Monday 29 March 2021

தேர்தல் பாதை வேண்டாம் என்றவர்களும்...

தேர்தல் பாதை 

வேண்டாம் என்றவர்களும்

களத்தில் ஆதரவாக

நிற்கின்றார்கள்....


தமிழகம் ஒருமுகமாக

நிற்கின்றது...

வேண்டாம் இவர்கள் என

மேலும் கீழும ஆள்பவர்களை

அடிமனது வெறுப்போடு

ஒதுக்கி வைத்து நிற்கிறது...


ஆள்பவர்களின் ஆட்கள்

வீடு வீடாக 

வருகிறார்கள்...

எத்தனை ஓட்டு 

உங்கள் வீட்டில் எனக்

கணக்கெடுத்து போகிறார்கள்...

எதற்கு எனக் கேட்டால்

வெகுளியாகச் சிரிப்பதுபோல

சிரிக்கிறார்கள்.....


கொடுத்தால் வாங்கிக்

கொள்ளுங்கள் ...

மறுக்காதீர்கள்...ஆனால்

மறக்காமல் எங்களுக்கு 

ஓட்டுப்போட்டு விடுங்கள்

என ஒருவர்

பேசி இருக்கிறார்....


இதில் எனக்கு 

உடன்பாடு இல்லை...

உழைப்பவர்கள் உண்மையிலேயே

ஒன்றும் அறியாதவர்கள்...

கையில் பணத்தைப் 

பெற்று விட்டால்

கொடுத்தவனுக்குத்தான் ஓட்டுப்

போடல் வேண்டும் 

எனும் மனநிலையில் உள்ளவர்கள்..


வெட்கமாகத்தான் இருக்கிறது..

இந்த ஜனநாயகம் என்னும்

பணநாயகத்தை நினைக்கையில்...

அடித்து வைத்த பணத்தில்

ஒவ்வொரு ஓட்டுக்கும்

ஐந்தாயிரம் எனப் பெரும்போக்கு

காட்டுகிறதாம் பெரும்புள்ளி ஒன்று


தெருவுக்குத் தெரு

எதிர்க்கட்சிகள் நில்லுங்கள்...

பணம் கொண்டுவருபவனை

அப்படியே அமுக்குங்கள்...

பணம் தருவதற்கு 

பதுக்கி வைக்கும் இடத்தைக் 

கண்டு பிடியுங்கள்...

விதவிதமாய் யோசித்து 

பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள்..

வைக்கோல் படப்புக்குள்

ஒரு கோடி ரூபாய் புதுக்கோட்டையில்....


தேர்தல் என்பது 

பரப்புரை மட்டுமல்ல....

எதிரி பதுக்கி வைத்திருக்கும்

பணத்தை

செல்லாத பணமாக்குவதில்தான்

வெற்றி இருக்கிறது....


என்னவும் செய்வோம்

இறுதியில் பணத்தைக் 

கொடுத்து வெல்வோம் 

எனும் இறுமாப்பை உடைத்திட

இளைஞர்களே ஒன்று சேருங்கள்...


உங்கள் தெருக்களைக் கண்காணியுங்கள்...

உள்ளே வருபவர்களை 

உற்று நோக்குங்கள்.....

மே இரண்டை வெற்றி நாளாக

ஆக்குங்கள் உடன் பிறப்புகளே..

                                                                      வா.நேரு,29.03.2021

  

No comments: