Thursday 20 October 2022

திராவிடப்பொழில் (ஜீலை-செப்டம்பர் 2022) இதழின் ஆய்வுக்கூட்டம்....




பெரியார் பன்னாட்டு அமைப்பு ,தந்தை பெரியாரின் கொள்கைகளை ,தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலோடு உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றது.பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாக திராவிடப்பொழில் (ஜீலை-செப்டம்பர் 2022) இதழின் ஆய்வுக்கூட்டம் 22.10.2022 சனிக்கிழமை இந்திய நேரம் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.தோழர்.கோதை ஜெயராஜ் அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கின்றார். தமிழ் ஆய்வாளர்,தமிழ் உலகம் நன்றாக அறிந்த,மதிப்பிற்குரிய முனைவர் சுபாஷினி அவர்களின் கட்டுரையை அமெரிக்காவில் இருக்கும் எழுத்தாளர்,சிறந்த பேச்சாளர் தோழர்.ஜெயமாறன் அவர்கள் பேச இருக்கின்றார்.சொ.நே.அன்புமணி கல்வி பற்றிய எழுதிய கட்டுரையைப் பற்றி பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பேச இருக்கின்றார். இளைஞர்களைத் தட்டிக் கொடுத்துப் பாரட்டி,அவர்களைத் தன் அன்பாலும் அணுகுமுறையாலும் ஈர்ப்பதில் வல்லவர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.அவரின் உரையும் இருக்கிறது. திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் மானமிகு வீ.குமரேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றவும், ஏற்புரையை கட்டுரையாளர்கள் முனைவர் சுபாஷினி அவர்களும்,சொ.நே.அன்புமணியும் கொடுக்க இருக்கின்றார்கள். வாருங்கள் நண்பர்களே,தோழர்களே...உங்கள் வருகையால் நிகழ்வு இன்னும் சிறக்கட்டும்...

Tuesday 18 October 2022

தேரியாயணம் நாவல்.... நூல் மதிப்புரை

 








நன்றி : வல்லினச்சிறகுகள் செப்டம்பர் 2022


வல்லினச்சிறகுகள் இதழை முழுமையாகப் படிக்க,இதழில் என் கட்டுரையைப் படிக்க கீழே சொடுக்குங்கள்











Monday 10 October 2022

சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி 'நகைச்சுவை நாவல் அட்லண்டா நகரில் வெளியீடு

எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி 'நகைச்சுவை நாவல் அமெரிக்காவில் உள்ள அட்லண்டா நகரில் நேற்று 9.10.2022 அன்று திருமிகு.முனைவர் வெ.உதயகுமார் அவர்கள் வெளியிட திருமிகு.கண்ணப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார். வல்லினச்சிறகுகள்-மின் இதழின் நிறுவனர்,கவிஞர் தோழர் அகன் அவர்கள் நூலைப்பற்றி அறிமுகப்படுத்துகிறார்.ஒரு மாணவியின் முதல் நாவல் என்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்து ,அயல்நாட்டிற்கு நூலைச்சுமந்து சென்று வெளியீடும் நடத்தியிருக்கும் அன்புத்தோழர் அகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும். வல்லினச்சிறகுகள் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் இராஜி இராமச்சந்திரன்,அமெரிக்காவில் இருக்கும் மதுரையின் மாபெரும் சொத்து,தன் பேச்சால் கேட்கும் எவரையும் கட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்த சொற்பெருக்காளர், பன்முக ஆற்றலாளர்,எழுத்தாளர் ஜெயாமாறன்,புதுக்கோட்டை கவிஞர்  கிரேஸ் பிரதிபா,கலந்து கொண்டு முக நூலில் பகிர்ந்த திருமிகு.சுவாமிநாதன் என நம் இலக்கியச்சொந்தங்கள் எல்லாம் இணைந்து நடத்திய விழாவில் அறிவுமதியின் நாவலும் வெளியிடப்பட்டிருக்கிறது. நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்...வா.நேரு. 

https://m.facebook.com/groups/atlantatamilmakkal/permalink/5466670756779449/?mibextid=fBA1Bh 









Saturday 8 October 2022

சிவப்பு நிறத் திரவம்....சிறுகதை....வா.நேரு

                                        சிவப்பு நிறத் திரவம்....சிறுகதை

                                          (வா.நேரு)


திருவனந்தபுரம் வியப்பை ஊட்டும் ஊராக இருந்தது. மேடும் பள்ளமுமாய் இருக்கும் சாலைகள்,எவ்வளவு மழை பெய்தாலும் சாலையில் தேங்கி நிற்காமல் கண நேரத்தில் ஓடி விடும் மழை நீர்.தமிழில் நாம் பேசினாலும் அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு ,கடைகளில் பொருட்களை எடுத்துக்கொடுக்கும் நேர்த்தி என குமணனுக்கு வியப்பாகவே இருந்தது. இன்றோடு திருவனந்தபுரத்திற்கு வந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் குமணன் பயிற்சி எடுக்கும் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தின் பயிற்சி நிலையம் இருந்தது.குமணனோடு அவனது ஊரைச்சார்ந்த மூன்று அதிகாரிகளும் அந்தப் பயிற்சி நிலையத்திற்கு வந்திருந்தனர்.


பயிற்சி நிலையத்தில் ஒரே அறையில் தங்கியிருந்த நால்வரும், காலையில் பயிற்சி,இரவில் மறு நாள் பயிற்சிக்கான சில வேலைகள் என்று தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தது.அன்று சனிக்கிழமை மாலை. மறு நாள் விடுமுறை. இன்னும் ஒரு சில நாளில் பயிற்சி முடிவடைய இருந்த நிலையில் இரவு உணவுக்கு முன் அறையில் கூடியிருந்தனர். குமணினின் நண்பன் நடராஜன் மெல்ல ஒரு பையில் இருந்த அந்தப் பாட்டிலை எடுத்து வெளியில் வைத்தான். நாம் இந்த நாளை இனிமையாகக் கொண்டாடப்போகிறோம். இதனைச்சாப்பிட்டு விட்டு இரவு சாப்பாட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட்டு , நாலு கண்ணாடிக் குவளைகளில் அந்த மதுவை பாதி,பாதியாய் ஊற்றினான்.

அவன் ஊற்றுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த குமணன் அந்த இடத்தை விட்டு வெளியில் செல்ல நினைத்து எழுந்தான்.

குமணன் கையைப் பிடித்த நடராசன்'உட்காருங்கள்: நண்பரே,இது வெறுமனே ஒரு நட்பின் பரிமாற்றம். கொஞ்சமாகக் கூட குடியுங்கள்.தப்பில்லை.வெளியில் போகவேண்டாம்' என்றான்.

குமணன் ' இல்லை நடராசன்,எனக்கு இது பிடிக்காது,நீங்களும் குடிக்கக் கூடாது என்று விரும்புவன் நான் .இந்தப் பழக்கம் கொடுமையானது " என்ற போது

கடகடவென சிரித்த் நடராசன் ' என்னங்க, சின்னப் பிள்ளைகள் எல்லாம் குடிக்கிறது. நீங்க முக நூலில் எல்லாம் பார்ப்பது இல்லையா ,இவ்வளவு வயதாகிறது,குடிப்பது பிடிக்காது,குடிக்க மாட்டேன்  என்று சொல்கிறீர்கள் " என்றான்.

அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்த குரு ,சிறிய புன்னகையோடு ' மாமா,இதுவெல்லாம் ஒரு உணவுப் பழக்கம் மாமா,பழகாத வரைக்கும் ஒரு மாதிரியா இருக்கும்,பழகிவிட்டால் உங்களுக்கே கொஞ்ச நேரம் அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கும். நாற்பது வயதாகிறது உங்களுக்கு,இந்த ஊரில் ய நமக்குத் தெரிந்தவர்கள்.யாரும் கிடையாது. நம்மைக் கண்காணிப்பவர்கள் யாரும் இல்லை.நாம் தான் இங்கு இராஜா,கொஞ்சமாக கம்பெனி கொடுங்கள் ,வாங்க ' என்றான்.


பேசாமல் இருந்த குமணன் மனதிற்குள் தன்னுடைய இளமைக் கால நண்பன் இராமசாமி நினைவு ஓடியது.


குமணனோடு 1- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் இராமசாமி.எப்போதும் துறு துறுவென இருப்பான். 6-ம் வகுப்பு படிக்கும்போது கபடி விளையாட்டு விளையாட ஆரம்பித்தான்.

அவன் கபடிக் கபடி என்று பாடி வருவதே அழகாக இருக்கும். குமணன் பாடிப்போனால் இரண்டு நிமிடத்திற்கு மேல் பாட முடியாது. 'கபடி,கபடி ' எனப் பாடி ஓடு வருவதிலேயே குறியாக இருப்பான். இராமசாமி அப்படி இல்லை. 5பல நிமிடங்கள் நிறுத்தி கபடி,கபடி எனப் பாடிக்கொண்டே இருப்பான். எதிர்தரப்பினர் நிற்கும் மைதானத்திற்குள் நின்று கபடி கபடி எனப்பாடிக்கொண்டே இருப்பான். சுற்றி சுற்றிப் பார்த்து அவன் பாடும் விதமும், ஏறிப் பிடிக்க வருபவர்களை தொட்டு விட்டு அவன் நடுக் கோட்டை வந்து தொடுவதும் மிக வியப்பூட்டவதாக இருக்கும்.

அப்படித்தான் ஒருமுறை குமணன் இராமசாமிக்கு எதிர் தரப்பில் இருந்தான். இராமசாமி பாடி வரும்போது எப்படியும் பிடித்து அமுக்கி விடவேண்டும் என்னும் ஆசை இருந்தது குமணனுக்கு.பககத்த்ல் இருப்பவர்களிடம் சொல்லி இருந்தான் குமணன். கபடி,கபடி எனப் பாடி வந்த இராமசாமியை வளைத்துப் பிடிக்க நெருங்கி வரும்போது, கபடி கபடி எனப் பாடிக்கொண்டே ஒரு காலை தரையில் நன்றாக அழுத்தி வைத்துக்கொண்ட இராமசாமி,இன்னொரு காலால் குமணினின் நெஞ்சுக்கு மேலே கழுத்தை ஒட்டி காலால் எத்தினான். பிடிக்க வந்த குமணனன், கழுதை உதைத்தது போல இராமசாமி உதைத்த உதையால் கீழே விழுந்து விட்டான். கபடி,கபடி எனப் பாடிப்போய் ,கோட்டைத் தொட்ட இராமசாமி,மறுபடியும் குமணன் விழுந்த இடத்திற்கு ஓடி வந்தான். அதற்குள் எழுந்து விட்ட குமணன், பக்கத்தில் வந்த இராமசாமியை அடிக்க கபடி விளையாட்டு கொஞ்சம் களவரமாகி விட்டது.


இப்படித்தான் இராமசாமி அபாரமான விளையாட்டுத் திறமை உள்ளவனாக இருந்தான். கபடி விளையாட்டில் மண்டல அளவில் நடந்த போட்டியில் குமணன் படித்த அரசுப்பள்ளிக்கே முதல் பரிசு கிடைத்தது.அதற்கு முழுமுதற்காரணம் இராமசாமிதான். குமணன் மற்றும் பலர் அந்த அணியில் இருந்தாலும் அனைவரும் இராமசாமியால் தான் போட்டியில் வெற்றி பெற்றோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து குமணன் வெற்றி பெற்றிருந்தான். இராமசாமி குறைவாக  மதிப்பெண் எடுத்திருந்தான். இரண்டு பேரும் பக்கத்து ஊரில் இருக்கும் மேல் நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்ந்தனர். அங்கு சேர்ந்த இராமசாமியை அந்தப் பள்ளி மிக நன்றாகப் பயன்படுத்தியது. மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டிகளில் எல்லாம் அந்தப் பள்ளி வெற்றி பெற்று கோப்பைகளை வாங்கி வந்தது.அதற்கு முக்கியமான காரணமாக இராமசாமி இருந்தான்.குமணன் படித்த பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல அந்த வட்டார அளவில் படித்தவர்கள் அனைவருக்கும் இராமசாமியைத் தெரிந்திருந்தது கபடி விளையாட்டால்.


அன்றைக்கு குமணனும் ,இராமசாமியும் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த மதியச்சாப்பாட்டை சாப்பிட போகும் நேரத்தில்தான் அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் பாரி இராமசாமியை அழைத்தார். குமணனும் உடன் சென்றான். இராமசாமியிடம் ஆசிரியர் பாரி ' இராமசாமி,உன்னை மாதிரி கபடி விளையாடுகிற ஒரு கபடி ஆட்டக்காரனை என்னுடைய 30 வருட ஆசிரியர் அனுபவத்தில் பார்த்ததில்லை.அவ்வளவு அருமையாக விளையாடுகிறாய்.இந்த 12-ஆம் வகுப்பில் மட்டும் தேர்ச்சி ஆகிவிடு. தேர்ச்சி ஆகிவிட்டால்,விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கல்லூரியில் சேர். கல்லூரியில் நீ விளையாடி பல்கலைக்கழக விளையாட்டு வீரராகி விடுவாய். தமிழ் நாடு, அகில இந்திய அளவில் கூட கபடி விளையாட்டில் தேர்வு ஆகுவதற்கான வாய்ப்பு உண்டு " என்று பாரட்டி சில கல்லூரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டார்.


மேல் நிலைப்பள்ளி வந்து இரண்டு மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது.பாடங்கள் மிகவும் கடினமாக இருந்தன குமணனுக்கே.இராமசாமிக்கு ஆங்கிலப்பாடம்தான் மிகக் கடினமாக இருந்தது. 10-ஆம் வகுப்பில் நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தான். 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்னும் கவலை குமணனுக்கு இருந்தது. தான் செல்லும் கல்லூரிக்கே இராமசாமியையும் அழைத்துச்செல்லவேண்டும் என்று குமணன் நினைத்திருந்தான். விளையாட்டுக்கும்,படிப்புக்கும் முன்னுரிமை கொடுக்கும் சில கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை எல்லாம் குமணன் சேர்த்து வைத்திருந்தான்.


12-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தபோது, குமணன் வெற்றி பெற்றிருந்தான். ஆனால் அவன் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இராமசாமி ஆங்கிலப்பாடத்தில் 3 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து தோல்வி அடைந்திருந்தான். இராமசாமியின் வீட்டிற்குச்சென்ற குமணன் அவனுக்கு ஆறுதல் கூறினான். 'வெற்றி,தோல்வி எல்லாம் விளையாட்டு வீரனுக்கு மிக இயல்பானதுதானே ' என்றெல்லாம் இராமசாமியிடம் சொல்லிப்பார்த்தான் குமணன். ஆனால் இராமசாமி மிக இறுக்கமாக இருந்தான். தொடர்ந்து பல கல்லூரிகளுக்கு விண்ணப்பம் போட்டிருந்த நிலையில் ஒரு கல்லூரியில்,தூரம் அதிகம் இருந்தாலும் குமணன் கேட்ட பாடப்பிரிவு கிடைத்தது. குமணன் போய்ச்சேர்ந்து பாடம்,படிப்பு என்று போய் விட்டான்.


முதலாம் ஆண்டு முடித்து,விடுமுறையில் இருந்தபோது, இராமசாமி மீண்டும் 12-ம் வகுப்பு ஆங்கிலப்பாடம் மட்டும் மறுபடியும் எழுதியிருந்தேன். குமணன் ஊரில் இருந்தபொழுதுதான் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்திருந்தது. மாலை முரசில் பார்த்தபொழுது இந்தமுறையும் இராமசாமியின் எண்ணைக் காணோம். மறுபடியும் தோல்வி.குமணன் மறுபடியும் இராமசாமியிடம் தேர்வு எழுதச்சொன்னபோது ,பார்ப்போம், நான் விவசாயத்தை முழுமையாகப் பார்க்கப்போகிறேன் என்றான்.


7,8 ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் இராமசாமியைச்சந்தித்தான் குமணன். திருமணத்திற்கு முந்தைய இரவு. நண்பர்களுக்கு விருந்து என்று திருமணம் முடிக்கப்போகும் மணமகன் அழைத்திருந்தான். பள்ளித்தோழன் என்ற முறையில் குமணன் போயிருந்தான். இராமசாமியும் வந்திருந்தான். அன்றுதான் இராமசாமி குடிப்பதைக் குமணன் பார்த்தான்.'என்ன இராமசாமி,இதை எப்பப் பழகின...விளையாட்டு வீரனடா நீ ' என்ற போது 'பழசய,பேசிக்கிட்டிக்கிட்டு இருக்காதே 'என்றான் குமணன்


பல ஆண்டுகள் கழித்து தனது சொந்த ஊருக்குச்சென்ற குமணன், தன்னுடைய செவக்காட்டிற்குப் போவதற்காக அதிகாலையில் கிளம்பினான். காலையில் செவக்காட்டிற்குப் போவது என்பது குமணனுக்கு மிகவும் பிடித்தது.புளிய மரங்கள் அடர்த்தியாக இருக்கும் அந்தச்சாலையில் காலையில் 6 மணி அளவில் சென்றபோது , ஒரு மரத்திற்குக் கீழ் இராமசாமியைப் பார்த்த குமணன் திடிக்கிட்டான். கண்கள் எல்லாம் சிவந்து, கையில் மதுக்குப்பியோடு அதிகாலையில்; பார்த்த குமணன் அரண்டு போனான்.

'என்னடா, இராமசாமி இந்த நேரத்தில் கையில் மதுக்குப்பியோடு ' என்றபோது

அமைதியாக குமணனை உற்றுப்பார்த்த இராமசாமி' குமணனா,நீ எப்படா வந்த...' என்று மெல்லியதாக விசும்பதுபோலக் கேட்டபோது குமணனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

'குமணா,போட்டது சரியா விளையல,கடன் இருக்கு, எனக்கு சாராயம் இல்லாமல் இருக்க முடியலடா, இராத்திரி,பகல் எப்ப என்றாலும் திரும்பத் திரும்ப குடிக்கணும் போல இருக்கு ' என்ற போது,

அவனையும் அழைத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போனான் குமணன்.

குமணினிடம் இராமசாமியின் மனைவி ஒரு பாட்டம் பாடி முடித்தாள் ' நல்லாத்தானே இருந்தாரு, எப்ப இந்தச்சாராயத்தைக் குடிச்சு பழகுனாரா,இப்படி ஆயிட்டாரு...' என்று அழுது அழுது தன்னுடைய வேதனைகளை எல்லாம் குமணனிடம் கொட்டித்தீர்த்தாள்.

இராமசாமியின் 5 வயது மகள் குமணனின் பக்கத்தில் வந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் "குடுச்சுப்போட்டு வந்து அம்மாவை அப்பா அடிக்கிறாரு " என்றாள் அந்த சின்னப்பெண் குமணனிடம்...


குடிப்பழக்கத்தை விடுவதற்கு மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று சொல்லி ஒரு மருத்துவமனையில் சேர்த்து விடுவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் தான் வேலை பார்க்கும் ஊருக்குத் திரும்பிவிட்டான் குமணன்.

சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போனபோது இராமசாமியின் வீட்டிற்குப் போனான் குமணன். 'அந்த மருத்துவ மனைக்கு போய் விட்டு வந்து ஒரு மாதம் குடிக்காமல் இருந்ததாகவும், இப்போது மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டார் ' என்றும் சொல்லி 'காலையில் வீட்டை விட்டுப்போனார்,இன்னும் காணவில்லை ' என்று சொன்னபோது நேரத்தைப் பார்த்தான் குமணன். காலை 11 மணி.இதுவரை வீட்டில் சாப்பிடாமல் எங்கு குடித்து விட்டு படுத்துக்கிடக்கிறாரோ என்று சொன்னபோது இராமசாமியைத் தேடிப்போனான் குமணன்.


ஊரின் தெற்குப் புறத்தில் இருந்த அந்தக் கோயிலுக்கருகில் படுத்துக்கிடந்த இராமசாமியைப் பார்த்தபொழுது, நல்ல குடிபோதையில் இருந்தாலும் குமணனைக் கண்டு கொண்டான் இராமசாமி. 'மாப்ள,எல்லாம் முடிஞ்சு போச்சு. சாராயம்தான் இப்போ சாப்பாடு. இன்னும் கொஞ்ச நாளில் நான் செத்துப்போவேன். சொல்லி விடுவாங்க...முடிஞ்சா வந்து விட்டுப் போ ' என்றதும் தூக்கி வாரிப்போட்டது குமணனுக்கு.எப்படி இவனை பழைய நிலைமைக்கு கொண்டுவருவது என்று விழித்தான் குமணன்.


ஆறு மாதத்தில் அதே மாதிரி இராமசாமி செத்துப்போனான் என்று செய்தி வந்த போது ,சொல்லண்ணாத்துயரம் நெஞ்சை அடைத்தது. அவனது இறுதி ஊர்வலத்தில் நடந்தபோது ,அவனது கபடி விளையாட்டும் திறனும் மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் வந்து கொண்டே இருந்தது.


சிந்தனையில் இருந்த குமணனை நடராசனின் குரல் கலைத்தது. " நாங்கள் இரண்டு குவளை குடித்து முடித்து விட்டோம்.நீங்களும் வாருங்கள் என்றால் ஏதோ பித்துப்பிடித்தது போல அமர்ந்திருக்கிறீர்களே ' என்று நடராசன் சொன்ன போது மவுனமாக அவர்களைப் பார்த்த குமணன்,

'நீங்கள் கண்ணாடிக் குவளைக்குள் ஊற்றி வைத்திருக்கிற அந்த சிவப்பு நிறத் திரவம், எனது நண்பன் இராமசாமியின் இரத்தமாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் எங்கே இருந்தாலும் என்னால் குடிக்க இயலாது ' என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் குமணன்

Sunday 2 October 2022

சிந்தனை : இந்திய மொழிகளில் தந்தை பெரியார் சிந்தனைகள்! முனைவர் வா. நேரு

எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் தந்தை பெரியாரின் தத்துவம் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின் தேவை இன்று உலகம் முழுவதும் உணரப்படுகிறது, அதிலும் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
அண்மையில் எனது சொந்த வேலை காரணமாக திருவனந்தபுரம் சென்று இருந்த போது திருவனந்தபுரம் ஸ்டேச்சு பகுதியில் உள்ள ஸ்பென்சர் சந்திப்பில் உள்ள மைத்திரி புத்தக நிலையம் சென்று இருந்தேன். அந்தப் புத்தகக் கடை நிறையப் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடையின் ஒரு பகுதியில் ‘பெரியார் கார்னர்’ என்னும் பெயர்ப் பலகை தொங்கியது.





‘பெரியார் கார்னர்’ பகுதியில் நின்று பார்த் தால் அந்தப் பகுதி முழுவதும் மலை-யாள மொழியில் பெயர்க்கப்பட்ட தந்தை பெரியாரின் புத்தகங்கள் இருந்தன. அங்கு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்னும் நூல் மலையாள மொழியில் வரவேற்றது.
அதைப்போல வைக்கம் சத்தியாகிரகம், இந்து மதமும் திராவிடமும், பெரியாரின் ஒளி முத்துக்கள், ராமாயணம் ஒரு கட்டுக்கதை, மனுஸ்மிருதி பற்றி பெரியாரின் சிந்தனைகள், ஜாதி ஒழிப்பின் அவசியம், பகுத்தறிவு, பெண் ஏன் அடிமையானாள்?, இந்தி இணைப்பு மொழியா?, மதமும் மனிதனும், இந்து விழாக்கள், இனிவரும் உலகம், சுயமரியாதைத் திருமணம், தந்தை பெரியாரின் சுயசரிதை, புராணம் ஒரு கட்டுக்கதை போன்ற பல நூல்கள் மலையாள மொழியில் பெயர்க்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் போன்ற நூல்களும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரியார் கார்னரில் வைக்கப்பட்டிருந்தன.


இதைத் தவிர self respect movement in Tamilnadu, Periyar and Ambedkar, collected works of Periyar, On nationalism by Periyar E V R, Men and religion, Social revolution or social reform by Periyar E.V.Ramasamy போன்ற ஆங்கில நூல்களும் பெரியார் கார்னரில் வைக்கப்பட்டிருந்தன.
தந்தை பெரியாரின் புத்தகங்களை எல்லாம் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அனுமதி பெற்று மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்று மைத்திரி நூலக உரிமையாளர் திரு. லால் சலாம் அவர்களைப் பாராட்டிவிட்டு தந்தை பெரியாரின் புத்தகங்கள் எல்லாம் எப்படி கேரளாவில் விற்பனையாகின்றன எனக் கேட்டேன். “மிக நன்றாக இருக்கிறது; எப்போதும் என் கடையில் அதிகமாக விற்பனையாவது தந்தை பெரியாரின் புத்தகங்களும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தகங்களும்தாம்’’ என்றார்.

தந்தை பெரியாரின் 143ஆம் பிறந்த நாளை ‘சமூக நீதி’ நாள் என அறிவித்து, ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்று தமிழர் தலைவர் அவர்களால் பாராட்டப்பட்ட தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 21 மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்கள், கருத்துகள் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். 21 மொழிகளில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மூலமாகப் பரப்பப்படும் தந்தை பெரியாரின் நூல்களைப் போன்றே தந்தை பெரியாரின் கருத்துகளை அதன் தேவையை உணர்ந்த பல்வேறு மொழிகளைச் சார்ந்த தோழர்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று நினைக்கும் சமத்துவ சிந்தனை உடையோர் பல மொழிகளில் தந்தை பெரியாருடைய கருத்துகளைக் கொண்டு செல்கிறார்கள். அண்மையில் சத்ய நாராயணா, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., அய்தராபாத் அவர்கள் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இன்னும் நமக்குத் தெரியாமலும்கூடப் பல்வேறு மொழிகளில் ஊடகங்கள் வழியாக தந்தை பெரியாருடைய கருத்துகள் போய்க் கொண்டிருக்கின்றன.
என்றாலும், இவையெல்லாம் தொடக்கமே! இன்றைய இந்திய அரசியல் நெருக்கடியில் பெரியார் கொள்கைகள் பெருமளவில இந்தியா முழுமையும் கொண்டு சேர்க்க வேண்டியது கட்டாயமாகும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் செப்டம்பர் 16-30

Saturday 1 October 2022

மீண்டும் மீண்டும் உன்னைச்சுடுகிறார்கள்...

 அன்பிற்கினிய காந்தியே...

ஆத்மா எனும்

சொல்லில் எனக்கு

உடன்பாடில்லை 

ஆதலால் 

மகாத்மா என்னும் சொல்லால்

உன்னை நான் அழைப்பதில்லை...


ஆனால்... காந்தியாரே...

நீங்கள் ஒரு மகத்தான மனிதர்

என்பதில் எனக்கு எந்தவித

மாற்றுக்கருத்தும் இல்லை....


கொள்கையில் முரண்பட்ட

அண்ணலும் அய்யாவும் கூட

தனிமனிதராய் உங்களுக்குத் 

தந்திட்ட மரியாதையும்

மதிப்பும் மிக அதிகம்...


நீ இறந்தும் கூட

75 ஆண்டுகள் ஆகப்போகிறது...

உன்னைக் கொன்றவர்களின்

கூட்டாளிகள்தான் 

இன்றைக்கு ஆட்சிக்கட்டிலில்...


உந்தன் பெயரில் இருக்கும்

நிறுவனங்களில் கூட

கோட்சேகளின் வாரிசுகள்தான்

கோலோச்சுகிறார்கள்...


கோட்சேகளின் வாரிசுகள்

மீண்டும் மீண்டும்

சுடுகிறார்கள் உங்களை...

உங்கள் பெயரில் இருக்கும்

பள்ளிகளில் படித்தவர்கள்கூட

வெறுப்பினை அள்ளிக் கொட்டுகிறார்கள்...


இரத்த வெறி பிடித்து

அலைகிறார்கள்

சனாதனத்தை மீண்டும்

அமைத்தே தீருவோம்

அதற்கு இடைஞ்சலாக இருக்கும்

அரசியல் சட்டத்தை 

மாற்றி அமைப்போம் 

எனக் கொக்கரிக்கிறார்கள்...


இல்லாத கடவுளைக் 

காலமெல்லாம் 

கட்டிக்கொண்டு அழுத

காரணத்தாலோ என்னவோ

நீ கூறிய இராம் இராம்

பெயரைச்சொல்லியே

மீண்டும் மீண்டும் 

உன்னைச்சுடுகிறார்கள்...


உன்னைக் கொன்ற

சித்பவன் பார்ப்பான்

கோட்சேவுக்கு சிலைவைத்துக்

கொண்டாடுகிறார்கள்...

கோளாறு வயப்பட்ட 

சில மாமிகள்

கோட்சே புகழ் பாடுகிறார்கள்...


மதத்தால் மனிதர்கள்

மாற்றி மாற்றி 

வெட்டி சாய்த்து 

குருதி ஓடிய மண்ணில்

நடந்து சென்ற காந்தியே!

அப்போது கூட இந்த மதங்கள்

மனிதர்களுக்குத் தேவைதானா

எனும் கேள்வி 

எழவில்லையா தங்களுக்கு...


பிணங்களால் நிரப்பப்பட்ட

இரயில் பெட்டிகள்

வந்து சேர்ந்து நேரத்திலும்...

இழவைக் கூட்டுவதுதான்

இந்த மதங்கள் என்னும்

நினைப்பு வரவில்லையா தங்களுக்கு...


அடுத்த மதத்துக்காரனின்

பெண்களை வன்புணர்வு

செய்வதே

பழி தீர்க்கும் படலம் என

அவனவன் அவனவனின்

கடவுளின் பெயரால்

செய்த கயமைகள் 

கண்ட போதும் காந்தியே...

கடவுள்களின் கையாலாகாமை

புலப்படவில்லையா தங்களுக்கு...


எத்தனை பரிசோதனைகள்

செய்தாய் உன் வாழ்க்கையில்...

கடவுள் என்று ஒருவன்

இருக்கிறானா? என்னும் கேள்வியோடு

எந்த சோதனையும் நீ 

செய்ததாக எனக்கு நினைவில்லை..


சத்திய சோதனை எழுதிய

தாங்கள்

நான் உணர்ந்த அளவில்

நிகழும் நிகழ்வுகளால்

கடவுள் என்று ஒருவன் இல்லை

இல்லவே இல்லை

என உரக்கக் கூறி இருந்தால்

ஒருவேளை இந்தியா

உருப்பட்டிருக்க வழி பிறந்திருக்குமோ!..


                          வா.நேரு,

                          02.10,.2022.