Thursday 10 March 2016

தென்னிந்தியா விலேயே முதல் பிஎச்டி முடித்த பார் வையற்ற பேராசிரியர்......

சிறப்பாக வாழமுடியும் என்று வாழ்வில் பிடிமானத்தைக் கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்
பார்வையிழந்த கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ராதாபாய்


புதுக்கோட்டை மார்ச் 8-_ புதுக்கோட்டை பகுதியில் அனைவராலும் அறியப்பட்ட, கேள்விப்பட்ட பெயர் ராதாபாய். அவர் பணியாற்றும் புதுக்கோட்டை கேகேசி என்று சொல்லப்படும் கலைஞர் கருணா நிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அம்மா என்று பேராசிரியர் ராதாபாய் அவர்களைத்தான் அன்போடு அனை வரும் அழைக்கிறார்கள்.  தென்னிந்தியா விலேயே முதல் பிஎச்டி முடித்த பார் வையற்ற பேராசிரியர் என்பது அவருக் கான சிறப்பு.
55 வயதாகும் இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி யில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். சிறுவயது முதல் நடந் ததை அவரே விவரிக்கிறார்... நான் பிறந் தது தேனிமாவட்டம் உசிலம்பட்டி. அப்பா கிருஷ்ணமூர்த்தி. அம்மா முத்து லெட்சுமி. என் பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தேன். நான்கு வயதுவரை நன்றாகத்தான் இருந்தேன்.
நான்கு வயதில் பார்வைக்குறைபாடு வந்ததை உணர்ந்தேன். எனக்கு வந்திருந் தது ரெட்டினைட்டீஸ் பிக்மண்டோஸா எனும் நோய். இது லட்சத்தில் ஒருத் தருக்குத்தான் வரும். அது எனக்கு வந்து விட்டது. என் தந்தையிடம் சொன்ன போது, அவரும் உணர்ந்து கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொன்ன தோடு அவர் தமிழாசிரியராகப் பணி புரிந்த பள்ளிக்கு என்னையும் கூடவே அழைத்துச் சென்றார். அவர் கொடுத்த ஊக்கத்தில் எந்த வயதில் எதைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ அவற்றை அந் தந்த வயதில் கற்றுக் கொள்ளத் துவங் கினேன். எனக்குள் நானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். அவர் மற்ற மாணவ, மாணவியருக்குக் கற்றுக் கொடுத் ததை அப்படியே செவியில் பெற்று கவனத்தில் உள்வாங்கிக் கொண்டேன். மற்ற குழந்தைகளுக்கு இணையாக நானும் கற்றுக் கொண்டேன். இப்படி யாக மூன்றாம் வகுப்புவரை அரசுப் பொதுப் பள்ளியில் படித்தேன்
அதன்பிறகு சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி யில் சேர்க்கப்பட்டேன். அதுவரை மிக வும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, நம் வாழ்க்கை முடிந்து போகவில்லை; நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கு என்கிற நம்பிக்கை கிடைத்தது. என் னைப்போலவே இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டு கூடுதல் பலம் பெற்றேன்.
பிரெய்லி புத்தகங்கள் டெய்லர் பிரேம் என்று சொல்லப்படும் கணக்கு சிலேட்டு எல்லாம் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தது. ஆர்வமாகவும் ஆவேசமாகவும் கற்றுக்கொண்டேன். அங்கு எஸ்எஸ்எல்சிவரை படித்து 600_-க்கு 427- மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்வு பெற்று வெளியில் வந்தேன். அப்போது 1977 ஆம் ஆண்டு.

