Sunday 22 February 2015

நிகழ்வும் நினைப்பும் (34) : நீயா நானா ? 22.02.2015 நிகழ்ச்சி -விஜய் டி.விக்கும் , திரு. கோபிநாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள் :

நிகழ்வும் நினைப்பும் (34) :   நீயா நானா ? 22.02.2015 நிகழ்ச்சி -விஜய் டி.விக்கும் , திரு. கோபிநாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள் :

                     நீயா நானா நிகழ்ச்சியை 'திருக்குறள் பற்றித்தெரியுமா உங்களுக்கு ? ' என்னும் தலைப்பில் நடத்திய விதம் அருமை. திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய்ச்  சேர்த்தது திராவிட இயக்கங்கள்தான் என்பதனை மிக அழுத்தம் திருத்தமாக முன்னுரையில் திரு கோபிநாத் கூறினார்.நன்றி கோபிநாத் அவர்களே நன்றி, உண்மையை உரக்கச்சொன்னதற்கு . அன்று முதல் இன்று வரை தந்தை பெரியார் முதல் இன்று வாழும் டாக்டர் கலைஞர், ஆசிரியர் அய்யா  கி.வீரமணி அவர்கள்  வரை அவர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த இலக்கியமாக திருக்குறள்தான் இருக்கிறது.திருக்குறளை விரும்பாத திராவிடர் இயக்கத்தவர் எவரும் கிடையாது.அழகியல், கருத்தியல், இன்றைய தேவை எனப் பல வினாக்களோடு மாணவர்கள், ஆசிரியர்கள் , பல துறை சார்ந்தவர்கள் எனத் திருக்குறளை விரும்புகிறவர்களை எல்லாம் ஓரிடத்தில் அமரவைத்து , அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்த தன்மை மிக நன்றாக இருந்தது.

  உங்களுக்குப் பிடித்த திருக்குறள் உவமை என்ன என்னும் வினாவிற்கு  பங்கு பெற்ற ஒவ்வொருவரும் மிகவும்  நுட்பமாக  பதிவு செய்தனர்.  "நீட்டலும் மழித்தலும் வேண்டா" என்னும் உவமையை ஒருவர் அழகாகச்சொன்னார். பசியின் கொடுமை பற்றிச்சொல்லும் குறளை ஒரு தோழியர் கூறினார். திருவள்ளுவர் காலம்  முதல் இன்றுவரை பசிதான் பிரச்சனை என்பதனை "நெருப்பில் தூங்கினால் கூடத்தூங்க முடியும், பசியினால் தூங்க முடியாது." என்பதையும் "நேற்று வந்த பசி ,இன்று வந்து விடுமோ " என்று பயப்படுதலையும் குறிப்பிட்டார். ஒரு உவமைப் படுத்தப்படுகிற உவமை. எனச் சுட்டியது  அருமை ."இளைதாக முள்மரம் கொல்க..",அம்பு நேராக செம்மையாக இருக்கிறது. யாழ் பார்க்க அழகானது .அம்பு கொல்லும், யாழ் இனிமை கொடுக்கும் , அழகாக இருக்கிறது கெடுதல் செய்யலாம், தாறுமாறாக இருப்பது நல்லது செய்யலாம் " என்பது போன்ற கருத்துக்கள் வந்தன.

                 காமத்துப்பாலைப் பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை கூறினர். அதுவும் இளம்பெண் ஒருவர்(கயல்)  ஊடல் பற்றியும் கூடல் பற்றியும் சொல்லும் கடைசித்திருக்குறளை மிக நன்றாக கூறினார். நான் சைட் அடிக்கும்போது உணர்ந்தது என்று ஒருவர் " யான் நோக்குங்கால் " என்னும் குறளைக் கூறினார். காமத்துப்பாலில் உள்ள "ஒரு கண் நோய், மற்றொன்று நோய் தீர்க்கும் மருந்து." என்பதை ஒருவர் நாணத்தோடு குறிப்பிட்டார். திருக்குறளில் திருவள்ளுவர் காமத்துப்பால் எழுதும்போது பெண்ணாகிவிடுகின்றார்.மிகவும் உளவியல் சார்ந்து எழுதியுள்ளார் என்றார் ஒருவர்.
         உங்கள் வாழ்க்கையில் மிகவும் கவர்ந்த குறள் அல்லது நீங்கள் கடைப்பிடிக்கும் ஒரு குறள் என்ற வினாவும் அதற்கான விடையும் மிகவும் ஈர்ப்பாக இருந்தது. "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்" என்னும் குறளை குறிப்பிட்டு இன்றைய ஆளுமைத்திறன் வகுப்புகளில் எடுக்கப்படும் - மன வலிமை பற்றிக் குறிப்பிட்டார். ' இடிப்பாரை இல்லா ..." " சொலல் வல்லன் சோர்விலான்" , 'உவப்பத்தலைக் கூடி உளப்பிரிதல்' ' பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ' போன்ற குறள்களின் விளக்கங்களைச்சொன்னார்கள்.

               அறம் பற்றிய விளக்கம் ஒவ்வொருவரும் சொன்னார்கள் . கன்பூசியஸ் கருத்தோடு ஒப்பிட்டு ஒருவர் சொன்ன " ஈன்றா: பசி காண்பாள் ஆயினும் " விளக்கம் அருமை. நட்பு பற்றிய விளக்கம் , 50 குறள்கள் நட்பிற்கு என்னும் விளக்கம் போன்றவையும் உரையாடல்களில் வந்தது. ஒரு இளைஞர் " அழுக்காறு  அவா வெகுளி இன்னாச்சொல் நான் கும்
இழுக்கா இயன்றது அறம் : என்பதற்கு விளக்கம் தந்தார்.  டால்ஸ்டாய் கடிதம் மூலம் காந்தியடிகள் திருக்குறளின் பெருமையை அறிந்ததை,-தமிழைப்படிக்க விரும்புகிறேன் என்று காந்தியடிகள் சொன்னது ஏனென்றால் திருக்குறளை மூலமொழியில் படிக்க விரும்புகின்றேன். திருக்குறளின் அறம் என்பது ரிலேட்டிவ் சிந்தனை , திருக்குறளின் ஒட்டுமொத்த சிந்தனையே  ரிலேட்டிவ் என்று
சொன்னவிதம் அருமையாக இருந்தது.  

                     திருக்குறள் கூறும் அரசியல் பற்றிச்செய்திகள், தந்தை பெரியாருக்குப் பிடித்த குறளான "குடி செய்வார்க்கு இல்லை பருவம்" என்னும் குறளின் விளக்கம் .  பெண் என்று வரும்போது -பாலியல் சமம் என்று வரும்போது  சில குறளின் கருத்தினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்னும் பெண்ணிய எழுத்தாளரின் கருத்து வந்தது.

                 இன்றைய சூழலில் திருக்குறளின் தேவை, பொருட்பாலில் பிடித்த குறள் பற்றிய பகிர்தல். திருக்குறள் என்பது ஒரு நிராயுத பாணியின் ஆயுதம் என்றார்  மோகன் . ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தில் இருக்கிறது என்று எல்லோரும் சொல்ல, " வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்பதனைச்சொல்லி உள்ளத்தனையது உயர்வு,கேட்டலின் சிறப்பு

                " 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒளி. பெருமித உணர்ச்சி. " என்றார் ஒருவர்.மனதிலும் ,மூளையிலும் குண்டு வெடிப்பதைப்போல வெடிக்கக்கூடியது திருக்குறள். தன்னைச்சுற்றி இருக்கும் பல சங்கிலிகளில் இருந்து வெளியே வருவான் என்றார் ஒருவர். எந்த மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியில் படிப்பவரை திருக்குறள் மாற்றும் என்றார். திருக்குறள் ஆய்வு இருக்கைகள் பற்றிய செய்தி. குறளுக்கு அபிநயம் பிடித்தார் ஒருவர். புதுமையாக இருந்தது. .  திருக்குறள் எண்ணைச்சொன்னவுடன் , திருக்குறளை அழகாகச்சொன்னார் எல்லப்பன். வாழ்த்துக்கள்
                     மிக நல்ல நிகழ்ச்சி. ஊடகங்கள் இப்படியெல்லாம் பயணிக்குமா ? இப்படியெல்லாம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நெகிழ வைத்த நிகழ்ச்சி. உளமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் திரு.கோபிநாத் அவர்களுக்கும் , விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் ,மிக ஈடுபாட்டோடு கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும். 

5 comments:

தமிழன்பு said...

நானும் பார்த்தேன் அருமையான நிகழ்ச்சி இங்கு நிறைய பேர் ஹிந்தி என்று சொல்லிக் கொண்டு தெரிகின்றனர்.அப்படி 11,12 வது ஹிந்தி மட்டுமே படித்து வந்த ஒருவரால் கூட திருக்குறளினால் தமிழ் மேல் ஆர்வம் செலுத்த முடிகிறது என்றால் தமிழ் எவ்வளவு சிறந்த மொழி திருக்குறள் நமக்குக் கிடைத்த எவ்வளவு பெரிய சொத்து.

முனைவர். வா.நேரு said...

கருத்திற்கு நன்றி. 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிப்பதைவிட சில திருக்குறளின் அடிப்படையில் வாழ முயற்சித்தால் போதும். வாழ்க்கை வளமாகி விடும்.

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டுவோம்

Unknown said...

very nice program.Article is so nice covering important points.

முனைவர். வா.நேரு said...

நல்லவற்றை கட்டாயம் பாராட்ட வேண்டும். அப்போதுதான் நல்லவை தொடரும். நன்றி அய்யா , வருகைக்கும் ,கருத்திற்கும்.