Monday 13 October 2014

நிகழ்வும் நினைப்பும்(24) :உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும்

நிகழ்வும் நினைப்பும்(24) :உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும்
                                                   "பெண் குழ்ந்தைகளைக் கொண்டாடுவோம்" என்னும் கட்டுரை  தமிழ் இந்துவில் வ்ந்தது. கட்டுரை நன்றாக இருந்தது.  தமிழ் இந்துவில் ஒரு பின்னோட்டம் இட்டேன், அதனை எழுதிய எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபால் அவர்கள் நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பதிலுக்கு  செல்பேசி எண்ணும் , என் வலைத்தள முகவரியும் அனுப்பியிருந்தேன்.   எனது வலைத்தளத்தில் உள்ளே சென்று பார்த்துவிட்டு, அலைபேசியில் அழைத்து மிக நெருக்கமான நண்பரிடம் பேசுவதுபோல பல் செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். டாக்டர் எஸ்.மணிவாசகம் அவர்கள் எழுதிய 'தூங்காமல் தூங்கி ' என்னும் நூலின் விமர்சனத்தைப் படித்தேன் என்றார். டாக்டர் மணிவாசகம் இப்போது உயிரோடு இல்லை, அறிவீர்களா என்றார். இல்லை என்றேன். அவர் புத்தகத்தின் இரண்டாம்ப்திப்பு வரும் போதே இறந்துவிட்டார் என்பதனைக் கூறினார். வருத்தமாக இருந்தது. எனது  வலைத்தளத்தின்  அண்மையில் படித்த புத்தகங்கள் விமர்சனங்களைப் படித்துவிட்டுத் தனது  கருத்தினை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். படித்தவுடன் மனதில் உற்சாகம் ஊட்டக் கூடிய வார்த்தைகள். தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் எனது கவிதைகளைப் படித்துவிட்டு , நான் யாரென்று தெரியாத நிலையில்  கவிதைகளுக்காகப் பாராட்டியதுபோல , திரு எஸ்.வி.வேணுகோபாலின் பாராட்டு அமைந்துள்ளது. நிறைவுதான் மனதிற்கு. தொடர்ந்து செய்யும் ஒரு பணிக்கு , எங்கிருந்தோ- தெரியாத இடத்திலிருந்து அதுவும்   நாளிதழில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளரிடமிருந்து வந்த பாராட்டு மனதிற்கு நிறைவுதான். இதோ அவரின் மின்னஞ்சல் தங்களின் பார்வைக்கு.

அன்பின் முனைவர் வா நேரு அவர்களுக்கு


வணக்கம்....இன்று மிக தற்செயலாக தமிழ் இந்து ஆன் லைனில் பார்த்த உங்கள் கருத்தும், பாராட்டும் என்னை மிகவும் நெகிழ வைத்தது....அதிலிருந்து உங்கள் பெயரை கூகிள் சர்ச்சில் தேடி எடுத்ததும், உங்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு நீங்கள் விரைவாய் அனுப்பி வைத்த பதிலில் கிடைத்த உங்கள் வலைப்பூ முகவரி......

http://vaanehru.blogspot.in

ஆஹா...எப்பேர்பட்ட புத்தகக் காதலரை நான் இன்று அடையாளம் கண்டு கொண்டேன்...
வாழ்க உங்கள் வாசிப்பு அனுபவங்கள்....

பின் தேதியிட்டுப் போய் ஒரு வேகமான புரட்டலில் உங்களது இந்த மூன்றாண்டு பதிவுகளை பார்வையிட்டுக் கொண்டே வந்தேன், பத்து பதினைந்து நிமிட நேரத்தில்....
ஒரே மலைப்பு...
எத்தனை எத்தனை விதமான மனிதர்களின் வண்ணமய நூல்கள் குறித்த உங்கள் கருத்துக்கள், காய்தல் உவத்தல் இன்றி முன் வைக்கும் உங்கள் விமர்சனப் போக்கு, உச்சி முகந்து கொண்டாடும் பண்பாக்கம், சமரசமற்ற கொள்கையின் குரல்.....

இரா நடராசனின் ஆயிஷா
டாக்டர் மாணிக்கவாசகம் அவர்களது தூங்காமல் தூங்கி
பாலாஜியின் மதமும் அறிவியலும்
திருச்சி பள்ளி முதல்வர் துளசிதாசன் அவர்கள் தொகுத்த கனவு ஆசிரியர்

ஆஹா...அஹா...எத்தனை அருமையான நூல்கள்....

மொழிபெயர்ப்பு நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை தொகுப்பு எது கையில் வாசிக்கக் கிடைத்தாலும் அவை குறித்த நேரடியான பார்வை...வேகமாக பலவற்றை வாசித்தேன்...நெகிழ்ந்தேன்.

ஊடே ஊடே உங்களது கவிதைகள்
உங்களது சூரியக் கீற்றுகள் குறித்து பொள்ளாச்சி அபி விமர்சனம்
வானொலியில் விமர்சனமாக வாசித்த உங்கள் கட்டுரைகள்...

அடடா..அடடா...அற்புத வேலைகளைக் குவித்துக் கொண்டே இருக்கின்றீர்கள்....

உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும் இன்றைய இறுக்கம் மிகுந்த உலகைத் தளர்த்திக் கொடுத்து, கொஞ்சம் சிந்தனையைத் தூண்டி, வாழு-வாழவிடு என்று பேசும் திறன் மிக்கவை....

கொள்கைகள் எப்போதும் விவாதித்துக் கொள்ளக் கூடியவை...ஆனால், அவற்றின் அடிநாதமாக தோழமை நேயம் கேழுமினால் நிச்சயம் மானுடம் வெல்லும்...

வாழ்த்துக்கள்....

எஸ் வி வேணுகோபாலன் 

No comments: