Tuesday 17 November 2020

இனி வரும் காலத்தில் பிரபஞ்சம்.....வா.நேரு


நன்றி : உண்மை (16-30 நவம்பர்,2020)..மாதம் இருமுறை பகுத்தறிவு இதழ்

                                   இனி வரும் காலத்தில் பிரபஞ்சம்
                                         (முனைவர்.வா.நேரு)
                                               

"இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்.?என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர புராண இதிகாசப்பண்டிதர்கள் என்பவர்களுக்கு,அதுவும் நம் "கலை காவியப் பண்டிதர்களுக்கு தெரிவது சுலபமான காரியமல்ல" என்றார் தந்தை பெரியார்.(இனிவரும் உலகம்..முன்னுரை).அறிவியல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், புராண இதிகாசப்பண்டிதர்கள் கதை அளந்து கொண்டிருந்த காலத்தில் கரோனா அவர்களின் கதையை எல்லாம் பொய் என்பதனை நிருபித்துக்கொண்டிருக்கிறது.நாம் பகுத்தறிவாதிகள் இந்தப் பிரபஞ்சம் பற்றிச்சிந்திப்போம்.

"வானம் எனக்கு ஒரு போதிமரம்/நாளும் எனக்கு அது சேதி தரும் " என்பது ஒரு திரைப்படப்பாடலின் வரிகள்.வானத்தைப் பற்றி நாள்தோறும் புதுப் புதுச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பிரபஞ்சம் என்றால் என்ன?இரவில் வீட்டின் மாடியில் படுத்துக்கொண்டு வானத்தை நோக்கினால் சின்ன சின்ன புள்ளிகளாக நிறைய நட்சத்திரங்கள் தெரிகின்றன. சில நட்சத்திரங்கள் பெரிதாகவும்,சில நட்சத்திரங்கள் சிறிதாகவும் வானம் நமக்கு ஒரு நட்சத்திர தொகுப்பாக தெரிகிறது.நாத்திகரான அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து சில செய்திகளைச்சொன்னார்." நமது பிரபஞ்சத்தில் பல இலட்சக்கணக்கான காலக்சிகள்(Galaxy)உள்ளன.ஒருகாலக்சியில் 10,000 கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம்.அந்த காலக்சிகளில் ஒன்றுதான் நமது பால்வெளி மண்டலம்.இந்த பால்வழி மண்டலத்தில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் நமது சூரியன்.நமது சூரியன் ஒரு நட்சத்திரம்.சூரியனை 8 கிரகங்கள்,வால் நட்சத்திரங்கள்,குள்ளக்கோல்கள்,விண்கற்கள் எனச்சுற்றிக்கொண்டு இருக்கின்றன.இதனை சூரியக்குடும்பம் என்கிறோம்.இது போலவே மற்ற நட்சத்திரங்களையும் கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.நமது பால்வழி மண்டலத்தில் மட்டும் பூமியைப் போல் 5000 கோடி கிரகங்கள் இருக்கின்றன"(ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன்,ஏற்காடு இளங்கோ,மங்கை வெளியீடு,சென்னை-18.பக்கம் 99).பிரபஞ்சத்தை பற்றி நினைத்துப்பார்ப்பதே மலைப்பாக இருக்கிறது.நாம் இருப்பது பூமியில். பூமி இருப்பது சூரியன் எனும் நட்சத்திரக் குடும்பத்தில். நமது பால்வெளி சூரியனைப் போன்ற 100 மில்லியன்(10 கோடி) நட்சத்திரங்கள் அடங்கியது, .நமது பால்வெளியைப் போல இலட்சக்கணக்கான பால்வெளிகள்(காலக்சிகள்) அடங்கிய தொகுப்பிற்கு பிரபஞ்சம் என்று பெயர்.எவ்வளவு பெரிய பிரபஞ்சம்.இவ்வளவு பெரிய பிரபஞ்சம் என்றவுடனேயே ஒரு ஆத்திகர், கடவுள் படைப்பு என்று சொல்ல ஆரம்பிப்பார்.ஆனால் கடவுள் படைப்பு,சொர்க்கம் என்பதனை எல்லாம் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் முழுமையாக மறுத்தார்.

"ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகமான பிரம்மாண்ட வடிவமைப்பு(The Grand Design) என்பதில் உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை.இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப அது தானாகவே உருவானது என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு எதுவும் இல்லை.இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை.கடவுள் இதனை உருவாக்கவும் இல்லை.மதத்தத்துவவாதிகள் கூறுவது போல உலகுக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை.அதற்கு வாய்ப்பும் இல்லை.கடவுள் வந்து ,தடவிப்பார்த்து,பிரபஞ்சமே,நீ உருவாகு என்று கூறுவது அபத்தமானது என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் "(ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன்,ஏற்காடு இளங்கோ,பக்கம் 86). தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதனையும்,சொர்க்கம் என்று ஒன்று இல்லை என்பதனையும் ,பிரபஞ்சத்தினைப் பற்றிய விளக்கங்கள் கூறும்போது மிக அழுத்தமாகச்சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

சரி, இந்தப் பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் அது பற்றிய சிந்தனைகளும்  எப்படியெல்லாம் மனித குலத்திற்கு பயனுள்ளதாக இருக்கப்போகிறது? நாம் வாழும் இந்த உலகம்,பூமி எத்தனை ஆண்டுகள் இருக்கும்? பூமி இருக்கும் சூரிய குடும்பம் எத்தனை ஆண்டுகள் இருக்கும் ?நாம் வாழும் பூமி ஒரு நாள் அழிந்து போகுமா ? என்பதை எல்லாம் பிரபஞ்ச அறிவியலோடு இணைத்து பார்ப்பது நமக்கு வியப்பைத் தருகிறது.

ஒரு நாள் பூமியில் இனி மனிதர்கள் வாழ முடியாது  என்ற நிலைமை வருமா?. வரும் என்று சொல்கின்றார் பிரபஞ்சத்தைப் பற்றி பல்வேறு அறிவியல் உண்மைகளைத் தனது ஆராய்ச்சிகளின்மூலம் நிருபீத்த ஸ்டிபன் ஹாக்கின்ஸ் அவர்கள்.இன்றைய கரோனா காலமே அப்படி ஒரு நிலைமையை உண்டாக்கி இருக்கிறது.நமது அருமையான தோழர்கள் சிலரை இழந்திருக்கிறோம்.பல தோழர்கள் கரோனா நோயை எதிர்கொண்டு, முழு குணம் பெற்று இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.கரோனாவால் உலகமே பெரும் அச்சத்தில் உள்ளது.மக்கள் பயப்படுகிறார்கள். கரோனா போன்ற பல தொற்று நோய்கள்,, மிக எளிதாக மனிதர்களிடையே பரவக்கூடிய தொற்று நோய்கள், இனியும் தொடர்ந்து தோன்றும்,பரவும், மனித குலத்தை அச்சுறுத்தும்  என்று அறிவியல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் அறிஞர்களும்  சொல்கிறார்கள்.அப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்து வருகின்றபோது என்ன செய்வது என்னும் கேள்வி எழுகிறது.அதற்கான பதிலாக ஸ்டீபன் ஹாக்கின்ஸ், மனிதன் வேறு கிரகங்களில் சென்று குடியேற வேண்டும் என்று சொன்னார்.இனி வரும் உலகம் பற்றி சிந்தித்து சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சொன்னது போல,இனி வரும் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்து ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பல்வேறு கருத்துக்களைச்சொன்னார்.

நாம் வேறு கிரகங்களில் குடியேறி வாழலாம். அப்படி வாழும் காலம் எதிர்கால நூற்றாண்டுகளில் மனிதர்களுக்கு கிடைக்கலாம். மனித இனம் எப்போது தோன்றியது,எங்கே தோன்றியது, எப்படி இப்போது இருக்கும் பூமி முழுவதும் பரவியது என்பதைப் பற்றி பல செய்திகளை மரபியல் ஆய்வுகள் சொல்கின்றன.ஒரு இடத்தில் தோன்றி வாழ்ந்த மனித இனம்,.பல ஆயிரம் ஆண்டுகள் பயணத்தின் விளைவாக இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.முதல் பரவல் என்பது கால்நடையாக. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு. கால்நடையாக சென்றிருக்கிறார்கள். போகும் வழியில் தங்கி, தங்கி பின்னர் அங்கிருந்து கிளம்பி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு. அது போலவே ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு கால்நடையாகவே மனிதர்கள் குழு குழுவாகச்சென்றிருக்கிறார்கள்.தங்களது பண்பாட்டை, நாகரித்தை வளர்த்திருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு கிடைத்த மூளை வளர்ச்சியும், இரண்டு கால்களால் நேராக நிமிர்ந்து நடக்கும் தன்மையும் விளைவித்த அற்புதம் அவனை உலகம் முழுவதும் பரவ வழி செய்தது.பேருந்து,இரயில்,விமானம் என்று அடுத்தடுத்த வந்த நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கோ செல்வதை மிக எளிமையாக்கி இருக்கிறது.சில மணி நேரங்களில் கண்டம் விட்டு கண்டம் செல்ல முடிகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து வாழ்ந்து, அங்கேயே செத்து மடிந்த மனிதன், இன்றைக்கு அறிவியலால் பல நாடுகளில், பல கண்டங்களில் வாழும் மனிதனாக மாறியிருக்கிறான்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் செல்வது போல , நமது பூமியிலிருந்து வேறு கிரகங்களுக்கு இராக்கெட் மூலமாக செல்வதும், அங்கு சென்று வேலை பார்ப்பதும், பின்னர் பூமிக்கு,தாய் நாட்டிற்கு திரும்புவது போல தாய்க்கிரகத்திற்கு திரும்புவதும் எதிர்காலத்தில் இயல்பு ஆகலாம்.அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன்,அங்கிருந்த இயற்கை செல்வங்களை எல்லாம் வெள்ளையர்கள் அள்ளிக்கொண்டு சென்றது போல,வேறு கிரகத்தில் இருக்கும் இயற்கை வளங்கள் பூமிக்கிரகத்தில் இருப்பவர்களுக்குப்  பயன்படலாம்.கொண்டு வரலாம்.இப்படியெல்லாம் கூட நாம் யோசிக்கலாம்.

எலன் மஸ்க்(Elon musk) என்பவர் தென்னாப்பிரிக்காவைச்சார்ந்த தொழில் அதிபர்.இவர் கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதைப் பற்றி பேசுகின்றார். எழுதுகிறார்.அவருடைய திட்டத்தின்(பிராஜக்ட்) பெயர் ஸ்பேஸ்-எக்ஸ்(SPACE X).2019-ஆம் ஆண்டிற்கான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் -விண்வெளி தொடர்பு(Space communication) விருதினை பெற்றிருக்கின்றார்.அமெரிக்காவில்  உள்ள நாசாவின் உதவியோடு அதற்கான திட்டங்களை தீட்டி, முதலில் ஒரு 100 பேரை செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்றுவது என்று திட்டமிட்டு செயல் ஆற்றி வருகின்றார். அதனைப் போல சந்திரனில் சென்று மனிதர்கள் வாழ்வதற்கான குடியேற்றம் பற்றியும் தனது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ரைட் சகோதரர்கள் விமானத்தில் முதன் முதலில் பறப்பதற்கு முயற்சி செய்தது போல எல்ன் மஸ்க் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருப்பை கட்டுவதே தனது நோக்கம் என்று சொல்கிறார்.முதலில் நாம் கேட்கும்போது நமக்கு சிரிப்பு வரும்.ஆனால் பூமியில் இருந்தால் நாம் இனி உயிரோடு இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்துபோவோம் என்று நிலை வருகின்றபோது, உயிரோடு இருப்பதற்கான,வாழ்வதற்கான வாய்ப்பு இன்னொரு கிரகத்திலோ அல்லது சந்திரன் போன்ற துணைக்கோளிலோ இருக்கிறது என்று சொன்னால், கொஞ்சம் பணம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை,அங்கு சென்று சில ஆண்டுகள் வாழ்ந்து பார்ப்போமே என்று மனிதர்களுக்குத் தோன்றும். ஆனால் இது  நடைமுறையில் வந்தால், பல கோடி ரூபாய் வசதி உள்ளவர்கள் மட்டுமே வேற்று கிரகத்தில் சென்று வாழமுடியும்.

மாற்றி யோசிப்பதுதானே பகுத்தறிவு.கடவுள் சித்தப்படி உலகம் நடைபெறுகிறது என்று எண்ணிக்கொண்டு ஆத்திகவாதி சென்று கொண்டிருக்கிறான். ஆனால் வரக்கூடிய ஆபத்துக்களையும், எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்புகளையும் இணைத்து முன் செல்லக்கூடியவன் பகுத்தறிவுவாதி.நாம் வேறு கிரகத்தில் சென்று வாழ்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம். வேற்று கிரகத்தில் வசிப்பவர்கள் , நம்மைப் போல அந்தக்கிரகத்தில் இருந்து வந்து பூமியில் வசிக்க வேண்டும் என்று நினைத்தால்?....வேற்று கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? ...இருக்கிறது என்று சொன்னார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். எந்த எந்தக் கிரகத்தில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் உயிர்கள் தோன்றியிருக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.இந்தப் பிரபஞ்சம் என்பது பல இலட்சக்கணக்கான கிரகங்களைக் கொண்டது.உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்களும் இருக்கும், இல்லாத கிரகங்களும் இருக்கும் என்றார்.பறக்கும் தட்டு என்பது எல்லாம் உண்மை இல்லை என்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வேற்றுக்கிரகவாசிகள் நமது பூமிக்கு வரலாம் என்றார். அப்படி வந்தால் பூமியில் இருக்கும் நாம் பாதிப்புக்கு உள்ளாவோம். எப்படி கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன், அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி,உயிரை இழந்தார்களோ, அப்படி பூமியில் இருக்கும் நமக்கு வேற்றுக்கிரகவாசிகளால் ஆபத்து ஏற்படும். அவர்கள் நம்மை விட பலமடங்கு அறிவுக்கூர்மை உடையவர்களாக இருக்கக்கூடும் என்ற ஆபத்தையும் நமக்கு சொன்னவர் பகுத்தறிவுவாதி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.எதைக்கண்டும் அஞ்சி வாழ்வதல்ல வாழ்க்கை ஆனால் இனி வரும் பிரபஞ்சம் எப்படி இருக்கக்கூடும் என்னும் அறிவு,அறிவியல் தரும் அறிவு, நமக்கு புதிய வழிகளையும், புதிய வெளிச்சங்களையும் காட்டக்கூடும்.

 

   



2 comments:

anandam said...

எழுத்துருவாகவும் பதிவிடுங்கள் அண்ணே!

முனைவர். வா.நேரு said...

அண்ணே,நன்றி...கொடுத்திருக்கிறேன்.