Tuesday 31 May 2016

எழில் மிகு ஊர்தான்.....

                                            கடந்து போன காலங்கள்(2) .......

"வானரங்கள் கனிகொடுத்து
மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு
வான் கவிகள் கெஞ்சும்"
என இயற்கை அழகைப்பாடும்
குற்றாலக் குறவஞ்சி போல
இயற்கை அழகு பொங்கும்
எழில் மிகு ஊர்தான்
நான் பிறந்த சாப்டூர்

மேற்கே திரும்பி
அண்ணாந்து பார்த்தால்
மேற்கு மலைத்தொடரும்
கிழக்கே முழுமையாய்
ததும்பி நிற்கும்
பெரியகுளம் கண்மாயும்
தென்மேற்கில்
அடர் மரக்காடுகளாய்
நிற்கும் பெரியதோப்பும்
பாளையந்தோப்பும்
வடக்கே விளைந்து நிற்கும்
வயல்காடுகளுமாய்
இளவயதில் நான்
பார்த்த ஊர் எங்கள் ஊர்

பெரியகுளம் கண்மாயை
ஒட்டி இருக்கும்
மாரிமுத்து(மணியார்) கிணற்றில்
தண்ணீர் நிறைந்து
தானாக ஓடும்
சிறுவயதில் நண்பன்
சுந்தரசேகர் சட்டை
உள்ளே விழுந்து விட
காதுக்குள் சிவ் சிவ்வென்று
தண்ணீர் அடைத்த நிலையிலும்
மூச்சடக்கி உள்ளே சென்று
கிணற்றின் அடியில்
கிடந்த சட்டையை
எடுத்து வந்த ஞாபகம் வருகிறது !
சில நாட்களுக்கு முன்னால்
அக்கிணற்றை எட்டிப்பார்த்தால்
ஏதோ புதைகுழிக்குள்
கிடப்பது போல தண்ணீர் தெரிந்தது
ஒரு நாற்பது ஆண்டுகளில்
கிணற்றடி நீர் இவ்வளவு
கீழாக இறங்கியது ஏன் ?
கேள்விகள் மட்டுமே
இருக்கிறது ......
விடைகள் தெரியவில்லை...

                                                      வா.நேரு....01.06.2016




2 comments:

vimal said...

நிலத்தடி நீரை அளவிற்கதிகமாக உறிஞ்சப்பட்டு மனிதன் உபயோகித்தான் விளைவுதான் இனிமேலாவது மழை நீரை சேகரிக்க கற்றுக்கொள்ளவேண்டும் இதை செய்ய தவறினால் வரும் சந்ததி நாவரண்டு சாக நேரிடும் .

முனைவர். வா.நேரு said...



நன்றி , வருகைக்கும் கருத்திற்கும்....