன்.மற்ற பாத்திரங்கள் "எக்ஸ்ட்ரா"க்கள் என்று குறிப்பிடுகின்றார். அவாளின் நோக்கத்திற்காகப் பாடப்பட்டது மகாபாரதம்,அதற்காக இடையில் செருகப்பட்டது கீதை என்னும் உண்மை நமது மக்களின் மூளையில் ஏறவேண்டுமே..இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று தெரியவில்லை,அதற்கு. 

.
தந்தை பெரியார் எழுதிய இராமயணப்பாத்திரங்கள் என்னும் நூல் மிகப்புகழ் வாய்ந்தது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டிருக்கும் புத்தகம்.2018-ல் கேரளா மாநிலம் தொடுபுழாவில் நடைபெற்ற கேரள யுக்திவாதி சங்கத்தின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எனக்கு முன்னால் பேசிய கர்நாடகப் பகுத்தறிவாளர் கே.எஸ்.பகவான் முழுக்க முழுக்க தந்தை பெரியார் எழுதிய இராமயணப்பாத்திரங்கள் என்னும் புத்தகத்தைப் பற்றித்தான், அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பற்றித்தான் பேசினார். அந்த நூல் இன்றைக்கு இந்தி,மலையாளம், ஆங்கிலம், கன்னடம்,தெலுங்கு எனப்பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இலட்சம் பேரைச்சேர்ந்தடைந்துள்ளது.

இராமாயணப்பாத்திரங்களை தந்தை பெரியார் அம்பலப்படுத்தியுள்ளது போல ,அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் பாரதப் பாத்திரங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.சிறு புத்தகம்தான் இராமாயாணப்பாத்திரங்கள் என்னும் புத்தகம் போல. ஆனால்  அதனைப்போலவே மிக வலுவான கருத்துக்களைக்கொண்டிருக்கும் புத்தகம் இந்த 'பாரதப்பாத்திரங்கள் ' என்னும் புத்தகம். நாமும் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கச்சொல்லவேண்டும். தெரிந்த பிற மொழி நண்பர்களிடம் சொல்லி மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் வெளியிடச்சொல்லவேண்டும்.பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிரமாண்டமான பலூன் களை உடைப்பதற்கு கனமான ஊசியாகப் பயன்படும் புத்தகம் இந்தப்புத்தகம்.பார்ப்பனர் அல்லாதவர்களை வைத்தே மகாபாரதக்கதைக்கு 'வெண்முரசு' வீச பார்ப்பனர்கள் முயலும் இந்தக்காலகட்டத்தில் அந்த முரசு யாருக்கானது என்பதனை 97 சதவீத மக்கள் புரிந்துகொள்ள இந்தப்புத்தகம் உறுதியாக உதவும்.

Sunday 15 March 2020

வாழ்க மதுரை டாக்டர் வி.என்.ஆர். அவர்கள் புகழ்.......

மதுரையின் புகழ்பெற்ற மருத்துவர்,மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்தவர்,அன்பிற்குரிய டாக்டர் வி.என்.ஆர். என்று அழைக்கப்படும் வி.என்.இராஜசேகரன் அவர்கள் நேற்று(14.03.2020) இய்றகை எய்திருக்கிறார்.ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் காப்பாற்றியவர், ஆயிரக்கணக்கான நோயாளிகள் நலமாக வாழ்வதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட டாக்டர் வி.என்.ஆர்.அவர்களின் மறைவு மிகப்பெரிய வருத்தத்தையும் துயரத்தையும் தருகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு 1996-ல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எனது தாயார் திருமதி சு.முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்கள் சிகிச்சை பெற்று நலமுற்றது முதல் 2013-ல் அவர்கள் மறையும்வரை தொடர்ச்சியாக டாக்டர் வி.என்.ஆர். அவர்களிடம் மருத்துவம் பார்த்தோம். நான், எனது குடும்ப உறுப்பினர்கள்,எனது அண்ணன்,தம்பி,தங்கை,மாமா என அனைவரும் மருத்துவம் பார்த்த டாக்டர். நோயைச்சரியாகக் கணிப்பதில் அப்படி ஒரு வல்லமை உடையவர். கொடுக்கும் மருந்தும் சரியாக குணமாக்கும். கொஞ்ச நாட்கள் பழகியபிறகு வெகு இயல்பாகவும் என்னோடு பேசக்கூடியவர்.அப்படி பேசியபோது தனக்கு மெடிக்கல் சீட் கிடைத்த கதையைச்சொன்னார்.

விருதுநகரில் 1954-55 களில் பி.யூ.சி.முடித்துவிட்டு, மெடிக்கல் சீட் எதிர்பார்த்த நிலையில் டாக்டர் வி.என்.ஆர்.அவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. அப்போது இந்தப்பாழாய்ப்போன நீட் போன்ற தேர்வுகள் எல்லாம் இல்லை. கொஞ்சம் மதிப்பெண் குறைந்த நிலையில் , டாக்டர் வி.என்.ஆர். அவர்கள், அவர் மட்டும் சென்னைக்குப் போயிருக்கிறார். சென்னைக்குச்சென்று அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராசர் இல்லத்திற்குச்சென்றிருக்கிறார். அவரை நேராக எளிதாகச்சந்தித்திருக்கின்றார்.(இன்றைக்குப் போய் அப்படி பார்க்கமுடியமா என்றார் ..சில ஆண்டுகளுக்கு முன்பு).  பெருந்தலைவரிடம் தான் விருதுநகரில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன், பெருந்தலைவர் யார் வீட்டுப்பையன் என்று கேட்டிருக்கிறார். இவர் சொன்னவுடன்,என்ன விசயம் என்று கேட்டிருக்கிறார். நான் மருத்துவம் படிக்கவேண்டும், அதற்காகவே உங்களிடம் கேட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல, மதிப்பெண்ணைக்கேட்டு, இந்த மதிப்பெண்ணிற்கு சாதாரண சீட் கிடைக்காது,கூடுதலாக பணம் கட்டி படிக்கவேண்டிய சீட்டிற்கு உனக்கு சிபாரிசு செய்கிறேன் என்று சொல்லி டாக்டர் வி.என்.ஆர். அவர்களுக்கு டாக்டர் படிப்பு படிக்க பெருந்தலைவர் காமராசர் வழி செய்திருக்கிறார்.


இதனைச்சொல்லி சொல்லி பூரிப்பார் டாக்டர் வி.என்.ஆர். அவர்கள்.பொது அமைப்புகளில் பங்கு பெற்று தனது பங்கினைச்செலுத்தி வந்தார். எனது தாயார் மறைந்த நேரத்தில் படத்திறப்பிற்கு அழைப்பிதழைக் கொடுத்துவந்தேன். நிகழ்வுக்கு வந்து தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அய்யா ஆசிரியர் அவர்கள் நமது வரியியல் வல்லுநர் அய்யா இராஜரத்தினம் அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினர் டாக்டர் வி.என்.ஆர். அவர்கள், நேரு ,உங்களுக்குத் தெரியுமா என்றார். 



மிகப்பெரிய மருத்துவசேவையை மதுரை மக்களுக்கு அளித்தவர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை, சிட்டி ஆஸ்பத்திரி ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தவர். அவரின் மறைவிற்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு , அவரின் நினைவாக ஏதேனும் அறக்கட்டளையை நிறுவி, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ,மாணவிகளுக்கு உதவும் வண்ணம் ஏதேனும் செய்யவேண்டும் என்னும் விருப்பத்தையும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க டாக்டர் வி.என்.ஆர். அவர்கள் புகழ் ! வாழ்க அவரின் மருத்துவத்தொண்டு !

