Tuesday 17 June 2014

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ், டாக்டர் சி.எஸ்.ராஜீ

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ்
ஆசிரியர் : டாக்டர் சி.எஸ்.ராஜீ
பதிப்பகம் : சாய் பப்ளிஷ்ர்ஸ், சென்னை-87
முதல் பதிபபு : 2012, மொத்த பக்கங்கள் : 160, விலை ரூ 120.

                                 இந்த நூல் யாருக்காக ? எதற்காக? எழுதப்பட்டது என்பதனை ஆசிரியர் உரையில் இந்த நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். " ஒன்பதாம் வகுப்பில் இருந்து +2 முடிக்கும் பருவத்தில்தான் பிள்ளைகள் பெரும்பாலான உடல்வளர்ச்சி பெறுகின்றனர். அறியாத குழந்தைப் பருவத்தைத் தாண்டி அறிந்த வாலிபப்பருவத்தை அடைகின்றனர்... அந்த முக்கிய காலகட்டத்தில் பிள்ளைகளை நல்ல திசையில் திருப்பிவிடத்தான் இந்நூல் எழுதப்பட்டது ஆயிரக்கணக்கான பெற்றோர் மற்றும் குழ்ந்தைகளையும் அவர்க்ள் உயர்வு தாழ்வுகளையும் கண்ட அனுபவம்தான் இந்நூலை எழுதத்தூண்டியது.

                                     இந்தப் புத்தகம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, பாகம் 1 - சுய ஆய்வும் ஊக்குவிப்பும் என்னும் தலைப்பு கொண்டது. ஒரு கழுகு தன் குஞ்சுகளுக்கு எப்படிக் கூடுகட்டுகிறது.பின்பு குஞ்சு பொரித்து தன் குழந்தை வளர வளர குழந்தையை பயிற்றுவிப்பதற்காக
 எப்படிக் கூட்டைக் கலைத்து முட்களின் மேல் கழுகுக்குஞ்சை உட்கார வைத்து,விழ வைத்து,பயத்தினால் அழ வைத்து,பின்பு அச்சம் போக்கி,பயமற்ற,தானக இரையைத் தேடிக் கொள்ளும் கழுகுக்குஞ்சாக உருவாக்குகிறது என்பதனைச் சொல்லி நீங்கள் கூட்டிலிருந்து வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என வளர் பருவத்திலிருக்கும் மாணவமாணவிகளுக்கு நினைவூட்டுகிறார்."உங்கள் சொந்தக்கால்களிலே நிற்பது உங்களுக்கும் பெருமை,உங்கள் பெற்றோருக்கும் பெருமை.உற்றார் உறவினருக்கும் பெருமை ,உங்கள் சிறகுகள் முளைத்து விட்டன,பறக்க ஆயத்தமாகுங்கள்'.
                                 
                                                        வளர் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளிக்க பெற்றோர்கள் படும்பாடு பெரும்பாடு.பெற்றோர்களை இந்த வயதினர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.அவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக்"உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும்  உள்ள பந்தபாசம் "எனும் தலைப்பில் கொடுக்கின்றார்."நீங்கள் மேல்நிலைப்பள்ளி (அ)உயர்நிலைப்பள்ளி,அல்லது கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் எப்பொழுதாவது உங்கள் அப்பா,அம்மா உங்களுக்காக செய்யும் தியாகங்களையும் உங்கள் உயர்வில் எவ்வளவு அக்கறையையும் கொண்டுள்ளார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்ததுண்டா? எனப் பக்கம் 11ல் வினா எழுப்புகின்றார்."உங்கள் பெற்றோர் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பும் பாசமும் அளவிட முடியாதது...இந்த  உலகத்தில் அந்த அன்பிற்கு ஈடு இணையான அன்பே கிடையாது எனக் கூறும் ஆசிரியர் பெற்றோர்கள் செய்யும் தியாகங்களை பிள்ளைகளை வளர்க்க ,படிக்க வைக்க படும்  இன்னல்களை பக்கங்கள் 12,13 ல் குறிப்பிடுகின்றார். "இத்தனை தியாகங்களைச் செய்யும் உங்கள் பெற்றோர் உங்களிடம் எதை   எதிர்பார்க்கின்றார்கள்?... நீங்கள் பெற்றோருக்குச் செய்யும் கைம்மாறு அனைத்தும் உங்கள் படிப்பு வளர்ச்சி ,முன்னேற்றம் தான்.திருவள்ளுவர் ,இந்தக் கருத்தை பின்வரும் குறளிலே மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி ,
                            "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி  இவன்தந்தை
             என்நோற்றான் கொல் எனும்சொல்."
என்னும் குறளைக் குறிப்பிடுகின்றார்.

                                          2 கால்களும் 2 கைகளும் இல்லாத திரு.ராஜண்ணா பெங்களூரில் ஒரு தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருவதையும் ,15 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுத்துள்ளதையும் முன்னாள் ஜனாதிபதி.டாக்டர்.அப்துல்கலாம் அவர்களிடம் உற்சாகமாக பரிசு பெற்றதையும் குறிப்பிட்டு ,
  
                         என்ன பலம் இல்லை உங்களிடம் ?
                          ஏன் இன்னும் குழம்ப வேண்டும் உங்கள் மனம்?
                          திட்டமிட்டு உழைத்திடுங்கள் தினம் தினம் .
                         வேகமாக உயரும் உங்கள் வாழ்க்கைத்தரம்.

என வளர்பருவ மாணவ-மாணவிகளுக்கு ஊக்கமூட்டுகிறார்.மாணவ-மாணவியர்களே நீங்கள் உங்களிடம் செய்துகொள்ள வேண்டிய கூட்டல்,கழித்தல்,பெருக்கல் எனப் பட்டியல்களை அணுகுமுறையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பக்கம் 21,22ன்றில் குறிப்பிடுகின்றார்.

                          சுய ஆய்வு மேற்கொள்ளுங்கள்.பிரச்சனையே இல்லாத  ஒருவர் உலகத்தில் இல்லை .பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்.
"உளிதாங்கும் கற்கள்தானே ; மண் மீது சிலையாகும்
வலிகாணும் உள்ளந்தானே ; நிலையான சுகம் காணும் ;
யாருக்கில்லை போராட்டம் ;கண்ணில் என்ன நீரோட்டம் ;
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ." எனும் கவிஞர் பா.விஜய் அவர்களின் திரைப்படப் பாடலைக் குறிப்பிட்டு பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

                            அதிக பயத்தால் வாழ்வே இருள்மயமாகிவிடும் எனச்சுட்டிக் காட்டும் இந்த நூலின் ஆசிரியர் " எப்பொழுதும் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டு உற்சாகத்துடன் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு கவலையும் , பயமும் வளராமல் அடிமட்டத்திலேயே தங்கிவிடுகின்றன " எனப்பக்கம் 42-ல் குறிப்பிட்டு உங்கள் மனதைக் கெடாமல் வைத்திருப்பதற்கு குளிர்சாதனமோ, பணமோ தேவையில்லை, உங்கள் மன உணர்வை ஒழுங்குபடுத்துவதே அதற்கு தீர்வு எனக்குறிப்பிடுகிறார்.

                             முன்னேற்றத்திற்கான தடைகள் அனைத்தும் திட்டமிடாத, செயல்படாத, நேரத்தை வீணாக்குபவர்களின் பாதைகளில்தான் அதிகம்,எனவே திட்டமிடுதலை வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக்குறிப்பிடுகின்றார். களிமண்ணாக இருந்த களிமண் அழகிய டீ  கப்பாக மாறும்வரை அது படும் இன்னல்களைக் குறிப்பிடும் ஆசிரியர் வாழ்வின் பல்வேறு இன்னல்களைத் தாண்டித்தான் உயரத்தை அடைய முடியும் எனும் எதார்த்தத்தை பில்கேட்ஸ், எடிசன், ஐன்ஸ்டீன், கலீல் கிப்ரான், ஏலன் ஸ்டிரிக்,பென்னிப்லெயிர், ஜிக ஜிக்லர், பெஞ்சமின் பிராங்களின் போன்ற 10 மேதைகளின் கருத்துக்கள் என பல்வேறு கருத்துக்களை பாகம் ஒன்றின் முடிவுரையாக கொடுக்கின்றார். 

                                                     இலக்கை நிர்ணயித்தலும் சுயமுன்னேற்றமும் என்பது 2ம் பாகமாகும்.இலக்கு என்றால் என்ன?இன்றைக்கு அல்லது இந்த வாரத்தில் செய்ய வேண்டிய குட்டி இலக்குகள்,இந்த மாதத்தில் செய்ய வேண்டிய சிறு இலக்குகள்.இந்த ஆண்டில் செய்ய வேண்டிய பெரிய இலக்குகள்.வாழ்க்கையில் இலக்கு என்பது எதையாவது ஒன்றைச் சாதிப்பதும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் தான் மகா இலக்குகளை அடைய குட்டி இலக்குகள்,சிறு இலக்குகள்,பெரிய இலக்குகள் அவசியம் எனச் சொல்லும் ஆசிரியர், மார்டின் லூதர் சொன்ன மகத்தான கருத்து என

 'உங்களால் பறக்கமுடியவில்லை எனில் ஓடுங்கள்;
  ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்;
 நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள்;
எப்படியாவது இலக்கை நோக்கி முன்னேறி செல்லுங்கள்."குறிப்பிடுகின்றார்.

                 மாணவ மாணவிகளிடம் தங்கள் பலத்தை(strength) பலவீனத்தை பட்டியலிடச் சொல்லுகின்றார்.பலவீனத்தை நீக்கி பலத்தை அதிகரிக்கச் செய்யும் பத்துப் படிகளை சுட்டிச் சொல்லுகின்றார்.10வது படியாக "நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் (பிறர் உங்களைப் பார்க்கும் போதும்,யாரும் பார்க்காத போதும்)முக்கியமானது என்னவென்றால் நீங்கள் நன்னடத்தையிலிருந்து சற்றும் நழுவக்கூடாது.உங்கள் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்றால் யாராவது உங்கள் நடத்தை பற்றி தவறாகச் சொன்னால் கூட யாரும் நம்பக்கூடாது.உங்கள் வாழ்க்கை என்னும் சூப்பர் கட்டடத்தை நேர்மை,நியாயம்,கண்ணியம்,கட்டுப்பாடு,அன்பு ஆகியவை கொண்ட அஸ்திவாரத்தின் மேல் கட்ட வேண்டும் . அப்பொழுதுதான் வாழ்நாள் முழுவதும் உங்கள் மகிழ்ச்சியுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.நன்னடத்தைதான் உங்கள் கிரீடத்தில் பொதிக்கும் வைரக்கல்' எனப்பக்கம் 75ல் குறிப்பிட்டு ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை வேண்டுமெனில் ஒழுக்கம் வேண்டுமென்பதனை பசுமரத்தாணிபோல அடித்துக் கூறுகின்றார்.

              சுய நிர்வாகம் தேவை எனக் குறிப்பிட்டு அதற்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஓரிடம் அந்தந்த பொருள் அந்தந்த இடத்தில், எங்கும் எதிலும் ஒழுங்கு, எங்கும் எதிலும் சுத்தம் என்னும் வழிமுறைகளைக் கூறுகின்றார்.

                   கடுமையான் வெயிலை மறைக்க குடை பயன்படுகின்றது.மற்றவர்கள் செய்யும் கேலிய,கிண்டலை,ஏளனங்களை மறைக்க மனதளவிலே ஒரு குடையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
யாரவது ஏளனம் செய்தால் மனதிற்குள் உருவாக்கிய குடையை விரித்து குரைக்கும் நாய்கள் என அலட்சியமாகச் சொல்லுங்கள்.எனப் பக்கம் 82,83ந்றில் குறிப்பிடுகின்றார்.

                 ஜப்பானில் ஹோண்டா என்ற இளைஞன் சந்தித்த சோதனைகளையும் தன்னம்பிக்கை,விடாமுயற்சி எனும் 2 சாவிகளால் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை ஹோண்டா நிறுவனத்தை நிறுவிய வெற்றி வரலாற்றைச் சொல்லி நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை,விடாமுயற்சி  எனும் சாவிகளை உபயோகிங்கள் உயர்வாக எண்ணுங்கள் .நீங்கள் உயர்வீர்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

          வளர்பருவத்தில் ஆழ்பள்ளத்தில் விழுந்து அவதிப்பட வைக்கும் 3கொடிய பழக்கங்கள் புகைப்பழக்கம்,மதுப்பழக்கம்,போதைப்பழக்கம் இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு வீடாதீர்கள்.இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு இருப்போர்களோடு நட்பு பாராட்டாதீர்கள்,விலகி நில்லுங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

                        நேரத்தை நன்றாக கையாள 10 உன்னத உத்திகள் எனக் குறிப்பிட்டு பக்கம் 96 முதல் 101 வரை விவரிக்கின்றார்."கையில் சரியான நேரத்தைக் காட்டும் கடிகாரம் இருந்தும் குறித்த நேரத்தில் குறித்த வேலைக்கு போகவில்லையென்றால் அவர்கள் கடிகாரம் கட்டிக்கொள்ள தகுதியானவர்கள் அல்ல."

                         பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்வது பற்றி பக்கம் 103 முதல் 106 வரை விவரிக்கின்றார்..மேடையில்பேசும் வாய்ப்புகள்,உங்களுக்கு தானாக வந்துவிடாது.வாய்ப்புகளை நீங்கள் தான் உண்டாக்கி கொள்ள வேண்டும்.பள்ளிகள்,கல்லூரிகள்,சங்கங்கள்,நற்பணி மன்றங்கள் போன்ற பல இடங்களிலே வாய்ப்புகளை உண்டாக்கிக் கொண்டு நன்கு தயார் செய்து பேசிப்பேசித்தான் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

               மாணவப் பருவத்திலே உடல் வளர்ச்சி இருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கிறதே என்று எப்படி வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு  ஒரு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் சுமார் 10 ஆண்டுகளுக்குள் உடல்னலம் கெடுவது நிச்சயம்.என எச்சரிக்கும் ஆசிரியர்.உங்கள் உடல்னலமே முன்னேற்றத்திற்கு பலம் .எனவே முன்னேற்றத்தை கவனியுங்கள் என அறிவுறுத்துகிறார்.

             தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வழிமுறைகள் என்பது 3ம்பாகமாகும் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்ன "அறிஞனாக தேவை ஒரு சதவீத சுய ஊக்குவிப்பும் 99சதவீத உழைப்பும் தான்.என்பதைக் குறிப்பிட்டு 30 அறிவுரைகளை படிப்பது குறித்தும்,தேர்வுக்கு தயாராவது பயிற்சிகள் குறித்தும் தேர்வுக்கு போகும் முன் தேர்வில் விடைத்தாள்களை கையாளும் முறை.,அதிக மார்க்குகள் வாங்க தேர்வு எழுதுவது எப்படி,மிகவும் கடினமான தேர்வை சந்திப்பது எப்படி!என்பதனைப் பற்றியெல்லாம் விளக்கியுள்ளார்.

              நன்னடத்தைதான் உங்களின் மாபெரும் சொத்து என்பது பாகம் 4 ஆகும்.நல்லவர் சேர்க்கை-நல்லதொரு வாழ்க்கை.பொல்லாதோர் சேர்க்கை-தொல்லைமிகு வாழ்க்கை எனக் குறிப்பிடும் இந்நூல் ஆசிரியர்.If character is lost,everything is lost எனும் ஆங்கில வாசகத்தைச் சொல்லி நன்னடத்தையை வலியுறுத்துகிறார்.

                     உங்கள் மாதாந்திர வளர்ச்சி அறிக்கை என்பது 5ம் பாகம்.இது ஒரு பயிற்சியாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது,வளர்பருவத்தினர் மட்டுமல்ல,நம்மைப் போன்ற பெற்றோர்களும் படிக்க வேண்டிய புத்தகம் ,டாக்டர் சி.எஸ்.ராஜி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை நாம் வாசிப்பது மட்டுமல்ல,நமது  பிள்ளைகளையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அவர்கள் மன்ம் உவந்து வாசித்துவிட்டால் வளர் பருவப் பிள்ளைகளின் மனதில் ஒரு மாற்றம் நிகழ் வைக்கும் அளவிற்கு கருத்துக்கள் உள்ள புத்தகம் இது..

( மதுரை, அகில இந்திய வானொலியில் நூல் அறிமுகம் பகுதிக்காக தயாரிக்கப்பட்டது)

 
                      

No comments: