Tuesday 30 May 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(14)....முனைவர் வா.நேரு

 


பள்ளிக்கூடத்துக்கு மின்சாரம் கிடைக்க விவசாயிகளைப் பாருங்கள்…


நல்ல செயல்களுக்காகக் நன்கொடைகள்,உதவி பெறுவதில் தவறு ஒன்றுமில்லை.மறைந்த எங்கள் கல்லூரியின்(திருச்செந்தூர் ஆதித்தனார்) முன்னாள் முதல்வர் டாக்டர் திரு.இரா.கனகசபாபதி சார் அவர்கள் அடிக்கடி சொல்வார்.” நல்ல காரியங்களுக்கு பணம் கொடுக்க நிறையப் பேர் இருக்கிறார்கள்.கொடுக்கும் பணம்,எதற்குக் கொடுக்கிறார்களோ அந்தப் பொதுக்காரியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதியாகத் தெரிந்தால் அள்ளிக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள் “ என்று சொல்வார்.

முதன் முதலாக தான் பணி செய்த பண்ணக்காடு பள்ளிக்கூடத்தில்,மாணவர்களுக்காக தனிப்பட்ட ஒருவரிடம் கேட்க,விலை உயர்ந்த டேபிள் டென்னிஸ் போர்டும்,விளையாட்டுப் பொருட்களும் அவர் கொடுக்க,அப்போது முதலே கேட்பதில் ஒன்றும் தவறில்லை என்று எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள் இருந்திருக்கிறார்.தனக்காக என எந்த நிலையிலும் கேட்காத அவர்,மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த அவர்,ஊழல் பேர்வழிகள்,சட்டத்தை மீறி நடப்பவர்கள் அவரைக் கண்டு பயந்து நடுங்கும் வண்ணமே தனது அரசுப்பணியை நிறைவேற்றி முடித்தவர் என்றாலும்,தனது பள்ளி மாணவ,மாணவிகளுக்காக பணி முழுக்கக் கேட்டிருக்கின்றார்.

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள்,” மதிய உணவுத் திட்டம் நல்ல திட்டம்தான்.ஆனால் அந்தத் திட்டத்தை அமுல்படுத்தப் பணம் வேண்டுமே,என்ன செய்வீர்கள் ?” என மற்றவர்கள் கேட்டபோது “ மடிப்பிச்சை எடுத்தாவது ,எனது மாகாணப் பிள்ளைகளைப் படிக்கவைப்பேன்” என்று சொன்னதுபோல எனது தலைமை ஆசிரியரும் தனது பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல அலுவலங்களை ,தனிப்பட்ட கொடை உள்ளம் கொண்டோரை நாடி இருக்கின்றார்.அவர்களின் உதவிகளைத் தனது மாணவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தி இருக்கின்றார்.அவர் வேலை பார்த்த அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் இந்தச் செயலை முனைப்பாகச் செய்து முடித்திருக்கின்றார்.திகைப்பாக இருக்கிறது.இவ்வளவு பெரிய உதவிகளைச் செய்தார்களா? தனிப்பட்டவர்கள் என்று… .ஆமாம்,செய்திருக்கிறார்கள்,உதவி இருக்கிறார்கள் என்பது கடந்து கால வரலாறு.அப்படி சிறுகுடி என்னும் ஊரில் தான் செய்த சில செயல்களைப் பகிர்ந்து கொள்கின்றார் எனது தலைமை ஆசிரியர்…

“ தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று நத்தம் அருகில் உள்ள சிறுகுடி என்னும் ஊருக்குப் போனேன்.அரசுப் பள்ளிக்கு ஊரிலிருந்து தள்ளிப் போகணும். நம்ம ஊர்( சாப்டூர் ) மாதிரி.பள்ளிக்கூடம் மலை மேலே இருக்கிறது.நன்றாக இருக்கும். சூழல் மிக நன்றாக இருக்கும்.

(திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள இந்த ஊரைப் பற்றி நிறைய செய்திகள் இணையத்தில் கிடைக்கின்றன.சிறுகுடி என்னும் பெயர் தாங்கிய 4 ஊர்கள் இருப்பதாக இணையதளத்தில் செய்தி கிடைக்கிறது.சிறுகுடி நலம் விரும்பிகள் என்னும் முக நூல் பக்கத்தில் இந்த ஊரின் அழகிய,எழிலான தோற்றம் காணக் கிடைக்கிறது.இந்த ஊருக்கு நான் சென்றதில்லை.ஒரு நாள் சென்று வரவேண்டும்)

சிறுகுடியில் அரசுப் பள்ளி கட்டுவதற்காக அந்தக் காலத்தில் ஒருவர் 5 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.அரசாங்கம் கட்டிடம் கட்டியிருக்கிறார்கள்.நல்ல கேணி.நல்ல அருமையான தண்ணீர்.அந்தக் காலத்திலேயே டாய்லெட் எல்லாம் மிக நன்றாகக் கட்டிக் கொடுத்திருந்தார்கள்.