Saturday 14 March 2020

அம்மையார் சொர்ணஅரங்கநாதன் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்


சுயமரியாதை இயக்கத்தின் வீராங்கனை, கருநாடக மாநிலம் பெங்களூரைச்சார்ந்த அம்மையார் சொர்ண அரங்கநாதன் அவர்கள் நேற்று(13.3.2020) அன்று இயற்கை எய்திருக்கிறார். ஒரு அருமையான கொடையாளர்..கொள்கை வழி நடக்கும் செம்மல்...அய்யா அரங்கநாதன் அவர்களும் சொர்ணம் அரங்கநாதன் அவர்களும் இணைந்தே கழக நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். சொர்ணம் அரங்கநாதன் அவர்கள் மிகவும் எளிமையாக இருப்பார். சொர்ணம் அரங்கநாதன் விடுதி என அவர் பெயரில். அவரது கொடையுள்ளத்தைப்பாராட்டி அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதிக்கே அவர் பெயர் வைத்திருந்தாலும், அங்கு வேலை பார்க்கும் ஒரு பரபரப்பான பணியாளராகவே அம்மா சொர்ணம் அரங்கநாதன் அவர்கள் அங்கிருப்பார். அண்மையில் மறைந்த மதுரை ஆர்.வி.பட்டி இராமசாமி ஆசிரியர் போலவே கழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல்....அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் முகநூலில் விரிவாகக்குறிப்பிட்டு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதலையில் துயரத்தோடு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்கள். 

'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்' என்னும் முதல் கவிதைத் தொகுப்பு கவிதைகள் முழுவதும் சில ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலை ஞாயிறு மலரில் வெளிவந்தவை. முதன் முதலாக பெரியார் திடலில் அந்தக் கவிதைகள் விடுதலையில் வெளிவந்து கொண்டிருந்தபொழுது அம்மையார் சொர்ணம் அரங்கநாதன் அவர்களைச் சந்தித்தேன். ' நேரு, நல்லா எழுதுறீங்க, இப்போ இருக்கற பிரச்சனைகளை கவிதையா எழுதுறீங்க,விடுதலையில் தொடர்ந்து எழுதுங்கள் " என்று கை குலுக்கி மனமாரப்பாராட்டியது இன்றும் கூட மனதில் நிற்கிறது. நான் எம்.ஏ.தமிழ் ,வேலை பார்த்துக்கொண்டிருந்தபொழுதே படித்து பாஸ் செய்து, அதில் வெற்றி பெற்றதைச்சொன்னபோது எனது அம்மா ஓடிவந்து கைகுலுக்கி பாரட்டியது வாழ்வில் மறக்கமுடியாதது.அதனைப்போல சொர்ணம் அரங்கநாதன் அவர்கள் பெரியார் திடலில் வைத்துப்பாராட்டியதும் மறக்கமுடியாதது.வல்லத்தில் பார்த்தால் அவ்வளவு அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் பேசுவார்கள்.அம்மையார் சொர்ணம் அரங்கநாதன் அவர்களின் மறைவு மிகப்பெரிய இழப்பு நமக்கு. அவருக்கு எனது குடும்பத்தார் சார்பாகவும்,எனது சார்பாகவும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் வீரவணக்கத்தை செலுத்துகிறோம். அய்யா அரங்கநாதன் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.     






Sunday 8 March 2020

அண்மையில் படித்த புத்தகம் : அப்பாவின் பாஸ்வேர்ட்(சிறுகதைத் தொகுப்பு)...ஆத்மார்த்தி



அண்மையில் படித்த புத்தகம் : அப்பாவின் பாஸ்வேர்ட்(சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்                   :  ஆத்மார்த்தி
வெளியீடு                  : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்.,சென்னை-98
முதல் பதிப்பு            : ஜீலை 2018...
மொத்த பக்கங்கள்  : 126 விலை ரூ 100

                              இந்த சிறுகதைத்தொகுப்பு மொத்தம் 11 சிறுகதைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான கதைகள்...ஒட்டுமொத்தக் கதைகளும் இதனை நோக்கி என்று சொல்ல இயலாவண்ணம் கலவைகளாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.'அப்பாவின் பாஸ்வேர்ட்'எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி.சிறுகதை என்பதன் வடிவ சுதந்திரம் புதிய கதைகளை எழுதிப்பார்க்கத்தூண்டுகிறது 'என்று முன்னுரையில் நூல் ஆசிரியர் ஆத்மார்த்தி குறிப்பிடுகின்றார்.புதிய கதைகள்தான் ஒவ்வொன்றும்...

                       தொகுப்பிலேயே எனக்கு பிடித்த கதையாக 'தாட்டியம் 'என்னும் கதை. தன் அப்பாவைக் கொலை செய்தவனை அவனை அறியாமலேயே அலைக்கழிக்க வைக்கும் கதை.சொன்னவிதம் அருமை. ஏதோ வேறுமாதிரியாக நடக்கப்போகிறது என்பதனை ஒன்றிரண்டு இடங்களில் சுட்டிக்காட்டி விறுவிறுப்பாக செல்ல வைத்து முடிவாக சொல்லும் கதை. நன்று.

                      சில கதைகள் நின்று வாசிப்பவனோடு எள்ளலும் நக்கலுமாய் உரையாடுகின்றன. அதில் 'அர்சியல் பேசாதீர் ' என்னும் கதை தற்கால அரசியலை,சுய நலம் மட்டுமே கொண்ட சமூகவிரோதிகள் எப்படி அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள்,மாற்ற வைக்கப்படுகிறார்கள் என்னும் கதை. நல்ல நையாண்டித்தனமும் எதார்த்தமும் சேர்ந்த கதை.புகுந்து நின்று களத்தில் கபடி ஆடியிருக்கிறார் ஆசிரியர். 

                    கணவனும் மனைவியும் விவாரத்து செய்து கொள்கிறார்கள். மனைவிக்காக நீதிமன்றத்தில் வாதாடி,வெற்றி பெற்ற பெண் வழக்கறிஞரும், கணவனும் சில மாதங்கள் கழித்து விமானப்பயணத்தில் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து பயணிக்க நேருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவுடன் எழும் உணர்வுகளும் ...எண்ண ஓட்டங்களும் அப்புறம் பேச ஆரம்பித்தவுடன் கணவன் தனது தரப்பு நியாயங்களை,எழுத்தாளராக இருக்கும் தன்னைப்பற்றிய விவரங்களோடு வழக்கறிஞருக்கு தெளிவுபடுத்தும் கதை.'என் எழுத்துக்கள்தான் நான் அப்டின்னு நம்புறவங்களுக்கு நான் ஒருத்தானா இருக்கேன்.என் எழுத்துக்கள் தெரியாதவங்களுக்கு நான் எப்படித்தெரியுறேன்ற கவலையே என் கிட்டே இல்லை ..என்னைக் கேட்டா என் வாழ்க்கையோட வினோதம்னு சொல்றதுக்கு நிறைய இருக்கு ' எனக் கணவன் விவரிக்கும்போது நாமும் கூட கதாபாத்திரத்தின் வாயிலாக எழுத்தாளனைப் புரிந்து கொள்ள முடிகிறது.  முதல் கதையான நீலயாணியே ஈர்ப்பான கதைதான்.

                   நண்பர்களின் கூடல், கேலி..கிண்டல்,உரிமை என நட்பைக்கொண்டாடும் 'டூப்ளி' கதை.மூர்த்தி டூப்ளியானதும் ,டுபெக்கென்று ஒரு நாள் இறந்து போவதும்,டூப்ளியின் பொய்களுக்குள்ளே உறைந்திருந்த உண்மை வெளிப்படுத்துவதும் கதை. 

ஒரு பிரபல நடிகனின் மறுபக்கத்தைக் காட்டும் 'ஒயிலா 'கதை.எவ்வளவு புகழ்வாயந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அடைக்கலம் தேடும் மனதைப்  பற்றிய கதை.''சொல்லிக்க முடியாத ஒரு சொந்தத்தின் 'இழப்பு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய வெறுப்பை ஒருவனுக்கு விதைக்கிறது என்பதனை கவித்துவமாய் சொல்லும் கதை.

அப்பாவின் பாஸ்வேர்டு கதையின் பாதிக்கதை பெரும்பாலான கதைகளில் வரும் கதை..ஆனால் முடிவும் அதற்கு முந்தைய விவரிப்புகளும் அருமை."சாதியை மறுத்துத்திருமணம் செய்துகிட்டோம்.சாதியால் கொல்லப்பட்டார் என் கணவர்.இந்த உலகத்துல நல்ல சாதி கெட்ட சாதின்னு எதுவும் இல்லை ஸ்ரீராம்.கோவம் வராத வரைக்கும் எல்லா சாதியும் அமைதியாகத்தான் இருக்கும்.எங்கெல்லாம் எப்பலெல்லாம் சாதிக்குக் கோபம் வருதோ அப்பெல்லாம் அது ரத்தம் குடிக்காம அடங்காது.....இதை விபத்துன்னோ விதின்னோ எடுத்துக்கவே முடியலை...அந்தக் கூட்டத்துக்கும் என் கணவருக்கும் என்ன சம்பந்தம் ...? தங்களோடு வாழ்க்கையில் முதல்முறையா சந்திக்கிற ஒருத்தனை எப்படி அவ்ளோ வெறியா தாக்கிக்கொல்ல முடிஞ்சது அவங்களால?எந்தக் கலவரத்தில் நாம் யாராயிருந்தா உயிரோடு இருப்போம் அல்லது சாவோம்னு தெரியாம ரத்தம் குடிக்கிற மண்ணுல இன்னும் எத்தனை பேர் ரத்தத்தைச்சாதி குடிக்கப்போவுதுன்னு எங்களுக்குத் தெரியலை ' என்று அப்பாவின் நண்பரின் மனைவியான சரஸ்வதி விவரிக்கும் இடம் .சாதியின் பெயரால் நடந்திருக்கும் இந்தக் கொடுமையைப் படிக்கும்போது கண்ணுக்கு முன்னால் சில நாட்களுக்கு முன் டில்லியில் கொல்லப்பட்ட உயிர்கள்,இரத்தம் சொட்ட சொட்ட தாக்கப்பட்ட அந்த மனிதரும் நினைவுக்குள் வருகிறார்கள்.சாதியின் ,மதத்தின் பெயரால் நடக்கும் இந்தக் கொடுமைகளைத் தடுக்க இயலவில்லையே என்னும் இயலாமையும் சேர்ந்தே மனதிற்குள் ஓடுகின்றது. 

திரைப்பட இயக்குனருக்கும் துணை இயக்குனர்களுக்குமான மோதல்களை, ஒரு துப்பறியும் கதை போல நகர்த்திச்செல்லும் 'டாம் அண்ட் ஜெர்ரி' ..நன்றாக உள்ளது. சிறுகதைக்கே உரிய தொடக்கம்,முடிவென வித்தியாசமாக நகர்கிறது.இரண்டு முடிவுகளை சொல்லி,வாசகரே,உங்களுக்கு எது வேண்டுமோ அதனை எடுத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்லும் மாயா,'நீங்க சொல்லுங்க,சரிதாவைக் கூப்பிடலாமா? வேண்டாமா? ' என வாசிப்பவனிடம் விடை கேட்கும் முடிவாக அமைந்திருக்கும் 'கூட்டத்தில் ஒருத்தி ' போன்ற கதைகளை விறுவிறுப்பாக வாசிக்க முடிகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள 'வியாழன்'கதை இராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போல எழுத முயற்சித்த கதை போலிருக்கிறது...வெற்றி பெற்றிருக்கிறார்.....

நல்ல மட்டன் பிரியாணி சாப்பிட்டபின்பு பல் இடுக்குக்குள் மாட்டிக்கொண்டு இம்சிக்கும் கறித்துண்டு போல இந்தத் தொகுப்பிற்குள் இந்தக்கதை இருந்திருக்க வேண்டாமே எனக் 'கோமதிராசனின் கதை' தெரிந்தது..பேய்,பூதக்கதை எழுதிப் பிழைக்கும் பல எழுத்தாளர்கள் மதுரைக்குள் இருக்கிறார்கள்...பிழைப்பதைப் பற்றிக்கவலை கொள்ளாமல் எதார்த்ததையும் வாழ்வியலையும் வலிமையாக எழுதும் இந்த முழு நேர எழுத்தாளர் இந்த மாதிரிக்கதைக்குள் போகவேண்டியதில்லை என்பது என் கருத்து....

நிறைய எதார்த்தமான,வலிமையான கதைகளைக் கொண்டிருக்கும் 'அப்பாவின் பாஸ்வேர்ட்' சிறுகதைத் தொகுப்பினை நீங்களும் வாசிக்கலாம்.'சிறுகதை என்பதன் வடிவ சுதந்திரம் புதிய கதைகளை எழுதிப்பார்க்கத்தூண்டுகிறது. ...ஒரு தொடர்ந்த உரையாடலுக்கான சின்ன ஒளிப்பொறியைத் தன்னகத்தே கொண்டிருக்கிற கதைகள் யதார்த்த உலகின் நிரந்தரத் தேவைகளாகின்றன..அந்த வகையில் என் கதைகளும் அவற்றின் கதாமாந்தர்களும் உடன்பட்டும் முரண்பட்டும் வாசிக்கிறவர்களுடன் உரையாடுவதைத் தொடர்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவே இக்கதைகளை எழுதினேன்' என நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆம்,அந்த வகையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.இந்த நூல் திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.அவர்களுக்கு எனக்குறிப்பிட்டிருக்கிறார்.எழுத்தில் தான் வெற்றி பெற்றது மட்டும் அல்லாமல்  தன்னைச்சுற்றி இருக்கும் நட்பு வட்டங்களும் எழுத்தில் வெற்றி அடைவதற்காக முன் ஏராக கற்பிக்கும் ஆசிரியர் அவர். நன்றியோடு குறிப்பிட்டிருக்கிறார் இந்த நூல் ஆசிரியர். வாழ்த்துகள்.இதனை வாசிக்கும் நீங்களும் ஒருமுறை இந்த நூலை வாசித்துப்பாருங்கள்..உங்களையும் வசப்படுத்தும் கதைகள் இவை...    

                       




Saturday 7 March 2020

நல்லாசிரியார்கள்...இருந்தாலும் இறந்தாலும்....


நல்லாசிரியார்கள்
நாம் வாழும் நாட்கள் முழுவதும்
நம்மோடுதான்  வாழ்கிறார்கள்
இருந்தாலும் இறந்தாலும்....

அவர் எனக்கு கல்லூரியில்
முதல்வராக இருந்தது
ஏறத்தாழ 38 ஆண்டுகளுக்கு
முன்னால் திருச்செந்தூரில்....

அவர் மறைந்தது 2003-ல்
ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்தாலும் மார்ச்-8 என்றால்
அவரின் நினைவுகள் அலை
அலையாய் மோதுகிறது....

நெருக்கமாய்ப் பழகியவர்கள்
அறிவார்கள் அவரை
சில நேரம் நெருப்பாகவும்
சில நேரம் ஆழ்கடலாகவும்
உரையாடலில் வல்லவர் அவர்....

எதையும் அவர் பெற்ற பிள்ளைகளுக்கு
பெரிதாய்ச்சேர்த்து வைக்கவில்லை
ஆனால் எங்கள் வாழ்வும் வளமும்
உங்களால் பிரின்ஸ்பால்  என
உளமாற வணங்கும் முன்னாள்
மாணவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்...

இளம் அறிவியல் முடித்துவிட்டு
மேலே படிக்க பணமில்லாமல்
ஆடு மேய்த்தவரை அழைத்துவந்து
முதுஅறிவியல் படிக்கவைத்து
கல்லூரியிலே வேலை கொடுத்து
ஐ.ஆர்.எஸ். ஆக்கி அழகு பார்த்தவர் அவர்....

தனக்கு உதவிய மாமனிதரை மறவாமல்
தான் பெற்ற பிள்ளைக்கு
தன் ஆசிரியர் பெயரான கனக எனும்
பெயரைச்சேர்த்து நன்றி சொன்ன
இந்நாள் சிவகாசியின்
பெரும் தொழிலதிபர்....தனசேகரன்
எங்கள் கல்லூரி முதல்வரின் மாணவர் அவர்..

