Tuesday, 5 August 2025

நூல்களின் வேடந்தாங்கல்- முனைவர் வா.நேரு

சென்னையில் அண்ணா  நூற்றாண்டு  நூலகம் போல, பெரியார்  நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யம்போல  நாம் கவனிக்கவேண்டிய நூலகம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாகும். இந்த நூலகம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது ஒரு தனிப்பட்ட நபரின் வாசிப்பு ஆர்வமும், அவர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை  புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழித்துச் சேகரித்த புத்தகங்களும் ஆகும். அவரது பெயராலும் அவர் வைத்திருந்த நிறுவனத்தின் பெயராலும் இந்த நூலகம் அமைந்திருப்பது சிறப்பாகும்.


ஆம், அவரது பெயர் முத்தையா.1926ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர்.சொந்த ஊர் இப்போதுள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர்.


அடிப்படையில் ஓவியம் வரைவதில் விருப்பம் உள்ளவர். வேலை தேடி சென்னைக்கு வந்த அவர், ஓவியம் வரைவதைத் தனது தொழிலாக
மாற்றுகிறார். ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்னும் பெயரில் ஓர் ஓவியக்கூடத்தை நிறுவுகிறார். புதிது புதிதாக ஓவியம் வரைவதற்கு, ஓவியத்தின் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு ஓவியம் குறித்த நூல்களை விலைக்கு வாங்குகிறார். புதிய நூல்கள் மட்டுமல்லாது பழைய புத்தகக் கடைகளுக்கும்  சென்று அங்கும் நூல்களை வாங்குகிறார். அப்படி வாங்குகிறபோது மற்ற  நூல்களையும் வாங்கி வாசிக்க ஆரம்பிக்கிறார். வாசிப்பதில் மிகப்பெரிய ஆர்வம் ஏற்படுகிறது. மேலும் மேலும் நூல்களை விலைக்கு வாங்கி, வாசித்து, பின்பு அவற்றைச் சேர்த்துவைக்க ஆரம்பிக்கிறார். சென்னையில் வசிக்கும் இடத்தில் புத்தகங்களை வைக்க முடியாத நிலை வருகிற போது அவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டு தனது சொந்த ஊரான கோட்டையூருக்குச் செல்கிறார்.  கோட்டையூரில் அவரது சொந்த வீடு முழுக்கப் புத்தகங்களால் நிரம்பி விடுகிறது. பின்பு இரண்டு வீடுகளைப் பக்கத்தில் வாடகைக்கு எடுத்து அங்கும் தான் வாங்கும் புத்தகங்களை எல்லாம் சேகரித்து அடுக்கி வைக்கிறார் புத்தகங்களைப் படித்து, அவற்றைத் தலைப்பு வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தி, எளிதாக எடுத்துப் படிக்கும் வண்ணம் அவற்றையெல்லாம் தனது சொந்த ஊரான கோட்டையூரில்  அடுக்கி வைக்கிறார். இப்படித் தேடித் தேடிச் சேர்த்த புத்தகங்கள்  நூறல்ல,இரு நூறு அல்ல, ஒரு இலட்சம் புத்தகங்கள்!


திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் நடத்திய இதழ்கள் மற்றும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களையெல்லாம் வாங்கிச் சேகரித்து வைத்திருந்திருக்கிறார். இவர் சேர்த்து வைத்ததில் இரண்டு இலட்சம் சிறுகதைகள்,5 இலட்சம் செய்தித் துணுக்குகள், ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5000 கட்டுரைகள், அவருக்குக் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் என்று இவர் சேமிப்பைப் பற்றி அறியும்போது வியப்பு மேலிடுகிறது.


1992ஆம் ஆண்டு, திடீரென திரு.முத்தையா
அவர்கள் மறைந்துவிடுகிறார். வெளிநாட்டில்  வேலைபார்த்த ஒரு பேராசிரியரின் முயற்சியால், அவரது நூல், இதழ் சேகரிப்புகளைப் பாதுகாக்க அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ  பல்கலைக்கழகம் முயற்சி எடுக்கிறது.கோட்டையூரில் இருந்த அவரது நூல் மற்றும் சேகரிப்புகள் எல்லாம் சென்னைக்கு மாற்றப்படுகின்றன.1994ஆம் ஆண்டு ரோஜா முத்தையா நிறுவனமாக அது மாறுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுகிறது. 2004ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டு, பின்பு அது இன்றைக்கு இருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாக மாறியிருக்கிறது.

நாம் இப்போது சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்குச் சென்றால் 4 மாடிக் கட்டடம் வரவேற்கிறது.  நாம் தேடி வந்த நூல் இருக்கிறதா என்பதனை அறிய இணையவழி நூலகப் பட்டியலை(கேட்டலாக்) கொடுக்கிறார்கள். இணைய வசதியும் இருக்கிறது. எந்த நூல் நமக்குத் தேவை என்பதைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கொடுத்தால் அங்கு இருக்கும் அலுவலர்கள் அந்த நூலைக் கொண்டு வந்து நம்மிடம் தருகிறார்கள். அங்கேயே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வதற்கு ஏற்ப அங்கு வசதிகள் இருக்கின்றன. பல ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து தங்களுக்குத் தேவையான நூல்களை எடுத்து, ஆய்வுக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து திரும்புகிறார்கள்.




https://rmrl.in/ta/visit என்னும் இணையதளம் மிக விரிவான தகவல்களைத் தருகிறது. இந்த நூலை எதற்கு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.” தமிழ்ப் பண்பாட்டின் பல அம்சங்களைக் காட்சிப்படுத்தி வருகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இதன் முக்கியச் செயல்பாடுகள் நூல் சேகரித்தல், நூல்பட்டியலிடுதல், எணினிமயமாக்கல், நூல் பாதுகாப்பு, ஆராய்ச்சி, கண்காட்சி வடிமைத்தல் முதலியவையாகும்.


தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதி, தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் தாங்கள் சேகரித்து வைத்திருந்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கியவர்கள் பற்றியும், அவர்கள் வழங்கிய நூல்கள் பட்டியலும் உள்ளது.அந்த வகையில் முனைவர் வசந்ததேவி மற்றும் பலர்  வழங்கிய நூல் பட்டியல் தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதியில் இருக்கிறது.(இந்தக் கட்டுரை எழுதி அனுப்பும்போது  தோழர் பேரா வசந்ததேவி அவர்கள் இருந்தார்கள்.இந்தக் கட்டுரை வெளிவரும்போது அவர்கள் இல்லை.தன் வாழ் நாளிலேயே தான் சேகரித்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா நூலகத்திற்கு அளித்த தோழர் பேரா வசந்ததேவி அவர்களுக்கு வீரவணக்கம்...வா.நேரு)


இந்த நூலகத்தில் சிந்துவெளி ஆய்வு மய்யம் என்னும் தனிப்பிரிவு இருக்கிறது. அய்ராவதம் மகாதேவன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வு மய்யத்தின் தற்போதைய தலைவர் திரு.ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆவார். “சிந்துவெளி ஆய்வு மய்யம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், சென்னை கணித அறிவியல் நிறுவனம், சியாட்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்ற உலகெங்கிலும் உள்ள முதன்மையான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இத்துடன் ஓர் ஆய்விதழையும் ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.


அய்ராவதம் மகாதேவன் வெளியிட்ட சிந்துவெளித் தொடரடைவை (1977) இணையச் செயலியாக மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் indusscript.in என்னும் தளத்தில் வெளியிட்டுள்ளது. இது சிந்துவெளி அறிஞர்கள், ஆர்வமுள்ள நபர்களுக்கு சிந்துவெளி எழுத்துகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் திறந்தநிலை இணையக் கருவியாகச் செயல்படுகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் அனைத்து அறிஞர்களுக்கும் சிந்துவெளி ஆய்வு மய்யம் எப்போதும் உதவுதற்குத் தயாராக இருக்கும்.அய்ராவதம் மகாதேவன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துகளை எங்கள் மின்நூலகத்தில் வாசிக்கலாம்.” என்று அதன் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஆலமரமாய், திராவிட மாடல் அரசினை நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு நிதியுதவிகளைப் பெறும் நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்வதுடன், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் எல்லாம் விரும்பி வரும் நூல்களின் வேடந்தாங்கலாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

நூலகத் தொடர்புக்கு : 914422542551

செல்பேசி : 8015312686

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் ஆகஸ்டு 1-15,2025