Sunday 24 July 2022

மண்சட்டி....அகிலா....நூல் மதிப்புரை....

 


வல்லினச்சிறகுகள் ஜீன் மாத இதழை முழுமையாகப் படிக்க


















நன்றி: வல்லினச்சிறகுகள் மின் இதழ் - ஜீன் 2022




















Thursday 21 July 2022

தந்தை பெரியாரும் இங்கர்சாலும்...

 


தந்தை பெரியாரும் இங்கர்சாலும்...
     (முனைவர் வா.நேரு)

தந்தை பெரியார் கரடு முரடாயிருந்த சமூகக் காட்டை சீரமைப்பதற்காக தன்னையே நம்பி புறப்பட்டவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக புறப்பட்ட அவர்,தன் கருத்தினை ஒத்திருக்கும் வேற்று நாட்டு அறிஞர்களின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் பரப்பினார்.அத்தைகைய அறிஞர்களில் ஒருவர்  கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவார்.

பகுத்தறிவுக் கருத்துகளை 19-ஆம்  நூற்றாண்டில் அமெரிக்காவில் விதைத்தவர் இங்கர்சால் அவர்கள் ஆவார் .அவர்  1833-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் பிறந்தவர். தந்தை பெரியாரைப் போலவே சிறு வயதிலேயே சிந்தனைத் திறன் மிக்கவராக இருந்திருக்கிறார்.அமெரிக்க இராணவத்தில் கர்னலாகப் பணியாற்றியதால் பெயருக்கு முன்னால்  கர்னல் எனப் பட்டத்தோடு அழைக்கப்பட்டவர்.அமெரிக்காவின் அரசியல் தலைவராகவும் ,மிகச்சிறந்த பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி பின்பு சட்டம் பயின்று,புகழ் பெற்ற வழக்கறிஞராகி நிறைய பொருள் ஈட்டியவர்.ஈட்டிய பொருளைத் தாராளமாக தேவைப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கியவர்.

எவருக்கும் பயப்படாமல் தனது மனதிற்கு பட்ட கருத்துகளை குறிப்பாக மதங்களைப் பற்றியும்,கடவுள் பற்றியும்,பேய்,பிசாசு போன்ற நம்பிக்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் உரையாற்றி உண்மையை மக்கள் மத்தியில் அறியச்செய்தவர். சொர்க்கம்,நரகம் என்று எல்லாம் ஒன்றும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச்சொல்லியவர்.பெண்ணுரிமைக் கருத்துகளைச்சொன்னவர். இங்கர்சால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ,அவரது உரையைக் கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் பல  நூறு மைல்கள் பயணம் செய்து டெக்சாஸ் முதல் நியூயார்க் வரை ,அவர் பேசும் இடங்களில் கூடியதாக்க் குறிப்பிடுகிறார்கள்.அதுமட்டுமல்ல,,டிக்கெட் வாங்கி ,பணம் கட்டி பல ஆயிரம் பேர் கேட்கக் கூடிய உரையாக,மதங்களை மறுத்து அவர் பேசக்கூடிய உரை இருந்திருக்கிறது.அப்படிப்பட்ட இங்கர்சாலின் கருத்துகளை நூலாகத் தந்தை பெரியார் அவர்கள் 1930களில் ஆக்கி தமிழ் மக்களுக்கு தந்திருக்கிறார்கள்.

“தனது பகுத்தறிவு –சுயமரியாதை இயக்கம் என்ற சமூகப் புரட்சி இயக்கத்திற்கு வலு சேர்க்கவும் –மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் அரிய கருத்துக்கருவூலங்களையும் 1930 முதலே தந்தை பெரியார் அவர்கள் தனித்தனித் தலைப்புகளில் ,தக்காரைக் கொண்டு தமிழில் மொழி பெயர்த்தும் ,சிறு சிறு வெளியீடுகளாகவும்(Pamphlets) மலிவு விலைக்கு பல்லாயிரக்கணக்கில் வெளியிட்டார்கள்.

இங்கர்சால் பேச்சுகளையும் ,தமிழாக்கம் செய்து 1933 முதலே பல தலைப்புகளில் வெளியிட்டார்கள்.வியப்பாக இருக்கிறது அல்லவா?” என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் கேட்கிறார்.வியப்பாகத்தான் இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் கணினி,இணையம்,வாட்சப்,முக நூல் என்று ஒன்றும் இல்லாத அந்தக் கால கட்டத்தில்,தந்தை பெரியார் அவர்கள் இங்கர்சாலின் எழுத்துகளை,அச்சிட்டு நூல்களாக வெளியிட்டு இருக்கிறார் என்பது பெரும் வியப்பாகத்தான்  இருக்கிறது.

1933-ல் மதம் என்றால் என்ன?(What is Religion ) என்னும் நூலை பகுத்தறிவு  நூற்பதிப்புக் கழகம் சார்பாக தந்தை பெரியார்  வெளியிட்டுள்ளார். நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் மகன் அட்வகேட் சோ.லட்சுமிரதன் பாரதி இந்த நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.பாஸ்டன்  நகரில் இங்கர்சால் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு இது.

அதைப் போலவே   கடவுள்கள்(The Gods ) என்னும்  நூலும், நான் கடவுள் கவலையற்றவன் ஆனதேன்?(Why I am an Agnostic) என்னும்  நூலும் 1934-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வால்டையரின் ஆண்டுவிழாவின் போது இங்கர்சால் அவர்கள் ஆற்றிய உரை ‘வால்டையரின் வாழ்க்கை சரிதம் “ என்ற பெயரில் 1935-ஆம் ஆண்டு அட்வகேட் கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மொழி பெயர்க்க,அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் முன்னுரையை என்னுரை என்று  எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

அதைப்போலவே 1936-ஆம் ஆண்டு பண்டித எஸ்.முத்துசாமிபிள்ளை அவர்கள் மொழிபெயர்த்த இங்கர்சால் பொன்மொழிகள் என்னும் நூல்,1936-ஆம் ஆண்டு சா.குருசாமி அவர்கள் மொழிபெயர்த்த பேய்,பூதம்,பிசாசு அல்லது ஆவி (The Ghostrs) என்ற நூலும் வெளிவந்திருக்கிறது.

1899-ஆம் ஆண்டு ஜீலை 21-ஆம் நாள் இங்கர்சால் அவர்கள் மறைந்திருக்கிறார்.அவர் தனது கருத்துகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஓர் இயக்கம் அமைக்கவில்லை.அதனால் மிகப்புகழ் பெற்று விளங்கிய அவரின் பேச்சுகளும்,எழுத்துகளும் அவர் பிறந்த அமெரிக்கா போன்ற நாட்டிலேயே தொடர்ந்து முன் கொண்டு செல்லப்படாத நிலையில்,அவரின் கருத்துகளை அறிந்த தந்தை பெரியார் அவர்கள்,  அனுமதி பெற்று ,அவரது  நூல்களைத் தமிழில் கொண்டு வந்து தந்திருக்கிறார்.வியப்பாகத்தான் இருக்கிறது.

1930,40 களில் தந்தை பெரியாரின் முயற்சியால் மொழியாக்கம் செய்யப்பட்ட இங்கர்சால் அவர்களின் சிறு சிறு நூல்களை எல்லாம் தொகுத்து,அய்யா ஆசிரியர் அவர்களின் முன்னுரையோடு ‘அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம் ‘ என்னும் தலைப்பில் திராவிடர் கழக(இயக்க) வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. அதில்

“உண்மை ஆராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.ஒளிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் தூணாகவும் இருப்பது உண்மையே.

உண்மை ஆனந்தத்தின் தாய்; உண்மை மக்களை நாகரிகப்படுத்துகிறது.உண்மை மக்களை நாகரிகப்படுத்துகிறது.உண்மை மக்களை உள்ளத்திலே உன்னதக் குறிக்கோளைத் தோற்றுவிக்கிறது.மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.

உண்மையை அறிவதைவிட ,உயர்வான குறிக்கோள் மக்களுக்கு வேறு ஏதும் இல்லவே இல்லை.” (பக்கம் 206) என்று உண்மையைப் பற்றி இங்கர்சால் அவர்கள் சொல்லிச்செல்லும் செய்திகளைப் பார்க்கிறபோது,உண்மைக்கு எவ்வளவு உயர்வான இடத்தை இங்கர்சால் அவர்கள் கொடுத்திருக்கிறார் என்பது புரிகிறது.

தந்தை பெரியார் அவர்கள் தான் ஆரம்பித்த பத்திரிக்கைக்கு ‘உண்மை ‘எனப் பெயரிட்டார்கள்.’ உண்மை ‘ இதழைப் படிப்பதனால் நம் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்.உண்மை புரியவேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இந்தப் பத்திரிக்கையை தந்தை பெரியார் ஆரம்பித்தார்.தன் வாழ்க்கையில் உண்மையைச்சொல்வதற்கே நேரம் இல்லை,இதில் நான் எங்கே பொய் சொல்ல என்று கேட்டவர் பெரியார்.இங்கர்சால் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் மக்களுக்கு உண்மையைச்சொல்லவேண்டும் என்பதில் நேர்கோட்டில் நிற்கின்றார்கள்.

“இங்கர்சால் ஒரு சிறந்த மனிதன்.பிறப்பினால் மனிதன்.மனிதனாக வளர்ந்தார்.மனிதனுக்காக உழைத்தார் .மனிதனாகவே உயிர் துறந்தார்.இவருடைய மனித சுபாவமே தனக்கென வாழா பிறர்க்கென வாழும் செயற்கரிய செய்யும் பெரியாராக்கியது “ என்று இங்கர்சால் பற்றி அட்வகேட் எஸ்.லட்சுமிரதன் பாரதி அவர்கள் எழுதியிருப்பது அப்படியே தந்தை பெரியாருக்கும் பொருந்தும்.

இங்கர்சால் அவர்கள் 21.7.1899 –ல் இறந்திருக்கிறார்.வரும் ஜீலை 21,2022 அவருக்கு 123-வது நினைவு நாள் .” இனி நமது தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பகுத்தறிவு சங்கமும் அவர் இயற்கையோடியைந்த (இறந்த) நாளை இங்கர்சாலின் தினம்(INGERSOLL DAY) என்று ஆங்காங்கே கூட்டங்கூடி அவரது வாழ்க்கைச் சரித்திரத்தையும் ,அவரது அரிய போதனையையும் தெளிவாய் மக்களுக்குக் கூற வேண்டும்.அவர்தம் நூற்கள் குறைந்த விலைக்கு அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெகு தீவிரமாய் பரவுதல் வேண்டும்.அவர்தம் நூற்கள் ஏழை,பாமரர்கள்,பெண்கள் முதலியவர்களின் கண்களை எளிதில் திறக்கச்செய்யும்.” என்று இங்கர்சாலின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எழுதிய அட்வகேட் எஸ்.லட்சுமிரதன் பாரதி அவர்கள் குறிப்பிடுகிறார்.

இங்கர்சால் பற்றி அருமையான தொகுப்பு நூலை ,தொகுப்பாசிரியராக இருந்து அருமையாக கொடுத்திருக்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,” இங்கர்சாலின் 183-ஆம் ஆண்டு பிறந்த நாளான ஆகஸ்ட் 11ஆம் தேதியை ஒட்டி தமிழ் நாடெங்கும் பகுத்தறிவுப்பிரச்சாரம் ஒரு மாதம் பற்பல இடங்களில் நடைபெற்று அவர்தம் பகுத்தறிவுச் சிந்தனைக் கருத்துகளைப் பரப்பும் பணி மேலோங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தொகுப்பு(அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம்) அதற்கு ஒரு மூலப்பொருள் –சான்றாவணம் ஆகும்.

ஒவ்வொரு வீட்டு நூலகம் தொடங்கி,நாட்டு நூல்கள்வரை எங்கும் இங்கர்சால் –“Everywhere Ingersoll “ எண்ற ஒரு தனி இயக்கம் இதன் மூலம் வீறு நடை போடுகிறது “ என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 03.08.2015 அன்று சிறப்பாக அந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

வரும் ஆகஸ்ட் 11,2022 இங்கர்சால் அவர்களுடைய 190-வது பிறந்த நாளாகும்.அவருடைய நினைவு நாளான ஜீலை 21 முதல் அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 11 வரை ,இங்கர்சால் அவர்களைப் பற்றியும்,அவரது நூல்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கான காலமாக எடுத்துக்கொண்டு,நாம் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கத்தூண்டுவோம்.

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் ..16-31,ஜீலை 2022.






Tuesday 19 July 2022

தமிழ் அறிஞர் அய்யா க.சி.அகமுடைநம்பி...இயற்கை எய்தினார்.

ஓய்வுபெற்ற  தமிழ் நாடு அரசு தலைமைப்பொறியாளர் (வேளாண்பொறியியல்  துறை ) பொறிஞர் அய்யா க.சி.அகமுடைநம்பி அவர்கள் நேற்று(18.07.2022) இயற்கை எய்தினார்.அவருக்கு வயது 83.
.படித்தது வேளாண் பொறியியல் என்றாலும் தமிழின் மீது குறிப்பாகத் திருக்குறள் மீது பெரும் விருப்பம் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். பல நாளிதழ்களில்,வார இதழ்களில்,காலச்சுவடு போன்ற மாத இதழ்களில் இலக்கியம்,திருக்குறள் குறித்து எழுதியவர்.
இடது பக்கம் முதலில் கண்ணாடி அணிந்து அமர்ந்திருப்பவர். அய்யா க.சி.அகமுடைநம்பி  அவர்கள்


கடந்த இருபது ஆண்டுகளாக தனது 'மலர் ' அறக்கட்டளை மூலமாக , தனக்குச்சொந்தமான , மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, தே.கல்லுப்பட்டி , குன்னத்தூர் அருகில் உள்ள வேப்பந்தோப்பில் வருடந்தோறும் ஜனவரி மாதம், (பெரும்பாலும் ஜனவரி 25 அல்லது 26 ஆக இருக்கும்) திருக்குறள் குறித்து  ஒரு தலைப்புக் கொடுத்து கருத்தரங்கம் நடத்தி வந்தவர்.. கருத்தரங்கத்தின் முடிவில்  கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாகவும் வெளியிட்டு வந்தவர்.மிகப்பெரும் திருக்குறள் விரும்பி .

                        பல  வருடங்களாக, தொடர்ந்து அவரது கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது.. ஒருவருடம் திரு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் கலந்து கொண்டார்.  பேராசிரியரின் இளவல் பேராசிரியர் அய்யா க.திருமாறன் அவர்கள் விருதுநகரிலிருந்து வந்து கலந்து கொள்வார். அய்யா தமிழண்ணல், தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார், பேரா.இரா.மோகன்  மற்றும் பலர் கலந்து கொண்ட கருத்தரங்குகள் அவை.. பல பேராசிரியர்கள் வந்து கலந்து கொள்ளும் நிகழ்வு அது. பல துறை சார்ந்த ஆனால் திருக்குறள் மேல் விருப்பம உள்ள தமிழர்களும்  கலந்து கொள்ளும் அருமையான கருத்தாக்க விழாவாக, வேப்பந்தோப்பு கருத்தரங்கம் அமைந்து வந்தது.. சில ஆண்டுகளாக மதுரை யாதவர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் அய்யா முனைவர் இ.கி.இராமசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வந்தார்.

                              தனி ஒரு ராணுவம் போல, இந்தக் கருத்தரங்கத்திற்காகவும், தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காகவும் அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்கள்  எடுத்துக்கொண்ட  முயற்சிகள் மிகவும் வியப்புக்குரியது. மதுரையின் தெருக்களில் பேருந்து மூலமாகவும் , நடந்தும், அச்சிடக்கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் திருத்துதல், மீண்டும் கொடுத்தல், அச்சிட ரேப்பர்  வடிவமைத்தல் என்று ஓயாது அலைந்து கொண்டிருந்தவர்.. இந்த நிகழ்வுக்காக 20 வயது இளைஞரைப்போல அலைந்து கொண்டிருப்பார். உடல் உழைப்பு, அலைச்சல், பணச்செலவு இவற்றிப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே குறிக்கோளோடு செயல்பட்டுக்கொண்டிருந்தவரை தமிழக இலக்கிய உலகம் இழந்திருக்கிறது.

தன்னுடைய துணையை இழந்த அவர்,வெளி நாட்டில் இருக்கும் மகள்கள் இருவரையும் அவ்வப்போது பார்த்து திரும்புவார்.மதுரை திருநகர் 3-வது நிறுத்தம் அருகில்  இருக்கும் முதியோர் இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்தார்.அந்த இடம் மிகப்பிடித்திருக்கிறது என்று சொன்னார். முன்பக்கம் மரங்களும் பின்பக்கமும் ஏரியுமாக இயற்கை சூழ்ந்திருக்கும் இடத்தில் எழுதுவதும் படிப்பதுமாய் இருந்த பெருந்தகை அவர்.  

இந்த மாதத்தில் இருமுறை அய்யா அகமுடை நம்பி அவர்களை திருநகர் முதியோர் இல்லத்தில் சந்தித்தேன்.பத்து நாட்களுக்கு முன்பு நானும் என் மகன் சொ.நே.அன்புமணியும் சென்றிருந்தோம்.என் மகனிடம் என்ன படித்திருக்கிறாய்,என்ன செய்யப்போகிறாய் என்றெல்லாம் கேட்டு ,போட்டித்தேர்வுகளுக்கு படி என்று சொல்லி நிறைய் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார்.திருக்குறளை மொழி பெயர்க்கும் அளவிற்கு ஆங்கிலத்தில் புலமை பெற்றதற்கு தான் திருமங்கலம் பி.கே.என்.பள்ளியில் படித்தபோது இருந்த தலைமை ஆசிரியர் காரணம் என்றார்.மதுரையில் இருக்கும் தன்னோடு படித்த டாக்டர் செளந்திரராஜன்(குழந்தைகள் நல மருத்துவர்) அவர்களைசென்று பார்த்து வந்ததை எங்களோடு பகிர்ந்து கொண்டார்

முதியோர் இல்லத்தில் டீயைக் கொடுத்தார்.வைத்திருந்த ஆப்பிளைக் கொடுத்தார்.விருந்தோம்பலை விடாமல் வலியுறுத்தி எங்களை பழங்களை சாப்பிட வைத்தார்.திராவிடப் பொழில் இதழைக் கொடுத்து உங்கள் கட்டுரை வேண்டும் என்றேன்.சில பக்கங்களே உள்ள கட்டுரை தந்தார். பல பக்கங்கள் உள்ள கட்டுரை வேண்டும் என்றேன்.தருகிறேன் என்றார்.

கலைஞரின் தனித்திறன்கள் என்று புத்தகம் எழுதியதற்காக அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் பதவி உயர்வு மறுக்கப்பட்ட கதையைச்சொன்னார்.ஜே.கே. பற்றி எழுதிய புத்தகம் ,திருக்குறள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள் என்று பல நூல்களுக்கு சொந்தக்காரர்.திருக்குறளின் சாரத்தைப் பிழிந்து ஒரு ஆங்கிலப்புத்தகமாக எழுதி வைத்திருக்கிறேன்.அணிந்துரைகள் வாங்கி விரைவில் வெளியிட வேண்டுமென்றார்.

மதுரையில் நடந்த ரீடர்ஸ் கிளப் மூலமாக கிடைத்த அரிய ஆளுமை அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்கள்.இன்று அவருக்கு மலர்வளையம் வைத்தபோது தூங்குவது போலவே இருந்தார் கண்ணாடிப் பெட்டிக்குள்.அய்யா இ.கி.இராமசாமி அவர்களும் நானும் அவரின் உறவினர் அய்யா பேரா சதாசிவம் அவர்களிடம்,மலேசியாவிலிருந்து வந்திருந்த அவரது மகளிடமும் ஆறுதலைச்சொல்லி விட்டு வந்தோம்.

இன்னும் ஒரு தமிழ் அறிஞரை ,தமிழ் நாடு இழந்திருக்கிறது.
அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்களுக்கு என் சார்பாகவும், தமிழ் நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் வீரவணக்கம்! வீரவணக்கம்!
தமிழுக்குத் தொண்டு செய்கிறவர்கள் மறைந்தாலும் அவர்கள் செயல்களால் என்றும் மறைவதில்லை...

வா.நேரு,தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,மதுரை.

Saturday 16 July 2022

இன்றைய மாலை...

https://youtu.be/e7eLdqv2zUc 


இன்றைய மாலை உன்னதமான ஒரு மாலையாகி விட்டது.

 நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒலி ஒளி அணைத்துவிட்டு நாளை திறனாய்வுக்குத் தயார் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் நேரு அண்ணாவின் நேர்த்தியான திறனாய்வு காரணமாக என் திட்டங்கள் தவிடுபொடி ஆகிவிட்டது. 

எவ்வளவு அழகாக ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அதனை எப்படி உள்வாங்குகிறார். ஆழமாய் படித்து அருமையாய் அதன் கருத்துக்களைக் கேட்போர் நெஞ்சம் கொள்ளப் பகிர்கிறார் நேரு அண்ணா வாழ்த்துகள்..

ஏராளமானோர்  பங்கு கொண்டு இன்றைய நிகழ்ச்சியைச் சிறப்பித்து விட்டார்கள்

நிகழ்ச்சியை நேரில் காண முடியாத பெருமக்கள் சூம் வழியாகக் கண்டு தங்கள் கருத்துக்களைப் பகிரவும்

🙏🙏🙏🙏🙏

அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள்,வாருங்கள் படிப்போம் குழு.

வாருங்கள் தோழர்களே....நண்பர்களே





இன்று இரவு 7.30 மணிக்கு வாருங்கள் தோழர்களே,வாருங்கள் நண்பர்களே...ஒரு புத்தகம் பற்றி சிந்திக்கலாம். படைத்த தோழர் கமலாலயனும் கலந்து கொள்கின்றார்..வாருங்கள்.

 

Wednesday 13 July 2022

இன்னும் கொஞ்ச நேரம்....

                                 இன்னும் கொஞ்ச நேரம்....


இதுதான் கடைசிச்சந்திப்பு

எனத் தெரிந்திருந்தால்...

இன்னும் கொஞ்ச நேரம்

அதிகமாகப் பேசியிருக்கலாம்...


கையில் எப்போதும்

புத்தகம் வைத்திருக்கும் 

அவரிடம் அன்று அவர்

வைத்திருந்த புத்தகம்

என்ன என்று கேட்டிருக்கலாம்..


அந்தப் புத்தகத்தை

அவர் வாசித்து முடித்திருந்தால்

எதைப்பற்றியது அது எனக்

கொஞ்சம் விவாதிருக்கலாம்..


தொடர்ந்து புத்தகம் வாசிக்கும்

நீங்கள் 

உங்கள் வாழ்க்கை அனுபவத்தை

ஒரு புத்தகமாக எழுதினால்

என்ன என்று வினவியிருக்கலாம்...


அறுபதைத் தொடப்போகும் 

உங்கள் வாழ்க்கையின் பல

அனுபவங்கள் உங்களுக்கு 

மட்டுமே தெரிந்தவை...


என் வாழ்க்கையைப் போலவே

உங்கள் வாழ்க்கையிலும்

மறைக்க வேண்டிய பகுதி

சில இருக்கலாம்...

மறக்க வேண்டிய பகுதி 

சில இருக்கலாம்...

ஆனால் வாழ்க்கைப் பயணத்தில்

பலரோடும் பகிரவேண்டியவை

பல இருக்கும் நிச்சயம்...


அதைப் பகிர எழுதுகோல்

அன்றி வேற என்ன இருக்கிறது 

இன்றைய உலகில்...

எழுதுங்கள் நீங்கள்...

கணினியில் அடிக்கவோ

பதிப்பிக்கவோ

நான் உங்களுக்கு உதவுகிறேன்

என்று சொல்லியிருக்கலாம்...


மின்னல் போல அன்று 

சந்தித்து வணக்கம் இட்டு

சில சொற்கள் சொல்லி 

சட்டென மறைந்தீர்கள்..

நானும் கூட ஆற அமரக் கேட்காமல்

சரி சரி எனச்சொல்லி தலை அசைத்தேன்...

இன்னும் நூறு ஆண்டுகள்

வாழப்போவது போல 

சிரித்த முகத்தோடு 'வருகிறேன்'

என்று சொல்லிச்சென்றீர்கள் தோழரே...


திடீரென்று வந்து விழுந்த

உங்கள் இறப்பு செய்தி...

இதுதான் கடைசிச்சந்திப்பு

எனத் தெரிந்திருந்தால்...

இன்னும் கொஞ்ச நேரம்

அதிகமாகப் பேசியிருக்கலாம்...


                         வா.நேரு

                         13.07.2022




Sunday 10 July 2022

சிந்தனைக் களம் : பெரியாரும் மக்கள் தொகை நாளும்.....

             பெரியாரும் மக்கள் தொகை நாளும்

                                                  முனைவர் வா.நேரு



“அய்க்கிய நாடுகள் சபை, மக்கள் தொகை செயல்பாடுகளுக்கான நிதி’’ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி, 1987 முதல் ஜூலை 11ஆம் நாளை “மக்கள் தொகை நாள்’’ என்று அறிவித்துள்ளனர். அந்த நாளில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகள் மக்கள் தொகை அதிகரிப்பால் அவதிப்படும் நாடுகளில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு, 2022 ஜூலை 11ஆ-ம் தேதிக்கு, உலக மக்கள் தொகை நாளுக்கு UNFPA (United Nations Fund for Population Activities) அய்க்கிய நாடுகள் மக்கள் தொகை செயல்பாடுகளுக்கான நிதி அமைப்பு பெண்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளை முதன்மைப்படுத்துவது மற்றும் கோவிட்_19 கொரனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து முதன்மைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்னும் நோக்கத்தை அறிவித்திருக்கிறது.



மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்று வருகின்றபோது பெண்களின் உடல் நிலை, சுகாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளை முன்னிறுத்திச் சிந்திப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று இந்த 2022ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் அமைப்பு சொல்வதையும், தந்தை பெரியார் 1930-இல் கர்ப்பத்தடை என்னும் தலைப்பில் எழுதியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரியாரின் தொலைநோக்கு வியப்பை அளிக்கிறது.

“கர்ப்பத்தடை, அவசியத்தை விளக்குவோமாயின், பெண்ணானவள் திட சரீரமில்லாமலும் காயலாவுடனும் சரியான அமைப்பு பொருந்திய சரீரமில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்துப் பிள்ளைகளைப் பெறுவதென்பது அவளுக்கு மிக அபாயகரமானதாகும். சயரோகத்தாலும், நீரிழிவு வியாதியாலும், நெஞ்சுத் துடிப்பினாலும் பீடிக்கப்படுகின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் மிகச் சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிகவும் ஆபத்தாகும். பிரசவத்தினால் சரீர மெலிவும் பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவ சரீரமுடையவர்கள் மறுபடியும் மறுபடியும் கர்ப்பமானால் சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும்…” (‘குடியரசு’ கட்டுரை 1.-3.-1931) என்று ஆரம்பித்து தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் உடல் நலிவு, முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி அதிகம் இல்லாமல் பிள்ளை பெறுவதால் முதல் குழந்தைக்கு ஏற்படும் உடல் நலிவு, பெண்ணுக்கு சக்தி இல்லாமல் போகும் நிலைமை, ஆணும் பெண்ணும் போதிய வயது இல்லாமல் திருமணம் முடித்து குழந்தை பெறுவதால் பிறக்கும் குழந்தை நோஞ்சானாக, பலமில்லாமல் பிறக்கும் நிலைமை, பெண் ருதுவானவுடன் திருமணமாகி, உடனே கர்ப்பமாகிவிட்டால் ‘கொஞ்ச காலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம், கலவி இன்பம் அடைவதற்கு சாவகாசமில்லாமல் போய்விடும்” என்று அடுக்கடுக்காய் பேராசிரியர் வகுப்பிலே பாடம் நடத்துவதைப் போல 1930_-31களிலேயே பொதுமக்களுக்கு ‘குடிஅரசு’ பத்திரிகை மூலமாகப் பாடம் எடுத்திருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை முறை எல்லாம் இல்லாத காலம் 1930கள் என்பது. அந்தக் காலத்தில் தந்தை பெரியார் எவ்வளவு விளக்கமாகச் சொல்லி இருக்கின்றார்! தந்தை பெரியார் சொல்கிற அத்தனை நலிவுகளும், ஆப்பிரிக்க நாடுகளில் இன்றைக்கும் அப்படியே பொருந்துவதைப் பார்க்கலாம். ஏன் இந்தியாவின் வட மாநிலங்களில் கூட பெண்களுக்கு கர்ப்பத்தடை இல்லாமல் இருக்கும் நிலைமைகளைப் பார்க்க முடிகிறது.

தந்தை பெரியாரின் கருத்தினை அப்படியே உள்வாங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், ‘தவிப்பதற்கோ பிள்ளை’ என்னும் தலைப்பினிலே கர்ப்பத்தடை குறித்து கவிதையை 1933-களில் இயற்றினார்.

“தொத்துநோய், ஏழ்மை, பணக்காரர் தொல்லை

தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?

சாதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?

சந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ?”

என்னும் கவிதையின் மூலம் இந்தியாவிலேயே கர்ப்பத்தடை பற்றி, குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பாடிய முதல் கவிஞர் என்னும் வரலாற்றுப் புகழ் பெற்றார்.

பெண் உரிமைக்காக குடும்பக் கட்டுப்பாடு என்னும் கர்ப்பத்தடை பற்றிப் பேசிய தந்தை பெரியார் அதற்கான வழிமுறைகளையும் கொடுத்தார். பெண்கள் திருமணம் ஆகாமலேயே தனித்து வாழ்வதை ஊக்கப் படுத்தினார். இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் அப்படி வாழ்கின்றனர். தங்கள் தங்கள் துறைகளில் குடும்பம், பிள்ளைப்பேறு என்னும் தொல்லைகள் இல்லாமல் சாதிக்கின்றனர்.

“பெண்கள் குழந்தை பெறாவிட்டால் மனித சமூகம் விருத்தியடையாதே?’’ என்ற கேள்விக்கு, “மனித சமூகம் விருத்தியடையாவிட்டால் என்ன, மற்ற ஜீவராசிகள் விருத்தியடையட்டுமே! பெண்களை ஒடுக்கும் மனித சமூகம் விருத்தி அடைந்தால் என்ன, அடையாவிட்டால் என்ன?’’ என்று பதில் அளித்தவர் தந்தை பெரியார்.

அதைப்போல பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்று யாரும் சொல்லாத காலத்தில் சொன்னவர் தந்தை பெரியார். பெண்களை 22 வயதுவரை படிக்க வைக்க வேண்டும், அதுவரை அவர்களின் திருமணத்தைப் பற்றி பெற்றோர்கள் நினைக்கக் கூடாது என்று 1930-களில் சொன்னவர் பெரியார். இப்போதுதான் ஒன்றிய அரசு பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தப் போவதைப் பற்றி அமைச்சரவையில் முடிவு எடுத்திருக்கிறது. மத்திய அமைச்சரவை சார்பாக எடுக்கப்பட்ட இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திசம்பர் 2021-இல் அறிக்கை வெளியிட்டார். இதற்காக ஒன்றிய அரசினைப் பாராட்டுகிறோம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் சில முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து உயர்த்தக்கூடாது என்று அரைவேக்-காடுகளாய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 80, 90 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெண்களுக்கு 10, 12 வயதில் திருமணம் நடந்து கொண்டிருந்த காலத்தில் பெண்ணின் திருமணம் 22 வயதிற்குப் பிறகு நடக்க வேண்டும் என்று கூறியவர் தந்தை பெரியார். ஒரு பக்கம் மக்கள் தொகை கட்டுப்பாடு, இன்னொரு பக்கம் பெண் விடுதலை என்னும் நோக்கில் பெண்ணின் திருமண வயதைப் பற்றிச் சிந்தித்தவர் தந்தை பெரியார்.

3, 4 பெண் குழந்தைகளைப் பெற்ற பின்பும் ஆண் குழந்தை வேண்டும் என்று அடுத்த பிள்ளைக்கு முயலுவதைப் பார்க்கின்றோம். இதன்முலம் குடும்பக் கட்டுப்பாடு தகர்க்கப்படுகிறது.

உலக மக்கள் தொகை கூடிக்கொண்டே போகிறது. இன்று உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டி விட்டது. 1987இ-ல் மக்கள் தொகை நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அய்க்கிய நாடுகள் சொன்னபோது, உலக மக்கள் தொகை 500 கோடி. இன்று உலக மக்கள் தொகை 800 கோடி. மக்கள் தொகை கூடக்கூட வறுமையும் நோயும் பஞ்சமும் வளர்ந்து கொண்டே போகின்றன. ஆதலால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் குரல் எழுகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. இந்தியா மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிவிடும் என்று சொல்கின்றனர். இந்தியாவை விட சீனாவின் பரப்பளவு மூன்று மடங்கு பெரியது. மக்கள் அடர்த்தியிலும் இந்தியா முன்னணி வகிப்பது கொடுமையான ஒன்று.

மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு கிடைக்காமை, நீர் கிடைக்காமை, சுற்றுச்சூழல் மாசாகி பூமிக்கே அச்சுறுத்தல் ஏற்படும் நிலைமை, சுகாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப் பற்றாக்குறை, வீடுகள் இல்லாமல் தெருவில், சாலையோரங்களில் படுத்துத் தூங்கும் நிலைமை போன்றவை உலகில் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன.

எனவே, உலக மக்கள் தொகை நாளான ஜூலை 11, -2022ஆம் நாள் தொடங்கி இந்த ஆண்டு முழுவதும் நடைபெறுகின்ற மக்கள் தொகை விழிப்புணர்வை தந்தை பெரியாரின் கொள்கைகளோடு இணைத்துச் சொல்வோம். தந்தை பெரியாரின் ‘கர்ப்பத்தடை’ பற்றிய கருத்துகளை ஆங்கிலத்தில் அய்க்கிய நாடுகள் சபைக்கும், மற்ற இந்திய, உலக மக்களுக்கும் பல மொழிகளில் பெயர்த்துச் சொல்லும் முயற்சியும் அரசு செய்ய வேண்டும்.

நன்றி : உண்மை. மாதம் இருமுறை இதழ் .ஜீலை 01-15. 

Friday 8 July 2022

வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரை...



 

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா பெரியார் என்னும் நூல் விமர்சனக்கூட்டம் இன்று 8.07.2022 மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்,நம் பரம்பரை எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அறிவுக்கணைகளைத் தொடுத்து வெற்றிவாகை சூடும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்புச்செயலாளர் தோழர் வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.நூல் ஆசிரியர் கி.தளபதிராஜ் அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்.வாருங்கள் தோழர்களே...

Tuesday 5 July 2022

எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்

எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022

விதிமுறைகள்:
¤ சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
¤ எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.
¤ சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31, 2022.
¤ வெற்றி பெற்ற சிறுகதைகளுக்குத் தந்தை பெரியார் பிறந்தநாளான 2022 செப்டம்பர் 17 அன்று பரிசு வழங்கப்படும்.
¤ யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.
¤ எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புனை பெயர் பயன்படுத்துவோரின் உண்மைப் பெயர் வெளியிடப்படாது.
¤ கதையைத் தட்டச்சு செய்து அஞ்சல் மூலமும் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைகளை அனுப்பவும்.
¤ கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.
¤ தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தால் அச்சு வடிவிலும், கிண்டிலிலும் வெளியிடப்படும்.
¤ கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே! தொகுப்புப் புத்தகத்தின் காப்புரிமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தைச் சேர்ந்தது.
நிபந்தனைகள்:
¤ கதைகள் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி-மத ஒழிப்பு, பெண்ணுரிமை, முற்போக்குக் கருத்துடையனவாக இருக்கவேண்டும்.
¤ சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
¤ புதிதாக எழுதப்பட்ட கதைகள் எனில், இதுவரை எங்கும் (இணையதளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.
¤ 2021, 2022ஆம் ஆண்டில் ஏதேனும் இதழில் வெளியான சிறுகதை என்றால், எந்த இதழில், எப்போது வெளியானது என்று குறிப்பிட்டு சிறுகதை வெளிவந்த இதழின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
¤ கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ, போட்டியை நடத்துபவர்களுடனோ எவ்விதத்திலும் கடிதப் போக்குவரத்தோ, தொலை-பேசித் தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.
¤ நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசுகள்:
முதல் பரிசு: 5000
இரண்டாம் பரிசு: 3000
மூன்றாம் பரிசு: 2000
பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிற கதைகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 பரிசளிக்கப்படும்.
“எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி-2022” என்று தலைப்பிட்டு கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: rationalistwriters@gmail.com
அஞ்சல் முகவரி:
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

Monday 4 July 2022

பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு

 வரலாற்றுச் சிறப்புமிக்க, பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு 19.6.2022 அன்று செஞ்சியில் நடைபெற்றது. கொரோனாவால் உரிய காலத்தில் நடத்தமுடியாமல் தள்ளிப்போடப்பட்டு, இப்போது நடத்தப்பட்டது.

தொடக்க விழா

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் காலை 9:00 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது. முதலில் புதுவை குமாரின் மந்திரமா தந்திரமா நிகழ்வும், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி அவர்களின் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அடுத்து தொடக்க விழாவில், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. முனைவர் க.பொன்முடி அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.



பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம்




அடுத்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்ற, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஆர்.டி.சபாபதிமோகன் தொடக்கவுரை யாற்றினார். அதனைத் தொடர்ந்து அறிஞர் பெருமக்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உரையாற்றினர்.



உரை வீச்சு

“சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்ற தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன், “கடவுளை மற – மனிதனை நினை” என்ற தலைப்பில் முனைவர் ப.காளிமுத்து, “வெல்க திராவிடம்!” என்ற தலைப்பில் ஆ.வந்தியத்தேவன், “சமூகநீதி காப்போம்” என்ற தலைப்பில் கோ.கருணாநிதி, “பெண்ணுரிமை காப்போம்” என்ற தலைப்பில் சே.மெ.மதிவதனி, “அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மை” என்ற தலைப்பில் முனைவர் வா.நேரு, “அறிவியலும் மூடநம்பிக்கையும்” காட்சிகள் மூலம் விளக்கி டாக்டர் கணேஷ் வேலுசாமி ஆகியோர் உரையாற்றினார்கள். அதன்பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



சமுதாயத்திற்கு மிகவும் தேவையான – உடனடியாகச் செய்யப்பட வேண்டிய  13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

சரியாக மாலை 4:30 மணிக்கு மாநில மாநாடு நடைபெற்ற வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்திலிருந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி புறப்பட்டது.

விழுப்புரம் மண்டல திராவிடர் கழக செயலாளர் க.மு.தாஸ் இளம்பரிதி பேரணிக்குத் தலைமை வகித்தார். விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தோழர்கள் நால்வர் நால்வராக அணிவகுத்து மூட நம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை முழங்கியவாறு அணிவகுத்துப் புறப்பட்டனர்.

கருஞ்சட்டைப் பேரணி பெருத்ததோ – செஞ்சி சிறுத்ததோ என்கிற அளவுக்குப் பேரணி பெருவெள்ளமாக செஞ்சிக்குள் பாய்ந்தது. கட்டுப்பாட்டுடன் பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை அணிவகுத்தது செஞ்சி வாழ்பெருமக்களைச் சிந்திக்கச்செய்தது.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் – பேரணியும், அதில் இடம்பெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புக் காட்சிகளும் விழிப்பை ஏற்படுத்தின.

பேரணியின் வருகையை ஒலிபெருக்கிமூலம் அறிவித்துக் கொண்டே சென்றார் வழக்குரைஞர் அமர்சிங்.

பெண்கள் தீச்சட்டி ஏந்தி, ‘தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?’ என்று முழக்கமிட்டு வந்த காட்சி பொதுமக்களை – குறிப்பாகப் பெண்களைப் பெரிதும் ஈர்த்தது, வியப்பில் ஆழ்த்தியது, சிந்திக்கச்செய்தது.

சென்னை வழக்குரைஞர் வீரமர்த்தினி, ஒசூர் செல்வி செல்வம், திருவாரூர் செந்தமிழ்ச்செல்வி, சென்னை பசும்பொன் செந்தில்குமார், சென்னை மரகதமணி, சென்னை க.சுமதி, திருப்பத்தூர் வெண்ணிலா, முகப்பேர் செல்வி, தாம்பரம் உத்ரா, அம்பத்தூர் சரோஜா, மத்தூர் ஜான்சிராணி, ஆவடி பத்மினி, புதுச்சேரி இளவரசி, சென்னை ஆற்றலரசி, திருவள்ளூர் லோகநாயகி, ஷீப்னா முதலிய வீராங்கனைகள் தீச்சட்டி ஏந்தி முழக்கமிட்டு வீர நடை போட்டு வந்தனர்.


வீர விளையாட்டுகள்

கறம்பக்குடி முத்து தலைமையில் சுருள்வாள் வீச்சு, சிலம்பம், தீப்பந்தம் விளையாட்டு, பூசாரிகள் தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி கடவுள் சக்தியைப் பார்த்தீர்களா என்று கேலியாக அறிவூட்டினர். ஊர்வலப் பாதையெல்லாம் கடவுள் இல்லை என்று சொல்லி, தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி வந்த காட்சி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆத்தூர் சுரேஷ் முக்கியமாக அதை செய்து காட்டினார். சிறுவர்களே சூடம் கொளுத்தி கையில் ஏந்தி, நாக்கில் வைத்துக் காட்டி விளக்கினர். மூடநம்பிக்கையை விளக்கினர்.

அரிவாள் மீது ஏறி நின்று, கடவுள் இல்லை என்று முழங்கி, பேராவூரணி தோழர் நீலகண்டன் மக்கள் கூடிக் கூடி நிற்கும் இடங்களில் எல்லாம் அந்தக் காட்சியைச் செய்துகாட்டி அசத்தினார்.

அலகுகுத்தி கார் இழுத்தல்

கோவில் திருவிழாக்களில் சிறு தேரை முதுகில் அலகு குத்தி இழுத்துக்காட்டி, இதுதான் கடவுள் சக்தி என்று பேசுவதுண்டு. இது கடவுள் சக்தியால் அல்ல, இதோ கடவுள் இல்லையென்று சொல்லியபடி அம்பாசிடர் காரையே இழுத்துக்காட்டுகிறோம்’ என்று செயல்படுத்திக் காட்டினர் கமலம்பாக்கம் தேவராஜ் (திண்டிவனம்), ஜெ.பா.மாரிமுத்து (சின்ன சாட்டிரான்பாக்கம்), திண்டிவனம் சுரேஷ் ஆகியோர்.

கடவுள் மறுப்புப் பாடல்களை பாடி ஆடினர். தோழர்கள் திண்டிவனம் பன்னீர்செல்வம், ஒசூர் சித்தார்த்தன், கிருட்டினகிரி பர்கூர் ஞானசேகரன் ஆகியோர் செடல் காவடி எடுத்து வந்தனர்.

கழகக் கொடிகள் அணிவகுப்பு

பெரியார் பிஞ்சுகள், மகளிர், மாணவர் கழக, இளைஞரணியினர், பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தின் கழகக் கொடி ஏந்தி கம்பீரமாகப் பகுத்தறிவு முழக்கமிட்டனர்.

பகுத்தறிவு ஆசிரியரணியினரும், பகுத்தறிவாளர் களும் பெரியார் பொன்மொழி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர்.

சடையார்கோவில் நாராயணசாமி குழுவினர் நடத்திய பெரியார் பிஞ்சுகளின் கோலாட்டம் வெகு சிறப்பாக இருந்தது.

பாடகர் கோடையிடி கோவிந்தன், ந.அன்பரசு (துறையுண்டார் கோட்டை), கு.திலீபன் (சடையார் கோவில்), தவில் இசைக் கலைஞர் முனியாண்டி, பம்பை இசைக் கலைஞர் முத்து காளி மற்றும்

20 மாணவர்கள் (பெரியார் பிஞ்சுகள்) பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர்.

சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் மார்பளவு உருவச்சிலையுடன் ஊர்வலத்தில் தலைவர்களின் பெருமைகளை முழங்கியபடி சென்றனர்,

கடலூர், கிருட்டினகிரி, திருப்பத்தூர், திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சார்பில் பதாகைகளுடன் இளைஞர்கள், பொறுப்பாளர்கள் எழுச்சி முழக்கமிட்டபடி சென்றனர்.

புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை சிந்தனை விருந்தான கலைநிகழ்ச்சியுடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின.

கொட்டும் மழையிலும் அலகு குத்தி மூடநம்பிக்கையை முறியடித்து காரை இழுத்த திண்டிவனம் தோழர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

ஒலிபெருக்கியில் முழக்கம்

யாழ் திலீபன், மதிவதனி, பா.மணியம்மை, த.சீ.இளந்திரையன், குடந்தை சங்கர், ஆத்தூர் பழனிவேல், உரத்தநாடு மனோகரன், காரைக்குடி வைகறை, டாக்டர் காஞ்சி கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒலிபெருக்கி மூலம் விளக்கி வந்தனர்.

தாம்பரம் பெரியார் பிஞ்சு கோவன் சித்தார்த்தன் சிலம்பம் நிகழ்வு சிறப்பாக இருந்தது.

செக்கடிகுப்பம் காத்தவராயன் குழுவினர் கழகப் பாடல்களைப் பாடினர்.

தலையில் வாழைக்காயை வைத்து அரிவாளால் வெட்டிக் காட்டும் சாதனையை – விஜயேந்திரன் (பெரம்பலூர்) செய்துகாட்டினர்.

தருமபுரி இயற்கை கலைக் குழுவினர் பறையிசை நிகழ்வை பகுத்தறிவாளர் கழகக் கலைப் பிரிவு செயலாளர் மாரி கருணாநிதி தலைமையில் சிறப்பாகச் செய்தனர்.

பேரணி வழித்தடம்

மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தேசூர்பாட்டை சாலை, மாதாகோவில், சிங்கவரம் சாலை, குளத்தங்கரை, காந்தி பஜார், திருவண்ணாமலை சாலை வழியாக மாநாட்டு மேடையில் முடிவடைந்தது.

நிறைவு விழா

மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டம் மழையின் காரணமா திறந்த வெளியில் நடக்காமல் வள்ளி அண்ணாமலை திருமண அரங்கத்தில் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி சிரிப்பும், விழிப்பும் ஊட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. வரவேற்புரையை விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை. திருநாவுக்கரசு ஆற்றினார்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. கே.எஸ்.மஸ்தான் வாழ்த்துரை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சே.கோபண்ணா, விழுப்புரம் மாவட்டக் கழக தலைவர் ப.சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

படங்களைத் திறந்துவைத்து

தலைவர்கள் உரை

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள் தந்தை பெரியார் படத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் படத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிஞர் அண்ணா படத்தையும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் படத்தையும், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் படங்களை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சாவித்திரி புலே படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

செஞ்சி மஸ்தான் அவர்களின் சிறப்பான பங்களிப்பு

பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டை செஞ்சியில் நடத்தினால், அதைச் சிறப்பாக நடத்தித் தருவேன் என்று உறுதியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், சொன்னவாறே சாதித்துக் காட்டினார். மாநாடு இவ்வளவு சிறப்பாகஅமைய அவரது பங்களிப்பு மகத்தானது.

ஆசிரியரின் நிறைவுரை

மாநாட்டு நிறைவுரையை ஆசிரியர் வழங்கினார். மாநாடு சிறக்கப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார். இணைப்புரையை திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்க, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் நன்றி கூற மாநாடு சரித்திர சாதனை படைத்து நிறைவடைந்தது.


நன்றி: உண்மை ஜீலை 1-15,2022. அய்யா மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரையில் ஒரு பகுதி

Friday 1 July 2022

'எண்ணம் பிறந்த மின்னல்' நூல் மதிப்புரை...


'எண்ணம் பிறந்த மின்னல்' நூல் மதிப்புரை இன்று...

பகுத்தறிவு எழுத்துகள் காலைத்தை கடந்து நிற்பவை.எதிர்காலத்திற்கும் பயன்படும் நோக்கில் அமைந்தவை. 'மெய்ப்பொருள் காணும் அறிவை' வாசிக்கும் வாசிகனுக்கு கடத்தும் வல்லமை மிக்கவை. பகுத்தறிவாளர்கள் எழுதிய நூல்கள் அணி வகுக்கப் போகிறது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30.க்கு...வாருங்கள் தோழர்களே,தோழியர்களே...இன்று முதல் நிகழ்வு...