Monday 23 February 2015

நிகழ்வும் நினைப்பும் (35) : வாசிப்போர் களத்தின் சிறப்புக் கூட்டம்

மு.சங்கையா 
நிகழ்வும் நினைப்பும் (35) : வாசிப்போர் களத்தின் சிறப்புக் கூட்டம்

சுப.முருகானந்தம்
வி.பாலகுமார்
 கவிஞர் க.சமயவேல் 

 க.தெய்வேந்திரன்
சு.கருப்பையா 





                              மதுரை பி.எஸ்.என்.எல். வாசிப்போர் களத்தின் சிறப்புக்கூட்டம் 21.02.2015 மாலை 6 மணியளவில் மதுரை அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஸ்டார் ரெசிடன்சியில் ரிஷ்வாந்த் ஹாலில் நடைபெற்றது. தோழர்கள் மு.சங்கையா. சு.கருப்பையா, வி.பாலகுமார் என்று பலரின் முயற்சியால் நடைபெற்ற சிறப்புக்கூட்டம் என்றாலும் , முழு முயற்சியாக இதற்கு பல வேலைகளைச்செய்து  நடத்தியே தீருவது என்று செயல்பட்டவர் திரு க.தெய்வேந்திரன்(SDE )  அவர்கள். SNEA தொழிற்சங்கத்தின் மாவட்டச்செயலாளர் அவர், திரு. க.தெய்வேந்திரன் மிகச்சிறந்த பேச்சாளர் என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அதனைவிட மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர் (Organiser) அவர். மனிதர்களுக்கிடையே உள்ள வேற்றுமையை ஒதுக்கித்தள்ளிவிட்டு, மிகவும் நேர்மறையாக அணுகக்கூடியவராக அவரை நான் உணர்கின்றேன்.எப்போதும் சிரித்த முகமும், உதவ நீளும் கரங்களும்  , மனிதர்களை இணைக்கும் மனமும் உடையவராக இருக்கும் க.தெய்வேந்திரன் வாசிப்போர் களத்தின் மூலமாக கிடைத்த மிகப்பெரிய நட்பு  எனக்கு.அதனைப்போலவே திரு.வி.பாலகுமார் அவர்களும். அண்ணன் சு.கருப்பையா அவர்களை 30 ஆண்டுகளாக அறிவேன், அதனைப்போலவே தோழர் மு.சங்கையா அவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானவர்.   எனக்கு(வா. நேரு ) 'சூரியக்கீற்றுகள்' கவிதை தொகுப்பிற்காக பாராட்டையும், கவிஞர் க.சமயவேல் அவர்களுக்கு அவருடைய ' பறவைகள் நிரம்பிய முன்னிரவு ' என்னும் கவிதைத்தொகுப்பிற்காகவும் நடந்த பாராட்டு விழா என்றாலும் பலரும் தங்கள் இணையரோடு வந்து கலந்து கொள்ள ,  சிறப்புக்கூட்டம் ஒரு குடும்பவிழாவாகவும் அமைந்தது மகிழ்ச்சி.



               விழாவில் சிறப்பு உரையை கவிஞர்  சுப.முருகானந்தம் உரையாற்றினார். இயல்பாகவும், எதார்த்தமாகவும் , நூல்களில் உள்ள கவிதைகளை எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்தார். ஆக்கபூர்வமான விமர்சனமாகவும், பாராட்டாகவும், குறைகளை சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்தது அவரின் உரை. எழுத்தாளர் இந்திரஜித் கவிஞர் க.சமயவேல் பற்றி மிக நன்றாக குறிப்பிட்டார். "சமயவேல் பி.எஸ்.என்.எல் துறையில் வேலை பார்த்தாலும், இன்றைய தமிழ் நவீன எழுத்தாளர்கள் அனைவருக்கும் மிக நெருக்கமானவர். இன்று கவிதை எழுதும் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்பவர். ஆனால் கவிஞர்கள் பெரும்பாலும் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. கவிஞர் சமயவேலின் கவிதைகள் குறியீடாகவும், படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் குறியீடாக பல கருத்துக்களை வெளிப்படுத்த வல்லவை" என்று குறிப்பிட்டார். தலைமை தாங்கிய தோழர் சங்கையா , சுருக்கமான உரை என்றாலும் எழுத்தாளர்கள் மூன்று வகையாக இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு நறுக்குத் தெறித்தாற்போல் கருத்துக்களை முன்வைத்தார். வாசிப்போர் களத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.கருப்பையா அனைவரையும் வரவேற்று "வாசிப்போர் களத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக ஆகலாம், தாங்கல் வாசிக்கும் புத்தகத்தை அறிமுகம் செய்யலாம். வாசிப்போர் களத்தில் மத அடிப்படைவாதிகளுக்கும், சாதி அமைப்புக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், சாதிப் பெருமை கொள்பவர்கள் இடமில்லை" என்று கூறி தனது கருத்துக்களை முன்வைத்தார். கவிஞர் பாலகுமார் தனக்கே உரித்தான ஆளுமையோடு ஒருங்கிணைப்பு உரை கொடுத்தார். நன்றியுரையை தோழர் தெய்வேந்திரன் தனக்கே உரித்தான சிறப்புத்தன்மையோடு கொடுத்தார். படைப்பாளர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக அளித்தார்கள்.  மிக நிறைவான விழாவாக அமைந்தது மகிழ்ச்சி.

                             நன்றி தோழர்களே, நன்றி. பாராட்டப்படுவதை எப்போதும் நமது மனம் விரும்புகிறது. இந்தப்பாராட்டு என்பது செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. இன்னும் எழுது , எழுது என்று ஊக்கப்படுத்துகின்றீர்கள், நன்றி என்று ஏற்புரையில் குறிப்பிட்டேன். உண்மைதான். படைப்புக்கள் மூலமாகத்தான் தீர்க்கவேண்டும் கடனை.  பாலகுமார் தென்திசை(http://www.thendhisai.blogspot.in/) என்னும் வலைத்தளத்தில் தொடர்ந்து கவிதைகளை, சிறுகதைகளை, கட்டுரைகளை எழுதி வருகின்றார். அவரின் படைப்புக்கள் நூலாக்கப் படவேண்டும் என்னும் விருப்பத்தை தெரிவித்தேன்.. வாசிப்போர் களத்தில்(http://vasipporkalam.blogspot.in/) உறுப்பினராக உள்ள ஆண்டியப்பன், அண்ணன் செளந்தர், தோழர் சுந்தரராஜன் எனப்பலரும் தங்கள் அனுபவங்களைப் படைப்புக்களாக்க வேண்டும். வாசித்தல் மேன்மையானது. வாசித்ததை பகிர்ந்து கொள்ளுதல் அதனைவிட மேன்மையானது.


4 comments:

Unknown said...

thanks brother

முனைவர். வா.நேரு said...

நன்றி பிரதர். இணைந்து பயணிப்போம் ....

முனைவர். வா.நேரு said...

கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள் : வாசிப்போர் களம் தளத்தில்:

பெரும்பாலும் பொழுதுபோக்காகிவிட்ட வலையுலகில், வாழ்வின் பழுதுநீக்கும் பயன்படத்தக்க வலையை நடத்திவரும் நண்பர்களுக்கு வணக்கமும், நன்றியும். அறிமுகப்படுத்திய தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கும் என் நன்றி. இனித் தொடர்வேன். வணக்கம்.

முனைவர். வா.நேரு said...

நன்றி கவிஞர் நா.முத்து நிலவன் அவர்களே, வருகைக்கும் கருத்திற்கும் வணக்கங்கள்.