அதன்பிறகு பார்வையற்றோருக்கான கல்விக்கூடங்கள் கிடையாது என்பதால் ஏதாவது சிறு தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று நினைத்தேன். கார ணம்,  அந்த நேரத்தில் அப்பா பணி நிறைவு பெற்று விட்டார். அண்ணன்கள் வேலை செய்யும் நிலையில் இல்லை. அக் காள்கள் ஆசிரியர் பயிற்சிக்குப் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வேலை தேடியபோது திருச்சியில் விழியிழந்த மகளிர் மறுவாழ்வு இல்லம் இருப்பது அறிந்து அங்கு சென்றேன். டாக்டர் ஜோசப் மகள் பிரியா தியோடர் என் பவர்தான் நடத்திக் கொண்டிருந்தார்.
விழியிழந்த மகளிருக்கு கவர் மேக்கிங் டைலரிங் மாதிரி நிறையப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருருந்தார்கள். பிரியா அம்மாவை நான்போய்ப் பார்த் தேன். அதுதான் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிரியா அம்மா என்னிடம் இவ்வளவு படித்து விட்டு மேலே கற்றுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரிக்கு அழைத்துச் சென்ற போது அங்கு என்னைச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.
எனக்காக பிரின்ஸிபலிடம் சிரமப் பட்டுப் பேசி சீட் வாங்கிக் கொடுத்தார் கள். நார்மல் பிள்ளைகள் படிக்கும் கல் லூரியில் பார்வையிழந்த பெண் படிக்க முடியாது என்பதால் அவர்கள் மறுத்தி ருக்கிறார்கள். ஒரு வழியாகச் சேர்ந்து படிக்கத் துவங்கினேன்.
வகுப்பறையில் நடத்தும் பாடத்தை பிரெய்லிமுறையில் குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். அப்போது அன்னம் நாரா யணன் என்பவர் ரீடர்ஸ் அசோசியேசன் பாரத பிளையண்ட் என்ற அமைப்பு ஒன்றை நடத்தினார்கள். அவங்ககிட்டே பாடப்புத்தகங்களைக் கொடுத்தா கேசட் டில் பதிவு செய்து கொடுப்பார்கள். அது வும் நிறையப் பயனுள்ளதாக இருந்தது. சில நேரங்களில் விடுதி மாணவியர் படித்துக் காட்டும்போது குறிப்பெடுத்துக் கொள்வேன். அப்போது பியுசி படித்த 104 -பேரில் நான்தான் முதல் மதிப்பெண் பெற்றேன்.
மேலும் படிக்க விரும்பினேன். எந்த பிரின்ஸ்பல் சீட் தர மறுத்தாரோ அவரே மேற்படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி வேறு சிலரிட மிருந்தும் உதவிகள் பெற்றுத் தந்தார். பி.ஏ. முதல் மாணவியாகக் கற்றுத் தேர்ந்தேன். எம்.ஏ.வில் பல்கலைக் கழக அளவில் இரண்டாமிடம் பெற்றேன்.
படிப்பின் மீது இருந்த தாகம் அடங்கவே இல்லை. பொருளாதாரப் பிரச்சினை வந்ததால் பிரியா மேடம் அவர்கள் கவுன்சிலர் என்றொரு பணியிடத்தை உருவாக்கி சம்பளமும் கொடுத் தார்கள். அப்போது பாரதிதாசன் பல் கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த மணிசுந்தரம் அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு அழைத்துப் பாராட்டி னார்கள். அவரிடம் பி.எச்டி படிக்க விரும்புவதைச் சொன்னவுடன் நேரடி யாக பிஎச்டி படிக்க சிறப்பு அனுமதியும் கொடுத்தார்கள்.
அப்போது திருச்சி ஈவெரா பெரியார் கல்லூரி பேராசிரியர் அப்துல்ரஹீம் எனக்கு வழிகாட்டியாக வந்தார். என்னைப் போலவே பார்வையில்லாதவர்களைப் பற்றியே ஆய்வு செய்யத் துவங்கினேன்.
இந்தியாவில் பார்வையற்றோர் மறு வாழ்வுப் பணிகளைப் பற்றிய வரலாறு எனும் தலைப்பை எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் அலைந்தேன். பார் வையிழந்தோர் அமைப்புகளுக்குப் போய் செய்திகள் சேகரித்தேன். சாருபாலா என்கிற பெண் உதவியாளராக வந்தார். எட்வர்டு ஜோனர்த்தன் என்ற சமூக ஆர்வலர் அனைத்துப் பயணங்களிலும் கூடவே வந்து உதவிகள் செய்தார்.
டெராடூன் சென்றேன். அங்குதான் 1888- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே பார்வையிழந்தோருக்கான முதல் தொடக் கப் பள்ளியிருந்தது. அது தேசிய பார் வையற்றோர் நிறுவனமாக இருக்கிறது. இரண்டாவது பள்ளி பாளையங்கோட் டையில் 1890- ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டது. மும்பையில் லூயி பிரை மெமோரியல் ஆய்வு மய்யம் அமைக்கப் பட்டுள்ளது. இப்படி அனைத்து இடங் களுக்கும் சென்று ஆய்வுகள் செய்தேன்.
அப்போது புத்தகங்கள் எடுத்து கொண்டு வந்து படிக்கச் சொல்லிக் கேட்டு பிரெய்லி முறையில் எழுதி வைத் துக் கொண்டு மனதில் பதிவு செய்து டைப்ரைட்டரில் நானே டைப் செய்து ஆய்வை சமர்ப்பித்தேன். இரண்டு ஆண் டுகள் தீவிரமான ஆய்வு செய்தபிறகுதான் எனக்கு பிஎச்.டி கொடுத்தார்கள்.
எனக்கு முன்னால் மத்தியப்பிரதேசத் தில் உஷா பாலேராவ் என்னும் பெண் 1975-ஆம் ஆண்டு பிஎச்.டி முடித்திருக் கிறார்கள். தென்னிந்தியாவில் பார்வையிழந்த முதல் பிஎச்டி பட்டம் பெற்ற பெண் என்று என்னை அறிவித்தார்கள். படிப்பு முடிந்தபிறகு கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் பணி கிடைத்தது. 1994-ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் சிறப்பு அரசாணையின் மூலம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பணியமர்த்தப்பட் டேன். 2008 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறைத்தலைவராக ஆனேன். இன்று வரை பணிபுரிந்து வருகிறேன்.
இந்தக் கல்லூரிக்கு வரும் மாணவிகள் கிராமப்புறத்தில் இருந்து வருகிறார்கள். அவர்கள் கற்றுக் கொள்ள வருகிறார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். எனக்கு இது தான் தெரியும் என்று இருந்துவிடக் கூடாது. அதனால் நிறைய ஆடியோ புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். பிரெய்லி முறையிலும் நிறையச் சேக ரித்து வைத்துப் படித்து விட்டுத்தான் வகுப்பறைக்குள் நுழைகிறேன். மாணவி களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே இப்பொழுதும் படித்து வருகிறேன் என்றார்.
அதற்காகவே அவரது கம்ப்யூட்டரில் என்.வி.டி.ஏ. என்ற சாப்ட் வேர் பதிவு செய்து வைத்துக் கொண்டு இணைய தளத்தில்கூட மாணவியருக்காகத் தேடிக் கொண்டு வந்து பிரிண்ட் எடுத்து வழங் குகிறார். தினமும் தேடல்கள் தொடர் கின்றன.
பார்வையில்லாமல் இருப்பது பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது...
மற்றவர்கள் என்ன கற்றுக் கொள் கிறார்களோ அதைத்தான் நானும் கற்றுக்கொண்டு செய்கிறேன். இதில் வியப்புக்கு ஒன்றுமில்லை. தந்தை பெரியார் என்று சொல்லும்போது அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும் புரிந்து கொள்கிறார்கள். அவர் பெண்களுக்குச் செய்ததைப் போல் இது வரை யாரும் செய்ததில்லை. அவர் பெண் களின் நம்பிக்கை நட்சத்திரம். தந்தை பெரியாரைப் பற்றி அறிந்ததால்தான் நான் இந்தளவிற்கு உயர முடிந்தது.
நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தையார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உன்னால் முடியாதது யாராலும் முடி யாது. யாராலும் முடியாதது உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொடுத்து வளர்த்தார் என்றால் அதற்கு மேலும் இன்றளவும் நம்பிக்கையோடு வாழ்வதற் குக் காரணம் தந்தை பெரியார்தான். ஆம். இவ்வளவு செய்ததாகச் சொல்லிக் கொள்ளும் எனக்கு திருமண வாழ்வும் வந்தது. அவ்வாறு வாழ்க்கைத்துணையாக வந்தவருடன் எனக்கு கருத்து வேறுபாடு வந்து விட்டது. எங்களது வாழ்வில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெயர் பிரபாவர்சினி. இப்போது எட்டாம் வகுப்புபடித்துக் கொண்டிருக்கிறாள்.
திருமண வாழ்வில் வெறுப்பு வந்த போது கணவர் என்னைவிட்டுப் பிரிந்து விட்டார். அதனால் முறையாக நீதி மன்றத்தை அணுகி வழக்குத் தொடர்ந்து விவாகரத்து பெற்று விட்டேன். நானும் மகளும் வாழ்ந்து வருகிறோம். எந்த ஒரு பெண்ணுக்கும் திருமணப் பிரிவு என்ப தும் கணவரைப் பிரிந்து வாழ்வது என்பதும் மிகப் பெரிய இழப்பாகக் கருதப் படும். இது போன்ற பிரச்சினைகள் வந்தபோது எத்தனையோ பெண்கள் வாழ்வின் இறுதி எல்லைவரை சென்றி ருக்கிறார்கள். ஆனாலும் சிறப்பாக வாழ முடியும் என்று வாழ்வில் பிடிமானத்தைக் கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். பலரும் அது இல்லாமல் வாழ முடியாது இது இல்லாமல் வாழ முடி யாது என்று சொல்வார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் இல்லாத ஓர் உலகத்தை எண்ணிப் பார்ப்பது கடினம். அவர் இல்லையென்றால் நானே இந்தளவிற்கு உயர்ந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
இப்போதும் என்னைப் பார்க்கும் போது நிறையப் பெண்களுக்கு நம்பிக்கை வருவதாகச் சொல்கிறார்கள். பெண் களின் முன்னேற்றம்தான் எனது லட் சியமும் கனவும். வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைப்பேன். பணி நிறைவுக் குப் பின் நிறைய புத்தகங்கள் எழுத எண்ணியிருக்கிறேன். இப்போது என் னைப்போலவே நிறையப் படிக்க வேண் டும் என்று திண்டுக்கல்லில் இருந்து ஒரு பெண் வந்து இங்கேயே தங்கிப் படித்து வருகிறார். என் குடும்ப உறுப்பினராகவே இருக்கிறார். எங்களைப்போன்றவர்க ளுக்கு உதவி செய்வது தந்தை பெரியாரின் அறிவுரைகளும் அறிவியல் வளர்ச்சியும் தான் என்றார்.
இவர் பார்வையிழந்தோருக்காக வள் ளுவன் பார்வை என்ற இணைய தளத் தையும் நடத்தி வருகிறார். இவரைப் போல் உள்ளவர்கள் இணைப்பில் இருந்துகொண்டு நிறைய எழுதுகிறார் கள். தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
விடுதலை என்றவுடன் தனது ஆர் வத்தையும் வெளியிட்டார். அதாவது பிரெய்லி முறையில் விடுதலை நாளிதழ் கிடைத்தால் எங்களைப் போன்றவர் களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வரும் காலத்தில் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- --ம.மு.கண்ணன்.
மகளிர் நாள் 8.3.2016 
நன்றி : விடுதலை 08.03.2016

2 comments:

Geetha said...

பெருமையாக உள்ளது அய்யா..நான் அவர்களை ஒருமுறை சந்தித்துள்ளேன்...அனைவரும் படிக்க வேண்டிய பாடம் அவரது வாழ்க்கை.நன்றி அய்யா.

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அம்மா, வருகைக்கும் கருத்திற்கும். நம்மைச்சுற்றிலும் நிறையச்சாதனையாளர்கள், முன்னோடிகள் இருக்கின்றார்கள். அவர்களைப் பெருமைப்படுத்துவதன் மூலம் நாம் உவகை கொள்வோம்.