Thursday 29 December 2022

உனக்கும் எனக்கும் என்ன ஒட்டு/உறவு?

 .

நமக்கும் 

ஆங்கிலத்திற்கும்

என்ன உறவு...?


நமக்கும் 

ஆங்கிலேயர்களுக்கும்

என்ன ஒட்டு?/உறவு?


ஆங்கிலப் புத்தாண்டை

நாம் கொண்டாடலாமா?

சங்கி ஒன்று

தான் சங்கி 

என்பதைச்சொல்லாமலேயே

உபதேசம் செய்து கொண்டிருக்கிறது..

வாட்சப்பில்...


எங்கிருந்தோ வந்தார்கள்

வெள்ளையர்கள் 

வாணிபம் செய்வதற்கு..

நமக்குள் இருந்த 

ஒற்றுமையின்மையால்...

ஆட்சியைப் பிடித்தார்கள்...

ஒன்றுபட்டோம் போராடினோம்

நாட்டை விட்டு விரட்டி விட்டோம்...


ஆனால் வெள்ளையர்கள்தான்

புத்தாண்டில் 

'ஹேப்பி நியூ இயர் ' 

எனச்சொல்லி எங்கள் தாத்தாக்களின்

கைகளைப் பிடித்துக் குலுக்கினார்கள்...

எங்கள் தாத்தாக்களை

சமைக்கச்சொல்லி

அவர்கள் பரிமாற சாப்பிட்டார்கள்...

கட்டி அணைத்து 

வாழ்த்துகள் சொன்னார்கள்...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில்..


ஆமாம் ஆரியனே...

உனக்கும் எனக்கும் 

என்ன ஒட்டு/உறவு?


ஆரியனே ...

நீயும் வெளிநாட்டில் இருந்த

வந்த அந்நியன்தான்..

தந்திர மூர்த்திகளே...

தந்திரத்தால் எம் மண்ணை

எம் அரசியலை ஆக்கிரமித்த

கைபர் போலன் கணவாய்

வழியே ஊடுருவிய அன்னிய சக்திகளே... 


ஆரியனே ...

எங்கள் தாத்தாக்களை 

எட்டி நிற்கச்சொன்னாய்...

பார்த்தால் தீட்டு என்றாய்..

நடந்தால் தீட்டு என்றாய்...

படிக்கக் கூடாது என்றாய்...

படித்தால் நாக்கை அறுக்கச்சொன்னாய்

படித்ததைக் கேட்டால் காதில் 

ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச்சொன்னாய்!


அரண்மனைக்குள் புகுந்து

அரசர்களை வசப்படுத்தி

அவர்களின் சட்டங்களாலேயே

எங்களைச்சூத்திரன் என்றும்

பஞ்சமன் என்றும் பிரித்து

மனுவின் பெயரால்

பல நூறு ஆண்டுகள் 

கொடுமைகள் செய்யத்

தூண்டிய ஆரியனே...


எங்கள் தமிழர்கள் புத்தாண்டு

தைமுதல் நாள் என்றால்

இல்லை இல்லை

சித்திரை ஒன்று என

எம் இனத்தவரையே ஏவிவிட்டு\

சொல்லச்செய்யும் ஆரியமே...


எங்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு

தை ஒன்றுதான்...

சாதி ஒழிந்து சமத்துவம் பேணி

உலகின் பல பாகங்களில்

எம் தமிழர் ஏற்றமுடனே வாழத் 

துணை நிற்கும் 

ஆங்கிலம் எமக்கு எதிரி அல்ல!

உலக மாந்தர்களை 

ஒன்றாய்க் காணும்

ஆங்கிலப்புத்தாண்டும்

எமக்கு எதிரி அல்ல !

உரக்கச்சொல்வோம்...

இனிய ஆங்கிலப்

புத்தாண்டு வாழ்த்துகள் !...

விஷ் யூ ஏ ஹேப்பி

நியூ இயர்.....


          வா.நேரு,30.12.2022





Wednesday 21 December 2022

கட்டுரை : மானுட வளர்ச்சிக்கு மதம் மாபெரும் தடை!...முனைவர்.வா.நேரு

 

தந்தை பெரியாரை நினைக்கும் போதெல்லாம் பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் முடிந்து போனது. வரும் டிசம்பர் 24,2022 அவரின் 49ஆம் ஆண்டு நினைவு நாள்.முன் எப்போதும் விட மிக வேகமாகவும் விரைவாகவும் பரவும் தத்துவமாக தந்தை பெரியாரின் தத்துவம்-,கடவுள்,மத மறுப்புத் தத்துவம்- விளங்குவதைப் பார்க்கிறோம்.அண்மையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரத்தில் நடைபெற்ற இந்திய நாத்திகக் கூட்டமைப்பு மாநாட்டில், மாநாட்டு விளம்பரங்களில் தந்தை பெரியாரின் படம், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தோடும் தோழர் பகத்சிங் அவர்களின் படத்தோடும் இணைந்து இடம் பெற்றிருந்தது. ”ஜிந்தாபாத், ஜிந்தாபாத், பெரியார் ஜிந்தாபாத்” என்னும் முழக்கம் பஞ்சாப் மாநிலத் தோழர்களால் எழுப்பப்பட்டது.

தெலங்கானா மாநிலத் தோழர்கள் தந்தை பெரியாரைப் பற்றி தெலுங்கு மொழியில் உணர்ச்சிகரமான பாடலை மேடையில் இசையோடு பாடினர்.அவர்களின் மொழி நமக்குப் புரியவில்லை என்றாலும் உணர்வால் ஒன்றுபட்டு நிற்கும் ஆனந்தத்தை அந்த நிகழ்வு கொடுத்தது. பல மாநிலங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பலர் கருப்புச்சட்டை அணிந்து இருப்பதைக் காணமுடிந்தது. தந்தை பெரியாரும் கருப்புச்சட்டையும் கடவுள்,மதம்,ஜாதி ஒழிப்புக் குறியீடுகளாக தமிழ்நாட்டைத் தாண்டி இந்திய ஒன்றியத்தின் மற்ற மாநிலத்தவர்களின் மனதில் இடம் பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

“மதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர,மற்றபடி அந்த மனிதனுக்கு எந்த விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.” என்றார் தந்தை பெரியார்.

கடந்த20 ஆண்டுகளில் கணினியால், இணையத்தால் ஏற்பட்ட புரட்சி என்பது மதம் என்னும் கட்டுப்பாட்டைத் தகர்க்கும் புரட்சிஎனலாம்.மதத்தினால் மனிதனுக்கு யாதொரு பலனும் இல்லை என்பதை மனிதர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதற்கான எடுத்துக் காட்டுகளை உலகம் முழுவதும் இப்போது பார்க்கின்றோம்..

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், நாத்திகர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. 37 விழுக்காடு மக்கள் ,நாங்கள் எந்த மதத்தையும் பின்பற்றுபவர்கள் அல்ல, நாங்கள் மதமற்றவர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள் என்று இங்கிலாந்து நாட்டின் 2021 கணக்கெடுப்பு சொல்கிறது.2011இல் 59.3 விழுக்காடாக இருந்த கிறித்துவர்களின் எண்ணிக்கை 46.2 விழுக்காடாக 2021இல் குறைந்திருக்கிறது.இங்கிலாந்தைப் போன்ற ஜனநாயக உரிமை உள்ள நாட்டில் மக்கள் மதத்தின் மீதான தங்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படையாக அறிவிக்க முடிகிறது, ஒன்று திரள முடிகிறது.மதம் தேவைதானா? என்னும் கேள்வியை மனதிற்குள் எழுப்புவது போலவே பொதுவெளிகளிலும் எழுப்பி ஒன்றிணைய முடிகிறது.மதத்தின் மீதான கோபங்களையும்,உணர்வுகளையும் வெளிக்காட்ட முடிகிறது.

ஆனால், மதக்கட்டுப்பாடு அதிகம் உள்ள நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் நம்பிக்கையின்மையைக் காட்டினால் பழி வாங்கப்படுவோம், தண்டனை கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் அமைதியாக இருக்கிறார்கள். ஈரான் நாட்டில் நடந்துவரும் மதத்தின் அடிப்படையில் அமைந்த ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்துவருவதைப் பார்க்கின்றோம். ஆண்களும் பெண்களும் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.மதம் என்னும் கட்டுப்பாட்டைக் காப்பாற்றும் நிறுவனங்களாகத்தான் நாடுகளின் அரசுகள் இருந்திருக்கின்றன,- இருக்கின்றன.

“ஒரு மதவாதிக்கு அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குக் கடவுள்- அது எப்படிப்பட்ட கடவுளானாலும் அது செயற்கைக் கடவுளே ஆகும்” என்றார் தந்தை பெரியார்.கடவுள் செயற்கை என்பதை எடுத்துக்காட்டும் நோயாக இந்தக் கொரோனோ நோய் அமைந்ததைப் பார்த்தோம்.கொரோனோ காலத்தில் எல்லா மத வழிபாட்டுத்தலங்களும் அடைக்கப்பட்டன.கடவுள் இருக்குமிடமாகச் சொல்லப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் எந்த மனிதர்களும் அனுமதிக்கப்படவில்லை.எல்லா மதக்கடவுள்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டு,வழிபாட்டுத் தலங்களுக்குள் பூட்டி வைக்கப்பட்டார்கள். நோயின் பயத்தில் தங்களைக் காப்பாற்ற வீடுகளுக்குள் முடங்கிய மனிதர்களுக்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட கடவுள்களைப் பற்றிக் கவலைப்படாத காலமாக கொரோனா காலம் இருந்ததைப் பார்த்தோம்.”ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள், மோட்சம், நரகம், வேதம், மத தர்மம், மதத் தலைவன் என்பனவெல்லாம் அந்த- அதாவது, அவன் சார்ந்து இருக்கிற- மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய, உண்மைப் பொருளோ, உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு, அவையெல்லாம் செயற்கையே ஒழிய இயற்கையும் அல்ல.” என்றார் பெரியார்.

“மோட்சமும் சுவர்க்கமும் கள்ளு, சாராயக் கடைகளை விட,தாசி, வேசிகள் வீடுகளை விட மோசமானவை என்பதை மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.மோட்சம், நரகம் என்பது எப்படித் திருடர்கள் பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்குத் தனி வழியில், ஆள் அடையாளம் தெரியாத வகையில் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வழிமறித்து, மண்டையை உடைக்க ,தடிக்கம்பையும், ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பறித்துச்செல்கிறார்களோ,அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி மறித்துப், பொருள் பறித்துப்போகச்செய்து கொண்ட ஆயுதங்களே. ஆகையால் அதை மனிதன் முதலில் மறந்தாக வேண்டும் “ என்றார் தந்தை பெரியார்.செயற்கையாக உருவாக்கப்பட்ட மதம் என்பது மோசமானது என்பதனை உணர்ந்த காரணத்தால்தான் இங்கிலாந்தில் மதமற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.


மதம் என்னும் கட்டுப்பாட்டை அடித்து நொறுக்கி அதன் பொய்ம்மைகளை மிக எளிதாக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களாக இன்றைய சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் அறிவியலைப் பயன்படுத்தி,அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கையைப் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன என்றாலும் கூட, அவர்கள் ஊதிப் பெரிதாக்கும் பலூனை நொடியில் உடைத்து தூள் தூளாக்கும் கூர்மையான ஊசிகளாகவும் சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன.தந்தை பெரியாருக்குப் பின் அவர்தம் தத்துவத்தை இந்திய ஒன்றியம் முழுமைக்கும்,உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்ல,எந்த நாளும் நான் பெரியாரின் மாணவன் என்று சொல்லும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதங்களில் மிக முக்கியமானது சமூக ஊடகம் ஆகும்.


நவீன சமூக ஊடகங்களான வாட்சப்,முகநூல், டுவிட்டர், டுவிட்டர் ஸ்பேஸ், டெலிகிராம், யூ டியூப், இன்ஸ்டாகிராம் என்னும் பல முகங்களிலும் பேசப்படும் ஒரு முகமாகத் தந்தை பெரியார் இருக்கிறார். மிக விரிவாகப் பேசப்படும் தத்துவமாக தந்தை பெரியாரின் தத்துவம் இருக்கிறது.எதிராளிகள் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி தந்தை பெரியாரின் தத்துவத்தை,கொள்கையை எளிதில் சிதைத்து விடலாம் என்று மனப்பால் குடிப்பதற்கு மாறாக தந்தை பெரியாரின் தத்துவம் இருபால் இளைஞர்களால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. மதம் என்பது எதற்கு? மதக் கட்டுப்பாடுகள் எதற்கு? செயற்கையாகப் புகுத்தப்பட்ட மதத்தினால் ஏற்படும் தீமைகளை இந்த உலகம் ஏன் பொறுத்துப் போகவேண்டும்? என்னும் கேள்விகளை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். விவாதிக்கிறார்கள்.தீர்வுகளைச் சொல்கிறார்கள்.


ஜாதியற்ற, மதமற்ற, கடவுள்கள் அற்ற மனித நேயம் மிக்க ஓர் உலகத்தைத் தந்தை பெரியார் கனவு கண்டார். ஆணும் பெண்ணும் சமமாக வாழும் சமத்துவ உலகத்தை உருவாக்க தந்தை பெரியார் கனவு கண்டார்.ஏழைகளும்,பணக்காரர்களும் அற்ற எல்லோருக்கும் எல்லாம் என்னும் ஒரு புதிய உலகம் அமையத் தந்தை பெரியார் தன் வாழ்க்கையை ஒரு போராட்ட வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார்.அவரது நினைவு நாளில்,அவர் வழியில் நமக்கு வழிகாட்டும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில்,அவர் போட்டுத்தரும் பாதையில் எந்த விதமான சபலங்களுக்கும் ஆளாகாமல்,தந்தை பெரியார் நினைத்த,கனவு கண்ட உலகம் சமைக்க நாமும் நமது பங்கை அளிக்க உறுதி ஏற்போம்.


நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் திசம்பர் 16-31,2022 

Monday 19 December 2022

வியப்புமிகு எழுத்தாளர்.....

                                                                                                    

எழுத்து, உலகின் பல நாடுகளை பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு உயர்த்தி-யிருக்கிறது. மாபெரும் மனிதர்கள் பலரை மாபெரும் நிலைக்கு உயர்த்துவதற்கு உறுதுணையாக புத்தகம் இருந்திருக்கிறது.பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்கு அளித்த தோழர் காரல் மார்க்ஸ், பேரறிவாளர் அண்ணல் அம்பேத்கர், அண்ணல் காந்தியார், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் எனப் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட காரணமாக இருந்தவை புத்தகங்கள் என்பதை நாம் அறிவோம்.உலகத்தின் போக்கை _ கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்னும் மாயப்பிம்பத்தை உடைக்க சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கோட்பாடு புத்தகம்தான் காரணமாக இருந்தது.மாயப்பிம்பங்களை உடைக்கும் மகத்தான கருவிகளாகப் புத்தகங்கள்தான் இருந்தன _ இன்றைக்கும் இருக்கின்றன.



தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றிய நேரத்தில் எல்லாம் தன்னுடைய கருத்துகளுக்கான ஆதாரங்கள் இருக்கும் புத்தகங்களைத் தன்னோடு எடுத்துக்கொண்டு போய்,தான் வாசிப்பது மட்டு-மல்ல,கூட்டத்தில் இருக்கும் எவராவது ஒருவரை அழைத்து, வாசிக்க வைத்து அதன் உண்மைத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் என்பது வரலாறு.

தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 90ஆம் பிறந்த நாள் டிசம்பர் 2.. நாமெல்லாம் கொண்டாடி மகிழும் நாள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பன்முக ஆற்றலில் எழுத்து ஆற்றலை எண்ணி எண்ணி வியக்கத் தோன்றுகிறது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்துப் போராளியாக, பகுத்தறிவுக் கருத்துகளை தந்தை பெரியாரின் எண்ணங்களை, சிந்தனைகளை எழுத்து வடிவில் கொண்டு செல்வதில் அய்யா ஆசிரியர் அவர்களின் பங்கு என்பது மிகப் பெரியது. எண்ணி எண்ணி மகிழத்தக்கது.


இந்தியாவைப் பொறுத்த அளவில், பார்ப்-பனர்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட, இல்லாததை எல்லாம் இருப்பதாகக் காட்டி மக்கள் மத்தியில் மாய வலை வீசப்பட்ட _ வீசப்படும் நூல் பகவத் கீதை. கடவுளால் மனிதனுக்கு உபதேசிக்கப்பட்டது என்று சொல்லி,எளிதாக இந்த நூல் எவருக்கும் புரியாது, எல்லாமே பூடகமாகத் தத்துவங்களாகத்தான் இருக்கும் என்ற மாயபிம்பங்களால் கட்டப்பட்ட, அந்த நூலின் உண்மைத் தன்மையைப் போட்டுடைத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். பல பதிப்புகளைக் கண்டு, இன்றைக்கும் புதிதாக வாசிக்கும் எவருக்கும் பல வியப்புகளைத் தரும் அரிய நூல் ’கீதையின் மறுபக்கம்‘. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்,நம் பரம்பரை எதிரியான இராம.கோபாலனுக்குப் பரிசாக அளித்த பெருமை பெற்ற நூல்; ‘கீதையின் மறுபக்கம்‘. ஆகும். ’கீதையின் மறுபக்கம்‘ நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அதுவும் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் இராமாயண ஆராய்ச்சி என்னும் நூலை ஆக்கினார். அது பல மொழிகள் கடந்து இன்றைக்கும் ஆரியர்களை அச்சுறுத்தும் ஒரு நூலாக இருக்கிறது. தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு அய்யா ஆசிரியர் அவர்கள் மகாபாரத ஆராய்ச்சி என்னும் நூலை ஆக்கிக் கொடுத்திருக்கிறார். ராமாயணம் போலவே மகாபாரதம் எப்படி நம் மக்களை மயக்கப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதனை மிகத் தெளிவாக நாம் அறிந்துகொள்ள உதவுகிற நூல்.. ’பிராமணியம்‘ என்னும் தத்துவம் இன்றைக்கும் எப்படி தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதுகிறது என்பதைப் பல்வேறு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டும் நூல் ‘வெறுக்கத்தக்கதே பிராமணியம்‘ என்னும் நூலாகும்.


தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.இந்துத்துவா அமைப்பினர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரியமிக்க ஆரிய எதிர்ப்புக் கருத்துகளை மறைத்து, ’இந்துத்துவா அம்பேத்கர்‘ என்னும் பொய்யைப் பரப்பும் இந்த நாள்களில் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகங்கள் பெரிய அளவில் பரப்பப்பட வேண்டியவை.’விசாவுக்காக காத்திருக்கிறேன்’, ’டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்‘, ‘அருண்ஷோரியின் அம்பேத்கர் பற்றிய நூலுக்குப் பதில்’.’டாக்டர் அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவியது ஏன்’ போன்ற பல புத்தகங்கள் அய்யா ஆசிரியர் அவர்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.


இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் வியந்து பார்க்கும் திருமண முறை, தந்தை பெரியாரால் அறிமுகப்

படுத்தப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணம்‘. இலட்சக்கணக்கான திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன _. நடந்துகொண்டிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணம் பற்றிய ஓர் ஆவணம் போன்ற புத்தகம் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும் ‘ என்னும் நூலாகும்.

குறைந்த விலையில் நிறைந்த கருத்துகள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை வெளியிடுவது தந்தை பெரியாரின் பழக்கமாகும். அந்த

வகையில் பல சிறு சிறு புத்தகங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. ’நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?’, ’தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை‘, ‘தேவை பாலியல் நீதி’, ’திராவிடர் கழகத்தில் மகளிர் சேரவேண்டும் ஏன்’, ’வர்ணதர்மமும் பெண்ணடிமையும்‘ போன்ற புத்தகங்கள் பெண்ணுரிமை சார்ந்த புத்தகங்கள்.


‘கோயில்கள் கோபுரங்கள் ஏன்?எதற்காக?’ ,’சக்தி வழிபாடு’, ’கல்லூரிகளில் சோதிட நம்பிக்கையா?’ போன்ற பல புத்தகங்கள் மூட நம்பிக்கைகளின் முதுகெலும்பை முறிப்பவை.இது தவிர அய்யா ஆசிரியர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘குடிஅரசு’ இதழ்களின் தொகுப்புகள் ‘ போன்றவை பல தொகுப்புகளாக வந்து வரலாற்றை வருங்காலச் சந்ததிகளுக்கு சிறப்பாக எடுத்துக்காட்டும் தொகுப்புகளாக அமைந்துள்ளன.

‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்னும் புத்தகம், ‘ இருபத்தோராம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!’ என்னும் புத்தகம், ‘வைக்கம் போராட்ட வரலாறு’, ‘காஞ்சி சங்கராச்சாரியார் யார்? _ ஓர் ஆய்வு ‘காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்‘ என அய்யா ஆசிரியர் அவர்கள் ஆக்கிக் கொடுத்திருக்கக்கூடிய புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.


எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை பெரியாரின் தத்துவத்தைப் பத்து வயதில் ஏற்று,மேடை ஏறி உரையாற்றியது மட்டுமல்லாது, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தந்தை பெரியாரின் கொள்கை வழியில் அமைந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மற்றவர்க்-கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழும் அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ இதுவரை 16 தொகுப்புகள் வந்துள்ளன. வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பை பத்திரிகைகளும் தலைவர்களும் பாராட்டி மகிழ்ந்தனர் _ மகிழ்கின்றனர்.” “‘வாழ்வியல் சிந்தனைகள்‘ நூலை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழி பெயர்க்க வேண்டும்” என்று வி.பி.சிங்கும்,”நாட்டு மக்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய, அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சிறந்த கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு”, என்று மு.கருணாநிதியும், “இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்” என்று நீதியரசர் பெ.வேணுகோபாலும், ”என்சைக்ளோபீடியா போல் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஆழ்ந்த கருத்துகள்.இது ஒரு பல்கலைக் களஞ்சியம்.இதில் செய்திகள் அதிகம்.


அதைவிடக் கருத்துகள் அதிகம்’’ என்று இரா.செழியனும், ‘ நல்ல படைப்பு’ என்று டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களும், ‘சிறப்பான நூல்’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்களும், ‘ஞானப்பெட்டகம் என்று குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாரும், ‘பயனுள்ள கட்டுரை’ என்று முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமியும் , ‘சுத்தமான அறிவு’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் பாராட்டுகிறார்கள்” என்று பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் ‘தமிழர் தலைவர் கி.வீரமணியின் வாழ்வும் பணியும்’ என்னும் நூலில் குறிப்பிடுவார்.அது மட்டுமல்லாது அந்த நூலில் “கி.வீரமணியின் படைப்புகளில் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்த நூல் இதுவாகும். இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது அவரது எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்றும் அவர் குறிப்பிடுவார்.


வாழ்வியல் சிந்தனைகள் வந்துள்ள கட்டுரைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளன.வாழ்க்கையைச் செப்பனிட உதவியுள்ளன.கண்மாயில் நிரம்பி இருக்கும் நீர் பல வாய்க்கால்களின் வழியாகப் பாய்வது போல,வாழ்வியல் சிந்தனைகளின் கட்டுரையை அடிப்படையாக வைத்து பல புதிய நூல்கள் வந்துள்ளன.வெண்பா அடிப்படையில் மதுரை சுப.முருகானந்தம் அவர்கள் ‘வாழ்வியல் வெண்பா ‘ என்னும் நூலை வெளியிட்டுள்ளார்.ஆங்கிலத்தில் வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் மொழி பெயர்க்கப்பட்டு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில இதழில் மாதந்தோறும் வெளிவருகிறது. புதுக்கவிதை வடிவில் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துகளை பலர் வடிக்கின்றனர்.இப்படி பல நூல்களுக்கான ஆதாரக் கொள்கலனாக அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள் அமைந்துள்ளன.


அய்யா ஆசிரியர் அவர்களின் இந்த 90 ஆண்டுகால வாழ்க்கையில் 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக அமைந்த வாழ்க்கை. சுற்றுப்பயணம் செய்து கொண்டேயிருக்கும் நம் தலைவர் அவர்கள் தீவிரமான வாசிப்பாளர். வாசிப்பைச் சுவாசிப்பவர்.வாசிப்பது மட்டுமல்லாது புத்தகங்களை, கட்டுரைகளை, அறிக்கைகளைப் படைத்துக்கொண்டே இருக்கிறார். அவரின் புத்தகங்கள் காலத்தை வென்று வாழும் சக்தியுடைய புத்தகங்களாக இருக்கின்றன. ஒரு பக்கம் தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பறைசாற்றும் புத்தகங்களைப் படைக்கும் அதே நேரத்தில், எல்லோரும் வாழ்வில் நிம்மதியாக வாழவும், வாழும் நாள்களில் மகிழ்ச்சியாக வாழவும், உடல் நலத்தோடு, மன நலத்தோடு வாழவும் வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள் நமக்கு வியப்புமிகு எழுத்தாளராகவே இருக்கின்றார்.அவர் இன்னும் பல நூறு புத்தகங்கள் படைக்கும் வண்ணம் நீடூழி வாழவேண்டும்! வாழ வேண்டும்! என்று விரும்புகின்றோம்; வணங்குகின்றோம்; வாழ்த்துகின்றோம்.

.....முனைவர்.வா.நேரு......


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் டிசம்பர் 1-15

Tuesday 13 December 2022

கொடுக்கப்படாத சில புத்தகங்கள்

 

திருப்பிக் கொடுக்கப்படாத

சில புத்தகங்கள்

அலமாரிக்குள்

அகப்படுகின்றன…

 

கொடுக்கப்படாத

புத்தகங்களின் வழியாக

புத்தகத்தைக் கொடுத்தவரைப்

பற்றிய நினைவுகள்

நீள்கின்றன….

 

வெகு நேரம்  

ஆழ்ந்து வாசிக்கும்

அவரின் குணத்தை

அவர் கொடுத்த

புத்தகத்தின் வழியாக

சுவாசிக்க முடிகிறது…

 

திருக்குறள் பற்றிய

அவரின் புத்தகம்

திருக்குறள் கட்டுரைகளைப்

பதிப்பிக்க அவர் அலைந்த

அலைச்சலை நினைவுபடுத்துகிறது…

 

புத்தகங்களாய்ப் படித்து படித்து

படித்த புத்தகத்தில் அடிக்கோடிட்டு

அடிக்கோடிட்ட எழுத்துகளை

தனியாக நோட்டுப்புத்தகத்தில்

எழுதிவைக்கும் அவரின் வாசிப்பை

அடிக்கோடிட்ட ஒரு புத்தகம்…

கொடுக்கப்படாத ஒரு புத்தகம்

நினைவுபடுத்துகிறது…

 

புதுமைப்பித்தனை

அழகிரிசாமியை

இன்னும் சில படைப்பாளிகளை

தான் படித்து சிலாகித்ததைச்

சொல்லிச்சொல்லி

என்னை அவர்களைப் படிக்கவைத்த

நண்பரின் புத்தகம் ஒன்றும்

கொடுக்கப்படாத புத்தகமாய்

அலமாரிக்குள் இருக்கிறது…

 

புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தால்

அவர்களின் வாரிசுகளில்

யார் இதைப் படிப்பார்?

யார் இதைப் பாதுகாப்பார் ?

னும் கேள்வி எழ

கொடுக்கப்படாத புத்தகங்கள்

கொடுக்கப்படாமலேயே

இருக்கட்டும் எனத் தோன்றுகிறது…

 

                                                 வா.நேரு

                                                  13.12.2022

 

Thursday 8 December 2022

எதிலிருந்து கவிதை எழுகிறது?...

 எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...


மெளனமாக இருக்கும் 

நேரங்களில் கேட்கும்

ஒலிகளில் இருந்தா?

இடியோசை எனக் 

காதைப் பிளக்கும்

சப்தங்களுக்கு நடுவிலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

அதிகாலையில் வானத்தில்

அணிவகுப்பு போல

வரிசையாகப் பறந்திடும்

பறவைகளின் ஒழுங்கிலா?...

எவ்வித ஒழுங்கும் இன்றி

அறை முழுவதும்

சிதறிக் கிடக்கும்

பொருட்கள் போல

ஒழுங்கு இன்மையிலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

இருட்டு அறைக்குள்

பொருளைத் தேடி அலைந்து

உத்தேசமாய்த் தொட்டு

அதுதான் என உணர்ந்து

மகிழும் அக்கணத்திலா?...

பகலைப் போல 

விளக்குகள் ஒளிரும் இரவில்

எங்கு வைத்தோம் 

எனத் தெரியாமல் 

தேடித் திணறி

திகைத்து நொந்து நிற்கும்

அக்கணத்திலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

ஒன்றுபோல இருக்கும்

பொழுதுகளால்

ஒரு போதும் 

கவிதைகள் வருவதில்லை...

முரண்களோடு நிகழும்

எதிர்பாராத நிகழ்வுகளே

எப்போதும் கவிதைகளுக்கு

'தொட்டணைத் தூறும் மணற்கேணி'


அதிகாலையில் கிழக்கே

உதிக்கும் சூரியன்போல அல்லாது

எப்போது உதிக்கும்...

எப்படி உதிக்கும்...

எனச்சொல்லமுடியாததாய் கவிதை...



                         வா.நேரு

                         08/12/2022