Tuesday 28 November 2023

அவரைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் ....


திரு.வே.வீரிசெட்டிசாரின் நினைவேந்தல் நிகழ்வும், 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் எனது நூல் வெளியீட்டு நிகழ்வும் 26.11.2023 காலை மதுரையில் உள்ள அல்-அமீன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.அந்த நிகழ்வைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட விடுதலை,தினமணி,தமிழ் இந்து ,தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளுக்கு மனமார்ந்த நன்றி.மதுரையில் உள்ள நட்பு தமிழ் வட்டத்தின் தலைவர் அய்யா நா. நா.ஆறுமுகம் அவர்கள், 10 மணி நிகழ்வுக்கு 9.30க்கே  இணையரோடு வந்திருந்து நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றியதோடு இணைப்புரையும் கொடுத்து நிகழ்வை சிறப்புக்குரியதாக ஆக்கினார். அல்-அமீன் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஷேக் நபி அவர்கள் 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் நூலை வெளியிட்டதோடு ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார்.திரு.வே.வீரிசெட்டி சாரின் அவர்களின் உடன்பிறந்த சகோதரர்கள் திரு.வே.சிவராஜ் அவர்கள்(ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் மேலாளர் -பணி நிறைவு) அவர்களும் திரு.வே.பாலசுப்பிரமணியம்(பொறியாளர்,பொதுப்பணித்துறை-பணி நிறைவு) அவர்களும் திரு.வே.வீரிசெட்டி சாரின் மகள்,பெரியகுளத்தில் முது நிலை ஆசிரியராகப் பணியாற்றும் வீ.மணிமொழி அவர்களும் ,அவரின் இணையர் திரு.த.கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டது மன நிறைவு அளித்தது. வீரிசெட்டி சாரின் உடன் பணியாற்றிய திரு.குபேந்திரன்(கல்வி அதிகாரி-ஓய்வு)  அவர்கள்,அவரின் மாணவர் திரு.ரவீந்திரன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரும் உரையாற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்வில் முன்னிலை ஏற்று உரையாற்றிய, நூலைப் பெற்றுக்கொண்டவர்கள் என அனைவரும் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் சுப,முருகானந்தம் அவர்கள் ஒரு நிறைவான உரையை நிகழ்த்தினார்.கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றி. வர இயலாமல்,இருக்கும் இடத்தில் இருந்து நிகழ்வை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி.
நூலைக் குறிப்பிட்ட காலத்தில் அச்சடித்து மதுரைக்கு அனுப்பிய கீழடி பதிப்பகத்தின் உரிமையாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 
மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு  பெரும் நன்றி.






நிகழ்வு முடிந்த மறுநாளான நேற்று(27.11.2023) எழுத்தாளர் தோழர் மு.சங்கையா அவர்கள் செல்பேசியில் பேசினார். நூலைப் படித்துவிட்டேன் என்று வெகுவாக நூலைப் பாராட்டினார். பாராட்டியதோடு,இதைப் போல எனக்குக் கற்பித்த ஒரு ஆசிரியர் மனதிற்குள்ளேயே இருக்கிறார்."  நான் பள்ளியில் படிக்கும்போது ,ஓரிரு நாள் காய்ச்சல் என்று பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை.அந்த ஆசிரியர் வந்து என்னை வீட்டில் வந்து பார்த்து,'ஏன் பள்ளிக்கு வரவில்லை ' என்று கேட்டு ,காய்ச்சல் என்றவுடன் என்னை சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து மூன்று மைல்தூரம் ஓட்டிச்சென்று,மருத்துவரிடம் காட்டி,ஊசி போட்டு ,அதற்கு அவரே பணம் கொடுத்து,மறுபடியும் என்னை வீட்டில் வந்து விட்டுப்போனார்' என்றார்.அவரைப் பற்றி இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது.மூன்று வருடம் அவரிடம் நான் படித்தேன். இதுவரை ஒரு கட்டுரை கூட அவரைப் பற்றி  எழுதவில்லை.இந்த நூலைப் படித்து முடித்தவுடன் அவரைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன் தோழர்,எழுதப்போகிறேன் என்றார். தோழர் ,இந்த நூலின் மிகப்பெரிய வெற்றியாக  நான் கருதுவது,உங்களின் இந்த எண்ணம்தான் எழுதுங்கள்,எழுதுங்கள்  என்றேன்.





 

Friday 24 November 2023

திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

 

இன்று எனக்கு தலைமை ஆசிரியராக இருந்து சென்ற ஆண்டு(2022) இதே நாளில்  நவம்பர் 24-ல் மறைந்த திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.அவரைப் பற்றிய நினைவுகள்  நிறைய ஓடுகிறது.84 ஆண்டுகள் ,ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தவர்,அப்படி கற்றுக்கொடுப்பதற்கு அடிப்படை கற்றுக்கொள்வது எனத் தன்  வாழ்நாள் முழுவதும்  கற்றுக்கொண்டே இருந்தவர்.’செல்வத்துள் எல்லாம்  தலை’ ஆகிய செவிச்செல்வத்தை முழுமையாகப் பயன்படுத்தியவர்,எவர் பேசினாலும் பொறுமையாக,முழுமையாகக் கேட்கும் தன்மையை தன் வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தார்.



அவரைப் பற்றிய எனது நினைவுகள்,அவர் பல பள்ளிகளில் பணியாற்றிய அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்,அவரின் உடன் பிறந்த தம்பி,அவரின் இன்னொரு மாணவர்,அவரின் இரண்டு நண்பர்களின் கூற்று என அனைத்தையும் இணைத்து ஒரு நூலாக ‘கனவுபோலத்தான் நடந்தது ‘ என்னும் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.அந்தப் புத்தகம் மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில்  வருகின்ற 26-ந்தேதி காலை 10-1 மணி வரை நடக்கும் திரு.வே.வீரிசெட்டி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட இருக்கின்றது.

மதுரை,அதனைச்சுற்றி இருக்கும் தோழர்கள்,நண்பர்கள் வாய்ப்பு உள்ளோர் வாருங்கள்.மிகக் குறுகிய காலத்தில் இதனை அச்சிட்டு உதவிய கீழடி பதிப்பகம்,அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் பண்ணைக்காடு,நத்தம்,தேவதானப்பட்டி,சிறுகுடி,தொண்டி,பாகனேரி,சாப்டூர்,கருங்காலக்குடி,சத்தரப்பட்டி,வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் ஆசிரிய்ராகவும் ,தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.அவரின் மாணவர்கள்,உடன் பணியாற்றியவர்கள் அவரைப் பற்றி ஏதேனும் சொல்லவேண்டும் என்று நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது எழுதி அனுப்புங்கள்.அடுத்த பதிப்பில் இணைத்துக்கொள்ளலாம்.



இன்றைக்கு அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளாம்.அய்யா சிக்காகோ மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பதிவிட்டிருந்தார்.  நன்றி உணர்ச்சியால் விளைந்த புத்தகம் இது. நன்றி.

Friday 17 November 2023

உண்மையின் ஒளிச்சிதறல்

                         உண்மையின் ஒளிச்சிதறல்

              (முனைவர் வா.நேரு)

திராவிட இயக்கம் மக்களுக்கு உண்மையை உணர்த்த கையில் எடுத்த கலை நாடகம். நாடகக் கலையின் மூலமாக பகுத்தறிவுக் கருத்துகளை,முற்போக்குக் கருத்துகளை,சாதி ஒழிப்பை,பெண்ணுரிமைக் கருத்துகளை மக்கள் மனங்களிலே விதைத்த இயக்கம் திராவிட இயக்கம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,பேரறிஞர் அண்ணா, ,டாக்டர் கலைஞர் ,சி.பி.சிற்றரசு,தில்லை வில்லாளன்,,எஸ்.எஸ்.தென்னரசு,கே.ஜி.இராதாமணாளன் எனத் திராவிட இயக்க நாடகப் படைப்பாளர்களின் பட்டியல் மிகப்பெரியது. தாங்கள் விரும்பிய சமுத்துவ சமுதாயம் படைக்க,மிக வலுவான போர்க்கருவியாகத் திராவிட இயக்கத்தவர்கள் நாடகத்தைத் தங்கள் கைகளில் எடுத்தனர்.படைத்தனர். ஊர்கள் தோறும் மேடைகளில் அரங்கேற்றினர். எதிர்ப்புகள் எத்தனை வந்தபோதிலும் உண்மையைப் போதிக்கும் இந்த நாடகங்களை நடத்தினர்.

 “ இனி வரப்போகும் நாடக உலகமானது இதுவரை இருந்தது போலவே இல்லாமல்,உண்மையிலேயே மனித சமூகத்திற்குப் பயன்படக்கூடியதாகவும் அதாவது,மக்கள் யாவரும் சமம்-பகுத்தறிவே பிரதானம்-உலக இயற்கைப் போக்குகள் ,இன்ப துன்பங்கள் யாவர்க்கும் பொது; இவற்றை யாரும் சரிசமமாக அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள்;அத்ற்கேற்ற கொள்கைகளே வாழ்க்கை முறையாகவும் ஆட்சி முறையாகவும் இருக்க வேண்டும்; இவற்றிற்கு விரோதமாய் இருப்பவைகள் எல்லாம் அழிந்து ஒழிந்து மறையவேண்டும் என்கின்ற கருத்துக்கும்  அனுகூலமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கவேண்டுமென்று விரும்பி,இன்றைக்கு கொடுமையும் பட்சபாதமும் நிறைந்த உலகத்தை அன்பும் சமுத்துவமும் கொண்ட உலகமாயச்செய்ய உதவி புரிய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் “ என்றார் தந்தை பெரியார்.அந்த அறிவுரைக்கு ஏற்றபடி திராவிட இயக்கத்தவர்கள் நாடகக் கலையை 1940,1950,1960களில்  பயன்படுத்தினர்.

1970-களுக்குப் பிறகு நாடக வடிவம் மாறியது. நிஜ நாடக இயக்கம் தோன்றியது. நிஜ நாடக வடிவத்தை முதலில் கையில் எடுத்தவ்ர்கள் இடது சாரி இயக்கத்தினர். மேற்குவங்காளம்,கேரளா போன்ற மாநிலங்களில் வீதி நாடகம், நிஜ நாடக இயக்கம் பெரும் புகழ் பெற்றது.

தமிழ் நாட்டிலும் நிஜ நாடக இயக்கத்தை இடதுசாரி இயக்கத்தவர்களே முன்னெடுத்தனர்.ஆரம்ப கால கட்டங்களில் அவர்களின் நாடகங்களின் கருப்பொருளாக தந்தை பெரியார் கருத்துகள் இல்லை. வர்க்க உணர்வு அடிப்படையிலான கருத்துகளே இருந்ததே தவிர வர்ணாசிரம ஒழிப்புக் கருத்துகள் இல்லை. ஆனால் இப்போது  நிஜ நாடக இயக்கத்தினர் தந்தை பெரியாரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பல நாடகங்களைக் கொடுக்கின்றனர்.

.தமிழ் நாட்டின் நிஜ நாடகத்தின் தந்தை என்று போற்றப்படும் பேரா.மு.இராமசாமி அவர்கள் தொடர்ச்சியாக ‘கலகக்காரர் தோழர் பெரியார்’,’பெண் ஏன் அடிமையானாள்(கலகக்காரர் தோழர் பெரியார் -2) என்னும் நாடகங்களைக் கொடுத்து தமிழ்நாட்டின் கருத்தியல் தளத்தில் ஓர் அதிர்வைக் கொடுத்தார்.அதனைத் தொடர்ந்து அண்மையில், மதுரையில் 28.10.2023 அன்று ‘வைக்கம் போராட்டம் ஈ.வெ.ரா.நாயக்கர் கதை அல்ல, ஈ.வெ.ரா. நாயகர் ஆன கதை (கலகக்காரர் தோழர் பெரியார் -3) என்னும் நாடகத்தை அரங்கேற்றினார்.

இந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு. தமிழ்நாட்டின் முதல்வர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்  மிகச்சிறப்பாக இந்த வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கல்லூரிகள் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருந்தார்..அதனை மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரி மாணவ-மாணவிகள்,ஆசிரியர்கள் ஒன்றிணைந்து  மிகச்சிறப்பாக நிறைவேற்றினர்.

மதுரை இராஜா முத்தையா மன்றம் அரங்கு. முழுவதுமாக நிரம்பி வெளியே நின்றும் நாடகத்தைப் பார்த்தனர்.கல்லூரி மாணவ மாணவிகளால் அரங்கம் நிரம்பியிருந்தது. இளையவர்கள்  நடிப்பதை இருபால் இளைஞர்கள் வரவேற்று கைதட்டி மகிழ்ந்து வரவேற்றனர்.ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகள் இருமுறை நடத்தப்பட்ட இந்த நாடகத்தைக் கண்டு உணர்வு பெற்றனர் என இக்கல்லூரியின் துணை முதல்வர் பெரி.கபிலன் அவர்கள் குறிப்பிட்டார்.

““வைக்கம் பற்றிய நாடகம் ஒன்றை நான் வரைய, ஒரு தூண்டுதலாய் அமைந்தது, வைக்கம் போராட்ட நூற்றாண்டைத் தமிழ்நாடு அரசு ஓராண்டு நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததும், ஒரு காரணம்! அதையொட்டித்தான், என்னின் வைக்கக்களப் பணிகளும், வைக்கம் தொடர்பான நூற்களின் வாசிப்புகளும்! ஆயின், அதற்குமுன், ‘பெண் ஏன் அடிமை ஆனாள்? என்கிற கலகக்காரர் தோழர் பெரியார் 2’ நாடகம் எனக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கையிலேயே, சாதிய வருணாச்சிரமத்தைத் தொட்டு, அது பேசும் வருண அரசியலைக் கொண்டு,நாடகம் ஒன்று பண்ண வேண்டும் என்கிற சிறு பொறியொன்று, பட்டாம்பூச்சியாய் எனக்குள் படபடத்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம், பெண்களைப் பாவ யோனியாகவே வருணாச்சிரமம் பார்க்கும் பார்வையைப் ’பெண் ஏன் அடிமை ஆனாள்?’ நாடகம் தன் உள்ளிலிருந்து பேசியிருந்தது. பார்த்தவர்கள் வெடவெடத்து அதிர்ந்து போயிருந்தனர். “ (கணையாழி,நவம்பர் 2023) என்று இந்த வைக்கம் நூற்றாண்டு நாடகம் நடத்தவேண்டும் எனும் எண்ணம்  எப்படி உருவானது என்பதனை இந்த நாடக இயக்குநர் பேரா.மு.இராமசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இந்த நாடகம் பல நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருச்சியில் இந்த நாடகத்தை நடத்தவேண்டும் என்னும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். .இருட்டை அகற்றுவதற்கு வெளிச்சத்தைத்தான் உருவாக்கவேண்டும்.இன்றைய இளைய சமுதாயத்திடம் பரப்பப்படும் சாதி இருட்டை அகற்றத் தந்தை பெரியார் என்னும் வெளிச்சத்தைத்தான்  அவர்களுக்கு காட்டவேண்டும்.அந்த வெளிச்சத்தைக் காட்டும் வேலையை இந்த நாடகம் மிக அற்புதமாக நிகழ்த்துகிறது. பார்க்கும் ஒவ்வொரு மாணவரும் சாதிய இழிவை உணரும் வண்ணம்,வைக்கம் போராட்டத்தின் வழியாக மனிதர்களுக்குள் இருக்கவேண்டிய சம நீதியை உணரும் வண்ணம் இந்த நாடகம் அமைந்திருப்பது சிறப்பு.

கறுப்புச்சட்டை போட்ட தந்தை பெரியாரை நாம் அறிவோம்.ஆனால் கதர்ச்சட்டை போட்ட பெரியாரை, பெரியார் என்ற பெயர் வருவதற்கு முன்னால் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னும் பெயரோடு கதர்க்குல்லாய் அணிந்து பொதுவாழ்வில் புடம் போட்டத்தங்கமாய் மிளிர்ந்த பெரியாரை,அடுக்கடுக்காய் சிறைத்தண்டனைகள் அடைந்தபோதும் அயராமல்,அஞ்சாமல் போராடிய பெரியாரை,தன்னுடைய மனைவி நாகம்மையாரிடம் ‘நான் சிறைக்குப் போகிறேன். போராட்டம் தொய்வு அடையக்கூடாது,தொடர்ந்து நீ நடத்து போராட்டத்தை ‘ என்று சொல்லிச்சென்ற பெரியாரை,தன் தங்கை கண்ணம்மாவும்,தன் மனைவி நாகம்மையும் போராட்டத்தை நடத்துகிறார்கள் எனும் செய்தியால் மகிழ்வுற்ற பெரியாரை,சிறையில் புழுக்களோடு உணவை கவலைப்படாமல் சாப்பிட்ட பெரியாரை,அதனைப் பார்த்து இராசாசி பாராட்டிய பெரியாரை,எந்த விதக் கவலையும் இல்லாமல் சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்ட பெரியாரை, காந்தியார் வந்து நேரில் சந்தித்து ,போராட்டம் பற்றி உரையாற்றிய பெரியாரை,வைக்கம் போராட்ட வெற்றிவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பெரியார்  எனப் பார்ப்போர் கண்முன்னால் பேரா.மு.இராமசாமி அவர்கள் நடித்துக்காட்டினர்.

வைக்கம் போராட்டம் ஆரம்பித்த மார்ச்30,1924 முதல் அது முடிவு பெற்ற நவம்பர் 23,1925வரை தேதிகளைக் காட்டி அந்தத் தேதிகளில் நிகழ்ந்த போராட்டங்களை,நீதிமன்ற நடவடிக்கைகளை, பத்திரிக்கை செய்திகளை என அந்த நாள் நிகழ்வுகளைத் தேதிப்படி ,கல்லூரி மாணவ மாணவிகள் கூர்மையான விமர்சனனகளோடு நடித்துக்காட்டியபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து கைதட்டல்கள் பலமாக எழுந்தது.

கல்லூரி மாணவ மாணவியர்கள்தானா அல்லது நிரந்தர நாடகக் கலைஞர்களாக இவர்கள் என்று எண்ணத்தக்கவகையில் ஒவ்வொரு காட்சியிலும் மாணவ மாணவியர்கள் வசனங்களைப் பேசி அற்புதமாக நடித்தனர்.105  நிமிடம் நாடகம் , நேரம் போனதே தெரியாதவண்ணம் மிக விறுவிறுப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடத்தப்பட்டது வியப்பளித்தது.வைக்கம் போராட்ட வரலாறு கண்முன்னால் காட்சிகளாக விரிந்து,உண்மையை வெளிச்சமிட்டது.

தந்தை பெரியாரின் கருத்துகள் எவரையும் ஈர்க்கும் வல்லமை மிக்கவை. திறந்த மனதோடு தந்தை பெரியாரின் கருத்துகளை உள்வாங்கும்போது அது செய்யும் மன மாற்றங்கள் ஆச்சரியப்படத்தக்கவை.1933-ல் தந்தை பெரியாரின் ஒரு 3 மணி நேரப்பேச்சை முதன் முதலில் கேட்டு, மனம் மாறி தந்தை பெரியாரின் கருத்துகளை கவிதைகளாக ஆக்கினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்பது வரலாறு. இது 90 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு ஆனால் தந்தை பெரியாரின் கருத்துகளின்,போராட்டங்களின் அடிப்படையில்  நிஜ நாடகங்களை வடிவமைக்கும் அய்யா பேரா.மு.இராமசாமி அவர்கள்,தந்தை பெரியாரின் கருத்துகள் தனக்குள் ஏற்படுத்திய வேதியியல் மாற்றத்தைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

இந்த நாடகம் எனக்குள் செய்திருக்கிற மாற்றம் என்னவாயிருக்கிறது என்பதாய்த் தனித்து யோசித்துப் பார்க்கையில், அது எனக்குள் செய்திருக்கிற கிரியை ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கிறது. உண்மையின் மேலான பற்றுறுதி கூடியிருக்கிறது. என்னை என் வளர்ச்சியில் இயல்பாகப் பக்குவப்படுத்தியிருந்த, உண்மையாயிருப்பது என்பது எத்தனை உன்னதமானது என்பதை, இலக்கியமாய் எனக்குள் இந்த நாடகம் இறக்கியிருக்கிறது என்று கம்பீரமாகச் சொல்ல முடியும். அது, நாடகத்தில் நடிக்கிற நடிகனுக்குள் நிகழ்ந்திருக்கிற வேதியல்மாற்றம்! கலவரத்தையோ, காட்டுமிராண்டித் தனத்தையோ நம்பாமல், எதையும் பகுத்தறிவுடன் யோசிக்க வைக்கிற பக்குவத்தை இது உள்வயமாய் உருவாக்கியிருப்பது அதிசயமாயிருக்கிறது.

 உண்மையின் ஒளிச்சிதறல்தான் பெரியார் என்பதையும், சமூகத்தின் மேலான பற்று/ அக்கறை என்பதே பெரியாரியம் என்பதாயும், அது மனிதத்துவத்தை மேன்மையுறச்செய்யும் மாமருந்து என்பதாயும், எனக்குள், உரத்து உள்வாங்க வைத்திருக்கிறது இந்த நாடகம்! நடிக்கையில், பெரியாராக நான் என்னை எப்படிப் பார்க்கிறேன்? உண்மை-மனிதனை மையப்படுத்தும் சமூகப் பற்று-சமூக நீதியை உள்ளத்தில் பற்றவைக்கும் நெருப்பு-யோசிக்கவே வைக்கிற பகுத்தறிவுக் குறும்பு-பொதுவாழ்வில் நேர்மை-அஞ்சாமை எனும் அச்சாணி-போராட்டமே வாழ்க்கையாகும் ரசவாதம்-இவற்றின் நேரிசைக் கலவையில் உருவாகும் குணச்சித்திரம், பெரியார் என்கிற நிறம் என்பதாய் எனக்குள் புகுந்து, என்னின் ’நான்-ஐயே என்னை மதிக்கவைக்கிற மகத்துவத்தைச் செய்திருக்கிறதாய் உணர்கிறேன். 

இந்தப் பொறி, நாடகத்தில் உடன் நடித்தவர்களிடமும் உருவாக ஆரம்பித்திருப்பதை மெல்ல மெல்ல என்னால் உணர முடிகிறது. இனி, நாடகத்தைப் பார்ப்பவர்களிடமும் புதிய குணமாய் அது பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே, பெரும் ஆதாயங்களை எதிர்பார்க்காத இந்த நாடகக்காரனின் எளிய ஆசை! இது நிறைவேறும் வரையும் உழைத்தாலே, இந்த வாழ்க்கையின் அர்த்தம் கைகூடிவரும் என்பதாய் நான் நம்புகிறேன்!” (கணையாழி,நவம்பர் 2023) என்று மிகச்சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.

ஆம், இந்த நாடகத்தைப் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்தப் பெரியார் என்னும் உண்மையின் ஒளிச்சிதறல் மூளைக்குள் ஊடுருவும். பத்தாம் பசலித்தனமான கருத்துகளால் நிரம்பிக்கிடக்கும் மூளையின் இருட்டை இந்தப் பெரியார் என்னும் ஒளிச்சிதறல் நீக்கும்.புதிது புதிதாய் சிந்திக்க வைக்கும்.அதன்மூலம் பெரியார் விரும்பிய  உலகத்தை ‘அன்பும் சமுத்துவமும் கொண்ட உலகத்தை’ படைப்பதற்கு உந்து சக்தியை அளிக்கும். அப்படிப்பட்ட நாடகத்தை அளித்திருக்கக்கூடிய பேரா.மு.இராமசாமி அவர்களையும் அதில் மிக இயல்பாக,தேர்ந்த நாடகக் கலைஞர்களைப் போல நடித்திருக்கக்கூடிய மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரி மாணவ,மாணவிகளையும் ,அதற்குத் துணை நின்று பணியாற்றிய அக்கல்லூரியின் முதல்வர்,துணை முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்களையும் ,ஊழியர்களையும்,முன்னாள் மாணவர்களையும் பாராட்டி மகிழ்வோம்.அது மட்டுமல்ல இந்த நிகழ்வு நிகழக் காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும்,நிகழ்வில் கலந்து கொண்டு  உற்சாகப்படுத்திய தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மாண்புமிகு பி.மூர்த்தி அவர்களையும்,உரையாற்றிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களையும்,மதுரை வடக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அவர்களையும்,தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மா.இராஜேந்திரன் அவர்களையும், மதுரை துணை மேயர் நாகராசன் அவர்களையும் மற்ற ஆளுமைகளையும் பாராட்டி மகிழ்கின்றோம். தந்தை பெரியார் நாடகங்களால் ‘கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்’ என்று ஆனந்த நடனம் புரிவோம்.

நன்றி : உண்மை,மாதம் இருமுறை இதழ் 16-30,11,2023

Saturday 4 November 2023

கணினித் திரையிலா ? காகிதப் பக்கங்களிலா?....முனைவர் வா.நேரு

 

மதுரையில் புத்தகத் திருவிழா அக்டோபர் 12-ஆம் தொடங்கி அக்டோபர் 22 வரை, 11 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. எதிர் எதிர்க் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களைக் கூட ஒரே இடத்தில் வாங்கக்கூடிய இடமாகப் புத்தகச் சந்தை திகழ்கிறது.

இதனைப் போல தமிழ்நாட்டின் பல நகரங்களில் தொடர்ச்சியாக இந்தப் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவதும், மக்கள் அலை அலையாக வருவதும், புத்தகங்களை வாங்கிச்செல்வதும் பெரும் மகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது.

இலட்சக்கணக்கான புத்தகங்கள் கிண்டிலில் ஒரு கணினிக்குள் கிடைக்கின்றன. விரும்பியதை விரும்பிய நேரத்தில் எல்லாம் நான் படித்துக்கொள்கிறேன்” என்றார் அந்த நண்பர்.

“இல்லை, நாம் புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துப் படிப்பது போல இணையத்தில் அல்லது கிண்டிலில் படிப்பது வராது” என்றேன் நான். நீங்கள் இன்னும் பழைய புத்தகக் காலத்திலேயே இருக்கிறீர்கள், புத்தகமாக வாங்கிக் குவிக்கிறீர்கள், மாறுங்கள்” என்றார்.

நானும் விடவில்லை. ‘ஆன்லைனில் படிக்கவே கூடாது, அது வேண்டவே வேண்டாம் என்பதல்ல எனது வாதம்.ஆனால் ஆன்லைன் புத்தகத்தைவிட, காகிதப்புத்தகமே மேல் என்பதே என் வாதம்’ என்றேன்.

எனது வாதத்திற்கு வலு சேர்ப்பதுபோல பி.பி.சி.தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தி கிடைத்தது. அது காகிதத்தில் வாசிப்பதற்கும் திரையில் வாசிப்பதற்கு
மான வேறுபாட்டைப் பற்றிப் பேசுகின்றது.



‘பிபிசி அய்டியாஸ் ‘தளத்தில் ‘திரையில் வாசிப்பது நம் மூளைக்கு என்ன செய்கிறது’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு காணொலி, டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்தனர் என்று சொல்கிறது
இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவை குறித்து நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் பல்கலைகழகத்தின் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஆன் மேங்கன், ”ஸ்மார்ட் ஃபோன்களில் நாம் படிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சிறிய செய்தித் துணுக்குகள் போன்ற விஷயங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் காகிதத்தில் படிக்கும் உள்ளடக்கத்தைவிட திரையில் படிக்கப்படும் உள்ளடக்கம் எளிதில் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டது” என்கிறார்

சயின்டிஃபிக் அமெரிக்கன்’ என்னும் இதழ்“காகிதத்தில் வாசிப்பதைவிட, திரையில் வாசிக்கும் போது நமது மூளை அதிகமாக வேலை செய்கிறது. ஆனாலும் திரையில் நாம் வாசித்ததை நீண்டநேரம் நினைவில் வைத்திருப்பது கடினம்” என்று குறிப்பிடுகிறது அப்படியென்றால் அதிக நேரம் மூளை வேலை செய்து, மிக எளிதாக திரையில் வாசித்ததை மறந்து விடுகிறது

“புத்தகங்களைப் படித்தாலும் கூட, அதனை மீண்டும் மீண்டும் படிக்கும்போதுதான் முழுப்பொருள் நமக்குக் கிடைக்கும்.

‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு (குறள் 783)

பழுத்த கனிகளைக் கூட அப்படியே ‘லபக்கென்று விழுங்கி
விடுவதோ அல்லது அவசர அவசரமாகச் சாப்பிட்டு விடுவதோ அதன் முழுச்சுவையை அனுபவித்து, சுவைத்து மகிழும் அரிய வாய்ப்பை உண்போருக்குத் தராது.
மாறாக, மெல்ல நிதானமாக நன்றாகச் சுரந்த உமிழ்நீருடன் கலந்து அதனை உண்ணும்போதுதான் முழுச்சுவை நமக்கு நல்லதோர் அனுபவத்தை ஊட்டும் என்று சொல்வார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பு 11, பக்கம் 253). நின்று நிதானமாகத் திரும்பத் திரும்பப் படிப்பதற்கு உகந்தது காகிதப் புத்தகமே தவிர கணினித் திரைப் புத்தகங்கள் அல்ல.

புரிந்து கொள்வதற்கும், திரும்பத் திரும்பப் படிப்பதற்கும் மட்டுமல்ல; உடல் நலனுக்கும் கணினித் திரைப்புத்தகங்களை விட காகிதப் புத்தகங்களே நன்று. ஸ்மார்ட் போன்கள் என்று அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு போன்களை சிறு வயதிலேயே படிப்பதற்கு என்று குழந்தைகளுக்குக் கொடுத்து விடுகிறோம்.

“‘சேப்பியன் லேப்ஸ்’ என்ற அமெரிக்கத் தன்னார்வ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே ஸ்மார்ட்ஃபோன் கொடுப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் அவர்களின் இளமைப் பருவத்தில் தெரியும் என்கிறது” என்று அந்த பி.பி.சி.செய்தி குறிப்பிடுகிறது. மேலும்,

“அஷ்விகா பட்டாச்சார்யா 9ஆம் வகுப்பு மாணவி. எப்பொழுதும் வகுப்பில் முதலிடத்தில் இருக்கும் அஷ்விகா, புத்தகங்கள் வாசிக்கிறார்.ஆனால் டிஜிட்டல் சாதனங்கள் வழியாக வாசிக்கிறார். அவரது பெற்றோர் அவருக்கு மென்புத்தகங்கள் வாசிக்க கிண்டில் கருவியைக் கொடுத்திருந்தாலும், இப்போது அவரை முழுமையாக காகிதப் புத்தகங்கள் பக்கம் திருப்ப விரும்புகின்றனர். அஷ்விகாவின் தாய் அசிமா கூறுகையில், ‘அதிகப்படியான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் கண்களில் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக நாங்கள் தொடர்ந்து உணர்கிறோம் அதனால் எனது மகளை காகிதப் புத்தகங்களின் பக்கம் திருப்ப விரும்புகிறேன்’ என்கிறார் என்று ஒரு தாயின் அனுபவத்தையும் அந்தச் செய்தி பகிர்கின்றது.

கோபத்தைத் தணிக்க ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம், ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்து படிப்பது ‘பிபிலியோதெரப்பி (Bibliotherapy)’ஆகும். புத்தகங்கள் வாசிப்பின் மூலம் மனோவியல் சிகிச்சையளிக்கும் முறை என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறது. அந்த ‘பிபிலியோதெரப்பி’ என்னும் சிகிச்சை முறை பற்றிய செய்திகள் நிறைய இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல நூல்கள் நல்ல உளவியல் சிகிச்சை மருந்துகள் என்பதை அறிவியலும் இப்போது சொல்கிறது.

ஆம், புத்தக வாசிப்பின் மூலமாக நாம் நல்ல நண்பர்களைப் பெறுகின்றோம். அவர்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காத நண்பர்கள், இன்னும் சிலரோ இப்போது உயிர் வாழாத நண்பர்கள், ஆனால் அவர்கள் தங்கள் எழுத்துகளின் மூலமாக நம்மோடு பேசுகிறார்கள். நல்லது, கெட்டதை நமக்கு அறிவுறுத்துகிறார்கள். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், தாங்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற அனுபவத்தை எல்லாம் நமக்கு அள்ளிக் கொடுத்துச் சென்று இருக்கிறார்கள், திருவள்ளுவரைப் போல புத்தகங்களின் வாயிலாக.
‘பிடிஎப் (PDF)’ புத்தகமாக மாற்றப்பட்டு, பலரும் அது கணினித் திரையில் மட்டும் படிக்கும்போது, அதற்கான எந்தவிதமான அங்கீகாரமும் எழுத்தாளனுக்குக் கிடைப்பதில்லை.

நாம் புத்தகங்களை பி.டி.எப். என்னும் வடிவில் கணினித் திரையில் படிப்பதும் ஒருவகை உழைப்புச்
சுரண்டல்தான்,ஒரு வகையான திருட்டுத்தான்.

கிண்டில் போன்ற ஆன்லைன் புத்தக நிலையங்களில், ஒர் எழுத்தாளர் தன் புத்தகத்தைப் போட்டு விட்டால், அதனை விளம்பரம் செய்து விற்கவேண்டிய பொறுப்பும் அந்த எழுத்தாளரைச் சார்ந்ததுதான்.பதிப்பகங்கள் தாங்கள் பதிப்பித்த எழுத்தாளரின் புத்தகங்களை ஊர் ஊராகச் சென்று புத்தகத் திருவிழாக்களில் விற்பனை செய்வது போல, அமேசான் போன்ற நிறுவனங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்வதில்லை. விற்றால் உனக்கு ராயல்டி தருகிறோம், பதிப்பகம் கொடுப்பதை விட அதிகமாகவே தருகிறோம், ஆனால் விளம்பரம் செய்து விற்க வேண்டியது உன் பொறுப்பு என விட்டுவிடுகின்றார்கள். புதிய எழுத்தாளர்களுக்கு இந்த வழிமுறை பயனளிக்காது.

காகிதப் புத்தகங்களை வாங்கித் தங்கள் வீட்டில் ஒரு சிறு நூலகத்தை ஏற்படுத்துகிறவர்கள், அதன் வழியாகத் தாங்கள் விரும்பும் புத்தகத்தை மீண்டும் மீண்டும் எடுத்துப் படிப்பவர்கள், அதில் இருக்கும் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவர்கள் ஒரு நல்ல சமூகம் அமைவதற்கான அடிப்படைக் கடமையைச் செய்கின்றார்கள். ஒரு சிறு நூலகத்தை உங்கள் வீட்டில், வாசிக்கும் நீங்களும் ஏற்படுத்துங்கள். வாசிப்பை நேசிப்போம். வாசிப்பைச் சுவாசிப்போம்.

நன்றி : ‘டிஜிட்டல் புத்தகங்கள் வாசிப்பதால் மூளையில் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்’ கட்டுரை.
– பி.பி.சி. தமிழ், அஞ்சலிதாஸ், 21.10.2023.

 நன்றி உண்மை மாதம் இருமுறை இதழ்  நவம்பர் 1-நவம்பர் 15