Friday 11 March 2016

உரிமைக் கோரிக்கை நாள்

அந்த மதம்
இந்த  மதம்
எல்லா மதங்களும்
ஆண்களால்
ஆண்களுக்காக
சொல்லப்பட்டவை .....

அப்படி வழிபடு
இப்படி வழிபடு
எல்லா வழிபாடுகளும்
பெண்களை
அடிமைப்படுத்த
ஆண்களால்
எழுதப்பட்டவை...

அந்தச் சட்டம்
இந்தச் சட்டம்
கடவுள் பெயரால்
காட்டப்படும்
எல்லாச்சட்டங்களும்
பெண்களை
வீட்டிற்குள் பூட்டிவைக்க
இயற்றப்பட்டவை.....

உங்களை ஒன்றுதிரட்ட
ஆண்களுக்கு
ஆன்மிகம் மிக
எளிய கருவியாய் இருக்கிறது ....


அது ஆதி பராசக்தியோ
வாழும் கலையோ
அல்லலோயாவோ
எதுவாயினும்
ஆன்மிகத்தின் பேரால்
பெண்களை
அணி திரட்டுவது
எளிதாக இருக்கிறது ஆண்களுக்கு....


இரும்புக்கூடு அது
எனத் தெரியாமலேயே
மாட்டிக்கொள்ளும்
கிளிகள் போல
ஆன்மிகக்கூட்டுக்குள்
உங்களை அடைத்துவைத்தல்
மிக எளிதாக இருக்கிறது
ஆண்களுக்கு .....

அக்கா ..அக்கா எனும்
கிளிகள் போல
புரிந்த மொழியோ
புரியாத மொழியோ
ஆன்மிகத் தலங்களில்
சொல்லப்படுவதை
திரும்பத் திரும்ப
சொல்வது
எளிதாக இருக்கிறது உனக்கு...

ஆன்மிகம் மறு !
அச்சம் தவிர் !
கேள்விகள் கேட்கப் பழகு
ஆன்மிகம் என்றாலும்
ஏன் எந்த இசம் என்றாலும்
கேள்விகள் கேட்கப்பழகு...


எங்களுக்கு மட்டும் ஏன்
இத்தனை கட்டுப்பாடு ?
எங்களுக்கு மட்டும் ஏன்
இத்தனை விதிமுறைகள்?
விதிமுறை மீறல்களுக்கு
ஏன் இவ்வளவு வன்மத்திலான
வன்முறைகள்?
கேள்விகள் கேள்....பெண்ணே..
கேள்விகள் கேள்...
கேளிக்கை நாளல்ல பெண்ணே!
உரிமைக் கோரிக்கை நாள்
மார்ச்  8


No comments: