Sunday 22 June 2014

சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி




சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி

சூரியக்கீற்றுகள்..தனது வெளிச்சக் கைளால் உலகை அளந்து,நிலவும் இருளை துளைத்து சிதறடித்து,எங்கும் பரவுகின்ற தன்மையால் சுற்றிலுமிருக்கும் மெய்யை உணரச்செய்யும் தன்மை கொண்டது.

“தோழர் வா.நேருவின் சூரியக்கீற்றுகள் கவிதைத் தொகுப்பும்”,ஆண்டாண்டு காலமாய் அகத்திலே நிலவும் இருண்ட சிந்தனைகளை அகற்றி,தெளிந்த சிந்தனையெனும் புதிய வெளிச்சம் தருகின்றதாய் அமைந்திருக்கிறது.

பொதுவாய் கவிதைகள் எனில்,வாசிப்பவனை வார்த்தை ஜாலங்களுக்குள் சிக்கவைத்து,சொல்லவருவது என்ன என மனதை அலைபாயவைத்து,இறுதிவரை இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது..என்றே புரிந்துகொள்ள முடியாத,வாசகனின் ரசனையை,அறிவை மட்டம் தட்டும் கவிதைகள் இப்போது ஏராளமாய் வந்து கொண்டிருக்கின்றன.

வாசிப்பவன் உணரவேண்டியதை,நேரடியாக உணர்த்தாமல் நிற்கின்ற கவிதைகள்,வாசகனின் மனதிற்குள், கடக்க முடியாமல்,அப்படியே புறவெளியில் நின்று,பின் மறைந்தே போகின்றன.ஆனால், “பேனாவால் எழுதியதை வாளாலும் வெட்டியெடுக்க முடியாது”என்று ரஷ்ய இலக்கியமேதையான மக்சீம் கார்க்கி சொன்னதைப்போல,எளிமையையும், வாழ்வின் யதார்த்தத்தையும் கொண்ட கவிதைகள் காலம்தோறும்,சந்ததிகளோடும் பேசிக் கொண்டே இருக்கின்றன. கவிஞர் நேருவின் வார்த்தைகளிலேயே குறிப்பிடுவதென்றால், “ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும்.”

கவிஞர் வா.நேருவோடு,நேரடியாக பரிச்சயம் இல்லாதபோதே,அவரின் கவிதைகள் மூலம் எனக்குள் நுழைந்து இடம் பிடித்துக் கொண்டவர்.. என்பதை, மிகப் பெருமையோடு இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.இவர் எழுதியுள்ள 51 கவிதைகளைத் தொகுத்து,அழகு மிளிரும் அட்டைப் படத்துடனும், திராவிடர் கழக செயலவைத்தலைவர் திரு சு..அறிவுக்கரசு,மற்றும் தோழர்.அகன் அவர்களின் அணிந்துரைகளோடும், இவரின் இரண்டாவது தொகுப்பாக “சூரியக் கீற்றுகள்” கவிதை தொகுப்பு வந்துள்ளது. இவருடைய முதல் தொகுப்பு “பங்குனி உத்திரமும்,பள்ளிக்கூடமும்..!”

இவருடைய கவிதைகளில் எப்போதும்,மானுட நலன் விரும்பும் சிந்தனைகள் துளிர்த்து நிற்பதோடு,மானுட நலனைப் புறக்கணிக்கின்ற எதனையும் வெறுக்கின்ற போக்கும் நிச்சயம் இருக்கும்.அவ்வாறான காரணிகளில் முதலிடம் பிடித்துக் கொண்டிருப்பது மதமும்,சாதியும்.

தொகுப்பிலுள்ள முதல் கவிதையே,பட்டினி கிடக்கும் பிள்ளைகளுக்காக உணவைத் தேடிச் சென்று, மதவெறியர்களால் பலிவாங்கப்பட்ட,காதர்மைதீனைப் பற்றி உருக்கமாகப் பேசுகிறது.
“எந்தத் தவறும் செய்யவில்லை
எனது பெற்றோர் புகட்டிய
மதத்தினைப் பின்பற்றியதைத் தவிர..!
.. .. .. .. ..
மதவெறியின் கோரதாண்டவத்தினால்,வயிற்றில் குத்துப்பட்டு இறந்துபோன சம்பவத்தை நான் மறக்கவில்லை என,நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ள நினைவுகளையும் பகிர்ந்து சென்றுள்ளார்.


“என்காலில் பட்டு
என்னை அறியாமலேயே
சிற்றெறும்பு ஒன்று
சிதைந்துபோனது போலவே
உனது வாழ்க்கையும்
எனது வாழ்க்கையும்..!

இதில் எதற்கு
சாதிப் பெருமையும்
தற்பெருமையும்..?
முடிந்தால்
எவருக்கேனும் உதவு
இல்லையெனில்
அமைதியாய் முடங்கு..!” - என்று ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர்,தனக்குள் குமுறுகின்ற ஆத்திரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு,மிக நாகரீகமாக,உதவு அல்லது அமைதியாய் முடங்கு..என்று சொல்லும்போது, படியாத பிள்ளையின் தலையில் லேசாக கொட்டு வைப்பதுபோல,அவர் அடக்கிவைத்த வார்த்தை நம் மனதுக்குள்,‘இன்னொரு வார்த்தையாக’வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. ,

சாதியையும் மதத்தையும்
நெஞ்சுநிறைய சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து வைத்த
விருந்தில்.., -அறியாத வயதில் கலந்து கொண்டு,உண்ட உணவு,”இன்னும் செறிக்க மறுக்கிறது”. என்று சொல்லும்போது,சாதிய உணர்வுகள் எந்த அளவிற்கு,ஒரு பக்குவப்பட்ட மனதில் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது..என்பதை துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.இந்த கவிதையை வாசிக்கும்போது,நாமும் அப்படிப்பட்ட விருந்துகளில் ஏதாவது கலந்து கொண்டிருந்தால்..,நமக்கும் குமட்டத்தான் செய்யும்.

மாடாய்த்தான் அலைகிறோமோ..?,நடமாடும் கடவுளாகி விடு,முடநம்பிக்கை நாட்டியம்,எங்கே கடவுள்.? நியாயநாள் தீர்ப்புகள்,ஏடெழுதும் எழுத்தாளர்கள், பசியால் உலர்ந்து.., போன்ற கவிதைகள் சாதி மதங்களை மறுத்து மானுடம் பேசும் கவிதைகளாக இருக்கின்றன.

தன்னை கேள்விக்குள்ளாக்கும் சக்திகளை நசுக்குவதும்,பெரும் வணிகக் குழுமங்களின் போஷாக்கில்,தன்னை வளர்த்து கொள்ளும் முயற்சியில் காலம்,இடம்,சூழல் என அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி,அதன் அடிப்படைப் பண்புக்கேற்ப,ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது ஆத்திகம்.

மேலும்,மதத்தையும்,சாதியத்தையும் தமது வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய அய்யா வைகுந்தர்,நாராயண குரு,மற்றும் உலகறிந்த புரட்சிக்காரனான பகத்சிங் மட்டுமின்றி, “சிவசக்தி,பீம்சக்தி, இந்துசக்தி..” என அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் தலித்துகளுக்கு நடுவே முழக்கங்கள் எழுப்பி, அம்பேத்கரையும் மதச் சட்டகத்திற்குள் அடைக்கப் பார்க்கின்ற காலமாக, நிகழ்காலம் கடந்து கொண்டிருக்கிறது.

அன்றைய பேரரசுகளின் மறுஉருவமாக இன்று இருக்கும் பெருவணிகக் குழுமங்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்தும் வகையில், மதத்தை ஒரு காப்புக் கேடயமாகப் பயன்படுத்தும் முயற்சியே இது என..‘மதம்’ பிடிக்காத சிந்தனையாளர்களும் பொதுமக்களும் அறிவார்கள் என நம்பலாம்.

இந்த நேரத்தில்,தோழர்.வா.நேருவின்,‘சூரியக் கீற்றுகள்’ வெளிப்பட்டு, சாதி, மதங்களின் மென்னியைத் திருகும் கேள்விகளை முன்வைப்பதும் பொருத்தமாக இருக்கிறது. ‘மதம்’பிடித்தவர்கள் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டால்தான் என்ன..? அவர்கள் ஏற்றுக் கொள்ளும்வரை, சொல்லவேண்டியதை சொல்லிக் கொண்டேதான் இருக்கும் இவரது கவிதைகள்.

இதுமட்டுமின்றி,புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்ற கவிதையாக இருக்கும் ‘எழுதுவோம் தினந்தோறும்’ எனும் தலைப்பிலான அவர் கவிதை,

உனது வாசிப்பும்
எனது வாசிப்பும்
ஒரே நேர்கோட்டில் என
அறியும்போது
முகிழ்க்கும் நட்பும்
உதவ நீளும் கரங்களும்
புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல,
மானுடத்தின் வெற்றியாய்..!

உன்னை நானும்
என்னை நீயும்
அறிந்திட
வார்த்தைகளை விட
வலிமையாய்
வாசிக்கும் புத்தகங்களும்
எழுதும் எழுத்துக்களும்
இணைக்கும் பாலமாய்..! –என்று சொல்லியிருப்பது ஒத்த சிந்தனையுடையவர்களுக்கு, உற்சாக டானிக்.

உள்மனதின் ஓசை எனும் தலைப்பில்,அவலங்களைச் சுட்டிக்காட்டி,அதனைக் களைவதற்காக ஏதேனும் செய்வோமா..? என்ற பரிதவிப்பே தனது கவிதையாக முகிழ்க்கிறது என கவிதை பிறக்கும் புள்ளியை சுட்டுகிற கவிஞர்,ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும் என்றும் கவிதைகளின் பொதுவான தகுதிகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

அழகாய் படமெடுத்தாலும் பாம்பு கொட்டப்போவது என்னவோ நஞ்சுதான்.” விளம்பரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறது, அழகாய் படமெடுத்தாலும் கவிதை.!

என்று மாறும் இநத நிலை.?, தேவை அல்ல,மனத்தெளிவே.! என்ற கவிதைகள்,கவிதைச் சிறுகதைகள்.!

புரளிப் பிள்ளையார்..நல்ல நகைச்சுவைக் கவிதை.

இதுமட்டுமின்றி,இன்னும் பல தலைப்புகளில் உள்ள கவிதைகள் அனைத்தும் அரசியல்,சமூகம்,மனிதநேயம், உழைப்பு என தனது பாடுபொருட்களால் நம்மை ரசிக்க வைக்கிறது.

பொதுவாக நமக்கு,கையில் எப்போது,எந்தப் புத்தகம் கிடைத்தாலும் மேலோட்டமாக புரட்டி அங்கொன்றும்,இங்கொன்றுமாகப் படிக்கும்போதே அந்தப்புத்தகம் எதனைப் பற்றிப் பேசுகிறது என்று தெரிந்துவிடும். சிலநேரம் எப்போதும் படித்துச் சலிக்கின்ற விஷயங்கள்.., என அலுப்பும்,கோபமும்கூட வந்துவிடும்.எதைப்பற்றியும் கவலைப்படாத சில ஜந்துக்கள்,எப்போதும் எழுதுகின்ற சில சுயநலத் தன்னுணர்வுக் கவிதைகள் வந்துகொண்டே இருந்தாலும்,தோழர் வா.நேருவின் கவிதைத் தொகுப்பை அவ்வாறு கடந்துவிட முடியாது. காரணம்..,தோழர் நேருவின் கவிதைகள்கள்தான்,எனக்கு முதல் முகவரி.அதற்குப் பிறகுதான் அவரோடான நட்பு.

எப்போது வாசித்தாலும் அந்தக் காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்,தோழர்.நேருவின் கவிதைகளை காலவெள்ளம் எந்நாளும் கரைக்க முடியாது.மாறாக,அவை விதைக்கும் சிந்தனைகளில் இருந்து புதிய விதைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கும்.!..இன்னும்,இன்னும் சிறப்பாய் சொல்ல,இத்தொகுப்பில் நிறையக் கவிதைகள் இருக்கின்றதே என்ற தவிப்புடனும்,அன்புடனும்.., பொள்ளாச்சி அபி

தகவலுக்காக..,
புத்தகத்தின் விலை.ரூ 70.
மானமிகு பதிப்பகம்
3ஃ20.ஏ-ஆதிபராசக்தி நகர்,
திருப்பாலை-மதுரை-625014
தொடர்புக்கு- 94433 62300
நன்றி : எழுத்து. காம்

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நூல் அறிமுகம் அருமை
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
நன்றி

Unknown said...

ஏசுநாதரும்,முகமது நபியும்,சீனாவின் கன்பூசியசும் கடவுள் ஒருவரே என்று பிரச்சாரம் செய்வதற்கு முன்பே உலகில் கடவுளே இல்லை என்று கூறிய கௌதமனையும்,வர்த்தமானனையும் கடவுளாக்கியவர்களின் நோக்கம் சுக்கு நூறாய் உடையும் தோழா! உன்னை நானும் என்னை நீயும் அறிந்திட..............இணைக்கும் பாலமாய்_ மகிழ்வுடன் சௌந்தர்.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே, வாசிப்பிற்கும் கருத்திற்கும்.

முனைவர். வா.நேரு said...

சுக்கு நூறாய் உடையும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடக்கும். மிக்க நன்றி தொடர் வாசிப்பிற்கும் , கருத்துக்களுக்கும்.