Sunday 7 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்...சுப.வீரபாண்டியன்

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்
ஆசிரியர்                                          : சுப.வீரபாண்டியன்
வெளியீடு                  : வானவில் புத்தகலாயம்,சென்னை-17. 044-24342771
முதல்பதிப்பு                                  : 2004 ஐந்தாம் பதிப்பு  : 2014
மொத்த பக்கங்கள்                      : 40 விலை ரூ 30

                            உருவத்தால் மிகச்சிறிய புத்தகம் ஆனால் உள்ளடக்கத்தால் மிகக் கனமான புத்தகம். முதல் பதிப்பின் பதிப்புரையை தமிழ் முழக்கம் செ.சாகுல் அமீது அவர்களும் 4-ஆம் பதிப்பின் பதிப்புரையை சுப.புகழேந்தியும் எழுதியிருக்கின்றார்கள்.முதல் பதிப்புக்கான முன்னுரையையும் 4-ஆம் பதிப்புக்கான முன்னுரையையும் நூலின் ஆசிரியர் அய்யா சுப.வீ. எழுதியிருக்கின்றார். 'என்ன காரணத்தினாலோ இச்சிறு நூலை மட்டும் நான்கு முறை எழுத நேர்ந்தது, இப்பொழுதும் இதனை ஒரு விவாத மேடையில்தான் வைக்க விரும்புகிறேன் " என்று முன்னுரையில் அய்யா சுப.வீ  எழுதுகின்றார். உண்மைதான் ஒரு விவாதத்தின் தொடக்கமாகத்தான் இந்த நூல் அமைந்திருக்கிறது, அதனால் தான் நூலே கேள்வி பதில் அமைப்பில் உள்ளது எனலாம். 

              " அரசியலையும் குடும்பத்தையும் பிரிக்க முடியாது;பிரிக்கவும் கூடாது " என்று முதல் பக்கத்து  பதிலிலேயே நூல் ஆசிரியர் கூறி விடுகின்றார். குடும்பத்து உறுப்பினர்கள் அரசியலற்று இருந்தால் அவர்களை நாம் ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? என்னும் கேள்விக்கு " அரசியலற்று இருப்பதே ஒரு விதமான அரசியல்தான். " என்று விளக்கம் கொடுக்கின்றார். நம் அரசியல் எது? எனும் வினாவிற்கு "தமிழின உணர்வு,சாதி மறுப்பு,மதவெறி எதிர்ப்பு,பொருளியல் சமத்துவம்,பகுத்தறிவு,பெண் விடுதலை ஆகியனவற்றை முன்னிறுத்தித் தொண்டாற்றுவதே நம் அரசியல் .சுருங்கக் கூறின் 'மானமும் அறிவும் 'கொண்ட மக்களாய்த் தமிழின மக்களை ஆக்குவதே நம் நோக்கம் " என நறுக்குத் தெரித்தாற்போல் பதில் இருக்கிறது. 

                 ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சின் சாரமாக பக்கம் 12-ல் " வீட்டைத் திருத்திய பின்பே வெளியில் வந்து பேசவேண்டும் என்னும் அறிவுரை நியாயமானதுதான்.ஆனால் நடைமுறைச்சாத்தியமற்றது...அரசியலில் உள்ள சுதந்திரம் ,சமூகக் கருத்தியலிலும் உண்டுதானே " என்று குறிப்பிடுகின்றார். அடுத்த கேள்வியில் " வீட்டைத் திருத்தி முடித்தபின் தான் நாட்டைத் திருத்த முயற்சிக்க வேண்டும் என்னும் வாதம் மட்டுமே இங்கு  மறுக்கப்படுகின்றது " என்று குறிப்பிடுகின்றார். இருப்பதிலேயே குடும்பம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு. எனது உடன் பிறந்த தம்பி மிகத்தீவிர பக்தன் .என்னை விட 4 வய்து இளையவன். இருபதுகளில் அவனைத் திருத்த முயற்சித்துவிட்டு பின்பு விட்டுவிட்டேன். கால் நூற்றாண்டிற்கு மேல் ஓடிவிட்டது.  அவனைத் திருத்திவிட்டுத்தான், மாற்றி விட்டுத்தான் நான் நாத்திகம் பேசுவேன் என்று முடிவெடுத்திருந்தால்  வாழ் நாள் முழுக்க நான்  நாத்திகமே பேசியிருக்க முடியாது. இதனை ஆத்திகர்கள் மிகக் கவனமாகச்செய்கின்றார்கள், உனது வீட்டிலேயே பக்தன் இருக்கிறான், நீ நாத்திகம் பேசுகிறேயே என்று கேள்வி கேட்கும்போது தடுமாறத்தேவையில்லை, ஆமாம் அவன் வேறு, நான் வேறு என்று சொல்வது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளில் வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள்,ஒரே குடும்பத்தில்  இருக்கின்றார்கள், அவர்களை யாரும் கேட்பதில்லை, ஆனால் சமூகக் கருத்தியலில் இருப்பவர்களை நோக்கி இப்படிச்சொல்வது அவர்களைச்செயல்பட விடாமல் ஆக்குவதற்கான ஒரு தந்திரம் என்பதனைக் குறிப்பிடுகின்றார் எனக்கொள்ளலாம். " Every body is unique " ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதுதான் உளவியலின் அடிப்படை. 

               " குடும்பம் ,சமூகம் ஆகிய இரு தளங்களிலும் ஒரே நேரத்தில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதே நம் எண்ணம். ஒன்று முடித்து இன்னொன்று என்பது நடைமுறைக்கு உகந்ததன்று. இன்னொன்றையும் நாம் எண்ணிப்பார்க்கலாம். நம் குடும்பம் என்பதும் சமூகத்தின் ஓர் அங்கம்தான்.எனவே சமூக அளவில் நம் அரசியல் மேலோங்கும்போது ,குடும்பத்திற்குள்ளும் அது ஏற்கப்படும்." எனக் குறிப்பிட்டு விளக்குவது ஏற்புடையதாகவே இருக்கின்றது. 

               " போராட்டம்தான் வாழ்க்கை. தொடர்ந்து வீட்டிலும்,வெளியிலும் போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒரு போராட்டத்தில் தோற்று விட்டதால் ,இனி நாம் எந்தப்போருக்கும் தகுதியற்றவர்கள் என்று ஏன் கருத வேண்டும் " என்னும் கேள்வியும்(பக்கம் 16)  அதற்கு முன்னதாக தோழர் வாழ்வில் ஏற்பட்ட உறுத்தலும்,விலகலும் அதனை மாற்றுவதற்கான ஆசிரியரின் விவாதங்களும் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கவை...." குறைகளைச்சுட்டிக் காட்டித் திருத்த முயல்வது ஒரு வகை விமர்சனம். குறைகளைப் பெரிதுபடுத்தி ,கொள்கையிலிருந்தே விரட்டியடிப்பது இன்னொரு வகை. " என விமர்சனங்களை விவரிப்பது மனதில் கொள்ளத்தக்க விமர்சனம். 

                  அரசியல் பணியை எப்படித்தொடங்க வேண்டும்?,செயல்பாடுகளின் தொடக்கம் எப்படி அமைய வேண்டும்?, பெயர் மாற்றம், தமிழில் கையெழுத்திடுவது, சாதி ஒழிப்பு,தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது சாதி அரசியல் ஆகாதா? போன்ற கேள்விகளுக்குப் பதில்களை மிக நேர்மறையானதாகக் கொடுத்திருக்கின்றார். "சமூக அரசியல் கொள்கைகள் தங்கள் மனைவி /கணவனுக்கு உடன்பாடில்லை என்றால் ,குடும்ப நிகழ்வுகளை எந்த அரசியலின் அடிப்படையில் நடத்திச்செல்வது ? " என்னும் கேள்வியும் அதற்கான பதிலும் மிக விரிவாக விவாதிக்கப்படவேண்டும் . ஒரே கொள்கையை ஏற்றுக்கொண்ட  வாழ்க்கைத்துணையை அமைத்துக்கொண்ட இணையர்கள் கூட விவாகரத்து பெற்றுக்கொள்வதை நாம் அறிவோம். இதில் சிக்கல் எங்கே நிகழ்கிறது? வெவ்வேறு கொள்கை உடையவர்கள் கணவன், மனைவியாக வாழ்வதில் உள்ள பிரச்சனைகள், அன்பு செலுத்துதல் , தேயாத கற்களாய் இருந்தால் என்ன செய்வது போன்றவற்றை ஆசிரியரின் பார்வையில் கொடுத்திருக்கின்றார். இன்னும் விரிவாக, பெண்கள் நிறையப் பேர் கலந்துகொண்டு விவாதிக்கும் விவாதக் களமாக இந்தத் தலைப்புகள் மாறவேண்டும். 

                 "நம் பெற்றோர்களிடமும், நம் பிள்ளைகளிடமும் நம் அரசியலைக் கொண்டு செல்வது எப்படி? " என்னும் கேள்வி கேட்டு அதற்கான விடையை விரிவாகவே கொடுத்திருக்கின்றார். பிள்ளைகள் நம் அரசியலுக்கு வருவதில் மிக முக்கியமான பண்பாக நமது நேர்மையும், நமது கொள்கை பிடிப்பும் அமையும் என்பது எனது கருத்தாகும். " மதிக்கப்படும்,நேசிக்கப்படும்,நம்பப்படும் இளைஞர்களே முதிர்ச்சியும் ,பொறுப்பும் மிக்க குடிமக்களாக உருவெடுப்பார்கள் .அத்தகைய பிள்ளைகளோடு ,நம் கொள்கைகள் குறித்து பேசுவதும், அவர்களிடம் கொள்கைப் பிடிப்பை உருவாக்குவதும் எளிய செயலாக இருக்கும் " எனக்குறிப்பிடுகின்றார்.

                 " ஒத்த அரசியல் கருத்துடைய குடும்பத்தினர்,ஒருவரோடொருவர் கலந்து உறவாடுதல் நல்ல பயன்களைத் தர வாய்ப்புண்டா ? " என்னும் கேள்விக்கு " மிக நல்ல பயன்களை விளைவிக்கும் " எனக் குறிப்பிட்டு பல்வேறு செயல்பாட்டு திட்டங்களைக் குறிப்பிடுகின்றார். திராவிடர் கழகத்தால் நடத்தப்படும் குடும்ப விழாக்கள் தரும் பலன்கள் மிக அதிக அளவிலானவை. " எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் பள்ளி நாட்களில் நான் என உறவினர் வீடுகளுக்குச்சென்று வந்ததை விட ,திராவிடர் கழகக் குடும்பங்களுக்குச்சென்று வந்ததுதான் மிகுதி " எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். அதனால் விளைந்த பலன்களைக் குறிப்பிடுகின்றார்.இன்றைய நிலைமையை அது மாற்றும் என்பதையும் குறிப்பிடுகின்றார். 

முடிவாக 
              " குடும்பங்களில் நம் அரசியல் வளரட்டும் !
                இயக்கங்களே நம் குடும்பம் ஆகட்டும் " எனப் புத்தகத்தை முடிக்கின்றார்.

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்துகொண்டுதான் சமூகப்பணி ஆற்றுகின்றோம். குடும்ப உறுப்பினர்கள் நமக்கு கொடுக்கும் சான்றிதழ் என்பது இன்றியமையாதது.செலுத்திய அன்பு மட்டுமே நற்சான்றிதழுக்கு அச்சாரமாக அமையும்.  குடும்பத்திற்குள் நேர்மறையான விவாதங்களும், வெளிப்படைத் தன்மையான பண நிர்வாகமும்,ஒருவருக்கொருவர் கொடுக்கும் சக மரியாதையும், ஒழுக்கமும் நம் சமூகப்பணி தொய்வின்றி தொடர உதவும் " குடும்பமும் அரசியலும் " என்னும் இந்தப்புத்தகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் நூலின் ஆசிரியர் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே பெரும்பாலான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருப்பதும்,அந்த எடுத்துக்காட்டுகளை விரிவாக விளக்குவதும் படிப்பவரை அடுத்த கட்ட சமூகப்பணிக்கு ஆயுத்தப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் அமைந்திருக்கிறது. " சாதியும் நானும் " என்னும் தலைப்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பல்வேறு அனுபவக் கட்டுரைகளை வாங்கி இணைத்து ஒரு புத்தகமாக ஆக்கியிருப்பதுபோல , 'எனது குடும்பமும் எனது அரசியலும் ' என்னும் தலைப்பில் தோழர்களிடம் கட்டுரைகளை வாங்கி ஒரு புத்தகமாக ஆக்கலாம். அந்தப் புத்தகம் வெவ்வேறு அனுபவங்களை,எதார்த்தமாக  கூறுகின்றபோது இந்தத் தலைப்பு இன்னும் செழுமையாகும் என்ற எண்ணம் இந்த நூலை வாசித்து முடித்தவுடன்  எனக்குத் தோன்றியது.

  

4 comments:

anandam said...

நம்பிக்கை தரும் நல்ல புத்தகம். படித்திருக்கிறேன். அறிமுகம் நன்று.

முனைவர். வா.நேரு said...

கேள்வி பதில் பாணியில் நல்ல விளக்கம் கொடுக்கும் புத்தகமாக உள்ளதே இதன் வெற்றி. நன்றி அண்ணே, கருத்திற்கும் வாசிப்பிற்கும்

Anonymous said...

படித்திருக்கிறேன். அருமையான புத்தகம்.

முனைவர். வா.நேரு said...

நன்றி..தங்கள் கருத்திற்கு...