Wednesday 7 November 2018

'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம்......சுப்ரமணியன்.

            'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம்.

முனைவர் வா.நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல் ' வாசித்தேன்.நேருவின் முதல் சிறுகதைத் தொகுதி என்று பார்த்தால் இன்னும் அநேக தொகுதிகள் வெளியிடுமளவு தேறிவிட்டார் என்றே தோன்றுகிறது.நேரு தன்னைச்சுற்றி நடப்பவைகளையும் ,மனிதர்களையுன் நன்கு கவனிக்கிறார் என்று அவர் கதைகளைப் படிக்கும்போது தெரிகிறது.ஒரே துறை என்று மட்டுமல்ல,பொதுவாகவும் அவரின் கதாபாத்திரங்கள் அனைவருமே நாம் சந்தித்த,பழகிய மனிதர்களாய் இருப்பது கதைகளைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாக இருக்கின்றன.கதாசிரியர் கவிஞரூம் கூட என்பதால் இப்படித் தலைப்புக்கள் அமைந்துள்ளன என்று நினைக்கிறேன்.


'சீரு சுமந்த சாதி சனம் ': மொய் செய்யும் பழக்கத்தை புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார்.நமக்குச்செய்ததைத் திரும்பச் செய்யாவிட்டால் கேவலம்.அவமானம்.அதையும் நமக்கு வந்ததைக் காட்டிலும் கூடுதலாகச் செய்வதே கெளரவம் என்பது எழுதப்படாத விதி.அது எப்படி உழைக்கும் வர்க்கத்தை கசக்கிப்பிழிகிறது என்று உணர்வு பூரணமாகப் படைக்கிறார்.

'உயிர் ஈறும் வாளது ': ஒரு கனவுத் தொழிற்சங்கத் தலைவனை மாவட்டச்செயலாளர் மூலம் படைத்துள்ளார்.

'யார் யார் வாய் கேட்பினும்': விழிப்புணர்வு படைப்பு.படிக்கும்போதே முடிவை ஊகிக்க முடிந்தது.

'முட்டுச்சுவரு ': பெற்றோர்கள் தம் கனவுகளைப் பிள்ளைகள் மேல் திணிப்பதும் ,பிள்ளைகள் அதன் பாரம் தாங்காமல் தடம் புரளுவதுமான கதை.

'நெருப்பினுள் துஞ்சல்': புரோட்டாக் கடை நிகழ்வுகளை ஆசிரியர் விவரிப்பது அவரின் கூர்ந்து கவனித்து உள் வாங்கும் திறனை வெளிப்படுத்துகிறது.வாசிக்கும்போது நான் புரோட்டாக் கடையில் நிற்பதுபோலவே உணர்ந்தேன்.'இலவசம்,இலவசம்னு நாட்டைக் கெடுத்தாட்டங்க சார்,எதுவாக இருந்தாலும் இலவசமாகக் கொடுக்கக் கூடாது சார் " என்று மனோகரன் சொல்லும்போது மணியின் மனதிற்குள் "நீ பணக்காரனாகப் பிறந்திட்ட,உங்க அப்பா உனக்குக் கொடுப்பதெல்லாம் இலவசம் மாதிரிதானே.என்னைக்கு நீ உழச்சு ஒரு வாய் சோறு சாப்பிட்ட ' என்று பொறுமுவது முத்தாய்ப்பு.இலவசத்திற்கு இப்படி ஒரு முகம் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

உண்மையில் இலவசத்தை எதிர்ப்பவர்கள் அது தேவையில்லாதவர்கள்தாம் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்.எனினும் ஆசிரியர் இலவசங்களை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.கல்வி,மருத்துவம்,வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவு தானியங்களில் மானியம் என்பதைத் தவிர்த்து பிற அனைத்து இலவசங்களும் மக்களைச் சோம்பேறியாக்குகின்றன என்பதில் ஆசிரியர் உடன்பட வில்லையா ?

இந்தத் தொகுப்பிலேயே சிறுகதைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு மிகச்சிறப்பாக வந்திருப்பது 'அடி உதவுறது மாதிரி(?) ' என்ற கதைதான்.படிப்பு வராது என்ற மன நிலையில் இருந்த மதியை அவனின் அண்ணன் பேரின்பம் அடித்து நொறுக்க,அதைத் தடுத்த முத்து,மதிக்குப் புரியும்படியான மொழியில் நடைமுறையில் சாத்தியமான வழிமுறைகளை சொல்லி நேர்படுத்துகிறான்.ஆனால் பேரின்பமோ கதையில் முடிவில், தான் கொடுத்த அடியினால்தான் மதியின் படிப்பில் முன்னேற்றம் என முத்துவிடமே பெருமைப் பட்டுக்கொள்கிறான். இந்த இடத்தில் ஆங்கில சிறுகதை மன்னன் ஓ ஹென்றி நினைவுக்கு வருகிறார். அந்த அளவு மிகத் தரமான கதை.

வா.நேருவின் கதைகளில் பொதுவான அம்சம்,எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய சரளமான நடை.எழுத்தில் ஆடம்பரமோ தன் திறமையைப் பறை சாற்றும் பகட்டோ இல்லை.மற்றொரு அம்சம் சமூக அக்கறை.கதை மாந்தர்கள் அனைவரும் எளியவர்கள்,தேவைகள் அதிகமில்லாதவர்கள்.அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுபவர்கள்.

இப்புத்தகத்தை எடுத்தவுடன் நேரடியாகக் கதைகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அணிந்துரை,விமர்சனங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டேன். காரணம் அவற்றின் தாக்கம் என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இருக்கக்கூடாது என்பதால். இந்த நிமிடம் வரை அவற்றைப் படிக்கவில்லை.

புத்தக ஆக்கம்,வடிவமைப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.அச்சு இன்னும் தெளிவாக,வாசிக்க இலகுவாக இருந்திருக்கலாம்.

வா.நேரு தம் படைப்புகள் வழியாக சமூக நீதி,பகுத்தறிவு,முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றை கடத்துகிறார். அதனால் சில கதைகளில் பிரச்சார நெடி சற்று தூக்கலாக இருக்கின்றது.நேரு இன்னும் பரந்துபட்டு சிறகுகளை நன்கு விரித்து புதிய எல்லைகளைத் தொடவேண்டும்.

வாழ்த்துகள் !
சுப்ரமணியன்.

'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம் -என்னும் இந்த விமர்சனத்தை எழுதியவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.எஸ்.சுப்ரமணியன் அவர்கள். அலுவலக நண்பர்களால் எஸ்.எஸ். என்று அழைக்கப்படுபவர். வாசிப்பினை வாழ்க்கையின் இன்னொரு மூச்சுவிடுதலாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். நிறைய வாசித்தாலும் படைப்பில் ஆர்வம் காட்டாமல் வாசிப்பனுவத்திற்காகவே வாசிப்பவர். "சமீபத்தில் படித்தவை : சிவகாமியின் 'உயிர் ' நாவல்,எம்.வி.வெங்கட்ராமனின் 'பனிமுடி மீது ஒரு கண்ணகி' சிறுகதைத் தொகுதி,வண்ண நிலவனின் 'எம்.எல்.'நாவல்,அர்ஷியாவின் 'சொட்டாங்கல் 'நாவல்,வா.நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல்' சிறுகதைத் தொகுதி ஆகியவற்றுடன் இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்  Markus Zusak எழுதிய ' The Book Thief ' நாவல். இது 2013-ல் திரைப்படமாகவும் வந்துள்ளது.அந்த படத்தையும் நான் பார்த்துள்ளேன். இவற்றுள் சிவகாமியின் 'உயிர்', அர்ஷியாவின் 'சொட்டாங்கல்',நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல் 'ஆகியவை பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை விரைவில் பகிர்ந்து கொள்கின்றேன் " என்று வாட்சப்பில் கொடுத்திருந்தார். அனுபவத்தை பகிர்ந்திருக்கும் அவருக்கு எனது உளப்பூர்வமான நன்றியும் மகிழ்ச்சியும்.......

No comments: