Wednesday 22 July 2020

என்னுடைய தோழர்கள்: புதுச்சேரி மு.ந.நடராசன்

என்னுடைய தோழர்கள்:    புதுச்சேரி மு.ந.நடராசன், மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவராக இருந்து மறைந்த அய்யா புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (24.07.2020).புதுச்சேரி மு.ந. நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்.2002- முதல் இறக்கும்வரை தொடர்பில் இருந்தவர். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை கட்டாயம் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.அவர் அழைக்கவில்லையென்றால் நான்  அழைப்பேன். புதுச்சேரி கூட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்தில்தான் பெரும்பாலும்  தங்கியிருக்கிறேன். அன்போடும் பாசத்தோடும் விருந்தோம்பல் செய்பவர். அவரது இணையர் அம்மா அவர்களும் அப்படி ஒரு உபசரிப்பு செய்வார்கள்.

முதலில் குடும்பத்தை சரிசெய்ய வேண்டும் என்பார். குடும்பக்கடமைகளை முதலில் முடிக்க வேண்டும் என்பார். மாதத்தின் முதல் வாரத்திலேயே வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருளை எல்லாம் வாங்கி வீட்டில் போட்டு விடுங்கள் என்பார். அவரை விட நான் 18 வயது இளையவன் என்றாலும் நான் மாநிலத்தலைவர் அவர் மாநிலத்துணைத்தலைவர் என்றாலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்.அன்பு காட்டுபவர். ஆனால் தன் மனதிற்கு பட்டதை மிகப் பளிச்சென்று சொல்வார். அய்யா ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் பெரியார் திரைப்படம் உள்ளிட்ட அத்தனை அறிவிப்புக்களுக்கும் அவருடைய பங்களிப்பு என்பது முதலிலேயே இருக்கும்.தன்னுடைய பங்களிப்பை முதலில் கொடுத்துவிட்டு பின்பு வசூல் செய்தும் கொடுப்பார்.

தி.மு.க.வின் புதுச்சேரி மாநிலப்பொருளாராக இருந்து தி.மு.க. மாநில மாநாடு நடத்தியதை குறிப்பிடுவார்.மறைந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திருச்சி அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் அய்யா பெரியாருக்கு மோதிரம் செய்து கொடுக்க விரும்பியதையும், அதற்காக முதன் முதலில் தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்ததையும் அய்யா அவர்களுக்கு கைவிரல் அளவு எடுத்து மோதிரம் செய்து கொடுத்ததையும் அடிக்கடி குறிப்பிடுவார்.அந்த நிகழ்வை சொல்லும்போதெல்லாம் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த நிகழ்வை சொல்லி சொல்லி மகிழ்வார்.
தி.மு.க்.விலிருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளிலேயே இருக்க விரும்பினார்.இருந்தார். சின்ன சின்ன வெளியீடுகளாக பல வெளியீடுகளை கொண்டு வந்தார்.அந்த வெளியீடுகளை திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக நிகழ்வில் எல்லோருக்கும் கொடுப்ப்பார்.கொடுக்கச்செய்வார். மாநாட்டு நிகழ்வில் அய்யா மு.ந.நடராசன் அவர்களின் வெளியீடு கைக்கு வந்துவிட்டது என்றால் அய்யா மு.ந.நடராசன் வந்துவிட்டார் என்பதனை புரிந்துகொள்வோம்.  மதுரையில் நடந்த பகுத்தறிவாளர் கழகக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திக மாநாடுகள்,மகாராஷ்டிரா நாக்பூரில் நடைபெற்ற இந்திய நாத்திக மாநாடுகளில் நாங்கள் எல்லாம் இணைந்து கலந்துகொண்டு இருக்கின்றோம்.அங்கு வரும்போது ஆங்கிலத்தில் தனது வெளியீடுகளைக் கொண்டு வருவார். யார்? எவர் ? என்னும் தலைப்பில் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி எனத் திராவிட இயக்கத்தின் தலைவர்களைப் பற்றி தொடர்ச்சியாக வெளியீடுகளைக் கொண்டுவந்தார்.  சிக்கனமாக இருப்பார். ஆனால் நல்ல செயல்களுக்கு பணம் செலவு செய்வதைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் செலவழிப்பார்.இளைஞரைப்போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

அவருடைய சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள சிறுகாம்பூர். அந்த ஊரில் சில ஆண்டுகளுக்குமுன் அரசு உயர் நிலைப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். என்னையும் மற்ற பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி,போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஆசிரியர்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களை வழங்கி என மிகப்பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இன்றைக்கும் கூட நினைவில் நிற்கிறது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாநாடு இரண்டு நாட்கள் புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது.மிகப்பிரமாண்டமாக நடந்த அந்த மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ,மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக்காட்டினார்.அதைப்போல இராவண லீலா தொடர் நிகழ்வுகளை புதுச்சேரியில் நடத்தினார். அய்யா சிவ.வீரமணி அவர்கள் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவராக வந்த பின்பு, அவரோடு இணைந்து பல இயக்க நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

அய்யா மு.ந.நடராசன் அவர்களின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று(24.05.2020) மாலை நடைபெற்ற காணொளி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்களும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் காணொளி வழியாக உரையாற்றினார்கள்.திராவிடர் கழகத்தின் அய்யா ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது "அருமைத்தோழர் மு.ந.நடராசன் அவர்கள் புதுவையில் மட்டுமல்ல, புதுமையான உலகம் அமையவேண்டும் என்பதற்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்து வாழ்ந்து காட்டியவர்.துரு துருவென்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்.எங்கு சென்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றாலும் கூட திராவிடர் இயக்கத்தை,பகுத்தறிவாளர் கழகத்தை கையோடு எடுத்துச்சென்றவர்.விபத்துகள் எதிர்பாராதவை.அதிர்ச்சியாக நமக்கு அமைந்துவிடுபவை. ஆனால் நாம் பகுத்த்றிவாளர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை செயல்படுத்துபவர்கள்.
தோழர் நடராசன் அவர்கள் தான் மட்டும் கொள்கையாளராக வாழவில்லை. அவருடைய வாழ்விணையராக இருந்தாலும் அவரது பிள்ளைகளானாலும் கொள்கைத்தங்கங்களாக இருப்பதும், விடுதலை வாசகர்களாக இருப்பதும்,இயக்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதும் நடராசன் அவர்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை,ஆலமரம் விழுந்தாலும் அதனுடைய  விழுதுகள் தாங்கி நிற்பதுபோல வாழைமரம் சாய்ந்தாலும் அதன் கன்றுகள் நிற்பதுபோல அவரின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.ஒளிக்கீற்றாய் நடராசன் அவர்கள் பாடுபட்ட பகுத்தறிவு பரப்பலும், சாதி ஒழிப்பும், அறிவியல் மனப்பான்மை வளர்ப்புமான அந்த லட்சியச்சுடரை ஏந்தி தொடர்ந்து பயணிப்போம். " என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அவரின் நினைவு நாளில் அவரின் உணர்ச்சியும் வேகமும் இயக்க ஈடுபாடும் மனது முழுவதும் நிற்கிறது. அவரது மூத்தமகன் பாஸ்கர் அவர்களோடு அவரின் பிறந்த நாளை ஒட்டி பேச வாய்ப்புக்கிடைத்தது. மிக நல்ல பொறுப்பில் உயர் பதவியில் இருக்கும் அவரின் பெரியாரியல் பற்றி புரிதலும், அவரது அப்பாவைப் பற்றிய அவரின் மதிப்பீடும், தனது தந்தை மு.ந.நடராசன் அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,எப்படி ஒரு எதிர் நீச்சல்காரரை வாழ்க்கையில் உயர்ந்து திடீர் விபத்தால் மறைந்தார் என்பதனை அவர் பேசப்பேச, ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிய நிகழ்வு, அய்யா மு.ந.நடராசன் அவர்கள் தான் மறைந்தாலும் தனது உணர்ச்சியை, வேகத்தை,அறிவை, இயக்க ஈடுபாட்டை தனது குடும்பத்தினருக்கு அளித்துச்சென்றிருக்கார் என்பது மிகப்பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தோழர்கள் எதையும் எதிர்பாராதவர்கள்,கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக உணமையை உரக்கச்சொல்வதனால், பொய்யர்களிடமிருந்தும்,ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களை எதிர்பார்த்தும்,எதிர்கொண்டும் வாழ்வில் செம்மையாக வாழ்பவர்கள்.

முதலாம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக காணொளி வழிக்கூட்டம் நடத்துகிறார்கள். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்களோடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன்,பொதுச்செயலாளர் அய்யா முனைவர் துரை.சந்திரசேகரன்,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணோளி நிகழ்வில் கலந்துகொண்டு அய்யா சுயமரியாதைச்சுடரொளி மு.ந. நடராசன் நினைவு உரை நிகழ்த்துகிறார்கள். நிகழ்வு சிறக்கட்டும்.

புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.முதலாம் ஆண்டு நினைவு நாளில் எனது அருமைத்தோழர், தமிழகம் &புதுச்சேரி மாநிலப்பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் அய்யா மு.ந. நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம்.

                            வா.நேரு, 23.07.2020 இரவு 10.15 மணி

Monday 13 July 2020

போனாயே எங்கள் தோழா......



போனாயே எங்கள் தோழா......
மதுரை மண்டலத் திராவிடர் கழகத்தலைவர் அய்யா மா.பவுன்ராசா(வயது 58) இன்று 05.07.2020 மாரைடைப்பால் தூக்கத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். காலையில் மிக அதிர்ச்சி தரத்தக்க இந்தச்செய்தியைச்சொல்லி , மாநில மகளிரணி அமைப்பாளர் மானமிகு தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் உண்மையா எனக்கேட்டபோது,உறுதிப்படுத்திக்கொள்ள ,மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் மன்னர்மன்னன் அவர்களைத் தொடர்புகொண்டபோது,ஆமாம் அய்யா,உசிலம்பட்டியில் பவுன்ராசா வீட்டில்தான் இருக்கிறோம்,இரவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது என்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக திராவிடர்கழகத்தின் அடிப்படையில் தொடர்பில் இருந்தவர். திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.கரடுமுரடான தனது பகுதியில் பெரியார் கொள்கைக்கு பாதை அமைத்தவர். அதில் ஏற்பட்ட இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர். அவர் தான் திராவிடர் கழகத்தில் இணைந்தது,தனது ஊரில் கூட்டம் நடத்தியது, அப்போது ஏற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றை எல்லாம் அவ்வளவு ஈடுபாட்டோடு விவரிப்பார். இப்போது பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத்தலைவராக இருக்கும் மன்னர்மன்னன் மூலமாகத்தான் இயக்கம் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் தெரியும் என்று சொல்வார்.
டவுசர் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ,உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள அய்யனார்குளத்தில் திராவிடர் கழகம் கூட்டம் போடவேண்டும் என்று விரும்பியதையும் அதற்காக மதுரை மேற்கு மாவட்ட திராவிடர்கழகத்தின் தலைவராக அப்போதிருந்த அய்யா பெரியகுளம் ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களைப் போய்ச்சந்தித்ததையும், அவர் டவுசர் போட்டு வந்த ஒரு பையன் கிராமத்தில் தி.க.கூட்டம் போட விரும்பியதை ஏற்றுக்கொண்டு தனது கிராமத்திற்கு வந்ததையும் ,அய்யா போடி இரகுநாகநாதன் .ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களின் வழிகாட்டுதலோடு முதன்முதலில் அய்யனார்குளத்தில் திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றதையும், அன்றைக்கு திராவிடர் கழகத்தின் பேச்சாளராக இருந்த கண்மணி தமிழரசன் அவர்களும், தமிழரசன்(தோழர் ஓவியாவின் தந்தை) அவர்களும் கலந்து கொண்டு பேசியதையும் குறிப்பிட்டு,
" அண்ணே, முதன் முதலில் உசிலம்பட்டி அய்யனார்குளத்தில் திராவிடர் கழகப்பொதுக்கூட்டம்.நம்ம கூட்டத்துக்கு நாமே காசு செலவழிக்காமலேயே பயங்கர விளம்பரம் ஆகிப்போச்சு. கடவுள் இல்லைன்னு சொல்றவங்க கூட்டம் போடுறாங்க,அதுவும் சின்னப்பையல்களா சேர்ந்து கூட்டம் போடுறாங்க என்று சொல்லி ஊர் முழுவதும் பரபரப்பு. கூட்டம் ஆரம்பிச்சு நடந்துக்கொண்டு இருக்கும்போது சத்தம் போட்டாங்கே,கலாட்டா பண்றது மாதிரி ஆளுங்க இங்குட்டு அங்குட்டு போய்க்கிட்டு கத்திக்கிட்டு இருந்தாங்கே...சிறப்பு பேச்சாளர் கண்மணி தமிழரசன் அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது நிறைய கல் வந்து விழுந்தது.ஒரு கல் கண்மணி தமிழரசன் அவர்களின் நெற்றியில் பட்டு, பொல பொல வென்று இரத்தம் வந்தது. சும்மா சொல்லக்கூடாது அந்த அம்மாவை... மேடையில் இருந்த சில ஆட்கள் எல்லாம் கீழே இறங்கியபோதும் தன்னுடைய சேலையின் முந்தானையில் ஒரு பகுதியை கிழித்து நெற்றியில் கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார். மூன்று மணி நேரம் பேசினார். அவரின் பேச்சுக்கு முதலில் இருந்த எதிர்ப்பு மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக உட்கார ஆரம்பித்தார்கள்.உங்களுக்காக பாடுபடும் இயக்கம் என்பதை அந்த மக்களுக்கு புரியும் மொழியில் பேச பேச கூட்டம் அப்படியே நின்றது" என்பதனைச்சொல்லி அடுத்து தொடர்ந்து அய்யனார்குளத்தில் கூட்டம் நடத்தியதையும் குறிப்பிடுவார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திராவிடர்கழகத்தில் அய்யனார்குளம் பகுதியில் இணைந்ததற்கும், கொள்கை வழி நின்றதற்கும் அய்யா பவுன்ராசா அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரிய காரணம்.
"உசிலம்பட்டி பகுதியில் மிகமிக பின் தங்கிய கிராமத்திலிருந்து சுமார் 10 கி.மீ நடந்து மெயின்ரோடு வந்து தான் பஸ் ஏற வேண்டும் - என்ற நிலையிலும் நான் அறிய சுமார் 30 ஆண்டு காலம் இயக்க நிகழ்வுகள் அனைத்திலும் முன்கூட்டியே வந்து விடுவார்.தமிழ்நாடு முழுவதும் ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டிருப்பார்.இயக்க வேலைகளை பிடிவாதமாக விரும்பி களத்தில் வேலை செய்யும் முன்னோடித் தோழர் அய்யா பவுன்ராஜா அவர்கள். போராட்டங்கள் ,இரத்ததான முகாம்கள் , பெரியார் 1000 , பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் -இவற்றையெல்லாம் பாம்பட்டிக்காட்டில்( பழமை நிறைந்த கிராமத்தில்) - முன்னின்று நடத்திக் காட்டியவர். தமிழர் தலைவர் அய்யா அவர்கள் மதுரை வருகிறார் என்ற செய்தியை விடுதலை யில் பார்த்தவுடன் எங்களிடம் வேலையைத் துவங்கி விடுவார் .அய்யா தலைவர் மதுரைவர்றாங்க 2 விடுதலை ஆண்டுச் சந்தா வாங்கிக் கொடுங்க என வேலையைத் துவங்கி விடுவார் எப்படியாவது தலைவர் அவர்களைப் பார்க்கும் போது விடுதலை,உண்மை சந்தா கொடுக்காமல் சந்திக்க மாட்டார். ஒரு கறுப்புச் சட்டைக்காரன் - இழப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு முதலாளி மறைந்து விட்டால் இரண்டு முதலாளி அந்தக் குடும்பத்தில் தோன்றி விடுவார்.ஒரு தொழிலாளி மறைந்துவிட்டால் இன்னொரு தொழிலாளி கிடைத்து விடுவார்.ஒரு விவசாயி மறைந்துவிட்டால் இன்னொரு விவசாயி நம் குடும்பத்திலேயே கிடைத்து விடுவார்.ஒரு கட்சிக்காரன் மறைந்து விட்டால் இன்னொறு கட்சிக்காரன் கிடைத்து விடுவான்.ஆனால் ஒரு கொள்கைக்காரன் மறைந்துவிட்டால் - அந்த இடத்தை நிறப்புவது எளிதல்ல அதிலும் ஒரு கறுப்புச் சட்டைக் காரனின் இழப்பை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.தோழருக்கு வீரவணக்கம்l வீரவணக்கம்l.தமிழர் தலைவர் வணக்கத்திற்குறிய அய்யா அவர்கள் தலைமையில் பெரியார் பணி முடிப்போம்" .மேலே சொன்ன வரிகள் மதுரை புற நகர் மாவட்டத்திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தலைமைக்கழகப்பேச்சாளர் அ.வேல்முருகன் அவர்கள் எழுதியது.
"நான் தி.க.வில் இருந்தபோது 1993 ல் எங்கள் ஊரில் RSS அமைப்புக்கும் எங்களுக்கும் மோதல் இருந்தது. தோழர் பவுன்ராசா அவர்களிடம் இதைப்பற்றிப் பேசினோம். மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்தோம். எதிர்பார்த்தபடியே காவல்துறை வழியாக காவிகள் தடைவிதித்தனர். ஒரு சமரசத் தீர்வு உண்டானது. "மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் வேண்டாம். வெறும் ஊர்வலம் நடத்திக்கொள்ளுங்கள்" என்றது காவல்துறை. எங்களது விருப்பமும் அதுமட்டும் தான்.
உசிலம்பட்டியிலிருந்து கையில் அரிவாள்களுடன் 100 தோழர்களுடன் வந்து களமிறங்கினார் பவுன்ராசா. அவரோடு திண்டுக்கல் மாவட்ட தி.க.தோழர்கள், உள்ளூர் தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் கையில் அரிவாள்களுடன் ஊர்வலத்தை நடத்தினோம். அந்த ஊர்வலத்திற்குப் பிறகு RSS அமைதியாகிவிட்டது. அதில் இருந்த பலர் சில ஆண்டுகளில் தி.க.வுக்கே வந்தனர். 1993 ல் எங்களுடன் மோதிய RSS ல் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் தோழர் பவுன்ராசா அவர்களின் ஜாதியினர்தான். ஒருவர் அவரது உறவினர். ஆனாலும் பெரியாருக்காக, தனது ஜாதியையும் உறவுகளையும் எதிர்த்து 100 இளைஞர்களை - அரிவாளைத் தூக்குமளவுக்குத் தயாரிப்பது என்பதுதான் பெரியாரிஸ்ட்டுகளின் அடையாளம்.
பொதுவெளியில் எழுத இயலாத பலவற்றைச் சாதித்துக் காட்டிய உற்ற தோழர் பவுன்ராசா அவர்களுக்கு காட்டாறுகுழுவின் சார்பில் வீரவணக்கம். AThi Asuran"
நெஞ்சினில் கொண்ட கொள்கை. நினைவினில் தேக்கி நின்று
அஞ்சிடா பயணம் செய்து
அலைந்துமே ஊரூர் சென்று
துஞ்சலும் மறந்து நித்தம்
தொடர்ந்துமே தொண்ட றந்தான் விஞ்சினாய் புகழாம் வானை
வென்றதோர் கதிரைப் போல!
இயக்கமே வாழ்வாய்க் கண்டு
எளியதோர் தோற்றம் கொண்டு
தயங்கிடா தணுகி மக்கள்
தன்நிலை உணரச் செய்ய
அயர்விலா உழைப்பைத் தந்து
அனுதினம் செய்தாய் தொண்டு!
புயலென செயலால் வென்றாய் போனாயே எங்கள் தோழா!!
- சுப.முருகானந்தம்
மதுரை மாநகர் திராவிடர் கழகம்.
திராவிடர் கழகம் என்பது அரசியல் கட்சி அல்ல. இது ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்கிக்கொண்டே இருந்தவர் அண்ணன் மா.பவுன்ராசா அவர்கள்.நான் தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்த்தபொழுது அடிக்கடி வருவார். நிறையப் பேசுவோம். இயக்க நிகழ்வுகள் நடந்தவை, நடக்க இருப்பவை என்று பல செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். எனக்குத் தெரிய மிகவும் வெளிப்படையாக எதையும் பேசுவார். திராவிடர்கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களிடமே பல விசயங்களைப் பேசுவார். இயக்க நடப்புகளைச்சொல்வார்.காணொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தார்.
திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் யாரேனும் விடுதலைக்கு சந்தா கட்டாவிட்டால் நன்றாகவே கோபப்படுவார். விடுதலையை வாங்க வலியுறுத்துவார். இரங்கல் அறிக்கையில் அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல எவரையும் சந்தித்து துணிந்து பேசுவார். வாதாடுவார். தன்னுடைய பிறந்த நாளில்(12.06.2020), விடுதலையின் 86வது பிறந்த நாள் வரும் ஜீன் மாதத்தில் தான் பிறந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார்.கடந்த 10 நாட்களில் இரு முறை விடுதலையில் அவரின் வாசகர் கடிதம் வந்தது. நேற்று (விடுதலை வெளியூர் 04.07.2020) வந்த கடிதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ! என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். தனது வாழ்வில் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு இறுதியாக அவர் சொல்லும் நன்றி என்பது நமக்கு தெரியாமல் போயிற்று.நேற்று(04.07.2020) மாலை நடைபெற்ற அய்யா ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற தலைமை உரையை கேட்டுக்கொண்டு ,கம்பீரமாய் உசிலம்பட்டியில் அவரது இல்லத்தில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். இன்று அவர் இல்லை.ஒப்பற்ற ஒரு தோழரை இழந்திருக்கிறோம்.
வீரவணக்கம் எங்கள் தோழனே! அய்யனார் குளம் பவுன்ராசாவே! ஆற்றல் மிகு மதுரை மண்டலத்திராவிடர் கழகத்தலைவரே!..டவுசர் போட்ட காலம் முதல் இறக்கும் நொடி வரை ஒரே தலைவர்,ஒரே கொடி,ஒரே இயக்கம்-திராவிடர் கழகம் எனப் பாடுபட்ட எங்கள் தோழனே ! வீரவணக்கம். வீரவணக்கம்.