பள்ளியில் எல்லா வசதியும் இருக்கிறது.ஆனால் மின்சாரம் இல்லை.ஏன் இல்லை என்று ஆராய்ந்தபோது,மலை மேலே பள்ளிக்கூடம் இருந்ததனால்,7 மின்சார போஸ்ட் நட்டால்தான் அங்கு மின்சாரம் வரும்.இதுதான் அங்கு நிலைமை.அத்தோடு பள்ளியில் மின்சாரம் வந்தால் அதைப் பயன்படுத்துவதற்கு உரிய வயரிங்கும் செய்யப்படவில்லை.

நான்  என்ன செய்தேன் என்றால்,முதலில் வயரிங் செய்யவேண்டுமே,அதற்குப் பணம் வேண்டுமே…உள்ளூர்க்காரர் ஒருவர் மதுரையில் பெரிய ஜவுளிக்கடை வைத்திருக்கிறார்.அவரது வீடு சிறுகுடியில்.ஊரில் மலேசியாவுக்குப் போய் வாழ்ந்து சம்பாரித்து வந்தவர்கள் அதிகம்.அதில் இவரும் ஒருவர்.அவரைப் போய் வீட்டில் பார்த்தேன்.”சார்,இப்படி இருக்கிறது,லைட் இருந்தால்  நைட் ஸ்ட்டி எல்லாம் வைத்து மாணவர்களைப் படிக்கவைக்கலாம் “ என்றேன்.

“யாரும் வந்து கேக்கலைங்க..நீங்கதான் இப்ப வந்து கேக்குறீங்க..எது வேணுமின்னாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.நாளைக்கே ஆள் அனுப்புகிறேன்.எத்தனை டியூப் லைட் ,பேன் வேணுமோ அத்தனையும் வாங்கிக் கொள்ளுங்கள்.” என்று சொல்லிவிட்டார்.அதனைப் போலவே ஆட்களை அனுப்பினார்.அந்த ஆட்கள் பொருட்களோடு வந்து,பள்ளிக்கூடம் முழுவதிற்கும் வயரிங் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள். எந்தந்த இடத்தில் லைட் மாட்டவேண்டுமோ,பேன் மாட்ட வேண்டுமோ மாட்டிக் கொடுத்துவிட்டார்கள்.இப்போது கரண்ட் வாங்கவேண்டும்.

 சிறுகுடியில் மின் இணைப்பு வேண்டுமென்றால் நத்தத்திற்குத்தான் வரவேண்டும்.நத்தம் ஈ.பி.(மின்சார) ஆபிசுக்குப் போய் இன்ஜினியரைப்  பார்த்தேன்.அவரைப் பார்த்து ,” சார்,இப்படி பள்ளிக்கூடத்திற்கு வயரிங் பண்ணி விட்டோம்.கொஞ்சம் எங்களுக்கு கரண்ட் சர்வீஸ் வேண்டும் “ என்று கேட்டேன்.

உடனே அந்த EB இன்ஜினியர் அவங்க ஆட்களைக் கூப்பிட்டுக்  கேட்கிறார்.” என்னய்யா,பள்ளிக்கூடத்துக்கு கரண்ட் வேணும்ன்னு சாரே வந்து கேட்கிறாரு,கொடுத்துரலாமா” என்றவுடனே அவர்கள் “ சார்,கொடுக்கலாம் சார்,ஆனா 7 போஸ்ட் வேணும் சார்,அவ்வளவு தூரத்தில் இருக்கு “ என்றார்கள்.(இந்த போட்ஸ் ஊன்ற வேண்டும் என்ற பிரச்சனை கரண்ட் இணைப்பு கொடுப்பதற்கு மட்டுமல்ல,புதுத் தொலைபேசி வேண்டும் என்றாலும் பிரச்சனை இருந்தது என்பது இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.கையில் செல்போன் வைத்துக்கொண்டு டவர் சரியாகக் கிடைக்கவில்லை,கிடைக்கவில்லை என்று பதறும் இக் காலத்தலைமுறைக்கு இந்த போஸ்ட் ஊன்றி தொலைபேசி இணைப்புகள் கொடுத்த கதையையும் அதற்காக பல ஆண்டுகள் நமக்கு முந்தைய தலைமுறை காத்துக்கிடந்த கதையை எல்லாம் சொல்லவேண்டும்).

 

அந்த இன்ஜினியர்,” ஓகோ,அப்படியா “ என்றார். என்னைப் பார்த்து “7 போஸ்டுக்கு நீங்கள் எல்லாம் பணம் கட்டமுடியாது.தாங்காது. நீங்க ஒண்ணு பண்ணுங்க சார், வழியில் இருக்கிற இரண்டு விவசாயிகளைப் பார்த்து சர்வீஸ் கேட்கச்சொல்லுங்க,எழுதிப் போடச்சொல்லுங்க,அதோடு இதையும் சேர்த்து இணைத்து விட்டு விடுகின்றேன் “ என்று சொன்னார். அதே மாதிரி பள்ளிக்கு வரும் வழியில் இருக்கும் இரண்டு காட்டுக்காரர்களைப் பார்த்து பேசி,மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கச்சொன்னோம்.அவர்களும் விண்ணப்பித்தார்கள்.அந்த இன்ஜினியர் சொன்னமாதிரி மின்சார இணைப்பு பள்ளிக்கூடத்திற்கு கொடுத்து விட்டார்.

                              (தொடரும்)

Friday 26 May 2023

காயங்கள் சில....

 

மனதில் விழுந்த

காயங்கள் சில

காயாமல் அப்படியே

இருக்கின்றன…

 

சில காயங்கள்

உறவுகளால்..

சில காயங்கள்

நட்புகளால்…

 

எந்த ஒப்பீடும் எனக்கில்லை

எவரும் என்னைவிட

உயர்ந்தவர் என்றோ

எவரும் என்னைவிட

கீழானவர் என்றோ

எண்ணாத மனத்தை

நான் கற்ற பெரியாரியல்

ஆழமாகவே பதித்திருப்பதால்

எந்த ஒப்பீடும் எனக்கில்லை…

 

 எவர் மீதும் பொறாமையும்

எனக்கில்லை…

அவரவர்க்கு வாய்த்த

வாழ்க்கை அவரவர்க்கு..

வானில் மின்னும்

மின்மினிப்பூச்சிகள்

கண நேரத்தில்

கட்டாந்தரையில் விழுந்து

துடிப்பதைப் பார்த்திருக்கிறேன்…

ஊர்ந்து செல்லும் எறும்புகள்போல

உற்சாகமாய் உழைப்பதே

வாழ்க்கை என

வாழ்வோரையும் பார்த்திருக்கிறேன்

 

என்னால் காயங்கள்

மனதில் எவருக்கும்

ஏற்பட்டு விடுதல் கூடாது

என்பதாகவே என் வாழ்க்கை…

அடுத்தடுத்த வேலைகள்

அடுக்கடுக்காக இருக்கும்போது

அடுத்தவர் பற்றிச் சிந்திக்கவே

நேரம் இல்லை எனக்கு…

இதில் ஒப்பிடவும் பொறாமைப்படவும்

நேரமுண்டோ எனக்கு…

 

                   வா.நேரு

                   27.05.2023

Wednesday 24 May 2023

திராவிட இயக்கமும் உயர் கல்வியும் முனைவர்.வா. நேரு

 திராவிடப் பொழில் இதழில் வெளிவந்திருக்கும்  'திராவிட இயக்கமும் உயர் கல்வியும்'  என்னும் எனது கட்டுரை இந்த இணைப்பில் இருக்கிறது.வாய்ப்பு உள்ளவர்கள் படித்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

https://dravidapozhil.pmu.edu/current-issue.aspx

Tuesday 23 May 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(13)....முனைவர்.வா.நேரு

   பேசுடா,எழுதுடா,பேசுடா,எழுதுடா …

 தெற்குத் தெரு என்னும் ஊரில் தான் பணியாற்றிய அனுபவத்தை என் தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள் தொடர்ந்தார்.

“ அத்தோடு தெற்குத்தெரு ஊரில் நான் பணியாற்றிய நான்கு வருட காலத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் ஆங்கிலத்தில் பேசவைத்தேன்.சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதவும் வைத்தேன்.11-ஆம் வகுப்பு வரும்போது அவனாக ஆங்கிலத்தில் எழுதிவிடுவான்.தலைமை ஆசிரியர் ரொம்ப சீனியர் மேன்.அவர் வந்து பார்த்துவிட்டு,அவரும் ஆங்கிலப்பாடம் எடுத்தார். “எப்படி சார்,இப்படி இவனுகளை சொந்தமாக எழுத வைக்க முடியுது ?” என்றார்.

“ சார் ,முதலில் நாம் அவனிடம் இங்கிலீசில் பேசணும்.அவன் என்ன சொன்னாலும்,சொல்வதை நாம் இங்கிலீசில் எழுதிக் காட்டணும். பேசுடா,எழுதுடா,பேசுடா,எழுதுடா என்று அவன் தப்பு பண்ணினாலும் மீண்டும் மீண்டும் ஆங்கிலத்தில் பேசு,ஆங்கிலத்தில் எழுது என்று அனுமதிக்கவேண்டும் “ என்றேன்

தெற்குத் தெரு விவசாய வளம் உள்ள பகுதி ஆனால் எல்லா இடத்தையும் விட மிகவும் பின் தங்கிய பகுதி அந்தப் பகுதியாகும்.அங்கேயே ஆங்கிலத்தில் பேசவும்,எழுதவும் மாணவர்களை வைக்க முடியும் என்றால்,ஏன் மற்ற பகுதிகளில் முடியாது.தெற்குத்தெரு கிராமத்து மக்களுக்கு ,அவர்களின் பிள்ளைகளின் படிப்பைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி.மட்டற்ற மகிழ்ச்சி.

அப்போது என்ன செய்தார்கள் என்றால்,அரசாங்கம் புதுக் கணிதத் திட்டத்தை பாடத்திட்டத்தில் கொண்டு வருகின்றார்கள்.அந்தப் புதுக்கணிதத்தை சொல்லிக் கொடுக்க பயிற்சி ஆசிரியராகப் போட்டு விட்டார்கள்.6 மாதம் உசிலம்பட்டியில் நான் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்,அதாவது துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கெல்லாம் பயிற்சி கொடுக்க வேண்டும்.நான் போய் அங்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் எனக்குப் பதிலாக கணக்கும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுப்பதற்கு தெற்குத் தெரு பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கவில்லை…

தெற்குத் தெரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கதி என்னாவது? அதனால் நான் என்ன செய்தேன் என்றால் ,சனி-ஞாயிறு எனக்கு உசிலம்பட்டியில் விடுமுறை.ஆதலால் சனி,ஞாயிறு இரண்டு நாள் தெற்குத் தெருவுக்கு வந்து ,அங்கேயே இருந்து ,பள்ளிக்கு பையன்களை வரச்சொல்லி பாடத்தை நடத்திவிட்டேன்.குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. பையன்களுக்கு மிக நன்றாக பாடம் எடுத்துவிட்டேன்.

மாவட்டக் கல்வி அதிகாரி(DEO) எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலப்பாடம்,கணக்குப் பாடம் யார் பாடம் எடுக்கிறார்கள் என்று கேட்க,தலைமை ஆசிரியர் ‘வீரிசெட்டி வந்து ,சனி-ஞாயிறுகளில் பாடம் எடுத்து,பாடங்களை முடித்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்.’அவருக்கு 6 மாதம் டூட்டி உசிலம்பட்டியில் போட்டு விட்டால்,அங்கேயே இருக்க வேண்டியதுதானே’ என்று சொன்னார் என்று சொன்னார்கள்.

தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லவில்லை.எனக்குப் பதிலாக ஆசிரியர் போட்டிருந்தால் நான் வரப்போவதில்லை. வேறு ஆசிரியர் போடவில்லை.6 மாதம் கணக்கும்,ஆங்கிலமும் நடத்தவில்லை என்றால் மாணவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? நானாகத்தான்(வாலண்டிரியாக) போய் வகுப்புகள் எடுத்தேன்..” என்று குறிப்பிட்டார்.

 நான் படித்த “ கரும் பலகைக்கு அப்பால்என்னும் புத்தகத்தை எனது தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன்.மதுரையைச்சார்ந்த ஆசிரியர் ‘கல கல வகுப்பறை சிவா ‘ என்பவர் எழுதிய புத்தகம் இது.இன்றைக்கு ஆசிரியராக இருப்பவர் எழுதிய புத்தகம். கலகல வகுப்பறை சிவா தனது முன்னோட்டத்தில் ' ஆசிரியர்களுக்கான ஏராளமான திரைப்படங்கள் உலகெங்கும் எடுக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன.உலகமெங்கும் ஆசிரியர்கள்,குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் அவற்றிலிருந்து அவர்கள் எவ்வாறு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை இப்படங்கள் வாயிலாக அறிய முடியும்.அத்தகைய படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் நல்ல பலன்களைத்தரும் " எனக்குறிப்பிடுவார். ஆமாம், அவர் பார்த்த ,ரசித்த ஆசிரியர்கள்,மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த 12 திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள்தான் அந்தப் புத்தகம்.

 கரும்பலகைக்கு அப்பால், தி இந்து தமிழ் பத்திரிக்கையில் வரும் தொடர் கட்டுரைத் தலைப்பு. 2011-ல் வெளியான "Beyond the Blackboard " என்னும் படத்தைப் பற்றியதுதான் முதல் கட்டுரை. இதுதான் புத்தகத்தின் தலைப்பும் கூட.சில ஆசிரியர்கள், நானே கூட எனது கல்லூரிக் காலத்தில் சந்தித்ததுண்டு. கைகளில் நோட்ஸ்களோடு  வருவார்கள், வருகைப் பதிவேட்டை எடுப்பார்கள். பின்பு எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு 40,45 நிமிடம் கரும்பலகையில் எழுதி மட்டும் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள். சில விளக்கங்கள் சொல்வார்கள், ஆனால் அது உருப்படியாக இருக்காது.பாடத்தை விளக்கிச்சொல்லவேண்டும்,மாணவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதனை அறியவேண்டும் என்னும் நோக்கம் இருக்காது. இன்றைக்கும் பல ஆசிரியர்கள் அப்படி இருக்கக்கூடும்.

 பாடங்களைப் புரிவது, மாணவர்களைப் புரிவது, மாணவர்களின் வீட்டுச்சூழலைப் புரிவது எனப் பல புரிதல்களோடு வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரால் மட்டுமே , காலம் கடந்து நிற்கும் ஆசிரியராக நிற்கமுடியும். "டேசி பெஸ் என்ற ஆசிரியை தனது பள்ளி அனுபவங்கள் குறித்து எழுதிய 'Nobody Don't Love Nobody " என்ற நூலில் குறிப்பிட்டுள்ள உண்மைச்சம்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் " Beyond the Blackboard " என்று நூலாசிரியர் குறிப்பிட்டு இருப்பார்..

 கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கனவுகளோடு ஆசிரியராகப்போகும் டேசி பெஸ், எதார்த்தங்களால் உடைந்து போவதும், மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்குவதும் பின்பு சூழலை உள்வாங்கிக்கொண்டு மிகச்சிறந்த ஆசிரியராக, பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களும், மாணவிகளும் நேசிக்கும் ஆசிரியராக எப்படி மாறுகிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதை என்பதனை நூலாசிரியர் குறிப்பிட்டு விவரிப்பார்." இயல்பான கலந்துரையாடலே கற்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது " " வகுப்பறை மாற்றங்களை சந்திக்கும்போது சுற்றுப்புறமும் மாறுகிறது " (பக்கம் 12), "ஆசிரியர் என்ற பெருமிதத்தை பார்ப்பவர்க்கும் வழங்குவதே, Beyond the Blackboard "  திரைப்படம் எனக்குறிப்பிடுவார்.

                       குறைபாடு உள்ள பிராட் என்னும் குழந்தை , பின்பு அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு அதனை மற்றவர்களுக்கும் விளக்கி, அந்தக் குறைபாட்டை வைத்துக்கொண்டே படித்து பின்பு  மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி மாறுகின்றார் என்பதனை விளக்கும் ஆங்கில மொழியில் வந்த " Front of the Class " என்னும் திரைப்படத்தை அடுத்த கட்டுரை விவரிக்கும். "குழந்தைகளிடம் காணப்படும் குறைபாடுகள் குறித்த தெளிவான அறிதல்கள் ஆசிரியருக்கு மிகவும் அவசியம்" என்று குறிப்பிடுவார்.

 

மலையாள மொழியில் 2012 எடுக்கப்பட்ட " Last Bench " என்னும் படம் பற்றியது அடுத்த கட்டுரை. " ஆசிரியர்களும்,பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதோடு மட்டுமல்லாமல் முன் மாதிரியாக இருக்கவேண்டும் .(பக்கம் 28 ).என்பதனை கடைசி பெஞ்சில் உட்காருகிற, படிக்காத மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றியதுஇன்னும் பல திரைப்படங்களைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது.               

              ஒவ்வொரு திரைப்படத்தினையும் தன்னுடைய ஆசிரியர் அனுபவத்தோடு இணைத்து, இன்றைய சூழலில் இருக்கும் சமூகச்சூழலையும் சுட்டிக்காட்டி இந்த நூலை நூலாசிரியர் படைத்திருக்கின்றார் என்பது இந்த நூலில் சிறப்பு.

 இந்த நூலை நான் படித்துவிட்டு எனது  தலைமை ஆசிரியர்  அவர்களிடம் கொடுத்தேன். அவர் இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டு ," எல்லா வாத்தியார்களும் இதனைக் கட்டாயம் படிக்கவேண்டும்,.படிக்கவேண்டும் " என்றார்.“இந்தப் படங்களை எல்லாம் நான் பார்க்க இயலாதே” என்றார் அவர். . ‘லேப் டாப்பும் இணையதளமும் இருந்தால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்’ என்றேன்  நான். “ .கல்லூரிக் காலங்களில் தன் ஆங்கில மொழி அறிவு வளர்ந்ததற்கு ஆங்கிலப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்ததும் ஒரு காரணம் “என்றார். “புகழ் பெற்ற ஆங்கிலப்படங்களை எல்லாம் பார்ப்பதை ஒருகாலத்தில் வழக்கமாக நான் வைத்திருந்தேன் “என்றார்.அவருடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு அருமையாக அமைந்ததற்கு அவரது ஆங்கிலப்படங்களைப் பார்க்கும் பழக்கமும் ஒரு காரணம் என்று நினைத்துக்கொண்டேன்.

                            (தொடரும்)

 

 

 

 

 

Monday 22 May 2023

நினைவுகளின் அலை

 

கரையைத் தொடும்

கடல் அலைகள் போல

அம்மா,உங்கள்

நினைவுகளின் அலை

நேற்று முதல்…

 

அநீதி கண்டு, அம்மா

நீங்கள் எப்போதும்

அமைதியாக இருந்ததில்லை..

எதிர்ப்புக்குரலை ஏதேனும்

ஒரு வடிவத்தில்

நிகழ்த்திக் கொண்டே

இருந்தீர்கள்….

 

ஒரு சிறிய கிராமத்தில்

ஆசிரியராக நீங்கள்…

பிற்படுத்தப்பட்டோர்

முழுமையாக வசிக்கும் ஊராக

அந்த ஊர்…

பக்கத்து கிராமத்தில்

தாழ்த்தப்பட்டோர் முழுமையாக…

இரண்டு ஊர்ப்பிள்ளைகளும்

படிக்கும் பள்ளியாய் உங்கள் பள்ளி..


சென்ற முதல் நாள்

பி.சி.குழந்தைகள்

எஸ்.சி.குழந்தைகளைத் தள்ளி

வைக்கும் கொடுமை கண்டு

எல்லோரும் ஒன்றாகப் படியுங்கள்…

ஒன்றாக உட்காருங்கள் என்று

சமப்படுத்தி பாடம் நடத்திய வேளையில்..

 

ஊர்க்காரர்கள் சிலர் வந்து

நாங்கள் எல்லாம் உசந்த சாதி !

எங்கள் பிள்ளைகள்

அந்தப் பிள்ளைகளோடு உட்காராது

என்று சொல்லி வாக்குவாதம்

செய்தபோது…

 

எல்லோரும் ஒன்றாகத்தான்

அமர்ந்து படிப்பார்கள்…

உனக்குப் பிடிக்கவில்லையெனில்

உன் பிள்ளைகளின்

டிசியை வாங்கிக் கொண்டு

வெளியில் போ எனச்சொன்ன

நெஞ்சுரமும் நேர்மையும்…

 

ஒடுக்கப்பட்டோராகப் பிறக்கவில்லை..

ஆனால் எல்லோரும் ஒன்று

எனும் எண்ணத்தை என் மனதில்

திராவிட இயக்கம் அழுத்தமாகப்

பதித்திருக்கிறது என்பதனை

சொற்களால் மட்டுமல்ல…

செயல்களாலும் காட்டிய

எங்கள் அம்மாவே..

 

உங்கள் நினைவு நாளில்

அடுக்கடுக்காக நினைவுகள்…

சாதி என்னும் இழிவை

அழித்தொழிக்கும் பணியில்

உங்கள் வழியில் நாங்கள்…

 

                      வா.நேரு

                       23.05.2023