Friday 26 February 2016

அண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே-அரு.வி.சிவபாரதி

அண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே
ஆசிரியர்                                    : அரு.வி.சிவபாரதி
முதற்பதிப்பு                               :  2008
வெளியீடு                                   : சரவணா பப்ளிஷர்ஸ், 104, பெரியார் பாதை, சென்னை -106                                       மொத்த பக்கங்கள் 87, விலை ரூ 40 /=
மதுரை மைய நூலக எண்        :  186464

                                                              நூலகத்திலிருந்து எனது மகளுக்காக எடுத்த வந்த புத்தகம்.நேரம் கிடைத்த நேரத்தில் கையில் இருந்த புத்தகம் என வாசிக்க ஆரம்பித்தேன். கதை சொல்லும் தாத்தா, பாட்டி பற்றி முன்னுரையில் கூறும் இந்த நூலின் ஆசிரியர் மொத்தம் 8 சிறுகதைகளை இந்த நூலில் இணைத்திருக்கிறார்.
                                                               மாணவ, மாணவிகளுக்கான கதைகள். கதைக்களங்கள் அனைத்தும் பள்ளி, மாணவர்கள் என அமைந்திருப்பதும், அவை வெகு நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருப்பதும் வெகு சிறப்பு. ஓசியில் பணம் கிடைத்த நேரத்தில் வறுமையில் இருந்தாலும் உழைத்து என்னால் ஈட்டமுடியும் என்னும் மன உறுதி காட்டும் மாணவன் பாலு' வைச்சொல்லும் 'சிகரம் நோக்கி ' என்னும் கதை, அலுவலகத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகச்செல்லும் அப்பா அங்கு திட்டு வாங்கி , இரவு வரை அதன் தொடர்ச்சியாக அவரோடு பழகும் அனைவரின் வருத்ததிற்கும் காரணமாக அமைவதற்கான  காரணத்தை மாற்றும் 'செல்வி' கதை சொல்லும் ' காலம் தாழ்த்தாதே ' என்னும் கதை, பேருந்தில் மாணவர்கள் சுவரொட்டியை ஒட்டக்கூடாது என்பதனை வலியுறுத்தும் 'நீதான் பவுர்ணமி ' என்னும் கதை எனக் கதைகள் நல்ல கருத்துக்களை மாணவ. மாணவிகளுக்கு சொல்லும் கதைகளாக அமைந்துள்ளன.

                                                                  ஆசிரியர்களின் பெருமை சொல்லும் 'வேர்கள் ' என்னும் கதை மாணவர்களை  ஆசிரியர்கள் இப்படியும் கையாளலாம் என்னும் கருத்தைச்சொல்கிறது. கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தனது பேரனை உதவுச்சொல்லும் தாத்தாவைப் பற்றிச்சொல்லும் ' நாளை விடியும் நமக்காக ' என்னும் கதை எனக் கதைகளின் விவரிப்பும் இயல்பாக இருப்பதே இந்த நூலின் சிறப்பு எனலாம்.

                                                                    படித்து முடித்து விட்டு எனது மகளிடம், 'சிறுவர் கதைகள் ' என இருக்கிறது ஆனால் நானும் வாசித்தேன் நன்றாக இருக்கிறது என்றேன். 'அப்பா , அரு.வி.சிவபாரதி' -யின் நூல்கள் இரண்டு மூன்று படித்திருக்கிறேன். அவரின் கதைகள் நன்றாக இருக்கும் என்றார். யாருக்காக இந்த நூலின் ஆசிரியர் எழுதினாரோ, அந்த சிறுவர் சிறுமிகளிடமிருந்தே பாராட்டு வருவதே இந்த நூல் ஆசிரியருக்கு வெற்றிதான். . அருப்புக்கோட்டை என்று தனது முன்னுரையில் போட்டிருக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். அரு.வி.சிவபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்

No comments: