Friday 18 May 2012

அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (2)


அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பல விடைகளில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கும் முறையின் மூலம் 3 மணி நேரம் மட்டுமே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்படவேண்டும் எனும் கோரிக்கையை வைத்திருக்கிறார். இரண்டு தேர்வுகள் 6 மணி நேரம் தேவையில்லை, இன்னும் எளிமைப்படுத்தலாம் என்று கூறியிருக்கின்றார்.
யார் இந்த ஆனந்த்? சூப்பர் 30 நிறுவனம் என்பது என்ன? எனும் கேள்வி களுக்கு விடை காண ஒரு 7 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். ஏழை மாணவர்கள் அய்.அய்.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும், அவர் களுக்கு பயிற்சி  கொடுக்க வேண்டும் என்னும் நோக்கில் 2003-ல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.  - ராமானுசம் கணிதப்பள்ளி என்னும் பெயரில் செயல் படும் இந்த நிறுவனம் வருடத்திற்கு 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தனிப் பயிற்சி கொடுக்கின்றது. அவர்களுக்கு உணவு, இருப்பிடம், பயிற்சி அனைத்தை யும் இலவசமாக கொடுக்கின்றார்கள்.
இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 300 பேர் வரை அய்.அய்.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று படித்து முடித்திருக் கின்றார்கள், படித்துக் கொண்டிருக் கிறார்கள். வேறு எவரிடமும் நன் கொடையோ, பணமோ வாங்குவதில்லை, 30 பேருக்கு மேல் பயிற்சி கொடுப்பதில்லை என்று செயல்படுகின்ற இந்த நிறுவனத்தில் சென்ற இரு வருடங்களாக 30 -க்கு 30 என படித்த அனைவருமே நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அய்.அய்.டி. நிறுவனத்தில் படித்துக் கொண்டி ருக்கிறார்கள். வெற்றி பெற்று அய்.அய்.டி.யில் படித்துக்கொண்டிருப்பவர்கள், அடுத்த ஆண்டு பயிற்சி பெறுவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்,
வெற்றி பெறும் வழி முறைகளை சொல்லித்தருகின்றார்கள், அதன்மூலம் புதியவர்கள் வெற்றி பெறு கின்றார்கள். அவர்தான் மத்திய அமைச்சரை சந்தித்து இந்தத் தேர்வினை எளிமையாக்குங்கள் என்ற கோரிக் கையை வைத்திருக்கின்றார். இந்த செய்திக்கு இணையத்தில் பின்னூட்டம் எனப்படுகின்ற வாசகர் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பலர் அய்.அய்.டி.நுழைவுத்தேர்வில் மாற்றம் என்றவுடனேயே கூடாது, கூடாது , மாற்றினால் தகுதி, திறமை போய்விடும் என்று கூறியிருக்கின்றார்கள். . சிலர் சரியாகவே கேட்டிருக்கின்றார்கள், அய்.அய்.டிக்கள் இந்தியாவில் ஆரம் பிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, எத்தனை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை அந்த நிறு வனங்கள் தந்திருக்கின்றன, அல்லது உலக அளவிலான அறிவியல் கண்டு பிடிப்புகளை அந்த நிறுவனங்களில் படித்தவர்கள் தந்திருக்கிறார்களா? இல்லையே? அரசாங்கம் ஒவ்வொரு மாணவருக்கும் இலட்சக்கணக்கில் செலவு செய்கிறது, படிக்கிறார்கள், பெரிய பெரிய நிறுவனங்களில் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்கள், தன் பெண்டு, தன் பிள்ளை, சொத்துண்டு, சுகம் உண்டு என்று வாழ்கின்றார்கள், அவர் களால் இந்த சமூகத்திற்கு என்ன பயன் என்று கேட்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் ஏன் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை, எங்கே பிரச்சனை என்ற கேள்விகள் எழுகின்றபோது, அங்கே ஒரிஜனலான கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள் சேர்க்கப் படுவதில்லை, மாறாக 6-ஆம் வகுப்பி லிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டு,  அந்த பயிற்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, அய்.அய்.டி.யில் நுழை கின்றார்கள். இந்த பயிற்சியினை மிகப் பிரபலமான பல நிறுவனங்கள், பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை கட்டண மாகப் பெற்று கொடுக்கின்றன. ஒடுக்கப்பட்ட, பயிற்சி எடுக்காத மாணவர்களை பயமுறுத்தும் விதமாகவே இந்த நுழைவுத்தேர்வுகள் இருக்கின் றனவே தவிர, உண்மையிலேயே மாணவ மாணவிகளின் சிந்தனைத் திறனின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்வாக இந்த நுழைவுத் தேர்வுகள் இல்லை என்பதுதான் உண்மை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் பல இலட்சக்கணக் கான மாணவர்களுக்கு இந்த அய்.அய்.டி. நுழைவுத்தேர்வுகள் என்றால் என்ன வென்றே தெரியாத நிலைமைதான் உள்ளது. தாய்மொழியிலும் தேர்வு வைக்கப் பட்டு, அவர்களின் சிந்தனைத் திறத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு பின்பு அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப் பட்டால் அவர்களும் ஒளிர்வார்கள், நாட்டின் பெருமையும் ஒளிரும்.2006-இல் ஒரு அய்.அய்.டி. சேர்க்கை குறித்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், அய்.அய்.டி. சேர்க்கை எப்படி நடக்கிறது என்பதில் ஒரு வெளிப் படையான தன்மை இல்லை என்று கூறியிருக்கிறது.   பார்ப்பன ஊடகங்கள் புதிய முறை கூடாது என்று கூறுகின்றன. பார்ப்பன பேராசிரியர் அமைப்புகள் புதிய மாற்றம் வரவே கூடாது என்று கூறு கின்றன.

உடனே பயந்து போன மத்திய அரசு ஜுன் மாதத்திற்கு பின் முடிவெடுக்கலாம் என்று முடிவெடுப்பதில் நழுவுகிறது. நம்முடைய தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் புதிய முறையை, +2 மதிப் பெண்களுக்கு 40 மதிப்பெண் கொடுக் கும் முறையை ஆதரிக்க வேண்டும் ,கருத்தொற்றுமையை உண்டாக்க வேண் டும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபல்  அவர்களை சந்திக்க வேண் டும்.  தமிழகத்தில், சென்னையில் அய்.அய்.டி. நிறுவனம் உள்ள்து,250 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வரிப்பணத்தில் பல்வேறு விதமான வசதிகளோடு மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது.  ஆனால் தமிழக மாணவ ,மாணவிகள் 2 சதவீதம் கூட இதில் படிக்க  முடிய வில்லை.  முழுக்க ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் இத்தேர்வில் வெற்றி பெற்று சேருகின்றார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சென்ற வருடம் கோயம்புத்தூரில் 937 பேர் இந்த நுழைவுத் தேர்வினை எழுதியிருக்கிறார்கள், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்வு முறையில் மாற்றம் வருவதை வரவேற்கக்கூடிய அதே நிலையில், நமது மாணவ, மாணவிகள் இந்த அய்.அய்.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு எப்படிப்பட்ட பயிற்சிகளை கொடுக்க வேண்டும், எந்த வகுப்பிலிருந்து கொடுக்க வேண்டும், ஒரு ஆனந்த் என்பரால் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 பேருமே இந்த அய்.அய்.டி .நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வைக்க முடிகிற தென்றால், தமிழகத்திலிருந்து ஏன் முடியவில்லை என்னும் கேள்வியை எழுப்பி கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் விடை காண வேண்டிய நேரமிது. (நிறைவு)
நன்றி :விடுதலை 17-05-2012

No comments: