Monday 16 September 2019

தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள்....பொறியாளர் மு.முத்தையா




"தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள்" என்னும் நூல் பொறியாளர் மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்டதாகும்.இன்று (16.09.2019)  மதுரை கே.எம். மஹாலில்  நடைபெற்ற வாழ்க்கை இணை ஏற்பு(கோ.பிரதாப்-இரா.துவி நிஷா)  விழாவில் நூல் அறிமுகம் செய்யப்பட்டதோடு, வாழ்க்கை இணை ஏற்பு விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் இந்த நூலும்,அய்யா மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்ட 'உழைப்பிற்கு வயது இல்லை "என்னும் நூலும் வழங்கப்பட்டது. 

நூலைப் பற்றிய விவரங்கள்:
நூலின் தலைப்பு : " தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள் "
ஆசிரியர்        : பொறியாளர் மு.முத்தையா ( பகுத்தறிவு-சமூக நீதி-வகுப்புரிமை-சிக்கனம்-இலக்கியம்) கட்டுரைகள்.
கிடைக்கும் இடம்: 86 A/1,ஜீவா தெரு,பசும்பொன் நகர்,பழங்காநத்தம்,மதுரை-625003.,9080761630
மொத்த பக்கங்கள் :  183, விலை ரூ 135 /-


       
                                                     அணிந்துரை
 
வணக்கம்.
"தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள் "என்னும் இப்புத்தகமானது ,மதுரையில் இப்போது வசிக்கும் பெரியார் தொண்டர் மானமிகு.பொறியாளர் மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்டதாகும்.சிறுவயது முதலே பகுத்தறிவுச்சிந்தனையோடு எதையும் சிந்தித்து செயல்படுபவராக தனது வாழ்க்கையைஅமைத்துக்கொண்டவர் அய்யா மு.முத்தையா அவர்கள்.87 வயது பெரியாரியல் இளைஞர்.எப்போதும் அமைதியாகவும் ஆனால் மிக ஆழமாகவும் தனது கருத்துக்களை, எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடியவர்.அவர் தனது 'என்னுரையில்' தன்னைப் பற்றியும் ,தன் குடும்பச்சூழல் பற்றியும் கல்வி கற்க முடியாமல் வறுமையால் இரண்டு ஆண்டுகள் கல்வி தடைபட்டதையும், பின்பு தொடர்ந்து பொறியாளர் படிப்பை முடித்து அரசுப்பணியில் சேர்ந்ததையும் சுவைபட எழுதியிருக்கின்றார்..

'பெரியார் ' என்னும் பெயர் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பெயராக விளங்குகின்றது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒடுக்கப்படுபவர்கள் தங்களது தலைவராக கொள்ளத்தக்கவராக, தனது வாழ்க்கை சொல்லும் செய்தியால் போற்றப்படுவராக தந்தை பெரியார் விளங்குகின்றார். 'பெரியாரியல் 'என்பது வாழ்வியல் நெறி.அது பரப்பப்படவேண்டியது மட்டுமல்ல,கொள்கையைப் பரப்புகின்றவர்களின்,பின்பற்றுபவர்களின் வாழ்க்கை நெறியால்,வாழும் முறையால் மற்றவர்களையும் ஈர்த்து வழிகாட்டும் நெறி. அப்படி பண்பட்ட பெரியாரியல் வாழ்க்கையினை வாழ்ந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழக்கூடியவர் அய்யா மு.முத்தையா அவர்கள்.

தந்தை பெரியாரின் தொண்டர்கள் சொந்த வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்படாதவர்கள்.ஆனால் அதே நேரத்தில் கொள்கைக்காக எதற்கும் துணிந்தவர்களாக வாழ்க்கையில் திகழக்கூடியவர்கள். நெருக்கடி கால கொடுமைகளை நாம் அறிவோம்.அரசு ஊழியராகப் பணியாற்றிய நிலையில் ,நெருக்கடி காலத்தில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களை குடும்பத்துடன் சந்தித்து 'அறிவுரைகள் 'பெற்று வந்ததையும் அந்த நேரத்தில் தான் ஆற்றிய இயக்க செயல்பாடுகளையும் விவரிக்கும்போது நமக்கு இவரின் துணிவு புலப்படுகின்றது. மற்ற இயக்கங்களில் 'பேச்சில் வல்லவர்களெல்லாம் ' அஞ்சி தங்களது தலைவர்களைச்சந்திக்காமல் தவிர்த்த நேரத்தில் ,தந்தை பெரியாரின் முதல் தொண்டராய் விளங்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இந்தப் புத்தக ஆசிரியர் சந்தித்ததும் இயக்க செயல்பாடுகளில் முன்னின்றதும் பாராட்டுக்கு உரியதாகும் .

'தந்தை பெரியாரின் சிந்தனைகளின் தனித்தன்மைகள்' என்னும் இந்தப்புத்தகத்தின் உள்ளடக்கம் 'இனிப்பில் எதிரி 'என்னும் இதழில் வெளிவந்தவையாகும். மதுரை மனித நேய மருத்துவர், பகுத்தறிவு நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக ஆதரவு தரும் மறைந்த மருத்துவர் கு.கண்ணன் அவர்களால் நடத்தப்பட்ட இதழ் 'இனிப்பில் எதிரி 'ஆகும்..அந்த இதழில்  எழுதியவையும் மற்றும் சில கட்டுரைகளையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள இந்தப்புத்தகம் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் அவரது தனித்தன்மைகளையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்ற புத்தகமாகும்.

'இவர்தான் பெரியார் 'என்னும் அறிமுகமே தந்தை பெரியாரைப் பற்றிய கவிஞர் கண்ணதாசன்,புரட்சிக்கவிஞர் அவர்களின் பாடலோடு தந்தை பெரியாரின் உருவத்தோற்றத்தை சாமி சிதம்பரனார் அவர்கள் விவரிக்கும் பாங்கினை விவரித்து உருவத்தாலும், தத்துவத்தாலும் எப்படி தனித்தன்மையோடு பெரியார் விளங்குகின்றார் என்பதனை நமது படிப்போர் மனதில் பதிய வைக்கின்றார். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் என்ன? என்ன? செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார்.அதற்கென எப்படி தனித்த வியூகத்தோடு செயல்பட்டார் என்பதனை சாதி ஒழிப்பு என்னும் பகுதியில் விவரிக்கின்றார்.

பல பொதுவுடமைக்காரர்களுக்கு 'பொது உரிமை ' என்றால் என்ன என்பது இன்றும் கூட விளங்குவதில்லை.தந்தை பெரியார் பொது உரிமை ஏன் பொதுவுடமையோடு வேண்டுமென விரும்பினார் என்பதனை விளக்கும் பகுதியும் தந்தை பெரியாரின் வாதத்திறமை பற்றி கேள்வி கேட்டவரையே கேள்வி கேட்டு எப்படி மடக்கினார் என்னும் பகுதியும் தனித்தன்மையாக இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின், தமிழகத்தின் பொருளாதாரம் அகல பாதாளத்தில் ஆள்வோர்களால் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் தந்தை பெரியாரின் பொருளாதாரக்கொள்கைகள் எப்படி தனித்தன்மையானது  என்பதனை விவரிக்கின்றார். இது பெரும் ஆய்வுக்கு உரிய தலைப்பாகும்.

" ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது.மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கின்றார்கள் .நாட்டில் அறிவும் ,ஒழுக்கமும்,நாணயமும் வளர்ந்து வந்திருக்கின்றது என்பதற்கு அடையாளம் என்ன? என்றால் நாட்டின் எல்லாத்துறைகளிலும் சமதருமம்,சம ஈவு,சம உடமை, சம ஆட்சித்தன்மை, சம நோக்கு,சம நுகர்ச்சி,சம அனுபவம் இருக்க வேண்டும் .ஏற்பட வேண்டும். ஏற்படுத்தப்பட வேண்டும்.ஏற்பட்டாக வேண்டும் 'என்று பெரியார் கூறியதைக் குறிப்பிட்டு விளக்கியிருக்கும் பகுதி தனித்தன்மையாக உள்ளதாகும்.வகுப்புரிமையைப் பற்றி மிக விரிவாகவும் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் எழுதப்பட்டுள்ளது. அதைப்போலவே தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகளும் சிறப்பாக இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது .

60 ஆண்டுகளாக உற்ற துணையாக இருந்த தனது துணைவியார் மானமிகு நாகூரம்மாள் அவர்கள் நோய் வாய்ப்பட்டதையும் பின்பு இயற்கை எய்தியதையும் அய்யா பொறியாளர் மு.முத்தையா குறிப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் அன்னை நாகம்மையார் மறைந்த போது எழுதிய இரங்கல் உரைத் தலையங்கமே தனக்கு ஆறுதல் அளித்து துன்பத்தைப் போக்கிற்று என்று எழுதுகின்றார்.இன்பத்திலும் துன்பத்திலும் பெரியாரியல் உற்ற துணையாக தனது வாழ்வில் இருக்கிறது என்பதனை பதிவு செய்திருக்கின்றார்.அன்னை 'நாகம்மையார்  காலமானதும் பெரியார்  மேற்கொண்ட நடைமுறைகள் கவனிக்கத்தக்கவை.மற்றவர்களும் பின்பற்றி நடக்க வேண்டிய நடைமுறைகளாக உள்ளன எனக்குறிப்பிட்டு அதன் தனித்தன்மைகளை விரிவாக விவரித்திருக்கின்றார்.அதைப்போல தனது தாயார் 'சின்னத்தாயம்மாள் 'மறைந்த போது தந்தை பெரியார் அவர்களின் இரங்கலுரை எப்படி உண்மைகளை பெரியார் போட்டு உடைப்பவர்,  தனித்தன்மை வாய்ந்தவர் என்பதனை நாம் சிரித்துக்கொண்டே படிக்க இயலும்.

சில அய்யங்களுக்கு விடைகள் என்னும் பகுதியும் தனித்தன்மை கொண்டதாக இந்தப்புத்தகத்தில் விளங்குகிறது.மொத்தத்தில் இந்தப்புத்தகம் தந்தை பெரியாரின் தனித்தன்மைகளைப் பேசுவதோடு புத்தக ஆசிரியர் பொறியாளர் முத்தையா அவர்களைப் பற்றியும் நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ் நாளெல்லாம் பெரியாரியல் படி வாழும் , ஏறத்தாழ 75 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் தொண்டராக வாழும் இந்த நூலின் ஆசிரியரின் சிறந்த படைப்பாக இந்த நூல் வெளி வருகின்றது.வாழ்த்துகளும்,பாரட்டுகளும்....இன்னும் பல நூல்கள் தந்தை பெரியாரின் தொண்டர் பொறியாளர் மு.முத்தையா அவர்களால் படைக்கப்படவேண்டும் என்னும் இந்த விருப்பத்தினை தெரிவிப்பதோடு, இந்த நூலினை வாங்கி வாசித்து வாசகர்கள் ஆதரவு தர வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

                                                                                                                                                     தோழமையுடன்
                                                                                                                                                      முனைவர்.வா.நேரு,
                                                                                                                                                      தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.
                                                                                           10.09.2019




No comments: