Sunday 23 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

நூலின் தலைப்பு : மோகினி (ரஷ்ய நாவல்)
ஆசிரியர்                : டால் ஸ்டாய்
தமிழில்                   : ஆர்.வி.
வெளியீடு              :  தையல் வெளியீடு, சென்னை -12
முதல்பதிப்பு         : 2004
மொத்த பக்கம்     :  64  விலை ரூ 25
மதுரை மைய நூலக எண் : 166368.


                                          உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால் ஸ்டாயின் நாவல் இது. மோகினி (The devil)  என்னும் இந்த நாவல் ஒரு ஜமின்தாரைப் பற்றியது. யுஜின் இர்ட்டினேவ் என்னும் அந்தக் கனவான் திருமணத்திற்கு முன்பே ஒரு மணமான பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததும், ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து நல்ல நிலையில் வாழும் போதும், பழைய பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் தடுமாறுவதும், பின்பு அது தவறு எனத் தெரிந்து அந்த நினைப்பிலிருந்து மீண்டும் வருவதும் தொடர்கதையாவ்தை அவருடைய பாணியில் சொல்லிச்செல்கிறார். உணர்ச்சிக்கும் நேர்மைக்கும் நடக்கும் போராட்டம். கடைசியில் அந்த நினைப்பிலிருந்து மீள முடியாமல் , குடித்தவன் மீண்டும் மீண்டும் உறுதி மொழி எடுத்தபின்பும் சாராயக் கடைக்கே திரும்பிப்போவது போலத் தன் மனம் மீண்டும் மீண்டும் தடுமாறுவதால் , யுசின் இர்ட்டினேவ் தற்கொலை செய்து கொள்கிறான், அவன் ஏன் இறந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை, நல்ல மனைவி, குழந்தை, நல்ல வருமானம், நல்ல அந்தஸ்து போன்றவற்றோடு இருந்த அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு  என்ன பிரச்சனை என்பது யாருக்கும் புரியவில்லை, தெரியவில்லை என முடிகின்ற்து. அவனுக்கு ஏதாவது மூளைக் கோளாறு , பைத்தியம் புடித்து விட்டது என்று பேசிக் கொள்கிறார்கள் என முடிக்கின்றார் டால் ஸ்டாய் . "  யுசினுக்கு மூளைக் கோளாறு என்றால் ஒவ்வொருவருக்கும் மூளைக் கோளாறுதான்; பைத்தியந்தான், தங்க்ளிடம் உள்ள பைத்தியக்காரத்தனத்தைத் தெரிந்து கொள்ளாமல் பிறரிடம் அந்தக் குணங்களைக் காண்பவர்கள்தான் பெரும்பாலான பைத்தியக்காரர்கள் " என்று புத்தகம் முடிகின்றது.

                                                " நெறியும் நேர்மையும் முரண்படும்போது உண்டாகும் போராட்டமே இந்தக் கதையின் உரு. புலனடக்கம் இல்லாதவன் இச்சைக்கு அடிமையாகி விடுகிறான். அதிலும் உடல் சம்பந்தமான உறவு வைத்துக்கொள்பவன் , பிசாசு போன்ற மிருக உணர்ச்சிக்குப் பலியாகி விடுகிறான். இதுதான் கதையின் கரு ...டால்ஸ்டாயின் கதைகளும் கட்டுரைகளும் மனித உள்ளத்தை வளப்படுத்தி,உயர்த்தக் கூடியவை; இலக்கியத்தின் நயத்தையும் மேம்பாடுகளையும் உணர்த்தக்கூடியவை " என்று சொல்கின்றார் முன்னுரையில் மொழி பெயர்ப்பாளர் ஆர்.வி.உண்மைதானே ...

No comments: