Thursday 23 January 2014

நூல் அறிமுகம் : குடும்பம் (ஒரு சீன நாவல்)

 நூலின் தலைப்பு : குடும்பம் (ஒரு சீன நாவல்)
நூல் ஆசிரியர்      : பா. ஜின்
தமிழில்                   : நாமக்கல் சுப்பிரமணியம்
பக்கங்கள்             : 272  விலை ரூ 85
வெளியீடு             : அலைகள் வெளியீட்டகம், சென்னை-24

                                  குடும்பம் எனும் அமைப்பு எவ்வாறெல்லாம் அதன் உறுப்பினர்களின் உணர்வுகளை சிதறியடிக்கிறது, மழுங்க வைக்கிறது, பத்தாம் பசலித்தனமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதனை விளக்கும் சீன நாவல். காவோ குடும்பம் -அதன் உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் என்னும் பாத்திரப்படைப்புகள் மூலம் விரிவாக சித்தரிக்கின்றது.

                              மீ-பெங் அடிமைப்பெண் இளைய முதலாளி ஜீகுவால் காதலிக்கப்படுகிறாள். இளைய முதலாளி இவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள இயலாத சமூக சூழல். ஒரு கிழவனுக்கு வைப்பாட்டியாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும்போது , அதனை விட சாவதே மேல் என ஏரியில் விழுந்து சாகின்றாள்.

                             மீ - உறவுப்பெண்ணை காதலிக்கிறாள். ஒரே வகுப்பு- ஆனால் ஜாதகப் பொருத்தம் சரியில்லையென்று வேறொருவனுக்கு மூத்தவர்களின் கட்டாயத்தால் கட்டி வைக்கப்படுகின்றாள். கொஞ்ச நாளில் கணவனை இழந்து , பின் மடிகிறாள்.

                              இதைப் போல ருஜீ என்னும் பெண். சமீபத்தில் ஒருவர் இறந்திருக்கும் வீட்டில் , பிரசவம் பார்க்கக்கூடாது என்னும் மூட நம்பிக்கை அடிப்படையில் ,ஊருக்கு வெளியே அனுப்பப்படுகிறாள். பிரசவ வசதி இல்லாமல் சாகின்றாள். மூன்று பெண்களின் இறப்புகள்- அதைச்சொல்லும் விதம்- பாத்திரப்படைப்பு மிக வலிமையாக இருக்கிறது. அதைப்போல ஜீக்சன்,ஜீமின், ஜீகு என்னும் ஆண் பாத்திரப்படைப்புகளும் நினைவில் நிற்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. " நான் கலைஞன் அல்லன். எழுதுவது என் வேலையுமல்ல. என் வாழ்க்கையில் முரண்பாடுகள் இருந்தன.படைப்பிலும் முரண்பாடுகள் உண்டு. அன்புக்கும் ,வெறுப்புக்கும் இருப்பதைப்போல், அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இருப்பதைப்போல் , நினைவிற்கும் நடப்புக்கும் இருப்பதைப்போல், என் வாழ்வும் எழுத்தும் ஒரு துயரமான போராட்டம். என் எழுத்துக்களில் வித்தியாசமான நடைகளும் கோணங்களும் இருக்கலாம். ஆனால் அவற்றின் சாரம் ஒன்றாகவே இருக்கும். தொடக்க காலத்திலிருந்தே என் எதிரிகளைத் தாக்காமல் நான் எழுதியதே இல்லை. என் எதிரிகள் யார் ? காலங்கடந்த பழைய சிந்தனைகள். சமுதாய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக நிற்கும் மடமைகள். மனித நேயத்தை அழிக்க முயலும் அனைத்தும் என் எதிரிகள் " என்கிறார் இந்த நூலின் முல ஆசிரியர் பா-ஜின். தனது கூற்றை நாவல் முழுக்க மெய்ப்படுத்தியிருக்கின்றார்.

                             இந்த நாவல் தமிழில் வரத்தூண்டு கோலாக இருந்த கு.சின்னப்பபாரதி அவர்கள் " இந்த அற்புதமான நாவல் , தமிழ் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பல படிப்பினைகளை வழங்கக்கூடியதென நான் கருதுகிறேன் " என்கிறார் முன்னுரையில் -உண்மை.

                        இந்த நாவலை தமிழாக்கியவர் நாமக்கல் சுப்பிரமணியம். தமிழ் இலக்கிய உலகின் சார்பாக மனதார,உளமாரப் பாரட்டப்படவேண்டியவர். சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த 'செம்மீன் 'போல, இளையபாரதி மொழி பெயர்த்த 'மய்யழிக்கரையொரம் ' போல, ஒரு அற்புதமான நாவலின் உயிரோட்டமான மொழி பெயர்ப்பு. நமது வீட்டு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய மொழி பெயர்ப்பு நாவல்.


நன்றி : தோழர் ந.முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று ' இதழில் நூல் அறிமுகம் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்டது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான நூலில் அறிமுகம்...

தமிழாக்கிய திரு. நாமக்கல் சுப்பிரமணியம் அவர்களுக்கும் நன்றி...

வாழ்த்துக்கள்...

முனைவர். வா.நேரு said...

நன்றி தனபாலன் அவர்களே .

கரந்தை ஜெயக்குமார் said...

நூல் அறிமுகம் அருமை

முனைவர். வா.நேரு said...

நன்றி,.தோழர்.

Kasthuri Rengan said...

அருமையான நூல்

ஆனால் இங்கு ஓராயிரம் பெண்கள் இறந்தும் ஒரு தரமான நாவல் வந்தபாடில்லை ...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
அண்ணன் முத்து நிலவன் அவர்களின் தளம் மூலம் வந்தேன்..
http://www.malartharu.org/2014/01/word-verification.html

முனைவர். வா.நேரு said...

நன்றி மது அவர்களே, படித்ததோடு நின்றுவிடாமல் தங்கள் கருத்தையும் கூறியதற்கு. தோழர்
.முத்து நிலவன் பல வழிகளில் தோழமை முன்னோடியாக இருக்கின்றார். அவர் தனது தளத்தில் ,ஏற்கன்வே அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளை, கதைகளைத் தளத்தில் வெளியிடுவதைப் பார்த்துத்தான் நானும் பத்திரிக்கையில் எழுதியதைப் பதிந்தேன். நன்றி