Thursday 19 November 2020

படைப்பையும் கூடத்தான்..

              


தண்ணீரில் போட்ட

கல் போலக்கிடந்தன...

அக்காலக் கதைகள்...


பத்திரிக்கை அலுவலகம் போனதா?

பிரித்தார்களா?

படித்தார்களா?

வெளியிடுவார்களா?

மாட்டார்களா ?

எதுவும் தெரியாமல்

சகதியில் மாட்டிய

எருமை போல

மனசு அல்லல்படும்....


எடுத்து வைத்த நகல்

சில நாட்களில்

மறைந்து போகும்...

பின்பு எடுத்துக்கூட்டி

எழுத இயலுவதில்லை...

பெரும்பாலும்...

மறைந்து போன கதைகள்

பட்டியலில் இடம் பெறும்...


மறைந்து போன கதையென

மறந்து போன கதையை

திடீரென்று பிரசுரித்து

களிப்பூட்டும் சில நேரங்களில்

சில பத்திரிக்கைகள்...


இந்தப் பத்திரிக்கைக்கு

இப்படி எழுதல் வேண்டும்...

அந்தப் பத்திரிக்கைக்கு

அப்படி எழுதல் வேண்டுமென

நீண்ட பட்டியல்

பத்திரிக்கைக்கு ஏற்றபடி

எழுதுவதற்கு

பட்டியல் வைத்திருப்பான்

அக்கால எழுத்தாள நண்பன்...



கணினி வந்தது...

எல்லாம் மறைந்து போனது...

கணினி தானாகவே

நகல் வைத்திருக்கிறது இன்று...

எனது கருத்து இது...

எனது கதை இதுவெனப்

பதிய முடிகிறது...

வலைத்தளங்களில் பதிந்தவுடன்

படித்தவர்கள் எண்ணிக்கை வருகிறது...

பின்னோட்டம் வருகிறது....

விளைவுகள்...எதிர்விளைவுகள் என

படைப்பைக் கொண்டாடி

மகிழ்கிறது....


அட ! கணினி

வாழ்க்கையை மட்டுமா மாற்றியது...

படைப்பையும் கூடத்தான்..

                         வா.நேரு,20.11.2020

No comments: