Friday 30 April 2021

பகுத்தறிவுப் பாவேந்தர் : உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!

http://www.unmaionline.com/index.php/6025-ulaga-manudam-kanatha-oppatra-kavingar.html


தமிழகத்தில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பொது நிலையில் உள்ள இளைஞர்களும் இன்று தேடிப் படிக்கும் தத்துவம் பெரியாரியல் ஆகும். வலதுசாரி எண்ணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை எதிர்க்க நினைக்கும் எல்லோரும் இன்றைக்குத் தந்தை பெரியாரைப் படிக்கிறார்கள். தந்தை பெரியாரைப் படிக்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தவறாமல் படிக்க வேண்டிய படைப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகளாகும். புரட்சிக்கவிஞரின் கவிதைகள் பத்தோடு பதினொன்றல்ல. அவரது கவிதைகள் தனித்துவமானவை. தன்மானத்தையும் இனமானத்தையும் படிப்பவர்க்கு  ஊட்டுபவை. உணர்ச்சியை, எழுச்சியை படிப்பவரின் உள்ளத்தில் புகுத்தும் கவிதைகள் புரட்சிக்கவிஞரின் கவிதைகளாகும்.



இணையத்தின் வளர்ச்சி எழுத நினைப்பவர்கள் எல்லோரும் எழுதுவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது. இன்று வலைத்தளம், முகநூல் பக்கங்களில் நிறையப் பேர் கவிதைகள் எழுதுகிறார்கள். பலர், கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள், தங்கள் கவிதைகள் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது. நோக்கத்தோடு, இலட்சிய வெறியோடு இருக்கும் போதுதான் மகத்தான படைப்புகள் உருவாகின்றன. படைக்கும் ஆர்வம் உள்ள இருபால் இளைஞர்கள், புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் படிக்க வேண்டும். முடிந்தால் எவ்வளவு கவிதைகளை மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவு மனப்பாடம் செய்ய வேண்டும். அந்தக் கவிதைகளை உணர்ச்சியோடு சொல்லிப் பழகவேண்டும். அப்படி சொல்லச்சொல்ல, படிக்கப் படிக்க புரட்சிக்கவிஞரின் கவிதைகள் தரும் உணர்ச்சியை, எழுச்சியை படிப்பவர்கள் உணர முடியும். படைக்கும் ஆற்றல் தானே பெருகும். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எளிதாக மற்றவர்களுக்குப் புரியும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் ஏப்ரல் 29. அவரது நினைவு நாள் ஏப்ரல் 21. ஏப்ரல் மாதம் என்றாலே அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நமக்கு நினைவுக்கு வருவது போல, நமது நினைவுக்கு வரவேண்டிய மாபெரும் ஆளுமை புரட்சிக்கவிஞர். புரட்சிக் கவிஞரின் கவிதைகள் புகழுக்காகவோ, பொருளுக்காகவோ படைக்கப்பட்டவை அல்ல. கொள்கைக்காகப் படைக்கப்பட்டவை.

தந்தை பெரியார் கொள்கை அடிப்படையில் பாடப்பட்டவை. ஆகையால் எப்போதும் சிறப்பானவை. எவ்வளவு சிறப்பானவை என்றால் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்க மேடைகளில் தொடர்ந்து பேசப்படும், பாடப்படும் கவிதைகள் புரட்சிக்கவிஞரின் கவிதைகள்தாம். அவருக்குப் பின்னால் பாரதிதாசன் பரம்பரை என்று பல கவிஞர்கள் படைப்புகளை அளித்தார்கள் என்றாலும், பல நூறு கவிஞர்கள் வந்தார்கள் என்றாலும், புரட்சிக்கவிஞரின் இடத்தைப் பிடித்தவர் எவருமில்லை. அவருக்கு இணையாகக் கவிதைகளைப் படைத்த தமிழ்க் கவிஞர்கள் அவருக்குப் பின்னர் எவருமில்லை. எப்படி திருக்குறளுக்கு இணையாக வேறு ஒரு நூல் வரவில்லையோ, அதனைப் போல புரட்சிக்கவிஞரின் கவிதைகளுக்கு இணையாக வேறு கவிதைகள் இல்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு கல்வியில் முன்னணி வகிக்கிறது. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 50 சதவிகிதம் உயர்கல்வியை அடைய வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கிறது. ஆனால், இப்போதே அந்த நிலையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் திராவிட இயக்கம் - தந்தை பெரியாரும் அவரது கொள்கைகளும் ஆகும். அந்தக் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட புரட்சிக்கவிஞர் கல்விக்கு - அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து பாடியிருக்கும் பாடல்கள் மீண்டும் மீண்டும் படிக்கத்தக்கவை.

"பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்  உலகினைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்  கல்வியைப் பேணுதற்கே!"

என்றார் புரட்சிக்கவிஞர். “என்னருந் தமிழ் நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்று இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?’’ என்று எல்லோரும் கல்வி கற்று இன்புற வேண்டும் எனக் கனவு கண்டவர் புரட்சிக்கவிஞர். அதனை நிறைவேற்றிட பல்வேறு முயற்சிகளை, திட்டங்களைத் தீட்டி கடந்த 50 ஆண்டுகளில் திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட. அனைவருக்கும் கல்வி என்னும் நோக்கத்தில் தமிழகம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

ஆத்திகராக இருந்தவர்தான் பாரதிதாசன். ஆனால், 1933இ-ல் நடந்த சுயரிமரியாதை  மாநாட்டில் கலந்து கொண்டு ‘நான் ஒரு நிரந்தர நாத்திகன்’ என்று கையொப்பம் இட்ட காலம் முதல், நாத்திகத்தை ஏற்றுக் கொண்டு, நாத்திகமே உலகம் உய்ய வழி என்பதனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த வழியில் இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர் என்பது  மட்டுமல்ல; இன்றைக்கும் நாத்திகத்தை வீரியமாய் மேடைகளில் சொல்வதற்கு கவிதைகளைத் தந்தவர் பாரதிதாசன்.

“கடவுள் கடவுள் என்று எதற்கும் கதறுகின்ற மனிதர்காள்

கடவுள் என்ற நாமதேயம் கழறிடாத நாளிலும்

உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்ததாம்

கடையர் செல்வர் என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே!"

எனக் கவிதையின் வாயிலாகக் கேட்டவர். ஏழை, பணக்காரன் என்னும் வேற்றுமையை விதைத்தது கடவுள் என்னும் பெயர் வந்த பிறகுதான் என்பதனை மிக எளிமையாகச் சொல்லிச் செல்வார்.

“பிணக்கு ஏற்படுத்தும் கடவுளைக்

கணக்குத் தீர்த்தல் மனிதர்தம் கடமையே’’ என்றவர்.

“கடவுள்வெறி சமயவெறி

கன்னல் நிகர் தமிழுக்கு

நோய்! நோய்! நோயே!’’ என்றவர்.

"உடை வெளுக்கும் தோழரைக்

கழுதை முன்னேற்றுமா?

கடவுள் முன்னேற்றுமா?"

எனக் கேட்டவர் பாரதிதாசன். மீண்டும் மீண்டும் மேலே இருக்கும் கவிதை வரிகளைச் சொல்லிப் பாருங்கள். எளிய சொற்கள். மிக வலிமையான கருத்துகள். இதுதான் புரட்சிக்கவிஞரின் மொழி ஆளுமை.

‘கரும்பு தந்த தீஞ்சாறே,

கனி தந்த நறுஞ்சுளையே’

என்று ஆரம்பித்து செந்தமிழை அவர் பாடியிருக்கும் சொற்களுக்காய் மீண்டும் மீண்டும் படிக்கலாம். அப்படிப்பட்ட தமிழின் நிலையைக் கண்டு வருந்தி அதனை மாற்றுவதற்கு 24 பாடல்களைக் கொண்ட அற்புதமான நூலான ‘தமிழியக்கம்’ என்னும் நூலைப் படைத்தார். ஒவ்வொரு இளைஞரின் நெஞ்சத்திலும் மனப்பாடமாய் இருக்க வேண்டிய கவிதைகள் அதில் உள்ள கவிதைகள்.

‘உயிர் போன்ற உங்கள் தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்’ என்று ஆரம்பித்து கடவுளுக்கு தமிழில் வாழ்த்து சொன்னால் புரியாதா, வடமொழியில் சொன்னால்தான் புரியுமா? என்று கேட்கும் அவர் கருத்து வீச்சினை தமிழியக்கப் பாடல் ஒவ்வொன்றிலும் காணலாம். தமிழை அப்படிப் பாடிய புரட்சிக்கவிஞர்தான்,

“இனப்பெயர் ஏன் என்று பிறன்எனைக் கேட்டால்

மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.

நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!’’

என்று பாடினார். தமிழ் உயர, திராவிடன் என்னும் இனச்சொல்தான் பயன்படும் என்பதனை, இன்றைக்கு ‘தமிழ் தேசியம்’ எனப் பேசிக்கொண்டு திராவிட இயக்கத்திற்கு எதிராக உளறும் துரோகிகளுக்கு உறைக்கும் வண்ணம் பாடியிருக்கிறார். தமிழுக்கும், தமிழருக்கும் பகைவர் பார்ப்பனர். எனவே, நாம் திராவிடராய் ஒன்றிணைந்து, நமது இன எதிரிகளாம் பார்ப்பனர்களை வெல்லவேண்டும் என்னும் நோக்கத்தைப் பல பாடல்களில் பாடியிருக்கிறார்.. "பார்ப்பான் பால் படியாதீர்..." என்னும் கவிதையெல்லாம் இன்றைய இளைஞர்களே படியுங்கள், உணர்வீர்கள்.

இதனைப் போல ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு மிக அருமையான கவிதை வரிகளைத் தந்தவர் புரட்சிக்கவிஞர் ஆவார். அதனால்தான் ‘சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டார். “இருட்டறையில் உள்ளதடா உலகம், - சாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே..’’ என்றார் புரட்சிக்கவிஞர். இன்றைக்கும் ‘துக்ளக்’ ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி போன்றவர்கள் ஜாதி வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் ஆமாம் என்று சொல்லிக்கொண்டு சில ஒடுக்கப்பட்டவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

“பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்

பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை’’ என்று பாடினார் புரட்சிக்கவிஞர்.

“சாதி என்னும் தாழ்ந்தபடி

நமக்கெல்லாம் தள்ளுபடி

சேதி அப்படி தெரிந்துபடி

தீமை வந்திடுமே மறுபடி’’ என்று பாடியவர். திட்டமிட்டு இந்துத்துவவாதிகள் சாதிப்பெருமை பேசச்சொல்லும் இந்த நாட்களில் புரட்சிக்கவிஞரின் சாதி ஒழிப்புப் பாடல்கள் பெரும் அளவில் பயன் கொடுக்கும்.

சங்க இலக்கியத்திற்குப் பின் இயற்கையைப் பாடிய கவிஞர். பொதுவுடைமைக் கருத்துகளை, பொது உரிமைக் கருத்துகளைப் பாடியவர். ‘அவர்தாம் பெரியார், பார் அவர்தாம் பெரியார்’ என்னும் பாடலை நமக்குக் கொடுத்து ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்பதனை பல பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர். இன்றைய நடைமுறையில் அதனைக் காண்கின்றோம்.

‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ என்னும் நூலை எழுதிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அந்த நூலில், அவர் படித்த கல்லூரிக்கு ஒன்றாக வந்து மேடையில் அமர்ந்த தந்தை பெரியாரையும் புரட்சிக் கவிஞரையும் பற்றிக் குறிப்பிடும்போது “இரு சூரியர்கள் ஒரு வானில் ஒரு பொழுதில் வந்தது போல- மேடையில் தந்தை பெரியாரும் புரட்சிக்கவிஞரும் தோற்றம் கொடுத்தனர்.’’ எனக் குறிப்பிடுவார். அது மட்டுமல்ல தந்தை பெரியார் அருகில் இருக்க புரட்சிக்கவிஞர் அவர்கள் “இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழனுக்கு தலைவன் இல்லை. இதோ! தலைவன் உங்கள் முன்னால்! இவர் கையில் ஆயுதமாக உங்களை ஒப்படையுங்கள்... நீங்கள் விரும்பும் தமிழ் மீளும். தமிழ்நாடு வாழும்! முண்டங்களாய், முட்டாள்களாய் இதுவரை இருந்தது போதும், இன்னும் அப்படி இருக்க வேண்டுமா? உங்களுக்குள் இருக்கும் தமிழனை மதங்கள், சமயங்கள், வேதங்கள், வியாக்கியானங்கள் எல்லாம் அழுத்தி அழுத்தி அவமானச் சேற்றில் புதைத்து விட்டன. உங்களுக்குள் இருக்கும் தமிழனை, உங்கள் ஜாதிகளே வீழ்த்தி விட்டன. தமிழனை விடுதலை செய்ய, தமிழனுக்குச் சுயமரியாதையை மீட்டுத்தர இவரை விட்டால் நாதி உண்டா? என்று உரை நிகழ்த்தியதை அருகில் இருந்து பார்த்த ஈரோடு தமிழன்பன் அவர்கள் அந்த நூலில் உணர்ச்சியோடு பதிவு செய்திருப்பார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உணர்ச்சிமிக்க கவிதைகளாக புரட்சிக்கவிஞர் தந்த காரணத்தினால்தான் திட்டமிட்டு, புரட்சிக் கவிஞரின் கவிதைகள் மறைக்கப் பட்டன. வானில் இருக்கும் கருப்பு மேகங்கள் எத்தனை நேரம் சூரியனை மறைக்க இயலும்? தகதகக்கும் சூரியனாய் புரட்சிக்கவிஞர் இன்று சுடர் விடுகின்றார். சென்ற ஆண்டு புரட்சிக்கவிஞரின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு அறிக்கை கொடுத்திருந்தார்கள்

புரட்சிக்கவிஞர் - உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!

புகழுக்கோ, பணத்திற்கோ, செல்வாக்குப் பெற்ற பதவிக்கோ என்றும் அடிமையாகா சுயமரியாதை ஆளுமையின் வணங்காமுடி!

அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்த நம் அய்யா அறிவு ஆசான் தந்தை பெரியாரை - அந்நாளிலேயே சரியாகப் புரிந்து, நெறியாக சிக்கென்று பிடித்து, இறுதிவரை உறுதி காட்டிய கொள்கைக் கோமான்!

2020ஆம் ஆண்டில் கொடுமை தரும் கரோனா தொற்று காரணமாக கூடி மகிழ்ந்து கொண்டாட இயலாவிடினும், அவர்தம் கவிதைகளை, அவர் உருவாக்கிய ஈரோட்டுப் பூகம்பக் கவிதைகளைப் படித்து -- பரப்பி - - அவர் வழி -- அதுதானே அய்யா பெரியாரின் ஈரோட்டுப் பாதை -- அதன் வழி நடக்க சூளுரை மேற்கொண்டு, - சுயமரியாதைச் சூடேற்றுவோம் உலகிற்கு.

செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்

இவ்வுலக மக்களில் என்ன பேதங் கண்டாய்?

சுயமரி யாதைகொள் தோழா! - நீ

துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!

சுயமரி யாதைகொள் ...

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ

உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்;

துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று

சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!

அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்

ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்

பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்

பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!

சுயமரியாதைகொள் ...

புதியதோர் உலகு செய்வோம்!

இப்படி கவிஞரின் இலக்கியத் தோட்டத்தின் சுயமரியாதை மணத்தில் சொக்கி மகிழ்ந்து அவரை வாழ்த்தி, அவர் விரும்பிய அறிவு ஆசான் இலக்காகிய ஜாதியற்ற, பெண்ணடிமையற்ற, மூடநம்பிக்கையற்ற சமத்துவமும், பகுத்தறிவும், சமதர்மமும் ஆளும் புதியதோர் உலகு செய்வோம்!

“இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்! வாரீர்! வாரீர்!’’ என்று அழைப்பு விடுத்திருந்தார். புரட்சிக்கவிஞரைப் பற்றி பல நூறு நூல்கள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் புரட்சிக்கவிஞரைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை யெல்லாம்விட புரட்சிக்கவிஞரின் கவிதைகளை உள்ளத்தில் ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியம். பரம்பரைப் பகைவர்கள் பல்வேறு நரித்தனமான சூழ்ச்சி வலைகளைப் பின்னும் இக்காலத்தில், அச்சூழ்ச்சி வலைகளை நறுக்கிட நமக்கு கைவசம் இருக்கும் ‘வாட்கள்’ புரட்சிக்கவிஞரின் கவிதைகள். அவரது கவிதைகளை இன்னும் வீச்சாய் இளைஞர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்போம். மறுவாசிப்பு, கட்டுடைப்பு என்னும் சொற்களால் இன்று சிலர் பழமைச் சிலம்பம் ஆடும் இக்காலத்தில் புதுமைக் கவிதைச் சிலம்பம் ஆட நமக்கு பயிற்சி அளித்த புரட்சிக் கவிஞரை நினைவில் கொள்வோம். அவர் விரும்பிய “புதியதோர் உலகம் செய்ய’’ அவரது கவிதைகளைத் துணையாகக் கொள்வோம்.

நன்றி : உண்மை 16-30 2021



Thursday 29 April 2021

நாய் எரிக்கும் இடத்தில்........

 

நாய் எரிக்கும் இடத்தில் 

நாட்டுக் குடிமக்களை

எரித்துக்கொண்டிருக்கிறார்கள்

எதற்கு இத்தனை 

ஆயிரம் கோயில்கள் நம் நாட்டில்

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


பரந்து கிடக்கிறது பிரபஞ்சம்

இருண்டு கிடக்கிறது 

சாதிகளால்,மதங்களால்

இந்தியனின் மனம்...

ஒட்டு மொத்தமாய்

ஒரே வண்டியில் 

22 சடலங்கள்....

வர்ணப்படி-சாதி பார்த்து 

அடுக்கினாயா இறந்த உடல்களை?

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப்

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


அரசு இடத்தை எல்லாம்

ஆக்கிரமித்து

வழிபாட்டுத்தலங்கள் 

அமைத்தார்கள்...

அமைக்கிறார்கள்....

எல்லா வெற்று இடங்களையும்

சடலம் எரிக்கும் சுடுகாடுகளாய்

மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

நம் தலைநகர் வாசிகள்..

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப்

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது..


மற்ற நோயாளிகளுக்கு

மருத்துவமனைகளில்

குருதியே கிடைக்கவில்லை....

எந்த மதமானால் என்ன?

எந்த சாதியானால் என்ன?

எனது உறவின் உடம்பில்

ஓடுவதற்கு 

அவர் உயிர் பிழைப்பதற்கு

கொஞ்சம் உங்கள் குருதி

கொடுக்க இயலுமா?

வேண்டுகோள்கள் வந்தவண்ணம்....

எது தேவை மக்களுக்கு?

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.. 


செத்து விழுகிறார்கள் மக்கள்...

இந்த நிலையில் 

தேவையா  ஐ.பி.எல்.

கிரிக்கெட்டு விளையாட்டுகள்?

விளையாடிய வீரரே

வெறுத்துப்போய் வெளியேறுகிறார்..

எது தேவை மக்களுக்கு?

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.


ஐ. நா.வின் உதவிகள்

எங்களுக்கு வேண்டாம்..

சீனாவின் ஒத்துழைப்பு

எங்களுக்கு வேண்டாம்...

இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

வெளிநாட்டு பத்திரிக்கைகள் எல்லாம்

திமிர்பிடித்த....

திறனற்ற மோடி அரசென

விமர்சித்திருக்கின்றன....


அகண்ட பாரதக்கனவு காணும்

ஆட்சியாளர்கள்

நாட்டின் அவலங்களைத் 

திரையிட்டு மறைக்க நினைக்கிறார்கள்...

ஆக்ஸிஜன் தேவை எனக் ககறியவர்

மேல் வழக்குப் பதிவு

சாமியார் ஆளும் உ.பி..யில்..

எப்படிப்பட்ட  ஆட்சி 

தேவை மக்களுக்கு.?..

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...



உடை வெளுக்கும் தோழரைக்

கடவுள் முன்னேற்றுமா?

அவர் வளர்க்கும்

கழுதை முன்னேற்றுமா ?

எனக் கேட்ட புரட்சிக்கவிஞரின்

பிறந்த நாள் இன்று....

கடவுளின் பெயரால் 

கலகம் செய்து

ஆட்சியைப் பிடித்தவர்கள்

வெறும் காட்சியாளர்களாய்...

மூட நம்பிக்கை முடைநாற்றம்

வீசுகின்ற பழமைவாதிகளாய்...

எப்படிப்பட்ட  ஆட்சி 

தேவை மக்களுக்கு.?..

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


                                  வா.நேரு,

                                         29.04.2021




Sunday 25 April 2021

பகடி செய்கிறாயே!

 திடீரெனத் 

தரையில் போடப்பட்ட

மீன்களாய் கரோனா

நோயாளிகள் .....

ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன்

எனும் அழுகுரல்

இந்திய நகரங்கள் பலவற்றின்

வளிமண்டலத்தை நிரப்புகிறது...

..


கோமியத்தால் 

எல்லாவற்றையும் 

குணமாக்கிவிடலாம் என 

எண்ணும் குணக்கொழுந்துகள்

மத்திய ஆட்சியில்

அமர்ந்திருக்கிறார்கள்...

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

வாங்கவா ? வேண்டாமா?...

எவரிடம் வாங்குவது?....

முடிவெடுக்க மோடி அரசு 

.எட்டு மாதங்கள் எடுத்திருக்கிறது...


முடிவெடுக்க எடுத்த தாமதத்தால்

மருத்துவமனைகள் கதறுகின்றன...

மருத்துவர்கள் அழுகிறார்கள்...

கரோனா நோயாளிகள் 

மூச்சுத்திணறி சாகிறார்கள்.....

அவலம் நெஞ்சைப் பிழிகிறது...


பதினான்கு மாநில

மக்கள் அழுகுரலைத் தடுக்க,,

பி.எம்.கேர் நிதியிலிருந்து 

வெறும் 200 கோடி கொடுத்திருந்தால்

ஆக்ஸிஜன் இருந்திருக்கும்...

வல்லுநர்கள் சொல்கிறார்கள் 


மராட்டிய அரசு 

கரோனா தடுப்பில் தோற்றுப்போய்விட்டது...

அறிவிப்பவர் மத்திய 

சுகாதாரத்துறை அமைச்சர்...

அட அறிவிலிகளா!

உத்தரப்பிரதேசத்தில் என்ன வாழ்கிறது?

வரிசையாய் வீடுகள் எரியும் நேரம்

பக்கத்து வீட்டுக்காரன் அணைக்கவில்லை

என்று பகடி செய்கிறாயே!

உன் வீடும்தானே எரிகிறது?...


அனைத்தையும் தீர்த்துவைக்கும்

அரிய சஞ்சீவி என்று

மோடியைப் புகழ்ந்துகொண்டிருந்த்

சங்கிகள் ஒன்றும்

மாறுவதாகக் காணோம்.....

எல்லாம் பண்டிதர் நேரு

ஆட்சியால்தான் என்று

மந்திரம் போல டுவிட் 

செய்து கொண்டிருக்கிறார்கள்...


அறிவியல் மனப்பான்மை 

இல்லா ஆட்சியாளர்கள்

அழிவைத்தான் தருவார்கள்....

மதவெறி அடிப்படை

ஆட்சி நாட்டு 

மக்களை மாண்டு

போகத்தான் செய்யும்.


கும்பமேளா எனும் கரோனா மேளா

நடத்திவிட்டு  

கை மீறிப்போய்விட்டது எனக்

கையைப் பிசையும் ஆட்சியாளர்களே

ஆட்சிக் கட்டிலிலிருந்து

கீழே இறங்குங்கள்.....

மதத்தையும் அரசையும்

பிரித்து ஆட்சியை நடத்துவர்கள்

இனியாவது இந்தியாவை

ஆளட்டும்...... 

...


                               வா.நேரு

                                26.04.2021


இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும்.....

 அன்பு நண்பர் நேரு அவர்களுக்கு,

செல்லாத பணம் பற்றி *உங்கள் பார்வையில்* எழுதப்பட்ட உங்களது மதிப்புரை மிகச் சிறப்பு. குறை ஒன்றும் இல்லை. எனினும் என்னுடைய பார்வையில் அந்தப் புத்தகம் பற்றிய மதிப்பீடு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாறுபட்டது.

2019 லேயே அந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை நமது குழுவில் பதிவு செய்துள்ளேன். அந்தப் பதிவின் பிரதி என்னிடம் இப்போது இல்லாததாலும், புத்தகத்தை வாசித்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும் என் நினைவிலிருந்து எழுதுகிறேன். 

கதையின் நாயகி படித்தவள். ஓரளவு வசதியான குடும்பத்தைச் சார்ந்தவள். படித்த இந்தக் காலத்துப் பெண்கள் ஓரளவேனும் தெளிவான முடிவெடுக்கக் கூடியவர்கள் (என்று நம்புகிறேன்). அப்படிப்பட்ட நாயகி ஆட்டோ ஓட்டும் ஒரு ஆணாதிக்க வெறியுள்ள குடிகார, பொறுக்கியைக் காதலனாக வரிப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை; தமிழ் சினிமாவில் மட்டுமே இது நடக்கும். யதார்த்தம் அப்படியில்லை. அந்தக் குடிகார, பொறுக்கி காதலனுக்காக தனக்குக் கிடைத்த அரிதான வேலை வாய்ப்பை உதறிவிட்டு அவனைக் கரம் பிடிக்கிறாள். யாருடைய அறிவுரையாலும் அவள் முடிவை மாற்ற முடியவில்லை. சரி, கல்யாணம்தான் ஆகிவிட்டது; அதற்குப் பிறகும் அவன் திருந்தவில்லை. நாயகியின் மீது வன்முறை பிரயோகம் அதிகமாகிறது. அப்போதாவது அவனைப் பிரிந்து வந்து விடலாம். செய்யவில்லை. கணவனே கண் கண்ட தெய்வம்? வன்முறையின் உச்சமாக அவள் தீயில் கருகி உயிருக்குப் போராடி மரணம் அடைகிறாள். மரண வாக்குமூலத்தில்கூட அந்தப் பொறுக்கிக்கு நல்ல சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டு இறக்கிறாள். என்னே பதிவிரதா மகிமை! 

நாயகியை ஒரு படிக்காத தற்குறியாய், பத்தாம்பசலியாய் படைத்து அவளின் குடும்பம் வறுமையில் வாடுவதாய்க் காட்டியிருந்தால் ஒருவேளை அவளின் தவறான முடிவிற்கும், திருமணம் ஆகியபின் தொடரும் அதீத வன்முறையைச் சகித்துக் கொண்டு பிறந்தவீடு வராமல் இருப்பதற்கும் ஒரு நியாயம் இருப்பதாகக் கருதலாம். அப்படியும் தீயில் வெந்து சாகும் தருவாயில் கொடுக்கும் மரண வாக்குமூலத்தில் கணவனைக் காப்பாற்ற முயல்வது அபத்தத்தின் உச்சம். ’நாடகக் காதல்’ என்று சில அரசியல் தலைவர்கள் சொல்லுவதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது.

காலம் காலமாய், திருவள்ளுவர் முதற் கொண்டு (தெய்வம் தொழாள்…) பெண்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட  அடிமைத்தனத்தை அவர்களுக்குத் தரும் கல்வி விலக்கும் என்று பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வளர்த்த நம்பிக்கையைத் தகர்த்து, என்னதான் படித்தாலும் பெண் அடிமையாக, கையாலாகத்தனம் உள்ளவளாக, புழுவினும் கேவலமாகத் தான் இருக்கிறாள் என்று இந்தக் கதையில் இமையம் நிறுவுகிறாரா? அநீதி கண்டு பொங்கி எழாமல் அதற்கு பணிந்து போவதுடன் அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதுபோல் நாயகி நடந்து கொள்வது அயற்சியையும் கோபத்தையும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு உண்டாக்குகிறது. இதை இமையம்தான் எழுதினாரா என்று வியக்க வைக்கிறது. மற்றபடி மருத்துவமனை நிகழ்வுகள் மனம் கலங்கும்படி இருக்கின்றன.

சாகித்ய அகடாமி விருதுக்கு இமையம் 100 சதம் தகுதியானவர் என்பதில் துளியும் ஐயமில்லை. அதற்காகத் தேர்ந்தெடுத்த நாவல்தான் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு விருதும் சமூக நீதி, பெண் விடுதலை, சமூக முன்னேற்றம், சமுதாய முன்னெடுப்பு, மனித நேயம் ஆகியவற்றைப் பிரச்சார நெடியின்றி, யதார்த்தமாக, மக்கள் மனதில் படும்படி எழுதப்பட்ட படைப்புகளுக்கே தரப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த வகையில் இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும் என்பதே என் எண்ணம்.

மேலே சொன்னவை ஒரு வாசகனாய் என் சொந்தக் கருத்து. இதில் பல வாசகர்கள் மாறுபடலாம்.


திரு.எஸ்.எஸ். அவர்கள், 'வாசிப்போர் களம் ' வாட்சப் குழுவில் என்னுடைய 'செல்லாத பணம் ' நூல் விமர்சனக்கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதியது.

Wednesday 21 April 2021

நொடிப்பொழுது தப்பியிருந்தாலும்



இதுதான் வீரம்..

இதுதான் அறிவு..

இதுதான் மனிதம்..


நொடிப்பொழுது தப்பியிருந்தாலும்

நொறுங்கியிருக்கக்கூடும்

விழுந்த குழந்தையோடு

இவரின் உடலும்

சுக்கு நூறாக 

உடைந்திருக்கக் கூடும்..


கதறும் தாயின் குரலும்

கண்டு பிடிக்க இயலா

அவள் நிலையும்

கணப்பொழுதில் அவளுக்கு

கண் தெரியவில்லை

என்பதனை இவருக்கு 

உணர்த்தியிருக்கக் கூடும்...


என்ன வேகம்...

என்ன விரைவு...

என்ன துணிவு...

இன்று நீ 

உலகம் முழுவதும்

அறியப்பட்டிருக்கிறாய்....


உன்னோடு வேலை பார்க்கும்

அனைவரும்

ஒன்றாய் நின்று 

கைதட்டி வரவேற்ற அந்த நேரம்!

நாங்களும் கூட அந்த வரிசையி'ல்

நின்று வரவேற்க வேண்டுமென

எங்கள் மனம்....


என்ன மொழி பேசுவாய் நீ!

எங்களுக்குத் தெரியவில்லை...

உனைப்பற்றிய அதிக விவரங்கள்.

நாங்கள் அறியவில்லை...

மகத்தான செயலால்

மனிதர்கள் அனைவர்

உள்ளத்திலும் நிறைந்திருக்கிறாய்.....

உன்னதமான உன் செயலால்

உலகம் முழுவதும்

உன் புகழ் பரவியிருக்கிறது....


அரசாங்க ஊழியர்கள் மேல்

அடுக்கடுக்காய்ப் பழி விழும் 

இந்த நாளில்

எடுத்துக்காட்டாய்ப் பாய்ந்து

தன்னுயிர் மறந்து 

பச்சிளம் பாலகனின்

உயிரைக் காப்பாற்றியிருக்கிறாய்...


மும்பையின் வாங்கனி

ரயில் நிலையத்தில் 

திசை காட்டும் ஊழியராய்

பணியாற்றும்  மயூர் செல்கியே!

உன் புகழ் ஓங்கட்டும்!

உன் குடும்பம் உன்னோடு இணைந்து

நன்றாக வாழட்டும் !



              வா.நேரு, 21.04.2021

              (17.04.2021 சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு அடிப்படையில் எழுதியது)

 

மயூர் செல்கி குழந்தையைக் காப்பாற்றும் காணொளி.....நன்றி பிபிசி  செய்திகள்...இலண்டன்

https://www.bbc.com/news/world-asia-56818056 



Sunday 18 April 2021

மதுரையில் திராவிடப்பொழில் குறித்து எழுச்சியுடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம்

 


மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் 11.04.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 முதல் 7.30 வரை விடுதலை வாசகர் வட்டம் சார்பாக சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று தோழர் அழகுபாண்டி உரையாற்றினார்.தலைமையேற்ற மதுரை,விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் இராசேசுவரி இராமசாமி அவர்கள் 'திராவிடப்பொழில்' என்னும் இந்த ஆய்வு இதழ் இன்றைய தேவை என்றும் ,தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் ,திராவிடப்பொழிலின் முதல் இதழ் மிகச்சிறப்பாக இருப்பதாகக்குறிப்பிட்டு கட்டுரைகளைப் பற்றி உரையாற்றி,விடுதலை வாசகர் வட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவோம் என்று குறிப்பிட்டார். 'திராவிடப்பொழில் ' முதல் இதழின் சிறப்பு என்ற தலைப்பினில் உரையாற்றிய தோழர் பா.சடகோபன் அவர்கள் இதழின் வடிவமைப்பு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார். 

அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரை என்பதே ஓர் ஆய்வுக் கட்டுரையாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர்,ஆய்வுச்செய்திகள் பல அந்தக்கட்டுரையில் இருப்பதை விளக்கமாகக் குறிப்பிட்டார். அய்யா பேரா.ப.காளிமுத்து அவர்களின் கட்டுரையைக்குறிப்பிட்டு வரலாற்றுத்தகவல்களோடு 'தமிழ் நாடு ' என்னும் பெயர் குறித்து அறிந்துகொண்டோம் எனக்குறிப்பிட்டு மற்ற கட்டுரைகளைப் பற்றியும்  உரையாற்றினார்.

வாழ்த்துரை வழங்கி உரையாற்றிய திராவிடர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்கள் தனது உரையில், "நமது வணக்கத்துக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிந்தனையில் தோன்றி, அதற்கு செயல்வடிவம் உருவாக்கி அப்பணியை, பேராசிரியர் குழுவினர் ஒன்றிணைந்து செயலாற்றி, குறித்த காலத்தில் வெளியீட்டு விழா நடந்தேறியது. உலகம் முழுவதும் தந்தை பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்லும் வகையில் திராவிடப் பொழில் என்ற ஆராய்ச்சி காலாண்டு மின்னிதழ் ஏடு, பகுத்தறிவு, பண்பாடு, வரலாறு,கலை, நாகரீகம், மொழி, மனிதம், போன்றவற்றை பற்றி பல கண்ணோட்டங்களில் சிறந்த ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகளால் நிரப்பப்பட்ட இதழ். கடுகைத்துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் என்பதைப் போல் திராவிட பொழில் மின்னிதழ், அச்சிதழ் என்னும் இரண்டு வடிவங்களில் அரங்கேறி உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அதன் சிறப்புகளை அசைபோட்டு பார்க்க...பகிர்ந்து கொள்ளவே..அத்தலைப்பில் இவ்வாசகர் வட்ட கூட்டம் நடைபெறுகிறது. " என்று குறிப்பிட்டார்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் பொறுப்பாளர் வழக்கறிஞர் இராம.வைரமுத்து ,பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாவட்டத்தலைவர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிறைவாக 'திராவிடப்பொழில் ' என்னும் தலைப்பினில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.அவர் தனது உரையில், அய்யா ஆசிரியர் அவர்களின் எண்ணத்தில் உதித்த இந்த திராவிடப்பொழில் என்னும் இதழின் தோற்றம் குறித்தும் ,முதல் வெளியீட்டு விழா குறித்தும் குறிப்பிட்டார். உலகத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆய்வு அறிஞர்கள் ஐந்து பேர் இந்த இதழைப் பெற்றுக்கொண்டதையும், முன்னாள் துணைவேந்தர் அவர்கள் திராவிடப்பொழில் இதழை வெளியிட்ட செய்தியையும் குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாதம் நடந்த திராவிடப்பொழில் ஆய்வரங்கம் குறித்தும்,அதில் உரையாற்றிய அய்யா டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள்,  பொட்டல் காடாகக் கிடந்த வல்லதில் உள்ள இடம், அய்யா ஆசிரியர் அவர்களின் தொலை நோக்குப்பார்வையால் இன்றைக்கு பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ந்து மேலோங்கி நிற்கிறது என்னும் வரலாற்றைக்குறிப்பிட்டதையும். அந்த பெருமை மிகு பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் சார்பாக இந்த திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழ்  வெளிவருகிறது என்று குறிப்பிட்டதையும்  குறிப்பிட்டார். தொடர்ந்து திராவிடப்பொழிலின் முதல் இதழில் உள்ள  ஒவ்வொரு கட்டுரையையும் எடுத்துக்கொண்டு உரையாற்றிய வல்லுநர்கள் பற்றியும்,3 மணி நேரத்திற்கு மேல் நடந்த அந்த ஆய்வரங்கில் முழுமையாகக்கலந்து கொண்டு நிறைவாக அய்யா ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையையும், விளக்கங்களையும்   குறிப்பிட்டார். உலகத்தின்,இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்குள் இந்த ஆராய்ச்சி இதழ் சென்றிருப்பது குறித்து உரையாற்றியதோடு,தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களைப் பார்க்கும் நமது தோழர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக இந்த இதழுக்கான சந்தா மற்றும் நன்கொடைகளைக் கொடுப்பதைப் பற்றியும் உரையாற்றினார்.
அய்யா ஆசிரியர் அவர்கள் திராவிடப்பொழில் என்னும் இதழ் பற்றிய அறிவிப்பினை விடுதலையில் வெளியிட்டது முதல் இன்றுவரை நடந்து இருக்கும் திராவிடப்பொழில் இதழின் வரலாற்றைக் குறிப்பிட்டார்.வரும் ஏப்ரல் 14-ந்தேதி திராவிடப்பொழிலின் இரண்டாம் இதழ் வெளிவருகிறது. திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும், இதழின் சிறப்பு ஆசிரியர் பாரீசில் இருக்கும் கல்வியாளர் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர், முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன்,பேரா.ப.காளிமுத்து,பேரா.நம்.சீனிவாசன்,சிகாகோ டாக்டர் -பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம-இளங்கோவன் அவர்களைப் பற்றிய சிறப்புகளை அவையில் எடுத்துவைத்தார். அவர்களோடு இப்போது ஆசிரியர் குழுவில் சிங்கப்பூர் கல்வியாளர் அய்யா சுப.திண்ணப்பன் அவர்களும் இணைந்திருப்பதைக் குறிப்பிட்டார்.

திராவிடப்பொழில் என்பது திராவிட இயக்கத்தின் அடுத்த கட்டப்பாய்ச்சல்,உலகம் முழுவதும் இருக்கும் கல்வியாளர்களிடம் திராவிட இயக்கத்தின் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சி.'திராவிடபொழில்,அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுவதைப் போல 'எல்லோருக்கும் எல்லாம்' என்னும் திராவிடத்தை உலகக் கல்வியாளர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சிக்கு அனைவரும் உதவிட வேண்டும். திராவிடப்பொழில் என்று இணைய தளம் உள்ளது. மிக அருமையாக இந்த இணைய வடிவம் அமைக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ்,மாணவரணி பொறுப்பாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், விடுதலை மேலாளர் சரவணன் ஆகியோர் உள்ளிட்ட  ஒரு பெரிய குழு இந்த இதழுக்காக உழைப்பை அளித்துக்கொண்டுள்ளனர். தயவுசெய்து இந்த திராவிடப்பொழில் என்னும் இணையதளத்திற்குள் சென்று பாருங்கள். இதழைப் படியுங்கள்.மற்றவர்களுக்கும் இந்த இணையதளத்தைப் பற்றிக்கூறுங்கள்.

உங்களால் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத முடியவில்லை என்றால், எழுதக்கூடியவர்களை அடையாளம் கண்டு இந்த இதழைக் கொண்டுபோய்ச்சேர்க்க உதவுங்கள், உயர் கல்வி மாணவர்கள்,பேராசிரியர்கள் மத்தியில் இந்தத் திராவிடப்பொழிலை கொண்டு செல்ல உதவி செய்யுங்கள், அப்படிப்பட்டவர்களிடம் சந்தா சேகரித்துத் தாருங்கள்.மதுரையில் கேட்டவுடன் பத்தாயிரம் அளித்த இராசேசுவர் இராமசாமி அவர்களுக்கும்,திராவிடர் கழகக் காப்பாளர் அய்யா சே.முனியசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து , சந்தா அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து,இன்னும் நிறைய சந்தாக்களை சேர்ப்பதற்கு உதவி செய்யுங்க்ள்,நீங்கள் படிப்பதோடு முதுகலை, முது அறிவியல், ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ,மாணவிகளிடம் இதழைக் கொண்டு போய்ச்சேர்க்க உதவி செய்யுங்கள்  என்று கேட்டுக்கொண்டு, உரையாற்றினார்.
நிறைவாக எல்.ஐ.சி. அதிகாரி செல்ல.கிருட்டிணன் அவர்கள் நன்றி கூறினார்.கூட்ட நிகழ்வினை திராவிடர்கழகத்தின் மாவட்டச்செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.நிகழ்வில் முனைவர் பேரா. சி.ரமசு அவர்களும் ,ஜெயப்பிரகாசு அவர்களும் திராவிடப்பொழில் இதழுக்கான ஒரு ஆண்டு சந்தாவினை வழங்கினர்.


Saturday 17 April 2021

கிருமிகளும் கிருமி நாசினியும் ....முனைவர்.வா.நேரு


கிருமிகளும் கிருமி நாசினியும்
                                                                        முனைவர்.வா.நேரு


தந்தை பெரியாரின் தத்துவம் தனித்தன்மையானது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியாதது.சில ஆண்டுகளுக்கு முன்னால் தான் மட்டுமே ஒரு புரட்சிகரமான இயக்கத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருந்த ஒரு நண்பர் எனக்கு இருந்தார். அவர் எனக்கு தூரத்து உறவினரும் கூட. என்னை விட பத்து வயது இளையவர்,  என்னை 'அண்ணே' என்று உரிமையோடு அழைத்து பேசிப் பழகக்கூடியவர்.ஒரே ஊர்,உறவினர், தன்வீடு,தன் குடும்பம்,சோறு,சம்பாத்தியம் என்று இல்லாமல் அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து ,அதற்காக நேரத்தை,உழைப்பை செலவழிப்பவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. தான் விற்கக்கூடிய  பத்திரிக்கைகளை என்னிடம் கொடுப்பார். எந்த நூல் என்றாலும் பெரும்பாலும் ஓசியாகப் படிக்கக்கூடாது என்ற எண்ணம் உடையவன் நான் என்பதால் அதற்கு உரிய பணத்தைக் கொடுப்பேன். பெற்றுக்கொள்வார்.ஆனால் திராவிடர் கழகத்தில் நான் இருப்பதை ஏதோ பிற்போக்குத்தனம் என்று எண்ணிக்கொண்டு,தான் முற்போக்கு இயக்கத்தில் இருப்பதாக ஒரு உயர்வு நவிற்சியிலேயே எப்போதும் உரையாடிக்கொண்டிருப்பார். எந்த இயக்கத்தைச்சார்ந்தவராக இருந்தாலும், அடுத்த  இயக்கத்தை  சார்ந்தவர்களைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மனப்பக்குவம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவரிடம் வாக்குவாதம் செய்யாமல் விட்டுவிடுவேன்.,அதனை எளிதாக எடுத்துக்கொண்டு கடந்து வந்து விடுவேன்.

அந்த நண்பர் தேர்தல் நேரத்தில் என்னை மிகவும் வம்புக்கு இழுப்பார்.'தேர்தல் பாதை திருடர் பாதை" என்பது அவரது கோட்பாடாக இருந்தது.தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். எல்லாக்கட்சிகளுமே மோசம்.இந்தத் தேர்தலில் பங்கு பெற்று நமக்கு ஒன்றும் நன்மை கிடைக்கப்போவதில்லை.அதனால் தேர்தலைப் புறக்கணித்து விட்டு ,புரட்சிக்கான வழிவகைகளைச்செய்யவேண்டும் என்பது அவரின் பேச்சாக இருக்கும்.

நான் அவரிடம்  தேர்தலைப் புறக்கணிப்பதில் எங்களுக்கு  நம்பிக்கை இல்லை. தேர்தலைப் புறக்கணிப்பதால் நாம் யார் வரவேண்டாம் என்று நினைக்கின்றோமா அவர்கள் வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. எங்கள் இயக்கத்திற்கு என்று தனித்தன்மையான பார்வை இருக்கிறது. கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக (இப்போது 75 ஆண்டுகளுக்கு மேலாக ) தேர்தலில் போட்டியிடாத இயக்கம் திராவிடர் கழகம்.தந்தை பெரியார் தனக்கு இரண்டு முறை முதலமைச்சர் ஆகும் பொறுப்பு வந்த போதும்,பெரும்பதவிகளைத் தருவதாக சிலர் சொன்னபோதும் அதனையெல்லாம் மறுத்தவர். தான் மட்டுமல்ல, தனது இயக்கமான திராவிடர் கழகத்தைச்சார்ந்தவர்கள் யாரும் தேர்தலிலே போட்டியிடக்கூடாது என்பதிலே மிகக் கண்டிப்பாக இருந்தவர். பதவி ஆசை இருப்பவர்கள்,கட்சியின் பின் வாசல் வழியாகச்சென்று விடலாம் என்று உணர்த்தியவர்.ஆனால் தானோ, தனது இயக்கத்தைச்சார்ந்தவர்களோ தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்ததைப் போலவே, ஒவ்வொரு தேர்தலிலும் தன்னுடைய கொள்கைக்கு யார் ஆதரவாக இருப்பார்கள் என்பதனை உணர்ந்து,அந்தக் கட்சிக்கு தன்னுடைய இயக்கத்தைச்சார்ந்தவர்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதைச் சொன்னவர்,அது மட்டுமல்ல தான் ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தவர், தன்னுடைய தொண்டர்களை தான் ஆதரிக்கும் கட்சிக்கு ஏன் ஆதரவளிக்கிறோம் என்பதனைத் தெளிவுபடுத்தி, வழிகாட்டி,பிரச்சாரம் செய்யச்சொன்னவர் என்றெல்லாம் விளக்கியபோது, அவர் நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.நான் சொன்ன கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல,'தேர்தல் பாதை திருடர் பாதைதான்', நான் ஓட்டுப்போடமாட்டேன், மற்றவர்கள் ஓட்டுப்போடுவதையும் பிரச்சாரத்தின் மூலமாகத் தடுப்பேன் " என்று அவர் சொன்னது எல்லாம் நினைவில் நிற்கிறது.

அண்மையில் மிக நீண்டகாலம் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் மருதையன் அவர்களின் பேட்டியைப் படித்தேன்.

கேள்வி : இப்போது இருக்கிற நிலைமையில் தி.மு.க.வால் பாசிசத்திற்கு எதிராக என்ன சாதித்துவிட முடியும் என்பதற்காக திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறீர்கள்..


தோழர் மருதையன :திமுகாவால் சாதித்துவிடமுடியும் என்பதற்காக இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் சொல்லவில்லை.பாசிசம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கவேண்டும்.அவ்வாறு தடுப்பதற்கு நமது கையில் இருக்கிற சாத்தியமான ஒரே மாற்று திமுகதான்.கமலஹாசன் இல்லை,விஜயகாந்தும் இல்லை.வேறு யாரும் இல்லை.அதிமுக கூட்டணி ஆட்சியில் அமர்வது என்பது நேரடியாக பாஜகவை ஆட்சியில் அமர்த்துவது போன்றதாகும்.அப்படி அமைந்தால் நாம் நேரடியாக பாசிசத்தின் கீழ் வந்துவிட்டோம் என்று பொருள்.உ.பி.யாக குஜராத்தாக நாம் மாறப்போகிறோம் என்று பொருள்.இதைத் தடுக்கவேண்டும். -
தோழர் மருதையன் அவர்களின் பேட்டியைப் படித்தபோது ,மகிழ்ச்சியாக இருந்தது.

“ ஜன நாயகம் என்பது தலையை எண்ணுவதுதானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல “ என்றார் தந்தை பெரியார்.இந்த ஜனநாயகம் என்பது மிக விநோதமானது.தந்தை பெரியார் அளவிற்கு இந்த ஜன நாயகத்தை,தேர்தல் முறையை நார் நாராகக் கிழித்தவர்கள் வேறு யாரும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.  தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட  திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடுவதில்லை. திராவிடர் கழகமாக மாறிய நாளில் இருந்து ,கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக அதில் எந்த வித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து பயணிக்கும் ஒரே இயக்கம் இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட திராவிடர் கழகம் ஒன்றுமட்டும்தான்.தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொல்லக்கூட இயக்கங்களிலே தனித்தன்மையானது திராவிடர் கழகமாகும். தான் தேர்தலில் போட்டியிடாமல், ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாரை ஆதரிக்கவேண்டும்,ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதனை விளக்கமாக எடுத்துவைப்பது தந்தை பெரியார் காலத்திலிருந்து நடைபெறும் நிகழ்வாகும்.இன்றைக்கு வரும் சட்டமன்றத்தேர்தலில் திராவிடர் கழகத்தோழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும், யார் வெற்றி பெற பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதையும்  திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்    விளக்கியிருக்கிறார்.

.13.03.2021 குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே  முன் மொழிந்த  அரசியல் தீர்மானம் ‘ நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டப்பேரவைத்தேர்தலும் -நமது கடமையும் ! ‘என்னும் தலைப்பிலே ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட்து.

 அத்தீர்மானத்தின் கடைசிப்பகுதி

“மண்ணின் மைந்தர்களான மக்களை மத ரீதியாக ,ஜாதி ரீதியாக பிரித்து,சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழவேண்டும் என்ற கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ்-சங் பரிவார்-பா.ஜ.க. உள்ளிட்ட வெறுப்பை வளர்க்கும் சக்திகளான இந்தப் பிற்போக்குச்சக்திகள்,கட்சிகள் தமிழ் மண்ணில் தலையெடுக்க அனுமதிக்க்க்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமாயும் இவற்றிற்குத் துணை போகும் அ.இ.அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணியையும் படுதோல்வியுறச்செய்யவேண்டும். அதற்கு ஆக்கபூர்வ மாற்று தி.மு.க. கூட்டணியே என்பது அதன் கொள்கைத் திட்டங்களே சான்றாகும்.தி.மு.க. அணியின்  வெற்றி என்பது வெகுமக்கள் நல்வாழ்வின் வெற்றி என்பதையும் மனதில்கொண்டு வாக்களிக்குமாறு இப்பொதுக்குழு தமிழக வாக்காளர்ப் பெருமக்களை முக்கியமாகக் கேட்டுக்கொள்கிறது.

ஆட்சி மாற்றம் தேவை என்பது வெறும் காட்சி மாற்றத்திற்காக அல்ல;நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றாக -விடியலாக அமைய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகவே இந்த வேண்டுகோளை வாக்காளப் பெருமக்க்ள் முன் வைக்கிறோம் ..வெல்லட்டும் திராவிடம் “ என்ற இந்த்த் தீர்மானத்தை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே முன்மொழிந்தார்கள். திரண்டிருந்த திராவிடர்  கழக உறுப்பினர்கள் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பி இந்த்த் தீர்மானத்தை வழிமொழிந்த காட்சி அற்புதமாக இருந்த்து.

இன்னும் கூட நோட்டாவுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் 'முற்போக்கு 'தோழர்கள் இருக்கிறார்கள்.'ஊழல் 'அற்றவர்களுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் 'உத்தமர்கள் 'இருக்கிறார்கள். 'திராவிடத்தால் வீழ்ந்துவிட்டோம்'- அதனால் நம்ம ஜாதிக்காரர்களுக்கு  ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கும் 'தமிழர்கள்' இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட குழப்பவாதிகளைப் புரிந்து கொள்ளும் அறிவைப் பெரியாரியல் நமக்கு வழங்கியிருக்கிறது

தந்தை பெரியார் இயக்கத்தின் இரண்டு கண்கள் போன்ற கொள்கைகள் சாதி ஒழிப்பும்,பெண்ணடிமை ஒழிப்பும்தான்.சாதி ஒழிய வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் வாழ் நாள் முழுவதும் போராடினார்,வாதாடினார்,சிறை ஏகினார். சாதி ஒழிய வேண்டும் என்றால் ,இந்து மதம் ஒழிய வேண்டும் என்று சொன்னார். ஆனால் இந்து மதத்தை விட்டு தந்தை பெரியார் வெளியில் செல்லவில்லை. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புத்தமதத்திற்கு மாறப்போகிறேன்,நீங்களும் வாருங்கள் என்று சொன்னபோது,தந்தை பெரியார் மறுத்தார். நீங்கள் செல்லுங்கள்,சாதாரணமாகச்செல்லாதீர்கள், இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டிக்கொண்டு மொத்தமக வெளியேறுங்கள் என்று சொன்ன தந்தை பெரியார் ,தான் இந்துமதம் என்னும் அமைப்புக்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராடினார். வெற்றி கண்டார்.

தந்தை பெரியார் பெண்ணுரிமை வேண்டும் என்னும் நோக்கில் குடும்ப அமைப்பு முறையை மிகக் கடுமையாகச்சாடினார். 'பெண்களே வீட்டை விட்டு வெளியே வாருங்கள்'என்று பகிரங்கமாக அறைகூவல் விடுத்தார். திருமணம் ஒரு கிரிமினில் குற்றமாக்கப்படவேண்டும் என்று உரையாற்றினார்.ஆனால் இருக்கும் குடும்ப அமைப்பு முறைக்குள் விதவை மறுமணம் மற்றும்  சுயமரியாதைத் திருமண முறையைக் கொண்டுவந்தார். சட்டபூர்வமான அங்கீகாரம் என்பது பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 1967-ஆம் ஆண்டில்தான் சுயமரியாதைத் திருமணத்திற்கு கிடைத்தது. ஆனால் 1930- களில் இருந்து ஏறத்தாழ 40 ஆண்டுகள் சுயமரியாதைத் திருமணங்களை தான் தலைமையேற்று நடத்தியதோடு,பேரறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன்,பேரா.அன்பழகன், ஆசிரியர் கி.வீர்மணி எனத் தன் கொள்கை பேசும் பலரும் தலைமையேற்று நடத்திட வழி வகுத்தார். அப்போது நடந்து கொண்டிருந்த வைதீகத் திருமணங்களுக்கு மாற்றாக ஒரு நேர்மறையான அணுகுமுறையாக சுயமரியாதைத் திருமண முறை அமைந்தது.

இப்படித் தந்தை பெரியார் கொள்கைகளின் தனித்துவத்தை விவரித்துக்கொண்டே செல்லலாம்.இருட்டாக இருக்கிறதே என்று திகைத்து நிற்பதற்கு அல்ல கொள்கை. மாற்றாக இருட்டை விளக்குவதற்காக ,கையில் சிறு மெழுகுவர்த்தி இருந்தால் கூட ஏற்றிவைத்து, இருட்டை விளக்கி பின்பு மின் விளக்கினால் முழு இருட்டையும் நீக்கி, ஒளி ஏற்படுத்துவ்தே பெரியார் கொள்கை.அதுவே பெரியாரியல் அணுகுமுறை. இன்றைக்கும் கூட சிலர் கூறுகின்றார்கள். " வாக்கு இயந்திரத்தையே மாற்றி விடுவார்கள், என்ன செய்ய முடியும் ?" என்று ஒரு நம்பிக்கை இழப்போடு பேசுகிறார்கள். சுற்றி நடப்பதை முழுவதையும் உள்வாங்கிக்கொண்டு ,அதற்கு எதிராக பிரச்சாரம்,பிரச்சாரம்,பிரச்சாரம் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதே இன்றைய தேவை.மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், பொய்யும் புரட்டும் தூள் தூளாகும். எப்படிப்பட்ட மோசடியும் அம்பலமாகும்..

இது கரோனா தொற்றுக்காலம்.கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது. இவ்வளவுதான் நமது உலக வாழ்க்கையா என்று சிலர் நினைத்துக்கொண்டு நிற்கையில் அறிவியல் அறிஞர்கள்  தடுப்பூசியைக் கண்டுபிடித்து, மக்களுக்கு  கிருமி நாசினியை ஏற்றுவதன் மூலம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒப்பிட்டு " கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி போல வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்.போன்ற கிருமிகள் நம்மை அழிக்கத்துடிக்கின்றன.இந்தக் கிருமிகளைத் தடுக்கும் தடூப்பூசிதான் தி.மு.க.அதற்கான கிருமி நாசினிதான் திராவிடர் கழகம் " என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் 18.03.2021 தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது போல(விடுதலை 19.03.2021) , ஆர்.எஸ்.எஸ். கிருமி, என்னனவோ வேடமிட்டு தமிழ் நாட்டை அழிக்கப்பார்க்கிறது. விபூடணர்களை வரிசையாக இறக்கிவிடுகிறது.வித விதமாய் ஆட்களைத் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு, ஆளுக்கு கொஞ்சம் ஓட்டைப் பிரித்தால் தி.மு.க. அணியைத் தோற்கடித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.தமிழ் நாட்டில் உறுதியாக இந்த ஆர்.எஸ்.எஸ். & பி.ஜே.பி. எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. பி.ஜே.பி. மட்டுமல்ல, அதோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி,மு.க, பா.ம.க.வும் மண்ணைக் கவ்வுவது உறுதி இந்தத் தேர்தலில்.

நண்பர்களே, ஏப்ரல் 6-ந்தேதி மிக முக்கியமான நாள். திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவிலே  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அப்ப்டியே ஏற்று, திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்கள், மறுமலர்ச்சி தி.மு.க்..விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அந்தக் கூட்டணியில் உள்ள அத்தனை வேட்பாளர்களுக்கும் நமது வாக்கினை ஏப்ரல் 6-அன்று அளிப்போம். அதன் மூலம் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு வழி வகுப்போம். திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் சொன்னதுபோல 'அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.'வை மீட்பதற்கும் நாம் வாக்களிப்பது மிகத் தேவையும் முக்கியமும் ஆகும். திராவிடம்வெல்லும், அதனை இந்தச்சட்டமன்றத் தேர்தல் முடிவும் சொல்லும்.

நன்றி : உண்மை இதழ் -ஏப்ரல் 1-15,2021








 

Thursday 15 April 2021

நம்பிக்கையற்றுப்போவதே .....

 நீண்ட வரிசையில்

காத்திருக்கிறார்கள் மக்கள்

நெடு நேரமாகவும்

காத்திருக்கிறார்கள்....


ஊடகங்கள் காட்டிய

பிம்பம்

சுக்கு நூறாய் உடைகிறது...

வளர்ச்சி வளர்ச்சி என்று

காட்டப்பட்ட இடத்தின் 

சுடுகாட்டில்தான்

மக்கள் நீண்ட வரிசையில்

நெடு நேரமாகக்காத்திருக்கிறாரகள்...


இறந்து போன உறவுகளின்

பிணங்களோடு சுடுகாட்டில்

வரிசை வரிசை வரிசையாக...

எரிக்க இடமில்லை...

மணிக் கணக்காய் 

காத்துக்கிடப்பதாய் 

வ்ரும் செய்திகள் சொல்கின்றன....


ட்ரம்ப வருகை  எனச் சொல்லி

உண்மையை மறைக்க

சுவெரழுப்பி மறைத்தார்கள்....

வரிசையாய் நிற்கும் 

பிணத்தின் நாற்றம்

ஆட்சியின் நாற்றமாய்

உலகெங்கும்  நாறுகிறது..


தன் மாநிலத்து நிலைமை இது..

இதைக் கவனிக்க நேரமில்லை

மேற்கு வங்கத் தேர்தலில்

ஒத்தைக்கு ஒத்தை நிற்கும் 

பெண்ணுக்கு எதிராய்

மல்லுக்கட்டும் மனநிலையில்

நம்மை ஆள்பவர்கள்.....


சதீஸ்கர் மாநிலத்து

அமைச்சருக்கு முன்னால்

உரத்த குரலில் அழுகிறார்

துடிக்கின்றார்.. வார்த்தைகளால்

வெடிக்கின்றார்.. விம்முகின்றார்

மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்

பார்ப்பதற்கு யாருமில்லை...

பிணமாய் என் தந்தையைக் 

கொண்டு செல்கிறேன்..

ஓட்டுக் கேட்க வரும் அமைச்சரே..

இது உங்கள் கண்களுக்குத் 

தெரியலையா என்று துடிக்கும்

அப்பெண்ணின் வேதனைக்கு 

என்ன பதில்? எவர் தருவார் பதில்?.


கும்பமேளா என்னும் பெயரில்

கொத்து கொத்தாய்க்கூட்டம்...

பக்தி என்னும் பெயரில் 

நடக்கும் கூத்தும்...கும்மாளமும்

மாஸ்க்கை எங்கோ மாட்டிக்கொண்டு

வாழும் விலங்குகளாய்

வரிசை வரிசையாய்

எந்த வித இடைவெளியும் இன்றி


உலகம் நம்மைப் 

பார்த்து சிரிக்கிறதே...

முக நூலில் மருத்துவர்

அய்யா சோம இளங்கோவன் பதிவு

அழுவதா! சிரிப்பதா...

இங்கு ஆள்பவர்களின் 

கோமாளித்தனங்களைப் பார்த்து.....


நம்பிக்கையற்றுப்போவதே 

அனைத்திலும் ஆபத்தானது....

ஆள்பவர்களின் மேலான

நம்பிக்கை அற்று விழுகிறது....

அறிவார்களா? அவர்கள்.....


பாகுபாடு காட்டும்

பழமைவாதிகளே 

நம் ஆட்சியாளர்கள்...

மக்களின் மனதில்

ஆழமாக விதை விழுகிறது...

ஒரு நாள் அது 

வெடித்துச்சிதறும்

அப்போது ஆணவமும்

அதிகாரமும் தூள்-தூளாகும்


                            வா.நேரு,16.04.2021


அறிவுவழி காணொலி நிகழ்ச்சி- 'பேரறிஞர் அம்பேத்கர் ' என்னும் தலைப்பில் ஆற்றிய உரை


https://youtu.be/xWWoF0Dq4_U 


 அறிவுவழி காணொலி நிகழ்ச்சியில் நேற்று(15.04.2021) 'பேரறிஞர் அம்பேத்கர் ' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் இணைப்பு. 

தோழர் ஓவியாவின் உரையின் சில துளிகள்


சத்தமிட்டுப் பேசிக்கொள்ளும்

பெண்களே...

உங்களுக்காகத்தான் பேசுகிறோம்

நாங்கள்...

கொஞ்ச நேரம் மட்டும்

உங்கள் செவிகளை

எங்கள் பக்கம் கொடுங்கள்

என வேண்டுகோள் வைக்கின்றார்....


வைதீகத் திருமணம் 

நம்மை நாமே இழிவுபடுத்துவது..

சுயமரியாதைத் திருமணம்

நமக்கு நாமே 

மரியாதை செலுத்துவது...


எங்களது பிள்ளைகளிடம் நாங்கள்

முதலில் திருமணம் வேண்டுமா 

என்பதனை  முடிவு செய்யுங்கள்

என்றுதான் சொல்கின்றோம்..


அப்படி வேண்டும் என்று முடிவெடுத்தால்

இணையரைத் தேர்ந்தெடுத்து

எங்களிடம் சொல்லுங்கள்...

என்றும்தான் சொல்கின்றோம்...

பின்பு  இப்படி

திருமணத்தை முடித்துவைக்கிறோம்

என்றுதான் சொல்கிறோம் 


1946-ல் தந்தை பெரியார் பேசிய

உரை உங்கள் கைகளில்

நூலாய்த் தவழ்கிறது...

இப்படி ஒரு திருமணத்தில் 

அவர் பேசியதுதான் நூலாய் இன்று....


எவ்வளவு மாறுதலை எதிர்பார்த்து

பேசியிருக்கிறார் அவர்...

இன்னும் அப்படியே இருக்கிறோமே நாம்..

இந்தியாவிற்குள் மாட்டிக்கொண்டதால்

இப்படி இருக்கிறோமோ?....

அமெர்த்தியா சென் சொன்னதுபோல

தனித்துப் போய் இருந்தால்

உலகில் தலை நிமிர்ந்து இருப்போமோ?...

அய்யா விரும்பிய மாற்றம்

அனைத்துமே நிகழ்ந்திருக்குமோ?...


இந்தத் திருமணத்தில் 

பெண்கள் நிறைய இருக்கிறீர்கள்

பரவாயில்லை ...குறைவான

நகை அணிந்துதான் அமர்ந்திருக்கிறீர்கள்...


முன்பெல்லாம்

திருமணத்திற்கு மணப்பெண்ணை 

அழைத்துச்சென்று அலங்கரித்தார்கள்

இப்போதோ திருமணத்திற்கு வரும்

அனைவருமே அழகு நிலையம் 

சென்றுதான் வருகிறார்கள்...


நாம் பெண்கள்...

வெறும் அலங்காரப்பொம்மைகளா நாம்?

நகை மாட்டும் ஸ்டாண்டுகள்தானா நாம்?

கைகளில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட

அய்யாவின் நூலை வாசித்துப்பாருங்கள்!


சாதி மறுப்புத் திருமணம்

சடங்கு மறுப்புத் திருமணம்

தாலி மறுப்புத் திருமணம்..

காதல் திருமணம்...

ஏற்றுக்கொண்ட இணையர்களின்

பெற்றோர்களுக்கு  எங்கள் நன்றி...


கேள்விகளால் அரங்கத்தை 

நிமிரச்செய்து

தெளிவான குரலில்

செறிவான கருத்துகளை

மேடையிலே எடுத்து வைத்து...

மதுஸ்ரீ-மணிமாறன் 

இணையேற்பு விழாவை 

இன்றைய நாளில் 

மதுரையில் நடத்திவைத்த

தோழர் ஓவியாவின் உரையின்

சில துளிகள்....


                       வா.நேரு,14.04.2021


Monday 12 April 2021

வெறுப்பை உமிழச்சொல்வதே.....

 சதுரகிரி மலைஅடிவாரம்

சாரல் சாரலாய்

மனிதர்கள் ஆன்மிகம்

தேடி வரும் இடம்...

அவ்விடத்தில் பிறந்த நான்

பெரியாரின் மனிதத்தால்

ஈர்க்கப்பட்டேன்

ஈர்க்கப்பட்ட பின்தான்

எனக்குத் தெரிந்தது

பெரியாரின் மானுடமே

நாத்திகம் என்று.....


உடன்பிறந்த அண்ணன்

சதுரகிரி மலைக்கு

அமாவாசை தோறும்

மலை ஏறிக்கொண்டிருக்கிறார்...

எனக்கு என்னமோ

இளம் வயது முதலே

பெரியார் திடலே 

பிடித்துப்போயிற்று....


சடங்குகளை மறுத்து

சாதிகளை வெறுத்து

மனிதம் மட்டுமே

மனிதர்களின் அடையாளமாய்

மண்ணில் வாழச்செய்யும்

பெரியாரியல் இரத்தத்தில்

ஊறிப்போயிற்று,,


விலங்குகளிடம் அற்புதமாய்

பழகும் நான் அறிந்தோர்

ஏன் இப்படி மனிதர்களிடம்

தள்ளி நிற்கிறார்கள் 

எனும் கேள்வி எனக்குள்

நெடு நாளாய் நின்றது...


உயரத்தில் பிடித்து அவள்

தண்ணீரை ஊற்ற

இருகை நிரப்பி 

பாப்பாத்தி ஒருவரிடம்

தண்ணீர் குடித்த கதையை

என் தாயார் 

என் இளமையில் சொல்லக் கேட்ட 

எனக்கு 

அண்ணல் அம்பேத்கர்

சொன்ன ஏணிப்படி சாதி அமைப்பு

எளிதில் புரிந்து போயிற்று...


தனக்குக் கீழ்ப்படியில்

இருக்கும் மனிதர்களிடம்

வெறுப்பை உமிழச்சொல்வதே

சாதி அமைப்பு...

அதுவேதான்

இந்து மதம் சொல்லும்

சனாதன அமைப்பு என்னும்

உண்மை புரிந்து போயிற்று...


அண்ணலும் அய்யாவும் ஒன்றுதான்

சாதி ஒழிப்பே மானுட விடுதலை

சாதி ஒழிப்பே மண்ணின் விடுதலை

சாதி ஒழிப்பே சமத்துவம் காட்டும் பாதை...

                                 வா.நேரு    

                                 12.04.2021

Thursday 8 April 2021

நமக்கு என்ன குறை நிகழும்?

                 

ஊக்கமூட்டும் 

ஒரு வார்த்தை 

ஒரு மைல்தூரம்

எளிதாகக் கடக்க

நெம்புகோல் போல

உதவுகிறது....


படைத்த நூலை

பக்கம் பக்கமாகப் 

படித்து

அதில் குறிப்புகளை

எழுதி

எழுதி வைத்த பாராட்டைச்

சொல்வதை விட..

மனதில் எழுந்த 

வினாக்களை ஐயங்களை

எழுத்தாளனிடம்

கேட்பதை விட

மிக உயர்ந்த பரிசு

நூலைப் படைத்தவனுக்கு

வேறு என்ன 

கிடைத்து விடப்போகிறது...?


எழுதுகிறவன் 

எதை நோக்கி எழுதுகிறான்?

தங்கப் பேனா பரிசாகக்

கிடைக்கும் என்றா

வெறும் பேனாவில்

எழுதுகிறான்.?


அன்றாடம் காணும்

அவலங்களை

சொற்களால் விளையும்

கொலைகளை

குவிப்புகளால் விளையும்

குமுறல்களை

ஏதோ ஒரு வகையில்

தவிர்க்கவேண்டும்

எனும் எண்ணோடத்தில்தானே

எழுதுகிறான்/எழுதுகிறாள்....


எழுதும் சொல் ஏதேனும்

ஒன்றிரண்டு

படிப்பவர் மனதில்

தைக்கவேண்டும்...

அதனால் ஒரு 

மாற்றம் நிகழல் வேண்டும்.

என்றுதானே எழுதுகிறான்..


படைக்கும் அவசரத்தில்

அடுத்தவர் புத்தகம்

எதனையும் படிக்கும் நேரம்

எனக்கு இல்லை 

என்றார் ஒருவர்....

உங்கள் படைப்பும்

குறைப்பிரசவப் 

படைப்பாகவே இருக்கும்

என்றேன் நான்....


எவரையும் படிக்காமல்

எனது புத்தகத்தை

எல்லோரும் படிக்கவேண்டும்

எனும் விருப்பம் சரிதானா?


எழுதும் நேரம் போலவே

மற்றவர் படைப்பைப்

படிக்கும் நேரத்திற்கும்

நேரம் ஒதுக்குவோம்...


குப்பையாகக் கருதும்

எழுத்தை

மாற்றி மாற்றிச் சொரிதல்

தேவையில்லை

எனினும்

உண்மையான எழுத்து

என உணரும் நேரம்

ஓரிரண்டு சொற்களால்

படைத்தவனை

வாழ்த்துவதில் 

நமக்கு என்ன குறை நிகழும்?..


                         வா. நேரு, 09.04.2021


பற்ற வைக்கும் வல்லமை......

           

எதைப் பற்றி எழுதுவது

என நினைக்கையில்

எழுதுவதைப் பற்றி

எழுதுவது என முடிவு....


எவர் எவரோ எழுதியிருக்கிறார்

குன்றென தமிழ்க்கவிதைகள்

குவிந்து கிடக்கிறது இணையத்தில்

இன்னும் ஒரு கவிதை

எழுதுதல் தேவைதானா?

எனும் உனது குரல் 

எனக்கும்  கேட்கிறது...


அவர் அதை எழுத

இவர் இதை எழுத

நான் எதை எழுத

என யோசித்துக்கொண்டே இராதே!

எழுது தம்பி எழுது...


வானில் பறந்து கிடக்கும்

நட்சத்திரங்களில்

எந்த நட்சத்திரம் நல்ல

ஒளியைத் தரும் என்பதை

எப்படி உணர்ந்து கொள்வது?

ஆயிரக் கணக்கில் வரும்

கவிதைகளில் எந்தக் 

கவிதையை ஈர்ப்புக் கவிதை

என ஏற்றுக்கொள்வது?


எது ஈர்ப்பு என்பதனை

முடிவு செய்பவன் வாசிப்பவன்..

முடிவை வாசிப்பவனிடம் விடு...

பாடல் படைக்கும் தொழிலை

தொடர்ந்து கொண்டே இரு....


ஒற்றை வரி 

உலகில் தீப்பிடிக்க

வைக்கக் கூடும்..

ஒற்றை வரி

உலகில் பொதுமையைக் 

கொண்டு வரக்கூடும்...

ஒற்றை வரி ..

வீட்டிற்குள் அடைக்கப்படும்

பெண்களின் சிறைகளை

உடைக்கக்கூடும்

ஒற்றை வரி

மனித நேயத்தை உலகில்

வளர வைக்கக் கூடும்...


அந்த ஒற்றை வரி

எது என்பது 

உனக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது...

எந்த மொழியில் 

எழுதக் கூடும் எனத் தெரியாது..

ஆனாலும் அந்த ஒற்றை வரி

கவிதை வரியாகத்தான்

இருக்கக் கூடும்....

ஏனெனில் பற்றவைக்கும்

வல்லமை கவிதை

வரிகளுக்கு மட்டுமே உண்டு...

எழுது...தம்பி...எழுது.. எழுது.

                           வா.நேரு,08.04.2021






Tuesday 6 April 2021

திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்....

 

அவள் இருதலைக் 

கொள்ளி எறும்பு

போலத் திணறுகிறாள்..

எது சரி என

முடிவெடுக்க முடியாமல்

திணறுகிறாள்...


நடக்கப்பழகிய 

காலம் முதலே 

அவள் மனதில்

கடவுள் நம்பிக்கையை

புகுத்திய பெற்றோர்.....


இதிகாசப் புராணக் 

கதைகள் எல்லாம்

உண்மையென்றே நம்பி

கேட்டு வளர்ந்த பெண் அவள்..


தும்மும்போதும்

கதவில் இடிக்கும்போதும்

இடியோசை கேட்கும்போதும்

இறைவனை அழைத்தே

பழக்கப்பட்டவள் அவள்....


எத்தனை முறை 

அழைத்திருக்கிறாய் கடவுளை...

எப்போதாவது வந்திருக்கிறாரா?...

என ஒரு கேலிப்புன்னகையோடு

கேள்விகளாகக் கேட்கிறான்

காதல் கணவன்...


'சாதலும் வாழ்தலும் அற்ற

இடமாய்' 

காதல் களிப்பினில்

கட்டிலில் திளைத்திருக்கும்

வேளையில்

எல்லா இடத்திலும் 

இருக்கும் கடவுள்

இப்போதும் பார்த்துக்

கொண்டிருக்கிறாரா? 

எனக் கேட்கிறான்....

காது ஓரத்தில்

முத்தங்களைக் கொடுத்தபடி...


அன்பு மழையில் 

நனைக்கும் கணவனின்

அன்பினில் எக்குறையும்

இல்லை இல்லறத்தில்...


நம்பிக்கைகள் மேல்

கேலி கிண்டல்களின்

வழியாக வந்து விழும்

அடியால்

உண்மை எது?பொய் எது?

என முடிவெடுக்க முடியாமல்

திக்கித் திணறி

இல்லறத்திற்குள் 

நுழைந்தவுடனேயே

முடிவெடுக்க முடியாமல்

திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்,,,


                           வா.நேரு,07.04.2021