Monday 25 January 2016

எப்படி திரும்பினாலும் நம்மை மறித்து நிற்கும் கொடுங்கோலன்......

தனது சொற்களை மட்டுமே அவர் நம்மிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்
மீனா கந்தசாமி

(ஜாதி, மத வெறிகொண்ட சக்திகளுக்கு எதிரான ரோஹித்வெமுலா மேற்கொண்ட ஒரு போராட்டத்தின் உச்சகட்டமாக எவரும் எதிர்பாராத அவரது மரணம் அமைந்துள்ளது.)

தாழ்த்தப்பட்ட மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ஒரு சாதாரணமான நிகழ்வாகக் கருத முடியாது. அவருக்கு நீதி வழங்கத் தவறிய இந்த சமூகம் வெட்கித் தலைகுனியவேண்டிய நிகழ்வு அது. ஜாதி, மத வெறிகொண்ட சக்திகளுக்கு எதிரான ரோஹித்வெமுலா மேற்கொண்ட ஒரு போராட்டத்தின் உச்சகட்டமாக எவரும் எதிர்பாராத விதத்தில் அவரது மரணம் அமைந்துள்ளது.
அகில பாரத வித்யார்த்தி பரீசத் என்னும் வலதுசாரி மாணவர் அமைப்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப் படையில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்ட அய்ந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ரோஹித்வெமுலாவும் ஒருவர். இத்தகைய ஒரு பின்னடைவுக்குப் பிறகும் தனது இறுதி மூச்சு வரை அவர் உற்சாகமாகவே இருந்திருக்கிறார்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குத் தள்ளப்பட்டிருப்பது நமது மாணவர்களின் மூர்க்கத் தனத்தை வெளிப்படுத்துவாகவே உள்ளது. அது மட்டுமன்றி,  நமது கல்வி நடைமுறை உண்மையில் எவ்வாறு உள்ளது என்பதையும்,  தனது பத்தாண்டுகால பதவிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மாண வர்களை ஒரு துணை வேந்தர் எவ்வாறு வெறுத்து துன் புறுத்தி வந்தார் என்பதையும் ,
வலதுசாரி இந்துத்துவ சக்தி களின் சார்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களை பழிவாங்கும் செயலில் ஒரு மத்திய அமைச்சர் ஈடுபட்டிருந்தார் என்பதையும், ஆளும் கட்சியினரின் அராஜகங்களுக்கு  நிர்வாக இயந்திரம் ஒட்டு மொத்தமாக எவ்வாறு  அடிமை யாகிப் போனது என்பதையும்,  இந்த சமூக அவலத்தின் சோக விளைவுதான்  மாணவரின் இந்தத் தற்கொலை என் பதையும்  தோலுரித்துக் காட்டுவதாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த அய்ந்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த  நிகழ்வில் ஜாதிப் பாகுபாடு  செயல்பட்டதை விட மிக மோசமான முறையில்  செயல்பட்ட நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.
தாழ்த்தப்பட்ட மாணவர் சமூகத்தினரிடையே இந்த வேலை நிறுத்த காலம் முழுவதிலும் ஒற்றுமை உணர்வு  ஓங்கி நிலை பெற்றிருந்தது என்ற போதிலும், இந்த மாணவர்கள் நீக்கப்பட்டதுவே, கடந்த கால கவலை தரும் நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
தாழ்ந்த ஜாதி மக்கள் உயர்ஜாதி மக்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று மனுஸ்மிருதி கட்டளையிடுவது போலவே, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த தண்டனை, ஜாதியைத் தூய்மைப்படுத்தும் ஓர் சடங்கின் அடையாளமாகவே தோன்றுகிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக அவர்களை ஒழுங்குபடுத்தும் ஓர் முயற்சியாகவே கல்வி இப்போது ஆகிவிட்டது. தூய்மைப்படுத்தல், வெளியேற்றம்,
இழிவுபடுத்தப்படல் மற்றும் கல்வியைத் தொடரமுடியாமல் செய்யப்படுவது ஆகியவை பற்றிய தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு அவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர். இடஒதுக்கிடு போன்ற பாதுகாப்பளிக்கும் கொள்கைகளின் வழியே உயர்கல்வி பயிலும் தங்கள் உரிமையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மாபெரும் போராட்டங்களை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் ஒரு சமூகத்தில், இத்தகைய மாணவர்களில் எவ்வளவு பேர் பட்டங்களைப் பெற்று வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்,
எவ்வளவு பேர் கல்வியைத் தொடராமல் இடையில் நின்றுபோகின்றனர், எவ்வளவு பேர் மனஅழுத்தத்தினால் நிரந்தரமான நோயா ளிகளாக ஆகிப் போயுள்ளனர், எவ்வளவு பேர் இறந்து போயுள்ளனர்  என்ற விவரங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட இதுவரை எவரும் துணியவில்லை.
ஆய்வுப் பட்டம் ஒன்றைப் பெறுவதற்காக ரோஹித் வெமுலா போன்றவர்கள் பல்கலைக் கழகங்களில் சேருவது ஒன்றே, அவர்களது நுண்ணறிவுக்கும், விடா முயற்சிக்கும், தொடக்க நாள் முதற்கொண்டே அவர்களை அழித்தொழிக்க முயலும் ஜாதிப் பாகுபாட்டுக்கு எதி ரான அவர்களது இடைவிடாத போராட்டத்துக்கும் அடை யாளமாகும்.
ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்தும் பாடநூல்கள்,  கல்லூரி வளாகத்துக்குள் ஜாதி பாகுபாட்டினை வளர்க்கும் சூழல், தங்களது ஜாதி அந்தஸ்துக்காகப் பெருமைப்பட்டுக் கொள் ளும் சக மாணவர்கள், அவர்களது எதிர்காலத்தையே இருட்டடிக்கச் செய்யும் ஆசிரியர்கள், நாம் வெற்றி பெறப்போவதில்லை என்று தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் தீர்மானங்கள் - ஆகிய இவை அனைத்துமே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரால்  எளிதில் கடக்க முடியாத தடைகளாகும்.
ஜாதியின் காரணமாக தாங்களே அறிவில் சிறந்தவர்கள்  என்ற கருத்து கல்வியாளரிடையே திரும்பத் திரும்ப தோன்றுவது,  மக்களைக் கொன்று உயிரைப் பறிக்கும் ஆற்றல் மிகு நஞ்சாகவே ஆகிவிடுகிறது. பாகு பாட்டினை எதிர்த்து அழிப்பதற்கு மாறாக,  தாங்கள் இரு பிறப்பாளர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்களின் கட்டுப்பாடற்ற ஜாதி ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் இடமா கவும், , தற்போதுள்ள நிலையே தொடரவேண்டும் என்று கருதும், புனித பூநூல் அணிந்தவர்கள்  தங்களுக்குள் அறிவுப் பறிமாற்றம் செய்து கொள்ளும் இடமாகவும் வகுப்பறைகள் ஆகிவிடுகிறன.
ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மிகச் சிறுபான்மையினரான மாணவர்களில், தாங்கள் ஒதுக்கப்பட்டு, தனி மைப்படுத்தப் பட்டுவிடுவோம் என்ற அச்சத்தால் தங்களை மறைத்துக் கொண்டு புனைவேடம் பூண முயல்பவர்களின் வேடம் வெளிப்படும்போது தண்டிக்கப்பட்டுவிடுகின்றனர்.
தங்களின் உரிமையில் நம்பிக்கை கொண்டு,  தங்கள் அடையாளத்தை  வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்ள முன்வரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஏகலை வர்களாக ஆகிவிடுகின்றனர். அவர்கள் உயிர் பிழைத் திருப்பினும், தங்கள் கலையை, கல்வியை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களாக ஆகிவிடுகின்றனர்.
இந்த நிலை கல்வி பயில வரும் மாணவர்களுக்கு மட்டு மல்ல; தாழ்த்தப்பட்ட, பகுஜன ஆசிரியர்களும் கூட ஜாதி ஆதிக்கம் மிகுந்த கல்வி நிறுவன வளாகத்தில் ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுவிடுகின்றனர். சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியராக என் தாய் பட்ட அவதிகளையும், மேற்கொண்ட போராட்டங்களையும்  நான் மிகுந்த அச்சத்துடன் கவனித்து வந்திருக்கிறேன்.
நான் நேசிக்கும் எனது தாய் மனமுடைந்து துன்புறுகையில் எந்த விதத்திலும் உதவி செய்ய முடியாதவளாக  வேடிக்கை பார்க்கத்தான் என்னால் முடிந்தது. நமது அய்.அய்.டிக்கள், அய்.அய்.எம்கள், பல்கலைக் கழகங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின,
பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மிகமிகக் குறைந்த பிரதிநிதித்துவம் அந்நிறுவனங்களில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டை முழுமையாகவே ஆக்கிவிடுகிறது. இத்த கைய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் துய ரங்களையும், இயலாமையையும் பொறுமையுடன் கேட்டு அவர்களுக்கு ஆலோசனையும் ஆதரவும் அளிப்போர் எவருமில்லை.
மரணதண்டனை அளிக்கும்  துப்பாக்கி ஏந்தியவர்களை நினைவுபடுத்துவது போன்ற பகைஉணர்வை வெளிப் படுத்தும் பார்ப்பன பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவின் முன், இத்தகைய ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவரால் எவ்வாறு மனஉறுதியுடன் தனது திறமையை, அறிவாற்றலைக் காட்டமுடியும்? இந்தப் பேராசிரியர்கள் அணுசக்தி இயல்பியல் பாடத்தில் கரைகண்டவர்களாக இருக்கலாம்.
ஆனால் அவர்கள் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்கும் ஜாதிப் பாகுபாடு, கல்வி வளாகங்களில் காணப்படும் ஜாதிதீவிரவாதம் என்னும் பிரச்சினையின் ஒரே ஒரு கோணத்தை மட்டுமே காட்டுவதாகும். அகில பாரதிய வித்யா பரீசத் போல் வலதுரி மாணவர் குழுக்களுடன் இந்த ஜாதிய உணர்வு சேரும்போது,  பேரழிவைத் தரும் உச்சத்தை அது எட்டு கிறது.
நமது பல்கலைக் கழகங்கள் நவீன கொலைகளங்களாக ஆகிவிட்டன. மற்ற போர்க் களங்களைப் போலவே, நமது உயர்கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாட்டையும் தாண்டிய விஷயங்களில் தனித்திறமை பெற்றவையாக விளங்குகின்றன. பெண்கள் மீதான பாலியல் தொல்லை களுக்கும் அவை பெயர் பெற்றவை. மாணவிகள் மீது மட்டுமல்லாமல், பெண் ஆசிரியர்கள் மீதும் மேற் கொள்ளப்படும் இத்தகைய பாலியல் வன்முறைகள் பற்றிய கதைகள் வெளியே தெரியாமல் மூடி மறைக் கப்படுகின்றன;
அச்சுறுத்தல் காரணமாகவோ, வற்புறுத்தல் காரணமாகவோ, நயமான தூண்டுதலாலோ மேற் கொள்ளப்பட முயலும் பாலியல் வன்முறைக்கு இடமளிக்காமல் எதிர்த்துக் குரலெழுப்பும் பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் அக்கதைகள் திரித்துக் கூறப்டுகின்றன. கொலை வெறி கொண்ட ஜாதிப் பாகுபாடு பற்றிய மவுனத்தை ரோஹித்தின் மரணம் கலைத்தது போல, இத்தகைய உயர்ந்த ஜாதியினரால் மரணத்துக்கு விரட்டப்படும் பெண்களின் கதைகளை ஒரு நாள் நாம் கேட்போம்.
ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  உயர்ஜாதியினரின் ஆதிக்க வெறியும், அரசியல் அதிகாரமும் ஒன்றிணைந்து செயல்பட்டதைத்தான் நாம் காண்கிறோம். மாநில நிர்வாக இயந்திரம், குறிப்பாக காவல் துறையினர், மாணவர்களை அச்சுறுத்திப் பணியவைக்க மேற்கொண்ட முயற்சிகள் கல்வி வளாகங்களில் நிலவும் அடக்குமுறைக்கு சரியான ஓர் எடுத்துக்காட்டாகும்.
சென்னை அய்.அய்.டி.யில் இருந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்தபின்னர், அய்.அய்.டி. வளாகமே ஏதோ முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டையைப் போலவே காட்சியளித்தது; சீருடை அணிந்த காவல்துறையினர் வளாகத்தின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்து, வாயில்களை இரவு பகலாகக் காவல் காத்த காட்சியை நாம் கண்டோம். இதே போன்ற பெரும் அளவிலான காவல்படையினர் ஹைதராபாத் பல்கலைக் கழக வளாகத்திலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளனர். 144 ஊரடங்கு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காரல் சாகன் போன்று ஒரு அறிவியல் எழுத்தாளராக வரவேண்டும் என்ற உனது கனவை மட்டுமே, உனது சொற்களில்,  நீ விட்டுச் சென்றுள்ளாய், ரோஹித். எங்களின் ஒவ்வொரு சொல்லும் உனது சாவின் கனத்தைச் சுமந்திருக்கிறது; எங்களின் ஒவ்வொரு துளி கண்ணீரும் நிறைவேறாத உனது கனவைச் சுமந்துள்ளது. நீ அடிக்கடி பேசி வந்த வெடித்துக் கிளம்பும் ஸ்டார்டஸ்ட் ஆக நாங்கள் மாறி, இந்த அடக்குமுறை நிறைந்த ஜாதி நடைமுறையை கொளுத்தவோம். இந்நாட்டின் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும்,
ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு பள்ளியிலும்,  எங்களது ஒவ்வொரு முழக்கமும் உனது போராட்டத்தின் உணர்வைத் தாங்கி ஒலிக்கும். எப்படி திரும்பினாலும் நம்மை மறித்து நிற்கும் கொடுங்கோலன் என்று ஜாதியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். இந்திய கல்வி நிறுவனங்கள் என்னும் அக்ரஹாரங்களில், நமது இருப்பே ஜாதி ஒழிப்பு பற்றிய செய்தியைத் தாங்கியதாக இருக்கும். ஒரு தாழ்த்தப்பட்டவரையோ,
ஒரு சூத்ரனையோ, ஒரு ஆதிவாசியையோ, ஒரு பகுஜனையோ, ஒரு பெண்ணையோ எதிர்கொள்ளும் வெறுக்கத்தக்க ஜாதிவெறி கொண்ட சக்தி ஒவ்வொன்றையும், நம்மை எவ்வாறேனும் அழித்தொழிப்பதற்காக ஏற்பட்ட இந்த ஜாதிய நடைமுறையையும் அழித்தொழிக்கவே நாம் வந்திருக்கிறோம் என்பதையும்,  எங்களது கனவுகளைக் கலைக்கத் துணிந்தவர்களின் தூக்கத்தைக் கெடுக்கவே நாம் வந்திருக்கிறோம் என்பதையும்,
உணரச் செய்வோம். வேதம் போன்ற புனித நூல்களை செவிமடுக்கும் சூத்ரர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும், தங்களுக்கு மறுக்கப் பட்ட கல்வியை கற்கும் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறப்பட்ட வேதகாலம் மலையேறிவிட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
கற்பிக்கவும், போராடவும், புதிய உலகம் படைக்கவும்தான் நாம் இந்த கோட்டை மீது படையெடுத்து வந்துள்ளோம், சாவதற்காக வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். கல்வி கற்கவே நாம் இங்கே வந்திருக்கிறோம். என்றாலும்,  ஜாதியைத் தூக்கிப்பிடிக்கும் கொடியவர்களும், அவர் களது அடிபிடிகளும், மறக்கமுடியாத ஒரு பாடத்தை அவர் களுக்குக் கற்பிக்கவும் நாம் வந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளட்டும்.
நன்றி: தி ஹிந்து, 19-1-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
நன்றி : விடுதலை 25.01.2016

No comments: