Tuesday 26 April 2022

டோட்டோசான்- ஜன்னல் ஓரத்தில் ஒரு சிறுமி


23.04.2022 அன்று டோட்டோசான்- ஜன்னல் ஓரத்தில் ஒரு  சிறுமி  என்னும் நூலைப் பற்றி வாருங்கள் படிப்போம் குழுவில் பேசிய உரை எனக்கே மன நிறைவாக இருந்தது. பலரும் பாராட்டிய நிகழ்வாகவும் அமைந்தது..அந்த உரை யூடியூப்பில்.ஒரு மணி நேர நிகழ்வு. நேரம் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். நன்றி.


https://youtu.be/Oiq-fGsuMuY 

Saturday 23 April 2022

கல்வி : தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை!.. முனைவர் வா.நேரு

 திராவிட மாடல் என்பது இன்று தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவிலும் உலக அளவிலும் பேசப்படும் ஒரு கருத்தியலாக மாறியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அடைய முடியாத உயர் கல்வி சதவிகிதத்தை (50 சதவிகிதம்) தமிழ்நாடு அடைந்ததும் அதிலும் பெண்களின் உயர் கல்வி 50 சதவிகிதத்தைத் தொட்டிருப்பதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதைப்போல திராவிட மாடலில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகையில்  சரிபாதியான  பெண்கள், உள்ளாட்சிப் பதவிகளிலும் 50 சதவிகிதத்தைப் பெற்றிருக்-கிறார்கள். இது வேறு எந்த நாட்டிலும், எங்கும் நிகழாத நிகழ்வாகும்.



காலையில் படி, கடும்பகல் படி, மாலை இரவு முழுவதும் படி படி என்னும் முழக்கம் திராவிடர் இயக்கத்தின் முழக்கமாகும்.படிப்பினால் உயர்வுபெற்ற இந்தத் தலைமுறை, தங்களது பிள்ளைகளின் படிப்பிற்கு கழுத்தில் கத்தியாகத் தொங்கி நிற்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டு மிரண்டு நிற்கும் வேளையில், இருட்டைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல, இருட்டை எதிர்ப்பது  மட்டுமல்ல, நாங்கள் இருட்டுக்கு மாற்றாக வெளிச்சத்தைக் காட்டும் விளக்குகளை ஏற்றுபவர்கள் என்ற வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ் நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கடந்த ஆண்டு அமைந்து இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பொழுதே மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும். அதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்-பட்டது.

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்-பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அதாவது ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்-கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு  சுய அறிவோடு வாழத் தகுதியுடையவனாக வேண்டும் என்றார் பெரியார். தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை குழுவினரைப் பார்க்கும்போது நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.


தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராக முன்னால் தலைமை நீதிபதி த.முருகேசன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவில் வெறுமனே கல்வியாளர்கள் மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள், இசைக் கலைஞர், விளையாட்டு வீரர் எனப் பலரும் இடம் பெற்றிருக்கிறனர். எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், முன்னால் பேராசிரியரும் எழுத்தாளருமான ச.மாடசாமி, முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர் நேசன், கணினி இயல் பேரா.இராமானுஜம், பேரா.சுல்தான் இஸ்மாயில், பேரா.இராம. சீனுவாசன், யூனிசெப்பின் முன்னாள் கல்வி அலுவலர் அருணா ரத்னம், கல்வியாளர் துளசிதாஸ், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, அகரம் ஜெயஸ்ரீ தாமோதரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பாலு என இந்தக் குழுவின் பட்டியல் நமக்கு ஆர்வம் ஊட்டுகிறது.

'டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி' என்ற புத்தகம் மிகப் புகழ் பெற்ற புத்தகம். தான் சிறுவயதில் படித்த 'டோமாயி' என்னும் பள்ளி பற்றிய அனுபவத்தை டெட்சுகோ குரோயா நாகி  என்பவர் ஜப்பானிய மொழியில் எழுதிய புத்தகம். தந்தை பெரியார் சொன்னதைப் போல சுதந்திரத்தோடு - சுய அறிவோடு வாழ்வதற்கான களப்பணிக் கல்வியைக் கொடுத்த பள்ளிக்கூடமாக 'டோமாயி' என்னும் அந்தப் பள்ளியைப் படிப்பவர் யாரும் உணரமுடியும்.


கூடாரம் அமைத்துப் பள்ளியில் தங்கியது, விளையாட்டின் மூலமாக கல்வியைக் கற்றது, விரும்பிய கதையை ஒரு மாணவனோ, மாணவியோ எவ்வளவு நேரம் சொன்னாலும் அதைப் பொறுமையாக ஆசிரியரும் மற்ற குழந்தைகளும் கேட்பது, விரும்புவதைப் பாடுவது, விரும்பிய பாடத்தை அதிக நேரம் படிப்பது, இசையோடு கூடிய உடற்பயிற்சி, புதுமையான விளையாட்டுகள் என்று கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டதை டெட்சுகோ குரோயாநாகி விவரித்திருப்பார். விடுமுறை விட்டு விட்டால் பள்ளிக்கூடம் எப்போது திறக்கும், நாம் பள்ளிக்குச் செல்ல எனக் குழந்தைகள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருப்பதையெல்லாம் அந்த நூலாசிரியர் எழுதியிருப்பார்.



தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை குழுவில் இடம் பெற்றுள்ள இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா,’’ கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் இல்லை. அது ஒரு முழுமையை நோக்கிய நகர்வு. அதில் எல்லா விஷயங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். அது கலையாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம். இவையெல்லாம் கல்விக்குள் இருக்க வேண்டுமென பல கல்வியாளர்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார்கள். படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் ஆகியவை வேண்டு-மென்றால், சமத்துவம், சமூகத்தை ஏற்றத் தாழ்வின்றிப் பார்க்கும் பார்வை ஆகியவை வேண்டுமென்றால் இம்மாதிரியான பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய குழு முக்கியம். இந்தக் குழுவில் கலை, விளையாட்டு ஆகியவற்றுக்கு இடம் கொடுத்திருப்பது மிக முக்கியமான நகர்வு’’ என்று குறிப்-பிட்டிருக்கிறார்.


ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற நோக்கங்களை முன்வைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள், தனது 89-ஆம் வயதில், கடும் வெயிலில் கன்னியாகுமரி தொடங்கி சென்னைவரை பரப்புரை செய்யும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசின் இந்தப் புதிய கல்விக்கொள்கை குழு அமைப்பு அறிவிப்பு நமக்கு உற்சாகம் அளிக்கிறது. திராவிட மாடலுக்கு அடிப்படை கல்வியும் சுகாதாரமும்தான். அந்த வகையில் இன்னும் வலுவாக கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் அமைய இந்தப் புதிய குழு அறிக்கையை அளிக்கட்டும். மேலும்  பகுத்தறிவும் பண்பு நலனும் பெற்ற மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் கற்று, உலகம் முழுவதும் பரவி, திராவிட மாடலைப் பறைசாற்ற இக்குழு வழிவகை செய்யட்டும்..

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ்- ஏப்ரல்16-30


புத்தகமும் நானும்......23.04.2022 - .உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு

 


புத்தகமும் நானும்......23.04.2022 - .உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு


           இன்று புத்தக நாள்.தோழர்கள் அனைவருக்கும் புத்தக நாள் வாழ்த்துகள். வாருங்கள் படிப்போம் என்னும் குழுவில் 'டோட்டாசான்-' என்னும் ஜப்பானிய புத்தகம் பற்றிப் பேச இருக்கிறேன். புத்தக நாளில் ஒரு புத்தகம் பற்றி 45 நிமிடம் பேசப்போவது உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வருடம் 2022-ல் எனது 4-வது புத்தகமான 'சொற்களின் கூடுகளுக்குள் ' என்னும் கவிதைத் தொகுப்பும், 5-வது புத்தகமான'சங்கப்பலகை ' என்னும் நூல் விமர்சனங்கள் அடங்கிய நூலும் வெளிவர இருக்கிறது..இந்த இரண்டு புத்தகங்களும் அன்புத்தோழர் அகன் அவர்களின் முயற்சியால் சென்னையில் வெளியிடப்படவும்,அந்த நூல்களைப் பற்றி கவிஞர்கள் வித்யா மனோகர் மற்றும் பிரேமா இரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றவும் இருக்கிறார்கள்.


எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி ' நாவல் சென்ற மாதம் சென்னையில் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது.திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் அந்தப் புத்தகத்தை வெளியிட்டு ,ஒரு அருமையான பாராட்டுரையை அறிவுமதிக்கு அளித்தார்.வாருங்கள் படிப்போம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமா.மகேஸ்வரி அவர்கள் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.


ஒரு விருது போட்டிக்காக வந்த புத்தகங்களைத் தோழர் அகன் அனுப்பியிருந்தார். பல  நூல்களைப் படித்து அதற்கு மதிப்பெண் அளித்து ,அனுப்பும் வேலை. மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்தேன். புத்தம் புதிய புத்தகங்கள். கரும்பு தின்னக் கூலியா வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் எழுதுகிறார்கள்.அதுவும் பெண் எழுத்தாளர்கள் மிக நன்றாக எழுதுகிறார்கள்.


வாருங்கள் படிப்போம் என்னும் வாட்சப் குழு மிக அருமையான குழுவாக இருக்கிறது.அதில் நானும் எனது பிள்ளைகள் எழுத்தாளர்கள் சொ.நே.அன்புமணியும்,சொ.நே.அறிவுமதியும் இணைந்திருக்கிறோம். வாரம் 2 நாட்கள் 2 புத்தகங்கள் பற்றிய அறிமுகம். பேரா.உமா மகேஸ்வரி அவர்கள் இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து அருமையாக ஒருங்கிணைப்பு செய்கின்றார்.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் இதன் இயக்குநர்.எழுத்தாளர்கள் அர்ஷா மனோகரன்,சுனிதா ஸ்டாலின், அண்ணன் குமரன்,அண்ணன் இளங்கோ என ஒரு பெரிய குழு இந்த நிகழ்வுக்காக வேலை செய்கிறார்கள்.பல அருமையான புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

வாருங்கள் படிப்போம் குழு போலவே வாருங்கள் படைப்போம் என்னும் குழுக் கூட்டம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும்.இதில் படைப்பாளர்களின் நேர்முகம்.மிக ஆரோக்கியமான,திறந்த மனதுடன் கூடிய உரையாடலாக இந்த நிகழ்ச்சி அமைகிறது. படைப்பாளர் என்ற முறையில் என்னை எழுத்தாளர் அர்ஷா மனோகரன் நேர்காணல் செய்தார்.நேர்காணலுக்குப் பின் நடைபெறும் கேள்வி பதில் மிகவும் குறிப்பிடத்தக்கது.இதன் ஒருங்கிணைப்பாளராக தோழர் வினிதா மோகன் அவர்கள்.அற்புதமாக,நிறைய முன்னேற்பாடுகள் செய்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அவருக்கு உறுதுணையாக அண்ணன் கோ.ஒளிவண்ணன்,கவிஞர் உமா மித்ரா,கவிஞர் தீபிகா சுரேஸ்,அண்ணன் இளங்கோ என ஒரு குழுவினர் ஒத்தாசையாக இருக்கின்றனர். 


உண்மையில் கடந்த பல மாதங்களாக கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். நடப்பு சார்ந்த,பெரியாரியல் நோக்கில் அமைந்த கட்டுரைகள்.திராவிடப்பொழில் என்னும் அற்புதமான ஆய்விதழ் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மூலமாக வெளிவருகிறது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதழின் புரவலராக இருந்து வழி நடத்துகிறார்.ஆய்வுக் கட்டுரை என்றால் என்ன?அது எப்படி அமைய வேண்டும்?, ஆய்வுக் கட்டுரை எழுதும் ஓர் எழுத்தாளரின் இடம் என்பது எவ்வளவு உயர்ந்தது..போன்ற பல்வேறு படிப்பினைகளை இந்த திராவிடப்பொழில் இதழ் எனக்குக் காட்டுகிறது. இதன் ஆசிரியர் குழுவில் பாரிஸ் பல்கலைக் கழகப்பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர்,சிங்கப்பூர் பேரா.சுப.திண்ணப்பன், முன்னாள் துணைவேந்தர் அய்யா பேரா.ஜெகதீதன்,பேரா.ப.காளிமுத்து,பேரா.நம்.சீனிவாசன் என்னும் மிகப்பெரும் ஆளுமைகளோடு இணைந்து பணியாற்றுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.


புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 'சில புத்தகங்கள் சொல்லும் பெரியாரியல் ' என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றிப் பேச வாய்ப்பு அளித்தார்கள். புதுச்சேரி திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்களும் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தலைவர் நடராசன் அவர்களும் தொடர்ந்து எனக்கு பேச வாய்ப்பளித்து 19 முறை காணொளி வழியாகப் பல புத்தகங்களைப் பற்றிப்பேசுவதற்கு வாய்ப்பு அளித்தார்கள்.பேசிக்கொண்டே இருக்கும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.


அதனைப்போலவே சென்னை அறிவுவழிக் காணொலி நிகழ்ச்சியிலும் பல புத்தகங்களைப் பற்றி மதிப்புரை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அய்யா சேரலாதன் அவர்களும் தாமோதரன் அவர்களும்,மோகன்ராசு அவர்களும் இணைந்து நடத்தும் காணொலிக் குழு இது.


வாசிப்போர் களம் என்னும் குழுவில் இருக்கும் சிலரின் வாசிப்பு என்னைத் திகைக்க வருகிறது. குறிப்பாக எனக்கு அதிகாரியாக இருந்த திரு எஸ்.சுப்பிரமணியம்,கோட்டப்பொறியாளர் பி.எஸ்.என்.எல்.அவர்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை,அதுவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் இணைந்து நிறைய இருக்கிறது.தோழர் சங்கையா அருமையான நூல்களை இயற்றும் ஆசிரியராக மாறியிருக்கிறார்.


                  இதோடு இன்னும் கொஞ்சம் பழைய நிகழ்வுகளும் சில திருத்தங்களுடன். ஏற்கனவே படித்தவர்கள் கடந்து போகலாம்.


                  புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் 'பொன்னியன் செல்வன்' புத்தகத்தை எடுத்துக்கொண்டு,சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்கார்ந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஜெயராஜு  ஒரு அடி அடித்து, சாப்பிடாமாக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது. படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்கு சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.


                கல்லூரி படிக்கும் காலத்தில் , திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்த அனுபவம், சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது.பெரியாரியல் பட்டயப்பயிற்சிக்காக பேரா.கி.ஆழ்வார் அவர்கள் மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது.பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந.இராமநாதன் அவர்களை நேரிடையாகச்சந்தித்ததும்,புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக 'செவியுணர்வுச்சுவையுணர்வோடு 'சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை. காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம்,பொதுவுடமை எனப் பல திக்குகளிலிருந்தும் கிடைத்த புத்தகங்களை வாசிப்பதும் கல்லூரிக் காலங்களில் ஓடிக்கொண்டிருந்தது. தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ' நான் ஏன் காந்தியைக் கொன்றேன் ?' என்னும் புத்தகத்தை உடன் படித்த நண்பன் கொடுக்க அதனைப் படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. அந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை. 


                படித்து முடித்து ,திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது,வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தனர்.குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார்.1984-85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய்-தம்பி,பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர்.திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது ,உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர்.நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர்.இன்று மிக உயர்ந்த நிலையில் தன்னுடைய வாசிப்புகளை வைத்திருக்கும் கருப்பையா அண்ணனின் வாசிப்பு வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும்.பொன்னுசாமி வெகு காலத்திற்கு முன்பே விடை பெற்றுக்கொண்டு விட்டார். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான்.ஏனோ ஆங்கிலக் கதைக் கரு எனக்கு ஒட்டவில்லை. 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார். பிரபஞ்சனின் 'எனக்குள் ஒருத்தியை ' - நான் படித்ததை உடன் வேலை பார்த்த சேகருக்கு கொடுத்ததும், அவரின் வாழ்க்கை முடிவு மாறியதும் தனிக்கதை.


மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது.இன்று அவர் எனது நினைவில் வாழ்பவராக மாறிவிட்டார். அற்புதமான வாசிப்பாளர். 'புதிய காற்று ' எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார் அவர். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தக்ங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும. இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்களின் புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது. 


             மதுரைக்கு வந்த பின்னர், கார்முகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு ,ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.'ஸ்பார்ட்டகஸ் 'போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும் , பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.


              திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், 'நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்துவிடுகின்றேன் 'என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.


 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக 'படித்த பார்ப்பன நண்பரே ' என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் தொகுப்பாக 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது. 


  பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்க தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக்கொண்டிருக்கின்றார். 'புத்தகத் தூதன் ' எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை இன்றும் விற்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் கணேசன்,க.அழகர்,அழகுபாண்டி,மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்க தோழர்களாக இருக்கின்றனர். 


             மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன்,இந்து பத்திர்க்கை ஆசிரியர் அண்ணாமலை,மேலாளர் முரளி  எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்....எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை...இன்றைக்கு எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்கள் இல்லை.


எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் தோழர் அகனின் முயற்சியால் 'சூரியக்கீற்றுகள் ' என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. 


          எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடம், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக்கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்...


மதுரையில் கணினிப் பயிற்சி நிலையம் வைத்திருந்த தோழர் ஓவியா அவர்களும் அவரின் கணவர் வள்ளி நாயகம் அவர்களும் புத்தகத்தால் எனக்கு அறிமுகம் ஆயினர். தோழர் வள்ளி நாயகம் தன்னுடைய உழைப்பால்,அற்புதமான தலைவர்களைப் பற்றிய நூல்களை எழுதினார்.அதை என்னிடத்தில் படிக்கக் கொடுத்தார். இன்று அவர் இல்லை. தோழர் ஓவியா அவர்கள் இப்போது எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார். தொடர்ந்து புத்தகங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.


            மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது.நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது. 


            புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் 'காரல் மார்க்ஸ் நூலகம்' என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். 'எனக்குரிய இடம் எங்கே ' என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும். 45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா.மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்கார்ந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி  பேசினார்.வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார்.  


எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது. எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தில் முதுகலை முடித்திருக்கும் எனது மகள் 'ஆழினி' என்னும் நாவலை எழுதியிருக்கிறார். எனது மகள் எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது,எழுதி புத்தகங்கள் வெளியிடுவதும்,அதனால் பாராட்டுப் பெறுவதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ' நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே ' என்று சொன்ன நேரத்தில் உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால் மனதார அதுதான் உண்மையான சொத்தாக நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,


           எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும்..பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன். 


        எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்..வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு,தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும்.பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது... புத்தகக் கடைகளும்தான்.....

Thursday 14 April 2022

'திராவிடம்' என்ற ஒற்றைச்சொல் நம்மை இணைக்கிறது....


'திராவிடம்' என்ற ஒற்றைச்சொல் நம்மை இணைக்கிறது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு -சார்பாக 'திராவிடப்பொழில்' இதழ் ஆய்வு இணைய வழிக் கூட்டம்.


பெரியார் பன்னாட்டு அமைப்பு-சார்பாக திராவிடப் பொழில் இதழ் ஆய்வு இணைய வழிக் கூட்டம் ஏப்ரல் 09,2022 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு(அமெரிக்க கிழக்கு நேரம் காலை 10 மணி) நடைபெற்றது.இந்த இணைய வழிக் கூட்டத்திற்கு  பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர்,திராவிடப் பொழில் இதழின் ஆசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில் திராவிடப்பொழில் இதழ் இதுவரை 5 இதழ் வந்துள்ளது.இது 5-வது இதழ் பற்றிய கூட்டம். எனக் கூறி ஒருங்கிணைப்பு உரையாற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களை அறிமுகப்படுத்தினார்.நாகம்மையார் இல்லத்துக் குழந்தைகளோடு தொடர்ந்து உரையாற்றி அவர்களுக்கு கதை,கவிதை எழுதச்சொல்லி ,இன்று கதை,கவிதைகள் எழுதும் அளவிற்கு நாகம்மையார் இல்லத்துப் பிள்ளைகள் வளர்வதற்கு காரணமானவர் அன்புடன் ஆனந்தி எனக்குறிப்பிட்டார்.


நிகழ்வைப் பற்றிக் குறிப்பிட்டு,கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களை அறிமுகப்படுத்தி,அன்புடன் ஆனந்தி அவர்கள் திராவிடப் பொழில் இதழின் முதன்மை ஆசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களை உரையாற்ற அழைத்தார்.

கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் தன் உரையில் "திராவிடம் என்ற ஒற்றைச்சொல் நம்மை இணைக்கிறது.தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றுதான்.என்பதை தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் திராவிடப்பொழில் முதல் இதழிலேயே ,வாழ்த்துரையையே ஓர் ஆய்வுக் கட்டுரை போலக் கொடுத்து இதை விளக்கியிருந்தார்கள்.திராவிடம் என்னும் சொல் பற்றி அதில் விரிவாக அறியலாம்.திராவிடம் என்னும் சொல் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சொல்.நம்மாழ்வார் திராவிட வேதம் என்றார்.பொழில் என்றால் வெறும் பூங்கா மட்டுமல்ல. எப்போதும் வற்றாத நீர்வளம் உள்ள பூங்காதான் பொழில்.எப்போதும் அது பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும்.எனவேதான் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் திராவிடப்பொழில் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அறிவு பெறச்செய்ய பிரச்சாரம்

இதனுடைய  நோக்கம் என்னவென்றால் அறிஞர்கள் மத்தியில் மட்டும் தங்கிவிட்ட கருத்துக்களை வீட்டிற்கும் வீதிக்கும் கொண்டு வரவேண்டும் ,எல்லோரிடமும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.இரண்டாவது நாம் தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்பட்டவர்கள்.ஒரு புறம் மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்று மக்களை அறிவுபெறச்செய்ய பிரச்சாரம் பயன்படுகிறது.இன்னொருபுறம், நமது முன்னோர்களை கல்வி பெறாமல் செய்துவிட்டு  குறிப்பிட்டவர்கள் மட்டும் கல்வி பெற்றுக்கொண்டார்கள்.அந்தக் கல்வியை வைத்து நிறைய ஆவணங்களை வைத்துச்சென்றுவிட்டார்கள்.இன்று கல்விப்புலத்தில்,அவர்களின் ஆவணங்களை வைத்தே நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.தமிழ்,இந்திய,உலகப் பல்கலைக் கழகங்கள் ஆவணங்கள் எதிர்பார்க்கின்றார்கள். திராவிட இயக்கம் கைதூக்கி விட்ட்தால்,கல்விப் படிகளிலே நாம் மேலேறி விட்டோம்.தந்தை பெரியார்,பெரியாருக்கு முன்,பெரியாருக்குப்பின் பேரறிஞர் அண்ணா உள்ளிட்டவர்கள் பாடுபட்டதால் நாம் இந்த அளவிற்கு உலகப்பல்கலைக் கழகங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த சான்று ஆவணங்கள் என்று  வருகின்றபோது ,அறிவு பூர்வமான சான்று ஆவணங்களுக்கு நாம் இன்னும் நிறைய மெனக்கிட வேண்டும்.தொகுப்புகள் நிறையச்செய்ய வேண்டும்.ஆய்வுகள் நிறையச்செய்ய வேண்டும்.உலக அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையிலே ஆய்வுகள் செய்யவேண்டும்.அய்யன் வள்ளுவன் தொடங்கி நம்மிடம் நிறைய அறிவு இருக்கிறது.வள்ளுவரிலிருந்து தொடங்கி பெரியார்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,பேரறிஞர் அண்ணா என்று பலர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறார்கள்.அந்த அறிவை ஒன்று திரட்டி ஆய்வு முறையிலே,அறிவியல் முறையிலே எப்படி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பதுதான் திராவிடப்பொழிலின் நோக்கம். ஆய்வுக் கட்டுரைகள் வழியாக நிறையப்பேசவேண்டும்.

தமிழை திராவிடம் என்றுதான் சொல்கிறார்கள்

தமிழ்தான் திராவிடம்.எகிப்தில் தமிழை திராவிடம் என்றுதான் சொல்கிறார்கள். தமிழ் திராவிட மொழிக் குடும்பமாக மாறியபோது பல மொழிகளுக்கு பரவியது.மொழி அடிப்படையில் திராவிடம் என்பது மட்டுமல்ல சமூக நீதி போராட்ட அடிப்படையிலும் வளர்ச்சி பெற்றது.சமூக  நீதி இயக்கமாகவும் விரிந்தது. அப்படி விரிந்த திராவிடத்தை மக்களிடம் ஓர் அறிவுக்  கருவியாக எப்படிக் கொண்டு செல்வது என்பது தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் நெடு நாள் சிந்தனை.உலக அறிஞர்கள் அளவிலே இதைக் கொண்டு சென்று இன்னும் பரவலாக்க வேண்டும் என்னும் முதன்மையான குறிக்கோளோடு இதனைத் துவங்கினார்.திராவிடப்பொழில் இதழ் முழுக்க முழுக்க ஆய்விதழாகவே இருக்கும்.பிரச்சாரமாகவோ பரப்புரையாகவோ இல்லாமல் இருந்தாலும் கூட அதிலும் சமூக  நீதியை உள்ளடக்கினார்.எப்படி என்றால் பெரும் பெரும் பேராசிரியர் என்பது மட்டுமே இல்லாமல்,ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து  வரக்கூடிய பேராசிரியர்கள் குறிப்பாக பெண் பேராசிரியர்கள்,பெண்கள்,விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய,ஆய்வுப் புலத்திலே இப்போதுதான் மேலேறிக்கொண்டிருக்கிற மாணவர்கள்-அவர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கி ,அவர்களுக்கு ஒரு பயிற்சிக்களமாகவும் இது அமையவேண்டும் என்று நினைத்தார். 

ஆய்வோடேயே சமூக நீதியும்

ஆய்வு ஒரு புறம்,ஆய்வோடேயே சமூக நீதியும் ஒரு புறம் என்று இரண்டையும் உள்ளடக்கி அய்யா ஆசிரியர் அவ்ரகள் இதைச்செய்தார்கள்.  சென்ற ஆண்டு ஜனவரியில் இதைத் தொடங்கினோம்.இதுவரை 5 இதழ்கள் வந்துள்ளன.அடுத்த இதழ் இன்னும் 10 நாட்களுக்குள் வரப்போகிறது.இதுவரை என்ன செய்துள்ளோம் என்பதை ஒரு படமாக திரையில் காட்டி விளக்கினார் இதுவரை வந்துள்ள கட்டுரைகள் மொழி,சமூக நீதி,பெரியார்,மதம்,பெண்ணியம்,இன வரைவியல்,கலை எனப் பல தலைப்புகளில் திராவிடப்பொழிலில் வந்துள்ளதைக் காட்டி ,இது கட்சி சார்ந்ததாக இல்லாமல்,பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பாக வருவதைச்சுட்டிக் காட்டினார்.அமெரிக்கா,கனடா,இலங்கை,ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து கட்டுரைகள் வந்துள்ளதை எடுத்துக்காட்டினார்..

மேம்படுத்த வேண்டும்

பெண்கள் பலர் கட்டுரைகளைக் கொடுத்திருப்பதைச்சுட்டிக் காட்டினார்.மும்மாதங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய ஆய்விதழ்.திராவிடப்பொழில் இணையத்திலும் வருகிறது.அச்சிதழாகவும் வருகிறது.இன்னும் மேம்படுத்த வேணடும்.

முதன் முதலில் டாக்டர் சாசா எட்வின்,புகழ் பெற்ற உலகளவில் கல்வியாளர்கள் நன்றாக அறிந்த அந்த அறிஞர்தான் திராவிடப்பொழில் இதழுக்கு வாழ்த்துச்செய்தி கொடுத்தார். வேதகால  நாகரிகம் என்று சொல்வார்கள் இல்லை,கீழடி  நாகரிகம் பொருநை  நாகரிகம்,வைகை நாகரிகம்,காவிரி நாகரிகம் என இது திராவிட நாகரிகம் என்று சொல்ல வைக்க வேண்டும்.தமிழ்த்தாய் வாழ்த்து இந்தியாவையே தலை கீழாக மாற்றிப்போடும்.

திராவிடத்தை திலகமாக காட்டுவது தமிழ்த்தாய் வாழ்த்து.திலகம்  நெற்றியில் இருக்கும்.அதனால் தமிழ் நாடுதான் தலையாக இருக்கும்.காஷ்மீர் என்பது காலாக இருக்கும்.அப்பவே மனோன்மணியம் சுந்தரனார்  அவர்கள் இந்தியப் படத்தையே தலை கீழாகப் போட்டுத்தான் பாடியிருக்கிறார்.

இது திராவிட இந்தியா

எனவே இந்த வாசிப்பை இங்கிருந்து காட்டுவது,இது  வேத இந்தியா இல்லை,இது திராவிட இந்தியா என்று காட்டுவது.அண்ணல் அம்பேத்கர் அதனைத்தானே சொல்கிறார்,இந்தியா முழுவதும் இருந்தது நாகர் நாகரிகம்,திராவிட நாகரிகம் என்று சொல்கிறார் அல்லவா?..ஆகவே இவற்றை எல்லாம் அறிவியல் மூலமாக,ஆய்வு மூலமாக கொண்டு செல்வதுதான் திராவிடப்பொழில். .வேதங்களைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்றும் இருக்காது…படித்துப்பார்த்தால்,நான் காட்டிற்குள் போய்க்கொண்டிருக்கிறேன்.ஓநாய்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்பதுதான் சுலோகமாக இருக்கும். இதில் என்ன பெரியஅறிவு  இருக்கிறது.நாம் அறிவு என்றால் என்ன என்பதை தமிழின் மூலமாக நிலை நிறுத்திக்காட்டுவோம்.திராவிடத்தின் மூலமாக நிலை நிறுத்திக்காட்டுவோம் என்னும் பெரும் குறிக்கோளுடன் திராவிடப்பொழில் தன்னுடைய கல்விப் பயணத்தை,ஆய்வுப் பயணத்தை ,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேந்தராக இருந்து இந்த இதழின் இதழ் ஆசிரியர் குழுவோடு  இதனைத் துவங்கியுள்ளோம்.இந்த இதழின் கல்விப் பயணத்திலே மக்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படுவோம் என்பதைச்சொல்லிக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

ஆரிய மொழிக்கலப்பில்லை

ஆய்வுரையினை முதலில் நெல்லுப்பட்டு முனைவர் இராஜவேல் அவர்கள் நிகழ்த்தினார். டாக்டர்  கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் கட்டுரையான 'The issue of 'ai'(ஐ/அய்) & au(ஒள/அவ்) in Tamil language and Periyar's Proactiveness '  என்னும் கட்டுரை பற்றித் தனது ஆய்வுரையில்  தமிழ் மொழியில் ஏற்பட்ட எழுத்து மாற்றங்கள் பற்றி நிறைய புள்ளி விவரங்களோடு  கருத்துக்களைக் கொடுத்திருக்கிறார்.ஆரியர் வந்தபிறகு தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் போலவே ஆரிய மொழிக் கலப்பினால் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்து தந்தை பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தை இக்கட்டுரை பேசுகிறது எனக் குறிப்பிட்டார்.அதைப்போலவே முனைவர் ஸ்ரீதேவி அவர்கள் எழுதிய 'தொல்காப்பியப் பூங்கா வழிப்புலனாகும் கலைஞரின் இலக்கணப்புலமை ; என்னும்  கட்டுரை பற்றியும்,முனைவர் ச.ஜீவானந்தம் அவர்கள் எழுதிய 'சுயமரியாதை இயக்கத்தின் ஆளுமை மிக்க பெண்கள் ' என்னும் கட்டுரைப பற்றியும் குறிப்பிட்டு ஆய்வுரை நிகழ்த்தினார்.அவரின் ஆய்வுரை மிகச்சிறப்பாக அமைந்தது.

அடுத்து புரட்சிக்கவிஞரின் பாடல் இசையோடு ஒலிக்கப்பட்டது.புரட்சிக்கவிஞரின் இரண்டாம் ஆண்டு விழா 9 நாட்கள் அமெரிக்காவில் நடைபெறுவதைப் பற்றி அதன் அமைப்பாளர் துரைக்கண்ணன் அவர்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து பேரா.அழகுச்செல்வம்  அவர்கள் பேரா.காளிமுத்து அவர்கள் எழுதிய 'திருவள்ளுவரைப் பற்றிய புனைகதைகள் ' என்னும் கட்டுரையைப் பற்றிப் பேசினார். இந்தக் காலகட்டத்திற்கு மிகத்தேவையான கட்டுரை என்பதையும் ,இந்தப் புனைகதைகள் எப்படிப்பட்ட கட்டுக்கதைகள் என்பதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

பெரியாரியல் நோக்கில் நற்றிணை

அதனைப் போலவே முனைவர் மு.சு.கண்மணி அவர்கள் எழுதிய 'பெரியாரியல் நோக்கில் நற்றிணை ' என்னும் கட்டுரை பற்றியும் ஆய்வுரை  நிகழ்த்தினார். நான் சொல்வதற்காக நீங்கள் பின்பற்றவேண்டாம் என்று பெரியார் சொன்னார்.பெரியார் செய்தது மிகப்பெரிய புரட்சி.எல்லா சூழலுக்கும் பொருந்தும் பெரியாரை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்ட பேரா.அழகுச்செல்வம்,கட்டுரையில் இருக்கும் சில முரண்களையும் சுட்டிக்காட்டினார்.

ஆய்வுரைகளைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றிய திராவிடப்பொழிலின் ஆசிரியர் பேரா.ப..காளிமுத்து அவர்கள் "ஆய்வுரைகளை கவனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தேன்." என்று குறிப்பிட்டு ஆய்வுரைகளைப் பற்றிய தனது கருத்துகளையும் தனது கட்டுரை பற்றிக் கூறப்பட்ட கருத்துகளுக்கு விளக்கம் அளித்தும் உரையாற்றினார்.

நிறைவாக திராவிடப்பொழிலின் ஆசிரியர்கள் குழுவில்  ஒருவரான முனைவர்.வா.நேரு நன்றியுரையாற்றினார்.தொடக்கம் முதல் இறுதிவரை பேச்சாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியும்,அவர்கள் பேசி முடித்தவுடன் அவர்களின் கருத்துக்களில் முக்கியமானவற்றை தொகுத்துச்சொல்லியும் மிகச்சிறப்பாக அன்புடன் ஆனந்தி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார். நிகழ்வின் இறுதியில் டாக்டர் சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும்,இளமாறன்,துரைக்கண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு இதழ் வந்தவுடன் அதனைப் பற்றிக் கூட்டங்கள் நடத்துவோம் என்று கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்கள்.

-வா.நேரு,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர்-


நன்றி: விடுதலை 14.04.2022 


Tuesday 12 April 2022

Thursday 7 April 2022

சிந்தனைக் களம் : அடிக்கட்டுமான ஆக்கம்....முனைவர் வா.நேரு

 மார்ச் 20, 2022 தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒருநாள். தமிழ்நாடு முழுவதும் அரசு நடத்தும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து வாருங்கள் என அழைப்பதுபோல, நம் பள்ளி நம் பெருமை அழைப்பிதழ் என அச்சிட்டு வழங்கி, பெற்றோர் அனைவரும் அழைக்கப்-பட்டனர்.




“நம் ஊரில் உங்கள் பிள்ளை பயிலும் அரசுப் பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம். இது உங்கள் பள்ளி. நாம் இணைந்துதான் பள்ளியை மேம்படுத்த வேண்டும். பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெற்றோராகிய உங்கள் பங்கு இருப்பது அவசியம். உங்களுடைய சிறப்பான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவே பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உள்ளன என்று ஆரம்பிக்கும் அந்த அழைப்பிதழ் பல செய்திகளைக் குறிப்பிட்டு, பெற்றோர் அனைவரையும் பள்ளி மேலாண்மைக் கூட்டத்திற்கு வரச் சொன்னது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அதிலும் குறிப்பாக பெண்கள் எல்லா ஊர்களிலும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. சில பத்தாண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர் பெரும் பங்கு வகித்தார்கள். நன்கொடை கொடுத்தார்கள். பள்ளிக் கட்டடம் கட்ட இடம் மனம் உவந்து அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். மிகச் சுமுகமான உறவு இருந்தது.

இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் பெற்றோரின் பங்களிப்பு என்பதில் அலட்சியம் காட்டப்பட்டது. ஆனால், இந்தியாவில் நிருவாகத் திறமையால் முதலிடத்தில் இருக்கும் இன்றைய முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் அரசுப் பள்ளிகள் மேல் காட்டப்படும் அக்கறையும் கவனிப்பும் நம்மைப் போன்றவர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது.

தமிழ்நாட்டில் +2 முடித்த பிறகு உயர்கல்வி படிப்பவர்கள் சதவிகிதம் (GER Ratio) = 50%. அதாவது, +2 தேர்வு எழுதிய 8.5 லட்சம் மாணவர்களில், சுமார் 4.25 லட்சம் மாணவர்கள் (50%) உயர்கல்வி பயில்கின்றனர்.

தமிழ்நாட்டில் 8.5 லட்சம் மாணவர்களில் (ஆண்டுதோறும் +2 தேர்வு எழுதுவதில்), அரசு பள்ளியில் மட்டும் 3.4 லட்சம் மாணவர்கள் (40%) படிக்கின்றனர். அவர்களில் 1.7 லட்சம் மாணவிகள்(50%). தற்போது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உயர்கல்வி படிக்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டம் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெற வாய்ப்புண்டு. மேற்படிப்பு என்பது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை உள்ளது. சராசரியாக 4 ஆண்டு மாணவிகளுக்கு அரசு கட்டப்போகிறது என கணக்கிட்டால், ஆண்டுக்கு ஒரு மாணவிக்கு ரூ.12000 வரை அரசுக்கு நிதி தேவைப்படும். ஒவ்வோர் ஆண்டிலும் 1.5 லட்சம் மாணவிகள்   ரூ.12000 என கணக்கிட்டால், 4 ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.720 கோடி தேவைப்படும்.

ஆண்டுக்கு ரூ.720 கோடி ஒதுக்குவதால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகும் பயன்கள்.

¨           +2 முடித்த பிறகு உயர்கல்வி படிப்பவர்கள் சதவிகிதம் என்பது 50%இல் இருந்து 60% வரை உயர்ந்து விடும்.

¨           மேற்படிப்பு படிப்பவர்களில் பெண்களின் சதவிகிதம் கணிசமாக உயரும்.

¨           உயர்கல்வி படித்த பெண்கள் சுயமாக வேலைக்குச் செல்லவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

¨           நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டண-மின்றிப் பயணம் செய்யலாம் என்பதால், பெண்களின் முழுமையான சம்பளப் பணம் குடும்பத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

¨           "பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்" என்கிற கூற்றை விரைவில் எட்டிப் பிடிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழும். தந்தை பெரியாரின் பெண் விடுதலை என்னும் தத்துவத்திற்கு அடிப்படையான பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு ஏற்படும்.



கர்மவீரர் காமராஜர் காலத்தில் நிறைய பள்ளிக் கூடங்களை திறந்தாலும், ஏழ்மை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தனர். அதனை அறிந்த காமராஜர் மாணவர்களுக்கு இலவச மத்திய உணவுத் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானவர்கள், முந்தைய தலைமுறையினர் படித்தனர்; பதவி பெற்றனர்.

"அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் பட்டப் படிப்பில் தேர்வாகிடுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்வது தடுக்கப்பட, அத் தொழிற்படிப்புப் படிக்கும் பெண்களுக்கு _ -மாணவிகளுக்கு- மாதம் ரூபாய் ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த அடிக்கட்டுமான ஆக்கம் ஆகும்" என்று திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

அரசுப் பள்ளிகளில் அமையும் பள்ளி மேலாண்மைக் குழு சமூக நீதி அடிப்படையில், பட்டியல் இனத்தைச் சார்ந்த, மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்கள் என அனைவரும் பங்கு பெறும் குழுக்களாக அமைக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் குழுவில் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் பெண்ணாக இருப்பார் என்று 'நம் பள்ளி, நம் பெருமை' அழைப்பிதழ் குறிப்பிடுகிறது.

களைகளைக் களைந்தால்தான் பயிர் வளர முடியும். ஒழுங்கீனமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் அரசுப் பள்ளிகள் வளர முடியும். அது மாணவ, மாணவிகள் என்றாலும் சரி, ஆசிரியர்கள் என்றாலும் சரி. ஜாதிய சமூகமான இந்தியச் சூழலில் நடவடிக்கை எடுப்பதற்கும் களைகளைக் களைவதற்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு என்பது மிகத் தேவை. கழிவறை, குடி தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதோடு நல்ல படிப்பு நிலை உருவாக பெற்றோரின் பங்களிப்பும், கவனிப்பும் மிக அவசியம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கு ஒரே வழி கல்விதான். கல்வியின் வழியாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பும், தொழிலும், வாய்ப்புகளும்-தான். பள்ளிக் கல்வி செலவின்றிப் படிக்கலாம். பள்ளிப் பேருந்தில் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம். பள்ளிப் பாட நூல்கள், கற்றல் கருவிகள் அரசால் கொடுக்கப்படுகிறது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் இல்லை. சைக்கிள், லேப்டாப் என்று மாணவ, மாணவிகள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டு, “திராவிட மாடல்’’ என்பதை, இந்தியாவிற்கே மாடல் என்ற வகையில் வழி காட்டுகிறது.


‘பெண்கட்குக் கல்வி வேண்டும் 

               குடித்தனம் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

               மக்களைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

               உலகினைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

               கல்வியைப் பேணுதற்கே!!’

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்தத் திசையில் மிக அழுத்தமாக அடியெடுத்து வைக்கும் தமிழ்நாட்டு அரசின் 'நம் பள்ளி நம் பெருமை' திட்டத்திற்குத் துணை நிற்போம். இது 'அடிக்கட்டுமான ஆக்கத் திட்டம்'. படிக்காதே என்று சொன்ன வர்ணாசிரமத் தத்துவத்தைத் தகர்க்கும் திட்டம். ஒன்றிணைவோம்; செயல்படுத்துவோம். ஊர் கூடி அரசு பள்ளிக் கூடத்தை மேலும் நல்ல வழிக்கு வர இழுப்போம்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 01-04-2022