தன் வாழ்வில் கிடைத்திட்ட
தன்னம்பிக்கைக்கு விதை  அவர்
பேராசிரியர் பதவியை உதறித்தள்ளி
துணிவாய்த் தொழில் தொடங்கி
சுயமாய் வளர எனக்கு
சுய நம்பிக்கை தந்தவர் அவர்
என முன்னாள் மாணவர்
மதுரை கல்யாணசுந்தரம் வணங்கிய
எங்கள் கல்லூரி முதல்வர் அவர்...

எதிர்மறையாக வாழ்வை
வீணாக்கிச் சுற்றி
படிக்காத மாணவனைக் கூட
தான் காட்டும் அன்பால்
நேர்மறையாக மாற்றிய பண்பாளர்....

பல ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்..கள்
உருவாகக் காரணமாய் களம் அமைத்தவர் அவர்..
உயர் பதவிகளைப் பற்றிக்
கனாக் கூட காணாத
கிராமத்து மாணவர்களை
உயர் பதவிகளில் அமர வைத்தவர் அவர்..

எப்போதும் மாணவர்கள்
மாணவர்கள் எனச்சிந்தித்தவர் அவர்...
அதற்கு மாற்றாக எவர் செய்தபோதும்
தன் வாழ்வை என்னாது
எதிர்க்குரல் கொடுத்தவர் அவர்.....


நிறுவனத்தை வளர்த்தெடுக்கும்
கைதேர்ந்த பொறியாளர் அவர்..
பின் தங்கிய பகுதிகளில்
கல்லூரியை வளர்ப்பது எப்படி?
அது அவர் எழுதிய புத்தகம்தான்.....
அவரின் அனுபவத்தின்
மொத்த சாரமது...
முப்பதாண்டுகள் கல்விப்பணியை
பிழிந்திட்ட கல்விச்சாறு அது...
இன்றும்கூட தனது கல்லூரியை
வளர்த்தெடுக்க விரும்பும்
எவருக்கும் கல்வி சாசனம் அது....

தனித்துவமிக்க காந்திய முதல்வர் கனகசபாபதி
எனும் புத்தகம் எழுதி தனக்கு முன்னால்
முதல்வராக இருந்தவரின் புகழை
எழுத்தில் வடித்த ஆதித்தனார் கல்லூரியின்
முன்னாள் முதல்வர்
டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் இல்லை இன்று...
ஆனால் அவர் வடித்த புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும் தனித்துவத்துவத்தின்
தன்மை பேசும் பக்கங்களாய்

தனித்துவ காந்தியவாதிதான் அவர்
ஆனால் காலெமெல்லாம்
அவர் வாழ்ந்த காலத்தில்
அருகில் இருந்தவர்கள் பெரியாரியல்
பேசும் பேராசிரியர் கி.ஆழ்வாரும்..
இஸ்லாம் மார்க்கப்படி வாழ்ந்திட்ட
பேராசிரியர் இரசாக்கும்தான்....

சாதியென்றோ மதமென்றோ
ஆத்திகன் என்றோ நாத்திகன் என்றோ
தள்ளிவைக்கா மனித நேய இதயம்
துடிக்க மறந்திட்ட நாளிது...

மார்ச்-8 என்றாலே
தாயாய் ,தாரமாய் ,தோழியராய் அமைந்திட்ட
பெண்கள் இல்லாது நம் வாழ்க்கை இல்லை என
மகளிர் தினத்தை வாழ்த்தும் கையோடு
கல்விக்கு உயர்வாய் மாணவர்களுக்கு கனிவாய்
நடந்திட்ட எங்கள் கல்லூரி
முன்னாள் முதல்வர் டாக்டர்
இரா.கனகசபாபதி அவர்களின்
நினைவுகள் நீரோட்டமாய் ஓடும் நாளிது!....
வாழ்க உங்கள் புகழ்! வாழிய உங்கள் நினைவு !
                                                                                              வா.நேரு,08.03.2020