Wednesday 16 November 2016

காது கேட்காதோர் நாள்! (நவம்பர் 16).


இன்று பன்னாட்டு சகிப்புத் தன்மை நாள் - காது கேட்காதோர் நாள்! (நவம்பர் 16).

இந்நாள் உலக காலங்காட்டியில் இத்தலைப்பில் மக்களுக்கு அறி வுறுத்தும் ஒரு முக்கிய நாளாகக் கருதி, கொண்டாடப்பட வேண்டிய நாள் என்பது அதன் தத்துவம் ஆகும்.

வீட்டில், குடும்பத்தில், அமைப்பு களில், இயக்கங்களில், கட்சிகளில், மதங்களில் ஏன் அண்டை மாநிலங் களில், பற்பல நாடுகளிலும்கூட சகிப்புத்தன்மை காணாமற் போனதால் தான் உலக அமைதிக்கு எங்கெங்கும் அச்சுறுத்தல் ஆகும்!

பெரிய மீன், சிறிய மீன்களைப் பிடித்து விழுங்கி, ஏப்பம் விட்டு தனது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுவதுபோல், பாதிக்கப்பட்ட நாடுகள் பலவும் ஆதிக்க நாடு களின் அடாவடித்தனத்தால் அவதி யுறுகின்றன!

சகிப்புத்தன்மை என்பது நாகரி கமும், படிப்பும், அறிவியலும் வள ரும் நிலையில், பெருக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. ஆக்கிரமிப்புச் செயல் கள், அதீதமான சட்டபூர்வமற்ற நட வடிக்கைகள் காரணமாக சகிப்புத் தன்மை அறவே அரிய பொருளாகி விட்டது!

அடுத்த நாடான இலங்கையில் இன்று காலை வந்துள்ள மனிதாபி மானமற்ற, இரக்கமற்ற கொடுமையை அங்குள்ள புத்த பிக்குகளே கையாளு கிறார்கள் என்றொரு செய்தி, பவுத் தத்தை கொச்சைப்படுத்திடும் புத்தர் கொள்கை விரோதச் செயல் - சகிப்புத் தன்மை இன்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

‘‘ஏய் தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன் -You Tamil  Dog, I will kill you, Buddhist monk - tells Tamils Government official in Batticaloa.


(அம்பீத்திலே சுமணா என்பவர் புத்த பிக்குவாம்! இப்படி ‘‘குரைத்தல்’’ இல்லை - முழங்கிய மாபெரும் மனிதர்?)

கவுதமபுத்தரின்அருள்அறம் கூட எப்படி சிதைத்து சின்னா பின்னப்படுத்தப்பட்டது என்பதற்கு இலங்கை நாட்டின், புத்த பிக்குகளே தகுந்த சான்று; மற்ற மதவெறியர்கள், யானைக்குப் பிடித்த மதவெறியை சிறிதாக்கிடும் நிலையில், இன ஒடுக்கு முறையின் முகவர்களாக இவர்கள் உள்ளனர்.

‘புத்தம் சரணம் கச்சாமி’ என்பது அங்கே

‘ரத்தம் சரணம் கொல்லு சாமி’

என்று உளறி தமிழின சொந்தக் குடிமக்களையே அழிக்கும் கொலை காரர்களாக மாறி வருவதைவிட பொருத்தமான உதாரணம் தேவையா?

இங்கே ‘‘இந்தியத் திருநாட்டில்’’ மட்டும் என்ன வாழுகிறது?

மதவெறியினால் பசு மாட்டைப் பாதுகாக்கும் படை என்பவர்களின் வெறி, தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் அடித்தே கொல்லும் அவலம் ஜனநாயக நாட்டில் அரங்கேறிக் கொட்டமடிக்கிறதே!

ஒரே மதத்தில் - ஹிந்து மதத்தில் உள்ளவர்கள் போடும் நாமம் - திருப்பதி வெங்கடாசலபதிக்கு வடகலை நாமம் போட்டு விட்டார் என்று திருப்பதி அர்ச்சகர்மீது, ஜீயர் என்ற மற்றொரு பிரிவு  தலைவர் குற்றம் சுமத்தி வாய்ச் சண்டை, கைச் சண்டையாக திருப்பதியில் சில நாள்களுக்கு முன்பு நடந்ததை ஏடுகளில் காண முடிந்தது.

தனக்குச் சொத்து தரவில்லை என்று சொந்தத் தாய், தகப்பனைக் கொல்லும் சோகச் சம்பவங்கள் அன் றாடச் செய்திகள் ஆகின்றனவே. எவ்வளவு சகிப்புத்தன்மை மறைந்து சுயநலம் படமெடுத்தாடிய கோரமான நிகழ்வு அது!

நண்பர்கள் மத்தியில்கூட ‘ஒருவர் பொறை; இருவர் நட்பு’ அல்லவா?

உலக நாள் என்பது காலண்டரில் அச்சடிக்கவா? இல்லை, நிச்சயமாக!

மக்களின் பண்புநலன்களில் மிகுந்த தலையானதாக வேண்டும் என்பதற்காகத்தானே உலக மக்களுக்கு அறிவுறுத்தும் நாள் - மறக்கலாமா?

அதுபோலவே, உடல் ஊனமுற்ற - பழுதடைந்தோர் - விழி இழந்தோர் - உடல்நலிவுற்று நோயுடன் போராடும் முதுமையாளர்கள் - இவர்களை அருள் கூர்ந்து அவர்கள் மனம் நோகும்படி நடக்காதீர் என்று இடித்துரைக்கவே, காது கேளாதோர் நாள்.

காது கேட்காதவர்கள், சிலர் பிறவியிலேயே என்ற நிலையில், மற்றும் முதுமையாலும், வேறு பல காரணங்களாலும் செவிப் புலன் செயல்தன்மை குறைந்துவிடுவதால், காது கேட்க முடியவில்லை - அவர் களை அரவணைத்துப் பழகுங்கள்!

அவர்களைச் ‘செவிடர்கள்’ என்று கேலி பேசுதலோ, சைகைகளால் அவமானப்படுத்துதலோ கூடாது; குறிப்பாக இளைஞர்கள் இதனைக் கடைப்பிடித்து மனிதநேயமும், பச் சாதாப குணத்தைக்காட்டி, தங்களை நன்கு செதுக்கிக் கொள்வது அவசர அவசியம் ஆகும்; இதே இளைஞர்கள் நாளை முதியவர்களாகி, முதுமையில் வாடும்போது, காது கேட்காத நிலை வரும்; அப்போது மற்றவர்கள் இவர்களைக் கேலியும், கிண்டலும் செய்தால், அவர்கள் உள்ளம் எவ் வளவு நொந்த உள்ளமாகும்; புண்படும் என்பதை அவர்களிடத்தில் உங்களை அமர்த்திக் கொண்டு ஒத்தறிவு (Empathy) டன் யோசியுங்கள்!

தவறான பல செய்திகள் நம் காதில் விழும்போது, நாம் ‘காது கேளாதவர்களாகியிருந்தால்’, எவ்வளவு நன்மை என்று நாமே கூட பற்பல நேரங்களில் சிந்திக்க வேண்டியுள்ளதே!

எனவே, பல நேரங்களில் காது கேளாமை பாதிப்பு; ஆனால், மேற் சொன்ன சந்தர்ப்பங்களில் அதுவே நமக்குக் கிடைத்த அருட்கொடை என்றும் எண்ணவேண்டியுள்ளது!

எனவே, சகிப்புத்தன்மை, அன்பு காட்டி செவித்திறன் குறைந்தோர்களை நீங்கள் அரவணைக்காவிட்டாலும் சரி, குறைந்தபட்சம் கேலியும்,  கிண்டலும் செய்யாமலிருந்தால் அதுவே போதும்!

மனிதத்தை இழந்துவிட்டு ‘மனிதர்களாக’ இருந்தால் அவர்கள் நடைபிணங்களேயாவார்கள்!


திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்- வாழ்வியல் சிந்தனைகள் காலண்டருக்காக அல்ல, வாழ்வுக்காக என்னும் தலைப்பில்

நன்றி : விடுதலை 16.11.16



No comments: