Tuesday 5 December 2017

எளியவர்களையும் உயர்த்துவார்.....

எளியவர்களையும் உயர்த்துவார்.....

நமது பரம்பரை எதிரிகளைக் கருத்துக் களத்தில் சந்திக்க தயாரிக்கப்படும் ஈட்டிமுனைகள் புத்தகங்கள்.  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கைகளிலே நமது இன எதிரி, நம் இனத்திற்கு  எதிரான புத்தகத்தைக் கொடுத்தபோது அதனை நாகரிகம் கருதி பெற்றுக்கொண்டு கலைஞர் அவர்கள் நமது இன எதிரியிடம் திருப்பிக்கொடுத்த புத்தகம் 'கீதையின் மறுபக்கம் ';.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு கொடுக்கப்பட்ட புத்தகம். இன்றுவரை விற்பனையில் சக்கை போடும் புத்தகம். 





தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரை அருகே இருக்கும் ஊர்களுக்கு வரும்போது அவரோடு பயணிக்கும் அனுபவம் மிகப்பெரிய வாய்ப்பு. பயணிக்கும் தோழர்களின் உடல் நிலையை, வீட்டில் உள்ளவர்களின் நலங்கலை விசாரிப்பார்கள். அரிய புத்தகங்கள் பற்றிச்சொல்வார்கள்.கழகப்பணியாற்றி மறைந்த கருப்பு மெழுகுவர்த்திகளைப் பற்றிச்சொல்வார்கள்.

 சில நேரங்களில் உடன் செல்லும் தோழர்கள் வாய்விட்டுச்சிர்க்கும் அளவில் நகைச்சுவையாய் சில கருத்துக்களைச்சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில், கழகப்பணியில், தியாகத்தில் பத்து சதவீதம் கூட இல்லாத தோழர்களிடம் கூட மிகத்தோழமையோடும் அன்போடும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடியவர்கள் அய்யா ஆசிரியர் அவர்கள் .தந்தை பெரியார் அவர்களுக்கு இனிப்பு,பழங்கள்  பிடிக்கும். இயக்கத்தைச்சார்ந்த தோழர்கள் யாரேனும் கொடுத்தால் அதனை அப்பொழுதே கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டு , கொடுத்த தோழர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவாராம், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு புத்தகங்கள் பிடிக்கும். இயக்கத்தோழர்கள் புத்தகத்தை கொடுத்தால் பெற்றுக்கொள்வார்கள். மறுமுறை பார்க்கும்பொழுது அந்தப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தைக் கூறுவார்கள். மிக நல்ல புத்தகம் என்றால் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கொடுத்தவரின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதுவார்கள்.

 புத்தகத்தின் மீதிருக்கும் அவரின் காதல் அற்புதமானது.நாம் தலைவர்களின் வரலாறுகளைப் படித்திருக்கின்றோம். தோழர் காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் நூலகத்தின் மேல் கொண்டிருந்த காதலை. நூலப் படிப்பதற்காக காலை முதல் மாலை வரை நூலகத்தில் இருந்த வரலாறைப் படித்திருக்கின்றோம் அய்யா ஆசிரியர் அவர்கள் தான் பயணிக்கும் வாகனத்தையே நூலகமாக மாற்றிக்கொள்கிறார். தான் பயணிக்கும் வாகனத்தை  எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிதான இடமாக ஆக்கிக்கொண்டு பயணித்துக்கொண்டே இருக்கின்றார். 

.போகக்கூடிய ஊர்களில், நாடுகளில் எல்லாம் பழைய புதிய புத்தகக் கடைக்குப் போகக்கூடியவர். செம்மாந்து நிற்கும் பெரியார் திடலின் பணிகளில் மிகப்பெரிய பணி நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகம். குளிரரூட்டப்பட்ட அறைகளும், பாடப்பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகும், பழைய குடியரசு இதழ்களும், விடுதலை ,உண்மை போன்ற இதழ்களும் பைண்டிங் செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் தன்மையும், இணையத்தில் அவை எல்லாம் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பேருழைப்பும் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் காரியங்கள்.

 ஆசிரியருக்கு புத்தகம் பிடிக்கும் என்பதனை அறிந்த கழகத்தோழர்கள் போகும் இடமெல்லாம் புத்தகம் கொடுப்பதை இப்போது வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். உலகமெல்லாம் தான் போய் வந்த இடங்களில் வாங்கிய புத்தகங்களை, தோழர்கள் கொடுத்த புத்தகங்களை எல்லாம் நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகத்திற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப்புத்தகங்கள் எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலரும், நூல் எழுத விரும்பும் பலரும் அடைக்கலம் புகும் இடமாக பெரியார் திடல் நூலகம் இருக்கிறது.இந்த நூலகத்தைப் பார்த்தாலே அய்யா ஆசிரியர் அவர்கள் நூல்களுக்கும், நூலகத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எளிதில் புரியும்.  

பெரியார் தொலைக்காட்சி(periyar.tv) வலைத்தளத்தில்  இருக்கிறது. இணையத்தின் மூலமாக எளிதாகப் பார்க்கமுடிகின்றது. தமிழர் தலைவர் அவர்களின் உரையை,கழக முன்னனித்தலைவர்களின் உரைகளையெல்லாம் உடனுக்குடனே கணினி மூலம் கேட்க முடிகின்றது. எங்களைப் போன்றவர்கள் காலையில் நடைப்பயிற்சி போகின்றபோதே பெரியார் தொலைக்காட்சி மூலமாக அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையிலே பேசிய பேச்சினைக் கேட்கமுடிகின்றது.நடையும், குளிர்ந்த காற்றும் கொடுக்கின்ற இன்பத்தை விட அய்யா ஆசிரியர் அவர்களின் குரலை, கருத்தை பெரியார் தொலைக்காட்சி மூலமாக கேட்கும் இன்பம் பெரிது. மாட்டு வண்டியில் ஏறி  பயணம் செய்து , ஒலிபெருக்கி இல்லாத இடங்களில் அய்யா ஆசிரியர் பேசியது  அந்தக் காலம் 60,70 ஆண்டுகளுக்கு முன்னால்.அன்றைக்கு அவர் பேசியது ஒரு ஊரின் ,ஒரு பகுதியில் மட்டுமே கேட்டது.  இன்றைய காலகட்டத்தில் அய்யா ஆசிரியர் அவர்கள்  ஒரு இடத்தில் பேசும் பேச்சு பதிவு செய்யப்பட்டு இணையத்தின் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் கேட்கப்படுகிறது. இரண்டு நிலையிலும் தந்தை பெரியாரியலை, தமிழர்களுக்கான விடிவை பேசும் உணர்ச்சிமிக்க குரலாக அய்யா ஆசிரியர் அவர்களின் குரல் இருக்கிறது.அவரின் போர்ப்பரணி எப்போதும் போல் ஒலிக்கிறது. எழுத்தால், உரையால், இணையத்தால்,கல்வி நிறுவனங்களால், பெரியார் புரா போன்ற திட்டங்களால் பெரியார் பணி முடிக்கும் அய்யா ஆசிரியர் அவர்களின் பணி பெரும்பணி.எவரோடும், எதனோடும் ஒப்பிட்டுச்சொல்ல முடியாத அரும்பணி.    

கொள்கைகளின் உறுதியாக இருப்பவர்கள் என்றால் எளிய வாய்ப்பு பெற்ற தோழர்களைக் கூட உயர் பொறுப்பில் வைத்துப்பார்க்கும் அய்யா ஆசிரியரின் அணுகுமுறையால் பயன்பெற்றவர்கள் நாம். தலைமைக்கு கட்டுப்படு, தலைமை சொல்வதைக் கேள், தலைமை சொல்வதைச்செய் என்பதே வாழ் நாள் பெருமையாகப் பெற்றிருக்கும் தோழர்களின் கூட்டத்தில் நாமும் ஒருவர்.தந்தை பெரியாருக்குப்பின், அன்னை மணியம்மையாருக்குப்பின் நமக்கு கிடைத்திருக்கும் அருட்கொடை அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அவர் சுட்டும் திசையில் நம் பயணத்தைத் தொடருவோம். இனப்பகையின்  கருத்துருவாக்கத்தை,கருத்தினை வேரறுப்போம். 

வா.நேரு,தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்....

நன்றி : விடுதலை 01.12.2017
(திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)

No comments: