Monday 17 February 2020

தலையில் அடித்துக்கொண்ட காவல்துறையினர்....

பகுத்தறிவுவாதிகளுக்கு எதிராக இந்து தீவிரவாதிகள் கொதிக்கின்றனர், குமுறுகின்றனர், கொலை செய்யவும் துணிகின்றனர். கொலை செய்து விட்டு அதிகாரத்தின் துணையோடு வெளியில் திரி கின்றனர்.  உண்மையைச் சொல்லும் பகுத்தறிவாளர் களைக் கண்டால் கோடி கோடியாக அடித்து குவிக்கும் கார்ப்பரேட் சாமியார்கள், அவர்களுக்கு துணை நிற்கும் அரசியல்வாதிகள் எனப் பதை பதைக்கின்றனர். பக்தி நாட்டில் வெள்ளெமெனக் கரை புரண்டு ஓடுகிறது. கரை புரண்டு ஓடும் பக்தி மேலும் ஓட ஊடகங்கள் தங்கள் ஊடகங்களில் இந்தக் கோயிலில் இந்தக் கடவுள் அருள் பாலிக்கிறார், அந்தக் கோயிலில் அந்தக் கடவுளிடம் போய் முறையிட்டால் அத்தனை பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும் என ரீல் ரீலாக ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்பாவி மக்கள் மட்டுமல்ல, அனைத்தும் தெரிந்தவர்களும்கூட இந்தப் பக்திப் பரவசத்தில் மூழ்கி தங்கள் உடை மையை, அறிவை இழப்பது நம்மைப் போன்ற பகுத்தறிவாளர்களுக்கு, மனித நேயர்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. கீழே இருக்கும் செய்தியைப் பாருங்கள்.



"தெய்வீக அட்சயப் பாத்திரம் என சாதாரண அட்டைப் பெட்டியைக் காட்டி ரூ.2.10 கோடிக்கு விற்பனை செய்து, திருப்பத்தூர் (வேலூர்) தொழி லதிபரை நூதன முறையில் ஏமாற்றிய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்கிறது அந்தச் செய்தி!

மனித மனம் எதிலும் எளிதில் திருப்தி அடைவ தில்லை. பைக் சொந்தமாக இருந்தால் கார் இருந்தால் நலம் என நினைக்கிறது. ஆசைகள் அடுத்தடுத்துத் தாவும் குணம் கொண்டவை. ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையைத் தூண்டு என 'சதுரங்க வேட்டை' படத்தில் ஒரு வசனம் வரும். அதேபோன்று ஒருவரின் ஆசையைத் தூண்டி ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

திருப்பத்தூர் தொழிலதிபரின் ஆசையைத் தூண்டிய ஒரு கும்பல், கோடிக்கணக்கில் அவரை ஏமாற்றிவிட்டு அட்சயப் பாத்திரம் என வர்ண காகிதம் ஒட்டப்பட்ட அட்டைப் பெட்டியைக் கொடுத்துச் சென்றுள்ளது.

'சுவாரசியமான இந்த வழக்கில் தொழிலதிபரின் நிலையைப் பார்த்து நூதன முறையில் ஏமாற்றிய நபர்களை ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் பிடித்துள்ளனர்.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் நவீன். இவர் பெரும் தொழிலதிபர். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நவீனை 9 பேர் கொண்ட ஒரு கும்பல் சந்தித்தது. அதற்கு முன் அவரிடம் அட்சயப் பாத்திரம் என்கிற பாத்திரம் உள்ளதாகவும், அதை பூஜை அறையில் வைத்து பூஜித்து குறித்த காலம் கழித்துத் திறந்தால் தங்கப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் என்று அந்த கும்பல் கூறியது.

அது குறித்து அறிந்து ஆசைப்பட்ட நவீன், ''அட்சயப் பாத்திரம் கிடைக்குமா?'' என அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ''கிடைக்கும். ஆனால், அதுபற்றி நீங்கள் உங்கள் மனைவியிடம் கூட கூறக்கூடாது. அப்படி வெளியில் சொன்னால் அதன் சக்தி போய்விடும்'' என பில்டப் கொடுத்துள்ளனர்.

பின்னர் வர்ண காகிதங்கள் ஒட்டப்பட்ட சிறப்பாக தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டியை அட்சயப் பாத்திரம் எனக் கூறி, சித்தூர் ஏரியாவில் ஒருவர் வீட்டில் வைத்து அவரிடம் ரகசியமாகக் காட்டி யுள்ளனர்.

அதிலிருந்து வரும் சிக்னலை வைத்து தங்கப் புதையல் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கிலோ கணக்கில் தங்கமாக எடுக்கலாம் எனக் கூறி மாதிரிக்கு திறந்து அதிலிருந்து வரும் சிக்னலைக் காட்டுவது போன்று அவரை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அட்சயப் பாத்திரம் சிக்னல் செய்யவும் அங்கே தோண்டி ஏற்கெனவே புதைத்து வைத்த தங்க நகைகளை எடுத்துக் காட்டியுள்ளனர்.

அதைப் பார்த்து பிரம்மித்துப்போன நவீன், ''இந்த அட்சயப் பாத்திரம் தனக்கு வேண்டும்'' எனக் கேட்டுள்ளார். ''அவ்வளவு எளிதில் கொடுத்து விட மாட்டோம். இதற்கென தனி பூஜை அறை அதை வைத் துக்கொள்ளும் தகுதி உங் களுக்கு இருக்கிறதா? என்று பார்ப்போம்'' எனக் கூறி அட்ச யப் பாத்திரத்தின் மார்க்கெட்டை ஏற்றியுள்ளனர்.

எப்படியாவது அதை வாங்கி பூஜை அறையில் வைத்து அவ் வப்போது தங்கமாக எடுத்து இந்தியாவிலேயே பெரிய பணக் காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை வற் புறுத்தியுள்ளார் தொழிலதிபர் நவீன். முதலில் பெரிய தொகை ஒன்றைக் கூறியுள்ளனர். அவ்வளவு என் னிடம் இல்லை என்றவுடன், கடைசியில் ரூ.2 கோடியே 10 லட்சத்துக்குப் பேசி சித்தூருக்கு அழைத்துச் சென்று அதே வீட்டில் வைத்து ரகசியமாக ரூ.2.10 கோடியைப் பெற்றுக்கொண்டு அட்சயப் பாத்திரத்தை (அட்டைப் பெட்டியை) கொடுத்துள்ளனர்.

வாங்கிய பின்னர், தனது வீட்டில் ரகசியமாகக் கொண்டுவந்து வைத்து பூஜை செய்து சில நாட்கள் பொறுத்து நகைகள் இருக்கும் புதையலைக் காட்டும் என்கிற எண்ணத்துடன் பயபக்தியுடன் திறந்து பார்த்துள்ளார் தொழிலதிபர் நவீன்.

உள்ளே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச் சியடைய வைத்துள்ளது. உள்ளே வெறும் மரத் துண்டுகள் சிலவும் பேட்டரி, லைட்டுகளும் கிடந் துள்ளன. தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அப்போதுதான் உணர்ந்துள்ளார் நவீன்.

சித்தூர் அருகே குடிபள்ளியில் உள்ள வீட்டில் வைத்து அட்சயப் பாத்திரத்தை வாங்கியதால் அந்த ஏரியா காவல் நிலையத்தில் தாம் ஏமாற்றப்பட்டதாக நவீன் புகார் கொடுத்துள்ளார். உடனடியாக களம் இறங்கிய குடிபள்ளி காவல்துறையினர் அவர் கூறிய அங்க அடையாளத்தை வைத்து 9 பேரையும் தேடி வந்துள்ளனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய ஆந்திரா மற்றும் கருநாடகாவைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கட்டுக்கட்டாக கைப்பற்றிய பணத்தை செய்தியாளர்கள் முன் பார் வைக்கு வைத்த காவல்துறையினர் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தனர். ('தி இந்து' தமிழ் இணையதளச் செய்தி 12-02-2020)

நமது திருப்பத்தூரைச் சார்ந்தவர் - பெரிய தொழிலதிபர். இப்படியெல்லாம் விவரித்துச் செல்கிறது அந்த நாளேட்டின் செய்தி. 'பக்தி வந்தால் புத்தி போகும்,புத்தி வந்தால் பக்தி போகும் ' என்று சொன் னால் பகுத்தறிவாதிகளுக்கு எதிராக முறைக்கின்றனர். 'சுவாரசியமான இந்த வழக்கில் தொழிலதிபரின் நிலையைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட காவல் துறையினர்' என்று செய்தி வெளிவந்துள்ளது. தலையில் அடித்துக் கொள்ளும் காவல் துறையினர் என்ன செய்ய வேண்டும்? நாடு முழுக்க திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது தாராளமாக அனுமதிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு பகுத்தறிவு வந்துவிட்டால், இந்த மாதிரி விசயங்களில் அவன் ஏமாறப்போவதில்லை. மறைந்த சாய்பாபா ஒரு லட்டை எடுத்துக் காட்டிய போது, அவருக்கு தனது கையைச்சுழற்றி இரண்டு லட்டுகளை எடுத்துக்கொடுத்த மந்திரமா? தந்திரமா நிபுணர் போல, மக்கள் தெளிவாக இருந்தால் அட்சயப் பாத்திரத்தால் தங்கம் கிடைக்கும் என்று சொன்னால், "வா, உன்னை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன். தங்கம் விலை எக்குத்தப்பாக ஏறிக் கொண்டிருக்கிறது, நிறைய தங்கம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். உனது அட்சயப் பாத்திரத்தை அரசாங்கத்திடம் கொடு, அங்கு தங்கமாய் கொட்டட்டும்" என்று அழைத்துப் போயிருப்பார்கள். காவல்துறையிடம் முன்னரே மாட்டியிருப்பார்கள். இதைப்போல ஏமாறும் ஏகப்பட்ட நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே யார் முன் வர வேண்டும்? நாங்கள் இந்துமதக் காவலர்கள், இந்து மதத்தைக் காப்பற்றவே பிறந்தவர்கள் என்று சொல் பவர்கள்தானே முன் வர வேண்டும். அவர்கள் தாங்கள் வராமல், உண்மையை விளக்கும், உண் மையைச் சொல்லும் பகுத்தறி வாளர்கள் மேல் பாய் கிறார்களே, வன்முறையால் பகுத்தறிவாளர்களின் செயல்பாட்டை முடக்கி விட  நினைக்கிறார்களே? இது சரியா? இது முறையா? இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொதுவானவர்களே சொல்லுங்கள்.

மகாராட்டிரா மாநிலத்தைச் சார்ந்த நரேந்திர தபோல்கர் ஆகஸ்ட் 20, 2013-இல் நடைப்பயிற்சியில் நடந்துகொண்டு இருந்தபொழுது சுட்டுக் கொல்லப் பட்டார். அவர் கடவுள் இல்லை என்று சொன்னவரல்ல. மூட நம்பிக்கைகள் மக்களின் வாழ்க்கையை அழிக் கிறது என்று சொன்னார். அறிவியல் மனப்பான்மை வேண்டும் என்று சொன்னார். சமூகம் முன்னேற மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று சொன் னார். 'அற்புதமான சாமியார்களின், சாமியாரிணிகளின் ஆன்மிக சக்தியை நரேந்திர தபோல்கரின் அமைப்பு கேள்வி கேட்கிறது. அதனை தடைசெய்யவேண்டும்' என்று சட்டசபையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப் பினர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

நவீன் மாதிரி ஏமாறும் ஆட்களின் செய்திகளை நாம் பத்திரிகையில் படிக்கும்போது தந்தை பெரியார் நினைவுக்கு வரவேண்டும். அயராது தந்தை பெரி யாரின் கொள்கைகளை கொண்டு செல்லும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவுக்கு வர வேண் டும். நாட்டில் அறிவியல் மனப்பான்மை வேண்டும், மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும், கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் சாதாரண மனிதர்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும், நாட்டில் எவ ருக்கும் அற்புத சக்தி என்றெல்லாம் ஒன்றும் இல்லை, நம்மை ஏமாற்றுவதற்கு அற்புத சக்தி உள்ள சாமியார் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்னும் எண்ணமும் இந்தக் கருத்துக்களை சொன்ன திற்காக கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களின் நினைவும் வரவேண்டும். துணிந்து திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழகத் தோழர்களோடு இணைந்து உண்மை களை உரக்கச் சொல்வோம் என்னும் உந்துதல் வரவேண்டும்.

நன்றி : விடுதலை 17.02.2020

3 comments:

anandam said...

அருமை அருமை.. பணி தொடங்கியது... தொடரட்டும்... பகுத்தறிவு பெருகட்டும்...

முனைவர். வா.நேரு said...

பின்னோட்டக் கருத்திற்கு நன்றி..தொடர்வோம்

ரமேஷ்/ Ramesh said...

தேவையான நல்ல பதிவு