Wednesday 29 June 2022

'சுயரூபம்' என்னும் கு.அழகிரிசாமி அவர்களின் கதை

                            சுயரூபம் என்னும் கு.அழகிரிசாமி அவர்களின் கதை பற்றி எனது விமர்சனம்.



தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் கு.அழகிரிசாமி. அவரின் மிகச்சிறப்பான கதைகளில் ஒன்று சுயரூபம்." வேப்பங்குளம் கிராமத்தில் இரு நூறு வீடுகள் உண்டு.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம்பெருமை உண்டு." என்றுதான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. 'அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் 'உண்டு 'என்று சொல்லுவதற்கு அந்தப் பழம் பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது' என்று விவரிக்கும்போதே நக்கலும் நையாண்டியும் கதையில் ஆரம்பிக்கிறது.'பசி வந்தால் பத்தும் போகும் ' என்பது பழமொழி. பழம்பெருமை படைத்த வீ.க. மாடசாமித்(தேவர்) என்றுதான் இந்தக் கதையின் நாயகன் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

மாடசாமிக்குத்  தன் தாத்தாவின் பேரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளுவதில் இருக்கும் பெருமை,தன்னுடைய தாத்தாவின் தீரத்தையும் வைராக்கியத்தையும் சந்திக்கும் ஒவ்வொரு இரண்டு கால் பிறவியிடத்திலும்(கவனிக்க இரண்டு கால் பிறவிகள்- மனிதர்கள் அல்ல) சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் தன்மை என்று நையாண்டி தொடர்கிறது.பழம்பெருமை வாய்ந்த மாடசாமியை அவர் பிறந்த சாதியைச்சார்ந்த முத்தையா பார்த்து ,கடனைக் கேட்கும்போது 'நான் என்ன உமக்குப் பயந்து ஒளிஞ்சுக்கிட்டு அலையறேன்னு சொல்லுறீரா..." என்று சொல்லும் போது பழம்பெருமை வாய்ந்த கடன்காரர் மாடசாமி என்பது நிருபிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ல 'மத்தியானம் காசு வந்து சேருது, பாரும் ...' என்று சொல்லும்போது பழம்பெருமை வாய்ந்த வாய்ச்சவுடால் பேர்வழி மாடசாமி என்பதைக் கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கதையின் நடுவில் 'சென்னை மாநகரிலிருந்து கன்னியாகுமரிவரையிலும் செல்லும் ' சாலையும் அந்தச்சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவில் இருக்கும் ஒரு விலக்கும் அந்த இடத்தில் இருக்கும் முருகேசப்(பிள்ளை) என்பவரின் பலகாரக்கடையும் நையாண்டித்தனமாகத்தான் அறிமுகம் செய்யப்படுகிறது.அந்தப் பலகாரக்கடையால் முருகேசன் பெற்ற வளர்ச்சியையும் போகிற போக்கில் கதை ஆசிரியர் சொல்லிச்செல்கிறார்.அந்த முருகேசனின் பலகாரக்கடைக்கு மாடசாமி வந்து சேர்கிறார்.

அந்தக் கடையில் மாடசாமியைக் கவனிக்காதமாதிரி முருகேசன் இருப்பதையும்,கடைக்கு வருகிறவர்களைக் கவனிப்பதையும்,'இடையிடையே ஏதேதோ பேச்சுக்கொடுத்துப் பார்த்தாலும் 'மாடசாமியைக் கண்டு கொள்ளாமல் முருகேசன் நடந்து கொள்வதையும் கதாசிரியர் விவரிக்கும் பகுதி நல்ல உளவியல் உத்திகள் சார்ந்த பகுதி.மீண்டும் மீண்டும் படித்து சிரிக்கலாம்.சிந்திக்கலாம்.

அதைப்போல நாலுவடம் முத்துமாலை பற்றிய உரையாடலில் உதட்டில் வரும் சொல்லுக்கும் ,உள்ளத்திற்குள் ஓடும் எண்ணத்திற்குமான இடைவெளியை மிகச்சிறப்பாக விவரித்து 'கும்பி கூளுக்கு அழுததாம்,கொண்டை பூவுக்கு அழுததாம் ' என்று நினைப்பதாக விவரிக்கும் பகுதியும் கூட மனிதர்களைப் புரிந்துகொள்ள உதவும் பகுதிதான்.

முருகேசன் சாப்பிடும்போது மாடசாமி  தன்னைப் பற்றி 'முந்தா நாள் சரியாகச்சாப்பிடாமலும் நேற்று அறவே சாப்பிடாமலும்,இன்று வெறும் பசியேப்பம் விட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு மனிதன் ' என்று சொல்லும்போது நமக்கும் மாடசாமி மேல் ஓர் அனுதாபம் ஏற்படுகிறது. காலை முதல் இரவு வரை இட்லிக்காக அந்தப் பழம் பெருமை வாய்ந்த மாடசாமி படும் பாட்டைப் பார்க்கின்றபோது நமக்கு உண்மையிலேயே மாடசாமி மீது பரிதாபம் உண்டாகிறது. 'வயிற்றுக்கொடுமை அவரை இப்படியெல்லாம் ஆட்டி வைத்தது ' என்று நூலாசிரியர் விவரிக்கும்போது பழம்பெருமை பசியைப் போக்காது என்பதை மிக அழுத்தம் திருத்தமாக சொல்வதுபோல் இருக்கிறது.

இருக்கும் முருகேசன் நான் கீழே கொட்டினாலும் கொட்டுவேன் என்னும் பாணியில் நடப்பதையும்,இல்லாத மாடசாமி எத்தனையோ வகைகளில் முயன்று அந்த இட்லியை வாங்க நினைப்பதையும் விவரித்து முடிவில் இருவரும் சண்டையிட்டு மல்லுக்கட்டுவதையும்,கடைசியில் தானமாக இட்லியை முருகேசன் கொடுத்தாலும் அவமதிப்பால் அதனை மாடசாமி வாங்க மறுப்பதையும்  அதன் தொடர் நிகழ்வுகளையும் கதையாசிரியர் சொல்லிச்செல்கிறார்.

இந்தக் கதையைப் படித்தபோது எனக்கு இலங்கைதான் நினைவுக்கு வந்தது. மொழியால்,மதத்தால்,இனத்தால் மக்களைப் பிரித்து ஆள்பவர்கள் சொகுசாய் வாழ்ந்ததையும் ,முடிவில் அடுத்த வேளைக்குக் குடிக்க கஞ்சிக்கு வழியே இல்லை என்னும் நிலை வந்தபோது மக்கள் தங்களுடைய பழம்பெருமையாக நினைத்தவற்றையெல்லாம் புறந்தள்ளி, மனிதர்கள் மனிதர்களாக இணைந்து ஒன்று திரண்டு அந்த நாட்டின் பிரதமர் ஓடி ஒளியும் நிலைக்கு மக்கள் போராடியதையும் நினைத்துப்பார்க்கத் தூண்டியது. இந்திய நாட்டில் இருக்கும் சாதி,மதப்பெருமை எல்லாம் பசியோடு இருக்கும் மனிதர்களுக்கு இல்லை.அந்தப் பழம்பெருமைகள் பசிப்போருக்குத் தேவையில்லை.எல்லோருடைய பசியைப் போக்கும் வழி ஏதாவது இருந்தால் செய்யுங்கப்பா என்று சொல்வதாகத்தான் நான் இந்தக் கதையைப் பார்க்கிறேன்.


வா.நேரு. 

Tuesday 28 June 2022

ஒரே ஒரு பூமிதான் ....

                                                      ஒரே ஒரு பூமிதான் ....

                                                     முனைவர் வா.நேரு


“பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து” என்றார் தந்தை பெரியார். இந்தப் பூமி என்பது அனைவருக்கு-மான பொதுச்சொத்து. இந்த உலகில் வாழும் 790 கோடி மனிதர்களுக்கு மட்டும் சொந்த-மானது அல்ல இந்தப் பூமி, ஒரு செல் உயிரில் தொடங்கி பல ஆயிரம் கோடிக்கணக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவாகி இருக்கும் பல்லுயிர்களுக்கும் சொந்தமானது இந்தப் பூமி. ஆனால், மனிதர்களின் பேராசையால், ஒழுக்கமின்மையால், பக்தி என்னும் பெயரில் கடைப்பிடிக்கப்படும் காட்டுமிராண்டித்தன-மான நடைமுறைகளால் இந்தப் பூமி விரைவில் அழிந்துவிடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டிருக்-கின்றது.





1974-ஆம் ஆண்டு முதல் ஜூன்- 5ஆம் தேதி என்பது சுற்றுச்சூழல் தினமாக அய்க்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘ஒரே ஒரு பூமிதான்’ (Only one Earth) என்பதாகும்.

நாம் உயிரோடு வாழ்வதற்கு ஓர் உடல் இருக்கிறது. அப்படித்தான் இந்த உலகில் இருக்கும் உயிர்கள் எல்லாம் வாழ்வதற்கு இந்தப் பூமி இருக்கிறது. நாம் வாழ்வதற்கு என இருக்கும் வீட்டிற்கு ஆபத்து என்றால் நாம் அலறுகிறோம், பதறுகிறோம், பாதுகாக்கத் துடிக்கிறோம்.


அப்படித்தான் கோடிக்கணக்கான நட்சத்திரக் குடும்பங்கள் இருந்தாலும், அதில் கோடிக்கணக்கான கிரகங்கள் இருந்தாலும், சூரியக் குடும்பத்தில் நிறையக் கோள்கள், துணைக்கோள்கள் இருந்தாலும் நாம் (மனிதர்கள்) வாழ்வதற்கான ஒரே இடம் நாம் வாழும் இந்தப் பூமிதான். மனிதர்கள் மட்டுமன்றி, கோடிக்கணக்கான விலங்குகளும், தாவரங்களும் என பல்லுயிர்களும் வாழும் இந்தப் பூமியைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

உலகளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்து-கிறவர்கள் பெரும்முதலாளிகள், பெரும்-பணக்காரர்-கள்-தாம் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. “மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள மேட்டுக்குடியினர் இந்த உலகை மாசுபடுத்தும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்” என்கிறார் ஆக்ஸ்ஃபாமை சேர்ந்த நஃப்டோகே டாபி. “பணக்காரர்களின் மிதமிஞ்சிய உமிழ்வுகள்தாம் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தூண்டி, புவி வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளைப் பாதிக்கின்றன” என்கிறார் அவர். உலகின் வசதியான 1 சதவிகிதம் பேர் வெளியிடும் கார்பன் அளவு, 50 சதவிகிதம் உள்ள ஏழைகள் வெளியிடும் கார்பன் அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது என ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. பணக்காரர்கள் வெளிப்படுத்தும் கார்பன் அளவு இந்தப் பூமியை அழிக்கும் அளவிற்கு இருக்கிறது. அய்ரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனமான ஸ்டாக்ஹோம் என்விரோன்மென்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல உண்மைகளைக் குறிப்பிடுகிறது.


“பல வீடுகள், தனி ஜெட் விமானங்கள், சொகுசு யாக்ட் கப்பல்கள் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் இந்த சராசரி அளவைவிட பல மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள். சில பிரபலங்கள் மேற்கொண்ட விமானப் பயணங்களை அவர்களது சமூக ஊடகங்கள் மூலம் பரிசீலித்த ஓர் அண்மைக்காலத்திய ஆய்வு அவர்கள் ஆண்டுக்கு 1000 டன்னுக்கு மேல் கார்பனை வெளியிடுவதாகக் கூறுகிறது. அந்த 1 சதவிகிதம் பணக்காரர்கள் என்பவர்கள் பில்லியனர்கள் மட்டுமல்ல, மில்லியனர்கள்கூட அந்தப் பட்டியலில்தான் வருகிறார்கள். உலகின் 10 சதவிகிதப் பணக்காரர்கள் பட்டியலையும் இந்த ஆராய்ச்சி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் அவர்களுக்கு உரிய பங்கைவிட 9 மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள்” என்று அந்த ஆய்வு விரிவாக, இந்தப் பூமியையே அழிக்கக்கூடிய வேலையை வசதி வாய்ப்புகள் என்னும் பெயரில் பணக்காரர்கள் செய்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது.

பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் சுற்றுச்-சூழலை மாசுபடுத்துவதில் முன்னனியில் நிற்கின்றனர். மூட நம்பிக்கைகளை மக்களின் மனதிலே புகுத்துவதற்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். பார்ப்பனப் பண்டிகைகளான _ தீபாவளி போன்ற பண்டிகைகள் ஏற்படுத்தும் சுற்றுச்-சூழல் மாசு என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுவைக் கட்டுப்-படுத்துவது என்பது மிகப்பெரிய சவால். “2019ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 16.7 லட்சம் உயிர்கள் பலியாயின. இது மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால், நாடு ரூபாய் 2,60,000 கோடிக்கு மேல் இழப்பையும் சந்தித்துள்ளது” என்னும் தகவலை ஒன்றிய அரசின் அமைப்பான அய்.சி.எம்.ஆர். தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. கொரோனா தொற்று என்னும் பேரிடர் நிகழ்வதற்கு முன்னமே நிகழ்ந்த நிகழ்வு இது.

அரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, பிகார் போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் மழைக்காலம் நீங்கலாக மற்ற காலங்களில் மாசுபாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாசுபாட்டின் அளவைக் குறிக்கும் பி.எம்.குறியீடு 50-க்குள் இருக்க வேண்டும். ஆனால் புதுடெல்லியில் எப்போதும் 300க்கு மேல் இருக்கிறது. இதே பி.எம்.25 குறியீடு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 17, நியூயார்க்கில் 38, பெர்லினில் 20, பெய்ஜிங்கில் 59 ஆகும்.


இந்தியாவில் காற்று மாசுபாட்டின் ஆபத்து எவ்வளவு தீவிரமானது என்பதை உணர ஒரு புள்ளி விவரத்தைக் கூறலாம். 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையானது சாலை விபத்துகள், தற்கொலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகம்.

நீங்கள் சிகரெட், பீடி போன்ற புகைப்பழக்கம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், நீங்கள் டெல்லியில் வசித்தால் புகைப்பழக்கம் உள்ளவரை விட மோசமாக உங்கள் நுரையீரல் பாதிக்கப்படும். எப்போதும் டெல்லியில் பி.எம்.25 குறியீடு 300க்கு மேல் இருக்கிறது. அப்படி என்றால் டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 15 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். டெல்லியில் ஒரு குழந்தை பிறந்தால், பிறந்த நாளிலிருந்து 15 சிகரெட் குடிக்கும் அளவிற்கான பாதிப்பைத் தன் நுரையீரலுக்குத் தருகிறது. 30 வயதில் நுரையீரல் புற்று நோய் போன்ற பாதிப்பு-களுக்கு உள்ளாகின்றது என்று குறிப்பிடு-கின்றனர்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 177வது இடம் கிடைத்திருக்கிறது. திருவிழாக்கள், கும்பமேளா போன்று இந்தியாவில் நடைபெறும் விழாக்களில் பக்தி என்னும் பெயரில் பல இலட்சம் பேர் ஒரே இடத்தில் கூடுகின்றனர். பிளாஸ்டிக் போன்ற பொருள்களைப் பயன்-படுத்துவதோடு நீரையும் பாழ்படுத்தி சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றனர். இந்தியாவில் நீர் மாசுபாட்டுக்கு மிகப்பெரிய காரணம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். கழிவு நீரும் மலமும் இணைந்து பல ஆறுகளைப் பாழ்ப்படுத்தி, கழிவு நீரைச்சுமந்து செல்லும் குழாய்கள் போல ஆறுகளை மாற்றுகின்றது. புனித நதி என்று சொல்லப்படும் கங்கை நதி மோசமான கழிவுகளால் மாசு அடைந்திருக்-கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பண்டிகை என்னும் பெயரில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிகளை வெடித்து காற்றில் கார்பன் அளவை அதிகரிக்கச் செய்கின்றனர். பக்தி சார்ந்த செயல்பாடுகள் சுற்றுச்சூழலைக் கெடுத்து, காற்றில், நீரில் மாசு ஏற்படக் காரணமாகின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்பது, இவற்றைத் தவிர்க்கும்படியாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிப்பேசும் பலர், கவனமாக இந்தப் பண்டிகைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கெடுதி பற்றி மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

பகுத்தறிவாளர்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களும் இக்கேடுகள் பற்றி விளக்கி, பரப்புரை செய்ய வேண்டும். இந்தியாவின் பக்தி என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கே கேடு விளைவித்து அழிக்கக்கூடியது என்பதை மக்களிடத்தில் பரப்புவோம்


நன்றி ஜீன் 16-31-2022, உண்மை மாதம் இருமுறை இதழ்

Sunday 26 June 2022

எங்கிருந்து தொடங்குவது அ.வெண்ணிலா நூல் மதிப்புரை

 






முழுமையாக வல்லினச்சிறகுகள் இதழைப் படிக்க











சங்கப் பலகை
நூல் மதிப்புரை
நூலின் தலைப்பு: எங்கிருந்து தொடங்குவது
நூல் ஆசிரியர்  அ.வெண்ணிலா
வெளியீடு   அகநீ,வந்தவாசி
வெளியிடப்பட்ட ஆண்டு : 2017 மொத்த பக்கங்கள் 142 விலை ரூ 100

குடும்பம் என்றாலே புனிதம். குடும்பத்தில்  இருக்கும் குறைகளைப் பேசக்கூடாது என்ற மனப்பான்மை புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தில் நான் பேசுகிறேன் என்று முன்வந்து அ.வெண்ணிலா பேசியிருக்கும் நூல் 'எங்கிருந்து தொடங்குவது'. இந்த நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு.ரெளத்திரம் மாத இதழில் 25 மாதங்களாக தொடராக வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.ஒரு ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழும் குடும்பத்தின் சிக்கல்கள் பற்றி மிக விரிவாகப் பேசும் நூலாக இந்த நூல் இருக்கிறது.தமிழ் நாடு அரசின் விருதினைச்,சென்ற ஆட்சிக்காலத்தில் இந்த நூல் பெற்றிருக்கிறது.

குடும்பம் என்ற அமைப்பு, எப்படி உருவானது,எப்படி கட்டமைக்கப்பட்டது என்ற சமூகவியல் வரலாற்றை இந்த நூல் பேசுகிறது.ஒரு ஆசிரியராகப் பணியாற்றும் வெண்ணிலா,தன்னைச்சுற்றி நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளை உற்று நோக்கி அதன் ஊடாகக் குடும்பம் என்ற அமைப்பின் போலித்தனத்தை மிக உண்மையாக எடுத்து வைத்து,தீர்வு என்ன என்று சிந்திக்க வைக்கிறார்..

வெளியில் எல்லோரோடும் சிரித்துப் பேசி நல்லவனாக இருக்கும் மனிதன் ஒருவன் வீட்டில் கெட்ட வார்த்தை பேசி மனைவியோடு சண்டையிடும் மனிதனாக இருப்பதை,அவனது மகன் மூலம் அறிந்து கொண்ட நிகழ்வை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.ஏன் மனிதர்களுக்கு வீட்டிற்குள் ஒரு முகமாகவும் வெளியில் ஒரு முகமாகவும் இருக்கிறது என்னும் கேள்வியை எழுப்புகிறார்.

குடும்ப வாழ்க்கை ஏன் ‘வாழ் நாள் யுத்தமா’க இருக்கிறது என்னும் கேள்வியை எழுப்புகிறார்.’பிராய்லர் கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுவதைப் போலவே பெண்கள் திருமணத்திற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறார்கள் ‘என்று குறிப்பிடும் வெண்ணிலா அதனைப் போலவே ஆணும் திருமணத்திற்கு தயாரிக்கப்படுவதை நமக்கு சுருக்கெனத் தைக்கும் வண்ணமே குறிப்பிடுகிறார்.’ஆணும் பெண்ணும் இவ்வளவு பெரிய முன் தயாரிப்புகளுடன் வளர்க்கப்பட்டும்,இருவர் இணைந்து வாழும் குடும்ப வாழ்க்கை ஏன் இவ்வளவு முரண்பாடுகளோடு இருக்கிறது என்னும் கேள்வியைக் கேட்கிறார்.

குடும்பம் என்ற அமைப்பு  நமது தமிழ்ச்சமூகத்தில் எப்படி இருக்கிறது  என்பதனை விளக்கமாக எடுத்துச்சொல்லும் நூல் ஆசிரியர் “மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற நிறுவனம் கூடுதல் சுதந்திரத்துடன் இருக்கின்றது.அங்கு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியோடு வாழ்வதே முதன்மை.பிடிக்கும் காலம்வரை ஒன்றாக இருப்போம் என்ற புரிதலுடன்தான் அவர்கள் இணைகிறார்கள்.என்ன நடந்தாலும் பிரியக்கூடாது என்ற கட்டாயத்துடன்தான் நாம் ஒன்றிணைகிறோம்.அவர்களுக்கு குடும்பம் என்ற நிறுவனம் முக்கியமில்லை.நமக்கு நிறுவனம் மிக முக்கியம்” மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற அமைப்பு எப்படி இருக்கிறது என்பதனைப் பார்க்கும் வாய்ப்பு இன்று வெளி நாட்டில் வாழும் நம் நாட்டுப்பெண்களுக்கு(வல்லினச்சிறகுகள் வாசகர்களுக்கு) இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுக் கூட இந்தக் கட்டுரைக்கு பின்னோட்டம் இடலாம்.குடும்பம் என்னும் அமைப்பின் நிறை,குறைகளை வெளி நாட்டோடு ஒப்பிட்டுப் பேசலாம்.

இருவர் குடும்பமாக சேர்ந்து வாழும் வாழ்க்கை,அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக அமையாமல் தடுப்பது எது என்பது பற்றி நம்மை யோசிக்க வைக்கிறார்.“ இங்கு ஒரு தம்பதியின் வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல.  அவர்களின் வாழ்க்கையோடு மதம்,சாதி,பரம்பரை பெருமை ,வட்டாரத்தின் பழக்கவழக்கங்கள் என அசைக்கமுடியாத கனத்த பல சங்கிலிகள் பிணைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார். நம் நாட்டைப் பொறுத்த அளவில் குடும்பம் என்ற நிறுவனம் குலைந்து விடக்கூடாது என்பதில் காட்டப்படும் அக்கறை ,குடும்பமாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதில் காட்டப்படுவதில்லைதானே?.
“குடும்பம் நம்மை கட்டுப்படுத்துகிறதா ? நம்மை சுதந்திரமாக்குகிறதா?” என்னும் கேள்வியைக் கேட்டு அதைப் பற்றி விரிவாகப் பேசுகின்றார்.அதுவும் பெண்களைப் பொறுத்த அளவில் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்,அவளின் விருப்பங்களைத் தவிடு பொடியாக்கும் ஒரு நிறுவனமாக குடும்பம் இருப்பதைச்சுட்டிக் காட்டுகிறார்.'கல்லானாலும் கணவன்,புல்லானாலும் புருசன் ' என்றும்,குடும்பம் என்றால் அப்படி இப்படியாகத்தான் இருக்கும்,அனுசரித்து அல்லது அடங்கிப்போ என்பதுதானே பெரியவர்களின் அணுகுமுறையாக இருக்கிறது.

“குடும்பம் இரண்டு அடுக்குகள் கொண்ட ஓர் அமைப்பு.மேலடுக்கு எல்லோரும் பார்க்கும் பூச்சுகள் நிரம்பிய அடுக்கு.கீழடுக்கு கணவன் மனைவி என்ற இரண்டு பேருக்கு மட்டுமே தொடர்புடைய அகவுலகம் தொடர்பானது “ என்று கூறும் நூல் ஆசிரியர் மேலடுக்கு செயற்கையான நடவடிக்கைகளால்,சொற்களால் எப்போதும் நன்றாக இருப்பது போலக் காட்டப்படுகிறது. ஆனால் கீழடுக்கில் உள்ள கீறல்களைக் கவனிக்கவேண்டாமா? என்று கேட்கின்றார். கீழடுக்கில் உள்ள கீறல்கள் ,கணவன்,மனைவி இருவருக்கு மட்டுமே தெரியும்.ஊடலாக இல்லாமல்,பெரும் மன இடைவெளியோடு கீழடுக்கில் இருப்பவர்கள் பெரும் சதவீதத்தினர்.அவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பும் இல்லை,நிம்மதியும் இல்லை. வெறும் நிர்ப்பந்தத்தால் இணைந்து ஒரு வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்பதனை நமக்கு உணர்த்துகின்றார்.

“ ஆணும் பெண்ணும் அன்பாய் இருக்கப்பழக்கப்படுத்துவதற்குப் பதில் ,ஒருவரை ஒருவர் இழை அளவு கூட தனித்திருக்க விடமால்,தனித்தன்மையை மதிக்கத்தெரிந்து கொள்ளாமல் குடும்பங்களை அமைத்துவிடுகிறோம்.அதனால்தான் மனைவியை கண்காணிப்பது கணவன் வேலையாகவும்,கணவனை கண்காணிப்பது மனைவி வேலையாகவும் இருக்கிறது “ என்று குறிப்பிட்டு,தனது அனுபவ நிகழ்வுகளைக் குறிப்பிட்டு குடும்பத்திற்குள் இருக்கும் போலித்தனங்கள் பற்றியும் கண்காணிப்புப் பற்றியும் பேசுகிறார். விலங்குகளுக்கு குடும்பம் என்ற நிர்ப்பந்தம் இல்லை.அவைகளும் இனப்பெருக்கம் செய்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கின்றன. மனிதா,நீ எந்தவகையில் குடும்ப அமைப்பினால் உயர்ந்தவன் என்று கேட்பதுபோல கேட்கின்றார்.

“ஆழமாக யோசித்தால் குடும்பத்தைப் போல் வன்முறைகள் நிரம்பிய சமூக அமைப்பு வேறொன்றும் இல்லை”,” என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர்,சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால் குடும்பத்திற்குள்ளேயே நிகழும் வன்முறைகளைக் குறிப்பிடுகிறார்."Men Are from Mars, Women Are from Venus" என்ற ஆங்கிலப்புத்தகத்தில் அதன் ஆசிரியர் ஜான் கிரே(John Gray) குறிப்பிடுவதைப் போல குடும்பத்தில் இருக்கும் ஆணுக்கான எதிர்பார்ப்புகளும்,பெண்களுக்கான எதிர்பார்ப்புகளும் வெவ்வேறாக இருப்பதை குறிப்பிடும் நூல் ஆசிரியர் பெண்ணிற்கான  வேலையாக சமூகம் கட்டமைத்திருக்கும்  வீட்டிற்கு வெளியே வாசலைக் கூட்டுதல் போன்ற வேலைகளை ஆண்கள் செய்யக்கூடாது என்பதை சமூகம் மறைமுகமாக வலியுறுத்துகிறது என்று சுட்டுகின்றார்.பெண்ணிற்கான வேலைகள்,ஆணிற்கான வேலைகள் எனும் பாகுபாடு சிறுபிள்ளையாக இருக்கும்போது ஆரம்பித்து கடைசிவரை அப்படித்தானே தொடர்கிறது...

"இங்கு குடும்பங்கள்  விளையாடும் பகடைக்காயில் குழந்தைகளே வெட்டுவாங்க முன்னிறுத்தப்படும் பிஞ்சுக் காய்கள் " எனக் குறிப்பிட்டு குழந்தைகள் படும் பாட்டை ,எதார்த்த நிலையை சுட்டுகின்றார். கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் ஈகோ போட்டியில்,பிள்ளைகளைத் தங்கள் பக்கம் இழுக்க பெற்றோர்கள் செய்யும் பலவிதமான முயற்சிகளை தனது அனுபவத்தின் அடிப்படையில் விவரிக்கின்றார்.'குடும்பம் தன் உறுப்பினர்களின் இயல்பை திருடிக்கொள்கிறது " என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் முற்போக்கு பேசி,காதலித்து,திருமணத்தில்  இணையும் இணையர்கள் கூட மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை.இது அவர்களின் குற்றமல்ல. குடும்பம் என்னும் நிறுவனத்தின் குற்றம் என்று சொல்கின்றார்.

 உலகமும் வாழ்க்கையும் எவ்வளவு நவீனமாகிப் போனாலும் ,கொஞ்சமும் நவீனமாகாமல் புராதன நொடியில் திணறிக் கொண்டிருப்பவை குடும்பங்களே”, “ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி நடவடிக்கைகளைத் தள்ளி நின்று தீவிரமாக்க் கண்காணித்தால்,நம் உறவுகள் எவ்வளவு மோசமாக,அன்பற்ற அன்பினால் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வரும்.ஓர் ஒப்பந்த்த்தில் சேர்ந்து வேலை செய்கின்ற அலுவலர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச புரிதல் கூட குடும்பங்களில் இல்லை.” என்று சுட்டிக் காட்டி ,குடும்பத்தைப் பற்றி இந்திய சமூகம் கட்டிவைத்திருக்கும் பிம்பத்தை டொம்மென்று போட்டு உடைக்கின்றார். ஏய்,எல்லோரும் வேசம் கட்டி நல்லா நடிக்கிறீங்கப்பா என்று சொல்வது போல இருக்கிறது அவரின் கூற்று.

பல ஆண்டுகளுக்கு முன் வந்த  திரைப்படம் ‘மனசு ரெண்டும் புதுசு ‘என்னும் திரைப்படம்,மனமொத்த கணவன்,மனைவிக்கிடையே  உறவுகள் எப்படி பிரிவினை உண்டாக்குகிறார்கள் என்பதனை உறவுகளின் உரையாடல்,நிகழ்வுகள் மூலம் காட்டுவார்கள்.அதைப்போல உறவுகள் கூட நிகழும் உரையாடல்களை நூல் ஆசிரியர் இப்படிக் குறிப்பிடுகிறார்.“வீடுகளில் நடைபெறும் உரையாடல்கள் எப்பொழுதுமே எல்லைகளுக்கு உட்பட்டவை.வரையறுக்கப்பட்டவை.சுவராசியம் அற்றவை.ஆபத்தானவை.பக்கவிளைவை உண்டாக்கக் கூடியவை.கணவன்,மனைவி,மாமியார்,மாமனார் உறவுகளுக்கிடையே கத்தி மேல் வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் போலவே கவனமுடன் பேசவேண்டும்.” கவனத்துடன் பேசவேண்டும்,கவனத்துடன் பேசவேண்டும் என்று சிந்தித்து சிந்தித்தே,பெண்கள் சில நேரங்களில் ஊமைகளாகிப் போய் விடுகிறார்கள்.ஆண்கள் அடங்கி ஆமைகளாகி விடுகிறார்கள்.ஏன் உறவுகளோடு இயல்பாக நம்மால் நண்பர்களோடு பேசுவது போல பேச முடியவில்லை?. உண்மைதான், நாம் உறவுகளோடு பேசும்போது மிகவும் யோசித்து யோசித்துத்தான் பேசுகின்றோம்.அதுவும் நாள் முழுவதும் நமது வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியில் ஓடும் சீரியல்களைப் பார்த்தால்,பயமாக இருக்கிறது.ஒரு சொல்லை வைத்து உறவுகள் எப்படி ஒருவரை பந்தாடுகிறார்கள் என்பதைத்தானே நமது தொலைக்காட்சித் தொடர்களில் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள்..

“சாதி ஒழிய நாம் வேலை செய்கிறோம்.ஆனால் சாதியைப் பாதுகாக்கிற வேலையை ஒரு நிறுவனமாக குடும்பம் மிகச்சரியாகச்செய்கிறது என்று சொல்கிறார்."பெற்ற மகளையே ,நெருப்பு வைத்துக் கொல்லும் அளவிற்கு,ஒரு தாயால்,ஒரு பெண்ணால் எப்படி முடியும் ?...சாதியைப் போன்ற ஒரு கொடூர மிருகத்தைப் பார்க்க முடியுமா? சாதியின் விஷப்பற்களால் கடிபட்ட குடும்ப உறுப்பினர்களும் விஷத்தையே கக்குகிறார்கள்.மனிதன் தோன்றிய காலம் முதல் நாமெல்லாம் வளர்ந்து வந்திருக்கிறோம்.உரு மாறியிருக்கிறோம்.நாகரிகமாகியிருக்கிறோம்.அறிவில் மேம்பட்டிருக்கிறோம்.கல்வியில் பண்பட்டிருக்கிறோம்.தொழில் நுட்பத்தில் முன்னேறியிருக்கிறோம்.வசதிகளைப் பெருக்கியிருக்கிறோம்.ஆனால் சாதியின் பிடிக்குள்,சாதியின் அடிமைபோல் நாம் இருக்கும்வரை,நாம் பண்பாடுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது .சாதி,பண்பாடற்றவர்களையே உருவாக்குகிறது"என்று தெளிவாக சாதியின் தீமையைப் பற்றிச்சொல்லும் வெண்ணிலா,குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிட்டால்,இந்தச்சாதி என்னும் தீமை எப்போதோ நம் சமூகத்தை விட்டு மறைந்திருக்கும் என்று சொல்கின்றார்.

குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கு அடிப்படையிலான பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பவை…உறவில் வெளிப்படைத் தன்மையும் உண்மையும் இல்லாமல் போவதுதான்.”,”குடும்பத்திற்குள் இருக்கும் போலித்தனம் சமூகத்தின் பல சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது….சமூகத்தில் மேலோங்கி இருக்கும் பல குற்றங்களுக்கான ஊற்றுக்கண் குடும்பங்களில் இருக்கிறது.இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதும்,செரிப்பதும் நமக்குக் கடினமாக இருந்தாலும் ,முதலில் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவாவது   நாம் தயாராக வேண்டும்.அப்பொழுதுதான் குடும்பங்களின் புனரமைப்புப் பற்றி நாம் யோசிக்க முடியும்" என்று குறிப்பிடுகிறார்."குடும்பங்கள் முன்னிறுத்தும் கடவுள் சாதி அடிப்படையிலான கடவுள்..." என்று குறிப்பிட்டு குலசாமி வழிபாடு,சிறுதெய்வ வழிபாடு பற்றிய விமர்சனங்கள் மிகவும் காத்திரமானவை.

"குடும்பம் அடிப்படையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது.பழமைவாதத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.சாதிய உணர்வை ஊட்டுகிறது. மத நம்பிக்கையை வளர்க்கிறது.தான்,தன் குடும்பம் என்ற சுய நலத்தை வலியுறுத்துகிறது." என்று வரிசையாகக் கூறும் நூல்; ஆசிரியர் "எத்தனைக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் குடும்பம் தரும் சுகத்திற்கு ஈடான ஒன்றை கூற முடியுமா ?ஆணும் பெண்ணும் இணைந்து வாழ குடும்பம் போன்ற பாதுகாப்பான இடம் வேறுண்டா? குடும்பம் தரும் இனிமை எல்லோருக்கும் வேண்டியுள்ளது " என்று குறிப்பிடும் நூலாசிரியர் ,குடும்பம் என்ற அமைப்பு முற்றிலுமாக அழிந்து போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை.ஆனால் இப்போதைய குடும்ப அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிடுகிறார்."இன்பம் தரும் குடும்ப அமைப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால்,குடும்பம் என்பதற்கான வரையறைகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது.ஒட்டுமொத்தமாக குடும்பம் என்ற அமைப்பைச்சிதைப்பதை விட்டு,குடும்பத்திற்கு புதிய பொருள் தரவேண்டும்.திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக ஒன்றிணையும் ஆண் பெண் சேர்ந்து வாழ்வது மட்டுமே குடும்பம் அல்ல,குடும்பத்திற்கான அங்கீகாரம் எளிதாகும்போது,அங்கு உண்மைத் த்னமை வரும்." என்று குறிப்பிடுகின்றார்.

ஒரு வேறுபட்ட புத்தகம்.ஒரு வேறுபட்ட கோணத்தில் குடும்பத்தைப் பார்க்கும் கட்டுரைகளின் தொகுப்பு.படித்துப்பாருங்கள்.அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விழாவில் தான் எழுதிய புதினத்திற்காக 'கலைஞர் பொற்கிழி' விருது பெற்றிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்  அ.வெண்ணிலா அவர்கள். விருது பெற்ற அவருக்கு வல்லினச்சிறகுகள் மின்னிதழ் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார்.தனது மனதிற்கு சரியெனப்பட்டதை நம் முன்னால் வைக்கிறார். நமக்கு சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளலாம்.வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். ஆனால் இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் எழுகின்ற கேள்விகள் உண்மையை நோக்கி நம்மை உறுதியாகப் பயணிக்க வைக்கும்


நன்றி : வல்லினிச்சிறகுகள் மின் இதழ் ஏப்ரல்-மே 2022








Tuesday 14 June 2022

நிகழ்வும் நினைப்பும் : தினமணி நாளிதழில் ஆழினி நாவல் விமர்சனம்

https://www.dinamani.com/specials/nool-aragam/2022/jun/13/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-3861252.html 




நிகழ்வும் நினைப்பும் : தினமணி நாளிதழில் ஆழினி நூல் விமர்சனம்

நேற்று (13.06.2022) காலையில் நகைச்சுவைத்தென்றல்,பட்டிமன்றப்பேச்சாளர்,பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்,செல்பேசியில் அழைத்தார். அவர் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச்சென்று அண்மையில் திரும்ப தமிழ் நாட்டிற்கு வந்திருந்தார். அவரிடம் செய்தித்தாட்களில் நீங்கள் அமெரிக்கா சென்று வந்ததைப்  பார்த்தேன்,மிக்க மகிழ்ச்சிங்க அய்யா என்றேன். அமெரிக்கப் பயணம் பற்றி என்னிடம் பேசிவிட்டு ,'இன்றைய தினமணி நாளிதழ் பார்த்தீர்களா? என்றார்.' ,இல்லைங்க அய்யா' என்றேன்.உங்கள் மகள் அறிவுமதி எழுதிய ஆழினி நாவல் பற்றி நூல் அரங்கம் பகுதியில் மிக அருமையாக வந்துள்ளது. வாழ்த்துகள்.வாங்கிப் பாருங்கள் என்றார்.அவர் அந்த நூலுக்கு அற்புதமான ஓர் அணிந்துரை அளித்து,இளம் எழுத்தாளர் சொ.நே.அறிவுமதியை ஊக்கப்படுத்தியவர்.'மகிழ்ச்சி,பார்க்கிறேங்க அய்யா,மிக்க நன்றி ' எனச்சொல்லிவிட்டு கடைக்குச்சென்று தினமணி நாளிதழை வாங்கி வந்து பார்த்தேன்.மிக நன்றாகவே நூல் மதிப்புரை எழுதியிருந்தார்கள்.நூல் மதிப்புரை இணைப்பு அருகில்...தினமணி நாளிதழுக்கு மனமார்ந்த நன்றி.

என்னோடு வேலைபார்த்த துணைக்கோட்ட அதிகாரி ஜெயக்குமார் அவர்கள் என்னிடம் செல்பேசியில் அழைத்து ஆழினி நாவல் ஒரு பிரதி வேண்டும் என்றார்,தினமணி பத்திரிக்கையில் பார்த்தேன். நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. படிக்க வேண்டும் என்றார்.மாலையில் அவரது மகள் சிந்துஜா அவர்களின் ஹோமியோபதி மருத்துவமனையில் ஜெயக்குமார் அவர்களிடம் இந்தப்புத்தகத்தை கொடுத்து வந்தேன். வாருங்கள் படிப்போம் உறுப்பினர் வழக்கறிஞர் சித்ராதேவி வேலுச்சாமி அவர்கள்,ஏற்கனவே ஆழினி நாவலை வாங்கி வைத்திருந்தார்.இந்த நூல் அரங்கம் பகுதி விமர்சனத்தைப் பார்த்தவுடன் ,படிக்க ஆரம்பித்துவிட்டேன்,65 பக்கங்கள் படித்து விட்டேன் அண்ணா  என்று பகிர்ந்திருந்தார்.


Monday 13 June 2022

நாடு பூராம் அலையுது...

                                     நாடு பூராம் அலையுது...



இரவெல்லாம் தூக்கமில்லை..

ஏனிந்தக் கொடுமை எனும்

நினைப்பால் உறக்கமில்லை...


திட்டு திட்டாய்ப் 

பரவிக் கிடந்த இரத்தம்...

ஆடுகள் போல 

அறுத்துப்போடப்பட்ட இரு உயிர்கள்..

ஆணவத்தின் உச்சத்தால்

அநியாயமாக உயிர் இழந்த

புதுமணத் தம்பதிகள்....



நான் சொன்னவனை விட்டுவிட்டு

வேறு ஒருவனை மணம் முடிப்பாயா?

நம்ம ஜாதியை விட்டு விட்டு

வேறு ஜாதியில் திருமணமா

உடன் பிறந்த அண்ணனாலேயே

கொலை செய்யப்பட்ட சரண்யா

அவரோடு கொலை செய்யப்பட்ட மோகன்


அறிவியலில் என்னன்னமோ நடக்குது...

இழவு பிடித்த இந்த நாட்டில்

எல்லாமே ஜாதிமயமா இருக்குது...


வெறிபிடித்த கூட்டம் ஒன்னு

சனாதனம் வேணும்

ஜாதிமுறை வேணும் என்று

சங்கிகளாய் அலையுது...


வீட்டுக்குள்ளதான் பொண்ணு இருக்கணும்

அவ நம்ம சொல்ற பையனைத்தான்

திருமணம் முடிக்கணும்...

இல்லையின்னா அவளைக் கொல்லணும்

என்று ஒரு கொலைவெறிக்கூட்டம்

நாடு பூராம் அலையுது...

அதுக்கு பார்ப்பனியக் கூட்டம்

ஆதரவைக் கொடுக்குது..... 



இன்னும் உரக்க நாம்

பெரியாரின் கொள்கைகளைச்

சொல்ல வேண்டிய அவசியம் இருக்குது...

ஏணிப்படியாய் அமைந்திட்ட

ஜாதிமுறையை அழித்தொழிக்கும்

வேலைக்கு இன்னும் 

தீவிரமாய்த் திரள்வோம் தோழர்களே...


                  வா.நேரு

                  14.06.2022...












Thursday 9 June 2022

திராவிடப்பொழில் ஏப்ரல்-ஜீன் 2022 இதழ் ஆய்வு

 பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக திராவிடப்பொழில் ஏப்ரல்-ஜீன் 2022 இதழ் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. திராவிடப்பொழில் இதழின் சிறப்பு ஆசிரியர்  திருமிகு முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் அறிமுக உரை ஆற்ற இருக்கிறார்.உலகம் அறிந்த நற்றமிழ் அறிஞர் இவர். உலகம் முழுவதும் இருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடு தொடர்பில் இருப்பவர்.'அறியப்படாத தமிழ் மொழி' போன்ற மிக அரிய புத்தகங்களை ,எதார்த்தமான நடையில் எழுதிப் புகழ் பெற்றவர்.பன்மொழி அறிந்த தமிழ்ப் பேராசிரியர்.




இந்த நிகழ்வில் ஆய்வு உரையினை தோழர் ஜெயாமாறன் அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார். எடுத்துக்கொண்ட தலைப்பை,மிகத்தெளிவாகவும் அதில் இருக்கும் உட்கருத்துகளை கேட்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறுவதில் வல்லவர்.இவரால் நம் நூல் அல்லது கட்டுரை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று படைப்பவர்கள் நினைக்கும் அளவுக்கு தனித்திறன் மிக்கவர். 

அதனைப்போல இளைஞர்,ஆங்கிலத்தில் வல்லமையும் எடுத்துக்கூறுவதில் தனித்தன்மையும் உள்ள அமரன் அவர்களும் ஆய்வு உரை நிகழ்த்த இருக்கின்றார்.தோழர் சுதாகர் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க இருக்கின்றார்.நன்றியுரையை தோழர் ரவிக்குமார் அவர்கள் நிகழ்த்துகிறார்.


திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர்.பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர்,எந்த நாளும் பெரியாரியலையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கருதி தன்னலம் கருதாமல் உழைக்கும்  அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.எல்லா விளக்குகளும் எரிவதற்கு இணைப்பாக இருக்கும் மின்சாரம் போலத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,இந்த நிகழ்வுக்கு தோழர் இளமாறன் அவர்கள் சிறப்பாக நடைபெறத்  துணை நிற்கிறார். அதைப்போல பெருமதிப்பிற்குரிய தோழர் அருள் அவர்கள்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு.துரைக்கண்ணு துரைஎழில்விழியன் அவர்கள்,இணைப்பு உரைகளை தனித்தன்மையாகத் தருகின்ற இளையதோழர் அறிவுப்பொன்னி அவர்கள்,திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர் குழுவில் உள்ள முன்னாள் துணைவேந்தர் அய்யா பேரா.ஜெகதீசன் அவர்கள், பேரா.அய்யா பேரா.ப.காளிமுத்து அவர்கள்,சிங்கப்பூர் அய்யா பேரா.சுப.திண்ணப்பன் அவர்கள்,பேரா.நம்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். திராவிடப்பொழில் இதழுக்கு கட்டுரை அளித்த கட்டுரை ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.11.06.2022 சனிக்கிழமை இரவு 7.30க்கு தொடங்கி 9.00 மணிக்குள் நிகழ்வு நிறைவுறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழகப்பேராசிரியர்களே,இருபால்ஆய்வு மாணவர்களே,தோழர்களே,தமிழ் அறிஞர்களே,திராவிட இயக்கப் பற்றாளர்களே,கலந்து கொள்ளுங்கள்.,கலந்து கொள்ளுங்கள்.


                 வா.நேரு,09.06.2022

Monday 6 June 2022

இலக்கியம் படைக்கும் இராணுவ வீரர்

 வாருங்கள் படிப்போம் ,வாருங்கள் படைப்போம் என்னும் குழுக்கள் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறது. நல்ல புரிதல் உள்ள நண்பர்க்ள் இருபால் நண்பர்கள் நிறையப் பேர் அறிமுகம் ஆகின்றனர். நாளடைவில் நல்ல நண்பர்களாகவும் மாறுகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரைச்சார்ந்த வினோத் பரமானந்தன் அவர்களும் அவர்களில் ஒருவர்.இன்று 06.06.2022 மதுரையில் அவரைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நிறையப் பேசிக்கொண்டிருக்க இருவருக்கும் நேரமும் கிடைத்தது.சில வாரங்களுக்கு முன் வாருங்கள் படைப்போம் குழுவில் படைப்பாளியாய் அவர் கலந்து கொண்டதையும்,மிக அருமையான கேள்விகளை முன்வைத்து அண்ணன் குமரன் அவர்கள் கேள்வி கேட்டதையும் அதற்கு வினோத் அவர்களின் நல்ல பதில்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இராணுவத்தில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பற்றி தன் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். இலக்கியம் படைப்பதிலும் படிப்பதிலும் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் பகிர்ந்து கொண்ட வினோத் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் விவாதித்தார்.. இந்த சந்திப்பு பற்றி 




"அன்பிற்கினிய தோழர்

நேரு ஐயா அவர்களை..

இன்று

சங்கம் வைத்து தமிழ்

வளர்த்த மதுரையில்

சந்தித்தேன்...


அன்புடன் என்னைக்

காண வந்து..

"ஆழினி " உடன் இன்னும்

பல நூல்கள் தந்து...

காபி குடி...

நிறைய புத்தகம் படி

என்றே

உரைத்து..

உறவாடிச் சென்றார்..


காணொளியில்

கண்டவரை..

காபியோடு

கண்ணருகே

கண்டதில்

பெரும் மகிழ்ச்சி." என்றும் வாட்சப் குழுக்களில் வினோத் பரமானந்தன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். 

கூடலூரில் வாழ்ந்து மறைந்த அவரின் பெரியப்பா மானமிகு.பரமானந்தன் அவர்கள் தந்தை பெரியாரின் தொண்டர்,திராவிடர் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்னும் செய்தியையும் பகிர்ந்து கொண்டார். நான் பெரியகுளம் பகுதியில் பணியாற்றியபோது,கூடலூர் அய்யா ஜனார்த்தனம் அவர்களைச்சந்திக்க வரும்போது ,அவரைச்சந்தித்த நினைவு இருக்கிறது என்று சொன்னேன். மிக மகிழ்ச்சி தந்த சந்திப்பு. 




என்னுடைய மகள் சொ.நே.அறிவுமதி எழுதிய 'ஆழினி 'நாவல், என்னுடைய கவிதைத் தொகுப்புகளான 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', அண்மையில் வெளிவந்த 'சொற்களின் கூடுகளுக்குள் 'கவிதை தொகுப்பு மற்றும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பான 'சங்கப்பலகை'யையும் அளித்து மகிழ்ந்தேன்.உறுதியாகப் படிப்பார்கள்,படித்து கருத்து சொல்வார்கள் என்பவர்களிடன் புத்தகங்களைக் கொடுப்பதைவிட மகிழ்ச்சி தருவது எது?.