Sunday 21 September 2014

அண்மையில் படித்த புத்தகம் : பாஷோவின் கரும்பலகை ஆசிரியர் : வஸந்த் செந்தில்

அண்மையில் படித்த புத்தகம் : பாஷோவின் கரும்பலகை
ஆசிரியர் : வஸந்த் செந்தில்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், சென்னை -83
முதல்பதிப்பு : 2004  மொத்த பக்கங்கள் 62 விலை ரூ 20
மதுரை மைய நூலக எண : 157863
   
                             நூலகத்தில் இந்தப் புத்தகத்தை எடுக்கலாமா எனப் புரட்டியபோது " சிறிய நூல், பெரிய கருத்து, அரிய் உண்மை, எளிய நடை - வேலன் " என எழுதியிருந்தது. படித்து முடித்த போது அவ்ர் எழுதியிருந்தது உண்மைதான் எனப்புரிந்தது. இந்தப் புத்தகம்  ஜப்பானின் பாஷோவின் கருத்துக்கள் அல்ல, நூல் ஆசிரியர் வஸந்த் செந்திலின் கருத்துக்கள்- அதனை நூல் ஆசிரியரே அறிமுகம் பகுதியில் கூறிவிடுகின்றார்.

                                ஒரு சின்ன கதை, கதை முடிவில் ஒரு கருத்து - கரும்பலகையில் எழுதியிருப்பது போலக் கட்டமிடப்பட்டு. புதிய சிந்தனை, புதிய முயற்சி. உதவி என்னும் தலைப்பில் கதை , அதனை அடுத்து  கரும்பலகையில் " பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட , உதவி செய்யும் கரங்களே சிறந்தவை. நீங்கள் என்ன் கொடுக்கிறீர்களோ அதை மட்டுமே திரும்ப அடையமுடியும் ". என்னும் வாசகங்கள். நம்பிக்கை, மாற்றம், தேவை, நடத்தை, வெற்றி, வெற்றியின் வரையறை, ஆசை, நீங்கள் யார், மூன்று கேள்விகள், பழக்கம் , நேரம், நல்ல வேலை, பற்று, கவனம்,தடை, சிறியதும்- பெரியதும் போன்ற தலைப்புகளில் நிகழ்வுக் கதைகளும் , கரும்பலகை வாசகங்களும் மிக நன்றாக இருக்கின்றன.

                                   நூலின் கடைசியில் பாஷோவின் கரும்பலகையிலிருந்து சில விதிகள் என்று சில விதிகளைக் கொடுத்திருக்கின்றார். வெற்றி வாய்ப்பு விதிகள் - வெற்றி பெற வேண்டுமென்றால் 100 சதவீதம் வேலை செய்தே ஆகவேண்டும். வெற்றிகரமான செயலின் விதிகள் , முன்னுரிமைச்செயல்களின் விதிகள், பணம் சேருவதற்கான விதிகள், மனிதர்களைக் கையாள்வதற்கான விதிகள், விமர்சனங்களை எதிர்கொள்கிற விதிகள், கனவை அடைவதற்கான விதிகள், வெற்றிகரமான காதலின் விதிகள், வெற்றிகரமான பேச்சின் விதிகள், வெற்றிகரமான குறிக்கோள்களின் விதிகள் எனப் பல விதிகளை 5, 6 வரிகளில் கொடுத்திருக்கின்றார்  நூல் ஆசிரியர். அவை நம்மை ஈர்க்கின்றன .

                                        இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டு , நன்றாக இருக்கிறது படித்துப் பார் என்று கல்லூரியில் படிக்கும் எனது மகன் சொ. நே.அன்புமணியிடம் கொடுத்தேன். ஆர்வமாக நூலைப் படித்துவிட்டு, அப்பா , நன்றாக இருக்கிறது, நூலகப் புத்தகம் இது, இந்தப் புத்தகத்தை பதிப்பகத்தில் போன் செய்து வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் என்றான். உண்மைதான்.வாங்கி வைக்க வேண்டும். நீங்களும் வாங்கிப் படிக்கலாம். 

No comments: