Sunday 22 May 2022

நினைவோடையில் தேங்கிக் கிடந்த

 நினைவோடையில் தேங்கிக் கிடந்த



ஏழு வயதில் அப்பாவை

இழந்த மகனை 

ஏதேனும் ஒரு 

வேலைக்கு அனுப்பியிருக்கலாம்...


விறகு வெட்டவோ

கலப்பை பிடிக்கவோ

மண்ணை வெட்டவோ

ஏதேனும் ஒரு வேலைக்கு

அனுப்பியிருக்கலாம்...


ஏதேனும் ஒரு வேலைக்கு

குழந்தை தொழிலாயாய்ச்

சென்றிருந்தால் 

அச்சச்சோ பாவம் என

உறவுகள் உச்சுக் கொட்டியிருப்பார்கள்...

அய்யோ பாவம் அவன் தலைவிதி

அப்பன் செத்ததால் 

வேலை செய்கிறான் என்று 

அண்மையில் இருப்பவர்கள் பேசிக்

கலைந்து போயிருப்பார்கள்...


ஆனாலும் அம்மா நீ 

என்னை படி படி என்றாய்...

நம் அல்லல் தீர்க்கும் 

அருமருந்து கல்வி ...

அதனால் இரவும் பகலும்

உணர்ந்து படி படி என்றாய்....


விழுவதும் எழுவதும் இயற்கை..

விம்முவதும் புலம்பவதும் செயற்கை

செயற்கை விடுத்து

இயற்கை வழி நட என்றாய்...


படிக்கட்டாய் நீ இருந்து

நாங்கள் உயர ஏறிட

உழைப்பைக் கொடுத்தாய்...

படித்தோம் உயர்ந்தோம்..

பணியில் அமர்ந்தோம்..

பொருளாதாரத்தில் நிமிர்ந்தோம்...



நினைவோடையில் தேங்கிக் கிடந்த

நினைவுகள் எல்லாம்

நினைவு நாளில் மேகமாய்

ஒன்று திரண்டு 

கண்ணீர் மழையில் 

குளிப்பது போல் 

கதறத்தான் தோன்றுகிறது அம்மா... 


                          வா.நேரு ,23.05.2022.





No comments: