Sunday 21 April 2019

'அடிமரம் ஒன்றேடா அதன் பெயர் திராவிடம்......'

புரட்சிக் கவிஞரே...
நீ மறைந்த நாள் இன்று .....
நாங்கள் உன்னை
மறவாமல் நினைக்கும் நாள் இன்று....




சங்கத் தமிழுக்குப் பின்னே
இயற்கையை இயற்கையாய்
பாடிய இக்கால சங்கக் கவிஞன் நீ.....

'கரும்பு தந்த  தீஞ்சாறே....
கனி தந்த நறுஞ்சுளையே ' எனத்
தமிழை தன் அறிவினில்
உறைத்துப் பாடிய கவிஞரெனினும்
நுனிக்கொம்பில் ஏறி சிலர்
அடிமரத்தை வெட்ட முனையும்
அறியாமை நோக்கியோ
'அடிமரம் ஒன்றேடா
அதன் பெயர் திராவிடம் '
என்று அழுத்தம் திருத்தமாய் உச்சரித்தாயோ

"நீரோடை நிலங்கிழிக்க
நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்க"
எத்தனை சொற்பொழிவாளர்கள்
இந்தப் பாடலில் கசிந்துருகி
கண்ணீர் மல்க
இவ்வுலகின்
வரலாற்றை விவரிக்க
எத்தனை பேர் ..எத்தனை  வருடங்களாய்
உன் பாடல் வரிகளை மேற்கோளாய்......

"நாங்கள் காணத்தகுந்தது  வறுமையா?
பூணத்தகந்தது பொறுமையா?"
ஏழைகள் கேட்பதாய் நீ
வரைந்த  வரிகள் இன்றும் கூட
அப்படியே பொருந்துவதாய்
பொருத்தமாகத்தான் அன்றே சொன்னாய்
'இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை ' என்று.......

சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்பார் செய்கைக்கு
நகைத்து நீ கண்ணுறங்கு என்றாய்
பெண்குழந்தை தாலாட்டில்....
தொலைக்காட்சி பெட்டிக்குள்
கொண்டு வந்து திணிக்கின்றார்
மூடத்தனத்தின் முடை நாற்றத்தை....

"தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்"
தமிழ் உயர்வதற்கான வழியாய்
தமிழியக்கம்
கவிதைகள் தந்தாய்....
உயிர் போன்ற உங்கள் தமிழ்
உரைத்தக்கால்
கடவுளுக்கு உவப்பாதல்  இல்லை போலும்
நெருப்படியாய்  நீ கொடுத்த
பாஅடிகள்
எதிரிகளுக்கு விழுந்த செருப்படிகள்....

சாதி ஒழிப்பா...
இருட்டறையில் உள்ளதடா உலகம்
இன்னும் சாதி இருக்கிறதுஎன்பானும்
இருக்கின்றானே என்னும் வேதனைதான்
மனதில் ஓடுகின்றது.....
மத  பீடத்தில் ஏறிய மாந்தர்காள்
பலி பீடத்தில் ஏறி விட்டீரே
என்னும்  குரல்தான்
மதத்தால் வெட்டிக்கொண்டு
சாகும் மனிதர்களைப்
பார்க்கும் நேரமல்லாம் ஓடுகிறது....


உனது  வரிகளில் கிடைக்கும்
வலிமையும் திண்மையும்
போருக்குப் போகும் வீரனின்
கையில் இருக்கும் ஆயுதமாய்
எந்த நாளும் எங்கள் கைகளில்...
மறப்பது எப்படி உன்னை...?

                                       வா.நேரு,
                                          21.04.2019


No comments: