Wednesday 22 July 2020

என்னுடைய தோழர்கள்: புதுச்சேரி மு.ந.நடராசன்

என்னுடைய தோழர்கள்:    புதுச்சேரி மு.ந.நடராசன், மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவராக இருந்து மறைந்த அய்யா புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (24.07.2020).புதுச்சேரி மு.ந. நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்.2002- முதல் இறக்கும்வரை தொடர்பில் இருந்தவர். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை கட்டாயம் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.அவர் அழைக்கவில்லையென்றால் நான்  அழைப்பேன். புதுச்சேரி கூட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்தில்தான் பெரும்பாலும்  தங்கியிருக்கிறேன். அன்போடும் பாசத்தோடும் விருந்தோம்பல் செய்பவர். அவரது இணையர் அம்மா அவர்களும் அப்படி ஒரு உபசரிப்பு செய்வார்கள்.

முதலில் குடும்பத்தை சரிசெய்ய வேண்டும் என்பார். குடும்பக்கடமைகளை முதலில் முடிக்க வேண்டும் என்பார். மாதத்தின் முதல் வாரத்திலேயே வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருளை எல்லாம் வாங்கி வீட்டில் போட்டு விடுங்கள் என்பார். அவரை விட நான் 18 வயது இளையவன் என்றாலும் நான் மாநிலத்தலைவர் அவர் மாநிலத்துணைத்தலைவர் என்றாலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்.அன்பு காட்டுபவர். ஆனால் தன் மனதிற்கு பட்டதை மிகப் பளிச்சென்று சொல்வார். அய்யா ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் பெரியார் திரைப்படம் உள்ளிட்ட அத்தனை அறிவிப்புக்களுக்கும் அவருடைய பங்களிப்பு என்பது முதலிலேயே இருக்கும்.தன்னுடைய பங்களிப்பை முதலில் கொடுத்துவிட்டு பின்பு வசூல் செய்தும் கொடுப்பார்.

தி.மு.க.வின் புதுச்சேரி மாநிலப்பொருளாராக இருந்து தி.மு.க. மாநில மாநாடு நடத்தியதை குறிப்பிடுவார்.மறைந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திருச்சி அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் அய்யா பெரியாருக்கு மோதிரம் செய்து கொடுக்க விரும்பியதையும், அதற்காக முதன் முதலில் தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்ததையும் அய்யா அவர்களுக்கு கைவிரல் அளவு எடுத்து மோதிரம் செய்து கொடுத்ததையும் அடிக்கடி குறிப்பிடுவார்.அந்த நிகழ்வை சொல்லும்போதெல்லாம் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த நிகழ்வை சொல்லி சொல்லி மகிழ்வார்.
தி.மு.க்.விலிருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளிலேயே இருக்க விரும்பினார்.இருந்தார். சின்ன சின்ன வெளியீடுகளாக பல வெளியீடுகளை கொண்டு வந்தார்.அந்த வெளியீடுகளை திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக நிகழ்வில் எல்லோருக்கும் கொடுப்ப்பார்.கொடுக்கச்செய்வார். மாநாட்டு நிகழ்வில் அய்யா மு.ந.நடராசன் அவர்களின் வெளியீடு கைக்கு வந்துவிட்டது என்றால் அய்யா மு.ந.நடராசன் வந்துவிட்டார் என்பதனை புரிந்துகொள்வோம்.  மதுரையில் நடந்த பகுத்தறிவாளர் கழகக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திக மாநாடுகள்,மகாராஷ்டிரா நாக்பூரில் நடைபெற்ற இந்திய நாத்திக மாநாடுகளில் நாங்கள் எல்லாம் இணைந்து கலந்துகொண்டு இருக்கின்றோம்.அங்கு வரும்போது ஆங்கிலத்தில் தனது வெளியீடுகளைக் கொண்டு வருவார். யார்? எவர் ? என்னும் தலைப்பில் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி எனத் திராவிட இயக்கத்தின் தலைவர்களைப் பற்றி தொடர்ச்சியாக வெளியீடுகளைக் கொண்டுவந்தார்.  சிக்கனமாக இருப்பார். ஆனால் நல்ல செயல்களுக்கு பணம் செலவு செய்வதைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் செலவழிப்பார்.இளைஞரைப்போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

அவருடைய சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள சிறுகாம்பூர். அந்த ஊரில் சில ஆண்டுகளுக்குமுன் அரசு உயர் நிலைப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். என்னையும் மற்ற பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி,போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஆசிரியர்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களை வழங்கி என மிகப்பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இன்றைக்கும் கூட நினைவில் நிற்கிறது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாநாடு இரண்டு நாட்கள் புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது.மிகப்பிரமாண்டமாக நடந்த அந்த மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ,மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக்காட்டினார்.அதைப்போல இராவண லீலா தொடர் நிகழ்வுகளை புதுச்சேரியில் நடத்தினார். அய்யா சிவ.வீரமணி அவர்கள் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவராக வந்த பின்பு, அவரோடு இணைந்து பல இயக்க நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

அய்யா மு.ந.நடராசன் அவர்களின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று(24.05.2020) மாலை நடைபெற்ற காணொளி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்களும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் காணொளி வழியாக உரையாற்றினார்கள்.திராவிடர் கழகத்தின் அய்யா ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது "அருமைத்தோழர் மு.ந.நடராசன் அவர்கள் புதுவையில் மட்டுமல்ல, புதுமையான உலகம் அமையவேண்டும் என்பதற்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்து வாழ்ந்து காட்டியவர்.துரு துருவென்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்.எங்கு சென்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றாலும் கூட திராவிடர் இயக்கத்தை,பகுத்தறிவாளர் கழகத்தை கையோடு எடுத்துச்சென்றவர்.விபத்துகள் எதிர்பாராதவை.அதிர்ச்சியாக நமக்கு அமைந்துவிடுபவை. ஆனால் நாம் பகுத்த்றிவாளர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை செயல்படுத்துபவர்கள்.
தோழர் நடராசன் அவர்கள் தான் மட்டும் கொள்கையாளராக வாழவில்லை. அவருடைய வாழ்விணையராக இருந்தாலும் அவரது பிள்ளைகளானாலும் கொள்கைத்தங்கங்களாக இருப்பதும், விடுதலை வாசகர்களாக இருப்பதும்,இயக்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதும் நடராசன் அவர்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை,ஆலமரம் விழுந்தாலும் அதனுடைய  விழுதுகள் தாங்கி நிற்பதுபோல வாழைமரம் சாய்ந்தாலும் அதன் கன்றுகள் நிற்பதுபோல அவரின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.ஒளிக்கீற்றாய் நடராசன் அவர்கள் பாடுபட்ட பகுத்தறிவு பரப்பலும், சாதி ஒழிப்பும், அறிவியல் மனப்பான்மை வளர்ப்புமான அந்த லட்சியச்சுடரை ஏந்தி தொடர்ந்து பயணிப்போம். " என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அவரின் நினைவு நாளில் அவரின் உணர்ச்சியும் வேகமும் இயக்க ஈடுபாடும் மனது முழுவதும் நிற்கிறது. அவரது மூத்தமகன் பாஸ்கர் அவர்களோடு அவரின் பிறந்த நாளை ஒட்டி பேச வாய்ப்புக்கிடைத்தது. மிக நல்ல பொறுப்பில் உயர் பதவியில் இருக்கும் அவரின் பெரியாரியல் பற்றி புரிதலும், அவரது அப்பாவைப் பற்றிய அவரின் மதிப்பீடும், தனது தந்தை மு.ந.நடராசன் அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,எப்படி ஒரு எதிர் நீச்சல்காரரை வாழ்க்கையில் உயர்ந்து திடீர் விபத்தால் மறைந்தார் என்பதனை அவர் பேசப்பேச, ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிய நிகழ்வு, அய்யா மு.ந.நடராசன் அவர்கள் தான் மறைந்தாலும் தனது உணர்ச்சியை, வேகத்தை,அறிவை, இயக்க ஈடுபாட்டை தனது குடும்பத்தினருக்கு அளித்துச்சென்றிருக்கார் என்பது மிகப்பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தோழர்கள் எதையும் எதிர்பாராதவர்கள்,கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக உணமையை உரக்கச்சொல்வதனால், பொய்யர்களிடமிருந்தும்,ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களை எதிர்பார்த்தும்,எதிர்கொண்டும் வாழ்வில் செம்மையாக வாழ்பவர்கள்.

முதலாம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக காணொளி வழிக்கூட்டம் நடத்துகிறார்கள். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்களோடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன்,பொதுச்செயலாளர் அய்யா முனைவர் துரை.சந்திரசேகரன்,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணோளி நிகழ்வில் கலந்துகொண்டு அய்யா சுயமரியாதைச்சுடரொளி மு.ந. நடராசன் நினைவு உரை நிகழ்த்துகிறார்கள். நிகழ்வு சிறக்கட்டும்.

புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.முதலாம் ஆண்டு நினைவு நாளில் எனது அருமைத்தோழர், தமிழகம் &புதுச்சேரி மாநிலப்பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் அய்யா மு.ந. நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம்.

                            வா.நேரு, 23.07.2020 இரவு 10.15 மணி

No comments: